Showing posts with label பொதுக்காலம் 21 வாரம். Show all posts
Showing posts with label பொதுக்காலம் 21 வாரம். Show all posts

Friday, August 26, 2022

Dily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (27-08-2022)

 முதல் வாசகம்



திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 26-31

சகோதரர் சகோதரிகளே, நீங்கள் அழைக்கப்பட்ட நிலையை எண்ணிப் பாருங்கள். மனிதக் கணிப்பின்படி உங்களுள் ஞானிகள் எத்தனை பேர்? வலியோர் எத்தனை பேர்? உயர்குடிமக்கள் எத்தனை பேர்? ஆனால் கடவுள் ஞானிகளை வெட்கப்படுத்த, மடமை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்துகொண்டார். அவ்வாறே, வலியோரை வெட்கப்படுத்த, வலுவற்றவை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்துகொண்டார். உலகம் ஒரு பொருட்டாகக் கருதுபவற்றை அழித்துவிட அது தாழ்ந்ததாகக் கருதுபவற்றையும் இகழ்ந்து தள்ளுபவற்றையும் கடவுள் தேர்ந்தெடுத்தார். எவரும் கடவுள் முன் பெருமை பாராட்டாதபடி அவர் இப்படிச் செய்தார். அவரால்தான் நீங்கள் கிறிஸ்துவுடன் இணைக்கப்பட்டிருக்கிறீர்கள். கிறிஸ்துவே கடவுளிடமிருந்து நமக்கு வரும் ஞானம். அவரே நம்மை ஏற்புடைவராக்கித் தூயவராக்கி மீட்கின்றார். எனவே மறைநூலில் எழுதியுள்ளவாறு, ஹஹபெருமை பாராட்ட விரும்புகிறவர் ஆண்டவரைக் குறித்தே பெருமை பாராட்டட்டும்.''

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல்



திபா 33: 12-13. 18-19. 20-21

பல்லவி: ஆண்டவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர்.


12 ஆண்டவரைத் தன் கடவுளாகக் கொண்ட இனம் பேறுபெற்றது; அவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர்.

13 வானினின்று ஆண்டவர் பார்க்கின்றார்; மானிடர் அனைவரையும் காண்கின்றார். பல்லவி

18 தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார்.

19 அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். பல்லவி

20 நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார்.

21 நம் உள்ளம் அவரை நினைத்துக் களிகூரும்; ஏனெனில், அவரது திருப்பெயரில் நாம் நம்பிக்கை வைத்துள்ளோம். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஹஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்' என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.


மத்தேயு 25:14-30

பொதுக்காலம் 21 வாரம் சனி


நற்செய்தி வாசகம்



மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 14-30

அக்காலத்தில் இயேசு தம் சீடருக்குக் கூறிய உவமை: ஹஹவிண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாகவும் விளக்கலாம்; நெடும் பயணம் செல்லவிருந்த ஒருவர் தம் பணியாளர்களை அழைத்து அவர்களிடம் தம் உடைமைகளை ஒப்படைத்தார். அவரவர் திறமைக்கு ஏற்ப ஒருவருக்கு ஐந்து தாலந்தும் வேறொருவருக்கு இரண்டு தாலந்தும் இன்னொருவருக்கு ஒரு தாலந்தும் கொடுத்துவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார். ஐந்து தாலந்தைப் பெற்றவர் போய் அவற்றைக் கொண்டு வாணிகம் செய்து வேறு ஐந்து தாலந்து ஈட்டினார். அவ்வாறே இரண்டு தாலந்து பெற்றவர் மேலும் இரண்டு தாலந்து ஈட்டினார். ஒரு தாலந்து பெற்றவரோ போய் நிலத்தைத் தோண்டித் தம் தலைவரின் பணத்தைப் புதைத்து வைத்தார். நெடுங்காலத்திற்குப் பின் அந்தப் பணியாளர்களின் தலைவர் வந்து அவர்களிடம் கணக்குக் கேட்டார். ஐந்து தாலந்து பெற்றவர் அவரை அணுகி, வேறு ஐந்து தாலந்தைக் கொண்டு வந்து, ஹஐயா, ஐந்து தாலந்தை என்னிடம் ஒப்படைத்தீர்; இதோ பாரும், இன்னும் ஐந்து தாலந்தை ஈட்டியுள்ளேன்' என்றார். அதற்கு அவருடைய தலைவர் அவரிடம், ஹநன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்' என்றார். இரண்டு தாலந்து பெற்றவரும் அவரை அணுகி, ஹஐயா, நீர் என்னிடம் இரண்டு தாலந்து ஒப்படைத்தீர். இதோ பாரும், வேறு இரண்டு தாலந்து ஈட்டியுள்ளேன்' என்றார். அவருடைய தலைவர் அவரிடம், ஹநன்று. நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்' என்றார். ஒரு தாலந்தைப் பெற்றுக்கொண்டவரும் அவரை அணுகி, ஹஐயா, நீர் கடின உள்ளத்தினர்; நீர் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவர்; நீர் தூவாத இடத்திலும் விளைச்சலைச் சேகரிப்பவர் என்பதை அறிவேன். உமக்கு அஞ்சியதால் நான் போய் உம்முடைய தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன். இதோ, பாரும், உம்முடையது' என்றார். அதற்கு அவருடைய தலைவர், ஹசோம்பேறியே! பொல்லாத பணியாளனே, நான் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவன். நான் தூவாத இடத்திலும் போய்ச் சேகரிப்பவன் என்பது உனக்குத் தெரிந்திருந்தது அல்லவா? அப்படியானால் என் பணத்தை நீ வட்டிக் கடையில் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நான் வரும்போது எனக்கு வரவேண்டியதை வட்டியோடு திரும்பப் பெற்றிருப்பேன்' என்று கூறினார். ஹஎனவே அந்தத் தாலந்தை அவனிடமிருந்து எடுத்துப் பத்துத் தாலந்து உடையவரிடம் கொடுங்கள். ஏனெனில் உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். அவர்கள் நிறைவாகப் பெறுவர். இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும். பயனற்ற இந்தப் பணியாளைப் புறம்பேயுள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்' என்று அவர் கூறினார்.''


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

------------------------

போதாது என்ற மனம் வேண்டும்

மத்தேயு 25:14-30

இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துதுகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.

வாழ்க்கையில் நான் வளா்ந்துவிட்டேன் என்று யாரும் சொல்ல முடியாது. எல்லாருமே வளா்ந்துக் கொண்டு இருக்கிறோம். தொடர்ந்து வளர கடவுள் நமக்கு கொடுத்திருக்கும் திறமைகளை நன்கு பயன்படுத்த வேண்டும். இன்றைய நற்செய்தி வாசகம் கடவுள் கொடுத்த திறமைகளை ஒருவர் பயன்படுத்தும் போது அவர் எப்படி வளருகிறார் எனவும் கடவுளின் நன்மதிப்பை எப்படி பெறுகிறார் என்பதையும் எடுத்துரைக்கிறது. மேலும் கடவுள் கொடுத்த திறமைகளை சரியாக பயன்படுத்தாதவர் எப்படி இன்னுலுகிறார் என்பதையும் சொல்கிறது. இரண்டு பிரச்சினைகளை அவர் சந்திக்கிறார்.

1. மரியாதை இருக்காது

சரியாக திறமைகளை பயன்படுத்தாதவருக்கு மரியாதை என்பது இல்லை. அவர் வீட்டிலும் மதிக்கப்படுவதில்லை, காட்டிலும் மதிக்கப்படுவதில்லை. எங்கு சென்றாலும் அவா் தூரே தூக்கி எறியப்படுகிறார்.

2. மகிழ்ச்சி இருக்காது

திறமைகளை நாம் சரியாக பயன்படுத்தும்போது நாம் பாராட்டுக்களை பரிசாக நம் இரத்த உறவுகள், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பலரிடமிருந்து பெறுவோம். அதில் ஊறுகின்ற மகிழ்ச்சி அளவே இல்லை. திறமைகளை நாம் பயன்படுத்தவில்லை என்றால் நாம் யாரிடமிருந்தும் பாராட்டுக்களை பெறுவது இல்லை. ஆகவே இயல்பிலே மகிழ்ச்சி என்பது நமக்கு எட்டாமல் போகிறது.

மனதில் கேட்க…

1. எனக்கு மரியாதை, மகிழ்ச்சி இரண்டையும் என் திறமைகள் தானே தர முடியும்?

2. நான் பெற்றிருப்பது போதாது இன்னும் வளருவேன். திறமைகளைப் பயன்படுத்துவேன். இந்த வேகத்தோடு செயல்படலாமா?

மனதில் பதிக்க…

நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன.(மத் 25:21)

அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா

---------------------------------------------------------------


1கொரிந்தியர் 1: 26 – 31

இறைவனின் இரக்கம்

பவுலடியார், கொரிந்து மக்களிடையே இருந்த பிரச்சனைகள் அடிப்படையில் இந்த கடிதத்தை எழுதுகிறார், ”உங்களிடையே சண்டை, சச்சரவுகள் இருப்பதாக, குலோயி வீட்டார் என்னிடம் தெரிவித்துள்ளார்கள்”(1: 11). அவர்கள் ஒற்றுமையோடு வாழ வேண்டிய அவசியத்தை விளக்குகிறார். அதன்பிறகு, அவருடைய கவனம் சிலுiவின் பக்கம் திரும்புகிறது. யூதர்களுக்கும், கிரேக்கர்களுக்கும் சிலுவை பல கேள்விகளை எழுப்புகிறது. கொரிந்து ஒரு கிரேக்க நகரம். ஆனால், அங்கு ஏராளமான யூதர்கள் வாழ்ந்து வந்தனர். கொரிந்து நகரில் வாழ்ந்தபோது, யூதர்கள் மற்றும் கிரேக்கர்கள் என இருவர் நடுவிலும், பவுலடியார் பணியாற்றினார். இவர்கள் இரண்டு பேரும் இணைந்தது தான், கொரிந்து நகரத்திருச்சபை. வலுவான போர்த்திறமையுள்ள மெசியாவை எதிர்பார்த்திருந்த யூதர்களுக்கும், ஞானத்தைக் கடவுளாக பார்க்கிற கிரேக்கர்களுக்கும், சிலுவை மடமையாகத் தோன்றியது.

யூதர்களுக்கு சிலுவை வலுவானதாக அல்ல, வலுவற்றதாக தோன்றியது. அதேபோல, கிரேக்கர்களுக்கு ஞானமாக அல்ல, மடமையாக தோன்றியது, பவுலடியார் இந்த இரண்டுவிதமான மனநிலைகளுக்கு விளக்கம் தரக்கூடிய வகையில் இந்த பகுதியை எழுதுகிறார். நம்முடைய வலுவின்மையை நாம் உணர வேண்டும் என்பதே பவுலடியாரின் மையச்சிந்தனையாக இருக்கிறது. நம்முடைய ஆற்றலினாலோ, வலிமையினாலோ, ஞானத்தினாலோ அல்ல, கடவுளின் இரக்கத்தினாலேயே நாம் அனைவரும் மீட்கப்பட்டோம் என்பதை, மிக அழுத்தமாக அவர் பதிவு செய்கிறார். மனிதர்கள் அவமானச்சின்னமாக கருதிய சிலுவையே, நம் அனைவருக்கும் மீட்பின் சின்னமாக விளங்குகிறது. கடவுளின் வல்லமைக்கும், ஞானத்திற்கும் முன்னால் நாம் ஒன்றுமில்லாதவர்களாக மாறிவிடுகிறோம். எனவே, கடவுள் தரும் மீட்பை இரக்கத்தினால், மன்னிப்பினால் பெற்றுக்கொள்வோம் என்பது, பவுலடியார் நமக்குத் தருகிற அறிவுரையாக இருக்கிறது.

வாழ்க்கையில் பல நிகழ்வுகள் நடக்கிறபோது, கடவுள் ஏன் இதை இப்படிச் செய்ய வேண்டும்? இதனை இப்படி செய்திருக்கலாமே? என்று கடவுளுக்கே, கற்றுக்கொடுக்கிற அளவுக்கு, மனிதன் தன்னுடைய ஞானத்தில் கர்வம் கொள்கிறான். ஆனால், கடவுளின் வல்லமையைப் புரிந்து கொள்வதற்கு மனித ஞானம் போதாது. மனித ஞானத்தைக் கொண்டு கடவுளைக் கண்டுபிடித்து விடலாம் என்று, நாம் எண்ணிவிடக்கூடாது. இறைவனின் இரக்கத்திற்காக நாம் மன்றாடுவோம்.


- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்


-------------------------------------------------

நம்பிக்கைக்குரியவர்

நம்பிக்கைக்குரியவர் யார்? என்ற கேள்விக்கு பதிலாக வருவதுதான் இன்றைய நற்செய்தி. நமது வாழ்வில் நாம் நம்பிக்கைக்கு உரியவர்களாக இருக்க வேண்டும். யாருக்கு நம்பிக்கைக்கு உரியவர்களாக இருக்க வேண்டும்? ஒரு அலுவலகத்தில் வேலை பார்க்கிறோம் என்றால், அந்த அலுவலகத்தலைவரின் நம்பிக்கைக்கு எல்லாருமே உரியவர்களாக இருக்க மாட்டார்கள். ஒரு சிலர் மட்டும் தான். எது அவர்களை நம்பிக்கைக்கு உரியவர்களாக மாற்றுகிறது? அவர்கள் தலைவர் மீது வைத்திருக்கக்கூடிய மதிப்பு, அவர்களின் கீழ்ப்படிதல், உண்மை, தலைவர் சொல்லக்கூடிய பணியைச் சிறப்பாகச் செய்வது – இவைதான் ஒரு மனிதரை நம்பிக்கைக்கு உரியவராக வைத்திருக்கிறது. அந்த நம்பிக்கை ஏதோ ஒரு நாளில் பெற்றுவிடுவதல்ல. சின்ன காரியங்களில் உண்மையாக இருக்கிறபோது, அந்த மனிதர் மட்டில், நமது நம்பிக்கையும் பெறுகிறது. ஆக, சிறிய காரியத்தில் நாம் உண்மையாக, நேர்மையாக இருக்கிறபோது, மற்றவர்களின் நம்பிக்கைக்கு உகந்தவர்களாக மாறுகிறோம்.

இன்றைய நற்செய்தியில் தலைவர் தனது பணியாளர்களிடம் தாலந்து ஒப்படைத்து பயணம் மேற்கொள்கிறார். திரும்பிவந்து, தான் கொடுத்த தாலந்தைப் பற்றி விசாரிக்கிறார். தாலந்து என்பது பணத்தின் மதிப்பைக் குறிக்கக்கூடிய சொல். அது விலைமதிப்புமிக்கது. அதனை தலைவர் சிறிய பொறுப்பு என்று கூறுவது, எந்த அளவுக்கு அவர் செல்வமிக்கவர் என்பதனையும், தன்னுடைய பணியாளர்கள் மட்டில், அவர் வைத்திருக்கக்கூடிய நம்பிக்கையையும் நமக்கு வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. தங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிற பணியை திறம்பட செய்தவர்கள், தலைவரின் பாராட்டையும், மதிப்பையும் பெறுகிறார்கள். திறம்படச் செய்யாதவன் தண்டிக்கப்படுகிறான். அந்த மூன்றாவது மனிதரிடமும் தலைவன் நம்பிக்கை வைத்திருந்தான். எனவே தான், அந்த தாலந்தை அவனுக்குக் கொடுத்திருந்தான். எத்தனையோ பணியாளர்கள் இருக்கிறபோது, தலைவர் அவரிடம் கொடுத்திருந்தால், மற்றவர்களை விட, அவன் மீது அவர் அதிகமான மதிப்பு வைத்திருக்கிறார் என்று தான் நாம் நினைகக முடியும். ஆனால், தலைவரின் நம்பிக்கைக்கு அவன் ஏற்புடையவனாக இல்லை.

நாம் கடவுளின் நம்பிக்கைக்கு உரியவர்களாக இந்த நற்செய்தி நமக்கு அழைப்புவிடுக்கிறது. கடவுளின் நம்பிக்கையை பெறுவது கடினமானது அல்ல. நாம் செய்யக்கூடிய சாதாரண காரியங்களில், உண்மையாக இருப்பதுதான். சிறிய காரியங்களில் பொறுப்புணர்வோடு, உண்மையுள்ளவர்களாக வாழ, ஆண்டவரிடம் மன்றாடுவோம்.


அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-------------------------------------------------

வாழ்வது ஒருமுறை, வாழ்த்தட்டும் தலைமுறை

ஒரு தாலந்து என்பது வெள்ளி நாணய அடிப்படையில் ஒரு தொழிலாளியின் 15 வருட கூலிக்கு சமம். முதல் இரண்டு நபரும் தலைவர் கொடுத்த தாலந்தை வைத்து இன்னும் அதிகமாக சம்பாதிக்க முயற்சி எடுக்கிறார்கள். தலைவர் அந்த முயற்சியை பாராட்டுகிறார். ஒருவேளை அவர்கள் அதில் நஷ்டம் அடைந்திருந்தாலும், தலைவர் அவர்களின் முயற்சியை நிச்சயமாகப்பாராட்டியிருப்பார். தலைவர் கோபப்படுவது மூன்றாவது ஊழியரை. அதற்கு காரணம் அவரின் முயற்சியின்மை, சோம்பேறித்தனம்.

கடவுள் நம் ஒவ்வொருவருக்கும் வாழ்வு என்னும் கொடையைத் தந்திருக்கிறார். இந்த வாழ்வில் நமக்கென்று குறைகள் இருக்கலாம், நமக்கென்று பலவீனங்கள் இருக்கலாம். ஆனால், அந்த வாழ்வை எந்த அளவுக்கு முயற்சி எடுத்து நாமும் பயன்பெற்று, மற்றவர்களின் வாழ்விலும் ஒளியேற்றுகிறோம் என்பதுதான் கடவுள் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது. நான் குறையுள்ளவன், எத்தனைமுறை முயன்றாலும், நான் வெற்றி பெற மாட்டேன் என்கிற முயற்சியின்மையை தலைவர் வெறுக்க மட்டும் செய்யவில்லை. அவனுக்கு தண்டனையும் கொடுக்கிறார்.

கடவுள் நமக்கு கொடுத்திருக்கிற கொடை மூலமாக எவ்வளவோ நல்ல காரியங்களைச் செய்ய முடியும். இருளில் வாழ்கிற மக்களின் வாழ்வில் ஒளியேற்ற முடியும். இதை சாதித்திருக்கிறவர்களின் மாதிரியைப்பின்பற்றி, நாமும் வாழ்வை நல்ல முறையில் வாழ்வோம்.


அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------------------

இறைவனின் வல்லமையும், ஞானமும் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இன்றைய முதல் வாசகப் பகுதி கொரிந்தியர் திருமடலிலேயே ஒரு சிறப்பான பகுதி. சிலுவையின் மேன்மையைப் புகழும் இந்த இறையியல் பகுதியில் பவுலடியார் இறைவனின் இயல்பு பற்றிய புதிய ஒரு புரிதலை நமக்கு வழங்குகிறார். பழைய ஏற்பாட்டில் இறைவனின் படைப்பு கடவுளின் வல்லமைக்கும், ஞானத்துக்கும் அடையாளமாக இருந்தது. இந்த உலகப் படைப்புகளைக் காணும்போதெல்லாம், நாம் இறைவனின் வல்லமையையும், ஞானத்தையும் கண்டு வியக்கிறோம். காரணம், ஒன்றுமில்லாமையிலிருந்து இறைவன் ஆற்றல் மிக்க படைப்புகளை உருவாக்கினார். அத்துடன், வியத்தகு முறையில் ஆறு, கடல், மலர்கள், மலைகள், இயற்கை அனைத்தையும் உருவாக்கினார். இறைவனின் ஞானம் அதில் வெளிப்படுகிறது. புதிய ஏற்பாட்டிலோ, சிலுவையில் அறையுண்ட மெசியாவான இயேசுதான் கடவுளின் வல்லமையும், ஞானமுமாய் இருக்கிறார். சிலுவை மனிதர்களுக்கு வலிமைக் குறைவானதாகவும் (தோல்வி), மடமையாகவும் (அவமானம்) தோன்றியது. ஆனால், “மனித ஞானத்தைவிட கடவுளின் மடமை ஞானம் மிக்கது. மனித வலிமையைவிட அவருடைய வலுவின்மை வலிமை மிக்கது”. எனவே, நமது சிலுவைகளை, துன்பங்களைக் கண்டு அஞ்சவேண்டாம். இயேசு அவைகளை வென்றுவிட்டார்.

மன்றாடுவோம்: இறைவல்லமையும், ஞானமுமான இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். எங்கள்; வாழ்வில் நாங்கள் சந்திக்கும் சிலுவைகளை உமது வல்லமையாக, ஞானமாக ஏற்றுக்கொள்ளும் அருளைத் தந்தருளும்.  உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.


அருள்தந்தை குமார்ராஜா

-------------------------

''உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும்...

இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும்'' (மத்தேயு 25:29)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- பயன்படுத்தாத செல்வம் பாழாய்ப்போகும் என்னும் உண்மையை இயேசு நமக்குக் கற்பிக்கிறார். வெவ்வேறு அளவில் தாலந்துகளைப் பெற்றவர்கள் அவற்றைப் பயன்படுத்தி மேலும் செல்வம் ஈட்டினார்கள். ஆனால் ஒருவர் மட்டும் தாலந்தைப் பயன்படுத்தாமல் நிலத்தில் புதைத்துவைத்தார். கடவுளிடமிருந்து நாம் பெறுகின்ற கொடைகள் பல. அவற்றை நாம் நன்முறையில் பயன்படுத்தி நன்மை செய்ய முன்வரவேண்டும். கடவுள் நமக்குத் தருகின்ற காலம் குறுகியது, நாம் பெற்றுள்ள கொடைகளும் சில இலட்சியங்களை அடைய வேண்டும் என நம் உள்ளத்தில் எழுகின்ற ஆர்வங்களும் எல்லைகளுக்கு உட்பட்டவை. இவற்றை அறிவோடு பயன்படுத்த வேண்டும். இதற்கு மாறாகச் சிலர் தாம் பெற்ற கொடைகளை மனம்போன போக்கில் செலவழித்து வீணடிக்கிறார்கள்; வேறு சிலரோ தம் கொடைகளைப் பத்திரமாகப் பொதிந்துவைத்து யாருக்கும் பயன்படா வண்ணம் அழிந்துபட விட்டுவிடுகிறார்கள். இந்த இரு போக்குகளுமே தவறானவை. எதிர்காலத்தைப் பற்றி யாதொரு கவலையும் இல்லாமல் இருப்பதும் தவறு, எதிர்காலத்தில் என்ன நிகழ்ந்துவிடுமோ என்னும் அச்சத்தால் வாழ்க்கையை வீணடிப்பதும் தவறு.

-- வாழ்க்கையில் நம்மைத் தேடி வருகின்ற சவால்களை நாம் துணிவோடு சந்திக்க வேண்டும். நன்மை செய்வதில் ஈடுபாடு வேண்டும். இத்தகைய துணிச்சலான செயல்பாடு இல்லாத இடத்தில் இலட்சியங்கள் படிப்படியாக மடிந்துபோகும். எனவே, இயேசு அறிவிக்கின்ற நற்செய்தியை உள்வாங்கி அதன்படி நடக்க விரும்புவோரிடத்தில் துணிந்து செயல்படுகின்ற மன நிலை வளர வேண்டும். கடவுள் நமக்கு அளிக்கின்ற கொடைகளை நன்முறையில் செலவிட்டு உலகம் உய்ந்திட நம்மை ஈடுபடுத்த வேண்டும் என்பதே இயேசு நமக்கு விடுக்கின்ற அழைப்பு.

மன்றாட்டு

இறைவா, நாங்கள் பெற்ற கொடைகளை நன்முறையில் பயன்படுத்தி நன்மை செய்வதில் எங்களை ஈடுபடுத்த அருள்தாரும்.


--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்


-------------------------

செய்து பாருங்க.. ..

காலம் பொன்போன்றது. பத்து தோழியர் உவமையிலும் தாலந்து உவமையிலும் காத்திருக்கிறார்கள், மணமகனுக்காக அல்லது தலைவனுக்காக. இந்த உவமையின் சிறப்பு செய்தி, காத்திருக்கும்போதும் உழைக்க வேண்டும் என்பதுதான்.

தன் வேலை உண்டு, தான் உண்டு என்று வேலையில் கவனம் இருக்கவேண்டும். அடுத்தவனைக் குறை சொல்லுகிறவன், அதிலும் பணம் பொருள் உதவிகள் கொடுக்கும் ஒருவரையே குறை சொல்பவன், வேலையைச் செய்யமாட்டான். குருக்குவழி ஏதாவது உண்டா என்று பார்ப்பான்.

விதைத்துப் பெருக்கவேண்டிய பணத்தை, பொருளை, திறமையை,மண்ணுக்குள் புதைத்து மக்கிப்போகவைத்தது மா பெருந்தவறு. ஆகவே, உழைக்காதவன், அடுத்தவனைக் குறைசொல்பவன், குருக்குவழியில் சம்பாதிக்க நினைப்பவன், கிடைத்ததையும் பயன்படுத்தத்தெறியாதவன்,கிடைத்ததைக் கெடுப்பவன், உள்ளதையும் இழந்து தண்டனையும் பெருவது சரியானதே.

இந்த குறைகள் இல்லாதவன் வாழ்க்கையில் எல்லாவிதத்திலும் உயர்வான். எல்லாம் சேர்ந்துகொண்டே இருக்கும்.அவனுக்கு எதுவும் குறையிருக்காது. செய்து பாருங்கரூhநடடip;..


--அருட்திரு ஜோசப் லீயோன்


----------------------------

உழைப்பவர்க்கே உயர்வு வரும்

நிகழ்வு

ஓரூரில் இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் ‘மகிழ்ச்சியாக இருப்பதற்கு என்ன வழி?’ எனத் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டான். எனவே, அவன் பழங்காலத்தில் இருந்த துறவிகளைப் போன்று காட்டிற்குச் சென்று, கடுந்தவம் புரிந்து, அதன்மூலம் மகிழ்ச்சியாக இருக்கலாம்’ என்று முடிவுசெய்தான். அதனடிப்படையில் அவன் குடும்பம், உறவுகள், சொந்த பந்தங்கள என எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டு காட்டிற்குள் சென்றான்.

இரண்டு மூன்று நாட்களாகத் தொடர்ந்து நடந்துகொண்டே சென்றான். ஆனால், அவன் தவம் புரிவதற்கான சரியான மட்டும் அமையவில்லை. அதனால் அவன் இன்னும் தொடர்ந்து நடந்தான். ஓரிடத்தில் சலசலத்து ஓடும் சிற்றாறின் சத்தம் கேட்டது. உடனே அவன் அதனருகே சென்றான். அங்கு ரம்மியமான ஓர் இடமிருந்தது. அதனருகே மரங்களும் செடி கொடிகளும் என்று பார்ப்பதற்கே அந்த இடம் அவ்வளவு அழகாக இருந்தது. அதைப் பார்த்த அவனது உள்ளம் பூரித்துப்போனது. ‘நாம் தேடிக்கொண்டிருந்த இடம் இதுதான்... இந்த இடத்திலிருந்து தவம் செய்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கலாம்’ என்று முடிவுசெய்தான்.

அதன்பிறகு அவ்விடத்தில் இருந்த ஒரு மேடான பகுதியில் அமர்ந்துகொண்டு தவம் செய்யத் தொடங்கினான். ஓரிரு நாள்கள் அவனுக்கு நன்றான இருந்தன. ஏதோ புதுவிதமான ஓர் உலகத்திற்குள் செல்வதைப் போன்று அவன் உணர்ந்தான். அதன்பிறகு அவனால் தவம் செய்யமுடியில்லை. தனிமையாக இருப்பது அவனுக்கு வெறுப்பாய் இருந்தது. இதனால் அவன் சிந்தை கலங்கித் தன்னையே வெறுக்கத் தொடங்கி, கடவுளை நோக்கி கூக்குரலிட்டான்: “கடவுளே! என்னுடைய வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பதே கிடையாதா?” இதற்கிடையில் அவன் இரண்டு மூன்று நாள்களாகச் சாப்பிடாததால், மயக்கம் போட்டு கீழே சரிந்து விழுந்தான்.

அப்பொழுது அவனுக்கு ஒரு கனவு வந்தது. அந்தக் கனவில் வானதூதர் ஒருவர் தோன்றினார். அவரிடம் அவன் தன்னுடைய நிலையை எடுத்துச் சொன்னபோது, அவர் ‘இதோ பார்! உனக்கு முன்னம் ஒரு பெரிய மரம் இருக்கின்றதல்லவா. இதை வெட்டிக் கயிறுகளாகத் திரித்து மக்களிடம் விற்பனை செய். அவர்கள் உனக்குப் பதிலுக்குப் பணம் தருவார்கள். அவற்றைக் கொண்டு நீ உன்னுடைய குடும்பத்தோடு மகிழ்ச்சியாக வாழ். அதுதான் நீ மகிழ்ச்சியாக இருப்பதற்கான வழி. இப்படிச் சோம்பேறியாய் உட்கார்ந்திருப்பதால் மகிழ்ச்சியாக இருக்க முடியாது” என்று சொல்லி மறைந்து போனார். கனவிலிருந்து நிஜ உலகிற்கு வந்த அவன், வானதூதர் தன்னிடம் சொன்னது போன்றே செய்தான். அதன்மூலம் மகிழ்ச்சியாக இருப்பதற்கு என்ன செய்யவேண்டும் என்பதை உணர்ந்து கொண்டான்.

ஒருவர்க்கு மகிழ்ச்சியும் உயர்வும் அவர் உழைப்பதனால் மட்டும் கிடைக்குமே ஒழிய, சோம்பித் திரிவதனால் கிடைப்பதில்லை என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. நற்செய்தி வாசகமும் உழைத்தால் உயர்வு, உழைக்காவிட்டால் தாழ்வு என்ற செய்தியை எடுத்துச் சொல்கிறது. எனவே, நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.


உழைப்பால் உயர்ந்த இரண்டு பணியாளர்கள்

நற்செய்தியில் இயேசு தாலந்து உவமையைப் பற்றிப் பேசுகின்றார். இவ்வுவமையில் நெடும்பயணம் செல்லவிருந்த ஒருவர், தம் மூன்று பணியாளர்களை அழைத்து அவர்களிடம் அவரவர் திறமைக்கேற்ப அவர்களில் ஒருவர்க்கு ஐந்து தாலந்தும் இன்னொருவர்க்கு இரண்டு தாலந்தும் மற்றொருவர்க்கு ஒரு தாலந்தும் என பிரித்துக் கொடுக்கின்றார்.

இதில் நாம் கவனிக்கவேண்டிய அம்சம் என்னவெனில், தலைவர் ஒவ்வொருவர்க்கும் அவரவர் திறமைக்கேற்ப தலாந்துகளைப் பிரித்துக் கொடுப்பதுதான். ஐந்து தாலந்தை வைத்து வேலைபார்க்கும் ஒருவரிடம் ஒரு தாலந்தைக் கொடுத்து வேலை பார்க்கச் சொன்னாலும் பிரச்சினைதான். அதே நேரத்தில் ஒரு தாலந்தை வைத்துப் பணிசெய்பவரிடம் ஐந்து தாலந்துகளைக் கொடுத்தாலும் பிரச்சினைதான். அதனால்தான் அவர்களின் தலைவர் அவரவர் திறமைக்கேற்பத் தாலந்தைப் பிரித்துக் கொடுக்கின்றார். இதில் முதலில் வருகின்ற இரண்டு பணியாளர்கள் தங்களிடம் கொடுக்கப்பட்ட வேலைக்கு நம்பிக்கைக்குரியவர்களாய் இருந்து மேலும் ஐந்து, இரண்டு தாலந்துகளை ஈட்டி, தங்கள் தலைவரால் உயர்ந்த பொறுப்புகளில் அமர்த்தப்படுகின்றார்கள்.

உழைக்காமல் சோம்பேறியாக இருந்து, தாழ்ந்த ஒரு பணியாளர் 

இதற்கு முற்றிலும் மாறாக, ஒரு தாலந்தைப் பெற்றவர் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பணிக்கு நம்பிக்கைக்குரியவராய் இல்லாமல், அதைப் பயன்படுத்தாமல் வைத்திருக்கின்றார். இறுதியில் அவருடைய தலைவர் வருகின்றபோது கடுமையாகத் தண்டிக்கப்படுகின்றார். கடைசியில் வரும் இந்தப் பணியாளர், ‘தலைவர் தன்னை நம்பி ஒரு தாலந்தை ஒப்படைத்திருக்கின்றாரே (ஒரு தாலந்து என்பது இருபது ஆண்டுகால ஊதியம்), அதை பொறுப்போடு பயன்படுத்த வேண்டுமே’ என்று நினைக்கவில்லை; கடினமாக உழைக்கவுமில்லை. அதனால் தலைவரால் தண்டிக்கப்படுகின்றார்.

ஆகையால், நாம் கடவுள் நம்மை நம்பி ஒப்படைத்திருக்கின்ற பொறுப்புகளை, திறமைகளை வளர்த்தெடுக்கவேண்டும். அதற்காகக் கடுமையாக உழைக்கவேண்டும். அப்பொழுதான் நாம் கடவுளால் மேலும் மேலும் உயர்த்தப்படுவோம்.


சிந்தனை

‘சோம்பேறிக்கு எவ்வழியும் முள்நிறைந்த வழியே; சுறுசுறுப்பானவர்கள் செல்லும் பாதையோ நெடுஞ்சாலையாகும்’ (நீமொ 15: 19) என்கின்றது நீதிமொழிகள் நூல். நாம் சோம்பேறிகளாக இல்லாமல், கடின உழைப்பாளர்களாக இருந்து, இறைவன் நம்மை நம்பிக் கொடுத்திருக்கும் தாலந்துகளைப் பெருக்குவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

----------------------------------------

தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் திறம்படச் செயல்பட வேண்டும்


ஒரு தந்தையும் மூன்று மகன்களும்:

சீனாவில் சீப்பு வியாபாரி ஒருவர் இருந்தார். அவருக்கு வயதாகிக் கொண்டே போனதால்இ அவர் தனது வியாபாரத்தை தன்னுடைய மூன்று மகன்களில் திறமையான ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு நிம்மதியாக இறக்கலாம் என்று முடிவு செய்தார்.

இதையடுத்து அவர் தன்னுடைய மூன்று மகன்களையும் அழைத்துஇ அவர்களிடம்இ “நீங்கள் மூவரும் அருகில் உள்ள புத்த மடத்திற்குச் சென்றுஇ அங்குள்ள துறவிகளிடம் சீப்புகளை விற்று வாருங்கள். உங்களில் யார் கூடுதலாகச் சீப்புகளை விற்கிறீர்களோஇ அவரிடம் நான் என்னுடைய தொழிலை ஒப்படைப்பேன்” என்றார். இதற்குப் பிறகு மூவரும் ஆளுக்கொரு சாக்குப் பையில் சீப்புகளை எடுத்துக்கொண்டு அருகில் இருந்த துறவு மடத்திற்குச் சென்றார்கள்.

போகும் வழியில் மூவருக்கும்இ ‘துறவு மடத்தில் இருக்கும் துறவிகள் யாவரும் தலையில் முடியில்லாமல் மொட்டையாக அல்லவா இருப்பார்கள்! அவர்களிடம் எப்படி சீப்புகளை விற்பது?’ என்ற அச்சம் இருந்துகொண்டே இருந்தது. அவர்கள் துறவு மடத்தை அடைந்துஇ தங்கள் திறமையைப் பயன்படுத்திச் சீப்புகளை விற்கத் தொடங்கினார்கள்.


இரண்டு மூன்று நாள்கள் கழித்துஇ அவர்கள் மூவரும் தங்கள் தந்தையிடம் திரும்பி வந்தார்கள். முதலில் தந்தை மூத்தவனிடம்இ “நீ எத்தனை சீப்புகளை விற்றாய்?” என்று கேட்டதற்குஇ அவன் “இரண்டு” என்று சொன்னதும்இ “அவற்றை எப்படி விற்றாய்?” என்றார் அவர். அவனோஇ “நான் இந்த சீப்புகளைக் கொண்டு முதுகு சொரிந்துகொள்ளலாம் என்றேன். உடனே இரண்டு சீப்புகள் விற்பனையாயின” என்றான்.

அவனை அடுத்துஇ தந்தை இரண்டாமவனிடம்இ “நீ எத்தனை சீப்புகளை விற்றாய்?” என்று கேட்டதற்கு அவன்இ “நூறு சீப்புகளை விற்றேன்” என்றதும்இ “அவற்றை எப்படி விற்றாய்?” என்று அவர் அடுத்த கேள்வியைக் கேட்டார். அவன்இ “இந்தச் சீப்புகள் வாங்கித் துறவி மடத்தில் வைத்தால்இ இங்கு வரும் பார்வையாளர்களுக்குப் பயன்படும் என்றேன். அவர்கள் என்னிடமிருந்து நூறு சீப்புகளை வாங்கிக்கொண்டார்கள்.

கடைசியாக அவர் இளைய மகனிடம் அதே கேள்வியைக் கேட்டபோதுஇ அவன் அவரிடம்இ “நான் அவர்களிடம்இ இந்தச் சீப்புகளில் உங்கள் சமயக் கருத்துகளை பொறித்துஇ இங்கு வருவோரிடம் கொடுத்தால்இ உங்கள் சமயத்தை மிக எளிதாக வளர்க்கலாம் என்றதும்இ அவர்கள் என்னிடமிருந்து ஆயிரம் சீப்புகளை வாங்கிக் கொண்டார்கள்” என்றான். இதைக் கேட்டுப் பூரித்துப் போன தந்தைஇ அவனையோ தனது தொழிலுக்கு அதிபதியாக்கினார்.

ஆம் இந்த நிகழ்வில் வரும் இளைய மகன் தன்னிடமிருந்த திறமையைத் திறம்படப் பயன்படுத்தியதால்இ தன் தந்தையின் தொழிலுக்கு அதிபதியானான். இன்றைய இறைவார்த்தை கடவுள் நம்மைச் சிறப்பாகத் தேர்ந்தெடுத்திருக்கின்றார் எனில்இ நமக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்புகளைத் திறம்படப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனையைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.


திருவிவிலியப் பின்னணி:

இன்றைய முதல் வாசகத்தில் புனித பவுல்இ கடவுள் இந்த உலகம் மடமைஇ வலுவற்றவைஇ தாழ்ந்தவை எனக் கருதுவதைத் தேர்ந்தெடுத்ததைப் பற்றிப் பேசுகின்றார். எதற்காகக் கடவுள் இவற்றையெல்லாம் தேர்ந்தெடுத்தார் எனில்இ ஞானிகளையும் வலியோரையும் இந்த உலகம் பொருட்டாகக் கருதுவதை அழித்துவிடவே. இதுதான் கடவுளின் திட்டமாக இருக்கின்றது.

இப்படிக் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்புகளைத் திறம்படப் பயன்படுத்தவேண்டும். அதை நற்செய்தியில் இயேசு சொல்லும் தாலந்து உவமை நமக்குத் தெளிவுபடுத்துகின்றது. இயேசு சொல்லும் தாலந்து உவமையில்இ தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட தாலந்துகளைத் திறம்படப் பயன்படுத்தியவர்கள் உயர்ந்த நிலையை அடைகின்றார்கள். இவர்களைத் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளுக்கு நம்பிக்கைக்குரியவர்களாய் இருந்தார்கள் என்று சொல்லலாம். அதே நேரத்தில் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட தாலந்தைத் திறம்படப் பயன்படுத்தாதவர் அதற்குரிய தண்டனையைப் பெறுகின்றார். இவர் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பிற்கு நம்பிக்கைக்குரியவராய் இல்லை என்று சொல்லலாம்.

ஆகவேஇ கடவுள் நம்மைச் சிறப்பாகத் தேர்ந்தெடுத்துஇ நம்மிடம் பொறுப்புகளை ஒப்படைத்திருக்கின்றார் எனில்இ அதற்கு நாம் நம்பிக்கைக்குரியவர்களாய் இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் உயர்வடையலாம்.


சிந்தனைக்கு:

 கடவுள் எல்லாரையும் தேர்ந்துகொள்வதில்லை; அவர் ஒருவரைத் தேர்ந்துகொள்கின்றார் எனில்இ அவர் மிகவும் சிறப்பு வாய்ந்தவர். அதே நேரத்தில் அவர் கடவுளுக்கு நம்பிக்கைக்குரியவராய் இருக்க அழைக்கப்படுகின்றார்.

 நம்பிக்கைக்குரியவரே நற்பலன் தருபவராக இருக்கின்றார்

 பலன் தரும் வாழ்க்கை படைத்தவருக்கு ஏற்ற வாழ்க்கை.


ஆன்றோரின் வாக்கு:

‘கடவுள் நம்மை வெற்றியாளர்களாய் அல்லஇ நம்பிக்கைக்குரியவர்களாய் இருக்கவே அழைத்திருக்கின்றார்’ என்பார் கொல்கொத்தா நகர்ப் புனித தெரசா. எனவேஇ நாம் நமக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புகளில் நம்பிக்கைக்குரியவர்களாய் இருந்துஇ இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ் பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

------------------------------------

திருப்பாடல் 33: 12-13, 18-19, 20-21 (12b)

“அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார்”

தலைசிறந்த செயல் எது?


இறைமனிதர் ஒருவர் இருந்தார். ஒருநாள் அவரிடம் வந்த ஓர் இளைஞன், “ஐயா! தலைசிறந்த செயல் எது? எனக் கேட்டான். இறைமனிதர் சிறிது நேரம் ஆழ்ந்து யோசித்துவிட்டு அவனிடம், “பசித்தோருக்கு உணவிடுவதும், தாகத்தோடு இருப்போருக்கு தண்ணீர் கொடுப்பதுதான் தலைசிறந்த செயல். ஏனெனில், இதனைச் செய்வோர் ஒருவருக்கு உயிரளிப்பவருக்குச் சமமாகின்றார்” என்றார்.

ஆம், பசியோடு இருப்பவருக்கு உணவளிப்பவரும், தாகத்தோடு இருப்பவருக்குத் தண்ணீர் அளிப்பவரும் உயிரளிப்பவருக்குச் சமமானவர்களே! இதனைக் கடவுள் ஒவ்வொரு நாளும் செய்து கொண்டிருப்பதால், அவர் உயிரளிப்பவரே! இன்று நாம் பாடக்கேட்ட பதிலுரைப்பாடல், “ஆண்டவர் அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார்” என்கிறது. அது குறித்து நாம் சிந்திப்போம்.


திருவிவிலியப் பின்னணி:

கடவுள் பேரன்புமிக்கவர்; அந்த அன்பினாலேயே அவர் தமக்கு அஞ்சி வாழ்வோரைக் கண்ணோக்குகின்றார்; சாவினின்று காக்கின்றார்; பஞ்சத்தில் வாழ்விக்கின்றார்; துணையும் கேடயமுமாக இருக்கின்றார். இந்த உண்மையை எடுத்துக்கூறுகின்ற ஒரு பாடல்தான் இன்று நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 33.

புகழ்ப்பா வகையைச் சேர்ந்த திருப்பாடல் 33 இன் நடுநாயகமாக இருப்பது, “அவரது – ஆண்டவரது - பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது” (5) என்ற இறைவார்த்தைதான். ஆண்டவர் பேரன்பு மிக்கவராய் இருப்பதால்தான் அவர் எல்லாருக்கும், அதிலும் குறிப்பாக, தமக்கு அஞ்சி வாழ்வோருக்கு மேலே சொல்லப்பட்ட எல்லா நன்மைகளையும் செய்கின்றார்.

ஆண்டவர் தம் மக்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார் என்றால், நிறைவாகப் பெற்றுக்கொண்டவர்கள் பற்றக்குறையோடு இருப்பவர்களோடு தங்களிடம் இருப்பதைப் பகிர்ந்துகொள்ளவேண்டும். அது அவர்களது கடமை (மத் 14:16). இவ்வாறு நிறைவாகப் பெற்றுக்கொண்டவர்கள் பற்றாக்குறையோடு இருப்பவர்களோடு தங்களிடம் இருப்பதைப் பகிர்ந்துகொள்ளும்போது பஞ்சமோ, பட்டினியோ, பசியோ இல்லாமல் போகும்.

ஆதலால், தமது பேரன்பினால் நம்மை ஆபத்துகளிலிருந்து காத்து, உணவிடும் கடவுளைப் போற்றிப் புகழும் அதே நேரத்தில், நாம் நமது சமூகக் கடமைகளை உணர்ந்து, வறியோருக்கு உணவிட முன் வருவோம்.

சிந்தனைக்கு:

 ஆண்டவர் நமக்குச் செய்த நன்மைகள் ஏராளம். அவற்றையெல்லாம் நன்றியோடு நினைத்துப் பார்த்து அவரைப் போற்றிப் புகழ்வோம்.

 ஆண்டவரிடமிருந்து பேரன்பைப் பெறுகின்ற நாம் அதை மற்றவருக்கும் வழங்குவோம்.

 ஆண்டவரை ஏற்றிப் போற்றுவோரின் வாழ்க்கை நிச்சயம் ஏற்றம் பெறும்.


இறைவாக்கு:

‘எல்லா உயிரினங்களின் கண்களும் உம்மையே நோக்குகின்றன. தக்க வேளையில் நீரே அவற்றிற்கு உணவளிக்கின்றீர்’ (திபா 145: 15) என்பார் திருப்பாடல் ஆசிரியர். எனவே, நமக்கு உணவளித்து, நம்மை வாழ்விக்கின்ற ஆண்டவரைப் போற்றிப் புகழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

------------------------------------------

 கடவுள் கொடுத்த வாய்ப்புகளை பயன்படுத்த தயாரா!

 சிறுவயதிலிருந்து பத்தாம் வகுப்பு படிக்கும் வரை நான் குருவானவராக செல்வேன் என்று கனவில் கூட நினைத்ததில்லை. பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிந்தவுடன் எதார்த்தமாக பங்கு ஆலயத்தின் நடைபெற்ற நவநாள் திருப்பலிக்கு சென்றேன். அந்த நவநாள் திருப்பலி முடிந்த பிறகு தான் என்னுடைய பங்கு இணைப்பங்கு பணியாளராக பணி செய்த அருள்பணியாளர் இறையழைத்தலை பற்றி  எனக்கு எடுத்து கூறி இறையழைத்தல் முகாமிற்கு அனுப்பி வைத்தார். அன்று நான் உணர்ந்த இந்த வாய்ப்பு இன்று என்னை கொடுத்து குருத்துவ நிலைக்கு உயர்த்தி உள்ளது. குருத்துவம் என்பது இறைவனின் மாபெரும் கொடை என்று சொல்வேன். இந்த மாபெரும் கொடையை கடவுள் எனக்கு பரிசாக கொடுத்திருக்கிறார். எனக்கு இறையழைத்தல் உண்டு என்று கடவுள் அந்த அருள்பணியாளர் வழியாக வெளிப்படுத்தினார். கடவுள் கொடுத்த இந்த வாய்ப்பை அன்று முழுமையாக பயன்படுத்தினேன். இன்று இயேசுவின் பிரதிநிதியாக குருத்துவ வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். 

நம்முடைய வாழ்க்கையிலும் கடவுள் பல வாய்ப்புகளை ஒவ்வொரு நிலையிலும் கொடுத்து வருகிறார். அதை முழுமையாக பயன்படுத்தும் பொழுது வாழ்வின் வெற்றி கனியை சுவைக்க முடியும். இந்த மண்ணுலக வாழ்வு கடவுள் கொடுத்த உன்னதமான கொடை.  கிடக்கின்ற வாய்ப்புகளை நேரிய முறையில் பயன்படுத்தி வாழ்வில் பயணிக்கிற பொழுது, வாழ்வில் சாதனைகள் பல புரிய முடியும். 

கடவுள் தாவீதை அழைத்த பொழுது ஒரு சிறு பையனாக இருந்தார். ஆனால் இறைவன் பெயரால் கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தினார். எனவே இஸ்ரேல் நாட்டின் இரண்டாவது அரசராக உயர்த்தப்பட்டார். அன்னை மரியாவும் இளம்பெண்ணாக ஆண்டவரின் அழைப்பை ஏற்று இயேசுவின் தாயாக மாறிட தன்னையே முழுவதுமாக கையளித்து மீட்பின் தாயாக மாற வாய்ப்பினை பயன்படுத்தினார். இறுதியிலே கடவுள் அவரின் உடலையும் ஆன்மாவையும் விண்ணகத்திற்கு எடுத்துச் சென்று அவரை விண்ணக மண்ணக அரசியாக உயர்த்தினார். சீடர்களும் தங்களுக்கு கொடுத்த வாய்ப்புகளை பயன்படுத்தினார்கள். வாய்ப்பு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் நற்செய்தியை தொடர்ந்து எல்லா மக்களுக்கும் அறிவித்தார்கள். இறுதியில் ஆண்டவர் இயேசுவின் சாட்சியமுள்ள திருத்தூதர்களாக உயர்த்தப்பட்டார்கள்.

இன்றைய நற்செய்தியில் இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு தாலந்து உவமையைக் கூறியுள்ளார். கிடைக்கும் வாய்ப்பை‌ப்‌ பயன்படுத்துபவர்கள் வாழ்வில் சாதனைகளை அடைகின்றனர். உழைப்பிற்கேற்ற கைமாற்றை பெறுகின்றனர். உவமையில் கூட ஐந்து காலத்தை பெற்றவர்‌ மேலும் ஐந்து தாலத்தை ஈட்டினார். எனவே தலைவரின் பாராட்டுதலைப் பெற்றார். இரண்டு காலத்தைப் பெற்றவர் மேலும் இரண்டு தாலந்தை ஈட்டினார். எனவே தலைவரின் பாராட்டுதலைப் பெற்றார். ஒரு தாலந்தைப் பெற்றவர் உழைக்காமல் தாலந்தை மண்ணில் புதைத்து  சோம்பேறியாக வாழ்ந்து பெற்றதை அப்படியே கொடுத்தார். எனவே தலைவரால் அவர் தண்டிக்கப்பட்டார். 

இறைவனின் இறையாட்சியிலும் அப்படி தான். கிடைக்கின்ற வாய்ப்புகளைப் பயன்படுத்தி இறையாட்சியில் செல்வத்தை சேர்த்து வைக்கும் பொழுது நிலைவாழ்வைப் பெற முடியும். வாய்ப்புகளைப் பயன்படுத்தி இறையாட்சி மதிப்பீட்டிற்கு உகந்த வாழ்க்கை வாழவில்லையென்றால் நிலைவாழ்வை இழந்துவிட கூடும். எனவே கடவுள் நம் வாழ்வில் கொடுத்த எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்தி நிலையான வாழ்வை உரிமைச் சொந்தமாக்கிக் கொள்ள தேவையான அருளை வேண்டுவோம். 

 இறைவேண்டல்

வல்லமையுள்ள இறைவா! எங்கள் அன்றாட வாழ்வில் நாங்கள் பெறுகின்ற வாய்ப்புகளை பயன்படுத்தி, இறையாட்சியின் மதிப்பீடுகளை வாழ்ந்து நிலைவாழ்வின் ஆசிர்வாதங்களைப் பெற்றுக் கொள்ள அருளைத் தாரும். ஆமென்.

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு


 Join with us 👇

 Website: https://catholicvoicecv.blogspot.com

Youtube: https://www.youtube.com/channel/UCcgIiK1gUEqRCmTsc7ZjAoA

Youtube: https://www.youtube.com/channel/UCxBBHQAKIjii_MsZfIYNF5A

Facebook: https://www.facebook.com/Catholic-Voice-108151311955076





Thursday, August 25, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (26-08-2022)

முதல் வாசகம்

கிறிஸ்துவின் சிலுவை பிற இனத்தாருக்கு மடமையாகவும் அழைக்கப்பட்டவர்களுக்கு கடவுளின் வல்லமையும் ஞானமுமாக உள்ளது.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 17-25

சகோதரர் சகோதரிகளே,

திருமுழுக்குக் கொடுப்பதற்கு அல்ல, நற்செய்தியை அறிவிக்கவே கிறிஸ்து என்னை அனுப்பினார். மனித ஞானத்தின் அடிப்படையிலான சொற்களில் இந்நற்செய்தியை அறிவித்தலாகாது. அவ்வாறு அறிவித்தால் கிறிஸ்துவின் சிலுவை பொருளற்றுப் போய்விடும். சிலுவை பற்றிய செய்தி அழிந்துபோகிறவர்களுக்கு மடமையே. ஆனால், மீட்புப் பெறும் நமக்கோ அது கடவுளின் வல்லமை.

ஏனெனில், “ஞானிகளின் ஞானத்தை அழிப்பேன், அறிஞர்களின் அறிவை வெறுமையாக்குவேன்” என்று மறைநூலில் எழுதியுள்ளது. இவ்வுலகைச் சார்ந்த ஞானி எங்கே? அறிவாளி எங்கே? வாதிடுவோர் எங்கே? இவ்வுலக ஞானம் மடமை எனக் கடவுள் காட்டிவிட்டார் அல்லவா? கடவுளுடைய ஞானத்தால் அவரை அறிந்துகொள்ள முடியும். ஆனால் உலகினர் தம் ஞானத்தால் கடவுளை அறிந்துகொள்ளவில்லை. எனவே மடமை என்று கருதப்பட்ட நற்சய்தியைப் பறைசாற்றியதன் வழியாக நம்பிக்கை கொண்டோரை மீட்கக் கடவுள் திருவுளம் கொண்டார். யூதர்கள் அரும் அடையாளங்கள் வேண்டும் என்று கேட்கிறார்கள்; கிரேக்கர் ஞானத்தை நாடுகிறார்கள். ஆனால் நாங்கள் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பற்றிப் பறைசாற்றுகிறோம். அச்சிலுவை யூதருக்குத் தடைக் கல்லாகவும் பிற இனத்தாருக்கு மடமையாயும் இருக்கிறது. ஆனால் அழைக்கப்பட்டவர்கள், யூதரானாலும் கிரேக்கரானாலும், அவர்களுக்குக் கிறிஸ்து கடவுளின் வல்லமையும் ஞானமுமாய் இருக்கிறார். ஏனெனில் மனித ஞானத்தை விடக் கடவுளின் மடமை ஞானம் மிக்கது; மனித வலிமையை விட அவருடைய வலுவின்மை வலிமை மிக்கது.

ஆண்டவரின் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல்



திபா 33: 1-2. 4-5. 10-11 (பல்லவி: 5b)

பல்லவி: ஆண்டவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது.


1 நீதிமான்களே, ஆண்டவரில் களிகூருங்கள்; நீதியுள்ளோர் அவரைப் புகழ்வது பொருத்தமானதே.

2 யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள். - பல்லவி

4 ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை.

5 அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. - பல்லவி

10 வேற்றினத்தாரின் திட்டங்களை ஆண்டவர் முறியடிக்கின்றார்; மக்களினத்தாரின் எண்ணங்களைக் குலைத்துவிடுகின்றார்.

11 ஆண்டவரின் எண்ணங்களோ என்றென்றும் நிலைத்திருக்கும்; அவரது உள்ளத்தின் திட்டங்கள் தலைமுறை தலைமுறையாய் நீடித்திருக்கும். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 21: 36

அல்லேலூயா, அல்லேலூயா! 

மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கு எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள். அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்



இதோ மணமகன் வருகிறார். அவரை எதிர்கொள்ள வாருங்கள்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 1-13

அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களுக்கு உவமையாகக் கூறியது: “விண்ணரசு எவ்வாறு இருக்கும் என்பதைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாக விளக்கலாம்: மணமகனை எதிர்கொள்ள கன்னித் தோழியர் பத்துப் பேர் தங்கள் விளக்குகளை எடுத்துக்கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களுள் ஐந்து பேர் அறிவிலிகள்; ஐந்து பேர் முன்மதி உடையவர்கள். அறிவிலிகள் ஐவரும் தங்கள் விளக்குகளை எடுத்துச் சென்றார்கள்; ஆனால் தங்களோடு எண்ணெய் எடுத்துச் செல்லவில்லை. முன்மதியுடையோர் தங்கள் விளக்குகளுடன் கலங்களில் எண்ணெயும் எடுத்துச் சென்றனர். மணமகன் வரக் காலந் தாழ்த்தவே அனைவரும் தூக்க மயக்கத்தால் உறங்கிவிட்டனர்.

நள்ளிரவில், ‘இதோ மணமகன் வருகிறார். அவரை எதிர்கொள்ள வாருங்கள்’ என்ற உரத்த குரல் ஒலித்தது. மணமகளின் தோழியர் எல்லாரும் எழுந்து தங்கள் விளக்குகளை ஒழுங்குபடுத்தினர். அப்போது அறிவிலிகள் முன்மதியுடையோரைப் பார்த்து, ‘எங்கள் விளக்குகள் அணைந்துகொண்டிருக்கின்றன; உங்கள் எண்ணெயில் எங்களுக்கும் கொடுங்கள்’ என்றார்கள். முன்மதியுடையவர்கள் மறுமொழியாக, ‘உங்களுக்கும் எங்களுக்கும் எண்ணெய் போதுமான அளவு இராமல் போகலாம். எனவே, வணிகரிடம் போய் நீங்களே வாங்கிக் கொள்வதுதான் நல்லது’ என்றார்கள்.

அவர்களும் வாங்கப் புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது மணமகன் வந்து விட்டார். ஆயத்தமாய் இருந்தவர்கள் அவரோடு திருமண மண்டபத்துக்குள் புகுந்தார்கள். கதவும் அடைக்கப்பட்டது. பிறகு மற்றத் தோழிகளும் வந்து, ‘ஐயா, ஐயா, எங்களுக்குக் கதவைத் திறந்துவிடும்’ என்றார்கள். அவர் மறுமொழியாக, ‘உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; எனக்கு உங்களைத் தெரியாது’ என்றார். எனவே விழிப்பாய் இருங்கள்; ஏனெனில் அவர் வரும் நாளோ, வேளையோ உங்களுக்குத் தெரியாது.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

----------------------------------------------------------

மனித ஞானமும் கடவுளின் ஞானமும்


பொதுக் காலத்தின் இருபத்து ஒன்றாம் வாரம் வெள்ளிக்கிழமை

I 1 கொரிந்தியர் 1: 17-25

II மத்தேயு 25: 1-13

மனித ஞானமும் கடவுளின் ஞானமும்


இப்படியும் ஒரு ஞானி:

எல்லாராலும் ஞானி என்று கருதப்பட்ட ஒருவர் இருந்தார். அவரைப் பார்ப்பதற்காக பலரும் பல்வேறு இடங்களிலிருந்தும் வந்து போனார்கள்.

ஒருநாள் அவரைப் பார்ப்பதற்காகப் பெருந்திரளான மக்கள் வந்திருந்தார்கள். அவர்கள் அவரை சூழ்ந்துகொண்டு, தங்களுக்கு ஏதாவது போதிக்குமாறு அவரிடம் கேட்டார்கள். அவர்கள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அவர், தனக்கு இடப்பக்கம் அமர்ந்திருந்தவர்களைப் பார்த்தார். பின்னர் அவர் வலப்பக்கம் அமர்ந்திருந்தவர்களைப் பார்த்தார். சிறிது நேரம் இடைவெளிக்குப் பின்பு அவர் தனக்குப் பின்னால் அமர்ந்திருந்தவர்களையும், தனக்கு முன்னால் அமர்ந்திருந்தவர்களையும் பார்த்தார். மீண்டுமாக சிறிதுநேரம் அமைதி நிலவியது பின்னர் அவர் மேலயும் கீழேயும் பார்த்துவிட்டு அமைதியாகிவிட்டார்.

திரண்டிருந்த மக்கள் அனைவரும் அவரது ஒவ்வொரு செயலையும் பார்த்துவிட்டு, ‘என்னவொரு ஞான நிறைந்த போதனை’ என்று வியந்து, கைகளைத் தட்டி ஆர்ப்பரித்தார்கள்.

நீதிமொழிகள் நூல் சொல்வது போல், பேசாதிருந்தால் மூடனும் ஞானமுள்ளவன் (நீமொ 17: 28) எனக் கருதப்படலாம். ஆனால், அவன் உண்மையில் ஞானமுள்ளவன் கிடையாது. இன்றைய இறைவார்த்தை யார் ஞானமுள்ளவர் என்ற சிந்தனையைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

இன்றைக்குப் பலரும் தங்களை ‘ஞானி’ என நினைத்துக் கொள்கின்றார்கள், அல்லது காட்டிக் கொள்கின்றார்கள். உண்மையில் அவர்கள் ஞானியா? என்பது மிகப்பெரிய கேள்வி. “தொங்கவிடப்பட்டவன் கடவுளால் சபிக்கப்பட்டவன்” (இச 21: 23) என்ற இறைவார்த்தையின் அடிப்படையில், சிலுவை உலகினரின் பார்வையில் மடமையாகக் கருதப்பட்டது. ஆனால், இன்றைய முதல் வாசகத்தில் பவுல், “மனித ஞானத்தைவிடக் கடவுளின் மடமை ஞானம் மிக்கது; மனித வலிமையைவிட அவருடைய வலுவின்மை வலிமை மிக்கது” என்கிறார். எனில், சிலுவையில் அறையைப்பட்ட கிறிஸ்துவே கடவுளின் ஞானமாக வல்லமையாக இருக்கின்றார். இதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் இல்லை.

இந்த இறைஞானத்தை ஒருவர் பெறவேண்டும் என்றால், அவர் இயேசுவின்மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அவர்மீது நம்பிக்கை வைக்காமல், இறைஞானத்தைப் பெறுவது சாத்தியமில்லாது.

இன்றைய நற்செய்தி வாசகம் இறைஞானத்தோடு செயல்பட்டால் விண்ணரசில் நுழையலாம், விண்ணக விருந்தில் கலந்து கொள்ளலாம் என்ற சிந்தனையைத் தருகின்றது. பொதுவாக யூதர்களின் திருமண நிகழ்வு மணமகள் வீட்டிலிருந்து தொடங்கும். மணமகன் மணமகளின் வீட்டிற்கு வந்தபிறகு (அது எந்த நேரமாகவும் இருக்கலாம்) பவனி தொடங்கி மணமகன் வீட்டை அடையும். அதன்பிறகு திருமண விருந்து தொடங்கும். இதற்காக மணமகளின் தோழிகள் ஆயத்தமாய் இருக்க வேண்டும். நற்செய்தியில் இயேசு சொல்லும் உவமையில் வரும் ஐந்து தோழிகள் அறிவிலிகளாக இருக்கின்றார்கள். இவர்கள் இயேசுவின்மீது நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு, அவரது வருகைக்கு ஆயத்தம் இல்லாமல் இருப்பவர்களுக்கு அடையாளம். முன்மதியுடைய தோழிகளோ ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு, அவருடைய வருகைக்காக ஆயத்தமாக இருந்தவர்களுக்கு அடையாளம்.

யாரெல்லாம் இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டிருக்கின்றார்களோ, அவர்களுக்கு அவர் இறைஞானத்தைத் தருகின்றார். அதைக் கொண்டு அவர்கள் முன்மதியோடு செயல்பட்டு, ஆண்டவரின் அரசில் நுழைகின்றார்கள். எனவே, இறைஞானம் நமக்குக் கிடைக்க இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டு வாழ்வோம்.


சிந்தனைக்கு:

 ஆண்டவரைப் பற்றிய அச்சமே ஞானத்தின் தொடக்கம்

 உலக அறிவு கடவுளுக்கு முன்பு ஒன்றுமே இல்லை.

 கடவுளுக்கு முன்பாகத் தாழ்த்தி கொள்வோரைக் கடவுள் தனது அருளால் உயர்த்துவார்.

இறைவாக்கு:

‘என்னைப் பொறுத்தமட்டில் என் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்ற செல்வம்’ (பிலி 3: 8) என்பார் புனித பவுல். எனவே, இயேசுவைப் பற்றிய அறிவே ஒப்பற்ற செல்வம் என உணர்ந்து வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

*******

1கொரிந்தியர் 1: 17 – 25

சிலுவை – மீட்பின் சின்னம்

பவுலடியார் அறிவித்த நற்செய்தியில், மையமாக இருந்தது சிலுவை, ”சிலுவை பற்றியச் செய்தி அழிந்து போகிறவர்களுக்கு மடமையே” (18) மற்றும் சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்து, ”நாங்கள் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பற்றிப் பறைசாற்றுகின்றோம்”(23). சிலுவை என்பது குற்றவாளிகளுக்கு உரோமைப் பேரரசால் வழங்கப்பட்ட கொடூரமான தண்டனை. திருடர்களுக்கும், அரசை எதிர்த்து புரட்சி செய்கிறவர்களுக்கும் வழங்கப்படுகிற தீர்ப்பு. பொதுமக்களின் பார்வையில், பல தரப்பட்ட கொடுமைகளோடு நிகழ்கிற, அவமானச்சின்னம் தான், இந்த சிலுவைச்சாவு. யூதப் பாரம்பரியத்திலும் கூட, இது சபிக்கப்பட்ட இறப்பாகவே பார்க்கப்பட்டது, ”இணைச்சட்டம் 21: 23 ”தொங்கவிடப்பட்டவன் கடவுளால் சபிக்கப்பட்டவன்”. இவற்றையெல்லாம் வைத்து பார்க்கிறபோது, சிலுவை தான் மீட்பின் சின்னம் என்று கூறுவது முட்டாள்தனம் மட்டுமல்ல, அது கயமைத்தனம் என்றே ஒருவர் சொல்ல முடியும். 1: 22 ல் நாம் பார்ப்பது போல, யூதர்கள் கடவுளை நம்புவதற்கு, அறிந்து கொள்வதற்கு அடையாளங்களையும், அருங்குறிகளையும் கேட்கிறார்கள். கிரேக்கா்களோ ஞானத்தைத் தேடுகிறார்கள்.

ஆனால், கடவுள் தன்னை வெளிப்படுத்த, அடையாளத்தையோ, ஞானத்தையோ தேர்ந்தெடுக்கவில்லை. மாறாக, அவமானச்சின்னம் என்று இந்த உலகம் கருதிய சிலுவையையே தேர்ந்து கொண்டார். நாம் கடவுளைத் தேடுகிற வழிகளில் அவர் தன்னை வெளிப்படுத்தவில்லை. மாறாக, மனிதர்கள் தேடுகிற வழியை அழித்தொழித்து, அவர்கள் நினைத்திராத வடிவத்தில் தன்னை வெளிப்படுத்துகிறார். யூதரானாலும் சரி, கிரேக்கரானாலும் (புறவினத்தார்) சரி, அனைவரையும் இணைக்கக்கூடிய பாலமாக சிலுவை உருப்பெறுகிறது. தூய பவுலடியார் இந்த பகுதியின் வழியாக, நமக்குச் சொல்ல வருகிற செய்தி, கிறிஸ்தவர்கள் அனைவரும் தங்களுக்குள்ளாக வேற்றுமை பாராட்டாது, ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதே ஆகும்.

இன்றைக்கும் கிறிஸ்தவர்களிடையே சாதி, பொருளாதார வேறுபாடுகள் இருப்பது, கிறிஸ்துவை முழுமையாக அறிந்து கொள்ளாததையும், ஆன்மீகத்தை வெறும் வழிபாட்டாகவே நாம் பார்க்கிற மனநிலையில் இருக்கிறோம் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. இதனைக் கடந்து சிந்திப்பதற்கு, தூய பவுலடியார் நமக்கு அழைப்புவிடுக்கிறார்.

- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்


 சிந்தனை.

தூக்க மயக்கம் உங்களைத் தின்றுவிடும்

மத்தேயு 25:1-13

இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துதுகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.

அன்புமிக்கவர்களே! வாழ்க்கையை கொண்டாடுங்கள். சந்தோசமாக மகிழ்ச்சியோடு கொண்டாடுங்கள். இந்த வசனங்களை நாம் கேட்டிருக்கிறோம். யார் வாழ்க்கையை கொண்டாடுகிறார்கள்?. யார் வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள்?. நல்ல சுறுசுறுப்பாக அனுதின கடமைகளை செய்பவர்கள், கடமைகளை தள்ளிப் போடாமல் கருத்துடன் செய்வர்கள் தான் வாழ்க்கையை கொண்டாடுகிறார்கள். வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள்.

பலருடைய வாழ்க்கை கொண்டாட்டம் இல்லாமல் திண்டாட்டமாகவே ஓடுகிறதே காரணம் என்ன? அதற்கான இரண்டு காரணங்களை இன்றைய நற்செய்தி வாசகம் நம் கண்முன்னே வைக்கின்றது.

1. ஆர்வமற்றவர்கள்

அன்றன்றுள்ள கடமைகளை அன்றே செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இல்லாதவர்கள் இன்பமாய் இருப்பதில்லை. அடுத்த நாளைக்கு தள்ளிப்போடுகிறார்கள். அடுத்த நாள் செய்ய முடிவதில்லை. குற்றயுணர்வு வருகிறது. வாழ்வு கசப்பாகிறது.

2. அடிமைகள்

ஆட்களுக்கு, பொருட்களுக்கு அடிமைகளாக இருக்கின்றவர்கள் எப்போதும் தூக்க மயக்கத்துடன் அழைவர். அசதி அவர்களை ஆட்கொள்ளும். சோர்வு ஒரு திமிங்கலம் போல அவர்களை விழுங்கும். வாழ்வே மாயமாக மாறிவிடும்.

மனதில் கேட்க…

1. என் வாழ்க்கை எனக்கு கொண்டாட்டாமா அல்லது திண்டாட்டமா?

2. இப்போது இருப்பதை விட இன்னும் ஆர்வமாகவும், சுறுசுறுப்பாகவும் நான் செயல்படலாமே?

மனதில் பதிக்க…

விழிப்பாயிருங்கள், ஏனெனில் அவர் வரும் நாளோ வேளையே உங்களுக்குத் தெரியாது(மத் 25:13)

அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா

-------------------------

உங்களைத் தெரியாது

விண்ணரசு பற்றிய எடுத்துக்காட்டாக, பத்துக் கன்னியர் அல்லது பத்துத் தோழியர் எடுத்துக்காட்டை முன்மொழிகின்றார் இயேசு. இந்த எடுத்துக்காட்டே மத்தேயு நற்செய்தியில் நாம் காணும் இறுதி உவமை ஆகும். திருமண நிகழ்வின் பின்புலத்தில் இந்த உவமை அமைகின்றது. யூதர்களின் திருமணம் இரு நிலைகளில் நடந்தேறும். முதலில், நிச்சயம். இரண்டாவது திருமணம். திருமண நிகழ்வில் மணமகள் அழைப்பு, மணமகனுடைய பெற்றோர்முன் திருமணம், ஏழுநாள் கொண்டாட்டம் என்று மூன்று பகுதிகள் உண்டு. மணமகளை அழைத்துச் செல்வதற்காக மணமகன் அவளுடைய இல்லத்திற்கு வரும்போது இந்த நிகழ்வு நடக்கிறதா, அல்லது மணமகளை மணமகன் தன் பெற்றோரின் இல்லத்திற்கு அழைத்துச் செல்லும்போது நடக்கிறதா என்பது பற்றிய கலாச்சாரத் தரவுகள் தெளிவாக இல்லை.

மேலும், இந்த உவமையை இயேசுவே மொழிந்தாரா? அல்லது தொடக்கத் திருஅவை வாய்மொழி வரலாற்றில் இது உருவானதா என்றும் தெரியவில்லை. ஏனெனில், 'முன்மதியோடு அல்லது தயாரிப்பு நிலையில் இருத்தல்' என்பது, இயேசுவின் மலைப்பொழிவு பகுதியில் வரும், 'அன்றன்றைய தொல்லை அன்றன்றைக்குப் போதும்' என்னும் அறிவுரைப் பகுதியின் முரணாகவும் தெரிகின்றது. 

நற்செய்திப் பகுதியின் இறுதி வாக்கியத்திலிருந்து நம் சிந்தனையைத் தொடங்குவோம். கடைகளில் போய் எண்ணெய் வாங்கிக் கொண்டு இல்லம் திரும்பிய கன்னித் தோழியர் மணமகனின் கதவுகளைத் தட்டுகின்றனர். அப்போது அவர், 'எனக்கு உங்களைத் தெரியாது' என்கிறார். இது மிகப் பெரிய நிராகரிப்பு. 

இப்போது விளக்குகள் எரிந்துகொண்டிருந்தாலும் அவற்றின் வெளிச்சத்தால் பயனொன்றும் இல்லை. அந்த வெளிச்சம்கூட அவர்களை மணமகனுக்கு அடையாளப்படுத்தவில்லை. 

விண்ணரசு பற்றி இந்த உவமை சொல்வது என்ன?

விண்ணரசுக்குள் சிலர் அனுமதிக்கப்படுவர். சிலருக்கு அனுமதி மறுக்கப்படும். அனுமதி மறுக்கப்பட்டவர்கள் உள்ளே நுழைவது சாத்தியமே இல்லை. மேலும், முன்மதி அல்லது தயாரிப்பு நிலை மிகவே அவசியம்.

ஐந்து தோழியர் அறிவிலிகள் எனக் கருதப்பட மூன்று காரணங்கள் உள்ளன:

ஒன்று, அவர்கள் தங்களை மையமாக வைத்து யோசித்தார்களே அன்றி, மணமகனை மையமாக வைத்து யோசிக்கவில்லை. தங்கள் கைகளில் உள்ள விளக்கு எரிகிறது. அதற்குள் அவர் வந்துவிடுவார் என நினைக்கின்றனர். நேற்றைய நற்செய்தியில் நாம் கண்ட பொல்லாத பணியாளர், 'தலைவர் வரக் காலம் தாழ்த்துவார்' எனத் தனக்குள் சொல்லிக் கொள்கின்றார். இந்த இளவல்களோ, 'தலைவர் சீக்கிரம் வந்துவிடுவார்' எனத் தனக்குள் சொல்லிக் கொள்கின்றனர். இருவர் நினைப்பதும் தவறாகிவிடுகிறது.

இரண்டு, 'உங்கள் எண்ணெயில் எங்களுக்கும் கொடுங்கள்' எனத் தங்களின் சகத் தோழியரிடம் பங்கு கேட்கின்றனர். இப்படிச் செய்வதால் அவர்கள் தோழியரின் வளத்தைப் பகிர்ந்துகொள்ள நினைப்பதுடன், அவற்றை வற்றிப் போகச் செய்யவும் துணிகின்றனர். ஆனால், விண்ணரசைப் பொருத்தவரையில் அவர்களுடைய செயல்களின் பலன்கள் அவர்களுக்கு மட்டுமே. மற்றவர்கள் அவற்றில் பங்குபோட இயலாது.

மூன்று, திசை மாறிச் செல்கின்றனர். மணமகன் வருகின்ற திசை நோக்கிச் செல்லாமல், வணிகரின் திசை நோக்கிச் செல்கின்றனர். இவர்களுடைய பார்வை மீண்டும் தங்கள் விளக்குகளின்பக்கம் இருக்கிறதே தவிர, மணமகன் பக்கம் இல்லை. ஆகையால்தான், மணமகன் இவர்களைக் காணவில்லை. ஒருவேளை மணமகன் திசை நோக்கி அவர்கள் சென்றிருந்தால் அவரும் அவர்கள்மேல் இரக்கம் கொண்டு, 'பரவாயில்லை! வாருங்கள்!' எனச் சொல்லி அவர்கள்மேல் இரக்கம் காட்டி அவர்களைத் தன்னுடன் அழைத்துச் சென்றிருப்பார்.

இன்றைய நாளில் நம் ஆன்மிக வாழ்வில் மேற்காணும் மூன்று தவறுகளை நாமும் செய்கின்றோமா? எனக் கேட்டறிவோம்.

'உங்களை எனக்குத் தெரியாது' என்று இயேசு நம்மை நோக்கிச் சொன்னால் எப்படி இருக்கும்?

நாம் பல நேரங்களில் இயேசுவை நமக்குத் தெரியும் எனச் சொல்கிறோம். ஆனால், அவருக்கு நம்மைத் தெரியுமா? அவர் நம்மை குரலை அறிவாரா? நாம் ஏந்தியிருக்கும் ஒளி அவருக்கு நம்மை அடையாளப்படுத்துகிறதா? அல்லது ஒளி மங்கலாக இருக்கிறதா? இதையே பவுலும் கலாத்திய இறைமக்களிடம், 'நீங்கள் கடவுளை அறிந்துள்ளீர்கள். உண்மையில், கடவுளே உங்களை அறிந்துள்ளார்' (காண். கலா 4:9) என்று கூறுகின்றார்.

நற்செய்தி வாசகத்தில் ஐவரின் முன்மதியை நாம் பாராட்டுகின்றோம். ஆனால், 'மனித ஞானத்தை விடக் கடவுளின் மடமை ஞானம் மிக்கது' என்கிறார் பவுல் (முதல் வாசகம்).

அருள்திரு யேசு கருணாநிதி


Wednesday, August 24, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (25-08-2022)

 முதல் வாசகம்

எல்லா வகையிலும் செல்வர்கள் ஆனீர்கள்.


திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-9

கொரிந்து நகரிலுள்ள கடவுளின் திருச்சபைக்கு அவர் திருவுளத்தால் கிறிஸ்து இயேசுவின் திருத்தூதனாக அழைக்கப்பட்ட பவுலும் சகோதரராகிய சொஸ்தேனும் எழுதுவது: இயேசு கிறிஸ்துவோடு இணைக்கப்பெற்றுத் தூயோராக்கப்பட்டு இறைமக்களாக இருக்க அழைக்கப்பட்டுள்ள உங்களுக்கும், எல்லா இடங்களிலும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அறிக்கையிடும் யாவருக்கும், நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் அருளும் அமைதியும் உரித்தாகுக! இயேசு கிறிஸ்து நமக்கு மட்டும் அல்ல, அனைவருக்கும் ஆண்டவர்.

கிறிஸ்து இயேசுவின் வழியாக நீங்கள் பெற்றுக் கொண்ட இறையருளை முன்னிட்டு உங்களை நினைத்து என் கடவுளுக்கு என்றும் நன்றி செலுத்துகிறேன். ஏனெனில் நீங்கள் கிறிஸ்துவுடன் இணைக்கப்பெற்றுச் சொல்வன்மையும் நிறையறிவும் பெற்று, எல்லா வகையிலும் செல்வர்கள் ஆனீர்கள். மேலும் கிறிஸ்துவைப் பற்றிய சான்று உங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வெளிப்படுவதற்காகக் காத்திருக்கும் உங்களுக்கு அருட்கொடை எதிலும் குறையே இல்லை. நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வெளிப்படும் நாளில் நீங்கள் குறைச் சொல்லுக்கு ஆளாகாதிருக்க அவர் உங்களை இறுதிவரை உறுதிப்படுத்துவார். கடவுள் நம்பிக்கைக்கு உரியவர்; தம் மகனும் நம் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் நட்புறவில் பங்கு பெற உங்களை அவர் அழைத்துள்ளார்.


ஆண்டவரின் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல்

திபா 145: 2-3. 4-5. 6-7 (பல்லவி: 1)

பல்லவி: என் கடவுளே, உமது பெயரை எப்பொழுதும் போற்றுவேன்.

2 நாள்தோறும் உம்மைப் போற்றுவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் புகழ்வேன்.

3 ஆண்டவர் மாண்புமிக்கவர்; பெரிதும் போற்றுதலுக்கு உரியவர்; அவரது மாண்பு நம் அறிவுக்கு எட்டாதது. - பல்லவி

4 ஒரு தலைமுறை அடுத்த தலைமுறைக்கு உம் செயல்களைப் புகழ்ந்துரைக்கும்; வல்லமைமிகு உம் செயல்களை எடுத்துரைக்கும்.

5 உமது மாண்பின் மேன்மையையும் மாட்சியையும் வியத்தகு உம் செயல்களையும் நான் சிந்திப்பேன். - பல்லவி

6 அச்சந்தரும் உம் செயல்களின் வல்லமையைப் பற்றி மக்கள் பேசுவார்கள்; உமது மாண்பினை நான் விரித்துரைப்பேன்.

7 அவர்கள் உமது உயர்ந்த நற்பண்பை நினைந்து கொண்டாடுவார்கள்; உமது நீதியை எண்ணி ஆர்ப்பரித்துப் பாடுவார்கள். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 24: 42a, 44

அல்லேலூயா, அல்லேலூயா! விழிப்பாய் இருங்கள்; ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார். அல்லேலூயா.

 நற்செய்தி வாசகம்

ஆயத்தமாய் இருங்கள். நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 24: 42-51

அக்காலத்தில்

இயேசு தம் சீடரிடம் கூறியது: “விழிப்பாய் இருங்கள்; ஏனெனில் உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் என உங்களுக்குத் தெரியாது. இரவில் எந்தக் காவல் வேளையில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் விழித்திருந்து தம் வீட்டில் கன்னமிட விடமாட்டார் என்பதை அறிவீர்கள். எனவே நீங்களும் ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்.

தம் வீட்டு வேலையாள்களுக்கு வேளாவேளை உணவு பரிமாறத் தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான பணியாளர் யார்? தலைவர் வந்து பார்க்கும்போது தம் பணியைச் செய்துகொண்டிருப்பவரே அப்பணியாளர். அவர் பேறுபெற்றவர். அவரைத் தம் உடைமைகளுக்கெல்லாம் அதிகாரியாக அவர் அமர்த்துவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

அப்பணியாள் பொல்லாதவனாய் இருந்தால், தன் தலைவர் வரக் காலந் தாழ்த்துவார் எனத் தம் உள்ளத்தில் சொல்லிக் கொண்டு, தன் உடன்பணியாளரை அடிக்கவும் குடிகாரருடன் உண்ணவும் குடிக்கவும் தொடங்குவான். அப்பணியாள் எதிர்பாராத நாளில், அறியாத நேரத்தில் அவனுடைய தலைவர் வருவார். அவர் அவனைக் கண்டந்துண்டமாய் வெட்டி வெளிவேடக்காரருக்கு உரிய இடத்திற்குத் தள்ளுவார். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்.”


ஆண்டவரின் அருள்வாக்கு.

-----------------------------------------------------------

நம்பிக்கைக்குரிய பணியாளராய்!


பொதுக் காலத்தின் இருபத்து ஒன்றாம் வாரம் வியாழக்கிழமை


I 1 கொரிந்தியர் 1: 1-9

II மத்தேயு 24: 42-51


நம்பிக்கைக்குரிய பணியாளராய்!

அரசியால் பாராட்டப்பட்ட படைவீரர்:

தாய் நாட்டிற்காக எதிரிகளோடு போராடி, நாட்டிற்கு வெற்றியைப் பெற்றுத் தந்த வீரர்களைச் சிறப்பிக்கும் நிகழ்ச்சி இது.

போரில் தலையிலும் கையிலும் காலிலும் அடிபட்டிருந்த ஒவ்வொரு வீரருக்கும் பதக்கம் அணிவித்து, அவர்களுக்கு வாழ்த்துக் கூறிக்கொண்டே வந்தார் அந்நாட்டு அரசி. கடைசியாக, ஒரு படைவீரர் போரில் தன் இரு கைகளையும் கால்களையும் இழந்த நிலையில் படுக்கையில் கிடத்தப்பட்டிருப்பதைக் கண்ட அரசிக்கு அழுகையே வந்துவிட்டது.

அவர் படுக்கையில் கிடத்தப்பட்டிருந்த படைவீரர் அருகில் சென்று, அவரது நெற்றியில் முத்தமிட்டு, “நீயன்றோ நல்ல, நம்பிக்கைக்குரிய பணியாளர்! இந்த நாட்டிற்காக நீ ஆற்ற சேவைக்கு இந்த நாடு தலைவணங்குகின்றது” என்று அந்தப் படைவீரருக்கு தலைவணங்கினார்.

இப்படியொரு செயலைச் செய்தவர் வேறு யாருமல்ல, பேரரசி விக்டோரியாவே.

ஆம், போரில் தன்னுடைய கைகளையும் கால்களையும் இழக்கும் அளவுக்கு இந்த நிகழ்வில் வரும் படைவீரர் பணிபுரிந்ததாலேயே பேரரசி விக்டோரியா அவரை, ‘நம்பிக்கைக்குரிய பணியாளர்’ என்று வியந்து பாராட்டினார். இன்றைய இறைவார்த்தை நாம் நம்பிக்கைக்குரிய பணியாளர்களாய் விளங்க வேண்டும் என்ற சிந்தனையைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.


திருவிவிலியப் பின்னணி:

‘யாருடைய வாயிலும் விழக்கூடாது’ என்று சொல்வர். யாருடைய வாயில் விழக்கூடாது என்றால் யாருடைய குறைசொல்லும் ஆளாகக்கூடாது என்பதே பொருள். இயேசுவின் இரண்டாம் வருகையைப் பற்றிக் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தில் பேசும் பவுல், குறை சொல்லுக்கு ஆளாகதிருக்கவேண்டும் என்கின்றார்.

குறை சொல்லுக்கு ஆளாகதிருக்க வேண்டும் என்றால், நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு நமக்குத் தெளிவுபடுத்துகின்றார். தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை விழியாய் இருந்து செய்யும் வீட்டுப் பொறுப்பாளர் நம்பிக்கைக்குரிய பணியாளர் இருப்பார்; அவர் தன்னுடைய பதவியில் மேலும் உயர்த்தப்படுவார் என்று சொல்லும் இயேசு, விழிப்பாய் இல்லாமல், தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளைச் சரிவரச் செய்யாத வீட்டுப் பொறுப்பாளர் அதற்குரிய தண்டனையைப் பெறுவார் என்கிறார்.

இன்றைக்குப் பலர் தங்களுடைய பொறுப்புகளில் உண்மையில்லாமலும் நேர்மையில்லாமலும் இருப்பதைக் காண முடிகின்றது. ஒருவர் குறை சொல்லுக்கு ஆளாமல் இருக்க வேண்டும் என்றால், அவர் கடவுள் தன்னிடம் ஒப்படைத்திருக்கும் பொறுப்புகளுக்கு நம்பிக்கைகுரியவாய் இருக்க வேண்டும். அது மிகவும் முக்கியம். இதை உணர்ந்து செயல்பட்டால், உயர்வு நிச்சயம்.


சிந்தனைக்கு:

 ஆண்டவருக்கு அஞ்சி வாழ்கின்ற ஒருவர், வேறு எதற்கும் யாருக்கும் அஞ்சிடத் தேவையில்லை.

 தன்னுடைய கடமையைச் செய்யத் தவறிய ஒருவர் உரிமைகளைக் கோருவதற்குத் தகுதியற்றவர்

 உண்மை ஒருவரை உயர்த்தும்.


இறைவாக்கு;

‘பொறுப்பாளர்கள் நம்பிக்கைக்குரியவர்களாய்க் காணப்படவேண்டும்’ (1 கொரி 4:2) என்பார் புனித பவுல். எனவே, நாம் ஆண்டவர் எப்படி நம்பிக்குரியவராய் இருக்கின்றாரோ, அப்படி நாமும் நம்பிக்கையவராய் இருந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.


பொதுக்காலத்தின் 21 ஆம் வியாழன் 

மு.வா: 1 கொரி: 1: 1-9

ப.பா: திபா: 145: 2-3. 4-5. 6-7

ந.வா:மத்: 24: 42-51


 விழிப்பு உள்ளவர்களா நாம்!

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் விழிப்புணர்வோடு வாழும் பொழுது நம் வாழ்வில் வெற்றி அடைய முடியும். விழித்திருந்து இரவு முழுவதும் தலைகுனிந்து படிப்பவன் சாதனைகள் பல செய்ய முடியும். நம்முடைய வாழ்வில் பல தோல்விகளுக்கு காரணம் நாம் விழித்திருந்து செயல்படாதேயாகும்.

எவனொருவன் தன்னைச்சுற்றி என்ன நடக்கிறது என்பதையும் தனக்குள் என்ன நடக்கிறது என்பதையும் முழுமையாக உணர்ந்து வாழ்கிறானோ அவனே விழிப்பு உடையவன். அவனே வெற்றி பெறுபவன்.

ஒருமுறை சில இளைஞர்கள் ஊர் சுற்றிப்பார்க்க ஒரு புதிய ஊருக்கு சென்றார்கள். அவர்கள் வழியிலே சென்று கொண்டிருந்த போது பெரியவர் ஒருவர் "தம்பிகளா இந்தப்பக்கம் வழி சரியில்லை. பார்த்து செல்லுங்கள்" என்றார். 

அதற்கு அந்த இளைஞர்கள் "பெருசு உங்களை விட எங்களுக்கு கண் நன்றாக தெரியும்" என்று ஏளனமாக சொல்லிவிட்டு சென்றார்கள். விளையாடிக்கொண்டும் அறட்டை அடித்துக்கொண்டும் சென்றவர்கள் பாதையை கவனிக்கத் தவறினார்கள். இறுதியில் தவறி வீழ்ந்தவர்களாய் காயத்துடன் வீடுதிரும்பினார்கள். ஆம் விழிப்பு இல்லையென்றால் பாதையிலும் சரி வாழ்கையிலும் சரி நாம் தவறி வீழ்வது நிச்சயம்.

எனவே தான் இன்றைய நற்செய்தி மூலமாக நம்மை விழிப்பாயிருக்க இயேசு அழைக்கிறார்.நாம் யார்? நாம் யாரைப் பிரதிபலிக்கிறோம்?நாம் என்ன செய்கிறோம்? நம் வாழ்க்கையின் நெறி என்ன ?என்பதை நம்மை படைத்த இறைவனும், நம்முடன் வாழும் மனிதர்களும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இதை பல சமயங்களில் நாம் உணர்வதில்லை.அதனாலேயே நாம் வாழ்க்கையில் பல தோல்விகளையும் துன்பங்களையும் சந்திக்கிறோம். மாறாக நம் வாழ்வு மறைவானது அல்ல என்பதை உணர்ந்தவர்களாய் நம் சிந்தனை சொல் செயல்களை தூய்மையாக்கி நமக்குக் கொடுக்கப்பட்ட கடமைகளை சரியாக செய்யும் போது சக மனிதர்கள் மட்டுமல்ல இறைவனே பாராட்டக்கூடிய சிறந்த பணியாளர்களாய் நாம் இருப்போம் என்பதில் ஐயமில்லை. அதுவே நமக்கு கிடைக்கும் உண்மையான பேறு என இயேசு கூறுகிறார்.

விழிப்பாயிருந்து தூயவாழ்வு வாழவே நாம் அனைவரும் அழைக்கப்பட்டுள்ளோம்.இன்றைய முதல் வாசகம் தூயோராக வாழ்வதே நமக்கு கொடுக்கப்பட்டுள்ள உயரிய அழைப்பு என்பதை சுட்டிக்காட்டுகிறது. நம் கிறிஸ்தவ வாழ்வு இறைவன் கொடுத்த கொடை. எனவே நம் வாழ்வு தூய இறைவனை பிரதிபலிக்கும் வண்ணம் நம் உடல், மனம், ஆன்மா ஆகியவற்றை தூய்மையாக்கி கிறிஸ்துவோடு நாம் இணைய வேண்டும் என்று புனித புவுல் கூறுவதை நாம் காண்கிறோம்.  

நம் உடல் இறைவன் கொடுத்த கொடை. இவ்வுலக வாழ்வில் ஆன்மா குடிகொள்ளும் இருப்பிடம். இந்த உடல் தூய ஆவியாரின் ஆலயம். இவற்றை நாம் புனிதமாக பயன்படுத்த வேண்டும். நம் ஆன்மா தான் நிலையானது. இந்த உடல் நாம் இந்த உலகில் வாழும் வரைக்கும் தான் நம்மோடு வரும். அதன் பிறகு கடவுளால் மண்ணிலிருந்து படைக்கப்பட்ட மனித உடல் இறந்த பிறகு மண்ணிற்கே கையளிக்கப்படும். எனவே இவ்வுலகம் சார்ந்த உடல் நிலையற்றது. ஆனால் இதை புனிதமாக பயன்படுத்தும் பொழுது நம் மனதும் ஆன்மாவும் தூய்மையாக்கப்படும். நம் மனதும் ஆன்மாவும் தூய்மையாக்கப்படும்பொழுது நிச்சயமாக மண்ணுலகிலும் விண்ணுலகிலும் கடவுளுடைய உடனிருப்பை உணர்ந்து நிலையான வாழ்வை பெற்றுக் கொள்ள முடியும்.

இறைவனின் மீட்பை பெற உள்ளமும் ஆன்மாவும் தூய்மையாக இருக்க வேண்டும். அதற்காக உலகம் சார்ந்த உடலுக்கு எத்தகைய துன்பங்கள் வந்தாலும் அதை முழுமனதோடு ஏற்றுக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். நம் கத்தோலிக்கத் திருஅவையின் புனிதர்களை ஆய்வு செய்து பார்த்தால் அவர்கள் அனைவரும் தங்கள் உடலை தூய ஆவியின் கோயிலாகக் கருதி அனைத்தையும் ஒப்படைத்தார்கள். அதே போல நாமும் இறைவனின் மீட்பை சுவைக்க விழிப்புணர்வோடு உடலையும் ஆன்மாவையும் தூய்மைபடுத்த வேண்டும். அப்பொழுது நாம் இயேசு வருகை எப்போது இருந்தாலும் நாம் தயாராக இருக்க முடியும். விழிப்புணர்வின் வழியாக இயேசு இறையாட்சி மதிப்பீட்டை அறிந்து உணர்ந்து வாழ்வாக அருளைத் தரும்.

எனவே விழிப்போடு இருந்து தூயோராய் விளங்க இறைவன் நமக்கு விடுத்த அழைப்பை வாழ்வாக்க இறையருள் வேண்டுவோம்.

இறைவேண்டல்

அன்பு இறைவா! விழிப்போடு இருக்கவும் தூய வாழ்வு வாழவும் எங்களை அழைத்திருக்கிறீர். நாங்களோ பல வேளைகளில் விழி இருந்தும் விழிப்புணர்வின்றி வாழ்கிறோம். எங்கள் புறக்கண்களையும் அகக்கண்களையும் திறந்து விழிப்புணர்வுடன் வாழ அருள் தாரும். இதனால் நாங்கள் எங்கள் வாழ்வை சீரமைத்து தூயோராகவும் உம் மனம் விரும்பும் பணியாளர்களாகவும் வாழும் வரம் தாரும். ஆமென்.


அருட்பணி.குழந்தைஇயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர் 

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு 

சிவகங்கை மறைமாவட்டம்



Tuesday, August 23, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (24-08-2022)

புனித பர்த்தலமேயு - திருத்தூதர் விழா



முதல் வாசகம்


திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 21: 9டி-14

சகோதரர் சகோதரிகளே, ஏழு வானதூதர்களுள் ஒருவர் வந்து, ஹஹவா, ஆட்டுக்குட்டி மணந்து கொண்ட மணமகளை உனக்குக் காட்டுவேன்'' என்று என்னிடம் கூறினார்.

தூய ஆவி என்னை ஆட்கொள்ளவே, அந்த வானதூதர் ஒரு பெரிய, உயர்ந்த மலைக்கு என்னைக் கொண்டு சென்றார்; திருநகரான எருசலேம் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கி வருவதை எனக்குக் காட்டினார். அதில் கடவுளின் மாட்சி விளங்கிற்று; விலையுயர்ந்த கல் போன்றும் படிகக் கல் போன்றும் அதன் ஒளி பளிங்கெனத் துலங்கியது. அதைச் சுற்றிப் பெரிய, உயர்ந்த மதிலும் அதில் பன்னிரண்டு வாயில்களும் இருந்தன. வாயில்களுக்குப் பொறுப்பாய்ப் பன்னிரண்டு வானதூதர்கள் நின்றார்கள். இஸ்ரயேல் மக்களுடைய பன்னிரண்டு குலங்களின் பெயர்களும் அவ்வாயில்களில் பொறிக்கப்பட்டிருந்தன. கிழக்கே மூன்றும் வடக்கே மூன்றும் தெற்கே மூன்றும் மேற்கே மூன்றுமாக அவை அமைந்திருந்தன. நகரின் மதில் பன்னிரண்டு அடிக்கற்களைக் கொண்டிருந்தது. அவற்றில் ஆட்டுக்குட்டியின் பன்னிரண்டு திருத்தூதர்களின் பெயர்களும் எழுதப்பட்டிருந்தன.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல்



திபா 145: 10-11. 12-13. 17-18

பல்லவி: ஆண்டவரே, உம் அன்பர்கள் உமதரசின் மாட்சியை அறிவிப்பார்கள்.


10 ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள்.

11 அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். -பல்லவி

12 மானிடர்க்கு உம் வல்லமைச் செயல்களையும் உமது அரசுக்குரிய மாட்சியின் பேரொளியையும் புலப்படுத்துவார்கள்.

13யடி உமது அரசு எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு; உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது. -பல்லவி

17 ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்; அவர்தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே.

18 தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார். -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! ரபி, நீர் இறைமகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர். அல்லேலூயா.


யோவான் 1:45-51


ஆகஸ்டு

 24 தூய பார்த்தலோமேயு திருநாள்



யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 45-51


அக்காலத்தில் பிலிப்பு நத்தனியேலைப் போய்ப் பார்த்து, ஹஹஇறைவாக்கினர்களும் திருச்சட்ட நூலில் மோசேயும் குறிப்பிட்டுள்ளவரை நாங்கள் கண்டு கொண்டோம். நாசரேத்தைச் சேர்ந்த யோசேப்பின் மகன் இயேசுவே அவர்'' என்றார். அதற்கு நத்தனியேல், ஹஹநாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ?'' என்று கேட்டார். பிலிப்பு அவரிடம், ஹஹவந்து பாரும்'' என்று கூறினார். நத்தனியேல் தம்மிடம் வருவதை இயேசு கண்டு, ஹஹஇவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்'' என்று அவரைக் குறித்துக் கூறினார். நத்தனியேல், ஹஹஎன்னை உமக்கு எப்படித் தெரியும்?'' என்று அவரிடம் கேட்டார். இயேசு, ஹஹபிலிப்பு உம்மைக் கூப்பிடுவதற்கு முன்பு நீர் அத்தி மரத்தின் கீழ் இருந்தபோதே நான் உம்மைக் கண்டேன்'' என்று பதிலளித்தார். நத்தனியேல் அவரைப் பார்த்து, ஹஹரபி, நீர் இறைமகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்'' என்றார். அதற்கு இயேசு, ஹஹஉம்மை அத்திமரத்தின் கீழ்க் கண்டேன் என்று உம்மிடம் சொன்னதாலா நம்புகிறீர்? இதை விடப் பெரியவற்றைக் காண்பீர்'' என்றார். மேலும், ஹஹவானம் திறந்திருப்பதையும் கடவுளின் தூதர்கள் மானிடமகன் மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள் என மிக உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்'' என்று அவரிடம் கூறினார்.


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


------------------------


புனித பர்த்தலொமேயு திருவிழா

இதைவிட பெரியவற்றைக் காண்பீர்கள்…

யோவான் 1:45-51


இறையேசுவில் இனியவா்களே! தூய பர்த்தலொமேயு திருவிழா திருப்பலிக்கு தித்திப்போடு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.

இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன் மேலும் நீயே ஆசியாக விளங்குவாய் போன்ற ஆசீர்வாதமான வார்த்தைகளைக் கேட்கும்போது நம் அகம் குளிர்கிறது. உடல்முழுவதும் ஊக்கமருந்து செலுத்தப்பட்டது போன்ற உணர்வு ஏற்படுகிறது. அதே போன்று இன்றைய நற்செய்தியில் வருகின்ற வார்த்தையும் நம்மை புல்லரிக்க வைக்கின்றது. அந்த வார்த்தை, "இதைவிட பெரியவற்றைக் காண்பீர்" இது புனித பர்த்தலமேயுக்கு வழங்கப்பட்ட ஆசீர்வாதமான வார்த்தை.

இந்த ஆசீர்வாதமான வார்த்தைகளை நாம் பெறலாமா? கண்டிப்பாக பெறலாம். அதற்காக தூய பர்த்திலொமேயு எடுத்த இரண்டு முயற்சிகளை நாமும் எடுக்க வேண்டியதிருக்கிறது.

முயற்சி 1: அவரோடு அமர்ந்தார்

ஒரு சீடன் தன் குருவோடு அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்கும் போது முழுவதும் குருவுக்கு பிடித்தவனாக மாறுகிறான். குரு தன்னுடைய பிடித்தமான சீடனுக்கு தன் ஆசீர் முழுவதையும் அள்ளி அருளுவார். அதே போன்று நாம் இயேசுவுக்கு பிடிக்கும் போது அவர் ஆசீர்வாதமான வார்த்தைகள் தருவார். தூய பர்த்திலொமேயு ஆண்டவரோடு அமா்ந்தார். அதிலே அளப்பரிய ஆனந்தமும் அடைந்தார்.

முயற்சி 2: அவர் புகழை பரப்பினார்

தன்னுடைய சிந்தனையிலும், செயலிலும் ஒரு சீடன் தன்னுடைய ஆசானின் அறிவுரைகள நிறுத்தி அதன்படி வாழ்ந்து அவர் புகழ் பரப்பும் போது ஆசான் அதிக ஆனந்தமடைகிறார். அதேபோன்று ஆண்டவர் இயேசுவும் தன் புகழை, பெயரை பரப்பும் சீடர்களை அதிகமாகவே ஆசிர்வதிக்கிறார். அந்த வகையில் இன்றைய புனிதர் அதற்கு குறையே வைக்கவில்லை. எங்கு சென்றாலும் இயேசுவின் புகழை பரப்பினார். இயேசுவின் செல்வாக்கை உயர்த்தினார்.


மனதில் கேட்க…

1. ஆண்டவர் மனதார ஆசீர்வதிக்கும்படி இதுவரை நான் நடந்திருக்கிறேனா?

2. ஆண்டவரோடு அமரவும், அவர் புகழைப் பரப்பவும் எனக்கு ஆசை இருக்கிறதா?


மனதில் பதிக்க…

எனது செல்வாக்கு குறைய வேண்டும். அவரது செல்வாக்கு பெருக வேண்டும் (யோவா 3:30)

அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா

-------------------------------------------------------------


திருவெளிப்பாடு 21: 9 – 14

இறைவனில் நம்பிக்கை கொள்வோம்


யோவான் நற்செய்தியாளர், காட்சி காண்கிறார். அந்த காட்சியில், ஏழு வானதூதர்களுள் ஒருவர் வந்து, ஆட்டுக்குட்டி மணந்து கொண்ட மணமகளை உனக்குக் காட்டுவேன் என்று கூறுகிறார். பதினேழாவது அதிகாரத்தின், முதல் இறைவார்த்தையில் வருகிற வானதூதர்கள் தான், இங்கும் குறிப்பிடப்படுவதாக நம்பலாம். அந்த அதிகாரத்தில் பாபிலோன் நகர் மற்றும் அதனுடைய அழிவைப் பற்றிய செய்தி, காட்சியாக விளக்கப்படுகிறது. இங்கு, எருசலேம் நகரின் மாட்சி அதற்கு முரணாக, குறிப்பிட்டுக் காட்டப்படுகிறது. பழைய எருசலேம் மறைந்து, புதிய எருசலேம் தோன்றுகிறது. இறைவாக்கினர் எசேக்கியேலும் தன்னுடைய காட்சியில் எருசலேமை விவரிப்பதை (எசேக்கியேல் 40: 2) நாம் வாசிக்கலாம். ஆனால், அவரின் விளக்கத்திற்கும், யோவானின் விளக்கத்திற்கும் மிகப்பெரிய வேறுபாடு இருப்பதை நாம் கண்டுணரலாம். காரணம், எசேக்கியேல், எருசலேம் ஆலயத்தில் நடந்ததைக் கண்கூடாகப் பார்த்தவர். அந்த பிண்ணனியில் தன்னுடைய காட்சியை விவரிக்கிறார். ஆனால், யோவான் பழைய எருசலேம் ஆலயத்தைப் பார்த்திருக்கவில்லை. அவருக்கு அங்கு நடந்ததைப்பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, காட்சியில் காண்பவை அனைத்துமே அவருக்கு வியப்பாகவும், விந்தையாகவும் இருக்கிறது.

இந்த காட்சி, கடவுள் தரும் நம்பிக்கைச் செய்தியாக இருக்கிறது. இறைவன் தன்னுடைய மக்களை கைவிட்டு விடவில்லை. காலம் காலமாக மக்கள், இறைவனை மறந்தாலும், தாங்கள் செய்த தவறுகளுக்கு தண்டனையைப் பெற்றுக்கொண்டாலும், இறைவன் தன்னுடைய வாக்குறுதிக்கு பிரமாணிகக்கமுள்ளவராகவே இருக்கிறார். நம்முடைய வாழ்வில் எந்த சூழ்நிலையிலும் நாம் நம்பிக்கை இழக்காதவர்களாக இருக்க வேண்டும். நம்முடைய நம்பிக்கையை கடவுள் மீது நாம் வைத்திருக்க வேண்டும். எந்த ஒரு மனிதனும், எவ்வளவு பெரிய தவறுகளைச் செய்திருந்தாலும், அவன் நம்பிக்கை இழக்க தேவையில்லை. திருந்தி வாழ வேண்டும் என்கிற எண்ணத்தை மட்டுமே கடவுள் எதிர்பார்க்கிறார்.

நம்முடைய அன்றாட வாழ்வில், நிச்சயமாக நம்முடைய மனித பலவீனத்தில், பல தவறுகளைச் செய்து கொண்டு தான் இருக்கிறோம். இந்த உலகத்தின் கட்டுகள் நம்மை இறுக்கிப் பிணைத்து, அதிலிருந்து விடுபட முடியாதவாறு, நம்மை நெருக்கிவிடுகிறது. நாம் கடவுளைப் பற்றிக் கொள்வோம். நம்முடைய பலமல்ல, இறைவனின் பலமே நம்மை, அனைத்து சோதனைகளிலிருந்தும் விடுவிக்கும்.


- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்


-----------------------------------------------------


திருப்பாடல் 145: 10 – 11, 12 – 13, 17 – 18

”உமது மாட்சியை அறிவிப்பார்கள்”


திருப்பாடல் 138 முமதல் 145 வரை உள்ள அதிகாரங்கள் தொடர்ச்சியானது, ஒன்றுக்கொன்று தொடர்புடையது. இந்த பாடல்கள் தான், தாவீது அரசரால் கடைசியில் எழுதப்பட்ட பாடல்கள் என்று சொல்லலாம். இந்த கடைசி தொகுப்பின் கடைசி பாடலாக வருவதுதான் இன்றைய பதிலுரைப்பாடலாக நமக்குத் தரப்பட்டிருக்கிறது. கடைசி தொகுப்பில் அமைந்துள்ள இந்த எட்டு திருப்பாடல்களும் இஸ்ரயேல் மக்களின் தனிப்பட்ட செபமாக சொல்லப்படுகிறது. இந்த எட்டு திருப்பாடல்களிலும் “நான்“ “எனது“ என்று தனக்கும்,கடவுளுக்குமான தனிப்பட்ட உறவை மையப்படுத்தி எல்லா இறைவசனங்களும் அமைந்துள்ளன.

இந்த திருப்பாடல் கடவுளின் மாட்சிமையை அறிவிக்கக்கூடிய பாடலாக அமைந்திருக்கிறது. கடவுளின் மாட்சிமை என்ன? கடவுள் எல்லாக்காலங்களிலும் ஆளக்கூடியவராக இருக்கிறார். எத்தனை பேர் ஆண்டாலும், கடவுளின் ஆளுகைக்கு ஈடு இணை கிடையாது. ஏனென்றால், கடவுள் நீதியோடு ஆட்சி செய்கிறார். அதே வேளையில் இரக்கத்தோடும் ஆட்சி நடத்துகிறார். அதுமட்டுமல்ல, தன்னிடம் உதவி என்று வந்தவர்களுடைய தேவைகளை அறிந்து, அதனை நிறைவேற்றக்கூடிய தாராள மனம் படைத்தவராகவும் இறைவன் இருக்கிறார். ஆக, மக்களை வெறும் தன்னுடைய ஆளுகைக்கு கீழ் உள்ளவர்களாகப் பார்க்காமல், அதனையும் கடந்து, அவர்களை தன்னுடைய பிள்ளைகளாகப் பாவிக்கிறார். இது இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

இறைவனின் மாட்சிமையை அறிந்திருக்கிற நாம், இறைவனின் பிள்ளைகளாக இருப்பதில் மகிழ்ச்சி அடைய வேண்டும். இறைவன் நமக்காகச் செய்துவரும் எல்லாவிதமான அற்புதச்செயல்களையும் நாம் நன்றியுணர்வோடு பெற்று, நம்முடைய வாழ்வு மூலமாக அவருக்கு நன்றி செலுத்துவோம்.

- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------


கள்ளங்கபடற்ற வாழ்வு


இன்றைக்கு தாய்த்திருச்சபை திருத்தூதர்களுள் ஒருவரான பர்த்திலேமேயுவின் திருவிழாவைச் சிறப்பாகக் கொண்டாடுகிறது. இவருடைய இயற்பெயர் நத்தனியேலாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இவர் பர்த்திலேமேயு என்று அழைக்கப்படுவதற்கு, இவர் தால்மேயுவின் மகன் என்பதான அர்த்தம் காரணமாகும். தால்மேயு என்பவன் கி.மு.10ம் நூற்றாண்டின் ஜெஸ்ஸே என்கிற பகுதிக்கு அரசனாவான். அவரது மகளை பேரரசர் மணந்திருந்தார். எனவே, பர்த்திலேமேயு அரசர் வழிவந்த குடும்பம் என்பதற்கு, நற்செய்தியாளர்கள் இந்த பெயரைப் பயன்படுத்தியிருக்கலாம் என்பது, விவிலிய அறிஞர்களின் கருத்து. இவர் இந்தியாவிற்கு வந்திருக்கலாம் என்பதும், நமக்கு கொடுக்கப்படுகிற ஊகச்செய்தி.

இவரை இயேசு கள்ளம், கபடற்றவர் என்று சொல்வதிலிருந்து, இவரை இயேசு எந்த அளவுக்கு அறிந்து வைத்திருந்தார் என்பது தெளிவாகத் தெரிந்திருந்தது. இது பர்த்திமேலேயு-க்கு மிகப்பெரிய ஆச்சரியம். அதேவேளையில் மகிழ்ச்சியையும் கொடுத்திருக்கும். காரணம், தான் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பதை, இந்த உலகம் ஒரு பொருட்டாக எடுக்கவில்லை என்றாலும், இயேசு அவரை அங்கீகரித்திருக்கிறார் என்பது, நிச்சயம் அவருக்கு மிகப்பெரிய தூண்டுகோலாக இருந்திருக்கும். இன்னும் அதே போலான வாழ்வை வாழ்வதற்கு, அவருக்கு ஊக்கமாக இருந்திருக்கும். கள்ளம்,  கபடற்ற வாழ்வை வாழ்வது எளிதானதல்ல. இந்த உலகம் நம்மை பயன்படுத்தி, வெகு எளிதாக பழிகூறக்கூடிய வாழ்வு. ஆனாலும், எதையும் கண்டுகொள்ளாமல் கடவுளுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்கிற திருத்தூதரின் வாழ்க்கை, உண்மையிலே நமக்கெல்லாம் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.

வாழ்வை நாம் கடவுளுக்கு ஏற்ற முறையில் வாழ வேண்டும். ஏதோ வாழ்ந்தோம் என்றில்லாமல், மற்றவர்கள் என்ன பேசுவார்கள் என்பதை நினைக்காமல், கடவுளுக்கு உண்மையாக, நமது மனச்சான்றிற்கு முரண்பாடில்லாமல், ஒழுக்கத்தோடு வாழ வேண்டிய வரத்தை, ஆண்டவரிடத்தில் கேட்போம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-----------------------------------------------------


இறைவனைக் கண்டுகொள்வோம்


நத்தனியேல் என்கிற மனிதர் தனியாளாக இருந்தாலும், அவரை இஸ்ரயேல் மக்களுக்கு ஒப்பிட்டுப்பார்த்தால், அது நமக்கு நிறைவான பொருளைத்தரும். எதற்காக நத்தனியேலை இஸ்ரயேல் மக்களோடு ஒப்பிட வேண்டும்? அது எப்படி சரியாக இருக்க முடியும்? என்ற கேள்வி நமக்குள்ளாக நிச்சயம் எழும். ஆனால், நத்தனியேலைப்பற்றி தரப்பட்டுள்ள செய்தியை நாம் பார்க்கிறபோது, அதில் இருக்கக்கூடிய உண்மையை நாம் அறிந்துகொள்ள முடியும்.

நத்தனியேல் கடவுள் அனுப்புகிற மெசியாவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறவராகச் சித்தரிக்கப்படுகிறார். இஸ்ரயேல் மக்கள் பல ஆண்டுகளாக, மெசியாவிற்காகக் காத்திருக்கிறார்கள். தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்கிற எண்ணமும், தாங்கள் சிறப்பு இனம் என்கிற சிந்தனையும் இஸ்ரயேல் மக்களுக்கு இருந்தது. அது நத்தனியேலில் வெளிப்படுவதை நாம் பார்க்கலாம். இயேசுவின் அற்புத ஆற்றலையும், நத்தனியேலை அவர் அறிந்தவிதத்தையும், நத்தனியேல் பார்த்தபோது, உண்மையிலே அவர்தான் கடவுள் வாக்களித்திருந்த மெசியா என்று நத்தனியேல் நினைத்தார். இயேசுவின் அதிகாரம் மிகுந்த போதனையும், அவருடைய புதுமை செய்யும் ஆற்றலும், இஸ்ரயேல் மக்களுக்கு அந்த நம்பிக்கையை கொடுத்திருந்தன. இவ்வாறு, நத்தனியேல், இஸ்ரயேலுக்கு ஒப்பிடப்படுவதை நாம் நியாயப்படுத்தலாம்.

நத்தனியேல் கடவுளைக் கண்டுகொண்டார். அது போல, நடக்கும் நிகழ்ச்சிகள், நாம் வாழ்வில் எதிர்கொள்ளும் தருணங்கள், கடவுளின் பிரசன்னத்தை நமக்கு உணர்த்தும்போது, நத்தனியேலைப்போல நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். அதை நத்தனியேலைப்போல ஏற்றுக்கொள்ள வேண்டும்.


அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------


புதிய எருசலேமின் அடிக்கற்கள் !


இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,


இன்று நத்தனயேல் என்று அழைக்கப்பட்ட திருத்தூதர் பர்த்தலோமேயுவின் விழாவைக் கொண்டாடுகிறோம். திருச்சபையை ஒரு கட்டடத்திற்கு ஒப்பிட்டால், இயேசு அதன் மூலைக்கல்லாகவும், திருத்தூதர்கள் அதன் அடிக்கற்களாகவும் இருப்பர். இன்றைய முதல் வாசகம் திருச்சபையைப் புதிய எருசலேம் என்று அழைக்கிறது. அதனை “ஆட்டுக்குட்டி மணந்துகொண்ட மணமகள்” என்றும் குறிப்பிடுகிறது. கடவுளின் மாட்சி விளங்கும் அந்தத் திருநகரின் மதில் பன்னிரண்டு அடிக்கற்களைக் கொண்டிருந்தது. அவற்றில் ஆட்டுக்குட்டியின் பன்னிரண்டு திருத்தூதர்களின் பெயர்களும் எழுதப்பட்டிருந்தன. “இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்” என்று ஆண்டவர் இயேசுவால் பாராட்டப்பட்ட புனித பர்த்தலோமேயுவுக்காக இன்று இறைவனுக்கு நன்றி செலுத்துவோம். திருத்தூதர்களை அடிக்கல்லாகக் கொண்டு கட்டப்பட்ட திருச்சபை பாறைமீது கட்டிய வீPட்டைப்போல என்றும் அசைவுறாமல் நிலைத்திருக்க மன்றாடுவோம். நாமும் கபடற்றவர்களாக வாழ அருள்வேண்டுவோம்.

மன்றாடுவோம்: திருச்சபையின் மூலைக்கல்லான இறைவா, உம்மைப் போற்றுகிறோம். பாறைமீது நீர் கட்டிய திருச்சபைக்காகவும், அந்தத் திருச்சபையின் அடிக்கற்களாக நீர் அமைத்த திருத்தூதர்களுக்காகவும் உமக்கு நன்றி கூறுகிறோம். அந்தத் திருசு;சபையை நீர் பாதுகாத்து, வழிநடத்த வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். நாங்களும் கபடற்றவர்களாக, தூய உள்ளத்தினராக வாழும் வரம் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.


அருள்தந்தை குமார்ராஜா


“அன்றே பலர் அவரைவிட்டு விலகினர்”


நிலைவாழ்வு அளிக்கும் உணவாகத் தம் உடலைத் தருவதாக இயேசு கற்பித்தபோது, யூதர்கள் மட்டுமல்ல, இயேசுவின் சீடர்களில் பலரும்கூட முணுமுணுத்தனர் என்பதைத் தயங்காமல் பதிவு செய்திருக்கிறார் நற்செய்தியாளர் யோவான்.

அதுமட்டுமல்ல, தமது போதனையை இயேசு இன்னும் அழுத்தத்துடன் எடுத்துரைத்தபோது, அந்தப் போதனையை ஏற்றுக்கொள்ளாமல் அவர்கள் பிரிந்து சென்றனர் என்பதை “அன்றே இயேசுவின் சீடருள் பலர் அவரை விட்டு விலகினர்” என்று சோகத்துடன் பதிவுசெய்திருக்கிறார் நற்செய்தியாளர்.

நற்கருணை என்னும் அருள்சாதனத்தை நம்பாமல், ஏற்றுக்கொள்ளாமல் அதன் காரணமாகத் திருச்சபையை விட்டுப் பிரிந்து செல்லும் ஏராளமான கத்தோலிக்கர்களின் முதல் முன்னோடிகள் இவர்களே. ஆனால், இவர்களின் பிரிவு குறித்து, இயேசு கவலைப்படவில்லை, தமது போதனையை மாற்றிக்கொள்ளவுமில்லை.

திருச்சபையும் அவ்வாறே. விலகிச் செல்பவர்களை வென்றெடுக்க வேண்டும் என்பதற்காக அடிப்படைப் போதனைகளில் மாற்றம் எதையும் செய்யவில்லை கடந்த 21 நூற்றாண்டுகளில். இயேசுவின் போதனைகள், திருச்சபையின் போதனைகளை முழு மனத்தோடு நாம் ஏற்று, வாழ்கிறோமா?

மன்றாடுவோமாக: உயிர்த்த மாட்சி மிகு இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். உமது போதனை ஏற்க மறுத்து உம்மைவிட்டு விலகிச் சென்ற சீடர்கள் போல, திருச்சபையைவிட்டுப் பிரிந்து செல்வோருக்காகவும் மன்றாடுகிறோம். நாங்களும் எங்கள் விசுவாசத்தில் நிலைத்திருக்கும் வரம் தருவீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.


அருள்பணி. குமார்ராஜா


 நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா” !


இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,


இயேசு தன் சீடர்களை நோக்கி உருக்கத்துடன் கேட்ட இந்தக் கேள்வியை இன்று இயேசு நம்மை நோக்கிக் கேட்பதாக எடுத்துக்கொள்வோம். இன்றைய நாள்களில் பல்வேறு காரணங்களுக்காக இறைவனைவிட்டு, ஆலய வழிபாடுகளைவிட்டு, இறைமதிப்பீடுகளை விட்டுப் பிரிந்துபோகும் மனிதரின் எண்ணிக்கை பெருகி வருகிறது.

ஞாயிறு வழிபாட்டில் பங்கேற்கும் இளையோரின் எண்ணிக்கை குறைகிறது. இறைபக்தி இல்லாமல், செபம் இல்லாமல், உலக நாட்டங்களில் ஈடுபட்டு வாழும் மனிதர் அனைவரும் இயேசுவை விட்டுப் பிரிந்து செல்கின்றனர். அவர்களை நோக்கி இயேசு கேட்கிறார்: சூ8220;நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?” நாமோ ஆண்டவரையே என்றும் பற்றிக்கொள்வோமாக! சூ8220;நானும் என் வீட்டாருமோ, ஆண்டரையே என்றும் வழிபடுவோம்” என்று யோசுவா துணிவுடன் அறிக்கையிட்டதுபோல, நாமும் ஆண்டவரையே பற்றிக்கொண்டு வாழ உறுதி பூணுவோம்.

மன்றாடுவோம்: நிறைவின் ஊற்றான இயேசுவே, உம்மைப் போற்றுகிறேன். உலக இன்பங்கள், செல்வம், பல்வேறு விதமான சோதனைகள் இவற்றின் மத்தியிலும், நான் உம்மை விட்டுப் பிரிந்துவிடாத அருளைத் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.


-- அருட்தந்தை குமார்ராஜா


சோதிக்கும் நோக்கத்துடன் !


இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இயேசுவைச் சோதிக்கும் நோக்குடன் திருச்சட்ட அறிஞர் ஒருவர் திருச்சட்ட நூலில் தலை சிறந்த கட்டளை எது என்று கேட்கிறார். கேள்வி நல்ல கேள்விதான். ஆனால், கேட்கிற மனிதரும், அவரது உள்நோக்கமும்தான் சரியில்லை. இருப்பினும், அவரது வாயை அடைக்கவும், இதயத்தைத் திறக்கவும் இயேசு அருமையான பதிலை வழங்குகிறார். இறைவனையும், மனிதரையும் அன்பு செய்ய வேண்டும் என்பதே தலை சிறந்த கட்டளை.

நாம் ஒருவரோடொருவர் உரையாடும்போது நமது கேள்விகளும், மனநிலையும் எப்படி இருக்கின்றன என்று கொஞ்சம் ஆய்வு செய்வோமா? சில வேளைகளில் நலம் விசாரிக்கும் தோற்றத்தில்; பிறரை இகழ, குத்திக்காட்ட நாம் முயல்வதில்லையா? ஆறுதல் சொல்லும் தோற்றத்தில் புண்படுத்துவதில்லையா? ஆலோசனை சொல்லும் சாக்கில் அவதூறு செய்வதில்லையா?

எனவே, நமது கேள்விகளுக்குப் பின் ஒளிந்திருக்கும் மனநிலையை, நோக்கத்தை ஆய்வு செய்வோம். நேர்மையாக சிந்தி;க்கவும், பேசவும் செய்வோம்.

மன்றாடுவோம்; உண்மையின் உறைவிடமே இயேசுவே, என் மனதிலும், நாவிலும் தூய்மையைத் தாரும். உமது தூய ஆவியினால் என்னை நிரப்பும். உள் நோக்கமின்றிப் பிறருடன் உரையாட, உறவாட எனக்கு ஆற்றல் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.


-- அருட்தந்தை குமார்ராஜா


-------------------------

''இயேசு சதுசேயரை வாயடைக்கச் செய்தார் என்பதைக் கேள்விப்பட்ட பரிசேயர் ஒன்றுகூடி அவரிடம் வந்தனர்'' (மத்தேயு 22:34)


அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- மத்தேயு நற்செய்தியில் இயேசுவின் எதிரிகளாகக் காட்டப்படுவோர் ''பரிசேயர்'', ''சதுசேயர்'' என்னும் இரு குழுக்களைச் சார்ந்தவர்கள். இவர்களுள் சதுசேயர் என்போர் பெரும்பாலும் எருசலேம் நகரில் வாழ்ந்தனர். அவர்கள் ஆளும் வர்க்கத்தினர். விவிலியத்தின் முதல் ஐந்து நூற்களை மட்டுமே அதிகாரப்பூர்வமான ஏடுகளாக இவர்கள் ஏற்றார்கள். அந்நூல்களில் கூறப்பட்டவற்றை அப்படியே கடைப்பிடிக்க வேண்டும் என்றும், வாய்மொழி மரபாகவோ எழுத்து மரபாகவோ வழங்கப்பட்ட சட்ட விளக்கங்கள் விவிலியத்தின்; முதல் ஐந்து நூல் போதனையிலிருந்து மாறுபட்டால், அவற்றைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் இவர்கள் கருதினார்கள்.எனவே, இறந்தோர் உயிர்த்தெழுவர் என்னும் கருத்து விவிலியத்தின் முதல் ஐந்து நூல்களில் காணப்படவில்லை என்பதால் அதை ஏற்க முடியாது என்பது இவர்களுடைய கருத்து. ஆனால் இயேசு விவிலியத்தின் முதல் நூலாகிய ''தொடக்கநூல்'' என்பதில் ''கடவுள் இறந்தோரின் கடவுளல்ல, மாறாக, ''உயிர்வாழ்வோரின் கடவுள்'' எனக் காணப்படும் உண்மையைச் சுட்டிக்காட்டி, ''சதுசேயரின் வாயை அடைத்துவிட்டார்'' (மத் 22:23). தங்களோடு கருத்து வேறுபட்ட சதுசேயரை இயேசு முறியடித்தார் என்பதைப் பரிசேயர்கள் கேள்விப்படுகின்றனர். அவர்களுக்கு ஒருவிதத்தில் மகிழ்ச்சிதான். ஆனால் பரிசேயரும் இயேசுவைச் சோதிக்கும் நோக்கத்துடன் அவரை அணுகி வருகின்றனர். ''பரிசேயர் ஒன்றுகூடினர்'' (மத் 22:34) என மத்தேயு குறிப்பிடுவது கருதத்தக்கது. இயேசுவுக்கு எதிராகத் திட்டம் வகுத்து அவரை ஒழிக்கத் தேடிய பரிசேயரோ பிறரோ ''ஒன்றுகூடி'' சதித்திட்டம் போடுவதை மத்தேயு பல இடங்களில் குறிப்பிடுகிறார் (காண்க: மத் 22:41; 26:3; 27:17,27; 28:12).

-- இயேசுவைச் சோதிக்க வந்த பரிசேயருள் ஒருவர் திருச்சட்ட அறிஞர். அவர் இயேசுவிடம் ''திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது?'' என்னும் கேள்வியைக் கேட்கிறார் (மத் 22:36). பல நூற்றுக்கணக்கான கட்டளைகளை உள்ளடக்கிய திருநூலில் காணப்படுகின்ற முதன்மையான கட்டளை எது என்னும் கேள்விக்கு யூத அறிஞர் அக்காலத்தில் பதில் தேடியது உண்டு. எடுத்தக்காட்டாக, ஹில்லல் என்னும் அறிஞரைக் குறிப்பிடலாம். அவரைத் தேடி ஒரு பிற இனத்தவர் வருகிறார். ''நான் ஒற்றைக் காலில் நிற்கும் நேரத்தில் எனக்குத் திருச்சட்டம் முழுவதையும் கற்றுத் தர முடியும் என்றால் நான் யூத சமயத்தைத் தழுவுகிறேன்'' என்கிறார் அவர். இதைக் கேட்ட ஹில்லல் அப்பிற இன மனிதரைப் பார்த்து, ''உனக்குத் தீங்கு இழைக்க நீ விரும்பாததுபோல பிறருக்கும் தீங்கு இழைக்க விரும்பாதே. இதில் திருச்சட்டம் முழுவதும் அடங்கும். எஞ்சியது விளக்கவுரையே'' எனப் பதிலளித்தார். இயேவிடம் சென்று ''திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது'' என்று கேட்டவருக்கு இயேசு அளித்த பதில் ''கடவுளை அன்புசெய்க் பிறரை அன்புசெய்க'' என்பதே. ''திருச்சட்ட நூல் முழுமைக்கும் இறைவாக்குகளுக்கும் இவ்விரு கட்டளைகளே அடிப்படையாக அமைகின்றன'' (மத் 22:40) என்று இயேசு அளித்த பதிலுக்கு ஆதாரம் பழைய ஏற்பாட்டில் உள்ளது (காண்க: இச 6:5; லேவி 19:18). அன்புக் கட்டளையை இயேசு தம் வாழ்வில் முழுமையாகக் கடைப்பிடித்தார். கடவுளை முழுமையாக அன்புசெய்த அவர் நமக்காகச் சிலுவையில் உயிர் துறந்து நம்மை இறுதிவரை அன்புசெய்ததைச் செயல்முறையில் காட்டினார். அதே அன்பு நம்மில் துலங்கிட வேண்டும்.


மன்றாட்டு

இறைவா, எங்கள் சிந்தனை சொல் செயல் அனைத்தும் அன்பிலிருந்து பிறந்திட அருள்தாரும்.


--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்


-------------------------|


''திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது?'' (மத்தேயு 22:36)


அன்பார்ந்த இணையதள நண்பர்களே!


-- இயேசுவின் காலத்தில் வாழ்ந்த பரிசேயர்கள் திருச்சட்டத்தை நன்கு தெரிந்துவைத்திருந்தார்கள். சட்டத்தின் நுணுக்கங்களையும் அறிந்திருந்தார்கள். திருச்சட்டத்தில் அடங்கிய 613 கட்டளைகளையும், அவை பற்றி யூத சமய அறிஞர்கள் வழங்கிய விளக்கங்களையும் பரிசேயர் கற்றிருந்தார்கள். தங்களைப் போன்று இயேசுவும் சமய அறிவில் சிறந்தவர்தானா என்று சோதிக்கும் வகையில் அவர்கள் இயேசுவிடம் கேட்ட கேள்வி: ''திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது?'' என்பதாகும். இயேசு அவர்களுக்கு அளித்த பதிலில் பெரிய விளக்கங்கள் இல்லை. மிகவும் எளிய முறையில், கடவுள் தந்த கட்டளைகளின் உள் ஆழம் எதில் அடங்கியிருக்கிறது என்பதை இயேசு எடுத்துரைக்கிறார். ''அன்பு செய்க!'' என்பதே திருச்சட்டத்தின் சுருக்கம் என இயேசு போதிக்கிறார். இந்த அன்புக் கட்டளைக்கு இரு பக்கங்கள் உண்டு: ஒன்று கடவுளை அன்பு செய்வது, மற்றது பிறரை அன்பு செய்வது. பழைய ஏற்பாட்டுத் திருச்சட்டத்தில் காணப்பட்ட அன்புக் கட்டளையின் இரு பக்கங்களையும் இணைக்கிறார் இயேசு. இணைச்சட்ட நூலில் ''உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்புகூர்வாயாக!'' (6:5) என்னும் சட்டமும், லேவியர் நூலில் ''உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக!'' (19:18) என்னும் சட்டமும் தனித்தனியாகக் காணப்பட்டாலும் இயேசுவின் போதனையில் அவை இரண்டும் பின்னிப் பிணைந்த விதத்தில் உள்ளன.

-- எனவே, திருச்சட்டத்தில் மட்டுமன்று, இயேசுவின் போதனையிலும் அன்புக் கட்டளையே மைய இடம் பெறுவதில் வியப்பில்லை. கடவுளையும் மனிதரையும் அன்பு செய்வோர் உண்மையிலேயே தலைசிறந்த கட்டளையைக் கடைப்பிடிக்கின்றனர். கடவுள் முதன்முதலில் நம்மை அன்புசெய்தார். எனவே, நாமும் அவரை, அவரால் அன்புசெய்யப்படுகின்ற மனிதரை அன்புசெய்ய அழைக்கப்படுகிறோம். கடவுளின் அன்பில் நாம் ஆழ வேரூயஅp;ன்ற வேண்டும் என்றால் முதலில் நாம் அவரை நம்ப வேண்டும்; அவருடைய வாக்குறுதி நிறைவேறும் என ஏற்க வேண்டும். எனவே, நம்பிக்கையும் எதிர்நோக்கும் நம்மில் வளரும்போது அன்பும் வளரும். அன்பு நம்மில் சிறக்கும்போது கடவுள் மட்டில் நாம் கொள்கின்ற நம்பிக்கையும் உறுதிப்படும், அவர் வாக்களிக்கின்ற நன்மைகளை நாம் பெறுவோம் என்னும் எதிர்நோக்கும் திண்ணமாகும்.


மன்றாட்டு

இறைவா, உம்மையே நாங்கள் நம்பியிருக்கவும், உம் அன்பில் வளர்ந்து, எங்கள் வாழ்வு நிறைவுபெறும் என நாங்கள் எதிர்நோக்கவும் அருள்தாரும்.


--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்


-------------------------


இன்று இருக்கிறாரா?


திருத்தூதர் பர்த்தொலேமேயு ஒரு எதார்த்தவாதி, சிந்தனையாளர், திருச்சட்டமும் இறைவாக்கும் பயின்றவர். நாடும் ஊரும் தெறிந்தவர்."நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ?" என்ற அவரின் கேள்வி இதற்குச் சான்று.

திருத்தூதர் பர்த்தொலேமேயுபற்றி இயேசுவின் கணிப்பு, "இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்" அவரது கணிப்பும் சரியானதே. பிலிப்போடு அத்திமரத்தின்கீழ் நடந்த உரையாடலை இயேசு வெளியிட்டதும் அதிர்ந்துபோன திருத்தூதர், தன்னுடைய திருச்சட்ட, மறைநூல் அறிவால் தன்னோடு பேசுபவர் "இறை மகன்; இஸ்ரயேல் மக்களின் அரசர்" என்பதை அடையாளம் காணுகிறார்.

எதார்த்த வாழ்வும் சீரிய சிந்தனையும் மறைநூல் அறிவும் பொது அறிவும் அவர் இயேசுவின் சீடராவதற்கு பெரிதும் உதவியது.கிறிஸ்தவர்களும் திருப்பணியாளர்களும் இத்தகைய மனநிலைகொண்டால் விண்ணுக்கும் மண்ணுக்கும் இணைப்பாளர்களாக வான தூதர்களாக, மறு கிறிஸ்துவாக உலகை மாற்றி அமைக்க முடியும்.

இறைவா! கபடற்ற எதார்த்த உள்ளம்கொண்ட திருப்பணியாளர்கள், கிறிஸ்தவர்களை எம்மிடையே அதிகமாக்கும்.


:-- ஜோலி --:


Join with us 

 Website: https://catholicvoicecv.blogspot.com

Youtube: https://www.youtube.com/channel/UCcgIiK1gUEqRCmTsc7ZjAoA

Youtube: https://www.youtube.com/channel/UCxBBHQAKIjii_MsZfIYNF5A



 

Monday, August 22, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (23-08-2022)

 முதல் வாசகம்



திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-3ய, 14-17

சகோதரர் சகோதரிகளே! நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வருகையைப் பற்றியும் அவரோடு நாம் ஒன்று கூடுவதைப் பற்றியும் உங்களுக்கு நாங்கள் கூற விழைவது: ஆண்டவருடைய நாள் வந்துவிட்டது என, இறைவாக்காகவோ அருளுரையாகவோ நாங்கள் எழுதிய திருமுகத்தின் செய்தியாகவோ யாராவது சொன்னால், நீங்கள் உடனே மனங்கலங்கி நிலைகுலைய வேண்டாம்; திகிலுறவும் வேண்டாம். எவரும் உங்களை எவ்வகையிலும் ஏமாற்ற இடம் கொடாதீர். நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மாட்சியை நீங்கள் அடையும் பொருட்டே, நாங்கள் அறிவித்த நற்செய்தியின் வழியாக அவர் உங்களை அழைத்தார்.

ஆகவே அன்பர்களே! எங்கள் வாய்மொழி வழியாகவோ திருமுகம் வழியாகவோ அறிவிக்கப்பட்ட முறைமைகளைப் பற்றிக்கொண்டு அவற்றில் நிலையாயிருங்கள். நம் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவும், நம்மீது அன்புகூர்ந்து தம் அருளால் நிலையான ஆறுதலையும் எதிர்நோக்கையும் அளித்த நம் தந்தையாம் கடவுளும் உங்கள் உள்ளங்களுக்கு ஊக்கமளித்து, நல்லதையே சொல்லவும் செய்யவும் உங்களை உறுதிப்படுத்துவார்களாக!


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல்



திபா 96: 10. 11-12ய. 12டி-13

பல்லவி: மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க ஆண்டவர் வருகின்றார்.


10 வேற்றினத்தாரிடையே கூறுங்கள்: ஆண்டவரே ஆட்சி செய்கின்றார்;

பூவுலகு உறுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது; அது அசைவுறாது;

அவர் மக்களினங்களை நீதி வழுவாது தீர்ப்பிடுவார். -பல்லவி


11 விண்ணுலகம் மகிழ்வதாக் மண்ணுலகம் களிகூர்வதாக்

கடலும் அதில் நிறைந்துள்ளனவும் முழங்கட்டும்.

12ய வயல்வெளியும் அதில் உள்ள அனைத்தும் களிகூரட்டும். -பல்லவி


12டி அப்பொழுது, காட்டில் உள்ள அனைத்து மரங்களும் அவர் திருமுன் களிப்புடன் பாடும்.

13 ஏனெனில் அவர் வருகின்றார்; மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க வருகின்றார்;

நிலவுலகை நீதியுடனும் மக்களினங்களை உண்மையுடனும் அவர் தீர்ப்பிடுவார். -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது. அல்லேலூயா.


மத்தேயு 23:23-26

பொதுக்காலம் 21 வாரம் செவ்வாய்


நற்செய்தி வாசகம்



மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 23: 23-26


அக்காலத்தில் இயேசு கூறியது: ஹஹவெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! நீங்கள் புதினா, சோம்பு, சீரகம் ஆகியவற்றில் பத்தில் ஒரு பங்கைப் படைக்கிறீர்கள். ஆனால் திருச்சட்டத்தின் முக்கிய போதனைகளாகிய நீதி, இரக்கம், நம்பிக்கை ஆகியவற்றைக் கடைப் பிடிக்காமல் விட்டுவிடுகிறீர்கள். இவற்றைக் கண்டிப்பாய்க் கடைப் பிடிக்கவேண்டும். அவற்றையும் விட்டுவிடக் கூடாது. குருட்டு வழிகாட்டிகளே! நீங்கள் பருகும்போது கொசுவை வடிகட்டி அகற்றுகிறீர்கள். ஆனால் ஒட்டகத்தையோ விழுங்கிவிடுகிறீர்கள். வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில் தூய்மையாக்குகிறீர்கள். ஆனால் அவற்றின் உட்புறத்தையோ கொள்ளைப் பொருள்களாலும் தன்னல விருப்புகளாலும் நிரப்புகிறீர்கள். குருட்டுப் பரிசேயரே, முதலில் கிண்ணத்தின் உட்புறத்தைத் தூய்மையாக்குங்கள். அப்பொழுது அதன் வெளிப்புறமும் தூய்மையாகும்.''


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


-------------------------


ஏ அப்பா என்னா திட்டு…

மத்தேயு 23:23-26


இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துதுகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.


அன்புமிக்கவர்களே! இன்றைய நற்செய்தியைப் படிக்கும் போது நமக்கு இரண்டு விதமான உணா்வுகள் வெளிப்படுகின்றன. (1) இயேசு ரொம்ப திட்டுவதைப் பார்க்கும் போது ரொம்ப "ஷாக்கா" இருக்கிறது (2)மறைநூல் அறிஞர்கள், பரிசேயர்கள் அடிக்கடி இயேசுவை குற்றம் சாட்டினர். பல தொல்லைகளைக் கொடுத்துக்கொண்டே இருந்தனர். இயேசு சரியாக நேரத்தைப் பயன்படுத்துகிறார். இது அவர்களுக்கு தேவைதான் என்ற உணர்வும் ஏற்படுகிறது.


இயேசு ஏன் திட்டுகிறார்?. அன்பு, இரக்கம் மிகுந்த கடவுள் ஏன் இப்படி திட்டுகிறார் என்பதை நாம் பார்க்கும்போது அதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை. நாம் இரண்டு காரணங்களை மிகவும் அழுத்தமாக சொல்ல முடியும்.


1. கடைப்பிடிக்கவில்லை…. திட்டு வாங்கினார்கள்

கடவுளின் முக்கியமான போதனை நீதி, இரக்கம், பரிவு இவற்றைக் கடைப்பிடித்து கடவுளை நேசிப்பது போல அடுத்தவரையும் அன்பு செய்ய வேண்டும் என்பது. ஆனால் இவர்கள் இதையெல்லாம் கடைப்பிடிக்காமல் கடவுளுக்கு புதினா, சோம்பு, சீரகம் இவற்றில் பத்தில் ஒரு பங்கைப் படைப்பதிலே கவனமாய் இருந்தார்கள். கவனாய் கடைப்பிடிக்க வேண்டிய கடவுளின் போதனைகளை காற்றிலே விட்டுவிட்டார்கள். ஆகவே இயேசு வெளிடேக்காரர்களே உங்களுக்கு கேடு என திட்டுகிறார்.


2. தூய்மையாக்கவில்லை… திட்டு வாங்கினார்கள்

கடவுளின் போதனை உட்புறத்தை தூய்மையாக வைக்க வேண்டும் என்பது. ஆனால் இவர்கள் அதற்கு எதிராக வெளிப்புறத்தை தூய்மையாக்கினார்கள். உட்புறத்தை கொள்ளைப் பொருள்களாலும் தன்னல விருப்புகளாலும் நிரப்பினார்கள். ஆகவே இயேசுவுக்கு கோபம் கொப்பளிக்கிறது. நன்றாக திட்டு வாங்குகிறார்கள்.


அன்புமிக்கவர்களே! நம்மை பரிசோதித்து பார்க்கும் நல்ல நாள் இது. நம்முடைய செயல்பாடுகளை பார்க்கும் போது இயேசு திட்டுவாரா? அகமகிழ்வாரா? நாமும் பரிசேயர்கள், மறைநூல் அறிஞர்கள் போல் செயல்பட்டால் மாற்றம் பெறும் நாள் இது. மாறுவோம். மகிழ்ச்சியை மனதில் என்றும் அழியாமல் விதைப்போம்.


மனதில் கேட்க…

1. கடவுளை ஆர்வமாக வழிபடுகிற நான், அவர் சொல்வதை மிகவும் ஆசையாக கடைப்பிடிக்கிறேனா?

2. வெளிப்புறத்தை சுத்தாமாக வைக்கும் நான் அதை விட மிகவும் சுத்தமாக உட்புறத்தை வைக்கலாமே?


மனதில் பதிக்க…

உங்கள் விண்ணகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள் (மத் 5:48)

அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா

--------------------------------------------------------------



நிதானமும், பொறுமையும்

 2தெசலோனிக்கர் 2: 1 – 3, 14 – 17


திருத்தூதர் பவுல் இதற்கு முன்பு, தெசலோனிக்கருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த “இயேசுவின் இரண்டாம் வருகை“ பற்றி ஒரு சிலர் தவறாக புரிந்து கொள்கிறார்கள். அதனைத் தெளிவுபடுத்தும் நோக்கில் இந்த பகுதி அமைந்திருக்கிறது. இயேசு கிறிஸ்து மக்களை தீர்ப்பிடுவதற்கு தயாராக இருக்கிறார், உடனடியாக அவர்களுக்கு தோன்றி, மக்களை தீர்ப்பிடுவார் என்கிற எண்ணத்தில் ஒரு சிலர் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள், அல்லது கடவுள் தங்களுக்கு வெளிப்படுத்தியது போல, அதையே மற்றவர்களுக்கும் அறிவிக்கிறார்கள். இதற்கான பதிலை, பவுலடியார் இங்கு தெளிவுபடுத்துகிறார்.

தன்னுடைய திருமுகம் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது, அதனை தெளிவுபடுத்துவது, சரிப்படுத்துவது தன்னுடைய கடமை என்பதை உணர்ந்து, பவுலடியார் இதனை எழுதுகிறார். நம்பப்படுகிற தவறான செய்தியை, சரி செய்ய வேண்டும் என்கிற உணர்வு அவருக்கு அதிகமாக இருக்கிறது. பவுலடியார் நினைத்திருந்தால், அந்த தவறுக்கும் தனக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றோ, அல்லது தான் அப்படி சொல்லவில்லை என்றோ, அல்லது தான் சொன்னதை எப்படியாவது நியாயப்படுத்த வேண்டும் என்றோ நினைக்கவில்லை. மாறாக, நடந்தது நடந்து விட்டது, அதனை எப்படி சரிப்படுத்துவது? என்பதில், மிகக்கவனமாக பிரச்சனையை கையாள்கிறார். தான் செய்த தவறை நியாயப்படுத்த வேண்டும் என்கிற எண்ணம் அவருடைய எழுத்துக்களில் துளியும் இல்லை. மாறாக, மக்களுடைய நம்பிக்கை வாழ்விற்கு தன்னுடைய வார்த்தைகள் எந்தவிதத்திலும் பாதகமாக அமைந்து விடக்கூடாது என்பதில் தான், அவர் உறுதியாக இருக்கிறார்.

நம்முடைய வாழ்வில் நாம் தவறு செய்வது தவிர்க்க முடியாத ஒன்று. தவறு செய்த பிறகும் அந்த தவறை நியாயப்படுத்த வேண்டும் என்கிற எண்ணம் தான், இன்று நம்மில் பல பேருக்கு இருக்கிறது. செய்கிற தவறை நியாயப்படுத்துவதை விட்டுவிட்டு, அதனை எப்படி சரி செய்யலாம்? என்று ஆக்கபூர்வமாக சிந்திப்பதற்கு இந்த பகுதி நமக்கு அழைப்புவிடுக்கிறது. இந்த அழைப்பினை ஏற்று, நம்முடைய வாழ்விலும் ஆக்கபூர்வமாக சிந்திப்பதற்கு முயல்வோம்.

- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்


--------------------------------------------------


வீண் ஆடம்பரங்களைத் தவிர்ப்போம்


யூதர்கள் தூய்மைக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கக்கூடியவர்கள். உண்ணும் உணவிலும், உடலிலும், பயணத்திலும் தூய்மையை கருத்தூன்றி கடைப்பிடிக்கக்கூடியவர்கள். இது சுகாதாரம் சார்ந்ததற்கான அல்ல, சமயம் தொடர்பானது. தாங்கள் தூய்மையான இனம் என்ற எண்ணம், யூதர்களுக்கு அதிகமாக இருந்தது. எனவே, பல தூய்மைச்சடங்குகள் அவர்கள் பின்பற்றுவதற்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்த தூய்மைச்சடங்குகளில் இருக்கும் போலித்தனத்தை இயேசு விரிவாக விளக்குகிறார்.

திராட்சை இரசம் யூதர்களின் உணவில் கலந்துவிட்ட ஒன்று. அந்த திராட்சை இரசத்தை தயாரித்து, மற்றவர்கள் பருக கொடுக்கிறபோது கூட, தூய்மைச்சடங்கு சம்பிரதாயத்தை, இம்மியளவு பிசகாமல் அவர்கள் கடைப்பிடித்தார்கள். கண்ணுக்குத் தெரியதாக பூச்சிகள் அதில் இருக்கக்கூடாது என்பதற்காக, அதனை வடிகட்டி மற்றவர்களுக்குக் கொடுத்தார்கள். வெளிப்படையாகச் சொன்னால், இந்தளவுக்கு அவர்கள் இருக்க வேண்டும் என்று சட்டம் அவர்களை எதிர்பார்க்கவில்லை. ஆனாலும், அவர்கள் சம்பிரதாயதச் சட்டங்களை அவ்வளவு நேர்த்தியாகச் செய்தார்கள். அதேவேளையில், அந்த சட்டங்கள் காட்டும் மனித மதிப்பீடுகளை ஒரு பொருட்டாக எண்ணாது வாழ்ந்தனர். இதனைத்தான் இயேசு ஒட்டகம் என்கிற உருவகத்தோடு பொருத்திப் பேசுகிறார். ”கொசுவை வடிகட்டி அகற்றுகிறீர்கள். ஆனால், ஒட்டகத்தையோ விழுங்குகிறீர்கள்” என்று சொல்வது இதன் அடிப்படையில் தான்.

எது தேவையோ அதனை கண்ணும் கருத்துமாகச் செய்வதற்கு நாம் முயற்சி எடுப்பது கிடையாது. ஆனால், எது தேவையில்லையோ, அதனைச் செய்வதற்கு நாம் அதிகமான முயற்சி, தேவையில்லாத முயற்சியை எடுக்கிறோம். கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கொண்டாடும் திருவிழாக்கள் இதற்கு சிறந்த சான்றாக இருக்கிறது. வீண் ஆடம்பரங்களுக்கும், பகட்டிற்கும் முக்கியத்துவம் கொடுக்கிறோம். இரக்கச்செயல்களைக் காட்டுவதற்கு ஒதுங்குகிறோம். இப்படிப்பட்ட முரண்பாடாக வாழ்வைத்தவிர்த்து, இயேசு காட்டும் வழியில் நடப்போம்.


அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

---------------------------------------------------


வாழ்க்கைமுறையை மாற்றிக்கொள்வோம்


யூதர்களின் தூய்மைச்சடங்கு சட்டத்தில் எவையெல்லாம் தூய்மையானவை, எவையெல்லாம் தூய்மையற்றவை என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. கொசுவும், ஒட்டகமும் தூய்மையற்ற விலங்குகள் வகைகளைச் சார்ந்தது. தூய்மையற்றது எதுவும் உடலுக்குள் சென்றுவிடக்கூடாது என்பதற்காக, யூதர்கள் திராட்சை இரசத்தைக் குடிப்பதற்கு முன்பாக, அதை வடிகட்டினர். இதன் மூலமாக தூய்மையற்றது என்று கருதப்படும் அனைத்துமே அதில் தங்கிவிடும் என்பதுதான் அவர்களின் நம்பிக்கை.

கண்ணுக்குத் தெரியாத கொசுவை வடிகட்டுவதில் இவ்வளவு அக்கறை எடுத்துக்கொண்ட யூதர்கள் மிகப்பெரிய விலங்காகிய ஒட்டகத்தை அப்படியே விழுங்கிவிடுகிறார்கள் என்று சொல்வது, அவர்களின் வெளிவேடத்தையும், அர்த்தமில்லாத செயல்பாட்டையும் தெளிவாகப் படம்பிடித்துக்காட்டுகிறது. தாங்கள் செய்வதையெல்லாம் ஏதோ மிகப்பெரிய செயல்பாடாகக் காட்டிக்கொள்ள விரும்பும் பரிசேயர்கள், உண்மையில் தங்களின் வெளிவேடத்தைத்தான் வெளிப்படுத்துகிறார்கள். வெளிவேடத்தை கடவுள் விரும்புகிறவர் அல்ல. வெறும் அடையாளங்களையும் கடவுள் விரும்புகிறவர் அல்ல. உண்மையான உள்ளத்தைத்தான் கடவுள் விரும்புகிறார்.

நமது வழிபாடுகள், பக்திமுயற்சிகள், வழிபாட்டு முறைகள் வெறும் வெற்று அடையாளங்களாகத்தான் இருக்கிறது. அடையாளங்கள் காட்டும் அர்த்தத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காது, அடையாளத்தைப் பிடித்துக்கொண்டிருப்பது, பரிசேயர்களின் வெளிவேடத்திற்கு ஒப்பாகும். அப்படி இருந்தால், நமது வாழ்க்கைமுறையை மாற்றிக்கொள்ள முன்வருவோம்.


அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------


ஏழைகளுக்கு உதவுவது இறைவனுக்குக் கொடுப்பது


இணைச்சட்டம் 14: 22 சொல்கிறது: “ஆண்டுதோறும் உன் நிலத்தில் விளையும் எல்லாப்பலன்களிலும் பத்திலொரு பாகத்தைப் பிரித்தெடு”. இந்த பாகம் கடவுளுக்கு நன்றியின் அடையாளமாகக் கொடுக்கப்படும் காணிக்கையாகும். அதாவது பெரும் விளைச்சலின் ஒரு பகுதி கடவுளுக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்பது தான் இந்த சட்டத்தின் பொருள்.

புதினா, சோம்பு, சீரகம் போன்றவை விளைச்சல் என்றே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாதவை. அதன் தேவையும் மிகுதியானது அல்ல. இவற்றிலிருந்தும் பத்தில் ஒரு பங்கு கொடுக்கப்பட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு கிடையாது தான். இருந்தபோதிலும், அப்படி தேவையே இல்லாத சாதாரண விளைச்சலிலிருந்து கூட, இந்த பரிசேயர்கள் பத்தில் ஒரு பங்கை கடவுளுக்கு கொடுத்தார்கள். எந்த அளவுக்கு நுண்ணியமாக இம்மியளவு பிசகாமல் பரிசேயர்கள் சட்டங்களை உடும்புப்பிடியாக பிடித்து வாழ்ந்தார்கள் என்பதற்கு இதுவே மிகச்சிறந்த சாட்சி. அதே வேளையில் எவற்றைக் கடைப்பிடிக்க வேண்டுமோ, எவற்றை வாழ்க்கையில் மதிப்பீடுகளாகக் கொள்ள வேண்டுமோ, அவைகளை, அதாவது அன்பு, நீதி, இரக்கம், நம்பிக்கையை, காற்றிலே பறக்க விட்டுவிட்டனர். இப்படிப்பட்ட போலித்தனமான வாழ்வை , இயேசு கடுமையாகச்சாடுகிறார்.

நாமும் கூட ஆலயம் கட்ட, புனிதர்களின் சுரூபத்தை அலங்கரிக்க எத்தனை இலட்சங்கள் வேண்டுமானாலும் கொடுக்கத்தயாராக இருக்கிறோம். ஆனால், நம்மில் எத்தனை பேர் ஏழைகள், எளியவர்களுக்காக உதவத்தயாராக இருக்கிறோம்?. ஏழைகளைச்சேராத எதுவும் இயேசுவுக்கு சொந்தமாக முடியாது.


அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------


உட்புறத் தூய்மை!


இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

மறைநூல் அறிஞரையும், பரிசேயரையும் இயேசு மீண்டும் ஒருமுறை சாடுவதை இன்றைய வாசகம் மூலம் வாசிக்கின்றோம். இன்று அவர்களை வெளிவேடக்காரர்கள் என்று இயேசு அழைக்கிறார். நேற்றைய வாசகத்தில் புனித நத்தனியேலை இயேசு கபடற்றவர் என்று பாராட்டியதை வாசித்தோம். அந்தக் கபடற்ற தன்மைக்கு நேர் எதிரானதுதான் வெளிவேடம். உள் ஒன்று வைத்து வெளி ஒன்று பேசுவது, செயல்படுவது.

பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும் வெளித் தோற்றத்திற்கு நேர்மையானவர்களாக, இறைப் பற்று மிகுந்தவர்களாகக் காட்சி தந்தனர். ஆனால், அவர்களின் உள்ளத்தில் கொள்ளைப் பொருள்களாலும், தன்னல விருப்புகளாலும் நிரப்பினர் என்று இயேசு கூறுகிறார். எனவே, உட்புறத்தை, உள்ளத்தை முதலில் தூய்மையாக்குங்கள் என்று அறிவுரை பகர்கின்றார்.

நாமும் நமது உள்ளத்தைக் கொஞ்சம் ஆய்வு செய்வோம். கொள்ளைப் பொருள்களும், தன்னல விருப்புகளும் அங்கே இருக்கின்றனவா என்று சோதிப்போம். பிறருடைய பொருள்களை, உடமைகளை அடைய விரும்புவது கொள்ளைப் பொருள். பிறர்மீது அக்கறை கொள்ளாமல், நமது இன்பம், ஆசைகள், இவை பற்றியே அதிக ஆர்வம் கொள்வது தன்னல விருப்பு. இவை இரண்டும் நம் மனதில் இருக்கும்வரை நமது உட்புறம் தூய்மையற்றதாகவே இருக்கும். நமது வெளி அடையாளங்கள்- வழிபாடுகள், செபங்கள், தோற்றங்கள் - அனைத்தும் வெளி வேடமாகவே இருக்கும்.

மன்றாடுவோம்; தூய்மையின் ஊற்றே இயேசுவே, எனது வாழ்வும் பரிசேயர்களைப் போல வெளிவேடம் நிறைந்ததாக இருப்பதற்காக மனம் வருந்துகிறேன். மன்னிப்புக் கோருகிறேன். எனது உள்ளத்திலும் கொள்ளைப் பொருள்களும், தன்னல விருப்புகளும் நிறைந்து உள்ளன. அவற்றை அகற்றி உமது அன்பால் நிரப்பி, என்னை தூய்மைப்படுத்தியருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.


-- அருட்தந்தை குமார்ராஜா


-------------------------

 

''இயேசு, 'வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில் தூய்மையாக்குகிறீர்கள். ஆனால் அவற்றின் உட்புறத்தையோ கொள்ளைப் பொருள்களாலும் தன்னல விருப்புகளாலும் நிரப்புகிறீர்கள்' என்றார்'' (மத்தேயு 23:25)


அன்பார்ந்த இணையதள நண்பர்களே!


-- நாடகத்தில் ஒருவர் அரசராகவோ, அமைச்சராகவோ, படைத்தலைவராகவோ, ஏவலாளாகவோ நடிக்கலாம். ஆனால் நாடகம் முடிந்ததும் அவர் தன்னுடைய அன்றாட வாழ்க்கை முறைக்குத் திரும்பி விடுவார். இயேசு குறிப்பிடுகின்ற ''வெளிவேடம்'' இதுபோன்றதுதான். பரிசேயரும் மறைநூல் அறிஞரும் மக்கள்முன் நல்லவர்கள்போல் நடிக்கிறார்களே தவிர உண்மையிலேயே நல்லவர்களாகச் செயல்படவில்லை என இயேசு குற்றம் சாட்டுகிறார். எல்லாப் பரிசேயரும் மறைநூல் அறிஞரும் வேண்டுமென்றே மக்களைத் திசைதிருப்பினார்கள் என்றோ, அவர்களை ஏய்த்துப் பிழைத்தார்கள் என்றோ நாம் கூற முடியாது. ஆனால் பொதுவாக அவர்கள் தாங்கள் நல்லதையே செய்வதாக நினைத்துக் கொண்டு, உண்மையில் தங்களையே ஏமாற்றிக்கொண்டிருந்தார்கள் என இயேசு சுட்டிக்காட்டுகிறார். சட்ட நுணுக்கங்களைத் துல்லியமாகக் கடைப்பிடித்த அவர்கள் உண்மையிலேயே கனமான காரியங்களைக் கவனிக்காமல் விட்டுவிட்டார்கள். தூய்மை சார்பான சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் நிறைவேற்றினால் போதும், கடவுளுக்கு ஏற்புடையவர்களாகிவிடலாம் என நினைத்த அவர்கள் உண்மையிலேயே கருத்தில் கொள்ளவேண்டிய முதன்மைகளைப் புறக்கணித்துவிட்டுத் தங்களை நல்லவர்கள் என நினைத்துக்கொண்டார்கள். வெளித்தூய்மையில் கண்ணும் கருத்துமாக இருந்த அவர்கள் உண்மையான தூய்மை என்பது மனித இதயத்தை மாசின்றிக் காப்பதில் அடங்கும் என்பதை மறந்துவிட்டார்கள். ஆக, மனித உள்ளத்தில் அன்பும் இரக்கமும் பரிவும் பாசமும் நீதியும் நேர்மையும் இல்லாவிட்டால் அது மாசடைந்து பாழ்பட்ட வீடு போல ஆகிவிடும் என இயேசு உணர்த்துகிறார் (மத் 23:25).

-- மனிதரை மாசுபடுத்துகின்றவை உள்ளத்திலிருந்து எழுகின்ற தீய சிந்தனைகளும் அவற்றிலிருந்து பிறக்கின்ற தீய செயல்களுமே என இயேசு வழங்குகின்ற போதனை நமக்கும் பொருந்தும் (காண்க: மத் 15:18-19). எனவே நாம் தூய சிந்தனையை நம்மில் வளர்த்திட வேண்டும். எண்ணத்தில் தூய்மையிருந்தால் நாம் சிந்திக்கின்ற பாணிகளும் நலமாக இருக்கும். நம் சிந்தனையிலிருந்து எழுகின்ற செயல்களும் நல்லவையாக இருக்கும். வெளிச் சடங்குகளைத் துல்லியமாக நிறைவேற்றிவிட்டால் கடவுளுக்கு ஏற்புடையவராகிவிடலாம் என நினைப்பவர்கள் தங்களையே ஏமாற்றிக் கொள்கிற பரிசேயருக்கு ஒப்பானவர்களே. மாறாக, உள்ளத்தில் தூய்மையை வளர்த்துக்கொண்டு, ''நீதி, இரக்கம், நம்பிக்கை'' ஆகிய ''முக்கிய போதனைகளை'' நாம் கடைப்பிடித்தால் (மத் 23:23) கடவுளுக்கு ஏற்புடையவர்களாக வாழ்வோம்.


மன்றாட்டு

இறைவா, நேர்மையான உள்ளத்தை எங்களில் உருவாக்கியருளும்.


--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

-------------------------'


''நீங்கள் பருகும்போது கொசுவை வடிகட்டி அகற்றுகிறீர்கள்.

ஆனால் ஒட்டகத்தையோ விழுங்கிவிடுகிறீர்கள்'' (மத்தேயு 23:24)


அன்பார்ந்த இணையதள நண்பர்களே!


-- கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனதுபோல என்பது தமிழ்ப் பழமொழி. இயேசுவோ ஒட்டகத்தையும் கொசுவையும் இணைத்து வேடிக்கையாகப் பேசுகிறார். திருச்சட்டத்தின் நுணுக்கங்களை அலசி ஆய்ந்த மறைநூல் அறிஞரும் பரிசேயரும் சின்னஞ்சிறு காரியங்களில் மகா கவனம் செலுத்திவிட்டு, உண்மையிலேயே பெரிய, கனமான காரியங்களை மிக எளிதாக ஒதுக்கிவைத்துவிட்டதை இயேசு சுட்டிக்காட்டுகிறார். யூத சட்டப்படி, ஒட்டகத்தின் இறைச்சி தீட்டான ஒன்று; எனவே அதை உண்ணலாகாது (காண்க: லேவியர் 11:4). திராட்சை இரசத்தைப் பருகும்போது அதில் பூச்சிகள் விழுந்திருந்தால் அவற்றின் தீட்டுக் காரணமாகச் சட்டத்தை மீற நேரிடும் என்பதால் பானத்தை வடிகட்டும் பழக்கம் இருந்தது. எனவே, தீட்டான சின்னஞ்சிறு கொசுவை (காண்க: லேவி 11:41) அறியாமல் விழுங்கிவிடாதிருக்க எவ்வளவோ கவனமாயிருக்கின்ற ''வெளிவேடக்காரர்கள்'' தீட்டான விலங்குகளிலேயே மிகப் பெரிய விலங்காகிய ஒட்டகத்தை விழுங்குவதில் மட்டும் கவனக்குறைவாய் இருப்பது வேடிக்கையல்லவா என இயேசு பகடையாகப் பேசுவது வாசித்து இன்புறத்தக்க பகுதி.


-- ''நீதி, இரக்கம், நம்பிக்கை'' ஆகியவையே உண்மையிலேயே முக்கியமான போதனை (மத் 23:23) என இயேசு குறிப்பிடுவது கருதத்தக்கது. இது மீக்கா இறைவாக்கினர் நூலில் அழகாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது (''ஓ மானிடா...நேர்மையைக் கடைப்பிடித்தலையும், இரக்கம் கொள்வதில் நாட்டத்தையும் உன் கடவுளுக்கு முன்பாக தாழ்ச்சியோடு நடந்துகொள்வதையும் தவிர வேறு எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கின்றார்?'' - மீக்கா 6:8). தெளிந்த பார்வையோடு இவ்வழியில் நடக்கும்போது நாம் உண்மையிலேயே அன்புக் கட்டளையை நிறைவேற்றுபவர் ஆவோம். மாறாக, நீதியும் இரக்கமும் நம்பிக்கையும் இல்லாத மனிதர் நல்லது செய்வதுபோல வெளியே காட்டிக்கொண்டாலும் அவர்கள் ''குருட்டு வழிகாட்டிகளுக்கு'' ஒப்பாகவே இருப்பர். ஆக, நம் வாழ்வில் முதன்மை பெற வேண்டிய விழுமியங்களை இயேசு அடையாளம் காட்டுகின்றார். அவற்றைக் கடைப்பிடித்து ஒழுக நாம் அழைக்கப்படுகிறோம்.


மன்றாட்டு

இறைவா, முதன்மையானவற்றை உள்ளத்தில் ஏற்று வாழ்ந்திட அருள்தாரும்.


--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (28-06-2025)

    முதல் வாசகம் தொடக்க நூலிலிருந்து வாசகம் 18: 1-15 அந்நாள்களில் ஆண்டவர் மம்ரே என்ற இடத்தில் தேவதாரு மரங்கள் அருகே ஆபிரகாமுக்குத் தோன்றினார...