பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய்
நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 12: 1-4
சகோதரர் சகோதரிகளே,
திரண்டு வரும் மேகம்போல் இத்தனை சாட்சிகள் நம்மைச் சூழ்ந்து நிற்க எந்தச் சுமையையும், நம்மைப் பற்றிக்கொண்டிருக்கும் எந்தப் பாவத்தையும் உதறித் தள்ளிவிட்டு, நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. நம்பிக்கையைத் தொடங்கி வழிநடத்துபவரும் அதை நிறைவு செய்பவருமான இயேசுவின்மீது கண்களைப் பதிய வைப்போம். அவர் தாம் அடைய இருந்த மகிழ்ச்சியின் பொருட்டு, இழிவையும் பொருட்படுத்தாமல் சிலுவையை ஏற்றுக்கொண்டார். இப்போது, கடவுளது அரியணையின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார்.
பாவிகளால் தமக்கு உண்டான எந்த எதிர்ப்பையும் மன உறுதியோடு தாங்கிக்கொண்ட அவரை எண்ணிப்பாருங்கள். அப்போது நீங்கள் மனம் சோர்ந்து, தளர்ந்து போகமாட்டீர்கள். பாவத்திற்கு எதிரான போராட்டத்தில், இரத்தம் சிந்தும் அளவுக்கு நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்கவில்லை.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 22: 25b-26. 27,29. 30-31 (பல்லவி: 26b)பல்லவி: ஆண்டவரை நாடுவோர் அவரைப் புகழ்வராக!
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மத் 8: 17அல்லேலூயா, அல்லேலூயா! அவர் நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
சிறுமியே! உனக்குச் சொல்லுகிறேன், எழுந்திடு.
✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 21-43
இயேசு படகிலேறி, கடலைக் கடந்து மீண்டும் மறுகரையை அடைந்ததும் பெருந்திரளான மக்கள் அவரிடம் வந்து கூடினர். அவர் கடற்கரையில் இருந்தார். தொழுகைக்கூடத் தலைவர்களுள் ஒருவரான யாயிர் என்பவர் வந்து, அவரைக் கண்டு அவரது காலில் விழுந்து, “என் மகள் சாகும் தறுவாயில் இருக்கிறாள். நீர் வந்து அவள்மீது உம் கைகளை வையும். அப்போது அவள் நலம் பெற்றுப் பிழைத்துக்கொள்வாள்” என்று அவரை வருந்தி வேண்டினார்.
இயேசுவும் அவருடன் சென்றார். பெருந்திரளான மக்கள் அவரை நெருக்கிக்கொண்டே பின்தொடர்ந்தனர். அப்போது பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப் போக்கினால் வருந்திய பெண் ஒருவர் அங்கு இருந்தார். அவர் மருத்துவர் பலரிடம் தமக்கு உள்ளதெல்லாம் செலவழித்தும் ஒரு பயனும் அடையாமல் மிகவும் துன்பப்பட்டவர். அவர் நிலைமை வரவர மிகவும் கேடுற்றது. அவர் இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டு மக்கள் கூட்டத்துக்கிடையில் அவருக்குப் பின்னால் வந்து அவரது மேலுடையைத் தொட்டார். ஏனெனில், “நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன்” என்று அப்பெண் எண்ணிக்கொண்டார். தொட்ட உடனே அவருடைய இரத்தப்போக்கு நின்றுபோயிற்று. அவரும் தம் நோய் நீங்கி, நலம் பெற்றதைத் தம் உடலில் உணர்ந்தார்.
உடனே இயேசு தம்மிடமிருந்து வல்லமை வெளியேறியதைத் தம்முள் உணர்ந்து மக்கள் கூட்டத்தைத் திரும்பிப் பார்த்து, “என் மேலுடையைத் தொட்டவர் யார்?” என்று கேட்டார். அதற்கு அவருடைய சீடர்கள் அவரிடம், “இம்மக்கள் கூட்டம் உம்மைச் சூழ்ந்து நெருக்குவதைக் கண்டும், ‘என்னைத் தொட்டவர் யார்?’ என்கிறீரே!” என்றார்கள். ஆனால் அவர் தம் மேலுடையைத் தொட்டவரைக் காணும்படி சுற்றிலும் திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அப்பெண் தமக்கு நேர்ந்ததை அறிந்தவராய், அஞ்சி நடுங்கிக்கொண்டு, அவர்முன் வந்து விழுந்து, நிகழ்ந்தது அனைத்தையும் அவரிடம் சொன்னார். இயேசு அவரிடம், “மகளே, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று. அமைதியுடன் போ. நீ நோய் நீங்கி நலமாயிரு” என்றார்.
அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, தொழுகைக்கூடத் தலைவருடைய வீட்டிலிருந்து ஆள்கள் வந்து, அவரிடம், “உம்முடைய மகள் இறந்துவிட்டாள். போதகரை ஏன் இன்னும் தொந்தரவு செய்கிறீர்?” என்றார்கள். அவர்கள் சொன்னது இயேசுவின் காதில் விழுந்ததும், அவர் தொழுகைக்கூடத் தலைவரிடம், “அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்” என்று கூறினார். அவர் பேதுரு, யாக்கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான் ஆகியோரைத் தவிர வேறொருவரையும் தம்முடன் வரவிடவில்லை.
அவர்கள் தொழுகைக்கூடத் தலைவரின் வீட்டிற்குச் சென்றார்கள். அங்கே அமளியையும் மக்கள் அழுது ஓலமிட்டுப் புலம்புவதையும் இயேசு கண்டார். அவர் உள்ளே சென்று, “ஏன் இந்த அமளி? ஏன் இந்த அழுகை? சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள்” என்றார். அவர்கள் அவரைப் பார்த்து நகைத்தார்கள்.
ஆனால் அவர் அனைவரையும் வெளியேற்றியபின், சிறுமியின் தந்தையையும் தாயையும் தம்முடன் இருந்தவர்களையும் கூட்டிக்கொண்டு, அச்சிறுமி இருந்த இடத்திற்குச் சென்றார். சிறுமியின் கையைப் பிடித்து அவளிடம், “தலித்தா கூம்” என்றார். அதற்கு, ‘சிறுமி, உனக்குச் சொல்லுகிறேன், எழுந்திடு’ என்பது பொருள். உடனே அச்சிறுமி எழுந்து நடந்தாள். அவள் பன்னிரண்டு வயது ஆனவள். மக்கள் பெரிதும் மலைத்துப்போய் மெய்ம்மறந்து நின்றார்கள். “இதை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது” என்று அவர் அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்; அவளுக்கு உணவு கொடுக்கவும் சொன்னார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
"நம்பிக்கை நலமளிக்கும் !"
நான் பணியாற்றிய பங்கில் ஒரு குடும்பத்தை சந்தித்த பொழுது கடவுள் செய்த மாபெரும் நன்மையை நம்பிக்கை அறிக்கையாக சாட்சி பகர்ந்தனர். கடவுள் மீது மிகவும் பக்தி கொண்ட ஒரு தாய் கருவுற்றிருந்தார். அவர் கருவிலே சுமந்த குழந்தையை ஸ்கேன் எடுக்கும் போது உரு குலைந்து இருப்பதாக மருத்துவர் கூறினார். தாயும் உறவினரும் மிகுந்த வருத்தப்பட்டனர். ஆனால் இந்த தாய் நம்பிக்கையை மட்டும் விடவில்லை. தொடர்ந்து இறைவனிடம் வேண்டினார். கடவுள் நிச்சயமாக தனது குழந்தைக்கு உடல் உள்ள சுகத்தை கொடுத்து ஆரோக்கியத்தோடு பிறக்க வைப்பார் என்று நம்பினார். குழந்தை பிறக்கக்கூடிய நேரம் வந்தது. மருத்துவரும் உறவினரும் தாயும் ஆச்சரியப்படும் வகையில் குழந்தை ஆரோக்கியமாகப் பிறந்தது. அந்த நொடி முதல் அந்த தாய் கடவுளின் நாமத்தை சொல்லி இன்று வரை புகழ்ந்து கொண்டிருக்கிறார். அற்புதமாய் பிழைக்க வைத்து சிறப்பாக பிறக்க வைத்த அந்தக் குழந்தை இப்பொழுது ஒன்பதாம் வகுப்பு மிகச் சிறப்பான முறையில் படித்து வருகிறது.
நம்முடைய ஆண்டவர் நம்புகிறவர்களை ஒருபோதும் கைவிடாத இறைவன். மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும் நம்பிக்கையில்தான் வாழ்க்கை நடத்துகிறோம். நம்பிக்கை இல்லை என்றால் மனித வாழ்வு மகிழ்ச்சிகரமாக இருக்காது. குடும்ப வாழ்வில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் அமைதியும் இருக்க வேண்டுமென்றால் ஒருவர் மற்றவரை நம்ப வேண்டும். கடவுள் இருக்கிறார் என்று பயணிக்கும் நம்பிக்கையாளர்கள் நம்பிக்கையால் பல அற்புதங்களை பெறுகின்றனர். கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகர்களும் கூட கொள்கைகளையும் மானுடத்தையும் நம்புகின்றனர். ஆக நம்பிக்கை இல்லாத வாழ்வு சிறப்பான வாழ்வாக இருக்காது.
இன்றைய நற்செய்தியில் நம்பிக்கை நலவாழ்வு அளித்ததைப் பற்றி நாம் அறிய வருகிறோம். பிற இனத்தவர் வாழும் பகுதியிலிருந்து யூதர்கள் வாழும் பகுதிக்கு இயேசு வருகிறார். பெருந்திரளான மக்கள் இயேசுவை நெருங்கி வந்தனர். அப்பொழுது இயேசு இரண்டு அற்புதங்களை செய்தார். முதலாவதாக பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப்போக்கினால் வருந்திய பெண் "நான் அவருடைய ஆடையை தொட்டாலே நலம் பெறுவேன் " என்ற நம்பிக்கையில் இயேசுவின் ஆடையை தொட்டார். நலம் பெற்றார். இரண்டாவதாக தொழுகை கூட தலைவர் தன்னுடைய மகள் இறந்து விட்டாள் என்ற செய்தியை அறிந்த பிறகும் இயேசுவால் தன் மகளை மீண்டும் தர முடியும் என்று ஆழமாக நம்பினார். தன் மகளை உயிரோடு மீண்டும் பெற்றார். இந்த இரண்டு வல்ல செயல்களுக்கும் அடிப்படையாக இருந்தது நம்பிக்கை
நம்பிக்கை நமக்கு நலம் தருகிறது. நம்பிக்கை நமக்கு புது வாழ்வு தருகிறது. நம்பிக்கை இறை அனுபவத்தை தருகிறது. நம்பிக்கை நமக்கு வெற்றியை தருகிறது. நம்பிக்கை நமக்கு ஆற்றலை தருகிறது. நம்பிக்கை இறைவனின் இரக்கத்தை தருகிறது. நம்பிக்கை வழிகாட்டுகிறது. நம்பிக்கை வெற்றியை தருகிறது. நம்பிக்கை நாம் கேட்பதை கடவுள் கொடுப்பார் என்ற ஆழமான மனநிலையைக் கொடுக்கிறது. நம்பிக்கையால் நாம் அனைவரும் கடவுளின் ஆற்றலைப் பெறுகிறோம்.
எனவே நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நம்பிக்கையோடு இறைவனின் கரத்தை பற்றி பிடிக்கும் பொழுது அற்புதங்களையும் அதிசயங்களையும் நாம் காண முடியும். "மகனே, உனது நம்பிக்கை உன்னை குணமாக்கிற்று " (மாற்: 5:34) என்று ஆண்டவர் இயேசு நம்மைப் பார்த்தும் கூறுகிறார். நம்முடைய வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சனைகள், பலவீனங்கள், அடிமைத்தனங்கள், சுமைகள், கண்ணீர்கள் இருந்தாலும் கூட இறைவனை ஆழமாக நம்பும் பொழுது நாம் நலம் பெற முடியும்.இயேசுவை நம்பி வரக்கூடியவர்களை இயேசு ஒருபோதும் கைவிடமாட்டார். எனவே "விசுவாசத்தை தொடங்கி வைத்த வரும் அதை நிறைவு பெற செய்பவருமானவர் இயேசு (எபி: 12:2) என்ற பவுலடியாரின் வார்த்தைக்கு ஏற்ப நம்பிக்கையோடு நம் வாழ்வில் பயணிப்போம். நம்பிக்கையில் வளருவோம்! நாளும் கடவுளின் அருள் பெற்று வாழ்வோம்.
இறைவேண்டல்
நம்பிக்கையின் நாயகனே இறைவா! எங்களுடைய அன்றாட வாழ்க்கையில் நம்பிக்கையில் வேரூன்றி சிறப்பான கிறிஸ்த வாழ்வை வாழ்ந்திட அருளைத் தாரும். ஆமென்.
அருட்பணி. குழந்தை இயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️
Join with us 👇
Website: https://catholicvoicecv.blogspot.com
Youtube: https://www.youtube.com/channel/UCcgIiK1gUEqRCmTsc7ZjAoA
Youtube: https://www.youtube.com/channel/UCxBBHQAKIjii_MsZfIYNF5A
Facebook:https://www.facebook.com/Catholic-Voice-108151311955076
Instagram:https://www.instagram.com/invites/contact/?i=16mmdwn460k8p&utm_content=p6lg283
No comments:
Post a Comment