Showing posts with label மறைப்பணியாளர். Show all posts
Showing posts with label மறைப்பணியாளர். Show all posts

Monday, September 26, 2022

Daily Saint - இன்றைய புனிதர் (27-09-2022)

 † இன்றைய புனிதர் †


புனித வின்சென்ட் தே பவுல் - மறைப்பணியாளர்



பிறப்பு: 24 ஏப்ரல்1581,காஸ்கோனி(Gascony), பிரான்சு

இறப்பு: 27 செப்டம்பர் 1660,பாரீஸ், பிரான்சு

முத்திபேறுபட்டம்: 13 ஆகஸ்டு 1729, திருத்தந்தை 13 ஆம் பெனடிக்ட்

புனிதர்பட்டம்: 16 ஜூன் 1737, திருத்தந்தை 12 ஆம் கிளமெண்ட்

பாதுகாவல்: குதிரைகள், மருத்துவமனைகள், தொழுநோயாளர்கள், வின்சென்ட் தெ பால் சங்கங்கள்


நிகழ்வு

வின்சென்ட் தே பவுல் சிறுவனாக இருந்தபோது குடும்பத்தில் நிலவிய வறுமையின் காரணமாக படிக்க முடியாமல் ஆடுமாடுகளை மேய்க்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அப்படி இருந்தாலும் அவர் தன்னுடைய பெற்றோரின் கஷ்டத்தை உணர்ந்து ஆடு மாடுகளை மேய்த்து வந்தார். ஒரு சமயம் வின்சென்ட் தே பவுலின் ஊரில் வாழ்ந்த கோமத் என்ற நீதிபதி அவரிடம் இருந்த ஞானத்தையும் புத்திக்கூர்மையையும் பார்க்க நேர்ந்தது. உடனே அந்த நீதிபதி வின்சென்ட் தே பவுலின் தந்தையைச் சந்தித்து அவரிடம், “உம்முடைய பையன் ஆடு மாடுகளை மேய்க்க வேண்டியவன் அல்ல, அவன் பள்ளிக்குச் சென்று படிக்கவேண்டியவன், தயவு செய்து எப்படியாவது அவனை படிக்கவையுங்கள். இல்லையென்றால் ஒரு மிகச் சிறந்த அறிவாளியை நீங்கள் இழக்க நேரிடும்” என்று புத்திமதி சொல்லிவிட்டுச் சென்றார். உடனே வின்சென்ட் தே பவுலின் தந்தை தன்னிடம் இருந்த ஆடு மாடுகளை விட்டு, அவரை பள்ளியில் படிக்க வைத்தார்.


வாழ்க்கை வரலாறு

வின்சென்ட் தே பவுல் 1581 ஆம் ஆண்டு, ஏப்ரல் 24 ஆம் நாள் பிரான்சு நாட்டில் உள்ள காஸ்காணி என்னும் ஊரில் பிறந்தார். இவருக்கு நான்கு சகோதரர்களும் இரண்டு சகோதரிகளும் இருந்தனர். வின்சென்ட் தே பவுலின் வீட்டில் கடுமையான வறுமை நிலவியது. இத்தகைய வறுமையான சூழ்நிலையில் வின்சென்ட் தே பவுலால் படிக்க முடியவில்லை. எனவே, அவர் வீட்டில் இருந்த ஆடு மாடுகளை மேய்த்து குடும்பத்தாரின் கஷ்டத்தைப் போக்க ஓரளவு வழி செய்தார். அப்போதுதான் அவர் கோமத் என்ற நீதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் படிக்க அனுப்பப்பட்டார். வின்சென்ட் தே பவுலிடம் இருந்த ஞானமும் அறிவும் அவரை மிகச் சிறந்த படிப்பாளியாக மாற்றியது. இந்த சமயத்தில் அவருக்கு பெருய்ல் (Berulle) என்பரின் நட்பு கிடைத்தது. அவர்தான் வின்சென்ட் தே பவுலை குருவாகப் படிக்கச் சொன்னார். அவருடைய அறிவுறுத்தலில் பேரில் வின்சென்ட் தே பவுல் குருவாகப் படித்து, 1600 ஆம் ஆண்டு, அதாவது தன்னுடைய 19 ஆம் வயதிலே குருவாக மாறினார்.

குருவாக மாறிய பிறகு, வின்சென்ட் தே பவுல் பாரிஸ் நகருக்கு மிக அண்மையில் இருந்த கிளிசி என்னும் ஒரு கிராமப் பங்கில் பங்குக் குருவாக நியமிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சரியான பொருளாதார வசதி கிடைக்காததால் நிறையவே கஷ்டப்பட்டார். அப்போதுதான் டிகோண்டி என்று செல்வச் சீமாட்டி தன்னுடைய கணவருடன் சேர்ந்து, ‘ஏழை எளிய மக்களுக்கு மத்தியில் பணி செய்ய முன்வருவோருக்கு நாங்கள் உதவத் தயாராக இருக்கின்றோம்” என்ற ஓர் அறிவிப்பை விடுத்தார். அந்த அறிவிப்பைக் கேட்ட வின்சென்ட் தே பவுல் ஏழை எளிய மக்களுக்கு மத்தியில் பணி செய்யத் தான் முன்வருவதாக வாக்குக் கொடுத்தார். உடனே அந்த செல்வச் சீமாட்டி தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் வின்சென்ட் தே பவுலின் பெயருக்கு மாற்றி எழுதினார். இதனால் அவருடைய பொருளாதாரக் கஷ்டம் சற்றுக் குறைந்தது.

ஒருசமயம் அந்தச் செல்வச் சீமாட்டியிடம் கடன்பட்டிருந்த ஒருவரிடம் பணத்தை வசூலிப்பதற்காக அவர் கப்பலில் சென்றபோது துருக்கி நாட்டைச் சேர்ந்த கடற்கொள்ளையர்கள் அவரை கடத்திச் சென்று டூனீஸ் நகரில் இருந்த ஒரு முகமதியரிடம் அடிமையாக விற்றார்கள். அவர் வின்சென்ட் தே பவுலை வேறு நபரிடம் விற்றார். அவரோ வின்சென்ட் தே பவுலை ஒரு கிறிஸ்தவரிடம் விலைக்கு விற்றார். அந்தக் கிறிஸ்தவரோ ஆன்மீகக் காரியங்களில் அதிக நாட்டமில்லாது இருந்தார். ஆனால் அவருடைய மனைவியோ கடவுள்மீது அதிக நம்பிக்கை கொண்டு வாழ்ந்து வந்தார். அந்தப் பெண்மணியிடத்தில் வின்சென்ட் தே பவுல் திருப்பாடல்களையும், வேறு சில கிறிஸ்தவப் பாடல்களையும் பாடிக் காட்டினார். இது அவருக்குப் பிடித்துப்போக அவர் அவருடைய கணவரிடம் வின்சென்ட் தே பவுலுக்ககப் பரிந்து பேச, அம்மனிதர் வின்சென்ட் தே பவுலை விடுதலை செய்து அனுப்பினார். வின்சென்ட் தே பவுல் அங்கிருந்து வெளியேறி நான்காம் ஹென்றி என்ற மன்னரிடம் தஞ்சம் அடைந்தார். அங்கு சிறுது காலம் ஆன்ம ஆலோசகராக இருந்துவிட்டு பின்னர் பாரிஸ் நகருக்குத் திரும்பி வந்தார்.

பாரிஸ் நகருக்குத் திரும்பி வந்த பிறகு வின்சென்ட் தே பவுல் பற்பல பணிகளை செய்யத் தொடங்கினார். அனாதைகள், கைவிடப்பட்ட முதியவர்கள் போன்றோரைப் பராமரிப்பதற்காக அனாதை இல்லங்களைத் தொடங்கினார். அதோடு மட்டுமல்லாமல், நோயாளிகளைச் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் சொன்னார். ஒப்புரவு அருசாதனங்களை வழங்கி மக்களை ஆன்மீக பாதையில் வழி நடத்திச் சென்றார். அவர் ஒவ்வொரு நாள் இரவு வேளையிலும் பாரிஸ் நகரைச் சுற்றிப் பார்க்கச் செல்வார். அப்போது பாதையோரங்களில் கிடக்கும் அனாதைக் குழந்தைகளைத் தூக்கி வந்து, அவர்களை தன்னுடைய அனாதை இல்லங்களில் சேர்த்து பராமரித்து வந்தார்.

1626 ஆம் ஆண்டில் ஒருநாள், வின்சென்ட் தே பவுல் தான் செய்து வரும் பணிகளைத் தனி ஒரு மனிதராகச் செய்ய முடியாது என்பதை உணர்ந்து, மூன்று பேர் கொண்ட சபையை ஏற்படுத்தி அதற்கு நற்செய்தி அறிவிப்பு சபை (Congregation of the Mission (CM) என்று பெயரிட்டார். பின்னர் அந்த சபையின் வழியாக பல்வேறு பணிகளைச் செய்யத் தொடங்கினார். இதற்கிடையில் தூய பிரான்சிஸ் சலேசியாரின் நட்பு கிடைத்தது. அந்த நட்பு மிகவும் ஆழமாக வளர்ந்தது. எந்தளவுக்கு என்றால் பிரான்சிஸ் சலேசியாரின் இறப்புக்குப் பிறகு அவர் நடத்தி வந்த Sisters of Visitation என்ற சபையை இவர் தான் தலைமை ஏற்று நடத்தும் நிலை ஏற்பட்டது. அதன்பிறகு வின்சென்ட் தே பவுல் பெண்களுக்கு என்று ‘அறப்பணி மகளிர் சபை’யும் ஆண்களுக்கு என்று ‘ஏழைகளின் பணியாளர் சபை’யையும் தோற்றுவித்தார். இச்சபைகளின் மூலமாக வின்சென்ட் தே பவுல் ஆற்றிய பணிகள் ஏராளம்.

எப்போதும் சிலுவையைத் தன்னுடைய கையில் ஏந்தியிருக்கும் வின்சென்ட் தே பவுல், இந்த சிலுவையில் அறையப் பட்ட இயேசுவின் துணையால் எப்படிப்பட்ட பணிகளையும் செய்ய முடியும் என்று குறிப்பிடுவார். இப்படி ஏழைகளில் சிரிப்பில் இறைவனைக் கண்டு, அவர்களுக்குத் தொண்டு வந்த வின்சென்ட் தே பவுல் 1660 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் நாள் இந்த மண்ணுலக வாழ்வைத் துறந்தார். 1737 ஆம் ஆண்டு இவருக்கு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.


கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

திருச்சபையில் நடைபெறும் இரக்கச் செயல்களுக்கு பாதுகாவலராக விளங்கும் தூய வின்சென்ட் தே பவுலின் விழாவைக் கொண்டாடும் இன்று அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.


மக்கள்பணியே இறைப்பணி

வின்சென்ட் தே பவுல் மக்களுக்குப் பணிசெய்வதில் கண்ணும் கருத்துமாய் செயல்பட்டார். குறிப்பாக ஏழை எளியவர், அனாதைகள், கைவிடப்பட்டோர் இவர்களுடைய வாழ்வு ஏற்றம் காண தன்னுடைய வாழ்வு முழுவதையும் அர்ப்பணித்தார்.

1648 ஆம் ஆண்டிலிருந்து 1653 ஆம் வரை பிரான்சில் நடைபெற்ற உட்நாட்டுக் கலவரத்தில் நிறையப் பேர் பாதிக்கப்பட்டார்கள். ஏராளமான பேர் தங்களுடைய வீடுகளையும், உறவுகளையும் இழந்தது தவித்தார்கள். அத்தகைய தருணத்தில் மக்களுக்கு உணவு கொடுப்பதிலிருந்து மற்ற தேவைகளைப் பூர்த்தி செய்வது வரை வின்சென்ட் தே பவுலே பேருதவியாக இருந்தார்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ்,

பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

புனித வின்சென்ட் தே பவுல் - மறைப்பணியாளர் - நினைவு

 புனித வின்சென்ட் தே பவுல் - மறைப்பணியாளர்

நினைவு



முதல் வாசகம்

வலுவற்றவை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்துகொண்டார்.


திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 26-31


சகோதரர் சகோதரிகளே,

நீங்கள் அழைக்கப்பட்ட நிலையை எண்ணிப் பாருங்கள். மனிதக் கணிப்பின்படி உங்களுள் ஞானிகள் எத்தனை பேர்? வலியோர் எத்தனை பேர்? உயர்குடிமக்கள் எத்தனை பேர்?

ஆனால் கடவுள் ஞானிகளை வெட்கப்படுத்த, மடமை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்துகொண்டார். அவ்வாறே, வலியோரை வெட்கப்படுத்த, வலுவற்றவை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்துகொண்டார். உலகம் ஒரு பொருட்டாகக் கருதுபவற்றை அழித்துவிட அது தாழ்ந்ததாகக் கருதுபவற்றையும் இகழ்ந்து தள்ளுபவற்றையும் கடவுள் தேர்ந்தெடுத்தார். எவரும் கடவுள் முன் பெருமை பாராட்டாதபடி அவர் இப்படிச் செய்தார்.

அவரால்தான் நீங்கள் கிறிஸ்துவுடன் இணைக்கப்பட்டு இருக்கிறீர்கள். கிறிஸ்துவே கடவுளிடமிருந்து நமக்கு வரும் ஞானம். அவரே நம்மை ஏற்புடையவராக்கித் தூயவராக்கி மீட்கின்றார். எனவே மறைநூலில் எழுதியுள்ளவாறு, “பெருமை பாராட்ட விரும்புகிறவர் ஆண்டவரைக் குறித்தே பெருமை பாராட்டட்டும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல்

திபா 112: 1-2. 3-4. 5-7a. 7b-8. 9 (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்.

அல்லது: அல்லேலூயா.


1

ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்; அவர்தம் கட்டளைகளில் அவர்கள் பெருமகிழ்வு அடைவர்.

2

அவர்களது வழிமரபு பூவுலகில் வலிமைமிக்கதாய் இருக்கும்; நேர்மையுள்ளோரின் தலைமுறை ஆசிபெறும். - பல்லவி

3

சொத்தும் செல்வமும் அவர்களது இல்லத்தில் தங்கும்; அவர்களது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்.

4

இருளில் ஒளியென அவர்கள் நேர்மையுள்ளவரிடையே மிளிர்வர்; அருளும் இரக்கமும் நீதியும் உள்ளோராய் இருப்பர். - பல்லவி

5

மனமிரங்கிக் கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்; அவர்கள் தம் அலுவல்களில் நீதியுடன் செயல்படுவர்.

6

எந்நாளும் அவர்கள் அசைவுறார்; நேர்மையுள்ளோர் மக்கள் மனத்தில் என்றும் வாழ்வர்.

7a

தீமையான செய்தி எதுவும் அவர்களை அச்சுறுத்தாது. - பல்லவி

7b

ஆண்டவரில் நம்பிக்கை கொள்வதால் அவர்கள் இதயம் உறுதியாய் இருக்கும்.

8

அவர்கள் நெஞ்சம் நிலையாய் இருக்கும்; அவர்களை அச்சம் மேற்கொள்ளாது; இறுதியில் தம் எதிரிகள் அழிவதை அவர்கள் காண்பது உறுதி. - பல்லவி

9

அவர்கள் வாரி வழங்கினர்; ஏழைகளுக்கு ஈந்தனர்; அவர்களது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்; அவர்களது வலிமை மாட்சியுடன் மேலோங்கும். - பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 10: 14

அல்லேலூயா, அல்லேலூயா! நல்ல ஆயன் நானே. நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன். என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்

அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு.


✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 35-38


அக்காலத்தில்

இயேசு நகர்கள், சிற்றூர்கள் எல்லாம் சுற்றிவந்தார். எங்கும் அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசைப் பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். திரண்டிருந்த மக்களை அவர் கண்டபோது அவர்கள் மேல் பரிவு கொண்டார்: அவர்கள் ஆயர் இல்லா ஆடுகளைப் போல அலைக்கழிக்கப்பட்டுச் சோர்ந்து காணப்பட்டார்கள்.

அப்பொழுது அவர் தம் சீடரை நோக்கி, “அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தேவையான வேலையாள்களைத் தமது அறுவடைக்கு அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்” என்றார்.


ஆண்டவரின் அருள்வாக்கு.

Friday, September 16, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (17-09-2022)

 

பொதுக்காலம் 24ஆம் வாரம் - சனி

முதல் வாசகம்



அழிவுக்குரியதாய் விதைக்கப்படுவது அழியாததாய் உயிர் பெற்று எழுகிறது.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 15: 35-37, 42-49

சகோதரர் சகோதரிகளே,

“இறந்தோர் எப்படி உயிருடன் எழுப்பப்படுவார்கள்? எத்தகைய உடலோடு வருவார்கள்?” என ஒருவர் கேட்கலாம். அறிவிலியே, நீ விதைக்கும் விதை மடிந்தாலொழிய உயிர் பெறாது. முளைத்த பயிராக நீ அதை விதைக்கவில்லை; மாறாக வெறும் கோதுமை மணியையோ மற்றெந்த விதையையோதான் விதைக்கிறாய்.

இறந்தோர் உயிர்த்தெழும்போதும் இவ்வாறே இருக்கும். அழிவுக்குரியதாய் விதைக்கப்படுவது அழியாததாய் உயிர் பெற்று எழுகிறது. மதிப்பற்றதாய் விதைக்கப்படுவது மாண்புக்குரியதாய் உயிர் பெற்று எழுகிறது. வலுவற்றதாய் விதைக்கப்படுவது வல்லமையுள்ளதாய் உயிர் பெற்று எழுகிறது. மனித இயல்பு கொண்ட உடலாய் விதைக்கப்படுவது ஆவிக்குரிய உடலாய் உயிர் பெற்று எழுகிறது. மனித இயல்பு கொண்ட உடல் உண்டு என்றால், ஆவிக்குரிய உடலும் உண்டு. மறைநூலில் எழுதியுள்ளபடி, முதல் மனிதராகிய ஆதாம் உயிர் பெற்று மனித இயல்புள்ளவர் ஆனார்; கடைசி ஆதாமோ உயிர் தரும் தூய ஆவியானார்.

தூய ஆவிக்குரியது முந்தியது அல்ல; மனித இயல்புக்குரியதே முந்தியது. தூய ஆவிக்குரியது பிந்தியது. முதல் மனிதர் களிமண்ணால் ஆனவர்; அவர் மண்ணிலிருந்து வந்தவர். இரண்டாம் மனிதரோ விண்ணிலிருந்து வந்தவர். மண்ணைச் சார்ந்த மனிதர் போலவே மண்ணைச் சார்ந்த யாவரும் இருப்பர். விண்ணைச் சார்ந்த மனிதர் போலவே விண்ணைச் சார்ந்த யாவரும் இருப்பர்.

எனவே நாம் மண்ணைச் சார்ந்தவரின் சாயலைக் கொண்டிருப்பது போல விண்ணைச் சார்ந்தவரின் சாயலையும் கொண்டிருப்போம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்



திபா 56: 9. 10-11. 12-13 (பல்லவி: 13b)

பல்லவி: உமது முன்னிலையில் நான் நடக்க, என் அடிகள் சறுக்காமல் காத்தீர் அன்றோ!

9
நான் உம்மை நோக்கி மன்றாடும் நாளில் என் எதிரிகள் புறமுதுகிட்டு ஓடுவர்; அப்போது, கடவுள் என் பக்கம் இருக்கின்றார் என்பதை நான் உறுதியாய் அறிவேன். - பல்லவி

10
கடவுளின் வாக்கை நான் புகழ்கின்றேன்; ஆண்டவரின் வாக்கை நான் புகழ்கின்றேன்.
11
கடவுளையே நம்பியிருக்கின்றேன்; எதற்கும் அஞ்சேன்; மானிடர் எனக்கெதிராய் என்ன செய்ய முடியும்? - பல்லவி

12
கடவுளே, நான் உமக்குச் செய்த பொருத்தனைகளை மறக்கவில்லை; உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்.
13
ஏனெனில், சாவினின்று என் உயிரை நீர் மீட்டருளினீர்; வாழ்வோரின் ஒளியில், கடவுளின் முன்னிலையில் நான் நடக்கும் பொருட்டு என் அடிகள் சறுக்காதபடி காத்தீர் அன்றோ! - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 8: 15

அல்லேலூயா, அல்லேலூயா! சீரிய நல் உள்ளத்தோடு வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, மன உறுதியுடன் பலன் தருகிறவர்கள் பேறுபெற்றோர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்



நல்ல நிலத்தில் விழுந்த விதைகளோ, வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, பலன் தருகிறவர்களைக் குறிக்கும்.

 லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 4-15

அக்காலத்தில்

பெரும் திரளான மக்கள் எல்லா ஊர்களிலிருந்தும் இயேசுவிடம் கூடி வந்தபோது அவர் உவமை வாயிலாகக் கூறியது: “விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார். அவர் விதைத்தபோது சில விதைகள் வழியோரம் விழுந்து மிதிபட்டன; வானத்துப் பறவைகள் வந்து அவற்றை விழுங்கி விட்டன. வேறு சில விதைகள் பாறைமீது விழுந்தன; அவை முளைத்தபின் ஈரமில்லாததால் கருகிப் போயின. மற்றும் சில விதைகள் முட்செடிகளின் நடுவே விழுந்தன; கூடவே வளர்ந்த முட்செடிகள் அவற்றை நெருக்கி விட்டன. இன்னும் சில விதைகளோ நல்ல நிலத்தில் விழுந்தன. அவை வளர்ந்து நூறு மடங்கு விளைச்சலைக் கொடுத்தன.” இவ்வாறு சொன்னபின், “கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்” என்று உரக்கக் கூறினார்.

இந்த உவமையின் பொருள் என்ன என்று அவருடைய சீடர் அவரிடம் கேட்டனர். அதற்கு இயேசு கூறியது: “இறையாட்சியின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது. மற்றவர்களுக்கு எல்லாம் உவமைகள் வாயிலாகவே கூறப்படுகின்றன. எனவே ‘அவர்கள் கண்டும் காண்பதில்லை; கேட்டும் புரிந்து கொள்வதில்லை.’

இந்த உவமையின் பொருள் இதுவே: விதை, இறைவார்த்தை. வழியோரம் விழுந்த விதைகள், அவ்வார்த்தைகளைக் கேட்பவர்களுள் சிலரைக் குறிக்கும். அவர்கள் நம்பி மீட்புப் பெறாதவாறு அலகை வந்து அவ்வார்த்தையை அவர்கள் உள்ளத்திலிருந்து எடுத்துவிடுகிறது. பாறைமீது விழுந்த விதைகள், அவ்வார்த்தையைக் கேட்கும்போது அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்பவர்களைக் குறிக்கும். ஆனால் அவர்கள் வேரற்றவர்கள்; சிறிது காலமே அவ்வார்த்தையை நம்புவார்கள்: சோதனைக் காலத்தில் நம்பிக்கையை விட்டுவிடுவார்கள். முட்செடிகளுக்குள் விழுந்த விதைகள், வார்த்தையைக் கேட்டும் கவலை, செல்வம், வாழ்வில் வரும் இன்பங்கள் போன்றவற்றால் நெருக்கப்பட்டு முதிர்ச்சி அடையாதிருப்பவர்களைக் குறிக்கும்.

நல்ல நிலத்தில் விழுந்த விதைகளோ, சீரிய நல் உள்ளத்தோடு வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, மன உறுதியுடன் பலன் தருகிறவர்களைக் குறிக்கும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.


“கடவுள் என் பக்கம் இருக்கின்றார்”

பொதுக் காலத்தின் இருபத்து நான்காம் வாரம் சனிக்கிழமை

திருப்பாடல் 56: 9, 10-11, 12-13 (13b)

“கடவுள் என் பக்கம் இருக்கின்றார்”


கடவுளின் உடனிருப்பை உணர்ந்த கவி:


பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் வாழ்ந்த மிகப்பெரிய கவி வில்லியம் கெளபர் (William Cowper). தன்னுடைய முப்பத்து இரண்டாவது வயதில் ஒருசில காரணங்களால் வாழ்க்கையே வெறுத்துப்போன இவர், ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளத் துணிந்தார். ஆனால், கடைசி நேரத்தில் இவர் தன்னுடைய முடிவை மாற்றிக்கொண்டார்.

இன்னொரு நாள் கீழே ஒரு பெரிய கத்தியை வைத்து, அதன்மேல் குதித்துத் தற்கொலை செய்யத் துணிந்தார். அவ்வாறு இவர் கத்தியில் குதித்தபோது, கத்தி உடைந்து இவர் பிழைத்துக் கொண்டார். மற்றொருநாள் இவர் தூக்கில் தொங்கி இறக்க முடிவு செய்தபோது, தூக்குக் கயிறு அறுந்து பிழைத்துக் கொண்டார். இப்படியே இவர் தற்கொலை செய்துகொள்ளத் துணிந்தபோதெல்லாம், ஏதோவோர் ஆற்றல் இவரை இறக்க விடாமல் தடுத்தது.

ஒருநாள் இவர் தற்செயலாகத் திருவிவிலியத்தைத் திறந்து பார்த்தபோது, “கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கக் கூடியது எது? வேதனையா? நெருக்கடியா? இன்னலா? பட்டினியா? ஆடையின்மையா? இடரா? சாவா?எதுதான் நம்மைப் பிரிக்க முடியும்?” (உரோ 8: 35) என்ற இறைவார்த்தையைக் கண்டார். அப்போது இவருக்கு, ‘இயேசு என்னை இந்த அளவுக்கு அன்பு செய்யும்போது நான் எதற்குத் தற்கொலை செய்து கொள்ளவேண்டும்?’ என்று தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தை அடியோடு விட்டார்.

ஆம், மிகப்பெரிய ஆங்கிலக் கவியான வில்லியம் கெளபர் ஆண்டவர் தன்னோடு இருக்கின்றார், அவர் தன்னை மிகுதியாக அன்பு செய்கின்றார் என்பதை உணர்ந்தவராய், புதியதொரு வாழ்க்கை வாழத் தொடங்கினார். இன்று நாம் பாடக்கேட்ட பதிலுரைப்பாடலில் தாவீது, ஆண்டவர் தன் பக்கம் இருப்பதாய் உணர்ந்தவராய், “கடவுள் என் பக்கம் இருக்கிறார் என்பதை நான் உறுதியாய் அறிவேன்” என்கிறார். அது குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

ஒருவருடைய வளர்ச்சியைக் கண்டு அவரைப் பாராட்டுவதற்குப் பதில், அவர்மீது பொறாமை கொள்ளும் மனிதர்கள்தான் நம் நடுவில் ஏராளம்.

தாவீது போரிடச் சென்ற இடங்களிலெல்லாம் வெற்றி அடைந்ததைக் கண்டு, சவுல் அவரைப் பாராட்டி ஏற்றுக்கொண்டிருந்திருக்கலாம். ஆனால், அவர் தாவீதின்மீது பொறாமைக் கொண்டு, அவரைக் கொல்வதற்காகத் துரத்திச் செல்கின்றார். அப்போது தாவீது காத்து மன்னன் ஆக்கிசிடம் அகப்படுகின்றார் (1சாமு 21: 10-15). அப்போது தாவீது ஆண்டவர் தன்னை ஆக்கிசிடமிருந்து மீட்டருளுமாறு பாடுகின்ற பாடல்தான் இன்று நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 56.

தாவீது எதிரிகளின் கையில் அகப்பட்டிருந்தாலும், ஆண்டவர் தன் பக்கம் இருந்து, தன்னை மீட்டருள்வார் என்பதை உறுதியாய் நம்பினார். அதனால்தான் அவர், “கடவுள் என் பக்கம் இருக்கின்றார் என்பதை நான் உறுதியாய் அறிவேன்” என்று பாடிவிட்டு, “கடவுளையே நம்பியிருக்கின்றேன்; எதற்கும் அஞ்சேன்” என்கிறார்.

தாவீது ஆண்டவர்மீது கொண்டிருந்த நம்பிக்கை மிகவும் அசாதரணமானது. அந்த நம்பிக்கையே அவருக்குத் திடமளித்தது; ஆபத்துகளிலிருந்து நாமும் தாவீதைப் போன்று ஆண்டவர்மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து வாழ்வோம்.

சிந்தனைக்கு:

 நம்பிக்கை என்பது இருளில் தெரியும் ஒளி.

 மனிதர்மீது நம்பிக்கை வைப்பதை விடவும் ஆண்டவரிடம் தஞ்சம் புகுவது நலம்.

 ஆண்டவர் தன் அடியார்களை ஆபத்துகளிலிருந்து காக்கின்றார்.

இறைவாக்கு:

‘கடவுள் நம் சார்பில் இருக்கும்போது, நமக்கு எதிராக இருப்பவர் யார்?” (உரோ 8:31) என்பார் புனித பவுல். எனவே, நாம் தாவீதைப் போன்று, பவுலைப் போன்று ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார் என்ற உண்மையை உணர்ந்தவர்களாய், அவர் வழி நடந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.


“விண்ணைச் சார்ந்தவரின் சாயலைக் கொண்டிருப்போம்”

பொதுக் காலத்தின் இருபத்து நான்காம் வாரம் சனிக்கிழமை

I 1 கொரிந்தியர் 15: 35-37, 42-49
II லூக்கா 8: 4-15

“விண்ணைச் சார்ந்தவரின் சாயலைக் கொண்டிருப்போம்”


பழங்காலத்து நாணயம்:


சிறுவன் ஒருவன் சாலையோரமாக நடந்து போய்க்கொண்டிருக்கும்போது வழியில் ஒரு பழங்காலத்து நாணயத்தைக் கண்டெடுத்தான். அதை அவன் தண்ணீர் விட்டுக் கழுவிப் பார்த்தும், அதில் பொறிக்கப்பட்டிருந்த உருவம் சரியாகத் தெரியவில்லை.

அப்போதுதான் அவனுக்கு, வேதியியல் பாட வகுப்பில் அவனுடைய ஆசிரியர் ‘நைட்ரிக் அமிலத்தை ஒரு பொருளில் ஊற்றினால் அதிலுள்ள துருவெல்லாம் நீங்கிவிடும்’ என்று சொன்னது நினைவுக்கு வந்தது. அவன் தன் ஆசிரியர் சொன்னது போன்று செய்ய, துருவேறியிருந்த நாணயத்திலிருந்து துரு விலகவே அதில் பொறிக்கப்பட்டிருந்த, முன்பு அந்த நாட்டை ஆட்சி செய்த அரசியின் உருவம் தெளிவாய்த் தெரிந்தது. அதை அவன் தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தில் கொடுக்க அவனுக்கு அங்கிருந்தவர்கள் நிறையப் பணம் தந்தார்கள்.

ஆம், துருவேறிய நாணயத்திலிருந்து துருவை நீக்கியவுடன் எப்படி அதிலிருந்த அரசியின் உருவம் தெளிவாய்த் தெரிந்ததோ, அப்படி நாம் நம்மிடம் இருக்கும் மண்ணைச் சார்ந்தவரின் சாயலை அப்புறப்படுத்திவிட்டு, விண்ணைச் சார்ந்தவரின் சாயலைக் கொண்டிருந்தால் மிகுந்த பலன் தருவோம். இதை இன்றைய இறைவார்த்தை நமக்கு எடுத்துக் கூறுகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

கொரிந்து நகரில் இருந்த ஒருசிலர் உயிர்த்தெழுதலை மறுத்து வந்த சூழலில், பவுல் அவர்களுக்கு விளக்கம் அளிக்கும்போது, மனித இயல்புகொண்ட உடல், ஆவிக்குரிய உடல் என்று இரு வகையான உடல்களைப் பற்றிப் பேசுகின்றார்.

மனித இயல்பு கொண்ட உடலைக் கொண்டிருந்தவர் ஆதாம். இவர் கடவுளின் சாயலைத் தாங்கியிருந்தாலும் (தொநூ 1:26), கடவுளின் கட்டளையைக் கடைப்பிடிக்காததால் இறந்தார். ஆனால், புதிய ஆதாமாகிய இயேசு ஆவிக்குரிய உடலைக் கொண்டு பாவத்தை வென்றெடுத்து உயிர்த்தெழுந்தார். அவரைப் போன்று பாவத்தை வென்று, நாம் கடவுளின் சாயலைக் கொண்டிருக்கவேண்டும் என்பதுதான் பவுல் முதல் வாசகத்தின் வழியாக நமக்கு விடுக்கும் அழைப்பாக இருக்கின்றது.

நற்செய்தி வாசகத்தில் இயேசு விதைப்பவர் உவமையைப் பற்றிப் பேசுகின்றார். இந்த உவமையின் வழியாக இயேசு, ஒருவர் மனித இயல்பைக் கொண்டவராய் வாழாமல், ஆவிக்குரிய இயல்பைக் கொண்டவராய்க் கடவுளின் கட்டளையைக் கடைப்பிடித்து வாழ்ந்தால் மிகுந்த பலன் தரலாம் அப்போது அவர் கடவுளின் சாயலைக் கொண்டிருக்கலாம் என்கிறார்.

ஆம், கடவுள் தனது வாழ்வளிக்கும் வாக்கினைக் கொடையாகத் தந்திருக்கின்றார். இதன்படி நாம் வாழ்கின்றபோது மிகுந்த பலன் தருவோம்; கடவுளின் சாயலையும் கொண்டிருப்போம் என்பது உறுதி

சிந்தனைக்கு:

 கீழ்ப்படியாமை அழிவுக்கு இட்டுச் செல்லும்; கீழ்ப்படிதல் வாழ்வுக்கு இட்டுச் செல்லும்.

 கடவுளின் சாயலைக் கொண்டிருக்கும் நாம், அதை ஒருபோதும் நம்முடைய பாவத்தால் இழப்பது நல்லதன்று.

 கடவுள் நாம் மிகுந்த கனி தரவேண்டும் என்றே விரும்புகின்றார்.

இறைவாக்கு:

‘உங்கள் ஒளி மனிதர் முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு, உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்’ (மத் 5:16) என்பார் இயேசு. எனவே, நாம் கடவுளின் சாயலைக் கொண்டவர்களாய், அவருக்கேற்ற வாழ்க்கை வாழ்ந்து, மிகுந்த கனிதந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.


புனித ராபர்ட் பெல்லார்மின் - ஆயர், மறைவல்லுநர்

வி.நினைவு
முதல் வாசகம்

உடல் நலத்திற்கும் அழகிற்கும் மேலாக ஞானத்தின்மீது அன்புகொண்டேன்.

சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 7: 7-10, 15-16

அக்காலத்தில் சாலமோன் மன்றாடியது:

நான் மன்றாடினேன்; ஞானம் எனக்குக் கொடுக்கப்பட்டது. நான் இறைவனை வேண்டினேன்; ஞானத்தின் ஆவி என்மீது பொழியப்பட்டது. செங்கோலுக்கும் அரியணைக்கும் மேலாக அதை விரும்பித் தேர்ந்தேன்; அதனோடு ஒப்பிடும்போது, செல்வம் ஒன்றுமே இல்லை என்று உணர்ந்தேன். விலையுயர்ந்த மாணிக்கக் கல்லும் அதற்கு ஈடில்லை; அதனோடு ஒப்பிடும்போது, பொன்னெல்லாம் சிறிதளவு மணலுக்கே நிகர்; அதற்குமுன் வெள்ளியும் களிமண்ணாகவே கருதப்படும்.

உடல் நலத்திற்கும் அழகிற்கும் மேலாக அதன்மீது அன்புகொண்டேன்; ஒளிக்கு மாற்றாக அதைத் தேர்ந்தெடுத்தேன். ஏனெனில் அதன் சுடரொளி என்றும் மங்காது.

கடவுளது திருவுளத்திற்கு ஏற்பப் பேசவும், நான் பெற்றுக்கொண்ட கொடைகளுக்கு ஏற்பச் சிந்திக்கவும், கடவுள் எனக்கு அருள்புரிவாராக! ஏனெனில் ஞானத்துக்கு அவரே வழிகாட்டி, ஞானிகளைத் திருத்துகிறவரும் அவரே. நாமும் நம் சொற்களும் அவருடைய கைகளில் இருக்கின்றோம். அதுபோல் எல்லா அறிவுத்திறனும் கைத்திறனும் அவருடைய கைகளில் உள்ளன.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 19: 7. 8. 9. 10 (பல்லவி: 9b)

பல்லவி: ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை; அவை நீதியானவை.

7
ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர் அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது. - பல்லவி

8
ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை; அவை கண்களை ஒளிர்விக்கின்றன. - பல்லவி

9
ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது; அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை; அவை முற்றிலும் நீதியானவை. - பல்லவி

10
பொன்னினும், பசும் பொன்னினும் மேலாக விலைமிக்கவை; தேனினும், தேனைடையினின்று சிந்தும் தெளிதேனினும் இனிமையானவை. - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 6: 63b, 68b

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உமது வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கின்றன. நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

அதிகாரத்தோடு அவர்களுக்கு இயேசு கற்பித்தார்.

 மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 21-29

அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: “என்னை நோக்கி, ‘ஆண்டவரே, ஆண்டவரே’ எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர். அந்நாளில் பலர் என்னை நோக்கி, ‘ஆண்டவரே, ஆண்டவரே, உம் பெயரால் நாங்கள் இறைவாக்கு உரைக்கவில்லையா? உம் பெயரால் பேய்களை ஓட்டவில்லையா? உம் பெயரால் வல்ல செயல்கள் பல செய்யவில்லையா?’ என்பர். அதற்கு நான் அவர்களிடம், ‘உங்களை எனக்குத் தெரியவே தெரியாது. நெறி கேடாகச் செயல்படுவோரே, என்னை விட்டு அகன்று போங்கள்’ என வெளிப்படையாக அறிவிப்பேன்.

ஆகவே, நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படுகிற எவரும் பாறைமீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார். மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டின் மேல் மோதியும் அது விழவில்லை. ஏனெனில் பாறையின்மீது அதன் அடித்தளம் இடப்பட்டிருந்தது.

நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படாத எவரும் மணல்மீது தம் வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஒப்பாவார். மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டைத் தாக்க, அது விழுந்தது; இவ்வாறு பேரழிவு நேர்ந்தது.”

இயேசு இவ்வாறு உரையாற்றி முடித்தபோது அவரது போதனையைக் கேட்ட மக்கள் கூட்டத்தினர் வியப்பில் ஆழ்ந்தனர். ஏனெனில் அவர்கள்தம் மறைநூல் அறிஞரைப் போலன்றி அதிகாரத்தோடு அவர்களுக்கு அவர் கற்பித்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.



♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (28-06-2025)

    முதல் வாசகம் தொடக்க நூலிலிருந்து வாசகம் 18: 1-15 அந்நாள்களில் ஆண்டவர் மம்ரே என்ற இடத்தில் தேவதாரு மரங்கள் அருகே ஆபிரகாமுக்குத் தோன்றினார...