Monday, January 30, 2023

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

 

பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய்

முதல் வாசகம்

நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 12: 1-4

சகோதரர் சகோதரிகளே,

திரண்டு வரும் மேகம்போல் இத்தனை சாட்சிகள் நம்மைச் சூழ்ந்து நிற்க எந்தச் சுமையையும், நம்மைப் பற்றிக்கொண்டிருக்கும் எந்தப் பாவத்தையும் உதறித் தள்ளிவிட்டு, நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. நம்பிக்கையைத் தொடங்கி வழிநடத்துபவரும் அதை நிறைவு செய்பவருமான இயேசுவின்மீது கண்களைப் பதிய வைப்போம். அவர் தாம் அடைய இருந்த மகிழ்ச்சியின் பொருட்டு, இழிவையும் பொருட்படுத்தாமல் சிலுவையை ஏற்றுக்கொண்டார். இப்போது, கடவுளது அரியணையின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார்.

பாவிகளால் தமக்கு உண்டான எந்த எதிர்ப்பையும் மன உறுதியோடு தாங்கிக்கொண்ட அவரை எண்ணிப்பாருங்கள். அப்போது நீங்கள் மனம் சோர்ந்து, தளர்ந்து போகமாட்டீர்கள். பாவத்திற்கு எதிரான போராட்டத்தில், இரத்தம் சிந்தும் அளவுக்கு நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்கவில்லை.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 22: 25b-26. 27,29. 30-31 (பல்லவி: 26b)

பல்லவி: ஆண்டவரை நாடுவோர் அவரைப் புகழ்வராக!

25b
உமக்கு அஞ்சுவோர் முன்னிலையில் என் பொருத்தனைகளைச் செலுத்துவேன்.
26
எளியோர் உணவு உண்டு நிறைவு பெறுவர்; ஆண்டவரை நாடுவோர் அவரைப் புகழ்வராக! அவர்கள் இதயம் என்றென்றும் வாழ்வதாக! - பல்லவி

27
பூவுலகின் கடையெல்லைவரை உள்ளோர் அனைவரும் இதை உணர்ந்து ஆண்டவர் பக்கம் திரும்புவர்; பிற இனத்துக் குடும்பத்தார் அனைவரும் அவர் முன்னிலையில் விழுந்து பணிவர்.
29
மண்ணின் செல்வர் யாவரும் அவரைப் பணிவர்; புழுதிக்குள் இறங்குவோர் யாவரும், தம் உயிரைக் காத்துக் கொள்ளாதோரும் அவரை வணங்குவர். - பல்லவி

30
வருங்காலத் தலைமுறையினர் அவரைத் தொழுவர்; இனிவரும் தலைமுறையினருக்கு ஆண்டவரைப் பற்றி அறிவிக்கப்படும்.
31
அவர்கள் வந்து, அவரது நீதியை அறிவிப்பர்; இனி பிறக்கப்போகும் மக்களுக்கு ‘இதை அவரே செய்தார்’ என்பர். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 8: 17

அல்லேலூயா, அல்லேலூயா! அவர் நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

சிறுமியே! உனக்குச் சொல்லுகிறேன், எழுந்திடு.

 மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 21-43

இயேசு படகிலேறி, கடலைக் கடந்து மீண்டும் மறுகரையை அடைந்ததும் பெருந்திரளான மக்கள் அவரிடம் வந்து கூடினர். அவர் கடற்கரையில் இருந்தார். தொழுகைக்கூடத் தலைவர்களுள் ஒருவரான யாயிர் என்பவர் வந்து, அவரைக் கண்டு அவரது காலில் விழுந்து, “என் மகள் சாகும் தறுவாயில் இருக்கிறாள். நீர் வந்து அவள்மீது உம் கைகளை வையும். அப்போது அவள் நலம் பெற்றுப் பிழைத்துக்கொள்வாள்” என்று அவரை வருந்தி வேண்டினார்.

இயேசுவும் அவருடன் சென்றார். பெருந்திரளான மக்கள் அவரை நெருக்கிக்கொண்டே பின்தொடர்ந்தனர். அப்போது பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப் போக்கினால் வருந்திய பெண் ஒருவர் அங்கு இருந்தார். அவர் மருத்துவர் பலரிடம் தமக்கு உள்ளதெல்லாம் செலவழித்தும் ஒரு பயனும் அடையாமல் மிகவும் துன்பப்பட்டவர். அவர் நிலைமை வரவர மிகவும் கேடுற்றது. அவர் இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டு மக்கள் கூட்டத்துக்கிடையில் அவருக்குப் பின்னால் வந்து அவரது மேலுடையைத் தொட்டார். ஏனெனில், “நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன்” என்று அப்பெண் எண்ணிக்கொண்டார். தொட்ட உடனே அவருடைய இரத்தப்போக்கு நின்றுபோயிற்று. அவரும் தம் நோய் நீங்கி, நலம் பெற்றதைத் தம் உடலில் உணர்ந்தார்.

உடனே இயேசு தம்மிடமிருந்து வல்லமை வெளியேறியதைத் தம்முள் உணர்ந்து மக்கள் கூட்டத்தைத் திரும்பிப் பார்த்து, “என் மேலுடையைத் தொட்டவர் யார்?” என்று கேட்டார். அதற்கு அவருடைய சீடர்கள் அவரிடம், “இம்மக்கள் கூட்டம் உம்மைச் சூழ்ந்து நெருக்குவதைக் கண்டும், ‘என்னைத் தொட்டவர் யார்?’ என்கிறீரே!” என்றார்கள். ஆனால் அவர் தம் மேலுடையைத் தொட்டவரைக் காணும்படி சுற்றிலும் திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அப்பெண் தமக்கு நேர்ந்ததை அறிந்தவராய், அஞ்சி நடுங்கிக்கொண்டு, அவர்முன் வந்து விழுந்து, நிகழ்ந்தது அனைத்தையும் அவரிடம் சொன்னார். இயேசு அவரிடம், “மகளே, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று. அமைதியுடன் போ. நீ நோய் நீங்கி நலமாயிரு” என்றார்.

அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, தொழுகைக்கூடத் தலைவருடைய வீட்டிலிருந்து ஆள்கள் வந்து, அவரிடம், “உம்முடைய மகள் இறந்துவிட்டாள். போதகரை ஏன் இன்னும் தொந்தரவு செய்கிறீர்?” என்றார்கள். அவர்கள் சொன்னது இயேசுவின் காதில் விழுந்ததும், அவர் தொழுகைக்கூடத் தலைவரிடம், “அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்” என்று கூறினார். அவர் பேதுரு, யாக்கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான் ஆகியோரைத் தவிர வேறொருவரையும் தம்முடன் வரவிடவில்லை.

அவர்கள் தொழுகைக்கூடத் தலைவரின் வீட்டிற்குச் சென்றார்கள். அங்கே அமளியையும் மக்கள் அழுது ஓலமிட்டுப் புலம்புவதையும் இயேசு கண்டார். அவர் உள்ளே சென்று, “ஏன் இந்த அமளி? ஏன் இந்த அழுகை? சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள்” என்றார். அவர்கள் அவரைப் பார்த்து நகைத்தார்கள்.

ஆனால் அவர் அனைவரையும் வெளியேற்றியபின், சிறுமியின் தந்தையையும் தாயையும் தம்முடன் இருந்தவர்களையும் கூட்டிக்கொண்டு, அச்சிறுமி இருந்த இடத்திற்குச் சென்றார். சிறுமியின் கையைப் பிடித்து அவளிடம், “தலித்தா கூம்” என்றார். அதற்கு, ‘சிறுமி, உனக்குச் சொல்லுகிறேன், எழுந்திடு’ என்பது பொருள். உடனே அச்சிறுமி எழுந்து நடந்தாள். அவள் பன்னிரண்டு வயது ஆனவள். மக்கள் பெரிதும் மலைத்துப்போய் மெய்ம்மறந்து நின்றார்கள். “இதை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது” என்று அவர் அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்; அவளுக்கு உணவு கொடுக்கவும் சொன்னார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


"நம்பிக்கை நலமளிக்கும் !" 


 நான் பணியாற்றிய பங்கில் ஒரு குடும்பத்தை சந்தித்த பொழுது கடவுள் செய்த மாபெரும் நன்மையை நம்பிக்கை அறிக்கையாக சாட்சி பகர்ந்தனர்.  கடவுள் மீது மிகவும் பக்தி கொண்ட ஒரு தாய் கருவுற்றிருந்தார். அவர் கருவிலே சுமந்த குழந்தையை ஸ்கேன் எடுக்கும் போது  உரு குலைந்து இருப்பதாக மருத்துவர் கூறினார். தாயும் உறவினரும் மிகுந்த வருத்தப்பட்டனர். ஆனால் இந்த தாய் நம்பிக்கையை மட்டும் விடவில்லை. தொடர்ந்து இறைவனிடம் வேண்டினார். கடவுள் நிச்சயமாக தனது குழந்தைக்கு உடல் உள்ள சுகத்தை கொடுத்து ஆரோக்கியத்தோடு பிறக்க வைப்பார் என்று நம்பினார். குழந்தை பிறக்கக்கூடிய நேரம் வந்தது. மருத்துவரும் உறவினரும் தாயும் ஆச்சரியப்படும் வகையில் குழந்தை ஆரோக்கியமாகப் பிறந்தது. அந்த நொடி முதல் அந்த தாய் கடவுளின் நாமத்தை சொல்லி இன்று வரை புகழ்ந்து கொண்டிருக்கிறார். அற்புதமாய் பிழைக்க வைத்து சிறப்பாக பிறக்க வைத்த அந்தக் குழந்தை இப்பொழுது ஒன்பதாம் வகுப்பு மிகச் சிறப்பான முறையில் படித்து வருகிறது.


நம்முடைய ஆண்டவர் நம்புகிறவர்களை ஒருபோதும் கைவிடாத இறைவன். மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும் நம்பிக்கையில்தான் வாழ்க்கை நடத்துகிறோம். நம்பிக்கை இல்லை என்றால் மனித வாழ்வு மகிழ்ச்சிகரமாக இருக்காது. குடும்ப வாழ்வில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் அமைதியும் இருக்க வேண்டுமென்றால் ஒருவர் மற்றவரை நம்ப வேண்டும். கடவுள் இருக்கிறார் என்று  பயணிக்கும் நம்பிக்கையாளர்கள் நம்பிக்கையால் பல அற்புதங்களை பெறுகின்றனர். கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகர்களும் கூட கொள்கைகளையும் மானுடத்தையும் நம்புகின்றனர். ஆக நம்பிக்கை இல்லாத வாழ்வு சிறப்பான வாழ்வாக இருக்காது.


இன்றைய நற்செய்தியில் நம்பிக்கை நலவாழ்வு அளித்ததைப் பற்றி நாம் அறிய வருகிறோம்.  பிற இனத்தவர் வாழும் பகுதியிலிருந்து யூதர்கள் வாழும் பகுதிக்கு இயேசு வருகிறார். பெருந்திரளான மக்கள் இயேசுவை நெருங்கி வந்தனர். அப்பொழுது இயேசு இரண்டு அற்புதங்களை செய்தார். முதலாவதாக பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப்போக்கினால் வருந்திய பெண்  "நான் அவருடைய ஆடையை தொட்டாலே நலம் பெறுவேன் " என்ற நம்பிக்கையில் இயேசுவின் ஆடையை தொட்டார். நலம் பெற்றார். இரண்டாவதாக தொழுகை கூட தலைவர் தன்னுடைய மகள் இறந்து விட்டாள் என்ற செய்தியை அறிந்த பிறகும்  இயேசுவால் தன் மகளை மீண்டும் தர முடியும் என்று ஆழமாக நம்பினார். தன் மகளை உயிரோடு மீண்டும் பெற்றார். இந்த இரண்டு வல்ல செயல்களுக்கும் அடிப்படையாக இருந்தது நம்பிக்கை


நம்பிக்கை நமக்கு நலம் தருகிறது. நம்பிக்கை நமக்கு புது வாழ்வு தருகிறது. நம்பிக்கை இறை அனுபவத்தை தருகிறது. நம்பிக்கை நமக்கு வெற்றியை தருகிறது. நம்பிக்கை நமக்கு ஆற்றலை தருகிறது. நம்பிக்கை இறைவனின் இரக்கத்தை தருகிறது. நம்பிக்கை வழிகாட்டுகிறது. நம்பிக்கை வெற்றியை தருகிறது. நம்பிக்கை நாம் கேட்பதை கடவுள் கொடுப்பார் என்ற ஆழமான மனநிலையைக்  கொடுக்கிறது. நம்பிக்கையால் நாம் அனைவரும் கடவுளின் ஆற்றலைப் பெறுகிறோம்.


எனவே நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நம்பிக்கையோடு இறைவனின் கரத்தை பற்றி பிடிக்கும் பொழுது அற்புதங்களையும் அதிசயங்களையும் நாம் காண முடியும். "மகனே, உனது நம்பிக்கை உன்னை குணமாக்கிற்று " (மாற்: 5:34) என்று ஆண்டவர் இயேசு நம்மைப் பார்த்தும் கூறுகிறார். நம்முடைய வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சனைகள், பலவீனங்கள், அடிமைத்தனங்கள், சுமைகள், கண்ணீர்கள் இருந்தாலும் கூட  இறைவனை ஆழமாக நம்பும் பொழுது நாம் நலம் பெற முடியும்.இயேசுவை நம்பி வரக்கூடியவர்களை இயேசு ஒருபோதும் கைவிடமாட்டார். எனவே "விசுவாசத்தை தொடங்கி வைத்த வரும் அதை நிறைவு பெற செய்பவருமானவர் இயேசு (எபி: 12:2) என்ற பவுலடியாரின் வார்த்தைக்கு ஏற்ப நம்பிக்கையோடு நம் வாழ்வில் பயணிப்போம். நம்பிக்கையில் வளருவோம்! நாளும் கடவுளின் அருள் பெற்று வாழ்வோம்.


 இறைவேண்டல்

நம்பிக்கையின் நாயகனே இறைவா! எங்களுடைய  அன்றாட வாழ்க்கையில் நம்பிக்கையில் வேரூன்றி சிறப்பான கிறிஸ்த வாழ்வை வாழ்ந்திட அருளைத் தாரும். ஆமென்.


அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Sunday, January 29, 2023

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (30-01-2023)

 

பொதுக்காலம் 4ஆம் வாரம் - திங்கள்





முதல் வாசகம்

நம்பிக்கையினாலேயே நீதித்தலைவர்கள் அரசுகளை வென்றார்கள்.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 11: 32-40

சகோதரர் சகோதரிகளே,

கிதியோன், பாராக்கு, சிம்சோன், இப்தாகு, தாவீது, சாமுவேல் ஆகியோர் பற்றியும், இறைவாக்கினர் பற்றியும் எடுத்துரைக்க எனக்கு நேரமில்லை. நம்பிக்கையினாலேயே இவர்கள் அரசுகளை வென்றார்கள்; நேர்மையாகச் செயல்பட்டார்கள்; கடவுள் வாக்களித்தவற்றைப் பெற்றார்கள்; சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள்; தீயின் கொடுமையைத் தணித்தார்கள்; வாள்முனைக்குத் தப்பினார்கள்; வலுவற்றவராய் இருந்தும் வலிமை பெற்றார்கள்; போரில் வீரம் காட்டினார்கள்; மாற்றார் படைகளை முறியடித்தார்கள்.

பெண்கள் இறந்த தம் உறவினரை உயிர்த்தெழுந்தவராய்ப் பெற்றுக்கொண்டார்கள். உயிர்த்தெழுந்து சிறப்புறும் பொருட்டு, சிலர் விடுதலை பெற மறுத்து, வதையுண்டு மடிந்தனர். வேறு சிலர் ஏளனங்களுக்கும் கசையடிகளுக்கும் ஆளாயினர்; விலங்கிடப்பட்டுச் சிறையில்கூட அடைக்கப்பட்டனர். சிலர் கல்லெறிபட்டனர்; இரண்டாக அறுக்கப்பட்டனர்; வாளுக்கு இரையாகி மடிந்தனர்; செம்மறியின் தோலையும் வெள்ளாட்டுத் தோலையும் போர்த்துக்கொண்டு அலைந்து திரிந்தனர்; வறுமையுற்று வாடினர்; துன்புறுத்தப்பட்டனர்; கொடுமைக்கு உள்ளாயினர். அவர்களை ஏற்க இவ்வுலகுக்குத் தகுதியில்லாமல் போயிற்று. மலைகளிலும் குகைகளிலும் நிலவெடிப்புகளிலும் பாலைவெளிகளிலும் அவர்கள் அலைந்து திரிந்தார்கள்.

இவர்கள் அனைவரும் தம் நம்பிக்கையினாலே நற்சான்று பெற்றார்கள். ஆயினும் கடவுள் வாக்களித்ததை அவர்கள் பெறவில்லை. ஏனெனில், நம்மோடு இணைந்துதான் அவர்கள் நிறைவுபெற முடியும் என்பதைக் கடவுள் கருத்தில் கொண்டு, நமக்காகச் சிறந்த திட்டம் ஒன்றை வகுத்திருந்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 31: 19-20a,20bc. 21. 22. 23 (பல்லவி: 24 காண்க)

பல்லவி: ஆண்டவரை நம்புவோரே, உங்கள் உள்ளம் உறுதி கொள்வதாக.

19
உமக்கு அஞ்சி நடப்போர்க்கு நீர் வைத்திருக்கும் நன்மை எத்துணைப் பெரிது! உம்மிடம் அடைக்கலம் புகுவோர்க்கு மானிடர் முன்னிலையில் நீர் செய்யும் நன்மை எத்துணை மிகுதி!
20a
மனிதரின் சூழ்ச்சியினின்று அவர்களைக் காப்பாற்றி உமது முன்னிலையின் மறைப்பினுள் வைத்துள்ளீர்! - பல்லவி

20bc
நாவுகள் கிளப்பும் பூசலினின்று அவர்களைப் பாதுகாத்து உமது கூடாரத்தினுள் வைத்துக் காக்கின்றீர்! - பல்லவி

21
ஆண்டவர் போற்றி! போற்றி! ஏனெனில், முற்றுகையிடப்பட்ட நகரினில், அவர் தம் பேரன்பை வியத்தகு முறையில் எனக்கு விளங்கச் செய்தார். - பல்லவி

22
நானோ, கலக்கமுற்ற நிலையில் ‘உமது பார்வையினின்று விலக்கப்பட்டேன்’ என்று சொல்லிக்கொண்டேன்; ஆனால், நான் உம்மிடம் உதவிக்காக வேண்டினபோது, நீர் என் கெஞ்சும் குரலுக்குச் செவிசாய்த்தீர். - பல்லவி

23
ஆண்டவரின் அடியார்களே, அவரிடம் அன்பு கொள்ளுங்கள்; ஆண்டவர் பற்றுறுதியுடையோரைப் பாதுகாக்கின்றார்; ஆனால், இறுமாப்புடன் நடப்போர்க்கு அவர் முழுமையாய்ப் பதிலடி கொடுக்கின்றார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 7: 16

அல்லேலூயா, அல்லேலூயா! நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

தீய ஆவியே, இந்த மனிதரை விட்டுப் போ.

 மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 1-20

அக்காலத்தில்

இயேசுவும் அவர் சீடரும் கடலுக்கு அக்கரையில் இருந்த கெரசேனர் பகுதிக்கு வந்தார்கள். இயேசு படகை விட்டு இறங்கிய உடனே தீய ஆவி பிடித்த ஒருவர் கல்லறைகளிலிருந்து அவருக்கு எதிரே வந்தார். கல்லறைகளே அம்மனிதரின் உறைவிடம். அவரை எவராலும் ஒருபொழுதும் சங்கிலியால் கூடக் கட்டிவைக்க முடியவில்லை. ஏனெனில், அவரைப் பல முறை விலங்குகளாலும் சங்கிலிகளாலும் கட்டியிருந்தும் அவர் சங்கிலிகளை உடைத்து விலங்குகளைத் தகர்த்து எறிந்தார். எவராலும் அவரை அடக்க இயலவில்லை. அவர் இரவு பகலாய் எந்நேரமும் கல்லறைகளிலும் மலைகளிலும் கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்; தம்மையே கற்களால் காயப்படுத்தி வந்தார்.

அவர் தொலையிலிருந்து இயேசுவைக் கண்டு, ஓடிவந்து அவரைப் பணிந்து, “இயேசுவே, உன்னத கடவுளின் மகனே, உமக்கு இங்கு என்ன வேலை? கடவுள் மேல் ஆணை! என்னை வதைக்க வேண்டாம்” என்று உரத்த குரலில் கத்தினார். ஏனெனில் இயேசு அவரிடம், “தீய ஆவியே, இந்த மனிதரை விட்டுப் போ” என்று சொல்லியிருந்தார். அவர் அம்மனிதரிடம், “உம் பெயர் என்ன?” என்று கேட்க அவர், “என் பெயர் ‘இலேகியோன்', ஏனெனில் நாங்கள் பலர்” என்று சொல்லி, அந்தப் பகுதியிலிருந்து தங்களை அனுப்பிவிட வேண்டாம் என்று அவரை வருந்தி வேண்டினார்.

அங்கே மலைப் பகுதியில் பன்றிகள் பெருங்கூட்டமாய் மேய்ந்து கொண்டிருந்தன. “நாங்கள் அப்பன்றிகளுக்குள் புகும்படி எங்களை அங்கே அனுப்பிவிடும்” என்று தீய ஆவிகள் அவரை வேண்டின. அவரும் அவற்றுக்கு அனுமதி கொடுத்தார். பின் தீய ஆவிகள் வெளியேறிப் பன்றிகளுக்குள் புகுந்தன. ஏறக்குறைய இரண்டாயிரம் பன்றிகள் அடங்கிய அந்தக் கூட்டம் செங்குத்துப் பாறையிலிருந்து கடலில் பாய்ந்து வீழ்ந்து மூழ்கியது.

பன்றிகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்களோ ஓடிப்போய் நகரிலும் நாட்டுப்புறத்திலும் இதை அறிவித்தார்கள். நடந்தது என்னவென்று பார்க்க மக்கள் வந்தனர். அவர்கள் இயேசுவிடம் வந்தபோது, பேய் பிடித்திருந்தவர், அதாவது இலேகியோன் பிடித்திருந்த அவர், ஆடையணிந்து அறிவுத் தெளிவுடன் அமர்ந்திருப்பதைக் கண்டு அச்சமுற்றார்கள். நடந்ததைப் பார்த்தவர்கள் பேய் பிடித்தவருக்கும் பன்றிகளுக்கும் நேரிட்டதை அவர்களுக்கு எடுத்துரைத்தார்கள். அப்பொழுது அவர்கள் தங்கள் பகுதியை விட்டுப் போய்விடுமாறு இயேசுவை வேண்டிக்கொண்டார்கள்.

அவர் படகில் ஏறியதும் பேய் பிடித்திருந்தவர் தாமும் அவரோடுகூட இருக்க வேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார். ஆனால் அவர் அதற்கு இசையாமல், அவரைப் பார்த்து, “உமது வீட்டிற்குப் போய் ஆண்டவர் உம்மீது இரக்கம் கொண்டு உமக்குச் செய்ததையெல்லாம் உம் உறவினருக்கு அறிவியும்” என்றார். அவர் சென்று, இயேசு தமக்குச் செய்ததையெல்லாம் தெக்கப்பொலி நாட்டில் அறிவித்து வந்தார். அனைவரும் வியப்புற்றனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


எனது உறைவிடம் எது? 


உறைவிடம் மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று. தன்னுடைய உறைவிடத்தில் தான் ஒரு மனிதன் தன்னையே தானாக உணர்கிறான். சுதந்திரத்தை அனுபவிக்கிறான். அமைதியைக் காண்கிறான். இத்தகைய உறைவிடத்தை தூய்மையாகவும் நேர்த்தியாகவும் வைத்துக்கொள்வது மிகவும் அவசியமாகிறது. மாறாக இவ்வுறைவிடத்தை அசுத்தமாகவும் நேர்த்தியாகவும் நாம் வைக்காத போது நமக்குள்ளாகவே ஒருவித சஞ்சல உணர்வுகளை நாம் உணர்கிறோம். அல்லவா?


அதேபோல நமது ஆன்மாவும் நமக்கு ஒரு உறைவிடம். இவ்வுறைவிடத்தை தூய்மையாகவும் நேர்த்தியாகவும் நாம் வைத்திருந்தால்தான் நம் வாழ்வில் அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். பல சமயங்களில் இவ்வுறைவிடத்தை நாம் கவனித்துக்கொள்ளாமல் தேவையற்றவற்றை உள்நுழைய அனுமதித்து விடுகிறோம். 


இன்றைய நற்செய்தி வாசகத்தில் தீய ஆவி பிடித்தவரை இயேசு குணமாக்குகிறார் என்பதை நாம் வாசிக்கிறோம். அத்தீய ஆவி பிடித்தவரைப் பற்றி கூறும் போது "கல்லறையே அவரது உறைவிடம் " என்ற வார்த்தை தரப்பட்டடுள்ளது. கல்லறை என்பது நாம் அறிந்தவாறே இறந்த உடல்களை அடக்கம் செய்யும் இடம். அங்கே தூய்மை இல்லை. பயம் நிறைந்திருக்கும். அச்சம் கலந்த அமைதிதான் இருக்கும். யாரும் இவ்விடத்தை விரும்புவதில்லை. 


 நம் அன்றாட வாழ்க்கை சூழல்களில் நாமே நம் வாழ்க்கையை கல்லறை போன்று மாற்றிவிடுகிறோம். நம்முடைய சுயநலம், பாவமோகங்கள், மாயக்கவர்ச்சிகள், பகை, பேராசை போன்றவற்றை நம்மை ஆட்கொள்ளவைத்து நம் ஆன்மா என்ற உறைவிடத்தை கல்லறை போல மாற்றி அதிலேயே நாமும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். 


நம் ஆன்மா என்ற உறைவிடத்தில் வாழ விரும்பும் இயேசுவை நாம் கண்டு கொண்டு இத்தகைய அசுத்த ஆவிகளை வெளியேறச் செய்தால் நம் ஆன்மா கடவுளின் உறைவிடமாகும். கடவுள் நம் உறைவிடமாவார். நமது உறைவிடத்தை தூய்மையாக நேர்த்தியாக அமைத்துக்கொள்ள நாம் தயாரா? இயேசுவை அணுகிச் செல்வோம்.


 இறைவேண்டல் 

அன்பு இறைவா  எங்கள் உள்ளமாம் உறைவிடத்திலுள்ள தீயவற்றை நீக்கி உமது உறைவிடமாக்கும். ஆமென்.

அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Saturday, January 28, 2023

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (29-01-2023)

 

பொதுக்காலம் 4ஆம் வாரம் - ஞாயிறு



முதல் வாசகம்

ஏழ்மையும் எளிமையும் உள்ள மக்களை உன் நடுவில் விட்டுவைப்பேன்.

இறைவாக்கினர் செப்பனியா நூலிலிருந்து வாசகம் 2: 3, 3: 12-13

செப்பனியா கூறியது: நாட்டிலிருக்கும் எளியோரே! ஆண்டவரின் கட்டளையைக் கடைப்பிடிப்போரே! அனைவரும் ஆண்டவரைத் தேடுங்கள்; நேர்மையை நாடுங்கள்; மனத் தாழ்மையைத் தேடுங்கள்; ஆண்டவரது சினத்தின் நாளில் ஒருவேளை உங்களுக்குப் புகலிடம் கிடைக்கும்.

“ஏழை எளியோரை உன் நடுவில் நான் விட்டுவைப்பேன்; அவர்கள் ஆண்டவரின் பெயரில் நம்பிக்கை கொள்வார்கள். இஸ்ரயேலில் எஞ்சியோர் கொடுமை செய்யமாட்டார்கள்; வஞ்சகப் பேச்சு அவர்களது வாயில் வராது; அச்சுறுத்துவார் யாருமின்றி, அவர்கள் மந்தைபோல் மேய்ந்து இளைப்பாறுவார்கள்".

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 146: 7. 8-9a. 9bc-10 (பல்லவி: மத் 5: 3)

பல்லவி: ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களதே.

அல்லது: அல்லேலூயா.

7
ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார்; பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்; சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார். - பல்லவி

8
ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்; தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்; நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார்.
9a
ஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார். - பல்லவி

9bc
அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்; ஆனால், பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்துவிடுகின்றார்.
10
சீயோனே! உன் கடவுள், என்றென்றும், எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சி செய்வார். - பல்லவி

இரண்டாம் வாசகம்

வலுவற்றவை என உலகம் கருதுபவற்றைக் கடவுள் தேர்ந்துகொண்டார்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 26-31

சகோதரர் சகோதரிகளே,

நீங்கள் அழைக்கப்பட்ட நிலையை எண்ணிப் பாருங்கள். மனிதக் கணிப்பின்படி உங்களுள் ஞானிகள் எத்தனை பேர்? வலியோர் எத்தனை பேர்? உயர்குடிமக்கள் எத்தனை பேர்?

ஆனால் கடவுள் ஞானிகளை வெட்கப்படுத்த, மடமை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்துகொண்டார். அவ்வாறே, வலியோரை வெட்கப்படுத்த, வலுவற்றவை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்துகொண்டார். உலகம் ஒரு பொருட்டாகக் கருதுபவற்றை அழித்துவிட, அது தாழ்ந்ததாகக் கருதுபவற்றையும் இகழ்ந்து தள்ளுபவற்றையும் கடவுள் தேர்ந்தெடுத்தார். எவரும் கடவுள் முன் பெருமை பாராட்டாதபடி அவர் இப்படிச் செய்தார்.

அவரால்தான் நீங்கள் கிறிஸ்துவுடன் இணைக்கப்பட்டிருக்கிறீர்கள். கிறிஸ்துவே கடவுளிடமிருந்து நமக்கு வரும் ஞானம். அவரே நம்மை ஏற்புடையவராக்கித் தூயவராக்கி மீட்கின்றார். எனவே மறைநூலில் எழுதியுள்ளவாறு, “பெருமை பாராட்ட விரும்புகிறவர் ஆண்டவரைக் குறித்தே பெருமை பாராட்டட்டும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 5: 12a

அல்லேலூயா, அல்லேலூயா! மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

எளிய உள்ளத்தோர் பேறுபெற்றோர்.

 மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 1-12a

இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவர் அருகே வந்தனர். அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை:

“ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர். கனிவுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர். நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர். இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர். தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர். அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்.

நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே! மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.


 இறையாட்சியின் மதிப்பீடுகளின் படி வாழ தயாரா?


நாம் கடவுளின் பார்வையில் பேறுபெற்றவர்களாக வாழ வேண்டுமெனில் மலைப்பொழிவின் வழியாகஇயேசு நமக்கு விட்டுச் சென்றநல்ல மதிப்பீடுகளை வாழ்வாக்க முயற்சி செய்வோம். மலைப்பொழிவின் வழியாக புதிய இஸ்ரயேல் மக்களாகிய நம் ஒவ்வொருவரும் எப்படிப்பட்ட இறையாட்சி மக்களாக வாழ வேண்டும் அறிவுறுத்தும் விதமாக இயேசு பறைசாற்றியுள்ளார்.


ஆங்கில அறிஞர் ஒருவர் "இந்தியாவில் ஒரே ஒரு கிறிஸ்தவர் மட்டும் இருந்தார். அவரும் திருமுழுக்கு பெறாதவர்" என்று மகாத்மா காந்தியை பற்றி புகழ்சாற்றியுள்ளார். "இந்துக்களின் புனித புத்தகமாகிய பகவத் கீதையை நான் இழக்க நேரிட்டாலும், கிறிஸ்துவின் மலைப்பொழிவின் ஒரு பிரதி இருந்தால் எனக்குப் போதும் " என்று சொல்லும் அளவுக்கு மலைப்பொழிவு பகுதியானது மகாத்மா காந்தியின் உள்ளத்தில் இடம் பிடித்தது.


இயேசு மலைப்பொழிவின் வழியாக எட்டு பேறுகளைப் பற்றி கூறியுள்ளார். நாம் அனைவரும் எப்படிப்பட்ட இறையாட்சியின் மக்களாக வாழ வேண்டும் என்பதை மலைப்பொழிவின் வழியாக கூறியுள்ளார். அவற்றின் பொருளையும் அவை தருகின்ற அழைப்பையும் சற்று தியானிப்போம்.


ஏழையரின் உள்ளதோர் என்ற வார்த்தையின் பொருள் இறைவன் மீது நாம் கொண்டிருக்கக்கூடிய தாழ்மையான சார்பு மனநிலையை சுட்டிக் காட்டுவதாக இருக்கின்றது. நமக்கு எவ்வளவு பணம், புகழ், பட்டம், பதவி இருந்தாலும் அனைத்தும் இறைவனுக்கு முன்னால் ஒன்றும் இல்லை; இறைவன் மட்டுமே எல்லாவற்றிற்கும் உயர்ந்தவர் என ஆழமாக உணரும் பொழுது நாம் பேறுபெற்றவர்களாக மாறுகிறோம். எனவே இறைவனின் அருளின் மீது தாழ்மையான சார்பு மனநிலையை கொண்டிருக்க நாம் முயற்சி செய்வோம்.


 துயருறுவோர் பேறுபெற்றோர் என்பதன் பொருள் இந்த சமூக கட்டமைப்பின் வழியாக மக்கள் படும் அடிமை நிலையைச் சுட்டிக் காட்டுவதாக இருக்கிறது. கடவுள் துன்பப்படுபவர்களின் சார்பாக இருக்கின்றார். நம் வாழ்வில் துன்பம் வரும் பொழுது கடவுள் நம்மோடு இருக்கிறார் என்பதை முற்றிலும் நம்ப வேண்டும். அப்பொழுது நிச்சயமாக நாம் பேறுபெற்றவர்களாக வாழ முடியும்.


கனிவுடையோர் பேறுபெற்றோர் என்ற வார்த்தையானது கடவுள் முன் சிறியவர்களாகவும் கனிவு உள்ளவர்களாகவும் வாழ்பவர்களுக்கு இறைவன் நன்மை செய்வார் என்பதை சுட்டிக்காட்டுவதாக இருக்கின்றது. ஞானிகளுக்கும் வலிமையானவர்களுக்கும் நன்மை கிடைப்பதை விட கடவுள் முன்பாக வாழும் சிறியவர்களுக்கும் எளியவர்களுக்கும் கனிவு நிறைந்தவர்களுக்கும் நன்மை கிடைக்கும் என்பதை மிகத் தெளிவாக ஆண்டவர் இயேசு எடுத்துரைத்துள்ளார்.


நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர் என்ற வார்த்தையானது நீதியின் படி இறைவனின் திட்டத்தை ஏற்று நடப்பதை சுட்டிக் காட்டுகிறது. புனித சூசையப்பர் இறைவனின் திட்டத்தை ஏற்று நடந்தது போல நாமும் நடக்க அழைக்கப்படுகிறோம். இறைவனின் திட்டத்தின்படி வாழும் பொழுது நிச்சயமாக நாம் நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டவர்களாக வாழ முடியும். அதன் வழியாக பேறுபெற்றவர்களாக மாற முடியும்.


இரக்கமுடையோர் பேறுபெற்றோர் என்ற வார்த்தையானது தாராள மனப்பான்மை, மன்னித்தல், துன்புறுவோருக்கு இரக்கம், குணமளிக்கும் பண்பு போன்ற மதிப்பீடுகளை வாழ்வாக்குவதாகும். நாம் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் இரக்க குணம் உள்ளவர்களாக இருக்கும் பொழுது பேறுபெற்ற மக்களாக மாறுகிறோம். 


தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர் என்ற வார்த்தையானது நம்முடைய தார்மீக நேர்மைத்தனத்தை சுட்டிக் காட்டுவதாக இருக்கின்றது. கடவுளுக்கு முன்பாக தூய்மையோடும் நேர்மையோடும் கண்ணியத்தோடும் வாழும்பொழுது நாம் பேறுபெற்ற மக்களாக மாறுகிறோம். இதைத்தான் திருத்தூதர் பவுல் " உண்மையானவை எவையோ, கண்ணியமானவை எவையோ, நேர்மையானவை எவையோ, தூய்மையானவை எவையோ, விரும்பத்தக்கவை எவையோ, பாராட்டுதற்குரியவை எவையோ, நற்பண்புடையவை எவையோ, போற்றுதற்குரியவை எவையோ, அவற்றையே மனத்தில் இருத்துங்கள்" பிலிப்பியர் 4:8 என கூறியுள்ளார். எனவே நம்முடைய அன்றாட வாழ்க்கையில் தூய்மை நிறைந்தவர்களாக வாழ முயற்சி செய்வோம்.


அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர் என்ற வார்த்தையானது தனி மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையே உள்ள உறவுகளின் அமைதியை சுட்டிக்காட்டும் விதமாக இருக்கின்றது. எனவே தனிப்பட்ட முறையிலே நம்முடைய உடல் உள்ளம் ஆன்மா ஆழ்மன அமைதியை பெற்றிட நம்மோடும் நல்லுறவோடு இருக்க வேண்டும். நம்மை நாம் மதிக்க வேண்டும். கடவுள் கொடுத்த இந்த உடல் அமைப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும். கடவுள் நமக்கு கொடுத்த வாய்ப்புகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். கடவுள் நமக்கு கொடுத்த கொடைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறாக ஏற்றுக் கொள்ளும் பொழுது நாம் அனைவரும் கடவுளோடு நல்லுறவு கொள்ள முடியும். கடவுளோடு நல்லுறவு கொள்பவர்கள் நிச்சயமாக பிறரோடும் நல்லுறவு கொள்ள முடியும். அப்பொழுது நிச்சயமாக இறைவன் தருகின்ற அமைதியை நாம் பெற்று பேறுபெற்ற மக்களாக நாம் மாற முடியும்.


இறுதியாக நீதியின் பொருட்டு துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர் என்ற வார்த்தையானது நாம் நீதியின் பால் வாழக்கூடிய மக்களாக வாழ அழைக்கப்பட்டுள்ளோம். நாம் நீதி நெறியோடு வாழும் பொழுது அதிகமான துன்பங்களையும் சவால்களையும் ஏமாற்றங்களையும் எதிர்கொள்ள நேரிடும். ஆனால் அவற்றைக் கண்டு கலங்காமல் துணிவோடு நீதியின் பால் செயல்படும் பொழுது பேறுபெற்ற மக்களாக நாம் வாழ முடியும். 


எனவே கடவுளுடைய இறையாட்சியின் மதிப்பீடுகளின் படி நாம் வாழ மேற்கூறப்பட்ட எட்டு மலைப்பொழிவின் போதனைகளையும் நாம் வாழ்வாக்க முயற்சி செய்வோம். அதற்கு தேவையான அருளை வேண்டுவோம்.


 இறைவேண்டல்

வல்லமையுள்ள இறைவா! எங்களுடைய அன்றாட வாழ்க்கையில் பேறுபெற்ற மக்களாக வாழ்ந்திடவும் மலைப்பொழிவின் வாழ்வியல் மதிப்பீடுகளை வாழ்வாக்கி இறையாட்சியின் தூதுவர்களாக மாறிடவும் தேவையான அருளை தாரும். ஆமென்.


அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Thursday, January 26, 2023

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (28-01-2023)

 

பொதுக்காலம் 3ஆம் வாரம் - சனி



முதல் வாசகம்

கடவுளைத் தன் சிற்பியும், கட்டுபவருமாகக் கொண்ட நகரை ஆபிரகாம் எதிர்நோக்கியிருந்தார்.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 11: 1-2, 8-19

சகோதரர் சகோதரிகளே,

நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி; கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை. இந்த நம்பிக்கையால்தான் நம் மூதாதையர் நற்சான்று பெற்றனர்.

ஆபிரகாம் தாம் அழைக்கப்பட்டபோது கீழ்ப்படிந்து, உரிமைப்பேறாகப் பெறவிருந்த இடத்திற்குச் சென்றதும் நம்பிக்கையினால்தான். தாம் எங்கே போகவேண்டும் என்று தெரியாதிருந்தும் அவர் புறப்பட்டுச் சென்றார். வாக்களிக்கப்பட்ட நாட்டில் அவர் குடியேறி ஓர் அன்னியரைப்போல வாழ்ந்தது நம்பிக்கையினாலேயே. அதே வாக்குறுதிக்கு உடன் உரிமையாளர்களான ஈசாக்குடனும், யாக்கோபுடனும் அவர் கூடாரங்களில் குடியிருந்தார். ஏனெனில், அவர் அசையாத அடித்தளமுள்ள ஒரு நகரை எதிர்நோக்கியிருந்தார். அதைத் திட்டமிட்டவரும் கட்டியவரும் கடவுளே.

ஆபிரகாம் வயது முதியவராயும் சாரா கருவுற இயலாதவராயும் இருந்தபோதிலும், அவர் ஒரு தந்தையாவதற்கான ஆற்றல் பெற்றதும் நம்பிக்கையினால்தான். ஏனெனில் வாக்களித்தவர் நம்பிக்கைக்குரியவர் என அவர் கருதினார். இவ்வாறு, உயிரற்றவர் போலிருந்த இந்த ஒருவரிடமிருந்து வானத்திலுள்ள திரளான விண்மீன்களைப் போலவும் கடற்கரையிலுள்ள எண்ணிறந்த மணலைப் போலவும் கணக்கற்ற மக்கள் பிறந்தனர்.

இவர்கள் எல்லாம் நம்பிக்கை கொண்டவர்களாய் இறந்தார்கள்; வாக்களிக்கப்பட்டவற்றை அவர்கள் பெறவில்லையெனினும், தொலையில் அவற்றைக் கண்டு மகிழ்ந்தார்கள்; இவ்வுலகில் தாங்கள் அன்னியர் என்பதையும் தற்காலிகக் குடிகள் என்பதையும் ஏற்றுக்கொண்டார்கள். இவ்வாறு ஏற்றுக்கொள்வோர் தம்முடைய தாய்நாட்டைத் தேடிச் செல்வோர் என்பது தெளிவு. தாங்கள் விட்டுவந்த நாட்டை அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கவில்லை. அப்படி நினைத்திருந்தால் திரும்பிச் செல்ல அவர்களுக்கு வாய்ப்புக் கிடைத்திருக்கும். ஆனால், அவர்கள் சிறப்பான ஒரு நாட்டை, அதாவது, விண்ணக நாட்டையே நாடுகிறார்கள். அதனால்தான் கடவுளும் தம்மை, “அவர்களுடைய கடவுள்” என்று அழைத்துக்கொள்ள வெட்கப்படவில்லை. அவர்களுக்கென அவர் ஒரு நகரை ஆயத்தப்படுத்தியுள்ளார்.

ஆபிரகாம் சோதிக்கப்பட்டபோது ஈசாக்கைப் பலியிடத் துணிந்தது நம்பிக்கையினால்தான். “ஈசாக்கின் மூலமே, உன் வழிமரபு விளங்கும்” என்ற வாக்குறுதியை அவர் பெற்றிருந்தபோதிலும், அவர் தம் ஒரே மகனைப் பலியிட முன்வந்தார். ஏனெனில், இறந்தோரைக் கடவுள் உயிரோடு எழுப்ப வல்லவர் என்பதை அவர் உணர்ந்திருந்தார். எனவே, அவர் தம் மகனை மீண்டும் பெற்றுக் கொண்டார். பின்பு நடக்க இருந்ததற்கு இது ஓர் அறிகுறி.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

லூக் 1: 69-70. 71-73. 74-75 (பல்லவி: 68 காண்க)

பல்லவி: தம் மக்களைத் தேடிவந்து விடுவித்த ஆண்டவரைப் போற்றுவோம்.

69
தம் தூய இறைவாக்கினர் வாயினால்
70
தொடக்க முதல் அவர் மொழிந்தபடியே அவர் தம் ஊழியராகிய தாவீதின் குடும்பத்தில் வல்லமை உடைய மீட்பர் ஒருவர் நமக்காகத் தோன்றச் செய்தார். - பல்லவி

71
நம் பகைவரிடமிருந்தும் நம்மை வெறுப்போர் அனைவரின் பிடியிலிருந்தும் நம்மை மீட்பார்.
72
அவர் நம் மூதாதையருக்கு இரக்கம் காட்டி,
73
தமது தூய உடன்படிக்கையையும், நம் தந்தையாகிய ஆபிரகாமுக்கு அவர் இட்ட ஆணையையும் நிறைவேற்ற நினைவு கூர்ந்தார். - பல்லவி

74
இவ்வாறு நாம் பகைவரின் பிடியிலிருந்து
75
விடுவிக்கப்பட்டுத் தூய்மையோடும் நேர்மையோடும் வாழ்நாளெல்லாம் அச்சமின்றி அவர் திருமுன் பணி செய்யுமாறு வழிவகுத்தார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 3: 16

அல்லேலூயா, அல்லேலூயா! தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும்பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்கு கடவுள் உலகின் மேல் அன்புகூர்ந்தார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ?

 மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 35-41

அன்றொரு நாள் மாலை நேரம். இயேசு சீடர்களை நோக்கி, ‘‘அக்கரைக்குச் செல்வோம், வாருங்கள்” என்றார். அவர்கள் மக்கள் கூட்டத்தை அனுப்பிவிட்டு, படகில் இருந்தவாறே அவரைக் கூட்டிச் சென்றார்கள். வேறு படகுகளும் அவருடன் சென்றன.

அப்பொழுது ஒரு பெரும் புயல் அடித்தது. அலைகள் படகின் மேல் தொடர்ந்து மோத, அது தண்ணீரால் நிரம்பிக்கொண்டிருந்தது. அவரோ படகின் பிற்பகுதியில் தலையணை வைத்துத் தூங்கிக் கொண்டிருந்தார். அவர்கள், ‘‘போதகரே, சாகப் போகிறோமே! உமக்குக் கவலை இல்லையா?” என்று சொல்லி அவரை எழுப்பினார்கள். அவர் விழித்தெழுந்து காற்றைக் கடிந்துகொண்டார். கடலை நோக்கி, ‘‘இரையாதே, அமைதியாயிரு” என்றார், காற்று அடங்கியது; மிகுந்த அமைதி உண்டாயிற்று.

பின் அவர் அவர்களை நோக்கி, ‘‘ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?” என்று கேட்டார். அவர்கள் பேரச்சம் கொண்டு, ‘‘காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ?” என்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 ஆபிரகாமை போன்ற நம்பிக்கை என்னிடம் உள்ளதா?


ஒருமுறை நான் தியானம் செய்து கொண்டிருந்த போது வழிநடத்திய தந்தை திருப்பலி மறையுரையின் போது ஒரு கேள்வியைக் கேட்டார். " கடவுள் நம்பிக்கை என்பது என்ன?" என்பதே அக்கேள்வி. அப்போது நான் கூறிய பதில் இன்றும் என் நம்பிக்கைக்கு உரமாய் அமைவதாக நான் எண்ணுகிறேன்.நான் கூறிய பதில் இதுதான். "நான் எனக்கு எது நல்லது அன்பதை அறிவேன்.ஆனால் கடவுள் எது எனக்கு சிறந்தது என்பதை அறிவார் என்ற உறுதியான எண்ணமே நம்பிக்கை. " இன்றும் இந்நிகழ்வை நான் திருப்பிப் பார்க்கும் போது என் நம்பிக்கைக்கு பலம் சேர்ப்பதாக நான் உணர்கிறேன். 


இன்றைய இருவாசகங்களுமே நம்பிக்கையை மையப்படுத்தியதாக இருக்கிறது. முதல் வாசகத்தில் ஆபிரகாமின் நம்பிக்கை மிக அற்புதமாக எடுத்தியம்பப் படுகிறது. ஆபிரகாம் கடவுள் தனக்கு சிறந்ததைத் தருவார் என்று உறுதியாக நம்பினார். அந்த நம்பிக்கையில்தான் முன்பின் தெரியாத இடத்திற்கு சென்றார். இயற்கைக்கு அப்பாற்பட்ட முதிர்வயதில் பெறும் பிள்ளை பேற்றை எதிர்நோக்கி காத்திருந்தார். தன் சந்ததியைப் பெருக்கப்போகும் ஒரே மகனைக் கூட கடவுள் கேட்டார் என்பதற்காக பலியிடத் துணிந்தார். ஆபிரகாமின் நிலையில் நாம் இருந்தால் நமது செயல்பாடுகள் என்னவாக இருந்திருக்கும்? சிந்திக்க வேண்டியது நம் கடமை.


நற்செய்தி வாசகத்தில் நடுக்கடலில் தத்தளித்த சீடர்கள் தங்களோடு இயேசு இருந்த போதும் நம்பிக்கை குன்றி இருந்தார்கள். இயேசு செய்த வல்ல செயல்களைக் கண்கூடாகக் கண்ட போதும் அவர்களால் நம்ப இயலவில்லை என்றதாலேயே இயேசு அவர்களைக் கடிந்து கொள்கிறார். 


நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்ற ஐயமற்றநிலை என்கிறது முதல் வாசகம். இங்கே ஐயம் என்பது பயமல்ல. சந்தேகம். அதாவது கடவுள் எனக்கு சிறந்ததை மட்டுமே தருவார் என்ற சந்தேகமற்ற மன உறுதி. ஆபிரகாம் இந்நம்பிக்கையைப் பெற்றிருந்தார். அவரை பின்பற்றி நாமும் நம்பிக்கையில் வளர முயற்சிப்போம்.


 இறைவேண்டல்

அன்பு இறைவா ஆபிரகாமைப் போன்ற நம்பிக்கையில் நாங்களும் வளர அருள்புரிவீராக. ஆமென்.

அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (27-01-2023)

 

பொதுக்காலம் 3ஆம் வாரம் - வெள்ளி

முதல் வாசகம்

பெரிய போராட்டத்தையே மன உறுதியோடு ஏற்றுக்கொண்டீர்கள்; எனவே எதிர்நோக்கை இழந்துவிடாதீர்!

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 10: 32-39

சகோதரர் சகோதரிகளே,

முன்னைய நாள்களை நினைவுகூருங்கள். நீங்கள் ஒளி பெற்றபின் உங்களுக்கு நேரிட்ட துன்பம் நிறைந்த போராட்டத்தை மன உறுதியோடு ஏற்றுக்கொண்டீர்கள். சில வேளைகளில், நீங்கள் இகழ்ச்சிக்கும் வேதனைகளுக்கும் ஆளாகி, வேடிக்கைப் பொருளானீர்கள். வேறு சில வேளைகளில், இந்நிலைக்கு ஆளானோரின் துன்பங்களில் பங்கு பெற்றீர்கள். கைதிகளுக்குப் பரிவிரக்கம் காட்டினீர்கள். உங்கள் உடைமைகள் பறிமுதல் செய்யப்பட்டபோதும், மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டீர்கள். ஏனெனில் சிறந்த, நிலையான உடைமைகள் உங்களுக்கு உள்ளன என்பதை அறிவீர்கள்.

உங்களிடம் இருக்கும் துணிவைக் கைவிட்டு விடாதீர்கள். இதற்கு மிகுந்த கைம்மாறு உண்டு. கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றி, அவர் வாக்களித்ததை நீங்கள் பெற்றுக்கொள்ள உங்களுக்கு மன உறுதி தேவை. இன்னும், “மிக மிகக் குறுகிய காலமே இருக்கிறது; வர இருக்கிறவர் வந்துவிடுவார், காலம் தாழ்த்தமாட்டார். நேர்மையுடன் நடக்கும் என் அடியார், நம்பிக்கையினால் வாழ்வு அடைவார். எவராவது பின்வாங்கிச் செல்வார் என்றால் அவரில் நான் மகிழ்ச்சியுறேன்.”

நாமோ பின்வாங்கிச் சென்று அழிவுறுவோர் அல்ல. மாறாக, நம்பிக்கையையும் வாழ்வையும் காத்துக்கொள்வோர் ஆவோம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 37: 3-4. 5-6. 23-24. 39-40 (பல்லவி: 39a)

பல்லவி: ஆண்டவரிடமிருந்தே மீட்பு நேர்மையாளருக்கு வருகின்றது.

3
ஆண்டவரை நம்பு; நலமானதைச் செய்; நாட்டிலேயே குடியிரு; நம்பத் தக்கவராய் வாழ்.
4
ஆண்டவரிலேயே மகிழ்ச்சி கொள்; உன் உள்ளத்து விருப்பங்களை அவர் நிறைவேற்றுவார். - பல்லவி

5
உன் வழியை ஆண்டவரிடம் ஒப்படைத்துவிடு; அவரையே நம்பியிரு; அவரே உன் சார்பில் செயலாற்றுவார்.
6
உன் நேர்மையைக் கதிரொளி போலும், உன் நாணயத்தை நண்பகல் போலும் அவர் விளங்கச் செய்வார். - பல்லவி

23
தாம் உவகைகொள்ளும் நடத்தையைக் கொண்ட மனிதரின் காலடிகளை ஆண்டவர் உறுதிப்படுத்துகின்றார்.
24
அவர்கள் விழுந்தாலும் வீழ்ந்துகிடக்க மாட்டார்கள்; ஆண்டவர் அவர்களைத் தம் கையால் தூக்கி நிறுத்துவார். - பல்லவி

39
நேர்மையாளருக்கு மீட்பு ஆண்டவரிடமிருந்து வருகின்றது, நெருக்கடியான நேரத்தில் அவர்களுக்கு வலிமையும் அவரே.
40
ஆண்டவர் துணைநின்று அவர்களை விடுவிக்கின்றார்; பொல்லாரிடமிருந்து அவர்களை விடுவிக்கின்றார்; அவரிடம் அடைக்கலம் புகுந்ததால், அவர்களை மீட்கின்றார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 11: 25

அல்லேலூயா, அல்லேலூயா! "தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்.” அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

நிலத்தில் ஒருவர் விதைக்கிறார். அவருக்குத் தெரியாமல் விதை முளைத்து வளர்கிறது.

 மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 26-34

அக்காலத்தில்

இயேசு கூட்டத்தை நோக்கி, “இறையாட்சியைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: நிலத்தில் ஒருவர் விதைக்கிறார். அவர் எதுவும் செய்யாமலே நாள்கள் நகர்ந்து செல்கின்றன. அவருக்குத் தெரியாமல் விதை முளைத்து வளர்கிறது. முதலில் தளிர், பின்பு கதிர், அதன்பின் கதிர் நிறைய தானியம் என்று நிலம் தானாகவே விளைச்சல் அளிக்கிறது. பயிர் விளைந்ததும் அவர் அரிவாளோடு புறப்படுகிறார்; ஏனெனில் அறுவடைக் காலம் வந்துவிட்டது” என்று கூறினார்.

மேலும் அவர், “இறையாட்சியை எதற்கு ஒப்பிடலாம்? அல்லது எந்த உவமையால் அதை எடுத்துச் சொல்லலாம்? அது கடுகு விதைக்கு ஒப்பாகும். அது நிலத்தில் விதைக்கப்படும்பொழுது உலகிலுள்ள எல்லா விதைகளையும் விடச் சிறியது. அது விதைக்கப்பட்டபின் முளைத்தெழுந்து எல்லாச் செடிகளையும்விடப் பெரிதாகி, வானத்துப் பறவைகள் அதன் நிழலில் தங்கக்கூடிய அளவுக்குப் பெருங்கிளைகள் விடும்” என்று கூறினார்.

அவர்களது கேட்டறியும் திறமைக்கு ஏற்ப, அவர் இத்தகைய பல உவமைகளால் இறைவார்த்தையை அவர்களுக்கு எடுத்துரைத்து வந்தார். உவமைகள் இன்றி அவர் அவர்களோடு பேசவில்லை. ஆனால் தனிமையாக இருந்தபோது தம் சீடருக்கு அனைத்தையும் விளக்கிச் சொன்னார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 இறையாட்சியின் வித்துக்களா நாம்?


இத்தனை சிறிய விதையிலிருந்து எத்தனை பெரிய மரம் வந்தது என்கிறது ஒரு அழகான பாடல் வரிகள். சற்று ஆழமாக சிந்தித்துப் பார்த்தால் ஒவ்வொரு விதையும் அதிலிருந்து வளர்கின்ற செடியோ அல்லது மரமோ, கொடியோ விசித்திரமானதே. இவ்வாறு ஒரு விதை வளர்ந்து மரமாக உருமாற பல சோதனைகளைக் கடக்க வேண்டியுள்ளது. 


"கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியா விட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்."(யோவான் 12:24) என்ற இறைவார்த்தைக்கேற்ப

விதையானது முளைத்து வளர்வதற்கு அது மடிவது மிக அவசியம். அது மடியும் போது தான் புதிய முளை தோன்றும். அவ்வாறு தோன்றிய முளை தரையை முட்டி முளைப்பதற்குள் கற்களையும் முட்களையும் தாண்டி, வளைந்து கொடுத்து வெளிவர வேண்டும். வெளிவந்த பின்னரும் மாறுகின்ற தட்பவெப்ப நிலை, வளமை, வறட்சி என அனைத்தையும் சகித்துக்கொண்டு வளர வேண்டும். இத்தனை கடினப்பாடுகளுக்கிடையிலும் அதன் வேரும் ஆழமாக வளர்ந்து பூமியில் தன்னை நிலைநிறுத்த வேண்டும். பின் தான் அவ்விதை மரமாகவோ செடியாகவோ உருமாற முடியும்.


இன்றைய நற்செய்தியில் இறையாட்சி கடுகுவிதைக்கு ஒப்பிடப்படுகிறது. சிறிய கடுகு விதையானது நாம் மேற்கூறிய எல்லா சோதனைகளையும் கடந்து மரமாக உருவெடுக்கும் போது பறவைகள் தங்குமளவிற்கு பெரியதாகவும் பயனுள்ளதாகவும் மாறுகிறது.

இது நமக்குச் சுட்டிக் காட்டும் செய்தி என்னவென்றால் இறையாட்சிக்காக நாம் உழைக்கும் போது நாமும் இத்தகைய இன்னல்களையும் இடையூறுகளையும் சந்திக்க நேரிடும் என்பதே. இருப்பினும் அவற்றை சகித்துக் கொண்டு நாம் தொடர்ந்து உழைக்கும் போது நிச்சயமாக நாம் இறையாட்சியின் வித்துக்களாய் வாழ முடியும். இறைவனை நம் மூலம் பலர் உணர முடியும். 


இன்றைய முதல் வாசகத்தின் மூலம் பிரச்சினைகளைக் கண்டு பின்வாங்காத மக்களாக வாழ நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.எத்தகைய சூழ்நிலையிலும் கிறிஸ்துவிடம் நம்பிக்கையும் நேர்மறையான எதிர் நோக்குடன் வாழும் மக்களாய் வாழ்ந்து இறையாட்சிக்காக உழைக்கும் மக்களாய்த் திகழ இறையருள் வேண்டுவோம்.


 இறைவேண்டல்

அன்பின் இறைவா! இன்னல்களையும் இடையூறுகளையும் கண்டு பின்வாங்காமல் எதிர் நோக்குடன் இறையாட்சியை உலகில் விளைவிக்கும் வித்துக்களாக வாழ அருள் தாரும். ஆமென்.


அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...