Tuesday, December 13, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (14-12-2022)

 

திருவருகைக்காலம் 3ஆம் வாரம் - புதன்



முதல் வாசகம்

வானங்கள், பனிமழையென வெற்றியை அனுப்பட்டும்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 45: 6b-8, 18, 21b-25

ஆண்டவர் கூறுவதாவது: நானே ஆண்டவர்; வேறு எவரும் இல்லை. நான் ஒளியை உண்டாக்குகிறேன்; இருளைப் படைக்கிறேன்; நல்வாழ்வை அமைப்பவன் நான்; தீமையைப் படைப்பவனும் நானே; இவை அனைத்தையும் செய்யும் ஆண்டவர் நானே. வானங்கள், பனிமழையென வெற்றியை அனுப்பட்டும்; மேகங்கள் மாரியென அதைப் பொழியட்டும்; மண்ணுலகம் வாய்திறந்து விடுதலைக் கனி வழங்கட்டும், அதனுடன் நீதி துளிர்க்கச் செய்யட்டும்; இவற்றைச் செய்பவர் ஆண்டவராகிய நானே.

ஏனெனில் விண்ணுலகைப் படைத்த ஆண்டவர் கூறுவது இதுவே: அவரே கடவுள்; மண்ணுலகைப் படைத்து உருவாக்கியவர் அவரே; அதை நிலைநிறுத்துபவரும் அவரே; வெறுமையாய் இருக்குமாறு படைக்காது, மக்கள் வாழுமாறு அதை உருவாக்கினார்.

ஆண்டவர் நான் அல்லவா? என்னையன்றிக் கடவுள் வேறு எவரும் இல்லை; நீதியுள்ளவரும் மீட்பு அளிப்பவருமான இறைவன் என்னையன்றி வேறு எவரும் இல்லை. மண்ணுலகின் அனைத்து எல்லை நாட்டோரே! என்னிடம் திரும்பி வாருங்கள்; விடுதலை பெறுங்கள்; ஏனெனில் நானே இறைவன்; என்னையன்றி வேறு எவருமில்லை. நான் என்மேல் ஆணையிட்டுள்ளேன்; என் வாயினின்று நீதிநிறை வாக்கு புறப்பட்டுச் சென்றது; அது வீணாகத் திரும்பி வராது; முழங்கால் அனைத்தும் எனக்குமுன் மண்டியிடும்; நா அனைத்தும் என்மேல் ஆணையிடும். ‘ஆண்டவரில் மட்டும் எனக்கு நீதியும் ஆற்றலும் உண்டு’ என்று ஒவ்வொருவனும் சொல்லி அவரிடம் வருவான்; அவருக்கு எதிராகச் சீறி எழுந்தவர் அனைவரும் வெட்கக்கேடு அடைவர். இஸ்ரயேலின் வழி மரபினர் அனைவரும் ஆண்டவரால் ஏற்புடையோராகப்பெற்று அவரைப் போற்றுவர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 85: 8ab-9. 10-11. 12-13 (பல்லவி: எசா 45:8)

பல்லவி: வானங்கள், பனிமழையென வெற்றியை அனுப்பட்டும்.

8ab
ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன்; தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார்;
9
அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு அவரது மீட்பு அண்மையில் உள்ளது என்பது உறுதி; நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும். - பல்லவி

10
பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்; நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும்.
11
மண்ணினின்று உண்மை முளைத்தெழும்; விண்ணினின்று நீதி கீழ்நோக்கும். - பல்லவி

12
நல்லதையே ஆண்டவர் அருள்வார்; நல்விளைவை நம் நாடு நல்கும்.
13
நீதி அவர்முன் செல்லும்; அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

எசா 40: 9-10

அல்லேலூயா, அல்லேலூயா! நற்செய்தி அறிவிப்பவரே, உன் குரலை எழுப்பி, இதோ என் தலைவராகிய ஆண்டவர் ஆற்றலுடன் வருகின்றார் என்று முழங்கிடுவீர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

நீங்கள் கண்டவற்றையும் கேட்டவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள்.

 லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 19-23

அக்காலத்தில்

யோவான் தம் சீடருள் இருவரை வரவழைத்து, “வரவிருப்பவர் நீர்தாமா? அல்லது வேறொருவரை எதிர்பார்க்க வேண்டுமா?” எனக் கேட்க ஆண்டவரிடம் அனுப்பினார். அவர்கள் அவரிடம் வந்து, “ ‘வர இருப்பவர் நீர்தாமா? அல்லது வேறொருவரை எதிர்பார்க்க வேண்டுமா?’ எனக் கேட்கத் திருமுழுக்கு யோவான் எங்களை உம்மிடம் அனுப்பினார்” என்று சொன்னார்கள்.

அந்நேரத்தில் பிணிகளையும் நோய்களையும் பொல்லாத ஆவிகளையும் கொண்டிருந்த பலரை இயேசு குணமாக்கினார்; பார்வையற்ற பலருக்குப் பார்வை அருளினார். அதற்கு அவர் மறுமொழியாக, “நீங்கள் கண்டவற்றையும் கேட்டவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள்; பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர்; கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர்; தொழுநோயாளர் நலமடைகின்றனர்; காது கேளாதோர் கேட்கின்றனர்; இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுகின்றனர்; ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகின்றது. என்னைத் தயக்கம் இன்றி ஏற்றுக்கொள்வோர் பேறுபெற்றோர்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


இன்றைய வாசகங்கள்(14.12.2022)  

திருவருகை காலம்-மூன்றாம் வாரம் புதன்

மு.வா: எசா: 45:6-8, 18, 21-25

ப.பா:  திபா:  85:8-9, 10-11, 12-13

ந.வா: லூக்:  07: 18-23


 இயேசுவைப் போன்று செயல்வீரர்களா நாம்? 


சொல்லும் செயலும் இணைந்து செல்வதே ஒரு மனிதனுக்கு மதிப்பையும் மரியாதையையும் உயர்த்துகின்றது.  ஆனால் நம்மில் பலருடைய வாழ்வில் சொல் முதன்மையாக இருக்கிறதே தவிர செயல்பாட்டில் பொதுவாகவே நாம் அனைவரும் சற்று பின்தங்கி விடுகிறோம். நம் சொற்கள் பல நேரங்களில் நாம் எப்படிப்பட்டவராய் இருக்கப்போகிறோம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிடுகிறது. நம் செயல்கள்தான் அந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து நாம் யார் என்பதை உலகிற்கு உணர்த்துகிறது.

நம் ஆண்டவர் இயேசுவோ சொற்களே தேவையில்லை. செயல்கள் மூலமாக நாம் யார் எனக் காட்டினால் போதும் என்ற கருத்தை நம்முன் வைக்கிறார் இன்று. 


இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுதான் மெசியாவோ?  எனக் கண்டறிய வந்த யோவானின் சீடர்களிடம்  "ஆம்.  நான்தான் மெசியா. நான் இனி செய்யப்போவதை நீங்கள் காண்பீர்கள் " என இயேசு சொல்லவில்லை. மாறாக அவரால் நிகழ்ந்த வல்ல செயல்களை, நல் அடையாளங்களைக் கூறி அவர்களுடைய மனதில் உள்ள தயக்கங்களையும் சந்தேகங்களையும் உடைத்தெறிகிறார் இயேசு. தன் செயல்களில் தன்னை எண்பித்துக்காட்டுகிறார் அவர்.


திருவருகைக்காலத்தில் கிறிஸ்துவின் வருகைக்காக நம்மையே நாம் தயாரித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் நாம் "கிறிஸ்தவர்கள் " என்பதை நாம் எவ்வாறு எண்பித்துக் காட்டப்போகிறோம்?. நம்முடைய சொற்களாலா?  அல்லது இயேசுவைப் போன்று செயல்களாலா? 


"நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்” என்று இயேசு யோவான் 13:35 ல் கூறிகிறார். இங்கே அன்பு என்ற சொல்லுக்கு இணையாக நாம் நற்செயல்கள் என்ற சொல்லை உபயோகித்துப் பார்ப்போம். ஏனென்றால் அன்பிலிருந்தே நற்செயல்கள் தோன்றுகின்றன. அவ்வாறெனில் நாம் ஒருவர் மற்றவருக்கு செய்யும் நற்செயல்களால் இயேசுவின் சீடர்கள் அல்லது கிறிஸ்தவர்கள் என்பதை எண்பித்துக் காட்டுகிறோம் அல்லவா! வீண்சொற்களைக் கொண்டு நான் அப்படிப்பட்டவள், என்னைப் போன்று எவனும் இருக்கமுடியாது எனச் சொல்வதை விட்டுவிட்டு நம்முடைய செயல்களால் கிறிஸ்துவை பிரதிபலித்துக் காட்ட முயல்வோம். அப்போது அனைவரும் நம்மைத் தயக்கமின்றி ஏற்றுகொள்வர் என்பது உறுதி. இயேசுவைப் போல செயல்வீரர்களாக மாற முயலுவோமா?


 இறைவேண்டல் 

அன்பு இயேசுவே!  உம்மைப் போல நாங்களும் வார்த்தை வீரர்களாயன்றி செயல் வீரர்களாய் துலங்கி உம் சீடர்கள் என்பதை எண்பித்துக்காட்ட வரமருளும். ஆமென்.

அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...