Wednesday, January 4, 2023

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (05-01-2023)

 

சனவரி 5


முதல் வாசகம்

நாம் சகோதர அன்பு கொண்டுள்ளதால், சாவிலிருந்து வாழ்வுக்குக் கடந்து வந்துள்ளோம்.

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 11-21

அன்பிற்குரியவர்களே,

நீங்கள் தொடக்கத்திலிருந்து கேட்டறிந்த செய்தி இதுவே; நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்த வேண்டும்.

காயினைப்போல் நீங்கள் இராதீர்கள்; அவன் தீயோனைச் சார்ந்தவன்; ஏனெனில் தன் சகோதரரைக் கொலை செய்தான். எதற்காக அவரைக் கொலை செய்தான்? ஏனெனில் அவன் செயல்கள் தீயனவாக இருந்தன. அவன் சகோதரருடைய செயல்கள் நேர்மையானவையாக இருந்தன.

சகோதரர் சகோதரிகளே, உலகம் உங்களை வெறுக்கிறதென்றால் நீங்கள் வியப்படைய வேண்டாம். நாம் சகோதர அன்பு கொண்டுள்ளதால், சாவிலிருந்து வாழ்வுக்குக் கடந்து வந்துள்ளோமென அறிந்துள்ளோம்; அன்பு கொண்டிராதோர் சாவிலேயே நிலைத்திருக்கின்றனர். தம் சகோதரர் சகோதரிகளை வெறுப்போர் அனைவரும் கொலையாளிகள். எந்தக் கொலையாளியிடமும் நிலைவாழ்வு இராது என்பது உங்களுக்குத் தெரியுமே. கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இதனால் அன்பு இன்னதென்று அறிந்துகொண்டோம். ஆகவே நாமும் நம் சகோதரர் சகோதரிகளுக்காக உயிரைக் கொடுக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். உலகச் செல்வத்தைப் பெற்றிருப்போர் தம் சகோதரர் சகோதரிகள் தேவையில் உழல்வதைக் கண்டும் பரிவு காட்டவில்லை என்றால் அவர்களிடம் கடவுளின் அன்பு எப்படி நிலைத்திருக்கும்? பிள்ளைகளே, நாம் சொல்லிலும் பேச்சிலும் அல்ல, செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம்.

இதனால் நாம் உண்மையைச் சார்ந்தவர்கள் என அறிந்துகொள்வோம்; நம் மனச்சான்று நாம் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்தாலும், கடவுள் திருமுன் நம் உள்ளத்தை அமைதிப்படுத்த முடியும். ஏனெனில் கடவுள் நம் மனச்சான்றைவிட மேலானவர்; அனைத்தையும் அறிபவர். அன்பார்ந்தவர்களே, நம் மனச்சான்று நாம் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதிருந்தால் நாம் கடவுள் திருமுன் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்க முடியும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 100: 1-2. 3. 4. 5 (பல்லவி: 1a)

பல்லவி: அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்!

1
அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்!
2
ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்! மகிழ்ச்சிநிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள். - பல்லவி

3
ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்! அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள். - பல்லவி

4
நன்றியோடு அவர்தம் திருவாயில்களில் நுழையுங்கள்! புகழ்ச்சிப்பாடலோடு அவர்தம் முற்றத்திற்கு வாருங்கள்! அவருக்கு நன்றி செலுத்தி, அவர் பெயரைப் போற்றுங்கள். - பல்லவி

5
ஏனெனில், ஆண்டவர் நல்லவர்; என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு; தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! புலர்ந்தது நமக்குப் புனித நாள்; பிற இனத்தாரே வருவீர், இறைவன் மலரடி தொழுவீர்; ஏனெனில் உலகின்மீது எழுந்தது பேரொளி இன்றே. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

நீர் இறைமகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்.

 யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 43-51

அக்காலத்தில்

இயேசு கலிலேயாவுக்குச் செல்ல விரும்பினார். அப்போது அவர் பிலிப்பைக் கண்டு, “என்னைப் பின்தொடர்ந்து வா” எனக் கூறினார். பிலிப்பு பெத்சாய்தா என்னும் ஊரைச் சேர்ந்தவர். அந்திரேயா, பேதுரு ஆகியோரும் இவ்வூரையே சேர்ந்தவர்கள்.

பிலிப்பு நத்தனியேலைப் போய்ப் பார்த்து, “இறைவாக்கினர்களும் திருச்சட்ட நூலில் மோசேயும் குறிப்பிட்டுள்ளவரை நாங்கள் கண்டுகொண்டோம். நாசரேத்தைச் சேர்ந்த யோசேப்பின் மகன் இயேசுவே அவர்” என்றார். அதற்கு நத்தனியேல், “நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ?” என்று கேட்டார். பிலிப்பு அவரிடம், “வந்து பாரும்!” என்று கூறினார்.

நத்தனியேல் தம்மிடம் வருவதை இயேசு கண்டு, “இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்” என்று அவரைக் குறித்து கூறினார். நத்தனியேல், “என்னை உமக்கு எப்படித் தெரியும்?” என்று அவரிடம் கேட்டார். இயேசு, “பிலிப்பு உம்மைக் கூப்பிடுவதற்கு முன்பு நீர் அத்திமரத்தின்கீழ் இருந்த போதே நான் உம்மைக் கண்டேன்” என்று பதிலளித்தார். நத்தனியேல் அவரைப் பார்த்து, “ரபி, நீர் இறைமகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்” என்றார்.

அதற்கு இயேசு, “உம்மை அத்திமரத்தின்கீழ் கண்டேன் என்று உம்மிடம் சொன்னதாலா நம்புகிறீர்? இதைவிடப் பெரியவற்றைக் காண்பீர்” என்றார். மேலும் “வானம் திறந்திருப்பதையும் கடவுளின் தூதர்கள் மானிடமகன்மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள் என மிக உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்று அவரிடம் கூறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.



 "முற்சார்பு எண்ணங்களைக் களைந்து  இயேசுவை பின்பற்றுவோம்!"


ஒரு ஊரில் புதிதாக அருட்பணி செய்வதற்காக அருள்பணியாளர் ஆயரால்  நியமிக்கப்பட்டார். ஆனால் அந்த அருள்பணியாளர் அந்த பங்கிற்கு செல்வதற்கு முன்பாகவே அவரைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்ல ஆரம்பித்தனர். ஆனால் அந்த அருள்பணியாளர் பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட பிறகு மிகச் சிறப்பான பணிகளை ஆற்றலோடு செய்தார். மக்கள் எதிர்பார்த்ததை விட  ஆன்மீகம்,  சமூகம், மனித நேயம் போன்ற நிலைகளில் பங்கு மக்கள் வளர்ச்சி அடைய அதிகமான பணிகளைச் செய்தார். அவரைப் பற்றி தவறாக புரிந்து கொண்ட மக்கள் ஒரு கட்டத்தில் அவரை சரியாகப் புரிந்து கொண்டனர்.  பங்குத்தந்தையைப் புரிந்து கொண்ட மக்கள் சிறப்பான முறையில் தங்களுடைய ஒத்துழைப்பைக் கொடுத்தனர்.


நம்முடைய வாழ்க்கையில் முற்சார்பு எண்ணத்தை  நிச்சயம் களைய வேண்டும். அப்பொழுதுதான்  வாழ்க்கையிலே வளர்ச்சி இருக்கும். இன்றைய நற்செய்தி வாசகத்தில் நத்தனியேல் பிலிப்பிடம் சொன்ன "நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வரமுடியுமோ?" என்னும் சொற்கள் நமது முற்சார்பு எண்ணங்களை ஆய்வுசெய்ய நமக்கு அழைப்பு விடுக்கின்றன.


நாசரேத் என்பது அடையாளம் காணப்படாத ஒரு பகுதியாக இருந்தது. ஆனால் இயேசு அந்த இடத்தில் வாழ்ந்ததன் வழியாக அந்த இடத்தை உயர்த்தினார்.  சிறிய இடமா பெரிய இடமோ எல்லா இடத்திலும் நன்மைத்தனங்கள் உண்டு என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது.


பல நேரங்களில் நம்முடைய வாழ்க்கையில் நாம் அதிகம் எதிர்பார்க்கிறோம். நமக்கு நிறைய கிடைக்க வேண்டும் என நினைக்கிறோம். சூழல் அனைத்தும் நமக்கு ஏற்றார் போல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். பணி செய்யக்கூடியவர்கள் பணி மாற்றம் பெறும்பொழுது , முற்சாற்பு எண்ணத்தோடு அந்த இடத்திற்கு செல்லக்கூடாது. அப்படி சென்றால் அந்த இடம் நமக்கு மகிழ்ச்சியையும் நிறைவையும் தராது. எதுவாக இருந்தாலும் என்னால் செய்ய முடியும் எதார்த்தங்களை ஏற்றுக் கொள்ள முடியும் என்பதை ஆழமாகப் புரிந்து கொண்டு நம் வாழ்க்கையில் பயணமாகும் பொழுது, வாழ்வில் வெற்றியின் கனியைச் சுவைக்க முடியும்.


ஆண்டவர் இயேசு நினைத்திருந்தால் அரச மாளிகையில் பிறந்து, அரச மாளிகையில் வளர்ந்து தன்னை உயர்ந்தவராக காண்பித்திருக்கலாம். ஆனால்  அவர் மாட்டுத் தொழுவத்தில் பிறந்து ஒரு ஏழையைப் போல் வாழ்ந்து தான் வாழ்ந்த பகுதிக்கு பெருமை சேர்த்தார்.


நம்முடைய அன்றாட வாழ்க்கையிலும் கூட நாம் வாழ்கின்ற இடம் சிறியதோ பெரியதோ அது பெரிதல்ல ; நாம் காணும் மனிதகர்களும் நல்லவர்களோ கெட்டவர்களோ அது நமக்குத் தேவையில்லை. நம்முடைய பார்வையை சரியாக அமைத்துக்கொண்டால் யாரோடும் வாழ இயலும். எங்கேயும் ஒளிர முடியும். முடிந்தவரை நம்மாலான நல்ல பணிகளை இறைவனுக்கு பயந்து செய்யும்பொழுது நாம் சாட்சியமுள்ள வாழ்வை வாழ முடியும். கடவுளின் திருவுளத்தை நிறைவேற்ற முடியும்.  வாழ்வில் சாதனையாளர்களாக மாற முடியும். எனவே நம்முடைய வாழ்க்கையில் முற்சார்பு எண்ணங்களை அகற்றி சிறந்த வாழ்வை வாழ ஆண்டவர் இயேசு கொண்டிருந்த மனநிலையை நாமும் கொண்டிருக்க முயற்சி செய்வோம். அதற்கு தேவையான அருளை வேண்டுவோம்.


 இறைவேண்டல்

வல்லமையுள்ள இறைவா!  எங்களுடைய அன்றாட வாழ்வில் முற்சார்பு எண்ணங்களை அகற்றி  சிறந்த வாழ்வை வாழ்ந்திட தேவையான அருளை தாரும். ஆமென்.


அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...