சனவரி 4
முதல் வாசகம்
கடவுளிடமிருந்து பிறந்தவர் எவரும் பாவம் செய்வதில்லை.
திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 7-10
பிள்ளைகளே, எவரும் உங்களை நெறிதவறச்செய்ய விடாதீர்கள். கிறிஸ்து நேர்மையாளராய் இருப்பதுபோல், நேர்மையாய்ச் செயல்படுபவர் நேர்மையாளராய் இருக்கின்றார். பாவம் செய்து வருகிறவர் அலகையைச் சார்ந்தவர்; ஏனெனில் தொடக்கத்திலிருந்தே அலகை பாவம் செய்து வருகிறது. ஆகவே அலகையின் செயல்களைத் தொலைக்கவே இறைமகன் தோன்றினார்.
கடவுளிடமிருந்து பிறந்தவர் எவரும் பாவம் செய்வதில்லை; ஏனெனில் கடவுளின் இயல்பு அவரிடம் இருக்கிறது. கடவுளிடமிருந்து பிறந்தவராயிருப்பதால் அவரால் பாவம் செய்ய இயலாது. நேர்மையாய்ச் செயல்படாதவரும், தம் சகோதரர் சகோதரிகளிடம் அன்பு செலுத்தாதவரும் கடவுளிடமிருந்து வந்தவர்களல்ல. இதனால் கடவுளின் பிள்ளைகள் யாரென்றும் அலகையின் பிள்ளைகள் யாரென்றும் புலப்படும்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 98: 1. 7-8. 9 (பல்லவி: 3b)பல்லவி: மாந்தர் அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
எபி 1: 1-2அல்லேலூயா, அல்லேலூயா! பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
மெசியாவைக் கண்டோம்.
✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 35-42
அக்காலத்தில்
யோவான் தம் சீடர் இருவருடன் மீண்டும் பெத்தானியாவில் நின்றுகொண்டிருந்தார். இயேசு அப்பக்கம் நடந்து சென்று கொண்டிருந்தார். யோவான் அவரைக் கூர்ந்து பார்த்து, “இதோ! கடவுளின் செம்மறி!” என்றார். அந்தச் சீடர் இருவரும் அவர் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்தனர்.
இயேசு திரும்பிப் பார்த்து, அவர்கள் தம்மைப் பின் தொடர்வதைக் கண்டு, “என்ன தேடுகிறீர்கள்?” என்று அவர்களிடம் கேட்டார். அவர்கள், “ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?” என்று கேட்டார்கள். ‘ரபி’ என்னும் எபிரேயச் சொல்லுக்குப் ‘போதகர்’ என்பது பொருள். அவர் அவர்களிடம், “வந்து பாருங்கள்” என்றார். அவர்களும் சென்று அவர் தங்கியிருந்த இடத்தைப் பார்த்தார்கள். அப்போது ஏறக்குறைய மாலை நான்கு மணி. அன்று அவர்கள் அவரோடு தங்கினார்கள்.
யோவான் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்த இருவருள் அந்திரேயா ஒருவர். அவர் சீமோன் பேதுருவின் சகோதரர். அவர் போய் முதலில் தம் சகோதரரான சீமோனைப் பார்த்து, “மெசியாவைக் கண்டோம்” என்றார். ‘மெசியா’ என்றால் ‘அருள்பொழிவு பெற்றவர்’ என்பது பொருள். பின்பு அவர் சீமோனை இயேசுவிடம் அழைத்து வந்தார். இயேசு அவரைக் கூர்ந்து பார்த்து, “நீ யோவானின் மகன் சீமோன். இனி ‘கேபா’ எனப்படுவாய்” என்றார். ‘கேபா’ என்றால் ‘பாறை’ என்பது பொருள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நாம் யாரைச் சார்ந்துள்ளோம்?
ஒருமுறை நான் கோவிலுக்குச் சென்ற போது ஒரு தாய் தன் குழந்தையைக் கண்டித்துக்கொண்டிருந்தார். அந்தக் குழந்தை சேட்டை செய்ததால் அத்தாய் அக்குழந்தையைப் பார்த்து " நீ இயேசப்பா பிள்ளையா அல்லது சாத்தான் பிள்ளையா? " எனக் கேட்டார். உடனே அக்குழந்தை "இயேசப்பா பிள்ளை "என்றது. அப்போது தாய் "நீ இயேசப்பா பிள்ளை என்றால் என் பேச்சைக் கேள் " என்று சொல்லி அக்குழந்தையை அமைதிப்படுத்தி தன் அருகே வைத்துக்கொண்டார். இந்நிகழ்வு சற்று வேடிக்கையாக இருந்தாலும் ஆழ்ந்த உண்மையை நமக்குக் கற்பிக்கிறது.
சிறுபிள்ளைகளாக இருந்த போது நம்மிடமும் நம் பெற்றோர்கள், தாத்தா பாட்டிகள், மறைக்கல்வி ஆசிரியர்களெல்லாம் இது போல சொன்னார்கள் அல்லவா. அப்போது காது கொடுத்துக் கேட்டு நமது சின்னச் சின்ன சேட்டைகளை நாம் குறைத்தோம். இது நம் எல்லோருடைய வாழ்விலுமே நடந்தது தான். ஆனால் வயதாக ஆக தவறுகளையும் பாவச்செயல்களையும் நாம் துணிச்சலாகச் செய்கிறோமே! நம்மிடம் யாராவது " நீ கடவுளின் பிள்ளையா அல்லது அலகையின் பிள்ளையா? " எனக் கேட்டால் நமது பதில் என்னவாக இருக்கும்? தாமதம் செய்யாமல் நாம் சிந்தித்தறிய வேண்டிய விஷயம் இது.
அன்புக்குரியவர்களே இன்றைய முதல் வாசகத்தில் திருத்தூதர் யோவான் பாவம் செய்வோர் அலகையிடமிருந்து வருகின்றனர் எனத் தெள்ளத் தெளிவாகக் கூறுகிறார். ஆம். நாம் பாவம் செய்யும் போதெல்லாம் அலகையைச் சார்ந்தவர்களாக இருக்கிறோம். கடவுளைச் சார்ந்தவர்களாக நாம் இருந்தால் கடவுளின் இயல்பு நம்மிலே இருப்பதை நாம் உணர்வோம். இவ்வுணர்வே நம்மை சரியான பாதையில் வழிநடத்தும். தீய வழியை விட்டு விலகச் செய்யும். உலக மாயக் கவர்ச்சிகளிலிருந்து நம்மைக் காப்பாற்றும்.
கடவுளைச் சார்ந்து வாழ நாம் என்ன செய்ய வேண்டும்? " வந்து பாருங்கள் " என்று இயேசு தம்மைப் பின்தொடர்ந்தவர்களை நோக்கிக் கூறினார். அவர்களும் சென்றார்கள். அவரோடு அன்று தங்கினார்கள். அவர் யார் என உணர்ந்து பிறரையும் அவரிடம் கூட்டிவந்தார்கள்.
அவ்வழைப்பு நமக்கும் பொருந்தும். இயேசுவிடம் போக வேண்டும். அவரை செபத்திலும் அவருடைய வார்த்தையிலும் அனுபவித்து உணர வேண்டும்.பிறரையும் அனுபவிக்கத் தூண்ட வேண்டும்.
நாம் அடிக்கடி ஆலயம் செல்கிறோம். செபிக்கிறோம். ஆனால் "வந்து பாருங்கள்" என்ற இயேசுவின் வார்த்தைகளை உணர்ந்து அவரைச் சென்று பார்த்திருக்கிறோமா? இனிவரும் காலங்க கில் இயேசுவின் அழைப்பை ஏற்போம். கடவுளைச் சார்ந்தவர்களாக மாறி நம் வாழ்வால் அதை எண்பிக்க தொடர்ந்து முயல்வோம்.
இறைவேண்டல்
அன்பு ஆண்டவரே! நாங்கள் உம்மைச் சார்ந்தவர்கள் என உலகிற்கு காட்ட எம் வாழ்வைப் புதுப்பித்தருளும். ஆமென்.
அருட்பணி. குழந்தை இயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️
Join with us 👇
Website: https://catholicvoicecv.blogspot.com
Youtube: https://www.youtube.com/channel/UCcgIiK1gUEqRCmTsc7ZjAoA
Youtube: https://www.youtube.com/channel/UCxBBHQAKIjii_MsZfIYNF5A
Facebook:https://www.facebook.com/Catholic-Voice-108151311955076
Instagram:https://www.instagram.com/invites/contact/?i=16mmdwn460k8p&utm_content=p6lg283
No comments:
Post a Comment