Showing posts with label பொதுக்காலம் 1 வாரம். Show all posts
Showing posts with label பொதுக்காலம் 1 வாரம். Show all posts

Tuesday, January 10, 2023

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (11-01-2023)

பொதுக்காலம் முதல் வாரம் - புதன்


முதல் வாசகம்

இயேசு மக்கள் பாவங்களுக்குக் கழுவாய் ஆகும்படி எல்லாவற்றிலும் எல்லாரைப் போல் ஆகவேண்டியதாயிற்று

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 2: 14-18

ஊனும் இரத்தமும் கொண்ட பிள்ளைகளைப்போல் கிறிஸ்துவும் அதே இயல்பில் பங்கு கொண்டார். இவ்வாறு சாவின்மேல் ஆற்றல் கொண்டிருந்த அலகையைச் சாவின் வழியாகவே அழித்துவிட்டார். வாழ்நாள் முழுவதும் சாவு பற்றிய அச்சத்தினால் அடிமைப்பட்டிருந்தவர்களை விடுவித்தார்.

ஏனெனில் அவர் வானதூதருக்குத் துணை நிற்கவில்லை. மாறாக, ஆபிரகாமின் வழிமரபினருக்கே துணை நின்றார் என்பது கண்கூடு. ஆதலின், கடவுள் பணியில் அவர் இரக்கமும் நம்பிக்கையும் உள்ள தலைமைக் குருவாயிருந்து, மக்களுடைய பாவங்களுக்குக் கழுவாயாகுமாறு எல்லாவற்றிலும் தம் சகோதரர் சகோதரிகளைப் போல் ஆகவேண்டிய தாயிற்று. இவ்வாறு தாமே சோதனைக்கு உள்ளாகித் துன்பப்பட்டதனால் சோதிக்கப்படுவோருக்கு உதவி செய்ய அவர் வல்லவர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 105: 1-2. 3-4. 6-7. 8-9 (பல்லவி: 8a)

பல்லவி: ஆண்டவர் தம் உடன்படிக்கையை என்றும் நினைவில் கொள்கின்றார்.

அல்லது: அல்லேலூயா.

1
ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்! அவர்தம் பெயரைச் சொல்லி வழிபடுங்கள்! அவர்தம் செயல்களை மக்களினங்கள் அறியச் செய்யுங்கள்.
2
அவருக்குப் பாடல் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்! அவர்தம் வியத்தகு செயல்கள் அனைத்தையும் எடுத்துரையுங்கள்! - பல்லவி

3
அவர்தம் திருப்பெயரை மாட்சிப்படுத்துங்கள்; ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக!
4
ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள்! அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்! - பல்லவி

6
அவரின் ஊழியராம் ஆபிரகாமின் வழிமரபே! அவர் தேர்ந்துகொண்ட யாக்கோபின் பிள்ளைகளே!
7
அவரே நம் கடவுளாகிய ஆண்டவர்! அவரின் நீதித் தீர்ப்புகள் உலகம் அனைத்திற்கும் உரியன. - பல்லவி

8
அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்; ஆயிரம் தலைமுறைக்கென தாம் அளித்த வாக்குறுதியை நினைவுகூர்கின்றார்.
9
ஆபிரகாமுடன் தாம் செய்துகொண்ட உடன்படிக்கையையும் ஈசாக்குக்குத் தாம் ஆணையிட்டுக் கூறியதையும் அவர் நினைவில் கொண்டுள்ளார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 10: 27

அல்லேலூயா, அல்லேலூயா! "என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன,” என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

இயேசு பல்வேறு பிணிகளால் வருந்தியவரைக் குணப்படுத்தினார்.

 மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 29-39

இயேசுவும் சீடர்களும் தொழுகைக்கூடத்தை விட்டு வெளியே வந்து யாக்கோபு, யோவானுடன் சீமோன், அந்திரேயா ஆகியோரின் வீட்டிற்குள் சென்றார்கள்.

சீமோனுடைய மாமியார் காய்ச்சலாய்க் கிடந்தார். உடனே அவர்கள் அதைப் பற்றி இயேசுவிடம் சொன்னார்கள். இயேசு அவரருகில் சென்று கையைப் பிடித்து அவரைத் தூக்கினார். காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று. அவர் அவர்களுக்குப் பணிவிடை செய்தார்.

மாலை வேளையில், கதிரவன் மறையும் நேரத்தில் நோயாளர்கள், பேய்பிடித்தவர்கள் அனைவரையும் மக்கள் அவரிடம் கொண்டு வந்தார்கள். நகர் முழுவதும் வீட்டு வாயில்முன் கூடியிருந்தது. பல்வேறு பிணிகளால் வருந்திய பலரை அவர் குணப்படுத்தினார். பல பேய்களையும் ஓட்டினார்; அந்தப் பேய்கள் அவரை அறிந்திருந்ததால் அவற்றை அவர் பேசவிடவில்லை.

இயேசு விடியற்காலைக் கருக்கலில் எழுந்து தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கே அவர் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார். சீமோனும் அவருடன் இருந்தவர்களும் அவரைத் தேடிச் சென்றார்கள். அவரைக் கண்டதும், “எல்லாரும் உம்மைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்” என்றார்கள். அதற்கு அவர், “நாம் அடுத்த ஊர்களுக்குப் போவோம், வாருங்கள். அங்கும் நான் நற்செய்தியைப் பறைசாற்ற வேண்டும்; ஏனெனில் இதற்காகவே நான் வந்திருக்கிறேன்” என்று சொன்னார். பின்பு அவர் கலிலேய நாடு முழுவதும் சென்று அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் நற்செய்தியைப் பறைசாற்றிப் பேய்களை ஓட்டி வந்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


நமது அன்பு பரவுகிறதா? 

ஒரு அரசு அதிகாரி நீதியுடனும் நேர்மையுடனும் நற்காரியங்களும் அதிக சீர்திருத்த செயல்பாடுகளையும் செய்து வந்தார். அதனாலேயே அவர் அடிக்கடி பணியிடம் மாற்றப்பட்டார். ஆனால் அவர் செல்லும் போதெல்லாம் மனமகிழ்ச்சியுடன் செல்வார் செல்லுமிடமில்லாம் நற்காரியங்கள் செய்ய வேண்டும் என்ற எண்ணம் நிறைந்தவராய்.


நதி ஓரிடத்தில் தேங்கியிருந்தால் அதன் நோக்கம் நிறைவுறாது. அதுபோலத்தான் அன்பு ஓரிடத்தில் தேங்கியிருந்தால் அதில் பலனில்லை. இன்றைய நற்செய்தியில் இயேசு தம் சீடர்களிடம்  வேறு பகுதிகளுக்கெல்லாம் சென்று தன்னுடைய பணியை செய்யவேண்டுமெனவும்  அதற்காகவே அவர் வந்ததாகவும் கூறுகிறார். இயேசு அன்பு நிறைந்தவர். நன்மைகள் செய்ய வேண்டுமென்ற ஆர்வமுடையவர். சமூகத்தில் ஓரங்கட்டப்பட்ட, ஒதுக்கப்பட்ட மக்கள் அனைவரும் கடவுளின் அன்பையும் அருளையும் பெற வேண்டுமென்று விரும்பியவர். பாவிகளும், பிற இனத்தவரும், வரி தண்டுபவர்களும் கூட கடவுளுடைய இரக்கத்தைப் பெற வேண்டும் என எண்ணியவர். எனவேதான் அவர் நாடோடி போல ஊர் ஊராகவும், தெருக்கள்தோறும் அலைந்து தன் உடல்  களைப்பை கூட பொருட்படுத்தாமல் பணி செய்தார் என விவிலியத்தில் நாம் வாசிக்கிறோம். 


பொதுவாக பணியிட மாற்றங்கள் தரப்படும்  போது நம்மில் பலர் அதனை விரும்புவதில்லை. தெரியாத இடம்,அறியாத நபர்கள்,  என அனைத்தையும் எண்ணி பயப்படுகிறோம். ஆனால் கொஞ்சம் மாற்றி யோசித்துப் பார்த்தால், புதிய ஊர், புதிய உறவுகள் நட்புகள் கிடைப்பதோடு நம்முடைய அன்பைக் காட்டவும்  நற்காரியங்களைச் செய்யவும் நமக்குக் கிடைக்கின்ற வாய்ப்புக்கள் அவை. இயேசு ஒரே இடத்தில் தெரிந்தவர்களுக்கு மட்டும் பணி செய்திருந்தால் மற்ற ஊரில் உள்ள மக்களுக்கு அவரைப் பற்றித் தெரிந்திருக்காது. தன் அன்பைத் தேக்கி வைக்கமால்  பலருக்கு பகிர்ந்த அன்னை தெரசா கன்னியர் மடத்தின் அறையிலிருந்து வெளியேறி தெருக்களில் அலைந்து தேவையில் உள்ளோரைத் தேடி உதவியால்தான் நாம் அனைவரும் இன்று அவரை அறிகிறோம். 


இச்சிந்தனைகள் நமக்குத் தரும் செய்தி என்ன? நம்முடைய அன்பும் நற்செயல்களும் ஒரு குறிப்பிட்ட இடத்திலோ, சில மனிதர்களுக்கு மட்டுமோ இல்லாமல் பல இடங்களுக்கும் பல மனிதர்களுக்கும் சென்று அடைய வேண்டும். அதற்கு நாம் நம்முடைய சுயநலனைக் களைந்து பயணிக்க வேண்டும். நம்முடைய எண்ணங்களும், பார்வையும் பரந்து விரிந்தவையாக இருக்க வேண்டும். இதனால் நாம் துன்பம் அடைய நேரிட்டாலும், நம்மைப் போல் துன்பப்படுபவர்களை புரிந்து கொள்வதற்கான வாய்ப்பாக அதைக் கருதி நம் அன்பைப் பகிர வேண்டும்.  இத்தகைய அன்பு வாழ்வு வாழ இறைவனிடம் வரம் கேட்போம்.


 இறைவேண்டல் 

அன்பு இறைவா!

செல்லும் இடமெல்லாம் அன்பை வழங்கி நன்மைகள் செய்து கொண்டே சென்ற இயேசுவைப் போல நாங்களும் எம் அன்பை எமது நற்செயல்கள் மூலம் பலருக்கும் வழங்க அருள் தாரும். ஆமென்.

அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Sunday, January 8, 2023

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (09-01-2023)

 

ஆண்டவரின் திருமுழுக்கு

விழா


முதல் வாசகம்

இதோ! என் ஊழியர்! அவரால் என் நெஞ்சம் பூரிப்படைகின்றது.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 42: 1-4, 6-7

ஆண்டவர் கூறுவது:

இதோ! என் ஊழியர்! அவருக்கு நான் ஆதரவு அளிக்கிறேன்; நான் தேர்ந்துகொண்டவர் அவர்; அவரால் என் நெஞ்சம் பூரிப்படைகின்றது; அவருள் என் ஆவி தங்கும்படி செய்தேன்; அவர் மக்களினங்களுக்கு நீதி வழங்குவார். அவர் கூக்குரலிடமாட்டார்; தம் குரலை உயர்த்தமாட்டார்; தம் குரலொலியைத் தெருவில் எழுப்பவுமாட்டார். நெரிந்த நாணலை முறியார்; மங்கி எரியும் திரியை அணையார்; உண்மையாகவே நீதியை நிலைநாட்டுவார். உலகில் நீதியை நிலைநாட்டும்வரை அவர் சோர்வடையார்; மனம் தளரமாட்டார்; அவரது நீதிநெறிக்காகத் தீவு நாட்டினர் காத்திருப்பர்.

ஆண்டவராகிய நான் நீதியை நிலைநாட்டுமாறு உம்மை அழைத்தேன்; உம் கையைப் பற்றிப்பிடித்து, உம்மைப் பாதுகாப்பேன்; மக்களுக்கு உடன்படிக்கையாகவும் பிற இனத்தாருக்கு ஒளியாகவும் நீர் இருக்குமாறு செய்வேன். பார்வை இழந்தோரின் கண்களைத் திறக்கவும், கைதிகளின் தளைகளை அறுக்கவும், இருளில் இருப்போரைச் சிறையினின்று மீட்கவும் உம்மை அழைத்தேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


அல்லது

கடவுள் இயேசுவின்மேல் தூய ஆவியாரின் வல்லமையைப் பொழிந்தருளினார்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 10: 34-38

கொர்னேலியு மற்றும் அவரது வீட்டாரை நோக்கிப் பேதுரு கூறியது: “கடவுள் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை என்பதை நான் உண்மையாகவே உணர்கிறேன். எல்லா இனத்தவரிலும் அவருக்கு அஞ்சி நடந்து, நேர்மையாகச் செயல்படுபவரே அவருக்கு ஏற்புடையவர்.

இயேசு கிறிஸ்து வாயிலாக அமைதி உண்டு என்னும் நற்செய்தியை அவர் இஸ்ரயேல் மக்களுக்கு அனுப்பினார். அவரே அனைவருக்கும் ஆண்டவர். திருமுழுக்குப் பெறுங்கள் என்று யோவான் பறைசாற்றிய பின்பு கலிலேயா முதல் யூதேயா முழுவதிலும் நடந்தது உங்களுக்குத் தெரியும். கடவுள் நாசரேத்து இயேசுவின்மேல் தூய ஆவியாரின் வல்லமையைப் பொழிந்தருளினார். கடவுள் அவரோடு இருந்ததால் அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும் அவர் விடுவித்து எங்கும் நன்மை செய்துகொண்டே சென்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 29: 1a,2. 3ac-4. 9b-10 (பல்லவி: 11b)

பல்லவி: ஆண்டவர் தம் மக்களுக்கு அமைதி அளித்து ஆசி வழங்குவாராக!

1a
இறைவனின் மைந்தரே! மாட்சியையும் வலிமையையும் ஆண்டவருக்கு உரித்தாக்குங்கள்.
2
ஆண்டவரின் பெயருக்கேற்ற மாட்சியை அவருக்கு உரித்தாக்குங்கள்; தூய மாட்சி இலங்கும் ஆண்டவரை வழிபடுங்கள். - பல்லவி

3ac
ஆண்டவரின் குரல் கடல்மேல் ஒலிக்கின்றது; ஆண்டவர் நீர்த்திரள்களின்மேல் வீற்றிருக்கின்றார்.
4
ஆண்டவர் குரல் வலிமைமிக்கது; ஆண்டவரின் குரல் மாட்சிமிக்கது. - பல்லவி

9b
ஆண்டவரின் குரல் காடுகளை வெறுமையாக்குகின்றது; அவரது கோவிலில் உள்ள அனைவரும் ‘இறைவனுக்கு மாட்சி’ என்று ஆர்ப்பரிக்கின்றனர்.
10
ஆண்டவர் வெள்ளப் பெருக்கின்மீது வீற்றிருக்கின்றார்; ஆண்டவர் என்றென்றும் அரசராக வீற்றிருக்கின்றார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மாற் 9: 7

அல்லேலூயா, அல்லேலூயா! வானம் திறந்தது; தந்தையின் குரலொலி கேட்டது: “என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்” அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

திருமுழுக்குப் பெற்ற இயேசு, கடவுளின் ஆவி தம்மீது இறங்கி வருவதைக் கண்டார்.

 மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 13-17

அக்காலத்தில்

இயேசு யோவானிடம் திருமுழுக்குப் பெறக் கலிலேயாவிலிருந்து யோர்தானுக்கு வந்தார். யோவான், “நான்தான் உம்மிடம் திருமுழுக்குப் பெற வேண்டியவன்; நீரா என்னிடம் வருகிறீர்?” என்று கூறித் தடுத்தார். இயேசு, “இப்பொழுது விட்டுவிடும். கடவுளுக்கு ஏற்புடையவை அனைத்தையும் நாம் நிறைவேற்றுவதுதான் முறை” எனப் பதிலளித்தார். அதற்கு யோவானும் இணங்கினார்.

இயேசு திருமுழுக்குப் பெற்றவுடனே தண்ணீரை விட்டு வெளியேறினார். உடனே வானம் திறந்ததையும் கடவுளின் ஆவி, புறா இறங்குவதுபோலத் தம்மீது வருவதையும் அவர் கண்டார். அப்பொழுது, “என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்” என்று வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது.

ஆண்டவரின் அருள்வாக்கு.


தீயவற்றை விரட்டுவோம்! தூயவற்றால் நிரம்புவோம்! 


தீயவை நம்மிடமிருந்து அகலும் போது தூயவை நம்மைத் தானாக நிரப்பும் என்பதுதான் இன்று நமக்கு இறைவார்த்தை வழங்கும் செய்தி. இதனை இன்றைய நற்செய்தி நமக்கு தெளிவாக விளக்குகிறது.


இயேசு தொழுகைக் கூடத்தில் போதித்துக் கொண்டிருந்த போது தீய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டிருந்த மனிதன் இயேசுவை யார் என்று உணர்ந்து அவரைப் பற்றி அறிக்கையிட்டதாக நாம் வாசிக்கிறோம். இந்த நிகழ்வு நமக்கு வியப்பைத் தரலாம். அதாவது தீய ஆவி பிடித்த மனிதன் இருந்தது தொழுகைக் கூடத்தில். இறைவனால் நிரம்பப்பட்ட இடம்தான் தொழுகைக்கூடம். இந்த மனிதன் இத்தொழுகைக் கூடத்திற்கு அடிக்கடி வந்திருக்கக்கூடும். இருப்பினும் மாற்றம் இல்லை. ஆனால் இயேசுவை உணர்ந்த பிறகு, கண்டறிந்த பிறகு அவன் தூய மனிதனாக மாறினான்.


இங்கே நடந்தது என்ன? இயேசுவைக் கண்டறியாத வரை தீய ஆவியால்  நிறைந்திருந்தான். அத்தீய நிலையிலேயே இயேசுவைக் கண்டுகொள்ள முடிந்தது. இயேசுவின் தூய ஆவியால் அவனிடமிருந்து தீய ஆவி விலகியது.


எல்லா மனிதருக்குள்ளும் நன்மையும் இருக்கும். தீயதும் இருக்கும். ஆனால் சிலருக்கு தீயவை மேலோங்கி இருக்க வாய்ப்புள்ளது. இந்நிலை கடவுளை அறியவிடாமல் தடுக்கிறது. அறிந்தாலும் விலகி ஓட நம்மைத் தூண்டுகிறது. நம்முள் இருக்கும் தீமையை விட கடவுள் ஆற்றல் வாய்ந்தவர் என நாம் உணர்ந்தாலே போதும்.  நாமும் தூய்மையாவோம்.

நாமும் அத்தீய ஆவி பிடித்த மனிதன் தொழுகைக் கூடம் சென்றது போல கோவிலுக்குச் செல்வதாலும், ஒன்றிரண்டு நற்செயல்கள் புரிவதாலும் மட்டும் நாம்  நல்லவர்களாகிட மாட்டோம். இயேசுவைக் கண்டறிந்து அந்த ஆற்றலால் தீயவற்றை நம்மிடமிருந்து விரட்டும் போது தான் நம்மிலே நன்மை மேலோங்கி நிற்கும். 


தீய ஆவியால் கூட இயேசுவை உணர முடிந்தது. ஆனால் அது இயேசுவை தன்னைவிட்டு அகலுமாறு கூறியது. நாம் அவ்வாறு இருக்கக்கூடாது. இயேசு நம்மை விட்டு அகலவேண்டும் என்று எண்ணக் கூடாது. மாறாக இயேசுவை நம்மிலே செயலாற்ற அனுமதிக்க வேண்டும். அப்போது நம் அனைவரிலும் உள்ள தீயவை வெளியேறும். நாம் நன்மைகளால் நிரப்பப்படுவோம். இத்தகைய வரத்திற்காய் செபிப்போம்.


 இறைவேண்டல் 

அன்பு இறைவா! உம்மை நாங்கள் கண்டறிந்து எம்மிடமுள்ள தீயவற்றை அகற்றி நன்மைகளால் நிரப்பப்படுவோமாக. ஆமென்.

அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (28-06-2025)

    முதல் வாசகம் தொடக்க நூலிலிருந்து வாசகம் 18: 1-15 அந்நாள்களில் ஆண்டவர் மம்ரே என்ற இடத்தில் தேவதாரு மரங்கள் அருகே ஆபிரகாமுக்குத் தோன்றினார...