Showing posts with label பொதுக்காலம் 22 வாரம். Show all posts
Showing posts with label பொதுக்காலம் 22 வாரம். Show all posts

Friday, September 2, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (3-09-2022)

 பொதுக்காலம் 22ஆம் வாரம் - சனி

முதல் வாசகம்



பட்டினியோடும் தாகத்தோடும் ஆடையின்றியும் இருக்கிறோம்.


திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 6-15


சகோதரர் சகோதரிகளே,

உங்கள் பொருட்டு என்னையும் அப்பொல்லோவையும் எடுத்துக்காட்டாகக் கொண்டு இவற்றைக் கூறினேன். ஏனெனில், “எழுதியுள்ளதற்கு மேல் போகாதே” என்பதன் பொருளை எங்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ளுங்கள். ஒருவரை ஆதரித்தும் மற்றவரை எதிர்த்தும் செயல்படாதீர்கள்; இறுமாப்புக் கொள்ளாதீர்கள். நீங்கள் மற்றவர்களைவிட உயர்ந்தவர்கள் என்று சொன்னவர் யார்? உங்களிடம் உள்ள அனைத்தும் நீங்கள் பெற்றுக் கொண்டவைதானே? பெற்றுக்கொண்டும் பெற்றுக் கொள்ளாததுபோல் பெருமை பாராட்டுவது ஏன்? தேவையானவற்றை எல்லாம் ஏற்கெனவே பெற்றுவிட்டீர்களோ? ஏற்கெனவே செல்வர்களாகி விட்டீர்களோ? எங்களை விட்டுவிட்டு நீங்கள் மட்டும் ஆட்சி செலுத்துகிறீர்களோ? நீங்கள் ஆட்சி செலுத்த முடியுமென்றால் நல்லதுதான். அப்படியானால் நாங்களும் உங்களோடு சேர்ந்து ஆட்சி செலுத்தலாமே.

கடவுளின் திருத்தூதராகிய எங்களை அவர் எல்லாருக்கும் கடையராக்கினார்; நாங்கள் மரண தண்டனை பெற்றவர்கள் போல் ஆனோம். மனிதருக்கும் வானதூதருக்கும் உலகுக்கும் காட்சிப் பொருளானோம் எனக் கருதுகிறேன்.

நாங்கள் கிறிஸ்துவின் பொருட்டு மடையர்கள்; நீங்களோ கிறிஸ்துவோடு இணைந்த அறிவாளிகள். நாங்கள் வலுவற்றவர்கள்; நீங்களோ வலிமை மிக்கவர்கள். நீங்கள் மாண்புள்ளவர்கள்; நாங்களோ மதிப்பற்றவர்கள். இந்நேரம்வரை பட்டினியோடும் தாகத்தோடும் ஆடையின்றியும் இருக்கிறோம். அடிக்கப்படுகிறோம்; நாடோடிகளாய் இருக்கிறோம். எங்கள் கைகளால் பாடுபட்டு உழைக்கிறோம். பழிக்கப்படும்போது ஆசி கூறுகிறோம்; துன்புறுத்தப்படும்போது பொறுத்துக்கொள்கிறோம். அவமதிக்கப்படும்போதும் கனிவாகப் பேசுகிறோம். நாங்கள் உலகத்தின் குப்பை போல் ஆனோம். இதுவரை அனைத்திலும் கழிவுப் பொருட்கள் எனக் கருதப்பட்டுவருகிறோம்.

உங்களை வெட்கமடையச் செய்ய நான் இவற்றை எழுதவில்லை; நீங்கள் என் அன்பார்ந்த பிள்ளைகளென எண்ணி, உங்களுக்கு அறிவு புகட்டவே இவற்றை எழுதுகிறேன். கிறிஸ்துவைச் சார்ந்த உங்களுக்கு ஆசிரியர்கள் பல்லாயிரம் இருக்கலாம்; ஆனால் தந்தையர் பலர் இல்லை. நற்செய்தி வழியாக நான் உங்களைக் கிறிஸ்தவர்களாக ஈன்றெடுத்தேன்.


ஆண்டவரின் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல்



திபா 145: 17-18. 19-20. 21 (பல்லவி: 18)

பல்லவி: மன்றாடும் யாவருக்கும் ஆண்டவர் அண்மையில் இருக்கிறார்.


17 ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்; அவர்தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே.

18 தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார். - பல்லவி

19 அவர் தமக்கு அஞ்சி நடப்போரின் விருப்பத்தை நிறைவேற்றுவார்; அவர்களது மன்றாட்டுக்குச் செவிசாய்த்து அவர்களைக் காப்பாற்றுவார்.

20 ஆண்டவர் தம்மிடம் பற்றுக் கொள்ளும் அனைவரையும் பாதுகாக்கின்றார்; பொல்லார் அனைவரையும் அழிப்பார். - பல்லவி

21 என் வாய் ஆண்டவரின் புகழை அறிவிப்பதாக! உடல் கொண்ட அனைத்தும் அவரது திருப்பெயரை என்றும் எப்பொழுதும் போற்றுவதாக! - பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


யோவா 14: 6

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் கூறுகிறார்: வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை. அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்



ஓய்வு நாளில் செய்யக் கூடாததை நீங்கள் செய்வதேன்?


✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 1-5

ஓர் ஓய்வு நாளில் இயேசு வயல் வழியே செல்ல நேர்ந்தது. அவருடைய சீடர் கதிர்களைக் கொய்து கைகளினால் கசக்கித் தின்றனர். பரிசேயருள் சிலர், “ஓய்வு நாளில் செய்யக் கூடாததை நீங்கள் செய்வதேன்?” என்று கேட்டனர்.

அதற்கு இயேசு மறுமொழியாக, “தாமும் தம்முடன் இருந்தவர்களும் பசியாய் இருந்தபோது, தாவீது செய்ததைக் குறித்து நீங்கள் வாசித்தது இல்லையா? அவர் இறை இல்லத்திற்குள் சென்று, குருக்கள் மட்டுமே அன்றி வேறு எவரும் உண்ணக் கூடாத அர்ப்பண அப்பங்களை எடுத்துத் தாம் உண்டதுமன்றித் தம்மோடு இருந்தவர்களுக்கும் கொடுத்தார் அல்லவா?” என்று கூறினார். மேலும் அவர்களிடம், “ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே” என்றார்.


ஆண்டவரின் அருள்வாக்கு.

-----------------------------


சிந்தனை
ஒய்வு நாளில் எதை செய்வது முறை. அது கடவுளுக்கு அர்ப்பணமான நாள் என்பது வேதத்தின் வாக்கு.
அவருக்கு அர்ப்பணமான நாளில் அவரோடு இருப்பது, முழு பூசை கண்டு ஒப்புக் கொடுப்பது திருச்சபையின் கட்டளை.
சாஸ்திரங்களை சம்பிரதாயங்களை கடைபிடிப்பதில் நாம் காட்டும் அக்கறை ஏன் கட்டளைகளை கடைபிடிப்பதில் காட்டுவதில்லை என்பது தான் புரியாத புதிர்.
கட்டளைகளை கடைபிடிக்க ஆயிரம் காரணங்களை சொல்லி தப்பித்துக் கொள்ளும் நாம், சம்பிரதாயங்களை காசுக்கு பெறாதவற்றிக்கு மிகவும் அழுத்தம் கொடுப்பது ஏனோ. அறியாமையா? அகந்தையா? செருக்கா? வறட்டு கௌரவமா? மாற்கு 07: 09
மறையுரைச் சிந்தனை (செப்டம்பர் 03)
அடுத்தவரிடம் குறை கண்டுபிடிக்கும் மனது அழுக்கான மனது
ஒரு நகரில் மெத்தப் படித்த மேதாவி ஒருவர் இருந்தார். அவர் எப்போதுமே அடுத்தவரிடம் குறை கண்டுபிடிப்பதையே தன்னுடைய குலத்தொழிலாக கொண்டு வாழ்ந்துவந்தார். மக்கள் ஒன்றை எவ்வளவு நேர்த்தியாக, நிறைவாகச் செய்திருந்தாலும் அதில் அவர் குறைகண்டுபிடிப்பார். இதனால் மக்களுக்கு அவர்மீதான ஒரு வெறுப்புணர்வே இருந்தது.
ஒருநாள் அவர் ஒரு கனவு கண்டார். அந்தக் கனவில் அகன்ற சாலை ஒன்றில் அவர் நடந்துசென்று கொண்டிருந்தார். அவருடைய முதுகில் பெரிய சுமை ஒன்று இருந்தது. அந்த சுமை எப்படிப்பட்டது, ஏன் வந்தது என்று அவருக்கு விளங்கவேயில்லை. அவர் நடக்க நடக்க அவர் முதுகில் இருந்த சுமை அவரை அழுத்தத் தொடங்கியது.
ஒருகட்டத்தில் அவர் சத்தமாகக் கத்தத் தொடங்கினார், “கடவுளே எனக்கு எதற்கு இவ்வளவு பெரிய சுமை?. இதை நான் ஏன் சுமக்கவேண்டும்? என்று கேட்டார். அதற்கு வானத்திலிருந்து கடவுள், “இந்த சுமை வேறொன்றும் இல்லை. மற்றவர்களிடம் நீ கண்டுபிடித்த குறைதான் இப்படி சுமையாக இருக்கிறது. எல்லாரும் நல்லதையே பார்த்தபோது, நீ மட்டும் குறைகளையே பார்த்தாய். ஆதலால்தான் நீ கண்டுபிடித்த குறைகளை இப்போது நீ சுமந்துகொண்டு வருகிறாய்” என்றார்.
உடனே தூக்கத்திலிருந்து அவர் விழித்தெழுந்தார்; அறிவொளி பெற்றார். அன்றிலிருந்து அவர் மக்களிடம் இருக்கும் நிறைகளை மட்டுமே கண்டார்.
பிறரிடம் குறைகாண்போரது வாழ்க்கை பரிதாபத்திற்கு உரியது என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகிறது.
நற்செய்தி வாசகத்தில் இயேசுவும் அவருடைய சீடர்களும் வயல்வழியாக நடந்து சென்றுகொண்டிருக்கும்போது சீடர்கள் பசியில் கதிர்களைக் கொய்து உண்ணத் தொடங்குகிறார்கள். இதைப் பார்த்த பரிசேயர்கள் இயேசுவிடம், “உம்முடைய சீடர்கள் ஓய்வுநாள் சட்டத்தை மீறிவிட்டார்கள்” என்று குறைசொல்கிறார்கள். அதற்கு இயேசுவின் பதில்தான் நமது சிந்தனைக்கு உரியதாக இருக்கின்றது.
கதிர்களைக் கொய்து தின்னுதல் என்பது குற்றம் கிடையாது (இச 23:24-25). ஆனால் சீடர்கள் கதிர்களைக் கொய்து, கசக்குதால்தான் மிகப்பெரிய குற்றமாக பரிசேயர்களுடைய கண்களுக்குத் தெரிகிறது. அதனால்தான் அவர்கள் இயேசுவின் சீடர்கள் ஓய்வுநாள் சட்டத்தை மீறியதாக குறைகூறுகிறார்கள், குற்றம் சாட்டுகிறார்கள்.
பரிசேயர்களின் குற்றச்சாட்டுக்கு இயேசு, அவர்கள் ஏற்றுக்கொண்ட மறைநூலிலிருந்தே விளக்கம் தருகிறார். தாவீதும், அவருடைய சகாக்களும் பசியாய் இருந்தபோது குருக்கள் மட்டுமே உண்ணக்கூடிய அர்ப்பண அப்பங்களை உண்ணுகிறார்கள் (1 சாமு 21:1-6) என்ற இந்த நிகழ்வைச் சுட்டிக்காட்டி ஆண்டவர் இயேசு அவர்களிடம், “ஓய்வுநாளும் மானிட மகனுகுக் கட்டுப்பட்டதே” என்கிறார். மேலும் மத்தேயு நற்செய்தி 9:13ல் “பலிகளை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்” என்று சொல்லி இக்கருத்துக்கு இன்னும் வலுவூட்டுகிறார்.
பல நேரங்களில் நாம் சட்டத்தைக் கடைபிடிக்கிறேன் பேர்வழி என்று சொல்லிக்கொண்டு இரக்கமே இல்லாமல் நடந்துகொள்வது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. சட்டங்களும், சம்பிரதாயங்களும் யாருக்காக? மனிதர்களுக்குத் தானே. மனிதர்களுக்கு முக்கியத்துவம் தராமல், சட்டத்தைத் தூக்கிப் பிடித்தல் எந்தவிதத்தில் நியாயம்?.
சில ஆண்டுகளுக்கு முன்பாக உத்தரப் பிரதேசம் மாநிலம் தாதரி நகருக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் மாட்டு மாமிசம் சாப்பிட்டார்கள் என்று கூறி முகமது அக்லாக் என்பவரும் அவருடைய மகனும் கொல்லப்பட்டார்கள். ஒரு மாட்டை கொன்று சாப்பிட்டதற்காக இரண்டு உயிர்களைக் கொன்ற இந்த நிகழ்வு உலகெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது எதைக் காட்டுகிறது?. மனிதர்களைவிட சம்பிரதாயங்களும், அதற்குப் பின்னால் ஒளிந்திருக்கும் சாதியமும் அல்லவா பெரிது என்று காட்டுகிறது. மனிதர்கள் இல்லாமல், சட்டமும், சம்பிரதாயங்களும் வீணிலும், வீண்.
எனவே சட்டங்களை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருக்காமல், அந்த சட்டங்கள் குறித்துக் காட்டும் மானுட நேயத்தை நம்மில் வளர்ப்போம்.
அதைவிடவும் பிறரிடம் குறை கண்டுபிடிக்கும் எண்ணத்தை அடியோடு தவிர்ப்போம். “அன்பு குறைந்திருக்கும்போது குற்றங்கள் பெரிதாகத் தெரிகின்றன” என்பார் கார்லைல் என்ற அறிஞர். ஆம், நம்மிடத்தில் அன்பு குறைந்தால் பிறரிடம் இருக்கும் குறைகள் பெரிதாகத் தெரியும். மாறாக நம்மிடம் அன்பு பெருகினால், குற்றம் காணும் மனப்பான்மை குறையும்.
ஆகவே, குறைகாணும் போக்கைத் தவிர்ப்போம். சட்டங்களைக் கண்டு, மானுட நேயம் காப்போம். அதன்வழியாக் இறையருள் நிறைவாய் பெறுவோம். –
- Fr. Maria Antonyraj, Palayamkottai.

---------------------------------------


திருப்பாடல் 145: 17-18, 19-20, 21 (18)

“மன்றாடும் யாவருக்கும் ஆண்டவர் அண்மையில் இருக்கிறார்”


சிறுவனின் இறைவேண்டல்:

ஆறாம் வகுப்பு படித்த சிறுவன் ஜோவிற்கு அவனுடைய தாத்தாதான் வீட்டுப் பாடங்களை எல்லாம் சொல்லிக் கொடுப்பார். ஓய்வுபெற்ற ஆசிரியரான அவர் சொல்லிக்கொடுக்கும் பாடங்களையெல்லாம் அவன் மிக எளிதாகப் புரிந்துகொண்டு, செய்து முடிப்பான். 

ஒருநாள் அவர் ஜோவிற்கு வீட்டுப் பாடங்களைச் சொல்லிக் கொடுக்கும்போது, அவனுடைய கவனம் பாடத்தில் இல்லாமல் எங்கோ இருந்தது. “ஜோ! உனக்கு என்ன ஆயிற்று? உன்னுடைய கவனம் பாடத்தில் இல்லாமல், எங்கோ இருப்பது மாதிரித் தெரிகின்றதே!” என்று ஜோவின் தாத்தா கேட்டதற்கு, “நான் வைத்திருந்த பொம்மையைக் காணவில்லை; அது எங்கே போனது என்றுதான் தெரியவில்லை. அதனால்தான் என்னால் பாடத்தில் கவனம் செலுத்த முடியவில்லை” என்று சொன்ன ஜோ, “எதற்கும் நான் கடவுளிடம் வேண்டுகிறேன். அவர் தொலைந்துபோன என்னுடைய பொம்மையைத் தேடித் தருவார்” என்று சொல்லிவிட்டுத் தன்னுடைய அறைக்குச் சென்று வேண்டத் தொடங்கினான். 

மறுநாள் காலையில் ஜோ பள்ளிக்கூடத்திற்குக் கிளம்பிக் கொண்டிருந்தபோது, அவனுடைய தாத்தா, “ஜோ! தொலைந்து போன உன்னுடைய பொம்மையை ஆண்டவர் கண்டுபிடித்துத் தந்துவிட்டாரா?” என்று கேட்தற்கு அவன், “தொலைந்து போன பொம்மையைத் திருப்பித் தருவதாக அவர் சொல்லவில்லை. புதியதொரு பொம்மையைத் தரப்போவதாகச் சொன்னார்” என்று சொல்லிவிட்டுப் பள்ளிக்குச் சென்றான். 

அன்று மாலை அவன் பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பி வந்தபோது, வெளிநாட்டிலிருந்து வந்திருந்த அவனுடைய மாமா அவனுக்கு ஒரு பொம்மையை வாங்கி வந்திருந்தார் அதைப் பார்த்தும் அவன், “கடவுள் என்னிடத்தில் சொன்னது போன்றே ஒரு பொம்மையை எனக்குத் தந்துவிட்டார்” என்று அதைத் தன் தாத்தாவிடம் காட்டி, மகிழ்ந்தான். 

ஆம், இந்த நிகழ்வில் வருகின்ற சிறுவன் ஜோவின் மன்றாட்டிற்கு ஆண்டவர் செவிசாய்த்தார். இன்று நாம் பாடக்கேட்ட பதிலுரைப்பாடலில் தாவீது, “மன்றாடும் யாவருக்கும் ஆண்டவர் அண்மையில் இருக்கிறார்” என்கிறார். அது குறித்து நாம் சிந்திப்போம். 


திருவிவிலியப் பின்னணி:

நூற்று ஐம்பது திருப்பாடலில் தாவீது பாடிய திருப்பாடல் மொத்தம் 73. இதில் அவர் பாடிய கடைசித் திருப்பாடல்தான், இன்று நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 145. இத்திருப்பாடல் ஒரு புகழ்ப்பாடலாக அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு. 

தாவீது இஸ்ரேலின் அரசராக இருந்தார். அவர் அனைத்துலகின் அரசராம் ஆண்டவரைப் போற்றிப் புகழ்வது மாதிரியாக இருக்கின்றது திருப்பாடல் 145. “என் கடவுளே, என் அரசே! உம்மைப் புகழ்த்து ஏத்துவேன்” என்ற வரிகளோடு இத்திருப்பாடலைத் தொடங்கும் தாவீது, எதற்காக ஆண்டவரைப் புகழ்ந்து பாடவேண்டும் என்பதற்கான காரணங்களை வரிசைப்படுத்திக் கொண்டே போகின்றார். அப்படி அவர் வரிசைப்படுத்திக் கொண்டே போகும்போதுதான், “தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும் ஆண்டவர் அண்மையில் உள்ளார்” என்கிறார். 

தாவீது சொல்வது போல், ஆண்டவர் தம் அடியார்கள் எழுப்புகின்ற வேண்டுதலுக்குச் செவிசாய்க்கின்றார். அதனால் நாம் அவரைப் புகழ்ந்து பாடுவோம். 


சிந்தனைக்கு:

ஆண்டவர் நன்மைகளின் ஊற்றாய் இருப்பதால்தான் அவர் நம்முடைய மன்றாட்டிற்குச் செவி சாய்க்கின்றார். 

இறைவேண்டல் இன்றி எதுவும் செய்ய முடியாது. 

இறைவேண்டல் செய்யாத மனிதர் கூரையில்லாத வீட்டிற்குச் சமமானவர். 


இறைவாக்கு:

‘ஆண்டவருக்குப் பாடல் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்’ (திபா 105: 2) என்பார் திருப்பாடல் ஆசிரியர். எனவே, நமது வேண்டுதலைக் கேட்கும் ஆண்டவரைப் புகழ்ந்து பாடி, இறையருளை நிறைவாகப் பெறுவோம். 


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

----------------------------

“ஒருவரை ஆதரித்தும் மற்றவரை எதிர்த்தும் செயல்படாதீர்கள்”


நடுநிலைமை:

ஒரு கல்லூரில் பேசச் சென்றிருந்த பேச்சாளர் ஒருவர் தனக்கு முன்பு அமர்ந்திருந்த மாணவர்களிடம், “கயிற்றில் நடக்கும் வித்தைக்காரரால் எப்படிக் கீழே விழாமல் நடக்க முடிகின்றது? அவரது வெற்றிக்கான காரணம் என்ன?” என்று கேட்டார். 

உடனே ஒரு மாணவர் எழுந்து, “கவனம்” என்றார். இன்னொரு மாணவர், “விழிப்புணர்வு” என்றார். வேறொரு மாணவர், “பயிற்சி” என்றார். இப்படி ஒவ்வொரு மாணவரும் சொன்னதைக் கேட்டுக்கொண்டே வந்த பேச்சாளர் அவர்களிடம், “நீங்கள் சொல்கின்ற எல்லாமும் முக்கியம்தான்; ஆனால், இவை அனைத்தையும் விட நடு நிலைமை மிகவும் முக்கியம். ஏனெனில், இடப்பக்கமோ, வலப்பக்கமோ அவர் சாய்ந்துவிட்டால் கீழே விழுந்துவிடுவார்” என்றார். 

தொடர்ந்து அவர் அவர்களிடம், “இரவு – பகல், அன்பு – வெறுப்பு, நட்பு – பகை என்று இருக்கும் சூழலில், எந்தப் பக்கம் சாய்ந்தாலும் வீழ்ந்துவிடுவீர்கள். அதனால் நடுநிலையோடு நடங்கள்” என்றார். 

இன்றைக்குப் பலர் ஒருதலைப்பட்சமாக நடப்பதைப் பார்க்க முடிகின்றது. இந்நிலையில் இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை நடுநிலையோடு நடக்க அழைகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம். 


திருவிவிலியப் பின்னணி:

கொரிந்து நகரில், ‘நான் பவுலைச் சார்ந்துள்ளேன்’, ‘நான் அப்பொல்லோவைச் சார்ந்துள்ளேன்’, ‘நான் கேபாவைச் சார்ந்துள்ளேன்’ என்று மக்கள் பிளவுபட்டுக் கிடந்தார்கள். இதை அறிந்த அறிந்த பவுல் அவர்களிடம், “ஒருவரை ஆதரித்தும் மற்றவரை எதிர்த்தும் செயல்படாதீர்கள்” என்கிறார். பவுல் கூறிய இந்த அறிவுரை கொரிந்த நகர மக்கள் நடுவில் ஓரளவாவது மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கும். 

நற்செய்தியில், ஓய்வுநாளில் இயேசுவின் சீடர்கள் கதிர்களைக் கொய்து உண்டதைப் பார்த்த பரிசேயர்கள் சிலர், “ஓய்வுநாளில் செய்யக் கூடாததை நீங்கள் செய்வதேன்?” என்கிறார்கள். அப்போது இயேசு அவர்களுக்குத் தாவீதின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வைப் பதிலாகத் தருகின்றார் (1 சாமு 21: 1-6). இங்கு நாம் கவனிக்க வேண்டியது என்னவெனில்,, பின்னாளில் இஸ்ரயேலின் அரசரான தாவீது தன்னோடு இருந்தவர்களோடு குருக்கள் மட்டுமே உண்ணும் அர்ப்பண அப்பங்களை உண்டதைப் பற்றி எந்தவொரு சலசலப்போ, அல்லது எந்தவொரு விவாதமோ ஏற்படவில்லை. ஆனால், சீடர்கள் சாதாரணமானவர்கள் என்பதால் அவர்கள் ஓய்வு நாளில் கதிர்களைக் கொய்து உண்டதால் பரிசேயர்கள் அதை விவாதப் பொருளாக்குகின்றார்கள். என்பதைத்தான். 

அதிகாரத்தில் இருப்பவர்கள் தவறுசெய்தால் அதைக் கண்டும் காணாமலும் இருப்பதும், சாதாரண மனிதர்கள் ஒரு சிறு தவறு செய்தால் அதைப் பெரிது படுத்துவதைத்தான் இயேசு கடுமையாகச் சாடுகின்றார். நாமும் இத்தகைய தவற்றினைச் செய்திருக்கலாம். இனிமேலும் அதைச் செய்யாமல் நடுநிலைமையோடு வாழக் கற்றுக் கொள்வோம். 


சிந்தனைக்கு:

சட்டம் ஒரு சிலந்தி வலை. இதில் சிறு பூச்சிகள் சிக்கிக் கொள்கின்றன. பெரிய வண்டுகளோ வலையைக் கிழித்துவிடுகின்றன – கவிகோ அப்துல் இரகுமான்.

சமநீதியையே ஆண்டவர் விரும்பும் நீதி. 

ஒவ்வொருவருக்குள்ளும் ஆண்டவர் இருக்கின்றார். அதனால் அவரை இழிவு படுத்தும்போது ஆண்டவரையே இழிவுபடுத்துகின்றோம். 


இறைவாக்கு:

‘மாட்சிமிக்க நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினிடம் நம்பிக்கை கொண்டுள்ள நீங்கள் ஆள்பார்த்துச் செயல்படாதீர்கள்’ (யாக் 2:1) என்பார் புனித யாக்கோபு.. எனவே, நாம் பாரபட்சமின்றி எல்லாரையும் அன்பு செய்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

-----------------------------


செய்யக் கூடாதது

நேற்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் சீடர்கள் நோன்பு இருப்பதில்லை - அதாவது, நோன்பின்போது உண்கிறார்கள் - என்று இயேசுவிடம் புகார் அளிக்கப்பட்டது. இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஓய்வு நாளில் கதிர்களைக் கொய்து உண்கிறார்கள் சீடர்கள். இயேசுவின் சீடர்களுக்கும் உணவுக்கும் உள்ள இந்தத் தொடர்பை யாராவது ஆராய்ச்சி செய்தால் நலம். அப்பம் பிட்கும் நிகழ்விலும், 'போதகரே, அவர்களை அனுப்பிவிடும். உணவு உண்ணும் நேரம் ஆயிற்று' என்கின்றனர்.

வயல்களில் கதிர்களைக் கொய்து திண்ணுதல் என்பது இன்றும் கிராமங்களில் நடக்கின்ற ஒன்று. வழிப்பயணத்தில் ஒன்று அல்லது இரு கைகள் பறித்தல் சரி. அதற்கு மேலாக, அல்லது சேமிக்கும் அல்லது விற்கும் நோக்கத்துடன் பறிப்பது தவறு என்பதை இயேசுவின் சமகாலத்து வழக்கமாகவும் இருந்தது.

ஓய்வுநாள் சட்டத்தை முன்னிட்டு, ஒருவர் தன் கையை எந்த அளவு உயரத்துக்குத் தூக்கலாம் என்ற விதிமுறையை பரிசேயர்கள் உருவாக்கி வைத்திருந்தனர். அதன் பின்புலத்தில்தான் இயேசுவின் சீடர்கள் செய்த செயலைக் கடிந்துகொள்கின்றனர்.

இயேசுவோ, சட்டத்தையும் தாண்டி அவர்களின் பசியை - அடிப்படையான மனித உணர்வை - முன்மொழிந்து அவர்களுக்கு அறிவுறுத்துகின்றார். மேலும், அத்தகைய சூழலில் தாவீது செய்த செயலையும் சுட்டிக்காட்டுகின்றார்.

மேலும், இந்த நிகழ்வு வழியாக மானிட மகன் ஓய்வுநாள் சட்டத்தையும் கடந்தவர் என முன்மொழிகின்றார்.


இந்த நிகழ்வை எப்படிப் புரிந்துகொள்வது?

எல்லா விதிமுறைகளோடும் நாம் சமரசம் செய்துகொள்ள இயலுமா? எந்த அளவுக்குச் சமரசம் செய்துகொள்ளலாம்?

இன்றைய முதல் வாசகத்தில், பவுல் நல்ல தந்தையாக தன் திருஅவைக்கு அறிவுரை வழங்குகின்றார். பாவம் பவுல்! தன் குழுமத்தாரைக் கடிந்துகொள்ளவும் விரும்புகின்றார். அதே வேளையில் அவர்களின் நொறுங்குநிலை கண்டு வருந்தவும் செய்கின்றார்.


இறுதியில், தன்னை ஒரு தந்தை என முன்மொழிகின்றார்.

பரிசேயர்கள் தன் சீடர்களைச் சட்டம் கொண்டு கடிந்துகொள்ள முயன்றபோது, இயேசு நல்தந்தையாக அவர்களைக் காத்துக்கொள்கின்றார்.

அருள்திரு யேசு கருணாநிதி, மதுரை உயர்மறைமாவட்டம்

-----------------------------


 சட்டமா? மனித நேயமா?

பிராமணர் ஒருவர் அவசரமான ஒரு வேலைக்காக வேகமாக நடந்து சென்று கொண்டிருந்தார். வேலையின் நினைவாகவே சென்று கொண்டிருந்த அவர் எதிரே மீன்கள் விற்றுக்கொண்டு வரும் ஒரு வயதான பெண்மணியின் மீது மோதினார். அவர் கூடையில் இருந்த மீன்களெல்லாம் சிதறி கீழே விழுந்தன. அதைக்கண்ட அந்த பிராமணர் மிகவும் வருந்தி அப்பெண்ணிடம் மன்னிப்புக் கேட்டதோடு சிதறிய மீன்களை எடுத்து கூடையில் போடவும் உதவினார். அவ்வழியே வந்த மற்றொரு பிராமணர் இதைக்கண்டு பிராமண விதிகளை மீறீ அசுத்தமானவற்றை தொடுகிறீரே என்று குற்றம் சாட்டினார். அதைக்கேட்டு கொஞ்சமும் வருந்தாத முதல் பிராமணர் , இந்த மீன்கள் சிதறி விழ தான்தான் காரணமென்றும், தன் தவறை சரி செய்யாமலும் இப்பெண்ணுக்கு உதவாமலும் சென்றால் நல்ல மனிதனாக இருக்க முடியாது என்றும் கூறிவிட்டு தன் வழி தொடர்ந்தார்.

சட்டங்களும் விதிகளும் மனித மாண்பை மனித வாழ்வை நெறிப்படுத்துவதற்காக மட்டுமே. மனிதநேயத்தை காக்காத எந்த ஒரு சட்டமும் வீணே. நாம் வாழ்கின்ற சமூகத்தில் நாம் கடைபிடிப்பதற்காக நமக்குத் தரப்பட்டுள்ள சட்டங்கள் எல்லாம் மனிதநேயத்தை மதிப்பதற்காகவே எழுதப்பட்டுள்ளன. நம்முடைய அரசியல் சட்டங்கள், திருஅவை சட்டங்கள், அனைத்துமே மனிதநேயத்தை காப்பதற்காகவே அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் நாம் காண்பது என்ன?. 

சில நிமிடங்கள் தாமதமாக கடையை மூடியதற்காக, ஊரடங்கு  விதிகளை மீறியதாக குற்றம் சாட்டி மனிதநேயத்தை கொஞ்சம் கூட கண்டு கொள்ளாமல் தந்தையையும் மகனையும் காவல் நிலையத்தில் அடித்தே கொன்ற சமூகத்தில் தான் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

அவ்வாறெனில் மனித நேயம் எங்கே போனது?

இன்றைய நற்செய்தி வாசகத்தில் சீடர்கள் ஓய்வுநாளில் வயலிலே கதிர்களைக் கொய்து உண்டு ஓய்வுநாள் சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டனர். பரிசேயர்களுடைய கண்களுக்கு சீடர்களின் தவறு தெரிந்ததே தவிர அவர்களுடைய பசி தெரியவில்லை. உணவு என்பது மனிதனுடைய அடிப்படைத்தேவை . அதைக்கூட நிறைவேற்றிக்கொள்ள இயலாத அளவிற்கு மனித நேயமில்லா சட்டங்களை இயற்றி வைத்திருக்கும் பரிசேயரைக் கடிந்து கொள்ளும் இயேசு அவர்கள் புரிந்து கொள்ளும் விதமாக அவர்கள் உயர்வாக மதித்த தாவீது அரசர் செய்த செயலை மேற்கோள் காட்டுகிறார். இயேசுவின் சில வல்ல செயல்களும் ஓய்வு நாளில் நடந்தேறியதை நாம் விவிலியத்தில் வாசிக்கின்றோம். 

சட்டங்கள் மனிதருக்காக.  மனிதர் சட்டங்களுக்காக என்ற கருத்தை இயேசு தெள்ளத்தெளிவாக அதிகாரப்பூர்வமாக கூறுகிறார். 

இன்றைய முதல் வாசகத்திலும் திருத்தூதர் பவுல் "எழுதியுள்ளதற்கு மேல் போகாதே " என்ற வார்த்தைகளை மேற்கோள் காட்டி சட்டத்தை தூக்கிப்பிடித்தால் மட்டும் போதாது மாறாக மனித நேயம் கொண்டவர்களாய் ஒருவரை ஒருவர் ஆதரித்து வாழவேண்டும் என்று நமக்கு அழைப்பு விடுக்கிறார்.பாராபட்சம்  பார்க்காமலும், பிறரை எதிர்க்காமலும், இறுமாப்பு கொள்ளாமலும் நாம் வாழ வேண்டும் என்ற கருத்தையும் வலியுறுத்துகிறார்.

இன்று திருஅவை நினைவு கூறும் அன்னை தெரசா மனித நேயத்தொண்டிற்கு மிகச்சிறந்த உதாரணமாக இருக்கிறார். துன்புறும் மனிதர்களில் துன்புறும் இயேசுவைக்கண்டார். மனித நேயத்தோடு அவர்களுக்காக பணிபுரிய தன்னுடைய துறவற சபையின் சட்டங்களையும் விதிகளையும் மீற அவர் தயங்கவில்லை. மனித நேய தொண்டாற்றவே புதிய சபையை நிறுவிய அவர் அன்பு விதியை ஆதாரமாகக் கொண்டு கல்கத்தா நகர வீதிகளிலே யாருமின்றி அனாதையாய் கிடந்த ஏழைகளுக்கும் நோயாளிகளுக்கும் இயேசுவின் பெயரால் பணிவிடை புரிந்தார்.கருவுற்றால் ஒரு குழந்தைக்குத்தாய், கருணையுற்றால் உலகிற்கே தாய் என்ற வாக்கிற்கிணங்க இன்று உலகமே அவரை அன்னை என்ற அடைமொழியுடன் அன்போடு அழைப்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.

இன்று நம் மத்தியிலும் இயேசுவைப் போல அன்னைத்தெரசாவைப் போல விதிகளுக்கும் சட்டங்களுக்கும் அப்பாற்பட்ட மனித நேயத்தொண்டாற்றும் பலரை காண்கிறோம். அவர்களில் ஒருவராக வாழ முயற்சி செய்வோமா? . சட்டங்களை மதிக்கவும் மனித நேயம் காக்கவும் அத்தகைய சட்டங்கள் மனித நேயத்திற்கு எதிரானால் அதை தைரியமாக எதிர்க்கவும் வேண்டிய அருளை இறைவனிடம் வேண்டுவோம்.


 இறைவேண்டல்

கருணையின் உறைவிடமே இறைவா!

மனித மாண்பை, மனித நேயத்தை காக்கும் கடமையை எங்களுக்கு உம் மகன் இயேசுவின் மூலம் அளித்துள்ளீர். நாங்கள் அதை உணர்ந்தவர்களாய்,  வெறும் சட்டங்களுக்கும் விதிகளுக்கும் கட்டுப்படாமல் மனித நேயத்தோடு தேவையில் இருப்பவர்களுக்கு உதவும் வரம் தாரும்.  ஆமென்.


அருட்பணி.குழந்தைஇயேசு பாபு


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Join with us 👇

Website: https://catholicvoicecv.blogspot.com

Youtube: https://www.youtube.com/channel/UCcgIiK1gUEqRCmTsc7ZjAoA

Youtube: https://www.youtube.com/channel/UCxBBHQAKIjii_MsZfIYNF5A

Facebookhttps://www.facebook.com/Catholic-Voice-108151311955076

Instagram:https://www.instagram.com/invites/contact/?i=16mmdwn460k8p&utm_content=p6lg283

WhatsApp: https://chat.whatsapp.com/G5K3erwXGiJ4VWuBVUvCnz

Thursday, September 1, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (2-09-2022)

 

பொதுக்காலம் 22ஆம் வாரம் - வெள்ளி

முதல் வாசகம்



உள்ளங்களின் நோக்கங்களையும் வெளிப்படுத்துவார்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 1-5

சகோதரர் சகோதரிகளே,

நீங்கள் எங்களைக் கிறிஸ்துவின் ஊழியர்கள், கடவுளின் மறை உண்மைகளை அறிவிக்கும் பொறுப்புடையவர்கள் எனக் கருத வேண்டும். பொறுப்பாளர்கள் நம்பிக்கைக்கு உரியவர்களாய்க் காணப்பட வேண்டும் என எதிர்பார்க்கலாம் அன்றோ! என்னைப் பொறுத்தமட்டில் எனக்கு எதிராக நீங்களோ மக்களின் நீதிமன்றமோ தீர்ப்பளித்தால் அதைப் பற்றிச் சிறிதும் கவலைப்பட மாட்டேன். எனக்கு நானே தீர்ப்பளித்துக் கொள்ளவும் மாட்டேன். எனக்கு எதிராகக் குற்றம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆயினும் நான் குற்றமற்றவனாகி விடமாட்டேன். எனக்குத் தீர்ப்பு வழங்குபவர் ஆண்டவர் ஒருவரே. எனவே, குறித்த காலம் வருமுன், அதாவது ஆண்டவரின் வருகைக்கு முன் யாருக்கும் தீர்ப்பளிக்க வேண்டாம். அவரே இருளில் மறைந்திருப்பவற்றை வெட்ட வெளிச்சமாக்குவார்; உள்ளங்களின் நோக்கங்களையும் வெளிப்படுத்துவார். அப்பொழுது ஒவ்வொருவரும் கடவுளிடமிருந்து பாராட்டுப் பெறுவர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்



திபா 37: 3-4. 5-6. 27-28. 39-40 (பல்லவி: 39a)

பல்லவி: நேர்மையாளருக்கு மீட்பு ஆண்டவரிடமிருந்து வருகின்றது.

3
ஆண்டவரை நம்பு; நலமானதைச் செய்; நாட்டிலேயே குடியிரு; நம்பத்தக்கவராய் வாழ்.
4
ஆண்டவரிலேயே மகிழ்ச்சி கொள்; உன் உள்ளத்து விருப்பங்களை அவர் நிறைவேற்றுவார். - பல்லவி

5
உன் வழியை ஆண்டவரிடம் ஒப்படைத்துவிடு; அவரையே நம்பியிரு; அவரே உன் சார்பில் செயலாற்றுவார்.
6
உன் நேர்மையைக் கதிரொளி போலும், உன் நாணயத்தை நண்பகல் போலும் அவர் விளங்கச் செய்வார். - பல்லவி

27
தீமையினின்று விலகு; நல்லது செய்; எந்நாளும் நாட்டில் நிலைத்திருப்பாய்.
28
ஏனெனில், ஆண்டவர் நேர்மையை விரும்புகின்றார்; தம் அன்பரை அவர் கைவிடுவதில்லை; அவர்களை என்றும் பாதுகாப்பார். பொல்லாரின் மரபினரோ வேரறுக்கப்படுவர். - பல்லவி
39 நேர்மையாளருக்கு மீட்பு ஆண்டவரிடமிருந்து வருகின்றது, நெருக்கடியான நேரத்தில் அவர்களுக்கு வலிமையும் அவரே.
40
ஆண்டவர் துணைநின்று அவர்களை விடுவிக்கின்றார்; பொல்லாரிடமிருந்து அவர்களை விடுவிக்கின்றார்; அவரிடம் அடைக்கலம் புகுந்ததால், அவர்களை மீட்கின்றார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 8: 12

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் கூறுகிறார்: உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்க மாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்



மணமகன் பிரியவேண்டிய காலம் வரும்; அப்போது நோன்பு இருப்பார்கள்.

 லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 33-39

அக்காலத்தில்

பரிசேயரும் மறைநூல் அறிஞரும் இயேசுவை நோக்கி, “யோவானுடைய சீடர்கள் அடிக்கடி நோன்பு இருந்து மன்றாடி வருகிறார்கள்; பரிசேயர்களின் சீடரும் அவ்வாறே செய்கின்றனர். உம்முடைய சீடரோ உண்பதும் குடிப்பதுமாக இருக்கின்றனரே!” என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி, “மணமகன் மணவிருந்தினர்களோடு இருக்கும் வரை அவர்களை நோன்பு இருக்கச் செய்யலாமா? ஆனால் மணமகன் அவர்களை விட்டுப் பிரிய வேண்டிய காலம் வரும்; அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள்” என்றார்.

அவர் அவர்களுக்கு ஓர் உவமையையும் கூறினார்: “எவரும் புதிய ஆடையிலிருந்து ஒரு துண்டைக் கிழித்து அதைப் பழைய ஆடையோடு ஒட்டுப் போடுவதில்லை. அவ்வாறு ஒட்டுப் போட்டால் புதிய ஆடையும் கிழியும்; புதிய துண்டும் பழையதோடு பொருந்தாது.

அதுபோலப் பழைய தோற்பைகளில் எவரும் புதிய திராட்சை மதுவை ஊற்றி வைப்பதில்லை; ஊற்றி வைத்தால் புதிய மது தோற்பைகளை வெடிக்கச் செய்யும். மதுவும் சிந்திப் போகும்; தோற்பைகளும் பாழாகும். புதிய மதுவைப் புதிய தோற்பைகளில்தான் ஊற்றி வைக்க வேண்டும். பழைய திராட்சை மதுவைக் குடித்தவர் எவரும் புதியதை விரும்ப மாட்டார்; ஏனெனில் ‘பழையதே நல்லது’ என்பது அவர் கருத்து.”

ஆண்டவரின் அருள்வாக்கு.


---------------------

“தீர்ப்பு வழங்குபவர் ஆண்டவர் ஒருவரே”


நிகழ்வு

திருத்தந்தை இருபத்து மூன்றாம் யோவான், வெனிஸ் நகரில் ஆயராக இருந்தபொழுது நடந்த நிகழ்வு இது. இவர் இருந்த வெனிஸ் மறைமாவட்டத்தில் ஒரு பங்குப்பணியாளர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டார் என்ற செய்தி இவருக்குத் தெரிய வந்தது. உடனே இவர் தனது செயலரிடம், “வாருங்கள்! நாம் இருவரும் அந்தப் பங்குப் பணியாளரைப் பார்த்துவிட்டு வருவோம்” என்று சொல்லிவிட்டு, அவரைப் பார்ப்பதற்கு இருவரும் கிளம்பிப் போனார்கள்

இருவரும், குறிப்பிட்ட அந்தப் பங்குப் பணியாளரின் பங்கு எல்கையில் நுழைகையில் ஒரு பெரிய விடுதி இருப்பதைக் கண்டார்கள். அந்த விடுதிக்கு முன்பாக பங்குப் பணியாளரின் ஊர்தியானது நின்றுகொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் ஆயர், தன் செயலரிடம், “பங்குப்பணியாளர் இங்குதான் இருக்கின்றார். அவரை அழைத்து வாருங்கள்” என்றார். செயலரும் ஆயரின் சொல்லுக்குப் பணிந்து, விடுதிக்குள் சென்று, பங்குப் பணியாளரைத் தேடித் பார்த்தார். அவர் ஒரு மூலையில் உட்கார்ந்து குடித்துக்கொண்டிருந்தார். உடனே ஆயரின் செயலர் அவரிடம் சென்று, “ஆயர் உங்களை அழைத்து வரச் சொன்னார்” என்றார். அவரோ விழுந்தடிக்கொண்டு ஆயரிடம் ஓடி வந்தார்.

ஆயர் அந்தப் பங்குப் பணியாளரிடம், “வண்டியைப் பங்கு இல்லத்திற்கு ஓட்டுங்கள்” என்று சொல்ல, அவரும் வண்டியைப் பங்கு இல்லத்திற்கு ஓட்டிக்கொண்டு சென்றார். போகிற வழியில் பங்குப் பணியாளர், ‘ஆயர் என்னைத் தேடி வந்திருக்கின்றார்... அவர் வந்த நேரம் பார்த்து, நான் குடித்துக் கொண்டிருந்திருக்கின்றேன்... இன்றைக்கு எனக்கு என்ன ஆகப் போகிறதோ...?’ என்று பதற்றத்தோடு சென்றார். அவரைத் தொடர்ந்து ஆயரும் அவருடைய செயலரும் தங்களது வண்டியில் சென்றார்கள்.

பங்குப் பணியாளர் பங்கு இல்லத்தை அடைந்ததும், ஆயர் பங்குப் பணியாளரிடம், “இப்பொழுது நான் உங்களிடத்தில் ஒப்புரவு அருளடையாளத்தை மேற்கொள்ளவேண்டும்” என்றார். இதைக்கேட்டு அதிர்ந்தவராய் பங்குப் பணியாளர் ஆயரிடம், “ஆயரே! நீங்களா என்னிடத்தில் ஒப்புரவு அருளடையாளத்தை மேற்கொள்ளப் போகிறீர்கள்...?” என்றார். “ஆமாம், நான்தான் உங்களிடத்தில் ஒப்புரவு அருளடையாளத்தை மேற்கொள்ளப் போகிறேன்” என்றார். பின்னர் அந்தப் பங்குப் பணியாளர் ஆயருக்கு ஒப்புரவு அருளடையாளம் வழங்க, ஆயர் அவருக்கு நன்றிசொல்லிவிட்டுத் தன்னுடைய இல்லத்திற்குத் திரும்பினார்.

வரும் வழியில், நடந்த எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த ஆயரின் செயலர் அவரிடம், “ஆயர்ப் பெருந்தகையே! குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி, பலருக்கு துன்மாதிரியாக இருக்கும் அந்தப் பங்குப் பணியாளரை நீங்கள் கண்டிப்பீர்கள் என்று நினைத்தேன். நீங்களோ அவரிடம் ஒப்புரவு அருளடையாளம் மேற்கொண்டுவிட்டு வந்திருக்கின்றீர்களே!” என்றார். அதற்கு ஆயர் தன் செயலரிடம், “அவர் குடிகாரர்... பாவி என்று தீர்ப்பிடுவதற்கு நான் யார்...? கடவுளைத் தவிர வேறு யாருக்கும் தீர்ப்பளிக்கும் அதிகாரம் இல்லாதபொழுது, நான் அவரைத் தீர்ப்பிடுவது சரியாகுமா...? மேலும் நான் அவரிடம் ஒப்புரம் அருளடையாளம் மேற்கொண்டிருப்பதால், அவர் ‘ஆயரே என்னிடம் ஒப்புரவு அருளடையாளம் மேற்கொண்டுவிட்டுப் போயிருக்கின்றார் என்றால், நான் எப்படி இருக்கவேண்டும்...?’ என்று தன்னுடைய வாழ்வை ஆய்வுக்கு உட்படுத்திப் பார்ப்பார்” என்றார்.

ஆயர் தன்னுடைய செயலரிடம் சொன்னதுபோன்றே குடிக்கு அடிமையான அந்தப் பங்குப் பணியாளர் தனது வாழ்வை ஆய்வுக்கு உட்படுத்திப் பார்த்து, ஒருசிலர் மாதங்களிலேயே குடிப்பழக்கத்திலிருந்து விடுதலையானார்.

ஆம். திருத்தத்தை இருபத்து மூன்றாம் யோவான் ஆயராக இருந்தபொழுது, குடிப்பழக்கத்திற்கு அடிமையாயிருந்த பங்குப் பணியாளரைத் தீர்ப்பிடவில்லை; மாறாக அவரை வேறொரு வழியில் நல்வழிக்குக் கொண்டு வந்தார். இன்றைய முதல் வாசகத்தில் பவுல் யாரும் யாரையும் தீர்ப்பளிக்கக்கூடாது. ஏனெனில் தீர்ப்பு வழங்குபவர் ஆண்டவர் ஒருவரே என்கின்றார். புனித பவுல் சொல்லக்கூடிய இந்த வார்த்தைகளின் பொருள் என்ன என்பதை இப்பொழுது நாம் சிந்தித்துப் பாப்போம்.

தீர்ப்பு வழங்குபவர் மனிதர் அல்ல; ஆண்டவர்

கொரிந்து நகர்த் திருஅவையில் இருந்த ஒருசிலர், கிறிஸ்துவின் ஊழியர்களாக இருந்து, கடவுளின் மறை உண்மையை அறிவித்த பவுல், அப்பொல்லோ, கேபா ஆகியோரைத் தீர்ப்பிடத் தொடங்கினார்கள். அவர்களுக்குப் பதிலளிக்கும் வகையில், புனித பவுல் இன்றைய முதல் வாசகத்தில் இடம்பெறும் வார்த்தைகளை எழுதுகின்றார்.

“என்னைப் பற்றி மக்களின் நீதிமன்றமோ தீர்ப்பளித்தால், அதைப் பற்றிச் சிறிதும் கவலைப்படமாட்டேன்” என்று சொல்லும் புனித பவுல், “எனக்குத் தீர்ப்பு வழங்குபவர் ஆண்டவர் ஒருவரே” என்கின்றார். ஆண்டவருக்குத்தான் தீர்ப்பளிக்கும் அதிகாரம் இருப்பதால், யாருக்கும் யாரையும் தீர்ப்பளிப்பதற்கு அதிகாரம் கிடையாது. இந்த உண்மையைத்தான் பவுல் கொரிந்து நகரில் இருந்த மக்களிடம் எடுத்துச் சொல்கின்றார். கடவுளுக்கு மட்டுமே தீர்ப்பளிக்கும் அதிகாரம் இருக்கின்றபொழுது, நாம் அடுத்தவரை எந்தவோர் ஆதாரமும் இல்லாமல் தீர்ப்பிடுவது தகுமா? சிந்திப்போம்.


சிந்தனை

‘பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள்’ (மத் 7: 1) என்பார் இயேசு. ஆகையால், நாம் யாரையும் தீர்ப்பிட்டுக் கொண்டிருக்காமல், அடுத்தவரிடம் இருக்கும் நல்ல பண்புகளைக் கண்டு, அவற்றைப் பாராட்டக் கற்றுக்கொள்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

-----------------

லூக்கா 5: 33-39

“பரிசேயர்களின் பழைய சட்டமும், இயேசுவின் புதிய சட்டமும்”


நிகழ்வு

ஒரு நகரில் ஜான், பெர்னார்டு என்ற இரண்டு மனநல மருத்துவர்கள் இருந்தார்கள்; இரண்டு பேருமே நெருங்கிய நண்பர்கள். ஒருநாள் இருவரும் ஜானுக்குச் சொந்தமான மருத்துவமனையில் பேசிக்கொண்டிருக்கும்பொழுது ஜான், தன் நண்பன் பெர்னார்டைப் பார்த்து, “மனிதர்களில் பலர் செம்மறியாட்டுக் கூட்டம் போன்றவர்கள். ஒருவர் ஒரு செயலைச் செய்தால், அதை மற்றவர் எந்தவொரு கேள்வியும் கேட்காமல் அப்படியே செய்வார்” என்றார்.

“அப்படியா?!” என்று கேட்ட பெர்னார்டிடம், “ஆமாம், நீ வேண்டுமானால் பார்” என்று சொல்லிவிட்டு, “அடுத்த நோயாளர் என்னுடைய அறைக்குள் வருவதற்கு முன்பாக நீ என்னுடைய காலைத் தொட்டு வணங்கி, ஒரு நூறு உரூபாய் நோட்டை காலடியில் வைத்துவிட்டுப் போ, அதன்பிறகு என்ன நடக்கிறது என்று பார்” என்றார். பெர்னார்டும் தன் நண்பர் தன்னிடம் சொன்னதுபோன்று, அடுத்த நோயாளர், ஜானின் அறைக்குள் நுழைவதற்கு முன்பாக, அவருடைய காலைத் தொட்டு வணங்கி, நூறு உரூபாயை வைத்துவிட்டுப் போனார்.

பெர்னார்டு அங்கிருந்து போன பிறகு உள்ளே வந்த ஒரே குடும்பத்தைச் சார்ந்த மூவர், மருத்துவர் ஜானிடம் தங்களுடைய பிரச்சனை எடுத்துச் சொல்ல, அவர் அவர்களிடம் அவர்களுடைய பிரச்சனைகள் தீர்வதற்கான வழிகளைச் சொல்லி முடித்ததும், அவர்கள் அவரிடமிருந்து விடைபெறும்பொழுது, அவருடைய காலைத் தொட்டு வணங்கி, ஒரு நூறு உரூபாய் நோட்டை அவரது காலடியில் வைத்தார்கள். இதைப் பார்த்துவிட்டு மருத்துவர் ஜான் அவர்களிடம், “நீங்கள் ஏன் என் காலைத் தொட்டு வணங்கி, நூறு உரூபாயை வைத்தீர்கள்...?” என்று கேட்க, அவர்கள் அவரிடம், “எங்களுக்கு முன்பாக உங்களைப் பார்க்க வந்தவர் இப்படிச் செய்தார். அதைப் பார்த்துவிட்டுத்தான் நாங்கள் இப்படிச் செய்தோம்” என்றார்கள்.

பின்னர் அவர் அவர்களை வெளியே அனுப்பிவிட்டு, தன் நண்பர் பெர்னார்டுவை உள்ளே அழைத்தார். “நடந்த எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதானே இருந்தாய்...! இதிலிருந்தே நாம் தெரிந்துகொள்ளலாம். மனிதர்கள் எப்படிச் செம்மறியாட்டுக் கூட்டம் போன்று, ஒருவர் செய்த செயலை எந்தவொரு கேள்வியும் கேட்காமல், சாத்திர சம்பிரதாதம் என்று அப்படியே செய்கின்றார்கள் என்று” என்றார்.

வேடிக்கையாகச் சொல்லப்பட்ட நிகழ்வாக இருந்தாலும், மனிதர்களாகிய நாம் எப்படி பழக்கவழக்கம், சாத்திர சம்பிரதாயம் என்ற பெயரில் நம் முன்னோர்கள் செய்ததை எந்தவொரு கேள்வியும் கேட்காமல் அப்படியே செய்துகொண்டிருக்கின்றோம் என்பதை இந்த நிகழ்வு நமக்கு உணர்த்துவதாக இருகின்றது. நற்செய்தியில் நோன்பு பற்றிய கேள்வி எழுகின்றபொழுது, இயேசு, “எவரும் புதிய ஆடையிலிருந்து ஒரு துண்டைக் கிழித்து, அதைப் பழைய ஆடையோடு ஒட்டுப் போடுவதில்லை” என்கின்றார். இயேசு சொல்லக்கூடிய இவ்வார்த்தைகளின் பொருள் என்ன என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.


பரிசேயர்களின் பழைய சட்டம்

நற்செய்தியில் இயேசுவிடம் வருகின்ற பரிசேயரும் மறைநூல் அறிஞரும், “யோவானுடைய சீடர்களும், பரிசேயருடைய சீடர்களும் அடிக்கடி நோன்பிருந்து மன்றாடி வருகின்றனர். உம்முடைய சீடரோ உண்பதும் குடிப்பதுமாக இருக்கின்றனரே” என்கின்றார்கள். இக்கேள்விக்கு இயேசு தந்த பதிலைக் குறித்துச் சிந்தித்துப் பார்ப்பதற்கு முன்னர், இஸ்ரயேலில் எப்பொழுதெல்லாம் மக்கள் நோன்பிருந்தார்கள் என்பதைத் தெரிந்துகொள்வோம்.

ஆண்டுக்கொரு முறை பாவப் பரிகார நாளில் மக்கள் நோன்பிருக்க வேண்டும் என்பது மோசேயின் சட்டம் (லேவி 16: 29) ஒருசில முக்கியமான காரணங்களுக்காகவும் மக்கள் நோன்பிருந்தார்கள் (நீத 20: 26; 1அர 21: 27); ஆனால், பரிசேயர்களோ மக்களுக்கு முன்பாகத் தாங்கள் நல்லவர்கள் என்பதைக் காட்டுவதற்காக, வாரம் இருமுறை நோன்பிருந்தார்கள் (லூக் 18: 12); இதைப் பார்த்து யோவானின் சீடர்களும் அடிக்கடி நோன்பிருந்தார்கள். யோவானின் சீடர்கள் மெசியாவின் வருகைக்காக நோன்பிருந்தார்கள்; அவர்கள் மெசியா வந்துகூட தெரியாமல் நோன்பிருந்துதான் இதில் உள்ள நகைமுரண். இப்படித்தான் இருந்தது, பரிசேயர் செய்துவந்த நோன்பு. இதில் இறையன்புக்கோ, பிறரன்புக்கோ எந்தவோர் இடமுமில்லை.


இயேசுவின் புதிய சட்டம்

தாங்கள் நல்லவர்கள் என்பதைக் காட்டுவதற்காக நோன்பு மேற்கொள்ளப்பொழுது, இயேசு, “மணமகன் மணவிருந்தினரோடு இருக்கும்பொழுது, அவர்கள் நோன்பிருப்பதில்லை” என்றும், “எவரும் புதிய ஆடையிலிருந்து ஒரு துண்டைக் கிழித்து அதைப் பழைய ஆடையோடு ஓட்டுப் போட்டுவதில்லை” என்றும் சொல்லி, தான் அன்பு என்ற புதிய சட்டத்தைக் கொண்டுவந்திருக்கின்றேன், அதைப் பழி, பாவம் என்பதை வலியுறுத்தும் பழைய சட்டத்தோடு ஒப்பிடவேண்டாம் என்று குறிப்பிடுகின்றார்.

ஆம், ஆண்டவர் இயேசு ‘சட்டம்’ என்ற பழையதைத் தூக்கி எறிந்துவிட்டு, அன்பு என்ற புதியதைக் கொண்டுவந்திருக்கின்றார். ஆகையால், நாம் சாத்திர சம்பிரதாயங்கள், மரபுகள் என்ற பழமையைப் பற்றிக்கொண்டிருக்காமல், அன்பு என்ற புதிய கட்டளையைக் கடைப்பிடித்து வாழ முயற்சி செய்வோம்.


சிந்தனை

‘அன்பே திருச்சட்டத்தின் நிறைவு’ (உரோ 13: 10) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் பழைமைவாதத்தைப் பற்றிக்கொண்டிருக்காமல், அன்பைப் பற்றிக்கொண்டு அதன்படி வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

-------------------------

 கடவுளிடமிருந்து பாராட்டு பெறுவோமா?


மனிதர்களிய நாம்  பெரும்பாலும் தன்னைத்தானே ஆராய்ந்து பார்த்து மதிப்பிடுகிறோமோ இல்லையோ,

அடுத்திருப்பவருக்கு மதிப்பெண் வழங்க எப்போதும் தயார் நிலையில் இருக்கிறோம். ஆனால் மற்றவருக்கு தீர்ப்பு வழங்கும் போது நம்முடைய மதிப்பைத்தான் அது சுட்டிக்காட்டுகிறது என்பதை மறந்து விடுகிறோம். ஒருவர் மற்றவரை பாராட்டினாலோ அல்லது குறைகூறினாலோ அவர் அந்த செயலின் மூலம் தன் பண்புநலன்களையே பிரதிபலிக்கிறார் என்று உளவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். ஆம்  "நீ சரி, நீ தவறு " என்று நம்முடைய ஆள்காட்டி விரல் பிறரை நோக்கி நீளும் போதெல்லாம் மற்ற நான்கு விரல்களும் நம்மையல்லவா நோக்கி இருக்கின்றன!

மற்ற்வர்களை தீர்ப்பிடும் குணம் ஒருபுறமிருக்க ,அவர்களிடமிருந்து நன்மதிப்பு பெற வேண்டும் என்ற ஆவலும் நம்மில் அதிகம். பலமுறை பிறர் காணவேண்டும் பிறர் நம்மை பாராட்ட வேண்டும்  என்ற ஆசையின் அடிப்படையிலேயே நம் செயல்கள் அமைகின்றன. எதிர்மறையான விமர்சனங்கள் கிடைத்துவிட்டால் சோர்ந்து விடுகிறோம். வாழ்க்கை ஒரு சுழற்சி. நாம் அளித்த தீர்ப்புகள் நம்மை வந்தடைந்தேதீரும். எனவே தான் நம் ஆண்டவர் "தீர்ப்பிடாதே நீ தீர்ப்பிடப்படுவாய்" என்று போதித்தார்.

இன்றைய முதல் வாசகம் புனித பவுல் தன்னுடைய நற்செய்திப்பணியின் உண்மையான நோக்கத்தை உணர்ந்து பணிசெய்பவராக இருக்கிறார் என்பதை மிகத்தெளிவாக சுட்டிக்காட்டுகிறது. கடவுளிடமிருந்து மட்டுமே நன்மதிப்பையும் பாராட்டையும் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கம் உடையவராய் அவர் இருந்தார். அதனால் தான் எனக்கு எதிராக யார் தீர்ப்பளித்தாலும் அதைப்பற்றி கவலைப்பட மாட்டேன் என தைரியமாகக் கூறுகிறார். அவரும் அவரைத் தீர்பிடவில்லை.மாறாக கடவுள் மட்டுமே தன்னைத் தீர்ப்பிட முழுத்தகுதியும் உரிமையும் உடையவர் என்பதில் உறுதியாய் இருந்தார்.

நம்முடைய மனநிலையை இன்று ஆய்வு செய்வோம். பிறர் பாராட்டைப்பெற விரும்பி பல்வேறு காரியங்களை செய்யும் நமக்கு நம்மைப் படைத்த கடவுளின் கண்கள் நம்மை பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றன. நமது நற்செயல்களைப் பாராட்ட காத்துக்கொண்டிருக்கின்றன என்ற உள்ளுணர்வு 

 இருக்கின்றதா?

இன்றைய நற்செய்தி வாசகமும் இதை ஒட்டிய சிந்தனையைத்தான் நமக்கு அளிக்கிறது. பிறர் பாராட்ட வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் நல்லவராய் வாழவது போல காண்பிக்க நமக்குப் பொறுத்தமில்லாத அல்லது நம்மிடமில்லாத பண்புகள் நம்மிடம் உள்ளது போலக் காட்டிக்கொள்வது பழைய ஆடையில் புதிய துணியால் ஒட்டு போடுவதற்கு சமம் என்கிறார் நம் ஆண்டவர் இயேசு.இயேசு வாழ்ந்த காலத்தில் யாருடைய பாராட்டையும் எதிர்பார்க்கவில்லை. யாருடைய தீர்ப்பையும் சட்டை செய்யவில்லை. அவருடைய நோக்கமெல்லாம் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றது மட்டுமே. எனவே தான் "என் அன்பார்ந்த மகன் இவரே" என்று தந்தையும் பாராட்டினார்.

இயேசுவை முழுமையாக பின்பற்றி கடவுளுக்கும் மனிதருக்கும் முன் தூய்மையான உள்நோக்கத்தோடு வாழ்ந்த எல்லாருமே பிறரால் வசை கூறப்பட்டார்கள். தீர்பிடப்பட்டார்கள். ஆனால் அவர்களுடைய. உண்மையான உள்நோக்கத்தை அறிந்த கடவுள் அவர்களை உயர்த்தினார். திருத்தூதர்கள், மறைசாட்சிகள்,புனிதர்கள் அனைவருடைய வாழ்க்கை வரலாறுகளும் இதையே உறுதிசெய்கின்றன.இயேசுவை பெருந்தீனீக்காரன் என்று சொன்ன அதே நாவுகள் அவருடைய சீடர்களையும் உண்கிறார்கள் குடிக்கிறார்கள் என்று வசைபாடியதை நாம் விவிலியத்தில் வாசிக்கிறோம். 

எடுத்துக்காட்டாக நம் கண்முன் வாழ்ந்த அன்னை தெரசா, அவர் பணிவாழ்வின் தொடக்கத்தில் எல்லாராலும் பாராட்டப்படவில்லை. குறை கூறப்பட்டார். தீர்ப்பிடப்பட்டார். அவருடைய பணியையின் உண்மையான நோக்கத்தை அறியாதவர்கள் அவர் மதம் மாற்றுகிறார் என்று பொய்குற்றம் சாட்டினார்கள். ஏன் உதவி கேட்க ஏந்திய கைகளில் காரி உமிழ்ந்தார்கள். அவை எதுவும் அவரை அசைக்கவில்லை. இறுதியில் அவருடைய உள்நோக்கத்தை கண்ட இறைவன் அதை உலகிற்கு வெட்ட வெளிச்சமாக்கினார். மனிதர் மட்டுமா பாராட்டினர். கடவுளும் பாராட்டி அவரை புனித நிலைக்கு உயர்த்திவிட்டார்.

எனவே நாமும் பிறர் பாராட்ட வேண்டும் பிறர் தவறாக தீர்ப்பிடக்கூடாது என்ற மனநிலையையோடு வாழும் வாழ்வை மாற்றுவோம். நம் உள்நோக்கங்கள் கடவுளுக்கு மறைவாயில்லை என்பதை உணர்வோம். இயல்பாக வாழ்வோம். பிறரையும் தீர்ப்பிடாதிருப்போம். கடவுளின் பாராட்டைப்பெறுவோம்.அதற்கான இறையருள் வேண்டுவோம்.


 இறைவேண்டல் 

உள்ளத்தின் நோக்கத்தை ஆராய்ந்து அறியும் இறைவா!

உலகினரின் பாராட்டைப் பெறவும் அவர்களின் குறைப்பேச்சுக்களை பெறாதிருக்கவுமே நாங்கள் பல காரியங்களை செய்கிறோம்.எங்கள் உண்மையான இயல்பை மறைத்து, பொய்யாக வாழ்கிறோம். எங்களை மன்னியும். உம்முடைய கண்கள் எப்போதும் எங்களைக் காண்கின்றன என்ற உணர்வை எங்களுக்குத் தாரும். அதன்படி வாழ்ந்து உமது பாராட்டை பெறுமளவிற்கு நாங்கள் நன்மையைச் செய்ய தேவையான அருள்வரங்களை எம்மீது பொழிந்தருளும் ஆமென்.

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு

---------------------------

“யாருக்கும் தீர்ப்பளிக்க வேண்டாம்”

புனித நிக்கோலாசும் மூன்று பெண்களும்:


ஆர்ஸ் நகரில் புனித ஜான் மரிய வியான்னி பங்குப் பணியாளராக இருந்தபோது அங்கிருந்த ஒருசிலர் மற்றவர்களைப் பற்றி தவறாகப் பேசி, அவர்களைத் தீர்ப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். இதை அறிந்த ஜான் மரிய வியான்னி மிகவும் வருந்தினார். 

இதையடுத்து வந்த ஞாயிற்றுக்கிழமையில், மறையுரையின்போது, அவர், ஆயரான புனித நிக்கோலாசின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வைச் சொன்னார். புனித நிக்கோலாஸ் ஆயராக இருந்த இடத்தில் ஏழை ஒருவர் இருந்தார். அவருக்கு மூன்று பெண் பிள்ளைகள் இருந்தார்கள். அவர் தன்னுடைய மூன்று பெண் பிள்ளைகளையும் வரதட்சணை கொடுத்துக் கட்டிக் கொடுக்க மிகவும் சிரமப்பட்டார். இதை அறிந்த ஆயர் நிக்கோலாஸ் ஒருநாள் நள்ளிரவில் மூன்று தங்கப் பந்துகளை எடுத்துக்கொண்டு, அந்த ஏழையின் வீட்டில் இருந்த சன்னல் வழியாக வீசிவிட்டு வந்துவிட்டார்.

மறுநாள் காலையில், மூன்று தங்கப் பந்துகள் தன்னுடைய வீட்டிற்குள் கிடப்பதைப் பார்த்த அந்த ஏழை மிகவும் மகிழ்ந்து, அவற்றைக் கொண்டு தன்னுடைய மூன்று பெண் பிள்ளைகளின் திருமணத்தை நல்ல முறையில் நடத்தி வைத்தார். 

இந்த நிகழ்வைச் சொல்லிவிட்டு, ஜான் மரிய வியான்னி மறையுரையைக் கேட்டுக் கொண்டிருந்த இறைமக்களிடம், “புனித நிக்கோலாஸ், அந்த ஏழையின் வீட்டிற்கு நள்ளிரவில் எதற்காகப் போனார் என்பது தெரியவில்லை என்றால், அவரைப் பற்றி மக்கள் தவறாகத்தான் நினைக்கக்கூடும். அதைப் போன்றுதான் ஒருவரைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளாமல் அவரைப் பற்றிப் தீர்ப்பிடுவது  முறையில்லை” என்று சொல்லி முடித்தார். இதனால் ஆர்ஸ் நகரில் மற்றவரைப் தீர்ப்பிடும் போக்கு படிப்படியாகக் குறைந்தது. 

ஒருவரைப் பற்றித் தீர்ப்பிடுவதற்கு நமக்கு எந்தவிதத்திலும் தகுதியில்லை. அதைத்தான் மேலே உள்ள நிகழ்வு நமக்கு உணர்த்துகின்றது. இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தையும் நமக்கு இதே செய்தியைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம். 


திருவிவிலியப் பின்னணி:

கொரிந்து நகர் மக்கள் நடுவில் நற்செய்திப் பணியாற்றிய பவுல், அவர்கள்முன் தன்னைப் பெரியவராகக் காட்டிக்கொள்ளவில்லை; பெரியவராகவும் அழைக்கப்பட விரும்பவில்லை. சாதாரண ஒரு கடவுளின் ஊழியராகவே அவர் அழைக்கப்பட விரும்பினார். அதே நேரத்தில் அவர் மக்கள் நீதிமன்றம் தன்னைப் பற்றித் தீர்ப்பளித்தால் அதைப் பற்றிக் கவலைப்படப் போவதில்லை என்றும், தான் யாரையும் தீர்ப்பிடப்போவதில்லை என்றும், ஆண்டவரின் வருகைக்கு முன் யாருக்கும் தீர்ப்பளிக்க வேண்டாம் என்றும் கூறுகின்றார். 

பவுல் இவ்வாறு கூறுவதற்குக் காரணம், ஆண்டவர் ஒருவருக்கு மட்டுமே தீர்ப்பளிக்கும் அதிகாரம் இருக்கிறது என்பதால்! நற்செய்தியில் பரிசேயரும் மறைநூல் அறிஞரும் இயேசுவிடம், யோவானின் சீடரும் பரிசேயர்களின் சீடரும் நோன்பிருக்க, உம்முடைய சீடர் உண்பதும் குடிப்பதுமாக இருக்கின்றார்களே! என்கிறார்கள். 

யூதர்கள் ஆண்டுக்கொருமுறை பாவக் கழுவாய் நாளில் நோன்பிருந்தார்கள் (இச 16: 29-31) இன்னும் ஒருசில தேவைகளுக்காக அவர்கள் நோன்பிருந்தார்கள். ஆனால், அது கட்டாயம் இல்லை. மறைநூல் அறிஞர்களும் பரிசேயர்களும், இயேசுவின் சீடர்கள் நோன்பிருக்கவில்லை என்று அவரிடம் சொல்வது, அவர்களைக் கட்டாயப்படுத்தவது போன்று இருக்கின்றது, அல்லது அவர்கள் நோன்பிருக்காததால் சீடர்களே அல்ல என்று தீர்ப்பிடுவது போன்று இருக்கின்றது. இதனால் இயேசு அவர்களுக்குச் சரியான விளக்கம் தந்து அவர்களை வாயடைக்கின்றார். 

பக்தி முயற்சிகளை மேற்கொள்வது அவரவர் விருப்பம். அப்படி இருக்கையில், அதைச் செய்யாதவர்களை மிகப்பெரிய பாவிகள் போன்று தீர்ப்பிடுவது குற்றம். இந்த உண்மையை உணர்ந்து, கடவுளை நாம் உண்மையாய் வழிபடுவோம், யாரையும் தீர்ப்பிடாதிருப்போம். 


சிந்தனைக்கு:

கடவுள் பலிகளை அல்ல, இரக்கத்தையே விரும்புகின்றார். 

ஒருவரிடம் எதையும் வலிந்து திணிப்பது தவறு. 

நம்மைப் பற்றியே நமக்கு முழுமையாகத் தெரியாதபோது, மற்றவரைப் பற்றி முழுமையாகத் தெரிந்திருக்கவில்லை. அதனால் பிறரைத் தீர்ப்பிடுவது குற்றம்.. 


இறைவாக்கு:

‘...போற்றுதற்குரியவை எவையோ, அவற்றையே மனத்தில் இருந்துங்கள்’ (பிலி 4: 8) என்பார் புனித பவுல். எனவே, நாம் அல்லதை விட்டுவிட்டு நல்லதைப் பற்றிக்கொண்டு வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.     


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.


-----------------------------------------------

திருப்பாடல் 37: 3-4, 5-6, 27-28, 39-40 (39a)

ஆண்டவர் நேர்மையை விரும்புகின்றார்


விவசாயியின் நேர்மை:

நாகை மாவட்டம், வேதாரணயத்திற்கு அருகில் உள்ளது பஞ்சநதிக்குளம் என்ற சிற்றூர். இவ்வூரைச் சேர்ந்தவர் தெட்சிணாமூர்த்தி என்ற விவசாயி. 

இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு, தன் நிலத்தில் விளைந்த நெல்லை அங்குள்ள ‘நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில்’ விற்பனை செய்திருக்கின்றார். அவர்களும் அதற்குரிய பணத்தை அவரது வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைத்திருக்கின்றனர்; ஆனால், தனக்கு வரவேண்டிய பணத்தை விடவும், 1, 30, 042 ரூபாய்க் கூடுதலாக வரவைக்கப்பட்டதை அறிந்த இவர், அப்பணத்தை நாகை மாவட்ட மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்து விட்டார். 

இச்செய்தியை அறிந்த ஒருசில செய்தியாளர்கள் இவரிடம், “எதற்காக அவ்வளவு பணத்தையும் திரும்பிக் கொடுத்தீர்கள்? நீங்களே அதை வைத்திருக்கலாமே?” என்று கேட்டதற்கு அவர் அவர்களிடம், “நாம் உழைத்த பணமே நம்மோடு ஓட்டாதபோது, அரசாங்கப் பணம் எப்படி நம்மோடு ஓட்டும். அதனால்தான் நான் அதை அரசாங்கத்திடம் திருப்பிக் கொடுத்துவிட்டேன்” என்றார். 

தனக்கு வரவேண்டியதை விடவும் கூடுதலாக வந்த பணத்தை அப்படியே திருப்பிக் கொடுத்த தெட்சிணாமூர்த்தி என்ற அந்த விவசாயியின் நேர்மை உண்மையில் நம்மை வியக்க வைக்கின்றது. இன்று நாம் பாடக்கேட்ட பதிலுரைப்பாடல், “ஆண்டவர் நேர்மையை விரும்புகின்றார்” என்ற சிந்தனையைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம். 


திருவிவிலியப் பின்னணி:

‘நல்லவர்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கையில் தீயவர்கள் மகிழ்ச்சியாகவும் ஆடம்பரமாகவும் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்களே, இது என்ன நியதி?’ என்று நாம் பல நேரங்களில் கேள்வி கேட்டிருப்போம். இன்று நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 37 இன் ஆசிரியர் தாவீதுக்கும் இந்தக் கேள்வி ஏற்பட்டது. அதனால் அவர், “தீமை செய்வோரைக் கண்டு மனம் புழுங்காதே; பொல்லாங்கு செய்வோரைக் கண்டு, பொறாமைப்படாதே; ஏனெனில், அவர்கள் புல்லைப் போல் விரைவில் உலர்ந்து போவர்” என்கிறார்.

தீயோரைக் கொண்டு மனம் புழுங்க வேண்டாம்; அவர்கள் புல்லைப் போல் விரைவில் உணர்ந்து போவர் என்று சொல்லும் தாவீது, ஆண்டவரையே நம்பி, நல்லதையும் நேர்மையானதையும் செய். ஏனெனில், ஆண்டவர் நேர்மையை விரும்புகின்றார் என்கிறார். அப்படியானால், மற்றவர் தீமை செய்தபோதும் மகிழ்ச்சியாக இருக்கின்றார்களே என்பதை நினைத்து நாம் மனம் புழுங்காமல், நேர்மையானதைச் செய்ய வேண்டும். ஏனெனில், நேர்மையாளருக்கு ஆண்டவரிடமிருந்து மீட்பு வருகின்றது. 

ஆகவே, நாம் நேர்மையானதைச் செய்து, கடவுள் தரும் ஆசிகளைப் பெற்று மகிழ்வோம். 


சிந்தனைக்கு:

பொல்லார் ஆண்டவர் முன் நிலைத்திருப்பதில்லை; நேர்மையாளரே ஆண்டவர் முன் நிலைத்திருப்பர். 

நேர்மையாளருக்கு பல ஆபத்துகள் வந்திடினும், ஆண்டவர் அவர்களைக் கைவிடுவதில்லை. 

கடவுள் ஒவ்வொருவருக்கும் அவரவர் செயலுக்கேற்ப தக்க கைம்மாறு அளிப்பார். 


இறைவாக்கு:

‘நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்’ (திபா 1:6) என்பார் திருப்பாடல் ஆசிரியர். எனவே, நாம் எத்தகைய இடர் வரினும் நேரிய வழியில் நடந்து, இயேசுவுக்குச் சான்று பகர்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம். 

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Join with us 👇

Website: https://catholicvoicecv.blogspot.com

Youtube: https://www.youtube.com/channel/UCcgIiK1gUEqRCmTsc7ZjAoA

Youtube: https://www.youtube.com/channel/UCxBBHQAKIjii_MsZfIYNF5A

Facebookhttps://www.facebook.com/Catholic-Voice-108151311955076

Instagram:https://www.instagram.com/invites/contact/?i=16mmdwn460k8p&utm_content=p6lg283

WhatsApp: https://chat.whatsapp.com/G5K3erwXGiJ4VWuBVUvCnz

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (28-06-2025)

    முதல் வாசகம் தொடக்க நூலிலிருந்து வாசகம் 18: 1-15 அந்நாள்களில் ஆண்டவர் மம்ரே என்ற இடத்தில் தேவதாரு மரங்கள் அருகே ஆபிரகாமுக்குத் தோன்றினார...