சனவரி 7
முதல் வாசகம்
நாம் எதைக் கேட்டாலும் கடவுள் நமக்குச் செவிசாய்க்கிறார்.
திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 14-21
அன்பார்ந்தவர்களே,
நாம் கேட்பது கடவுளுடைய திருவுளத்திற்கு ஏற்ப அமைந்திருப்பின், அவர் நமக்குச் செவிசாய்க்கிறார்; இதுவே நாம் அவர்மீது கொண்டுள்ள உறுதியான நம்பிக்கை. நாம் எதைக் கேட்டாலும் அவர் நமக்குச் செவிசாய்க்கிறார் என்று நமக்குத் தெரியும். எனவே, நாம் அவரிடம் கேட்டவற்றைப் பெறுவோம் என்னும் உறுதி நமக்கு உண்டு.
பாவம் செய்வோர் சாவுக்குரிய பாவம் செய்யவில்லை என்று கண்டால், அவர்களுக்காகக் கடவுளிடம் வேண்டுதல் செய்யவேண்டும். கடவுளும் அவர்களுக்கு வாழ்வு அருள்வார். சாவுக்குரிய பாவமும் உண்டு. அப்பாவத்தைச் செய்வோருக்காக வேண்டுதல் செய்யவேண்டும் என நான் சொல்லவில்லை. தீச்செயல் அனைத்துமே பாவம்; ஆனால் எல்லாப் பாவமுமே சாவுக்குரியவை அல்ல.
கடவுளிடமிருந்து பிறந்தோர் பாவம் செய்வதில்லை என்பது நமக்குத் தெரியும். ஏனெனில் கடவுளிடமிருந்து பிறந்தவர்களை அவர் பாதுகாக்கிறார். தீயோன் அவர்களைத் தீண்டுவதில்லை. நாம் கடவுளைச் சார்ந்தவர்கள்; ஆனால், உலகனைத்தும் தீயோனின் பிடியில் இருக்கிறது. இது நமக்குத் தெரியும்.
இறைமகன் வந்து உண்மையான இறைவனை அறிந்துகொள்ளும் ஆற்றலை நமக்குத் தந்துள்ளார். இது நமக்குத் தெரியும். நாம் உண்மையான இறைவனோடும் அவர் மகன் இயேசு கிறிஸ்துவோடும் இணைந்து வாழ்கிறோம். இவரே உண்மைக் கடவுள். இவரே நிலைவாழ்வு.
பிள்ளைகளே, சிலைவழிபாட்டைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 149: 1-2. 3-4. 5-6a,9b (பல்லவி: 4a)பல்லவி: ஆண்டவர் தம் மக்கள்மீது விருப்பம் கொள்கின்றார்.
அல்லது: அல்லேலூயா.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
லூக் 7: 16அல்லேலூயா, அல்லேலூயா! நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
இயேசு செய்த முதல் அரும் அடையாளம் கலிலேயாவில் உள்ள கானாவில் நிகழ்ந்தது.
✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 1-12
அக்காலத்தில்
கலிலேயாவில் உள்ள கானாவில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இயேசுவின் தாயும் அங்கு இருந்தார். இயேசுவும் அவருடைய சீடரும் அத்திருமணத்திற்கு அழைப்புப் பெற்றிருந்தனர். திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்துபோகவே இயேசுவின் தாய் அவரை நோக்கி, “திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது” என்றார். இயேசு அவரிடம், “அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்ய முடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே” என்றார். இயேசுவின் தாய் பணியாளரிடம், “அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்” என்றார்.
யூதரின் தூய்மைச் சடங்குகளுக்குத் தேவையான ஆறு கல்தொட்டிகள் அங்கே இருந்தன. அவை ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் தண்ணீர் கொள்ளும். இயேசு அவர்களிடம், “இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்” என்று கூறினார். அவர்கள் அவற்றை விளிம்பு வரை நிரப்பினார்கள். பின்பு அவர், “இப்போது மொண்டு பந்தி மேற்பார்வை யாளரிடம் கொண்டுபோங்கள்” என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தார்கள்.
பந்தி மேற்பார்வையாளர் திராட்சை இரசமாய் மாறியிருந்த தண்ணீரைச் சுவைத்தார். அந்த இரசம் எங்கிருந்து வந்தது என்று அவருக்குத் தெரியவில்லை; தண்ணீர் மொண்டு வந்த பணியாளருக்கே தெரிந்திருந்தது. ஆகையால் பந்தி மேற்பார்வையாளர் மணமகனைக் கூப்பிட்டு, “எல்லாரும் நல்ல திராட்சை இரசத்தை முதலில் பரிமாறுவர்; யாவரும் விருப்பம் போலக் குடித்த பின்தான் தரம் குறைந்த இரசத்தைப் பரிமாறுவர். நீர் நல்ல இரசத்தை இதுவரை பரிமாறாமல் ஏன் வைத்திருந்தீர்?” என்று கேட்டார்.
இதுவே இயேசு செய்த முதல் அரும் அடையாளம். இது கலிலேயாவில் உள்ள கானாவில் நிகழ்ந்தது. இதன் வழியாக அவர் தம் மாட்சியை வெளிப்படுத்தினார். அவருடைய சீடரும் அவரிடம் நம்பிக்கை கொண்டனர். இதன் பிறகு அவரும் அவர் தாயும் சகோதரர்களும் அவருடைய சீடரும் கப்பர்நாகும் சென்று அங்குச் சில நாள்கள் தங்கியிருந்தனர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
"அன்னை மரியாள் காட்டிய சமூக நீதி! "
நாம் வாழும் வாழ்க்கையில் பலர் சாதிக்கின்றனர். பலர் தங்கள் வாழ்க்கையில் சாதிக்க முடியாமல் இருக்கின்றனர். காரணம் என்னவென்றால் அதிகமாக வாய்ப்பு கொடுக்கும் பொழுது வாழ்வில் சாதிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். அதிகமாக வாய்ப்பு மறுக்கப்படும் பொழுது சாதிக்கக் கூடிய சூழல் சரியாக அமைவதில்லை. எனவே சமூக நீதியோடு தேவையில் இருப்பவர்களை மனதில் வைத்து சமூகப் பணியை செய்யும் பொழுது ஏழைகள் பணக்காரர்களாகவும் வாழ்வில் உயர்ந்தவர்களாகவும் மாற முடியும்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் அன்னை மரியாவின் வழியாக சமூக நீதியானது வெளிப்படுகிறது. அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்கிற சமத்துவ மனநிலையை அன்னை மரியாவினுடைய செயல் வழியாக நாம் அறிகின்றோம். கானாவூர் திருமணத்தைப் பற்றி இன்றைய நற்செய்தியில் வாசிக்கிறோம். இந்த நற்செய்தி பகுதியை நாம் அதிகமாக வாசித்து தியானித்து இருக்கிறோம். இந்த நற்செய்தி பகுதி அன்னை மரியாள் காட்டிய சமூக நீதியை சுட்டிக்காட்டுவதாக இருக்கின்றது.
யூத சமூகத்தில் ஒரு திருமணம் நடைபெறுகிறதென்றால் விருந்து உபசரிப்பு என்பது மிகவும் முக்கியம். விருந்து உபசரிப்பில் பற்றாக்குறை இருந்தால் நிகழ்வு நடத்துகின்ற அந்த குடும்பம் அவமானத்திற்கு உள்ளாக நேரிடும். அது ஒரு பக்கம். விருந்து தொடக்கத்தில் பணக்காரர்களுக்கும் படித்தவர்களுக்கும் வழங்கப்படும். இறுதியில் தான் ஏழை எளிய மக்கள் விருந்து உண்பார்கள். ஆனால் அன்னை மரியா கடைசியாக வந்த ஏழைகளுக்கும் திராட்சை இரசம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த முதல் அற்புதத்தை இயேசு செய்ய வழிகாட்டினார். இது ஒரு பக்கம்.
அன்னை மரியாவின் பரிந்துரையின் பெயரில் ஆண்டவர் இயேசு கானாவூர் திருமணத்தில் முதல் அற்புதத்தை செய்தார். இந்த அற்புதம் செய்ய அன்னை மரியாள் இயேசுவை கேட்டுக் கொண்டதற்கு காரணம் சமூக நீதியை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காகவே. செல்வந்தர்கள் மட்டும் போதிய உணவு உண்டால் போதாது ; ஏழை எளிய மக்களும் நிறைவுள்ள உணவை உட்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அன்னை மரியாளின் மனதில் உதித்ததை நாம் உணரமுடிகிறது.தன்னுடைய புகழ்ச்சி பாடலிலே செல்வரை வெறுங்கையராய் அனுப்புவார். பசித்தோரை நலன்களால் நிரப்புவார் என அன்றே புரட்சியை ஏற்படுத்தினார் நம் அன்னை.
நாம் வாழுகின்ற இந்த உலகத்தில் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க நாம் உழைக்க வேண்டும். படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை சமத்துவம் பேணப்பட வேண்டும். செல்வந்தர்கள் முதல் ஏழைகள் வரை சமத்துவம் பேணப்பட வேண்டும். ஏனெனில் அனைவருமே கடவுளின் பிள்ளைகள். எனவே அனைவருக்கும் சமூக நீதி சரியாக கிடைக்கும் பொழுது நாம் ஆண்டவரின் இறையாட்சி மதிப்பீட்டிற்கு சான்று பகர முடியும். எனவே இந்த சமூகத்தில் இருக்கும் அவல நிலைகளையும் அநீதிகளையும் முறியடித்து சமூகநீதி மண்ணில் மலர உழைக்கத் தேவையான அருளை வேண்டுவோம். அதற்கு அன்னை மரியாவின் பரிந்துரையின் வழியாக உருக்கமாக மன்றாடுவோம் .
இறைவேண்டல்
நீதியின் தேவனே! சமூக நீதி இம்மண்ணில் மலர நீதியின் தேவனாய் இருந்து எங்கள் ஒவ்வொருவரையும் நீதியின் பாதையில் வழிநடத்தும். ஆமென்.
அருட்பணி. குழந்தை இயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️
Join with us 👇
Website: https://catholicvoicecv.blogspot.com
Youtube: https://www.youtube.com/channel/UCcgIiK1gUEqRCmTsc7ZjAoA
Youtube: https://www.youtube.com/channel/UCxBBHQAKIjii_MsZfIYNF5A
Facebook:https://www.facebook.com/Catholic-Voice-108151311955076
Instagram:https://www.instagram.com/invites/contact/?i=16mmdwn460k8p&utm_content=p6lg283
No comments:
Post a Comment