Friday, June 27, 2025

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (28-06-2025)

 

 

முதல் வாசகம்


தொடக்க நூலிலிருந்து வாசகம் 18: 1-15


அந்நாள்களில் ஆண்டவர் மம்ரே என்ற இடத்தில் தேவதாரு மரங்கள் அருகே ஆபிரகாமுக்குத் தோன்றினார். பகலில் வெப்பம் மிகுந்த நேரத்தில் ஆபிரகாம் தம் கூடார வாயிலில் அமர்ந்திருக்கையில், கண்களை உயர்த்திப் பார்த்தார்; மூன்று மனிதர் தம் அருகில் நிற்கக் கண்டார். அவர்களைக் கண்டவுடன் அவர்களைச் சந்திக்க கூடார வாயிலைவிட்டு ஓடினார். அவர்கள் முன் தரை மட்டும் தாழ்ந்து வணங்கி, அவர்களை நோக்கி, ``என் தலைவரே, உம் கண்களில் எனக்கு அருள் கிடைத்ததாயின், நீர் உம் அடியானை விட்டுக் கடந்து போகாதிருப்பீராக! இதோ விரைவில் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வரட்டும். உங்கள் கால்களைக் கழுவியபின், இம்மரத்தடியில் இளைப்பாறுங்கள். கொஞ்சம் உணவு கொண்டு வருகிறேன். நீங்கள் புத்துணர்வு பெற்றபின், பயணத்தைத் தொடருங்கள். ஏனெனில் உங்கள் அடியானிடமே வந்திருக்கிறீர்கள்'' என்றார். ``நீ சொன்னபடியே செய்'' என்று அவர்கள் பதில் அளித்தார்கள். அதைக் கேட்டு ஆபிரகாம் தம் கூடாரத்திற்கு விரைந்து சென்று, சாராவை நோக்கி, ``விரைவாக மூன்று மரக்கால் நல்ல மாவைப் பிசைந்து, அப்பங்கள் சுடு'' என்றார். ஆபிரகாம் மாட்டு மந்தைக்கு ஓடிச் சென்று, ஒரு நல்ல இளங்கன்றைக் கொணர்ந்து வேலைக்காரனிடம் கொடுக்க, அவன் அதனை விரைவில் சமைத்தான். பிறகு அவர் வெண்ணெய், பால், சமைத்த இளங்கன்று ஆகியவற்றைக் கொண்டு வந்து அவர்கள் முன் வைத்தார். அவர்கள் உண்ணும் பொழுது அவர்கள் அருகே மரத்தடியில் நின்று கொண்டிருந்தார். பின்பு அவர்கள் அவரை நோக்கி, `` உன் மனைவி சாரா எங்கே?'' என்று கேட்க, அவர், ``அதோ கூடாரத்தில் இருக்கிறாள்'' என்று பதில் கூறினார். அப்பொழுது ஆண்டவர், ``நான் இளவேனிற் காலத்தில் உறுதியாக மீண்டும் உன்னிடம் வருவேன். அப்பொழுது உன் மனைவி சாராவுக்கு ஒரு மகன் பிறந்திருப்பான்'' என்றார். அவருக்குப் பின்புறத்தில் கூடார வாயிலில் சாரா இதைக் கேட்டுக் கொண்டிருந்தார். ஆபிரகாமும் சாராவும் வயது முதிர்ந்தவர்களாய் இருந்தனர். சாராவுக்கு மாதவிடாய் நின்று போயிருந்தது. எனவே, சாரா தமக்குள் சிரித்து, ``நானோ கிழவி; என் தலைவரோ வயது முதிர்ந்தவர். எனக்கா இன்பம்?'' என்றாள். அப்போது ஆண்டவர் ஆபிரகாமை நோக்கி, `` `நான் வயது முதிர்ந்தவளாய் இருக்க, எனக்கு உண்மையில் பிள்ளை பிறக்குமா' என்று சொல்லி சாரா ஏன் இப்படிச் சிரித்தாள்? ஆண்டவரால் ஆகாதது எதுவும் உண்டோ! இளவேனிற் காலத்தில் குறிப்பிட்ட நேரத்தில் நான் உன்னிடம் மீண்டும் வருவேன். அப்பொழுது சாராவுக்கு ஒரு மகன் பிறந்திருப்பான்'' என்று சொன்னார். சாராவோ, ``நான் சிரிக்கவில்லை'' என்று சொல்லி மறுத்தார். ஏனெனில் அச்சம் அவரை ஆட்கொண்டது. அதற்கு ஆண்டவர், ``இல்லை, நீ சிரித்தாய்'' என்றார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல்

லூக் 1: 47. 48-49. 50,53. 54-55

பல்லவி: ஆண்டவர் தம் இரக்கத்தை என்றும் நினைவில் கொண்டுள்ளார்.


47 ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது.

என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது. -பல்லவி


48 ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார்.

இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர்.

49 ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்.

தூயவர் என்பதே அவரது பெயர். -பல்லவி


50 அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார்.

53 பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார். -பல்லவி


54-55 மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும்

அவர்தம் வழிமரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்;

தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார். -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! அவர் நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார். அல்லேலூயா.


மத்தேயு 8:5-17


பொதுக்காலம் 12 வாரம் சனி

நற்செய்தி வாசகம்


மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 5-17


அக்காலத்தில் இயேசு கப்பர்நாகுமுக்குச் சென்றபோது நூற்றுவர் தலைவர் ஒருவர் அவரிடம் உதவி வேண்டி வந்தார். ``ஐயா, என் பையன் முடக்குவாதத்தால் மிகுந்த வேதனையுடன் படுத்துக் கிடக்கிறான்'' என்றார். இயேசு அவரிடம், ``நான் வந்து அவனைக் குணமாக்குவேன்'' என்றார். நூற்றுவர் தலைவர் மறுமொழியாக, ``ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் பையன் நலமடைவான். நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன். என் அதிகாரத்துக்கு உட்பட்ட படைவீரரும் உள்ளனர். நான் அவர்களுள் ஒருவரிடம் `செல்க' என்றால் அவர் செல்கிறார். வேறு ஒருவரிடம் `வருக' என்றால் அவர் வருகிறார். என் பணியாளரைப் பார்த்து `இதைச் செய்க' என்றால் அவர் செய்கிறார்'' என்றார். இதைக் கேட்டு இயேசு வியந்து, தம்மைப் பின்தொடர்ந்து வந்தவர்களை நோக்கி, ``உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: இஸ்ரயேலர் யாரிடமும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை. கிழக்கிலும் மேற்கிலுமிருந்து பலர் வந்து ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் விண்ணரசின் பந்தியில் அமர்வர். அரசுக்கு உரியவர்களோ புறம்பாக உள்ள இருளில் தள்ளப்படுவார்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்'' என்றார். பின்னர் இயேசு நூற்றுவர் தலைவரை நோக்கி, ``நீர் போகலாம், நீர் நம்பியவண்ணமே உமக்கு நிகழும்'' என்றார். அந்நேரமே பையன் குணமடைந்தான். இயேசு பேதுருவின் வீட்டிற்குள் சென்றபோது, பேதுருவின் மாமியார் காய்ச்சலாய்ப் படுத்திருப்பதைக் கண்டார். இயேசு அவரது கையைத் தொட்டதும் காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று. அவரும் எழுந்து இயேசுவுக்குப் பணிவிடை செய்தார். பேய் பிடித்த பலரை மாலை வேளையில் இயேசுவிடம் கொண்டு வந்தனர். அவர் ஒரு வார்த்தை சொல்ல அசுத்த ஆவிகள் ஓடிப்போயின. மேலும் எல்லா நோயாளர்களையும் அவர் குணமாக்கினார். இவ்வாறு, `அவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார்' என்று இறைவாக்கினர் எசாயா உரைத்தது நிறைவேறியது.


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


மரியாளின் மாசற்ற இதயம்


பொதுக்காலம் 12ஆம் வாரம்

28.06.2024 - சனிக் கிழமை 

பிறப்பில் எல்லோருடைய இதயமும் தூய்மையானது தான். வாழ்க்கை நகர்கின்ற போது இதயம் மாசுபடிந்ததாக மாறிவிடுகிறது. என் இதயம் கறை படிந்ததற்கு என்னை குறை சொல்வதா! என்னை சூழ்ந்து இருப்பவர்களை குறை சொல்வதா! காலத்தினுடைய மாற்றங்களை குறை சொல்வதா! யாரை குறை சொல்வது?

வாழ்க்கை எல்லோருக்கும் ஒன்று போல் இருப்பதில்லை. சிலருக்கு வாழ்க்கை கசப்பையும், சிலருக்கு வாழ்க்கை இனிமையும், சிலருக்கு வாழ்க்கை பாடத்தையும் கற்றுக் கொடுக்கிறது. இயற்கை எல்லோருக்கும் சமமாக தான் இருக்கிறது. 

இயற்கையை ஒருபோதும் குறை சொல்ல முடியாது. ஆனால், இயற்கையை நாம் மாசுபடுத்துகின்ற போது இயற்கை அதன் விளைவுகளை நம்மீது திணிக்க தான் செய்யும். 

நம்முடைய உடல் கடவுள் வாழக்கூடிய ஆலயமாக தூய்மையானதாக இருக்க வேண்டும். ஆனால், அந்த தூய்மையை நாம் வெளியிலிருந்து ஏற்றுக் கொள்ளக்கூடிய அல்லது நமக்குள் எழக்கூடிய தவறான சிந்தனைகளால், நம்முடைய நடத்தைகளால் மாசுப்படுத்தி விடுகிறோம். 

இன்று அன்னை மரியாவினுடைய மாசற்ற இதய விழாவை நினைவு கூறுகிறோம். அன்னை மரியாவும் எல்லோரும் வாழ்ந்த அதே சமூகத்தில் தான் வாழ்ந்தார் எல்லோருக்கும் கொடுக்கப்பட்ட வாழ்க்கை சூழல் தான் அவருக்கும் கொடுக்கப்பட்டது ஆனால் அவரால் மட்டும் எப்படி தூய்மை நிறைந்த இதயத்தோடு வாழ முடிந்தது? 

கடவுள் ஆள் பார்த்து செயல்படுவதில்லை எல்லோர் மேலும் அருளை பொழிகிறார். பொழியப்பட்ட அருளை உள்ளத்தில் இருத்தி தியானித்தால் வாழ்வு நலமானதாக மாறும். 

அன்னை மரியாள் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த எல்லா நிகழ்வுகளையும் இதயத்தில் இருத்தி சிந்தித்தார். வாழ்க்கையினுடைய புரியாத புதிர் தொடங்கி தன் மகனின் இறப்பு, இறப்பிற்குப் பின் வாழ்க்கை என எல்லாவற்றிலும் நடந்த நினைவுகள் அவரை காயப்படுத்தியது, ஆனால் அவர் கலங்கவில்லை. 

கடவுள் என்னை ஏமாற்றி விட்டார் என்று சொல்லி கடவுளுக்கு எதிராக திரும்பவும் இல்லை. கடவுள் கொடுத்தார் கடவுள் எடுத்துக் கொண்டார் என்ற மனநிலை அன்னை மரியாவிடம் இருந்ததனால் எல்லா சூழ்நிலைகளிலும் அவருடைய இதயம் தூய்மையை இழக்காமல் இருந்தது.

பல வியாகுலங்களை தாங்கிய போதிலும் அந்த இதயம் மாசுபடாமல் இருந்தது.

வரலாற்றுப் பின்னணி 

1917 ஆம் ஆண்டு மரியன்னை பாத்திமாவில் காட்சி கொடுத்த பிறகு, இந்த பக்தி முயற்சி சிறப்பாக வளர்ந்தது. 1917 ஜூன் 13 ஆம் தேதி புதன் கிழமை காட்சியில், மரியன்னையின் தூய இதயம் முட்களால் ஊடுருவப்பட்டு இருப்பதை லூசியா கண்டார்.

1944ல் திருத்தந்தை 12ம் பயஸ் மரியாளின் மாசற்ற இதய விழாவை திருவழிபாட்டு நாள்காட்டியில் இணைத்து, ஆகஸ்ட் 22ஆம் தேதி கொண்டாடுமாறு அறிவித்தார். 1969இல் திருத்தந்தை 6ஆம் பவுல், இயேசுவின் தூய இதய பெருவிழாவுக்கு அடுத்த நாளில் மரியாளின் மாசற்ற இதயத்தை நினைவுகூரும் வகையில் இந்த திருநாளை மாற்றி அமைத்தார்.

மாசற்ற இதய படத்தின் விளக்கம்

எரியும் நெருப்பு - இயேசுவின், மக்களின் மீதான அன்பு

ஊடுருவிய வாள் - 7 வியாகுலங்கள்

மலர் - அன்னையின் தூய்மை

இதயம் - தாய்க்குரிய அன்பு


அருட்பணி. சைமன் ஆல்டஸ்
தூத்துக்குடி மறைமாவட்டம்

Thursday, June 26, 2025

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (27-06-2025)

 இதயத்தில் அன்பு...
இயேசுவின் தூய்மைமிகு இதய பெருவிழா

27.06.2025 - வெள்ளிக் கிழமை





 

முதல் வாசகம்

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 34: 11-16


தலைவராகிய ஆண்டவர் கூறுகிறார்: நானே என் மந்தையைத் தேடிச் சென்று பேணிக்காப்பேன். ஓர் ஆயன் தன் மந்தையினின்று சிதறுண்ட ஆடுகளைத் தேடிச் செல்வதுபோல, நானும் என் மந்தையைத் தேடிப் போவேன். மப்பும் மந்தாரமுமான நாளில் அவற்றை எல்லா இடங்களினின்றும் மீட்டு வருவேன். மக்களினங்களினின்று அவற்றை வெளிக்கொணர்ந்து, நாடுகளினின்று கூட்டிச்சேர்த்து, அவற்றின் சொந்த நாட்டிற்கு அழைத்து வருவேன். அவற்றை இஸ்ரயேலின் மலைகளிலும் ஓடையோரங்களிலும் நாட்டின் எல்லாக் குடியிருப்புகளிலும் மேய்ப்பேன். நல்ல மேய்ச்சல் நிலத்தில் அவற்றை மேய்ப்பேன். இஸ்ரயேலின் மலையுச்சிகளில் அவற்றின் மேய்ச்சல் நிலம் இருக்கும். அங்கே வளமான மேய்ச்சல் நிலத்தில் அவை இளைப்பாறும். இஸ்ரயேலின் மலைகளின்மேல் செழிப்பான மேய்ச்சல் நிலத்தில் அவை மேயும். நானே என் மந்தையை மேய்த்து, இளைப்பாறச் செய்வேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர். காணாமல் போனதைத் தேடுவேன்; அலைந்து திரிவதைத் திரும்பக் கொண்டு வருவேன்; காயப்பட்டதற்குக் கட்டுப் போடுவேன்; நலிந்தவற்றைத் திடப்படுத்துவேன். ஆனால், கொழுத்ததையும் வலிமையுள்ளதையும் அழிப்பேன். இவ்வாறு நீதியுடன் அவற்றை மேய்ப்பேன்.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல்

திபா 23: 1-3ய. 3b-4. 5. 6

பல்லவி: ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.


1 ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.

2 பசும் புல்வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்;

அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்.

3ய அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார். -பல்லவி


3b தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்;

4 மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும்,

நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்;

உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். -பல்லவி


5 என்னுடைய எதிரிகளின் கண்முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்;

என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்;

எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. -பல்லவி


6 உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம்

உம் அருள் நலமும் பேரன்பும் எனைப் புடைசூழ்ந்து வரும்;

நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். -பல்லவி



இரண்டாம் வாசகம்

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 5b-11


சகோதரர் சகோதரிகளே, நாம் பெற்றுள்ள தூய ஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது. நாம் இறைப்பற்று இன்றி வலுவற்று இருந்தபோதே, குறித்த காலம் வந்ததும் கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். நேர்மையாளருக்காக ஒருவர் தம் உயிரைக் கொடுத்தலே அரிது. ஒருவேளை நல்லவர் ஒருவருக்காக யாரேனும் தம் உயிரைக் கொடுக்கத் துணியலாம். ஆனால், நாம் பாவிகளாய் இருந்தபோதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இவ்வாறு கடவுள் நம்மீது கொண்டுள்ள தம் அன்பை எடுத்துக்காட்டியுள்ளார். ஆகையால் இப்போது நாம் கிறிஸ்துவின் இரத்தத்தினால் கடவுளுக்கு ஏற்புடையவர்களாகி, அவர் வழியாய்த் தண்டனையிலிருந்து தப்பி மீட்புப் பெறுவோம் என மிக உறுதியாய் நம்பலாம் அன்றோ? நாம் கடவுளுக்குப் பகைவர்களாயிருந்தும் அவருடைய மகன் நமக்காக உயிரைக் கொடுத்ததால் கடவுளோடு ஒப்புரவாக்கப்பட்டுள்ளோம். அப்படியானால் ஒப்புரவாக்கப்பட்டுள்ள நாம், வாழும் அவர் மகன் வழியாகவே மீட்கப்படுவோம் என மிக உறுதியாய் நம்பலாம் அன்றோ! அதுமட்டும் அல்ல, இப்போது கடவுளோடு நம்மை ஒப்புரவாக்கியுள்ள நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாய் நாம் கடவுளோடு உறவு கொண்டு பெருமகிழ்ச்சி அடைகிறோம். இம்மகிழ்ச்சியை நமக்குத் தருபவர் கடவுளே.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக் கொள்ளுங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.


லூக்கா 15:3-7

நற்செய்தி வாசகம்


லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 3-7


அக்காலத்தில் இயேசு பரிசேயர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்: ``உங்களுள் ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று காணாமற் போனால் அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பாலை நிலத்தில் விட்டுவிட்டு, காணாமற்போனதைக் கண்டுபிடிக்கும்வரை தேடிச்செல்ல மாட்டாரா? கண்டுபிடித்ததும், அவர் அதை மகிழ்ச்சியோடு தம் தோள்மேல் போட்டுக்கொள்வார்; வீட்டுக்கு வந்து, நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, `என்னோடு மகிழுங்கள்; ஏனெனில் காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்து விட்டேன்' என்பார். அது போலவே மனம் மாறத் தேவையில்லாத் தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியை விட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.''


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


இதயத்தில் அன்பு...

இயேசுவின் தூய்மைமிகு இதய பெருவிழா

27.06.2025 - வெள்ளிக் கிழமை


"விழிப்பாயிருந்து உன் இதயத்தைக் காவல் செய்; ஏனெனில், அதனின்று பிறப்பவை உன் வாழ்க்கையின் போக்கை உறுதிசெய்யும்" - நீதிமொழிகள் 4:23

இதயம் இருக்குதா, உன் இதயம் எல்லாம் கல்லு என்ற வார்த்தைகள் இதயமற்ற, அன்பற்ற மனிதர்களை பார்த்து சொல்லக்கூடியவை.

இதயம் கனிந்து இருக்க வேண்டும். கனியாத இதயம் கல் போன்றது. 

இன்று பல சமயங்களில் நாம் இதயமற்ற இரக்கமற்ற மனிதர்களாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இரக்கத்தோடு வாழ்வதனால் என்ன பயன்? அன்பு செய்வதனால் என்ன பயன்? என்ற கேள்விகள் பல தருணங்களில் கேட்கப்பட்டு கொண்டிருக்கிறது. (சில அன்புக்குரிய நபர்கள் ஏற்படுத்திய காயங்களினால் இக்கேள்விகள் எழுகிறது).

நம்முடைய இதயம் யாராவது ஒருவர் அமரக்கூடிய சிம்மாசனமாக இருக்கிறது, ஆனால் அந்த சிம்மாசனத்தின் இருக்கை என்பது தற்காலிகமானதாக இருக்கிறது. இதயத்தில் நிரந்தரமான இடம் யாருக்கும் நாம் கொடுப்பதில்லை, யாரும் நிரந்தரமாக அங்கு தங்குவதும் இல்லை. (சிலர் ஏற்படுத்திய காயங்களினால் சிலருக்கு இடமில்லாமல் போகிறது).

சில இதயங்கள் காயப்பட்டு போகின்றது, சில இதயங்கள் காயப்படுத்துகின்றது. 

இன்று இயேசுவின் தூய்மைமிகு இதய பெருவிழாவை கொண்டாடுகிறோம். இந்த இயேசுவின் இதயம் எல்லோருக்குமானது, பாகுபாடுகளைக் கடந்த இதயம், கனிவும் மனத் தாழ்மையும் உடைய இதயம், இழப்புகளை, எதிர்ப்புகளை சந்தித்தவர்களை தாங்கும் இதயம். இவ்வாறாக இயேசுவின் இதயம் பல பண்புகளை கொண்டுள்ளது. 

இறுதியில் அந்த இதயமும் காயப்பட்டு தான் இருக்கின்றது. எங்கு அதிகமாக அன்பு இருக்கிறதோ, எங்கு அதிகமான கனிவு இருக்கிறதோ அங்கு காயங்கள் அதிகம். இயேசுவின் வாழ்க்கையிலும் அது விதிவிலக்கு அல்ல. 

ஆனால் இயேசுவின் இதயம் காயப்பட்டாலும் மற்றவர்களின் காயங்களுக்கு கட்டு போடக்கூடிய இதயமாக தான் இருந்தது, இருக்கிறது, இன்னும் இருக்கும். 

மாற்கு நற்செய்தி 19: 31-37இல், படைவீரருள் ஒருவர் இயேசுவின் விலாவை ஈட்டியால் குத்தினார். உடனே இரத்தமும் தண்ணீரும் வடிந்தன.

இரத்தத்தாலும் சதையாலும் சூழப்பட்ட இதயமாக இயேசுவின் இதயம் இருக்கிறது. அவருடைய இதயம் பலருக்காக குத்தப்பட்டு கொண்டே இருக்கிறது. அந்த காயங்களுக்கு மருந்து எது? அன்பு ஒன்றே மருந்து. அந்த அன்பை நாம் எப்படி செலுத்தப் போகிறோம்? இயேசுவின் காயங்களை எப்படி குணப்படுத்த போகிறோம்?

மற்றவரின் இதயத்தை புண்படுத்தாத போது, மற்றவரின் காயங்களுக்கு கட்டுப் போடும்போது நான் இயேசுவின் காயங்களுக்கு மருந்திடுகிறோம். 

நம் கனிவு நிறைந்த இதயம் பல காயங்களுக்கு மருந்தாகட்டும்.

காயப்படுத்தும் இதயமாக அல்ல, மற்றவரின் காயங்களுக்கு கட்டுப்போடும் இதயமாக நம் இதயம் மாற வேண்டும்.

இயேசுவின் திரு இதயத்திலிருந்து பொங்கி வழியும் அன்பு நம் இதயத்திலும் பொங்கி வழிய வேண்டும்.


அருட்பணி. சைமன் ஆல்டஸ்

தூத்துக்குடி மறைமாவட்டம்

Wednesday, June 25, 2025

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (26-06-2025)

                                    பொதுக்காலம் 12 வாரம் வியாழன் 

 


முதல் வாசகம்

தொடக்க நூலிலிருந்து வாசகம் 16: 1-12,15-16

அந்நாள்களில் ஆபிராமின் மனைவி சாராய்க்கு மகப்பேறு இல்லை. சாராய்க்கு ஆகார் என்ற எகிப்திய பணிப்பெண் ஒருத்தி இருந்தாள். சாராய் ஆபிராமிடம், ``ஆண்டவர் என்னைப் பிள்ளை பெறாதபடி செய்துவிட்டார். நீர் என் பணிப்பெண்ணிடம் உறவு கொள்ளும். ஒருவேளை அவள் எனக்காகப் பிள்ளை பெற்றுத் தரக்கூடும்'' என்றார். ஆபிராம் சாராயின் சொல்லைக் கேட்டார். ஆபிராம் கானான் நாட்டில் பத்து ஆண்டுகள் வாழ்ந்த பின், அவர் மனைவி சாராய் எகிப்தியப் பணிப்பெண் ஆகாரைத் தம் கணவருக்கு மனைவியாகக் கொடுத்தார். அவர் ஆகாருடன் உறவு கொண்டபின் அவள் கருவுற்றாள். தான் கருவுற்றிருப்பதைக் கண்டதும் தன் தலைவியை அவள் ஏளனத்துடன் நோக்கினாள். அப்பொழுது சாராய் ஆபிராமிடம், ``எனக்கு இழைக்கப்பட்ட தீங்கு உம்மேல் இருக்கட்டும். நீர் தழுவும்படி நானே கொடுத்த என் பணிப்பெண், அவள் கருவுற்றிருக்கிறாள் என்பதைக் கண்டதிலிருந்து என்னை ஏளனமாக நோக்குகிறாள். ஆண்டவரே எனக்கும் உமக்கும் நீதி வழங்கட்டும்'' என்றார். ஆபிராம் சாராயிடம், ``உன் பணிப்பெண் உன் அதிகாரத்தின்கீழ் இருக்கின்றாள். உனக்கு நல்லதாகப் படுவதை அவளுக்குச் செய்'' என்றார். இதற்குப் பின் சாராய் அவளைக் கொடுமைப்படுத்தினார். ஆகவே, ஆகார் சாராயிடமிருந்து தப்பி ஓடினாள். ஆண்டவரின் தூதர் அவளைப் பாலைநிலத்தில் இருந்த ஒரு நீரூற்றுக்கு அருகில் கண்டார். அந்த ஊற்று சூருக்குச் செல்லும் வழியில் இருந்தது. அவர் அவளை நோக்கி, ``சாராயின் பணிப்பெண் ஆகார், நீ எங்கிருந்து வருகின்றாய்? எங்கே போகின்றாய்?'' என்று கேட்டார். அதற்கு அவள், ``என் தலைவி சாராயிடமிருந்து நான் தப்பி ஓடுகிறேன்'' என்றாள். ஆண்டவரின் தூதர் அவளிடம், ``நீ உன் தலைவியிடம் திரும்பிச் சென்று அவளுக்குப் பணிந்து நட'' என்றார். பின்பு ஆண்டவரின் தூதர் அவளிடம், ``உன் வழிமரபினரை யாரும் எண்ண முடியாத அளவுக்குப் பெருகச் செய்வேன்'' என்றார். மீண்டும் ஆண்டவரின் தூதர் அவளிடம், ``இதோ! கருவுற்றிருக்கும் நீ ஒரு மகனைப் பெற்றெடுப்பாய். அவனுக்கு `இஸ்மயேல்' எனப் பெயரிடுவாய். ஏனெனில் உன் துயரத்தில் ஆண்டவர் உனக்குச் செவிசாய்த்தார். ஆனால் அவன் காட்டுக் கழுதை போல் வாழ்பவனாக இருப்பான். எல்லாரையும் அவன் எதிர்ப்பான். எல்லாரும் அவனை எதிர்ப்பார்கள். தன் உறவினருக்கு எதிரியாக அவன் வாழ்வான்'' என்றார். ஆகார் ஆபிராமுக்கு மகன் ஒருவனைப் பெற்றெடுத்தாள். ஆகார் பெற்ற தம் மகனுக்கு ஆபிராம் `இஸ்மயேல்' என்று பெயரிட்டார். ஆகார் ஆபிராமுக்கு இஸ்மயேலைப் பெற்றெடுத்த பொழுது அவருக்கு வயது எண்பத்தாறு.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்
திபா 106: 1-2. 3-4. 4-5
பல்லவி: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில் அவர் நல்லவர்!

1 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில் அவர் நல்லவர்! என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு!
2 ஆண்டவரின் வலிமைமிகு செயல்களை யாரால் இயம்ப இயலும்? அவர்தம் புகழை யாரால் விளம்பக் கூடும்? -பல்லவி

3 நீதிநெறி காப்போர் பேறுபெற்றோர்! எப்போதும் நேரியதே செய்வோர் பேறுபெற்றோர்!
4 ஆண்டவரே! நீர் உம் மக்கள்மீது இரக்கம் காட்டும்போது என்னை நினைவுகூரும்! -பல்லவி

4 அவர்களை நீர் விடுவிக்கும்போது எனக்கும் துணை செய்யும்!
5 நீர் தேர்ந்தெடுத்த மக்களின் நல்வாழ்வை நான் காணும்படி செய்யும்;
உம்முடைய மக்களின் மகிழ்ச்சியில் நானும் பங்கு கொள்ளும்படிச் செய்யும்!
அப்போது, உமது உரிமைச் சொத்தான மக்களோடு உம்மைப் போற்றிட இயலும். -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.


மத்தேயு 7:21-29

பொதுக்காலம் 12 வாரம் வியாழன்


மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 21-29

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``என்னை நோக்கி, `ஆண்டவரே, ஆண்டவரே' எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர். அந்நாளில் பலர் என்னை நோக்கி, `ஆண்டவரே, ஆண்டவரே, உம் பெயரால் நாங்கள் இறைவாக்கு உரைக்கவில்லையா? உம் பெயரால் பேய்களை ஓட்டவில்லையா? உம் பெயரால் வல்ல செயல்கள் பல செய்யவில்லையா?' என்பர். அதற்கு நான் அவர்களிடம், `உங்களை எனக்குத் தெரியவே தெரியாது. நெறி கேடாகச் செயல்படுவோரே, என்னை விட்டு அகன்று போங்கள்' என வெளிப்படையாக அறிவிப்பேன். ஆகவே, நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படுகிற எவரும் பாறைமீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார். மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டின் மேல் மோதியும் அது விழவில்லை. ஏனெனில் பாறையின்மீது அதன் அடித்தளம் இடப்பட்டிருந்தது. நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படாத எவரும் மணல்மீது தம் வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஒப்பாவார். மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டைத் தாக்க, அது விழுந்தது; இவ்வாறு பேரழிவு நேர்ந்தது.'' இயேசு இவ்வாறு உரையாற்றி முடித்தபோது அவரது போதனையைக் கேட்ட மக்கள் கூட்டத்தினர் வியப்பில் ஆழ்ந்தனர். ஏனெனில் அவர்கள்தம் மறைநூல் அறிஞரைப் போலன்றி அதிகாரத்தோடு அவர்களுக்கு அவர் கற்பித்தார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


 இயேசுவின் பெயரை இழிவுப்படுத்த வேண்டாம்...

பொதுக் காலம் 12ஆம் வாரம்

26.06.2025- வியாழக் கிழமை


நல்லவை இயேசுவின் பெயரால் நடைபெறுகிறது, கெட்டவை இயேசுவின் பெயரைச் சொல்லி நடைபெறுகிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 7:21-29) "என்னை நோக்கி 'ஆண்டவரே, ஆண்டவரே' என சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்" என்கிறார் இயேசு.

பலர், "ஆண்டவரே, ஆண்டவரே உம் பெயரால் நாங்கள் இறைவாக்கு உரைக்கவில்லையா? உன் பெயரால் பேய்களை ஓட்டவில்லையா? உம் பெயரால் வல்ல செயல்கள் பல செய்யவில்லையா? என்பர். அதற்கு இயேசு உங்களை எனக்கு தெரியவே தெரியாது என்று பதில் சொல்வதாக இறைவார்த்தை பகுதி கொடுக்கப்பட்டிருக்கிறது.

பலர் கடவுளின் பெயரைச் சொல்லி பலவற்றை செய்கிறார்கள். ஆனால் அது கடவுளுக்கு ஏற்புடையதா? என்பது அவரவர் மனசாட்சியின் பொருட்டு கேட்கப்பட வேண்டிய கேள்வி...

நாம் செய்கிற எல்லாவற்றையும் செய்து விட்டு கடவுள் விரும்புகிறார், கடவுள் பேசுகிறார், கடவுள் எண்ணுகிறார் என்று சொல்வது பொய் பித்தலாட்டம். அது முற்றிலும் தவறானது. 

இன்று தெருவுக்கு தெரு பல கூட்டங்கள் இயேசுவின் பெயரைச் சொல்லி கூடுகின்றன. இயேசு அழைக்கிறார், இயேசு விடுவிக்கிறார் என்று சொல்லி இயேசுவின் பெயரால் பல சுரண்டல்கள் நடைபெறுகின்றன. (இயேசுவின் பெயரால் அங்கு நல்லது நடந்தால் தவறல்ல...)

இன்றைய நற்செய்தி வாசகத்தில் சொல்வது போல், "நெறி கேடாகச் செயல்படுவோரே, என்னை விட்டு அகன்று போங்கள்" என்று வெளிப்படையாக சொல்ல வேண்டிய நாள் வரும்.

அப்போது இயேசுவின் பணியைச் செய்கிறோம், இயேசுவின் சாட்சிகளாய் இருக்கிறோம் என்று சொல்லக்கூடிய நாம் துணிந்து/நிமிர்ந்து நிற்க முடியுமா?

கடவுளின் வார்த்தையைக் கேட்டு அதன்படி நடக்கிறவர் விண்ணரசுக்குள் செல்வர்.

இறைவார்த்தையைக் கேட்டு செயல்படும் (பாறை மீது வீட்டைக் கட்டிய) அறிவாளியாக நாம் இருக்கப் போகிறோமா? அல்லது இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படாத (மணல் மீது வீட்டைக் கட்டிய) அறிவிலியாக இருக்கப் போகிறோமா? என்பது நம் கையில் இருக்கிறது.

இயேசுவின் பெயரைச் சொல்லி பலவற்றை செய்வது எளிது. ஆனால் இயேசு விரும்பும் வாழ்க்கை வாழ்வதுதான் இயேசுவுக்கு நாம் பகரும் சான்று.

பத்துக் கட்டளைகளில் 3வது, "கடவுளின் திருப்பெயரை வீணாக சொல்லாதிருப்பாயாக". 

தேவை உள்ள இடத்தில் கடவுளின் பெயரைச் சொல்லுவோம். மற்ற இடங்களில் நம் வாழ்க்கையால் கடவுளின் பெயரை மகிமைப்படுத்துவோம்.

அருட்பணி. சைமன் ஆல்டஸ்

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (28-06-2025)

    முதல் வாசகம் தொடக்க நூலிலிருந்து வாசகம் 18: 1-15 அந்நாள்களில் ஆண்டவர் மம்ரே என்ற இடத்தில் தேவதாரு மரங்கள் அருகே ஆபிரகாமுக்குத் தோன்றினார...