Showing posts with label திருவருகைக்காலம் III. Show all posts
Showing posts with label திருவருகைக்காலம் III. Show all posts

Friday, December 16, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (17-12-2022)

திருவருகைக் கால வார நாள்கள் - டிசம்பர் 17

முதல் வாசகம்

யூதாவை விட்டுச் செங்கோல் நீங்காது.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 49: 1-2, 8-10

யாக்கோபு தம் புதல்வர்களை வரவழைத்துக் கூறியது: என்னைச் சுற்றி நில்லுங்கள். வரவிருக்கும் நாள்களில் உங்களுக்கு நிகழ இருப்பதை நான் அறிவிக்கப்போகிறேன். கூடிவந்து உற்றுக்கேளுங்கள்; யாக்கோபின் புதல்வர்களே! உங்கள் தந்தையாகிய இஸ்ரயேலுக்குச் செவிகொடுங்கள்.

யூதா! உன் உடன்பிறந்தோர் உன்னைப் புகழ்வர். உன் கை உன் எதிரிகளின் கழுத்தில் இருக்கும். உன் தந்தையின் புதல்வர் உன்னை வணங்குவர். யூதா! நீ ஒரு சிங்கக்குட்டி, என் மகனே, இரை கவர்ந்து வந்துள்ளாய்! ஆண் சிங்கமென, பெண் சிங்கமென அவன் கால் மடக்கிப் படுப்பான்; அவன் துயில் கலைக்கத் துணிந்தவன் எவன்? அரசுரிமை உடையவர் வரும்வரையில், மக்களினங்கள் அவருக்குப் பணிந்திடும் வரையில், யூதாவைவிட்டுச் செங்கோல் நீங்காது; அவன் மரபைவிட்டுக் கொற்றம் மறையாது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 72: 1-2. 3-4ab. 7-8. 17 (பல்லவி: 7b)

பல்லவி: ஆண்டவருடைய சமாதானம் என்றென்றும் நிலவுவதாக.

1
கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்; அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும்.
2
அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக! - பல்லவி

3
மலைகள் மக்களுக்குச் சமாதானத்தைக் கொடுக்கட்டும்; குன்றுகள் நீதியை விளைவிக்கட்டும்.
4ab
எளியோரின் மக்களுக்கு அவர் நீதி வழங்குவாராக! ஏழைகளின் பிள்ளைகளைக் காப்பாராக. - பல்லவி

7
அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக; நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக.
8
ஒரு கடலிலிருந்து அடுத்த கடல்வரைக்கும் அவர் ஆட்சி செலுத்துவார்; பேராற்றிலிருந்து உலகின் எல்லை வரைக்கும் அவர் அரசாள்வார். - பல்லவி

17
அவர் பெயர் என்றென்றும் நிலைத்திருப்பதாக! கதிரவன் உள்ளவரையில் அவர் பெயர் நிலைப்பதாக! அவர் மூலம் மனிதர் ஆசிபெற விழைவராக! எல்லா நாட்டினரும் அவரை நற்பேறு பெற்றவரென வாழ்த்துவராக! - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! உன்னதரின் ஞானமே, ஆற்றலுடன் அனைத்தையும் அன்பாய் நடத்துகின்றவரே, எங்களுக்கு உண்மையின் வழி காட்ட வந்தருளும். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

இயேசு கிறிஸ்துவின் தலைமுறை அட்டவணை.

 மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 1-17

தாவீதின் மகனும் ஆபிரகாமின் மகனுமான இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியல்:

ஆபிரகாமின் மகன் ஈசாக்கு; ஈசாக்கின் மகன் யாக்கோபு; யாக்கோபின் புதல்வர்கள் யூதாவும் அவர் சகோதரர்களும். யூதாவுக்கும் தாமாருக்கும் பிறந்த புதல்வர்கள் பெரேட்சும் செராகும்; பெரேட்சின் மகன் எட்சரோன்; எட்சரோனின் மகன் இராம். இராமின் மகன் அம்மினதாபு; அம்மினதாபின் மகன் நகசோன்; நகசோனின் மகன் சல்மோன். சல்மோனுக்கும் இராகாபுக்கும் பிறந்த மகன் போவாசு; போவாசுக்கும் ரூத்துக்கும் பிறந்த மகன் ஓபேது; ஓபேதின் மகன் ஈசாய். ஈசாயின் மகன் தாவீது அரசர்.

தாவீதுக்கு உரியாவின் மனைவியிடம் பிறந்த மகன் சாலமோன். சாலமோனின் மகன் ரெகபயாம்; ரெகபயாமின் மகன் அபியாம்; அபியாமின் மகன் ஆசா. ஆசாவின் மகன் யோசபாத்து; யோசபாத்தின் மகன் யோராம்; யோராமின் மகன் உசியா. உசியாவின் மகன் யோத்தாம்; யோத்தாமின் மகன் ஆகாசு; ஆகாசின் மகன் எசேக்கியா. எசேக்கியாவின் மகன் மனாசே; மனாசேயின் மகன் ஆமோன்; ஆமோனின் மகன் யோசியா. யோசியாவின் புதல்வர்கள் எக்கோனியாவும் அவர் சகோதரர்களும். இவர்கள் காலத்தில்தான் யூதர்கள் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டார்கள்.

பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்ட பின்பு எக்கோனியாவுக்குப் பிறந்த மகன் செயல்தியேல்; செயல்தியேலின் மகன் செருபாபேல். செருபாபேலின் மகன் அபியூது; அபியூதின் மகன் எலியாக்கிம்; எலியாக்கிமின் மகன் அசோர். அசோரின் மகன் சாதோக்கு; சாதோக்கின் மகன் ஆக்கிம்; ஆக்கிமின் மகன் எலியூது. எலியூதின் மகன் எலயாசர்; எலயாசரின் மகன் மாத்தான்; மாத்தானின் மகன் யாக்கோபு. யாக்கோபின் மகன் மரியாவின் கணவர் யோசேப்பு. மரியாவிடம் பிறந்தவரே கிறிஸ்து என்னும் இயேசு.

ஆக மொத்தம் ஆபிரகாம் முதல் தாவீதுவரை தலைமுறைகள் பதினான்கு; தாவீது முதல் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவர்கள் வரை தலைமுறைகள் பதினான்கு; பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவர்கள் முதல் கிறிஸ்துவரை தலைமுறைகள் பதினான்கு.

ஆண்டவரின் அருள்வாக்கு.


மீட்புத்திட்டத்தில் நம் பெயரும் உள்ளது! | குழந்தைஇயேசு பாபு 

கிறிஸ்மஸ் விழாவை நாம் நெருங்கிக் கொண்டிருக்கிற தருணத்தில் இன்று நாம் இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியலை நற்செய்தி வாசகத்தில் நாம் தியானிக்கிறோம். யூதாவின் குலத்தை விட்டு செங்கோல் என்றும் நீங்காது என்ற தந்தையின் வாக்குறுதி இயேசுவின் மூலம் நிறைவேற்றப்படுவதை இம்மூதாதையர் பட்டியல் நமக்கு விளக்குகிறது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இறைவன் கொடுத்த வாக்கை காப்பாற்றுபவராக இருக்கிறார் என்பதை இவ்வாசகப்பகுதி நமக்கு அறுதியிட்டுக் கூறுகிறது. அதாவது 42 தலைமுறைகளாக தன் வாக்குறுதியைக் காப்பாற்றி இறைவன் தன் தனித்தன்மையை தன் உண்மைத் தன்மையை உடன்படிக்கை தவறா நிலையை நிலைநாட்டுகிறார்.

நாமும்  விண்ணகத் தந்தையின் பிள்ளைகளாக கொடுத்த வாக்கை  தவறாது நிறைவேற்றி நமது உண்மைத் தன்மையை உலகிற்கு உணர்த்த கடமைப்பட்டுள்ளோம் என்பதை உணர்ந்து வாழவேண்டும்.

அத்தோடு நாம் இந்நற்செய்தி பகுதியை தியானிப்பதால் பெறுகின்ற மற்றொரு முக்கியமான சிந்தனை "நமது பெயரும் மீட்புத் திட்டத்தில் எழுதப்பட்டுள்ளது" என்பதே. இந்நற்செய்தி பகுதியில் ஏற்கனவே நாம் கூறியுள்ளதைப் போல மூன்று முறை பதினான்கு தலைமுறைகள் பிரிக்கப்பட்டு பெயர் பட்டியல் தரப்பட்டுள்ளது. இப்படியலிலுள்ள பெயர்களில் அரசர்கள் மற்றும் சில பெண்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளது.குறிப்பிடப்பட்ட எல்லாரும் கடவுளுக்கு ஏற்றமுறையில் வாழ்ந்தவர்கள் அல்ல. ஒருசிலர் தவறான வழியில் நடந்து கடவுளை விட்டகன்றவர்கள். ஆயினும் அவர்களையும் கடவுள் மீட்பின் வரலாற்றில் கருவிகளாகப் பயன்படுத்தி இருக்கிறார்.

கடவுளால் யாரையும் எப்பேற்பட்டவர்களையும் சிறப்பாகப் பயன்படுத்த முடியும். நாமும் அப்படித்தானே? நம்மையும் அவர் கருவிகளாகப் பயன்படுத்த தடையுண்டா என்ன? மீட்பு வரலாறு இன்னும் முடிந்துவிடவில்லை. கடவுள் முடிவே இல்லாதவர். அவர் இருக்கும் வரை மீட்பு வரலாறு தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். அவ்வாறெனில் அவ்வரலாற்றுக்காக நம்மையும் அவர் கருவிகளாகப் பயன்படுத்துவார் என்பதில் ஐயமில்லை. 
எனவே நாம் மீட்பு திட்டத்தின் உழைப்பாளிகள் என்பதை உணர்ந்து நம் வாழ்வு பாதையை சரிசெய்ய வேண்டும். 

இறைவனின் மீட்பு திட்டத்தில் நாமும் ஒரு கருவியாக பயன்பட நம்மையே முழுமையாக ஆயத்தப்படுத்துவோம். திருப்பலி,  அருள்சாதனங்கள், இறைவேண்டல், இறைவார்த்தையை வாசித்து தியானித்தல் போன்றவற்றில் முழுமையாக ஈடுபட்டு இறைவனின் அருளை நிறைவாக பெற முயற்சி செய்வோம். பிறரும் இறைவனின் அருளை பெற்று இறைவனின் மீட்பை பெற்றிட வழிகாட்டுவோம். அதுதான் உண்மையான இறையாட்சியின் பாதையில் பயணிப்பதற்கு வழிகாட்டும். அதன் வழியாக மீட்பு திட்டத்தில் நமது பெயரும் இடம் பெறும் அளவுக்கு கடவுளின் முன்னிலையில் நாம் உயர்த்தப்படுவோம்.

 இறைவேண்டல்
வல்லமையுள்ள இறைவா! உமது  மீட்பு திட்டத்தில்   நாங்களும் கருவிகளாக பயன்பட எங்களை வழிநடத்தும். ஆமென்.

அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Tuesday, December 13, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (16-12-2022)

 

திருவருகைக்காலம் 3ஆம் வாரம் - வெள்ளி



முதல் வாசகம்

என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய இறைமன்றாட்டின் வீடு.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 56: 1-3, 6-8

ஆண்டவர் கூறுவது:

நீதியை நிலைநாட்டுங்கள், நேர்மையைக் கடைப்பிடியுங்கள்; நான் வழங்கும் விடுதலை அண்மையில் உள்ளது; நான் அளிக்கும் வெற்றி விரைவில் வெளிப்படும். இவ்வாறு செய்யும் மனிதர் பேறுபெற்றவர்; ஓய்வுநாளைத் தீட்டுப்படுத்தாது கடைப்பிடித்து, எந்தத் தீமையும் செய்யாது தம் கையைக் காத்துக்கொண்டு, இவற்றில் உறுதியாய் இருக்கும் மானிடர் பேறுபெற்றவர். ஆண்டவரோடு தம்மை இணைத்துக்கொண்ட பிற இனத்தவர், ‘தம் மக்களிடமிருந்து ஆண்டவர் என்னைப் பிரித்துவிடுவது உறுதி’ என்று சொல்லாதிருக்கட்டும்; அவ்வாறே அண்ணகனும், ‘நான் வெறும் பட்ட மரம்’ என்று கூறாதிருக்கட்டும்.

ஆண்டவருக்குத் திருப்பணி செய்வதற்கும், அவரது பெயர்மீது அன்பு கூர்வதற்கும், அவர்தம் ஊழியராய் இருப்பதற்கும், தங்களை ஆண்டவரோடு இணைத்துக்கொண்டு ஓய்வுநாளைத் தீட்டுப்படுத்தாது கடைப்பிடித்து, தம் உடன்படிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொள்ளும் பிற இன மக்களைக் குறித்து ஆண்டவர் கூறுவது: அவர்களை நான் என் திருமலைக்கு அழைத்து வருவேன்; இறைவேண்டல் செய்யப்படும் என் இல்லத்தில் அவர்களை மகிழச் செய்வேன்; அவர்கள் படைக்கும் எரிபலிகளும் மற்றப் பலிகளும் என் பீடத்தின்மேல் ஏற்றுக் கொள்ளப்படும்; ஏனெனில், என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய ‘இறைமன்றாட்டின் வீடு’ என அழைக்கப்படும்.

சிதறிப்போன இஸ்ரயேல் மக்களை ஒருங்கே சேர்க்கும் என் தலைவராகிய ஆண்டவர் கூறுவது: அவர்களுள் ஏற்கெனவே கூட்டிச் சேர்க்கப்பட்டவர்களோடு ஏனையோரையும் சேர்த்துக்கொள்வேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 67: 1-2. 4. 6-7 (பல்லவி: 3)

பல்லவி: மக்களினத்தார் எல்லாரும் உம்மைப் போற்றிப் புகழ்வார்களாக!

1
கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக!
2
அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்; பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்துகொள்வர். - பல்லவி

4
வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக! ஏனெனில், நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்; உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர். - பல்லவி

6
நானிலம் தன் பலனை ஈந்தது; கடவுள், நம் கடவுள் நமக்கு ஆசி வழங்கினார்.
7
கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லை வரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக! - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே எழுந்தருளி வாரும், எம்மைச் சந்தித்துச் சமாதானம் தாரும்; புனிதம் நிறை உள்ளத்தோடு உம் திருமுன் மகிழ்வோமாக. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

யோவான் எரிந்து சுடர்விடும் விளக்கு.

 யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 33-36

அக்காலத்தில்

இயேசு யூதர்களை நோக்கிக் கூறியது: “யோவானிடம் ஆளனுப்பி நீங்கள் கேட்டபோது அவரும் உண்மைக்குச் சான்று பகர்ந்தார். மனிதர் தரும் சான்று எனக்குத் தேவை என்பதற்காக அல்ல; நீங்கள் மீட்புப் பெறுவதற்காகவே இதைச் சொல்கிறேன். யோவான் எரிந்து சுடர்விடும் விளக்கு. நீங்கள் சிறிது நேரமே அவரது ஒளியில் களிகூர விரும்பினீர்கள்.

யோவான் பகர்ந்த சான்றை விட மேலான சான்று எனக்கு உண்டு. நான் செய்து முடிக்குமாறு தந்தை என்னிடம் ஒப்படைத்துள்ள செயல்களே அச்சான்று. நான் செய்துவரும் அச்செயல்களே தந்தை என்னை அனுப்பியுள்ளார் என்பதற்கான சான்றாகும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.



 கடவுள் உலகனைத்தையும் அன்பு செய்கிறார் !


சில வருடங்களுக்கு முன்பு நமது கிறிஸ்தவ நிறுவனங்களில் நடைபெறும் எல்லா நிகழ்வுகளிலும் இந்தப் பாடலுக்கு நடனமாடினார்கள். அப்பாடலின் வரிகள் இவ்வாறாக அமையும். "சாமி பொதுவான சாமி. இயேசு சாமி பொதுவான சாமி "

இப்பாடலின் வரிகள் முதலில் கேட்பதற்கு ஏதோ கிராமிய நடையில் வேடிக்கையாக இருப்பது போல தோன்றும். ஆனால் இவ்வரிகள் எவ்வளவு பெரிய உண்மையை உலகிற்கு உணர்த்துகிறது தெரியுமா? தந்தையாம் கடவுளும் அவரின் ஒட்டுமொத்த சாயலாக உலகில் வந்துதித்த இயேசுவும் பாரபட்சமின்றி எல்லா மனிதரையும் அன்பு செய்பவர்கள் என்ற கருத்தை மிகத் தெளிவாக உணர்த்துகிறது.


இன்றைய முதல் வாசகமும் இதே கருத்தைதான் நமக்குச் சொல்கிறது. தன்னை நோக்கி வருபவர்கள், தன்னிடம் செபிப்பவர்கள், தூய மனதோடு கடவுளோடு தங்களை இணைத்துக்கொண்டு அவருக்கு பலிசெலுத்துபவர்கள் யாராயிருந்தாலும் அவர்களை மகிழச்செய்வதாகவும் ,அவர்களை தன் திருமலையில் கூட்டிச்சேர்ப்பதாகவும் கடவுள் இறைவாக்கினர் எசாயா மூலமாக வாக்களிக்கிறார்.

பிற இனத்தாரை பாவிகள் என்றும் கடவுளுக்கு உகந்தோர் அல்ல என்றும் எண்ணிக்கொண்டிவர்களுக்கு கடவுள் தான் அனைவருக்கும் பொதுவானவர் என்று "என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய ‘இறைமன்றாட்டின் வீடு’ " என்ற வார்த்தைகளால் உறுதிப்படுத்தியுள்ளார்.


இன்றைய நற்செய்தியில் இயேசுவும் தான் தந்தையால் அனுப்பப்பட்டவர் என்பதற்கு தன்னுடைய செயல்களே சான்று என்கிறார். ஆம் தந்தையைப் போலவே இயேசுவும் அனைவருக்கும் பொதுவானவராகவே விளங்கினார். அனைவரையும் அரவணைத்தார். மனந்திரும்பி வந்த பாவிகளை ஏற்றுக்கொண்டார். நம்பிக்கை கொண்ட பிற இனத்தாரைப் பாராட்டினார்.பெண்களை தனக்கு சீடர்களாக வைத்துக்கொண்டார். விண்ணசிற்கு முன்னுதாரணமாய் சிறுவர்களைக் காட்டினார். "உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை அறிவியுங்கள் "என்று இனம், மதம், குலம், மொழி போன்ற எல்லைகளைத் தாண்டி தன்னன்பை பகிர அனைவருக்கும் பகிர சீடர்களுக்குக் கட்டையிட்டார். இவ்வாறு தந்தைதான் தன்னை அனுப்பினார் என்பதை இயேசு உறுதிசெய்தார்.


தந்தை கடவுளைப்போலவும் இயேசுவைப் போலவும் நாமும் அனைவருக்கும் பொதுவானவர்களாக பாரபட்சமில்லா அன்பை பொழிபவர்களாக மாற முயற்சிசெய்ய வேண்டும். இச்செயலே நாம் கிறிஸ்தவர்கள் என்பதற்கு சான்று பகரும். அனைவரையும் அன்பு செய்யும் கடவுளைப்போல நாமும் அனைவரோடும் அன்பைப் பகிர்வோம். ஏற்றுக்கொள்வோம். அவருக்கு சான்று பகர்வோம்.


 இறைவேண்டல்

அன்பே இறைவா! நீர் அனைவரையும் ஏற்றுக்கொண்டு பொதுவானவராய் இருப்பது போல நாங்களும் மாற உதவிபுரியும். ஆமென்.


அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (15-12-2022)

 

திருவருகைக்காலம் 3ஆம் வாரம் - வியாழன்



முதல் வாசகம்

கைவிடப்பட்டு மனமுடைந்துபோன துணைவிபோல் இருக்கும் உன்னை ஆண்டவர் அழைத்துள்ளார்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 54: 1-10

பிள்ளை பெறாத மலடியே, மகிழ்ந்து பாடு; பேறுகால வேதனை அறியாதவளே, அக்களித்துப் பாடி முழங்கு; ஏனெனில் கைவிடப் பட்டவளின் பிள்ளைகள் கணவனோடு வாழ்பவளின் பிள்ளைகளைவிட ஏராளமானவர்கள், என்கிறார் ஆண்டவர். உன் கூடாரத்தின் இடத்தை விரிவாக்கு; உன் குடியிருப்புகளின் தொங்கு திரைகளைப் பரப்பிவிடு; உன் கயிறுகளைத் தாராளமாய் நீட்டிவிடு; உன் முளைகளை உறுதிப்படுத்து. வலப்புறமும் இடப்புறமும் நீ விரிந்து பரவுவாய்; உன் வழிமரபினர் வேற்றுநாடுகளை உடைமையாக்கிக்கொள்வர்; பாழடைந்து கிடக்கும் நகர்களிலும் அவர்கள் குடியேற்றப்படுவர்.

அஞ்சாதே, நீ அவமானத்திற்கு உள்ளாகமாட்டாய்; வெட்கி நாணாதே, இனி நீ இழிவாக நடத்தப்படமாட்டாய்; உன் இளமையின் மானக்கேட்டை நீ மறந்துவிடுவாய்; உன் கைம்மையின் இழிநிலையை இனி நினைக்க மாட்டாய். ஏனெனில், உன்னை உருவாக்கியவரே உன் கணவர், ‘படைகளின் ஆண்டவர்’ என்பது அவர்தம் பெயராம். இஸ்ரயேலின் தூயவரே உன் மீட்பர்; ‘உலக முழுமைக்கும் கடவுள்’ என அவர் அழைக்கப்படுகின்றார்.

ஏனெனில், கைவிடப்பட்டு மனமுடைந்துபோன துணைவிபோலும், தள்ளப்பட்ட இளம் மனைவிபோலும் இருக்கும் உன்னை ஆண்டவர் அழைத்துள்ளார், என்கிறார் உன் கடவுள். நொடிப்பொழுதே நான் உன்னைக் கைவிட்டேன்; ஆயினும் பேரிரக்கத்தால் உன்னை மீண்டும் ஏற்றுக்கொள்வேன்.

பொங்கியெழும் சீற்றத்தால் இமைப்பொழுதே என் முகத்தை உனக்கு மறைத்தேன்; ஆயினும் என்றும் உள்ள பேரன்பால் உனக்கு இரக்கம் காட்டுவேன், என்கிறார் ஆண்டவர்.

எனக்கு இது நோவாவின் நாள்களில் நடந்ததுபோல் உள்ளது; நோவாவின் காலத்துப் பெருவெள்ளம் இனி மண்ணுலகின்மேல் பாய்ந்து வராது என்று நான் ஆணையிட்டேன்; அவ்வாறே உன்மீதும் சீற்றம் அடையமாட்டேன் என்றும், உன்னைக் கண்டிக்கமாட்டேன் என்றும் ஆணையிட்டுக் கூறியுள்ளேன். மலைகள் நிலை சாயினும் குன்றுகள் இடம் பெயரினும் உன்மீது நான் கொண்ட பேரன்போ நிலை சாயாது; என் சமாதான உடன்படிக்கையோ அசைவுறாது, என்கிறார் உனக்கு இரக்கம் காட்டும் ஆண்டவர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 30: 1,3. 4-5. 10,11a,12b (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கிவிட்டீர்;

1
ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கிவிட்டீர்; என்னைக் கண்டு என் பகைவர் மகிழ நீர் விடவில்லை.
3
ஆண்டவரே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தீர்; சாவுக்குழியில் இறங்கிய எனது உயிரைக் காத்தீர். - பல்லவி

4
இறையன்பரே, ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; தூயவராம் அவரை நினைந்து நன்றி கூறுங்கள்.
5
அவரது சினம் ஒரு நொடிப் பொழுதுதான் இருக்கும்; அவரது கருணையோ வாழ்நாள் முழுதும் நீடிக்கும்; மாலையில் அழுகை; காலையிலோ ஆர்ப்பரிப்பு. - பல்லவி

10
ஆண்டவரே, எனக்குச் செவிசாயும்; என்மீது இரங்கும்; ஆண்டவரே, எனக்குத் துணையாய் இரும்.
11a
நீர் என் புலம்பலைக் களிநடனமாக மாற்றிவிட்டீர்;
12b
என் கடவுளாகிய ஆண்டவரே, உமக்கு என்றென்றும் நன்றி செலுத்துவேன். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 3: 4, 6

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்; மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

திருமுழுக்கு யோவான் ஆண்டவர் வழியை ஆயத்தம் செய்யும் தூதர்.

 லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 24-30

யோவானிடமிருந்து வந்த தூதர்கள் திரும்பிச் சென்ற பிறகு, இயேசு மக்கள் கூட்டத்திடம் யோவானைப் பற்றிப் பேசத் தொடங்கினார்: “நீங்கள் எதைப் பார்க்கப் பாலைநிலத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையா? இல்லையேல் யாரைப் பார்க்கப் போனீர்கள்? மெல்லிய ஆடை அணிந்த ஒரு மனிதரையா? பளிச்சிடும் ஆடை அணிந்து செல்வச் செழிப்பில் வாழ்வோர் அரச மாளிகைகளில் அல்லவா இருக்கின்றனர்! பின்னர் யாரைத்தான் பார்க்கப் போனீர்கள்? இறைவாக்கினரையா? ஆம், இறைவாக்கினரை விட மேலானவரையே என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

‘இதோ! என் தூதனை உமக்குமுன் அனுப்புகிறேன். அவர் உமக்குமுன் உமது வழியை ஆயத்தம் செய்வார்’ என இவரைப் பற்றித்தான் மறைநூலில் எழுதப்பட்டுள்ளது. மனிதராய்ப் பிறந்தவர்களுள் யோவானை விடப் பெரியவர் ஒருவருமில்லை. ஆயினும் இறையாட்சிக்கு உட்பட்டோருள் மிகச் சிறியவரும் அவரினும் பெரியவரே என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.”

திரண்டிருந்த மக்கள் அனைவரும் வரிதண்டுவோரும் இதைக் கேட்டு, கடவுளுடைய நீதிநெறியை ஏற்று யோவானிடமிருந்து திருமுழுக்குப் பெற்றனர். ஆனால் பரிசேயரும் திருச்சட்ட அறிஞரும் அவர் கொடுத்த திருமுழுக்கைப் பெறாது, தங்களுக்கென்று கடவுள் வகுத்திருந்த திட்டத்தைப் புறக்கணித்தார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


திருவருகை காலம்-மூன்றாம் வாரம் வியாழன்

மு.வா: எசா: 54:1-10

ப.பா: திபா: 30:1, 3, 4-5, 10-12

ந.வா: லூக்: 7:24-30


 ஆயத்தம் செய்யுங்கள்


ஒருமுறை எனது ஊரில் வயல் பகுதிகளில் காற்று வாங்குவதற்காக நடந்து கொண்டிருந்தேன். ஒரு வயலை நெருங்கிய பொழுது அங்கு ஆட்டு மந்தைகள் கிடையில் போடப்பட்டிருப்பதைக் கண்டேன். வயலின் உரிமையாளர் அந்த வயலிலுள்ள தேவையற்ற களைகளையெல்லாம் வெட்டி குவித்துக் கொண்டிருந்தார். மேடு தாழ்வு பகுதிகளை சரி செய்து வந்தார். அப்பொழுது அவரிடம் நான் "விவசாயத்தை தொடங்குவதற்கு தான் நாட்கள் இருக்கின்றனவே, இப்பொழுதே ஏன் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். சற்று ஓய்வெடுங்கள் " என்று கூறினேன். அதற்கு அவர் "நான் எந்த அளவுக்கு இந்த மண்ணை ஆயத்தப்படுத்துகிறனோ, அந்த அளவுக்கு விளைச்சல் நிறைவாக கிடைக்கும் "என்று கூறினார்.


ஆயத்தம் என்பது நம்முடைய வாழ்க்கையில் முக்கியமான ஒன்றாகும். படிக்கின்ற மாணவர்கள் தேர்விற்காக தங்களை ஆயத்தப்படுத்த வேண்டும்.அப்பொழுது தான் தேர்வில் வெற்றி பெற முடியும். ஓட்டுநர் பணி செய்கின்ற ஓட்டுநர்கள் தங்களுடைய பயணத்தை தொடங்குவதற்கு முன்பாக வாகனத்தை ஆயத்தப்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் எந்த தடையுமின்றி பயணத்தை வெற்றியாய் முடிக்க முடியும். கடலுக்குள் மீன் பிடிக்க செல்பவர்கள் தங்களின் வலைகளை ஆயத்தப்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் மீன்களைப் பிடிக்க அது உதவும் கருவியாக இருக்கும். மழைநீரை சேகரிக்க ஏரி, குளங்கள், கண்மாய்களை ஆயத்தப்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் பயன்பாட்டிற்கு தேவையான தண்ணீரைச் சேமித்து வைக்க முடியும். இவ்வாறாக ஆயத்தம் என்ற வார்த்தைக்கு உதாரணங்களை நம்முடைய வாழ்வோடு ஒப்பிட்டு வகைப்படுத்த முடியும்.


திருவருகைக் காலம் ஆண்டவரின் இரண்டாம் வருகைக்காகவும் கிறிஸ்து பிறப்பு விழாவை கொண்டாடுவதற்காகவும் நம்மையே ஆயத்தப்படுத்த கொடுக்கப்பட்ட ஒப்பற்ற காலம். இந்த காலத்தில் நம்மையே முழுமையாக ஆயத்தப்படுத்த முயற்சி செய்வோம். இந்த உலகம் சார்ந்த காரியங்களுக்கே அதிகமாக முக்கியத்துவம் கொடுத்து ஆயத்தப்படுத்தக் கூடிய நாம், நம்மை மீட்க நம்மை நோக்கி வரும் ஆண்டவர் வருகைக்காக நம்மை ஆயத்தப்படுத்த வேண்டாமா?


நாம் கடவுளின் வருகைக்காக நம்முடைய உள்ளத்தையும் வாழ்வையும் ஆன்மாவையும் ஆயத்தப்படுத்தும் பொழுது நாம் கடவுளால் வாழ்த்த பெறுவோம். அதற்கு மிகச் சிறந்த உதாரணம் திருமுழுக்கு யோவானை ஆண்டவர் இயேசு பாராட்டியது. "மனிதராய்ப் பிறந்தவர்களுள் யோவானைவிடப் பெரியவர் ஒருவருமில்லை.ஆயினும் இறையாட்சிக்கு உட்பட்டோருள் மிகச் சிறியவரும் அவரினும் பெரியவரே" என ஆண்டவர் இயேசு கூறியுள்ளார். எனவே திருமுழுக்கு யோவானைப் போல நம்மையும் பிறரையும் ஆண்டவருடைய வருகைக்காக தாழ்ச்சியான இறை நம்பிக்கையோடு ஆயத்தப்படுத்த முயற்சி செய்வோம். அப்பொழுது ஆண்டவர் இயேசுவின் இரண்டாம் வருகையும் நாம் கொண்டாடும் இந்த கிறிஸ்து பிறப்பு பெருவிழாவும் பொருள் நிறைந்ததாகவும் ஆசிர்வாதமானதாகவும் அருள் நிறைந்ததாகவும் மகிழ்ச்சி நிறைந்ததாகவும் இருக்கும். எனவே நம்மையே ஆயத்தப்படுத்த முயற்சி செய்வோம்.


அன்றாட கிறிஸ்துவ வாழ்க்கையில் இறைவனின் அருளின் உச்சமாக இருக்கக்கூடிய திருப்பலியில் முழுமையாகப் பங்கெடுப்போம். இறைவனின் அருளைப் பெற அருள்சாதனமாக இருக்கக்கூடிய அருள் சாதனங்களையும் முழுமையான முறையிலே பெற்று இறைவனின் அருளைத் தொடர்ந்து பெற நாமும் பிறரும் முயற்சி செய்வோம். கத்தோலிக்க திரு அவையில் இருக்கக்கூடிய பக்தி முயற்சிகளை சிறப்பாக கடைப்பிடித்து இறைவனின் அருளைப் பெற பயணமாவோம். இப்படிப்பட்ட முன்னெடுப்புகளை நாம் செய்ய முன் வரும் பொழுது நிச்சயமாக கடவுளுடைய அருளும் ஆசிரும் இரக்கமும் நிறைவாக நமக்கு கிடைக்கும். இத்தகைய வழிகளையெல்லாம் பின்பற்றி ஆண்டவரின் வருகைக்காக நம்மையே ஆயத்தப்படுத்த முடியும். அதற்கு தடையாயுள்ள நம் பலவீனங்களையெல்லாம் தூக்கி எறிந்து இறைவனின் அருளுக்காய் தொடர்ந்து மன்றாடுவோம்.


 இறைவேண்டல்

வல்லமையுள்ள இறைவா! உம் திருமகன் இயேசுவை எங்கள் உள்ளத்திலும் வாழ்விலும் இல்லத்திலும் ஏற்றுக்கொள்ள நீரே எங்கள் வாழ்வை புது படைப்பாய் மாற்றியருளும். முழுமையாக எங்களையும் பிறரையும் ஆயத்தப்படுத்தி உம் வருகைக்காக திருமுழுக்கு யோவானைப் போல சான்று பகர அருளைத் தாரும். ஆமென்.


அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (14-12-2022)

 

திருவருகைக்காலம் 3ஆம் வாரம் - புதன்



முதல் வாசகம்

வானங்கள், பனிமழையென வெற்றியை அனுப்பட்டும்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 45: 6b-8, 18, 21b-25

ஆண்டவர் கூறுவதாவது: நானே ஆண்டவர்; வேறு எவரும் இல்லை. நான் ஒளியை உண்டாக்குகிறேன்; இருளைப் படைக்கிறேன்; நல்வாழ்வை அமைப்பவன் நான்; தீமையைப் படைப்பவனும் நானே; இவை அனைத்தையும் செய்யும் ஆண்டவர் நானே. வானங்கள், பனிமழையென வெற்றியை அனுப்பட்டும்; மேகங்கள் மாரியென அதைப் பொழியட்டும்; மண்ணுலகம் வாய்திறந்து விடுதலைக் கனி வழங்கட்டும், அதனுடன் நீதி துளிர்க்கச் செய்யட்டும்; இவற்றைச் செய்பவர் ஆண்டவராகிய நானே.

ஏனெனில் விண்ணுலகைப் படைத்த ஆண்டவர் கூறுவது இதுவே: அவரே கடவுள்; மண்ணுலகைப் படைத்து உருவாக்கியவர் அவரே; அதை நிலைநிறுத்துபவரும் அவரே; வெறுமையாய் இருக்குமாறு படைக்காது, மக்கள் வாழுமாறு அதை உருவாக்கினார்.

ஆண்டவர் நான் அல்லவா? என்னையன்றிக் கடவுள் வேறு எவரும் இல்லை; நீதியுள்ளவரும் மீட்பு அளிப்பவருமான இறைவன் என்னையன்றி வேறு எவரும் இல்லை. மண்ணுலகின் அனைத்து எல்லை நாட்டோரே! என்னிடம் திரும்பி வாருங்கள்; விடுதலை பெறுங்கள்; ஏனெனில் நானே இறைவன்; என்னையன்றி வேறு எவருமில்லை. நான் என்மேல் ஆணையிட்டுள்ளேன்; என் வாயினின்று நீதிநிறை வாக்கு புறப்பட்டுச் சென்றது; அது வீணாகத் திரும்பி வராது; முழங்கால் அனைத்தும் எனக்குமுன் மண்டியிடும்; நா அனைத்தும் என்மேல் ஆணையிடும். ‘ஆண்டவரில் மட்டும் எனக்கு நீதியும் ஆற்றலும் உண்டு’ என்று ஒவ்வொருவனும் சொல்லி அவரிடம் வருவான்; அவருக்கு எதிராகச் சீறி எழுந்தவர் அனைவரும் வெட்கக்கேடு அடைவர். இஸ்ரயேலின் வழி மரபினர் அனைவரும் ஆண்டவரால் ஏற்புடையோராகப்பெற்று அவரைப் போற்றுவர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 85: 8ab-9. 10-11. 12-13 (பல்லவி: எசா 45:8)

பல்லவி: வானங்கள், பனிமழையென வெற்றியை அனுப்பட்டும்.

8ab
ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன்; தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார்;
9
அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு அவரது மீட்பு அண்மையில் உள்ளது என்பது உறுதி; நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும். - பல்லவி

10
பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்; நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும்.
11
மண்ணினின்று உண்மை முளைத்தெழும்; விண்ணினின்று நீதி கீழ்நோக்கும். - பல்லவி

12
நல்லதையே ஆண்டவர் அருள்வார்; நல்விளைவை நம் நாடு நல்கும்.
13
நீதி அவர்முன் செல்லும்; அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

எசா 40: 9-10

அல்லேலூயா, அல்லேலூயா! நற்செய்தி அறிவிப்பவரே, உன் குரலை எழுப்பி, இதோ என் தலைவராகிய ஆண்டவர் ஆற்றலுடன் வருகின்றார் என்று முழங்கிடுவீர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

நீங்கள் கண்டவற்றையும் கேட்டவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள்.

 லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 19-23

அக்காலத்தில்

யோவான் தம் சீடருள் இருவரை வரவழைத்து, “வரவிருப்பவர் நீர்தாமா? அல்லது வேறொருவரை எதிர்பார்க்க வேண்டுமா?” எனக் கேட்க ஆண்டவரிடம் அனுப்பினார். அவர்கள் அவரிடம் வந்து, “ ‘வர இருப்பவர் நீர்தாமா? அல்லது வேறொருவரை எதிர்பார்க்க வேண்டுமா?’ எனக் கேட்கத் திருமுழுக்கு யோவான் எங்களை உம்மிடம் அனுப்பினார்” என்று சொன்னார்கள்.

அந்நேரத்தில் பிணிகளையும் நோய்களையும் பொல்லாத ஆவிகளையும் கொண்டிருந்த பலரை இயேசு குணமாக்கினார்; பார்வையற்ற பலருக்குப் பார்வை அருளினார். அதற்கு அவர் மறுமொழியாக, “நீங்கள் கண்டவற்றையும் கேட்டவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள்; பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர்; கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர்; தொழுநோயாளர் நலமடைகின்றனர்; காது கேளாதோர் கேட்கின்றனர்; இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுகின்றனர்; ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகின்றது. என்னைத் தயக்கம் இன்றி ஏற்றுக்கொள்வோர் பேறுபெற்றோர்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


இன்றைய வாசகங்கள்(14.12.2022)  

திருவருகை காலம்-மூன்றாம் வாரம் புதன்

மு.வா: எசா: 45:6-8, 18, 21-25

ப.பா:  திபா:  85:8-9, 10-11, 12-13

ந.வா: லூக்:  07: 18-23


 இயேசுவைப் போன்று செயல்வீரர்களா நாம்? 


சொல்லும் செயலும் இணைந்து செல்வதே ஒரு மனிதனுக்கு மதிப்பையும் மரியாதையையும் உயர்த்துகின்றது.  ஆனால் நம்மில் பலருடைய வாழ்வில் சொல் முதன்மையாக இருக்கிறதே தவிர செயல்பாட்டில் பொதுவாகவே நாம் அனைவரும் சற்று பின்தங்கி விடுகிறோம். நம் சொற்கள் பல நேரங்களில் நாம் எப்படிப்பட்டவராய் இருக்கப்போகிறோம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிடுகிறது. நம் செயல்கள்தான் அந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து நாம் யார் என்பதை உலகிற்கு உணர்த்துகிறது.

நம் ஆண்டவர் இயேசுவோ சொற்களே தேவையில்லை. செயல்கள் மூலமாக நாம் யார் எனக் காட்டினால் போதும் என்ற கருத்தை நம்முன் வைக்கிறார் இன்று. 


இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுதான் மெசியாவோ?  எனக் கண்டறிய வந்த யோவானின் சீடர்களிடம்  "ஆம்.  நான்தான் மெசியா. நான் இனி செய்யப்போவதை நீங்கள் காண்பீர்கள் " என இயேசு சொல்லவில்லை. மாறாக அவரால் நிகழ்ந்த வல்ல செயல்களை, நல் அடையாளங்களைக் கூறி அவர்களுடைய மனதில் உள்ள தயக்கங்களையும் சந்தேகங்களையும் உடைத்தெறிகிறார் இயேசு. தன் செயல்களில் தன்னை எண்பித்துக்காட்டுகிறார் அவர்.


திருவருகைக்காலத்தில் கிறிஸ்துவின் வருகைக்காக நம்மையே நாம் தயாரித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் நாம் "கிறிஸ்தவர்கள் " என்பதை நாம் எவ்வாறு எண்பித்துக் காட்டப்போகிறோம்?. நம்முடைய சொற்களாலா?  அல்லது இயேசுவைப் போன்று செயல்களாலா? 


"நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்” என்று இயேசு யோவான் 13:35 ல் கூறிகிறார். இங்கே அன்பு என்ற சொல்லுக்கு இணையாக நாம் நற்செயல்கள் என்ற சொல்லை உபயோகித்துப் பார்ப்போம். ஏனென்றால் அன்பிலிருந்தே நற்செயல்கள் தோன்றுகின்றன. அவ்வாறெனில் நாம் ஒருவர் மற்றவருக்கு செய்யும் நற்செயல்களால் இயேசுவின் சீடர்கள் அல்லது கிறிஸ்தவர்கள் என்பதை எண்பித்துக் காட்டுகிறோம் அல்லவா! வீண்சொற்களைக் கொண்டு நான் அப்படிப்பட்டவள், என்னைப் போன்று எவனும் இருக்கமுடியாது எனச் சொல்வதை விட்டுவிட்டு நம்முடைய செயல்களால் கிறிஸ்துவை பிரதிபலித்துக் காட்ட முயல்வோம். அப்போது அனைவரும் நம்மைத் தயக்கமின்றி ஏற்றுகொள்வர் என்பது உறுதி. இயேசுவைப் போல செயல்வீரர்களாக மாற முயலுவோமா?


 இறைவேண்டல் 

அன்பு இயேசுவே!  உம்மைப் போல நாங்களும் வார்த்தை வீரர்களாயன்றி செயல் வீரர்களாய் துலங்கி உம் சீடர்கள் என்பதை எண்பித்துக்காட்ட வரமருளும். ஆமென்.

அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Monday, December 12, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (13-12-2022)

 

திருவருகைக்காலம் 3ஆம் வாரம் - செவ்வாய்



முதல் வாசகம்

மெசியாவின் மீட்பு எளியவர் அனைவர்க்கும் வாக்களிக்கப்படுகிறது.

இறைவாக்கினர் செப்பனியா நூலிலிருந்து வாசகம் 3: 1-2, 9-13

ஆண்டவர் கூறுகிறார்:

கலகம் செய்ததும் தீட்டுப்பட்டதும் மக்களை ஒடுக்கியதுமான நகருக்கு ஐயோ கேடு! எந்தச் சொல்லுக்கும் அவள் செவிசாய்ப்பதில்லை; கண்டிப்புரையை அவள் ஏற்பதுமில்லை; ஆண்டவர்மேல் அவள் நம்பிக்கை வைப்பதில்லை; தன் கடவுளை அண்டி வருவதுமில்லை.

அக்காலத்தில் நான் மக்களினங்களுக்குத் தூய நாவினை அருள்வேன்; அப்போது அவர்கள் அனைவரும் ஆண்டவரின் பெயரால் மன்றாடி ஒருமனப்பட்டு அவருக்குப் பணிபுரிவார்கள். எத்தியோப்பியாவின் ஆறுகளுக்கும் அப்பாலிருந்து என்னை மன்றாடுவோர் - சிதறுண்ட என் மக்கள் - எனக்குக் காணிக்கை கொண்டு வருவார்கள்.

எனக்கு எதிராக எழுந்து நீ செய்த குற்றங்களை முன்னிட்டு அந்நாளில் அவமானம் அடையமாட்டாய்; ஏனெனில், அப்பொழுது இறுமாப்புடன் அக்களித்திருப்போரை உன்னிடமிருந்து அகற்றிவிடுவேன்; இனி ஒருபோதும் எனது திருமலையில் செருக்கு அடையமாட்டாய். ஏழை எளியோரை உன் நடுவில் நான் விட்டுவைப்பேன்; அவர்கள் ஆண்டவரின் பெயரில் நம்பிக்கை கொள்வார்கள்.

இஸ்ரயேலில் எஞ்சியோர் கொடுமை செய்யமாட்டார்கள்; வஞ்சகப் பேச்சு அவர்களது வாயில் வராது; அச்சுறுத்துவார் யாருமின்றி, அவர்கள் மந்தைபோல் மேய்ந்து இளைப்பாறுவார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 34: 1-2. 5-6. 16-17. 18,22 (பல்லவி: 6a)

பல்லவி: இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்.

1
ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும்.
2
நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். - பல்லவி

5
அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை.
6
இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். - பல்லவி

16
ஆண்டவரின் முகமோ தீமைசெய்வோர்க்கு எதிராக இருக்கின்றது; அவர், அவர்களின் நினைவே உலகில் அற்றுப் போகச் செய்வார்.
17
நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்; அவர்களை அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார். - பல்லவி

18
உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்; நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார்.
22
ஆண்டவர் தம் ஊழியரின் உயிரை மீட்கின்றார்; அவரிடம் அடைக்கலம் புகும் எவரும் தண்டனை அடையார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! வாரும், ஆண்டவரே, காலம் தாழ்த்தாதேயும்; உம் மக்களின் பாவங்களைப் போக்கியருளும். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

யோவான் வந்தார்; பாவிகள் அவரை நம்பினார்கள்.

 மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 28-32

அக்காலத்தில்

இயேசு தலைமைக் குருக்களையும் மக்களின் மூப்பர்களையும் நோக்கிக் கூறியது: “இந்த நிகழ்ச்சியைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒரு மனிதருக்கு இரு புதல்வர்கள் இருந்தார்கள். அவர் மூத்தவரிடம் போய், ‘மகனே, நீ இன்று திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலை செய்’ என்றார். அவர் மறுமொழியாக, ‘நான் போக விரும்பவில்லை’ என்றார். ஆனால் பிறகு தம் எண்ணத்தை மாற்றிக்கொண்டு போய் வேலை செய்தார். அவர் அடுத்த மகனிடமும் போய் அப்படியே சொன்னார். அவர் மறுமொழியாக, ‘நான் போகிறேன் ஐயா!’ என்றார்; ஆனால் போகவில்லை. இவ்விருவருள் எவர் தந்தையின் விருப்பப்படி செயல்பட்டவர்?” என்று கேட்டார். அவர்கள் “மூத்தவரே” என்று விடையளித்தனர்.

இயேசு அவர்களிடம், “வரிதண்டுவோரும் விலைமகளிரும் உங்களுக்கு முன்பாகவே இறையாட்சிக்கு உட்படுவர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஏனெனில் யோவான் நீதிநெறியைக் காட்ட உங்களிடம் வந்தார். நீங்களோ அவரை நம்பவில்லை. மாறாக வரிதண்டுவோரும் விலைமகளிரும் அவரை நம்பினர். அவர்களைப் பார்த்த பின்பும் நீங்கள் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவும் இல்லை; அவரை நம்பவும் இல்லை” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


நாம் இறை விருப்பத்தை நிறைவேற்றுவதில் நமது மனநிலை என்ன?


இறை விருப்பத்தை நிறைவேற்றுவது என்பது சற்றே கடினமான காரியம்தான். ஆனால் நிச்சயம் இயலாத காரியமல்ல. ஆனால் அதை நிறைவேற்ற நாம் கொண்டிருக்கும் மனநிலை என்ன என்பதைப் பற்றி சிந்திக்கவே இன்று நாம் அழைக்கப்பட்டுள்ளோம். அன்று விடுமுறை தினம். வீட்டில் இருந்த தன் மகனிடம் அம்மா கடைக்குச் சென்று பொருட்களை வாங்கச் சொன்னார். அதற்கு அந்த மகன் "அம்மா உங்களுக்கு வேலையில்லை இல்லை. விடுமுறை தினத்தில் என்னை சும்மா விடமாட்டீர்கள்" என்று எரிச்சலுடன் கூறிவிட்டு கடைக்குப் போனான். சிறிது நேரம் கழித்து அத்தாய் தன்னுடைய வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு சாப்பிட அழைத்தார். சாப்பாடு பரிமாறும் போது தன் மகனை மிகுந்த பாசத்தோடு கவனித்துக் கொண்டார். இதைக் கண்ட கணவர் அவரிடம் "நீ ஒரு வேலை சொன்னால் உன் மகன்  கோபப் படுகிறான். ஆனால் அவனுக்கு நீ ஏன் இவ்வளவு பாசம் காட்டுகிறாய்?" என்று கேட்டார். அதற்கு அந்தத் தாய் "கோபப் பட்டாலும் எரிச்சலுடன் நான் சொன்ன வேலையைச் செய்தாலும், சொன்னதை என் மகன் செய்துவிடுகிறான் அல்லவா?" என்று சிரித்துக் கொண்டே சொன்னாராம்.


இன்று நாம் நற்செய்தியில் காணக்கூடிய உவமை மேற்கூரிய நிகழ்வை ஒத்ததாகவும் நமது மனநிலையைச் சரிபார்க்க உதவுவதாகவும் உள்ளது. தந்தை கூறியதை செய்ய மறுத்த மூத்தமகன் தன் மனதை மாற்றிக்கொண்டு தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றினார். இம்மூத்தமகன் யூத சமூகத்தில் பாவிகள் என்று ஒதுக்கப்பட்டிருந்த வரிதண்டுவோர் மற்றும் விலைமாதருடன் ஒப்பிடப்படுகிறார். அவர்கள் கடவுளின் வழியைவிட்டு விலகி இருந்தாலும் நற்செய்தி நம்பி மனமாற்றத்தில் வாழ முயற்சி செய்தார்கள். திருமுழுக்கு யோவனை ஏற்றுக்கொண்டது இதற்கு உதாரணமாகச் சொல்லப்படுகிறது.


உம் விருப்பத்தை செய்கிறேன் என்று சொல்லிவிட்டு அதை வெறும் வார்த்தையோடு மட்டும் நிறுத்திக்கொண்ட இளைய மகன் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட யூத இனத்தவரோடு அதிலும் குறிப்பாக கட்டளைகளையும் சட்டங்களையும் மேலோட்டமாகப் புரிந்து கொண்டு கடவுளின் உண்மையான விருப்பத்தை அறிந்து செயல்படாத பரிசேயர், மறைநூல் அறிஞர் ஆகியோரோடு ஒப்பிடப்படுகிறார். யோவானையும் அவருடைய போதனைகளையும் ஏற்று மனமாறாத் தன்மை  இரண்டாம் மகனுக்குரிய மனநிலையை எடுத்துரைக்கிறது.


நாம் வாழ்கின்ற சமூகத்தில் நாம் பலரை நல்லவர்கள் என்றும் பலரைக் கெட்டவர்கள் என்றும் தீர்ப்பிடுகிறோம். பல சமயங்களில் நாம்தான் நல்லவர்கள் எனவும், கடவுளின் வார்த்தைகளைக் கேட்டு நடக்கிறோம் எனவும் நமக்கு நாமே பெருமைப்பட்டுக் கொள்கிறோம். ஆனால் கெட்டவர்கள் என்று நாம் தீர்ப்பிட்டு ஒதுக்கியவருடைய வாழ்வோடு நம் வாழ்வை ஒப்பிட்டுப் பார்த்தோமேயானால் அவர்கள் நம்மைவிடச் சிறந்தோராகவும், கடவுளின் திட்டத்தை மனமாற மறைவாக நிறைவேற்றுபவர்களுமாக இருப்பார்கள். நாம் தினமும் ஜெபிப்பதாலும், இறைவார்த்தை வாசிப்பதாலும், திருப்பலியில் பங்கேற்பதாலும் கடவுளின் பிள்ளைகளாகிவிட முடியாது. பல வேளைகளில் இறைவிருப்பம் நமக்கு மிகக் கடினமாக இருந்தாலும், நமக்கு பிடிக்வே இல்லை என்றாலும் கடவுளின் மனதை மகிழ்விக்க அதை ஏற்றுக்கொண்டு செயல்பட முயற்சிக்க வேண்டும். அதற்கு நாம் எளிய மனத்தவராய் இருக்க வேண்டும்.


இன்றைய முதல் வாசகத்தில் இறையளிக்கும் ஆறுதலான வார்த்தைகளை நாம் வாசிக்கிறோம். இறுமாப்பு கொண்டவர்களாய் இல்லாமல் எளிய மனத்தவராய் வாழ்ந்து ஆண்டவரில் நம்பிக்கை வைப்பதே அவருடைய திருவுளம். அதை நிறைவேற்ற ஏதுவான மனநிலையை நமக்கு ஆண்டவர்தாமே வழங்க வேண்டும் என மன்றாடுவோம். ஏனெனில் எளியவர்களின் குரலை இறைவன் கேட்பார்.


 இறைவேண்டல்

கடவுளே எங்கள் தந்தையே!உமது திருவுளத்தை பெயரளவில் மட்டும் ஏற்றுக்கொள்ளாமல் செயலளவில் ஏற்றுக்கொண்டு உம்மை மகிழ்விக்கும் எளிய பிள்ளைகளாக எம்மை மாற்றும் ஆமென்.




அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (28-06-2025)

    முதல் வாசகம் தொடக்க நூலிலிருந்து வாசகம் 18: 1-15 அந்நாள்களில் ஆண்டவர் மம்ரே என்ற இடத்தில் தேவதாரு மரங்கள் அருகே ஆபிரகாமுக்குத் தோன்றினார...