திருவருகைக்காலம் 3ஆம் வாரம் - செவ்வாய்
முதல் வாசகம்
மெசியாவின் மீட்பு எளியவர் அனைவர்க்கும் வாக்களிக்கப்படுகிறது.
இறைவாக்கினர் செப்பனியா நூலிலிருந்து வாசகம் 3: 1-2, 9-13
ஆண்டவர் கூறுகிறார்:
கலகம் செய்ததும் தீட்டுப்பட்டதும் மக்களை ஒடுக்கியதுமான நகருக்கு ஐயோ கேடு! எந்தச் சொல்லுக்கும் அவள் செவிசாய்ப்பதில்லை; கண்டிப்புரையை அவள் ஏற்பதுமில்லை; ஆண்டவர்மேல் அவள் நம்பிக்கை வைப்பதில்லை; தன் கடவுளை அண்டி வருவதுமில்லை.
அக்காலத்தில் நான் மக்களினங்களுக்குத் தூய நாவினை அருள்வேன்; அப்போது அவர்கள் அனைவரும் ஆண்டவரின் பெயரால் மன்றாடி ஒருமனப்பட்டு அவருக்குப் பணிபுரிவார்கள். எத்தியோப்பியாவின் ஆறுகளுக்கும் அப்பாலிருந்து என்னை மன்றாடுவோர் - சிதறுண்ட என் மக்கள் - எனக்குக் காணிக்கை கொண்டு வருவார்கள்.
எனக்கு எதிராக எழுந்து நீ செய்த குற்றங்களை முன்னிட்டு அந்நாளில் அவமானம் அடையமாட்டாய்; ஏனெனில், அப்பொழுது இறுமாப்புடன் அக்களித்திருப்போரை உன்னிடமிருந்து அகற்றிவிடுவேன்; இனி ஒருபோதும் எனது திருமலையில் செருக்கு அடையமாட்டாய். ஏழை எளியோரை உன் நடுவில் நான் விட்டுவைப்பேன்; அவர்கள் ஆண்டவரின் பெயரில் நம்பிக்கை கொள்வார்கள்.
இஸ்ரயேலில் எஞ்சியோர் கொடுமை செய்யமாட்டார்கள்; வஞ்சகப் பேச்சு அவர்களது வாயில் வராது; அச்சுறுத்துவார் யாருமின்றி, அவர்கள் மந்தைபோல் மேய்ந்து இளைப்பாறுவார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 34: 1-2. 5-6. 16-17. 18,22 (பல்லவி: 6a)பல்லவி: இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! வாரும், ஆண்டவரே, காலம் தாழ்த்தாதேயும்; உம் மக்களின் பாவங்களைப் போக்கியருளும். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
யோவான் வந்தார்; பாவிகள் அவரை நம்பினார்கள்.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 28-32
அக்காலத்தில்
இயேசு தலைமைக் குருக்களையும் மக்களின் மூப்பர்களையும் நோக்கிக் கூறியது: “இந்த நிகழ்ச்சியைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒரு மனிதருக்கு இரு புதல்வர்கள் இருந்தார்கள். அவர் மூத்தவரிடம் போய், ‘மகனே, நீ இன்று திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலை செய்’ என்றார். அவர் மறுமொழியாக, ‘நான் போக விரும்பவில்லை’ என்றார். ஆனால் பிறகு தம் எண்ணத்தை மாற்றிக்கொண்டு போய் வேலை செய்தார். அவர் அடுத்த மகனிடமும் போய் அப்படியே சொன்னார். அவர் மறுமொழியாக, ‘நான் போகிறேன் ஐயா!’ என்றார்; ஆனால் போகவில்லை. இவ்விருவருள் எவர் தந்தையின் விருப்பப்படி செயல்பட்டவர்?” என்று கேட்டார். அவர்கள் “மூத்தவரே” என்று விடையளித்தனர்.
இயேசு அவர்களிடம், “வரிதண்டுவோரும் விலைமகளிரும் உங்களுக்கு முன்பாகவே இறையாட்சிக்கு உட்படுவர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஏனெனில் யோவான் நீதிநெறியைக் காட்ட உங்களிடம் வந்தார். நீங்களோ அவரை நம்பவில்லை. மாறாக வரிதண்டுவோரும் விலைமகளிரும் அவரை நம்பினர். அவர்களைப் பார்த்த பின்பும் நீங்கள் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவும் இல்லை; அவரை நம்பவும் இல்லை” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நாம் இறை விருப்பத்தை நிறைவேற்றுவதில் நமது மனநிலை என்ன?
இறை விருப்பத்தை நிறைவேற்றுவது என்பது சற்றே கடினமான காரியம்தான். ஆனால் நிச்சயம் இயலாத காரியமல்ல. ஆனால் அதை நிறைவேற்ற நாம் கொண்டிருக்கும் மனநிலை என்ன என்பதைப் பற்றி சிந்திக்கவே இன்று நாம் அழைக்கப்பட்டுள்ளோம். அன்று விடுமுறை தினம். வீட்டில் இருந்த தன் மகனிடம் அம்மா கடைக்குச் சென்று பொருட்களை வாங்கச் சொன்னார். அதற்கு அந்த மகன் "அம்மா உங்களுக்கு வேலையில்லை இல்லை. விடுமுறை தினத்தில் என்னை சும்மா விடமாட்டீர்கள்" என்று எரிச்சலுடன் கூறிவிட்டு கடைக்குப் போனான். சிறிது நேரம் கழித்து அத்தாய் தன்னுடைய வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு சாப்பிட அழைத்தார். சாப்பாடு பரிமாறும் போது தன் மகனை மிகுந்த பாசத்தோடு கவனித்துக் கொண்டார். இதைக் கண்ட கணவர் அவரிடம் "நீ ஒரு வேலை சொன்னால் உன் மகன் கோபப் படுகிறான். ஆனால் அவனுக்கு நீ ஏன் இவ்வளவு பாசம் காட்டுகிறாய்?" என்று கேட்டார். அதற்கு அந்தத் தாய் "கோபப் பட்டாலும் எரிச்சலுடன் நான் சொன்ன வேலையைச் செய்தாலும், சொன்னதை என் மகன் செய்துவிடுகிறான் அல்லவா?" என்று சிரித்துக் கொண்டே சொன்னாராம்.
இன்று நாம் நற்செய்தியில் காணக்கூடிய உவமை மேற்கூரிய நிகழ்வை ஒத்ததாகவும் நமது மனநிலையைச் சரிபார்க்க உதவுவதாகவும் உள்ளது. தந்தை கூறியதை செய்ய மறுத்த மூத்தமகன் தன் மனதை மாற்றிக்கொண்டு தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றினார். இம்மூத்தமகன் யூத சமூகத்தில் பாவிகள் என்று ஒதுக்கப்பட்டிருந்த வரிதண்டுவோர் மற்றும் விலைமாதருடன் ஒப்பிடப்படுகிறார். அவர்கள் கடவுளின் வழியைவிட்டு விலகி இருந்தாலும் நற்செய்தி நம்பி மனமாற்றத்தில் வாழ முயற்சி செய்தார்கள். திருமுழுக்கு யோவனை ஏற்றுக்கொண்டது இதற்கு உதாரணமாகச் சொல்லப்படுகிறது.
உம் விருப்பத்தை செய்கிறேன் என்று சொல்லிவிட்டு அதை வெறும் வார்த்தையோடு மட்டும் நிறுத்திக்கொண்ட இளைய மகன் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட யூத இனத்தவரோடு அதிலும் குறிப்பாக கட்டளைகளையும் சட்டங்களையும் மேலோட்டமாகப் புரிந்து கொண்டு கடவுளின் உண்மையான விருப்பத்தை அறிந்து செயல்படாத பரிசேயர், மறைநூல் அறிஞர் ஆகியோரோடு ஒப்பிடப்படுகிறார். யோவானையும் அவருடைய போதனைகளையும் ஏற்று மனமாறாத் தன்மை இரண்டாம் மகனுக்குரிய மனநிலையை எடுத்துரைக்கிறது.
நாம் வாழ்கின்ற சமூகத்தில் நாம் பலரை நல்லவர்கள் என்றும் பலரைக் கெட்டவர்கள் என்றும் தீர்ப்பிடுகிறோம். பல சமயங்களில் நாம்தான் நல்லவர்கள் எனவும், கடவுளின் வார்த்தைகளைக் கேட்டு நடக்கிறோம் எனவும் நமக்கு நாமே பெருமைப்பட்டுக் கொள்கிறோம். ஆனால் கெட்டவர்கள் என்று நாம் தீர்ப்பிட்டு ஒதுக்கியவருடைய வாழ்வோடு நம் வாழ்வை ஒப்பிட்டுப் பார்த்தோமேயானால் அவர்கள் நம்மைவிடச் சிறந்தோராகவும், கடவுளின் திட்டத்தை மனமாற மறைவாக நிறைவேற்றுபவர்களுமாக இருப்பார்கள். நாம் தினமும் ஜெபிப்பதாலும், இறைவார்த்தை வாசிப்பதாலும், திருப்பலியில் பங்கேற்பதாலும் கடவுளின் பிள்ளைகளாகிவிட முடியாது. பல வேளைகளில் இறைவிருப்பம் நமக்கு மிகக் கடினமாக இருந்தாலும், நமக்கு பிடிக்வே இல்லை என்றாலும் கடவுளின் மனதை மகிழ்விக்க அதை ஏற்றுக்கொண்டு செயல்பட முயற்சிக்க வேண்டும். அதற்கு நாம் எளிய மனத்தவராய் இருக்க வேண்டும்.
இன்றைய முதல் வாசகத்தில் இறையளிக்கும் ஆறுதலான வார்த்தைகளை நாம் வாசிக்கிறோம். இறுமாப்பு கொண்டவர்களாய் இல்லாமல் எளிய மனத்தவராய் வாழ்ந்து ஆண்டவரில் நம்பிக்கை வைப்பதே அவருடைய திருவுளம். அதை நிறைவேற்ற ஏதுவான மனநிலையை நமக்கு ஆண்டவர்தாமே வழங்க வேண்டும் என மன்றாடுவோம். ஏனெனில் எளியவர்களின் குரலை இறைவன் கேட்பார்.
இறைவேண்டல்
கடவுளே எங்கள் தந்தையே!உமது திருவுளத்தை பெயரளவில் மட்டும் ஏற்றுக்கொள்ளாமல் செயலளவில் ஏற்றுக்கொண்டு உம்மை மகிழ்விக்கும் எளிய பிள்ளைகளாக எம்மை மாற்றும் ஆமென்.
அருட்பணி. குழந்தை இயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️
Join with us 👇
Website: https://catholicvoicecv.blogspot.com
Youtube: https://www.youtube.com/channel/UCcgIiK1gUEqRCmTsc7ZjAoA
Youtube: https://www.youtube.com/channel/UCxBBHQAKIjii_MsZfIYNF5A
Facebook:https://www.facebook.com/Catholic-Voice-108151311955076
Instagram:https://www.instagram.com/invites/contact/?i=16mmdwn460k8p&utm_content=p6lg283
No comments:
Post a Comment