Showing posts with label பொதுக்காலம் 1 வாரம் - முதல் ஆண்டு. Show all posts
Showing posts with label பொதுக்காலம் 1 வாரம் - முதல் ஆண்டு. Show all posts

Friday, January 13, 2023

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (14-01-2023)

 

பொதுக்காலம் முதல் வாரம் - சனி

முதல் வாசகம்

அருள் நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 4: 12-16

சகோதரர் சகோதரிகளே,

கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; இரு பக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது; ஆன்மாவையும் ஆவியையும் பிரிக்கும் அளவுக்குக் குத்தி ஊடுருவுகிறது; எலும்பு மூட்டையும் மச்சையையும் அவ்வாறே ஊடுருவுகிறது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது. படைப்பு எதுவும் கடவுளுடைய பார்வைக்கு மறைவாய் இல்லை. அவருடைய கண்களுக்கு முன் அனைத்தும் மறைவின்றி வெளிப்படையாய் இருக்கின்றன. நாம் அவருக்கே கணக்குக் கொடுக்க வேண்டும்.

எனவே, வானங்களைக் கடந்து சென்ற இறைமகனாகிய இயேசுவை நாம் தனிப்பெரும் தலைமைக் குருவாகக் கொண்டுள்ளதால், நாம் அறிக்கையிடுவதை விடாது பற்றிக்கொள்வோமாக! ஏனெனில், நம் தலைமைக் குரு நம்முடைய வலுவின்மையைக் கண்டு இரக்கம் காட்ட இயலாதவர் அல்ல; மாறாக, எல்லா வகையிலும் நம்மைப் போலச் சோதிக்கப்பட்டவர்; எனினும் பாவம் செய்யாதவர்.

எனவே, நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற வேளையில் உதவக்கூடிய அருளைக் கண்டடையவும், அருள் நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 19: 7. 8. 9. 14 (பல்லவி: யோவா 6: 63b)

பல்லவி: ஆண்டவரே உம் வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கின்றன.

7
ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர் அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது. - பல்லவி

8
ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை; அவை கண்களை ஒளிர்விக்கின்றன. - பல்லவி

9
ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது; அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை; அவை முற்றிலும் நீதியானவை. - பல்லவி

14
என் கற்பாறையும் மீட்பருமான ஆண்டவரே! என் வாயின் சொற்கள் உமக்கு ஏற்றவையாய் இருக்கட்டும்; என் உள்ளத்தின் எண்ணங்கள் உமக்கு உகந்தவையாய் இருக்கட்டும். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 4: 18-19

அல்லேலூயா, அல்லேலூயா! ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவர் என்னை அனுப்பியுள்ளார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்.

 மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 13-17

இயேசு மீண்டும் கடலோரம் சென்றார். மக்கள் கூட்டத்தினர் எல்லாரும் அவரிடம் வரவே, அவர் அவர்களுக்குக் கற்பித்தார். பின்பு அங்கிருந்து அவர் சென்றபோது அல்பேயுவின் மகன் லேவி சுங்கச் சாவடியில் அமர்ந்திருந்ததைக் கண்டார்; அவரிடம், “என்னைப் பின்பற்றி வா” என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்.

பின்பு அவருடைய வீட்டில் பந்தி அமர்ந்திருந்தபோது வரிதண்டுபவர்கள், பாவிகள் ஆகிய பலர் இயேசுவோடும் அவருடைய சீடரோடும் விருந்துண்டனர். ஏனெனில் இவர்களுள் பலர் இயேசுவைப் பின்பற்றியவர்கள். அவர் பாவிகளோடும் வரிதண்டுபவர்களோடும் உண்பதைப் பரிசேயரைச் சார்ந்த மறைநூல் அறிஞர் கண்டு, அவருடைய சீடரிடம், “இவர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பதேன்?” என்று கேட்டனர்.

இயேசு, இதைக் கேட்டவுடன் அவர்களை நோக்கி, “நோயற்றவருக்கு அல்ல, நோயுற்றவருக்கே மருத்துவர் தேவை. நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


மனஉறுதியோடு இருந்தால் மீட்பு நிச்சயம்! 

இன்று நாம் அனைவரும் திரு அவையோடு இணைந்து நம் இந்தியாவின் புனிதர், நமக்கெல்லாம் பெருமை சேர்க்கும் தமிழ் மண்ணின் புனிதர் தேவசகாயம் அவர்களின் விழாவைக் கொண்டாடுகிறோம். இவர் கடந்த மே மாதம் 15 ஆம் தேதிதான் புனிதராக உயர்த்தப்பட்டார். புனித நிலைக்கு உயர்த்தப்பட்ட பின்பு நாம் இவருக்காக எடுக்கும் முதல் விழா இது. இவருடைய வாழ்க்கை கிறிஸ்தவர்களாகிய நமக்கெல்லாம் நம்பிக்கைக்கு உரமூட்டுவதாக அமைகிறது என்றால் அது மிகையாகாது. 


கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நட்டாலம் என்னும் ஊரில் இவர் பிறந்தார் .உயர்குடி இந்துக்கள் சமூகத்தில் பிறந்த அவர் அரச பதவியில் இருந்தார். அன்றைய காலத்தில் இப்பகுதி திருவாங்கூர் ஆட்சிக்கு கீழ் இருந்தது. கிறிஸ்தவர்களுக்கு ஆபத்து அங்கே இல்லை என்றாலும் உயர்குடி இந்துக்கள் கிறிஸ்தவர்களோடு பழகுவது தடைசெய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தான் நீலகண்ட பிள்ளை அதாவதோ இப்போது நாம் அழைக்கும் தேவசகாயம் கிறிஸ்தவ மறையைத் தழுவினார். தேவசகாயம் என்பது லாசரஸ் என்பதன் தமிழர்த்தம்.


தேவசகாயத்தின் இச்செயல் அரச துரோகமாகக் கருதப்பட்டது. எச்சரிக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டார். சித்தரவதை செய்யப்பட்டார். அவமானப்படுத்தப்பட்டார். எதுவும் அவரது கிறிஸ்தவ நம்பிக்கையை அசைக்கவில்லை. இறுதியில் கிறிஸ்துவுக்காக மரண தண்டனையைத் தழுவி மறைசாட்சியானார் புனித தேவசகாயம். 

இவருடைய வாழ்க்கை நமக்கு தரும் பாடம் என்ன?


சமீபத்தில் வட இந்தியாவில் கோவில்கள் இடிக்கப்பட்ட செய்தியை நாம் கேள்விப்பட்டோம். ஏன் தென் இந்தியாவிலும் தற்பொழுது கிறிஸ்தவர்களை கிறிஸ்தவர்கள் என்ற காரணத்திற்காக துன்புறுத்தும் செயல்கள் ஆரம்பமாகிவிட்டன. இத்தகைய சூழ்நிலை யை நாம் எதிர்கொண்டால் நமது நம்பிக்கை அசைக்கப்படுமா?  சிந்திக்க வேண்டும்.


இன்றைய நற்செய்தியில் இயேசு "என் பொருட்டு பிறர் உங்களை வெறுப்பர். மன உறுதியோடு இருப்பவரே மீட்கப்படுவர் "என்கிறார். தேவசகாயம் மன உறுதியோடு இருந்தார். இன்று புனிதரானார். நீங்களும் நானும் மனஉறுதியோடு இருந்து காக்கப்பட தயாராக இருக்கிறோமா?



 இறைவேண்டல் 

அன்பு இறைவா புனித தேவசகாயத்திடம் இருந்த மனஉறுதியை எங்களுக்குள்ளும் உருவாக்கி மீட்பு பெற அருள் புரிவீராக. ஆமென்.

அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️


Thursday, January 12, 2023

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (13-01-2023)

 

பொதுக்காலம் முதல் வாரம் - வெள்ளி



முதல் வாசகம்

கடவுள் தரும் ஓய்வைப் பெறுகிறவர்கள், நம்பிக்கையுடன் இருக்கும் நாமே.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 4: 1-5, 11

சகோதரர் சகோதரிகளே,

கடவுள் தரும் ஓய்வைப் பெறுவது பற்றி அவர் அளித்த வாக்குறுதி இன்னும் நிலைத்திருப்பதால், உங்களுள் எவரேனும் அதை அடையத் தவறிவிடக் கூடாது என எண்ணுகிறேன். இது குறித்து நாம் கவனமாய் இருப்போமாக. ஏனெனில் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது போலவே, நமக்கும் நற்செய்தி அறிவிக்கப்பட்டது. ஆயினும் அவர்கள் கேட்ட செய்தி அவர்களுக்குப் பயன் அளிக்கவில்லை; ஏனெனில் கேட்டவர்கள் அச்செய்தியை நம்பிக்கையோடு கேட்கவில்லை.

இந்த ஓய்வைப் பெறுகிறவர்கள் நம்பிக்கையுடன் இருக்கும் நாமே. இதைக் குறித்தே, “நான் சினமுற்று, ‘நான் அளிக்கும் இளைப்பாற்றியின் நாட்டிற்குள் நுழையவே மாட்டார்கள்’ என்று ஆணையிட்டுக் கூறினேன்” என எடுத்துரைக்கப்பட்டுள்ளது. எனினும் உலகம் தோன்றிய காலத்திலேயே கடவுளுடைய வேலைகள் முடிந்துவிட்டன. ஏனெனில் மறைநூலில் ஓரிடத்தில் ஏழாம் நாள் பற்றி, “கடவுள் தாம் செய்த வேலைகள் அனைத்தையும் நிறைவு பெறச்செய்து, ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார்” என்று கூறப்பட்டுள்ளது. மேலும், மேற்சொன்ன சொற்றொடரில், “அவர்கள் நான் அளிக்கும் இளைப்பாற்றியின் நாட்டிற்குள் நுழையவே மாட்டார்கள்” என்றிருக்கிறது.

ஆதலால், கீழ்ப்படியாதவர்களின் மாதிரியைப் பின்பற்றி, எவரும் வீழ்ச்சியுறாதவாறு அந்த ஓய்வைப் பெற முழு முயற்சி செய்வோமாக.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 78: 3,4bc. 6c-7. 8 (பல்லவி: 7b)

பல்லவி: இறைவனின் செயல்களை மறவாதீர்கள்.

3
நாங்கள் கேட்டவை, நாங்கள் அறிந்தவை, எம் மூதாதையர் எமக்கு விரித்துரைத்தவை - இவற்றை உரைப்போம்.
4bc
வரவிருக்கும் தலைமுறைக்கு ஆண்டவரின் புகழ்மிகு, வலிமைமிகு செயல்களையும் அவர் ஆற்றிய வியத்தகு செயல்களையும் எடுத்துரைப்போம். - பல்லவி

6c
இவர்கள் தம் புதல்வர்களுக்கு ஆர்வத்துடன் கற்றுக்கொடுக்கவும்,
7
அதனால், அவர்கள் கடவுள்மீது நம்பிக்கை வைக்கவும், இறைவனின் செயல்களை மறவாதிருக்கவும், அவர்தம் கட்டளைகளைக் கடைப்பிடிக்கவுமே. - பல்லவி

8
தங்கள் மூதாதையரைப் போல், எதிர்ப்பு மனமும், அடங்காக் குணமும் கொண்ட தலைமுறையாகவும், நேரிய உள்ளமற்றவர்களாகவும், இறைவன்மீது உண்மைப் பற்று அற்றவர்களாகவும் இராதபடி அவர் கட்டளையிட்டார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 7: 16

அல்லேலூயா, அல்லேலூயா! நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க, மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு.

 மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 1-12

இயேசு மீண்டும் கப்பர்நாகுமுக்குச் சென்றார். அவர் வீட்டில் இருக்கிறார் என்னும் செய்தி பரவிற்று. பலர் வந்து கூடவே, வீட்டு வாயிலருகிலும் இடமில்லாமல் போயிற்று. அவர் அவர்களுக்கு இறைவார்த்தையை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார். அப்போது முடக்குவாதமுற்ற ஒருவரை நால்வர் சுமந்து அவரிடம் கொண்டுவந்தனர். மக்கள் திரண்டிருந்த காரணத்தால் அவரை இயேசுவுக்கு முன் கொண்டுவர இயலவில்லை. எனவே அவர் இருந்த இடத்திற்கு மேலே வீட்டின் கூரையை உடைத்துத் திறப்பு உண்டாக்கி, முடக்குவாதமுற்றவரைப் படுக்கையோடு கீழே இறக்கினர். இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு, முடக்குவாதமுற்றவரிடம், “மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார்.

அங்கே அமர்ந்திருந்த மறைநூல் அறிஞர் சிலர், “இவன் ஏன் இப்படிப் பேசுகிறான்? இவன் கடவுளைப் பழிக்கிறான். கடவுள் ஒருவரே அன்றிப் பாவங்களை மன்னிக்க யாரால் இயலும்?” என உள்ளத்தில் எண்ணிக்கொண்டிருந்தனர்.

உடனே அவர்கள் தமக்குள் இவ்வாறு எண்ணுவதை இயேசு தம்முள் உணர்ந்து, அவர்களை நோக்கி, “உங்கள் உள்ளங்களில் இவ்வாறு எண்ணுவது ஏன்? முடக்குவாதமுற்ற இவனிடம் ‘உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ என்பதா? ‘எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட’ என்பதா? எது எளிது? மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்” என்றார். எனவே அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி, “நான் உனக்குச் சொல்கிறேன், நீ எழுந்து உன்னுடைய படுக்கையை எடுத்துக்கொண்டு உனது வீட்டுக்குப் போ” என்றார்.

அவரும் எழுந்து உடனே தம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லாரும் காண வெளியே சென்றார். இதனால் அனைவரும் மலைத்துப்போய், “இதைப்போல நாம் ஒருபோதும் கண்டதில்லையே” என்று கூறிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

 நல்ல நண்பர்களா நாம்!


எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தத்துவவியல் படித்துக்கொண்டிருந்தேன். ஒரு நாள் அருட்சகோதரர்களாகிய நாங்கள் தேனி அருகிலுள்ள கும்பக்கரை என்ற இடத்திற்கு சுற்றுலா சென்றிருந்தோம். அங்கு குளித்துக் கொண்டிருக்கும் பொழுது பாறையில் வழுக்கி என் தலையில் காயம் ஏற்பட்டது. இரத்தம் அதிகமாக வடிந்தது. நான் மயக்க நிலையை அடைந்தேன். அப்பொழுது என்னுடைய நண்பர் என்னோடு அருகிலிருந்து தன்னுடைய வார்த்தையாலும் உடனிருப்பாலும் திடப்படுத்தினார். நான் வேதனையுற்ற போது "உனக்கு எத்தீங்கும்  நேரிடாது" எனக்கூறி என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். எனக்கு தையல் டபோடும் பொழுது என் தலையிலிருந்து இரத்தம் வழிந்தோடியது. அப்பொழுது அந்த இரத்தத்தை பார்த்ததும் அவருக்கும் கூட ஒருவித மயக்கம் ஏற்பட்டது. இருந்தபோதிலும் உடனிருப்பால் என்னை திடப்படுத்தி நான் அந்தக் காயத்திலிருந்து குணம் பெறும்வரை மிகுந்த அக்கறையோடு என்னை கவனித்துக் கொண்டார். அதேபோல தத்துவவியல் படிக்கின்ற பொழுது புரியாத பாடங்களை தன்னுடைய தனிப்பட்ட நேரத்தைக் கூட செலவழித்து எனக்குப் புரிய வைப்பார். எனக்குள் எழுத்து திறமை இருக்கின்றது என்பதைச் சுட்டிக்காட்டி மாதாந்திர ஆன்மீக இதழ்களுக்கு கட்டுரை எழுத உற்சாகப்படுத்தினார். நான் தவறு செய்கின்ற பொழுது தவற்றை தவறு என சுட்டிக்காட்டி என்னை நல்வழிப்படுத்தினார். ஆன்மிகத்தில் மென்மேலும் வளர என்னை வழிகாட்டினார். எனக்கு பல வகையில் பக்கத்துணையாக இருந்து என்னுடைய குருத்துவ பயிற்சியை சிறப்பாக மேற்கொள்ள வழிகாட்டினார். இவர் எனக்கு நண்பராக கிடைத்தது கடவுள் கொடுத்த கொடையாக நினைக்கின்றேன். ஏனென்று சொன்னால் என்னுடைய  அழைத்தல் வாழ்வில் தள்ளாடிய நேரத்தில் எனக்கு துணையாக இருந்து வழிகாட்டியவர். இப்படிப்பட்ட நல்ல நண்பர்கள் நம்முடைய வாழ்க்கையில் இருக்கின்ற பொழுது நிச்சயமாக நம் வாழ்வு மகிழ்வையும் நிறைவையும் பெறும்.


நம்மைப் படைத்த கடவுள் நமக்கு நண்பரைப் போல இருக்கின்றார். இஸ்ராயேல் மக்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க கடவுள் தேர்ந்தெடுத்த மோசே, தன் நண்பனைப் போல கடவுளை சந்தித்தார். அதேபோல் இஸ்ராயேல்  மக்களை எகிப்திலிருந்து கானான் நாட்டிற்கு அழைத்து வருகின்ற பொழுது பகலில் மேகத்தூணாகவும் இரவில் நெருப்பு தூணாகவும் இருந்து வழிகாட்டினார் கடவுள். மேலும் ஒரு நண்பரைப் போல இஸ்ரயேல் மக்களின் இன்ப துன்பங்களில் உடனிருந்து அவர்களை வழிநடத்தினார்.


அதேபோல மீட்பின் கனியை தங்களுடைய பாவத்தின் பொருட்டு சுவைக்கத் தவறிய மக்களை மீட்க வேண்டும் என்ற காரணத்திற்காக தன் ஒரே மகனையே இவ்வுலகிற்கு பாவக் கழுவாயாக அனுப்பினார். ஆண்டவர் இயேசுவும் ஒரு நண்பருக்குரிய மனநிலையில் ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, நோயுற்ற, சமூகத்தில் புறந்தள்ளப்பட்ட மக்களை அன்பு செய்தார். அதன் வெளிப்பாடுதான் அவருடைய பல்வேறு போதனைகளும் வல்ல செயல்களும் . இயேசு ஒரு நண்பரைப் போலவே மிகச்சிறந்த இறையாட்சி பணியை செய்தார். அவர் வல்லசெயல் செய்தது தனக்கு பெயர் கிடைக்க வேண்டும் என்பதற்காக அல்ல; மாறாக, புது வாழ்வை மற்றவருக்குக் கொடுக்க வேண்டும் என்பதற்காக. அதே போல இயேசு நட்பிற்கு மதிப்பு அளிப்பவராக இருக்கிறார்.


இன்றைய நற்செய்தியில் இயேசு ஒரு வீட்டில் இறைவார்த்தையை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார். அப்போது முடக்குவாதமுற்ற ஒருவரை நால்வர் சுமந்து அவரிடம் கொண்டு வந்தனர். மக்கள் அதிகமாக இருந்ததால் அவரை இயேசுவுக்கு முன்னால் கொண்டு வர முடியவில்லை. எனவே இயேசு இருந்த  வீட்டின் கூரையை உடைத்து திறப்பு உண்டாக்கி, முடக்குவாதமுற்றவரை படுக்கையோடு கீழே இறக்கினார்கள். இயேசு அந்த முடக்குவாதமுற்றவரின் நண்பர் நால்வரின் நம்பிக்கையைக் கண்டு "மகனே!  உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்று கூறி நலம் அளித்தார்.


முடக்குவாதமுற்ற மனிதர் தன்னுடைய அடிப்படைத் தேவைகளை கூட நிவர்த்தி செய்ய முடியாதவர். அப்படிப்பட்ட அந்த மனிதரின் துன்பத்தை அறிந்து கொண்ட அவரின் நண்பர்கள் அவருக்கு நலம் அளிக்க இயேசுவிடம் கொண்டு சென்றனர். இது அந்த நண்பர் நால்வர் இயேசுவின் மீது கொண்ட ஆழமான நம்பிக்கையையும் முடக்குவாதமுற்ற அந்த நண்பரின் மீதுள்ள அன்பையும் சுட்டிக்காட்டுவதாக இருக்கின்றது. என்றும் நண்பராய் இருக்கக் கூடிய ஆண்டவர் இயேசுவும் தன் அன்பினை முடக்குவாதமுற்ற  மனிதரின் பாவங்களை மன்னிப்பது வழியாக நலம் அளிக்கின்றார். முடக்குவாதமுற்ற அந்த மனிதர் உடலளவில் மட்டும் பாதிக்கப்படவில்லை; மாறாக, பாவக்கறையினால்  அவரின் ஆன்மாவும் முடக்குவாதமுற்றிருந்தது. எனவேதான் இயேசு ஒரு நண்பருக்குரிய மனநிலையில் அவரின் பாவத்தை மன்னித்து நலமளித்தார். 


இதைக்கண்ட மறைநூல் அறிஞர்கள் இயேசு பாவங்களை மன்னிப்பதைப் பார்த்து விமர்சனப்படுத்துகின்றனர். ஆனால் ஆண்டவர் இயேசு "மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்" என்பதை சுட்டிக்காட்டி மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள அழைப்பு விடுத்துள்ளார். மன்னிப்பது நலமான வாழ்வை வழங்கும். இயேசு இறையாட்சி பணி செய்த பொழுது முடக்குவாதமுற்றவருக்கு உதவி செய்த அந்த நான்கு நண்பரைப் போல பலர் ஒத்துழைப்பும் கொடுத்தார்கள். மறைநூல் அறிஞர்களை  போன்ற எதிர்மறை கருத்துக்களை கொண்டவர்களும் இருந்தார்கள். இயேசு எதையும் கண்டு தளர்ந்து விடாமல் தனது நிலைப்பாட்டில் நிலைத்திருந்து ஒரு நண்பரைப் போல எல்லா மக்களையும் அன்பு செய்து புது வாழ்வை வழங்கினார். இப்படிப்பட்ட மனநிலையை கொண்டிருக்க தேவையான அருளை வேண்டுவோம்.


 இறைவேண்டல்

நல்ல நண்பராகிய இயேசுவே! நாங்கள் எங்கள் அன்றாட வாழ்வில் துன்பப்படுகின்ற மக்களுக்கு துணையாக இருந்து ஒரு நண்பரைப் போல அவர்களின் துயர் தீர்க்கும் நல்ல மனநிலையைத் தாரும். ஆமென்.

Wednesday, January 11, 2023

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (12-01-2023)

 

பொதுக்காலம் முதல் வாரம் - வியாழன்



முதல் வாசகம்

ஒவ்வொரு நாளும் ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டுங்கள்.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 3: 7-14

சகோதரர் சகோதரிகளே,

தூய ஆவியார் கூறுவது: “இன்று நீங்கள் அவரது குரலைக் கேட்பீர்களென்றால், பாலை நிலத்தில் சோதனை நாளன்று கிளர்ச்சியின் போது இருந்ததுபோல, உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். அங்கே உங்கள் மூதாதையர் நாற்பது ஆண்டுகள் என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர். எனவே, அத்தலைமுறையினர் மீது வெறுப்புக்கொண்டு, ‘எப்போதும் இவர்களது உள்ளம் தவறுகிறது; என் வழிகளை இவர்கள் அறியாதவர்கள்; எனவே நான் சினமுற்று, “நான் அளிக்கும் இளைப்பாற்றியின் நாட்டிற்குள் நுழையவே மாட்டார்கள்” என்று ஆணையிட்டுக் கூறினேன்’ என்றார் கடவுள்.”

அன்பர்களே, நம்பிக்கை கொள்ளாத தீய உள்ளம், வாழும் கடவுளை விட்டு விலகும். இத்தகைய தீய உள்ளம் உங்களுள் எவருக்கும் இராதபடி பார்த்துக்கொள்ளுங்கள். உங்களுள் எவரும் பாவத்தால் ஏமாற்றப்பட்டு, கடின உள்ளத்தினர் ஆகாதவாறு, ஒவ்வொரு நாளும் “இன்றே” என எண்ணி, நாள்தோறும் ஒருவருக்கொருவர் அறிவுரை கூறுங்கள். தொடக்கத்தில் நாம் கொண்டிருந்த திட நம்பிக்கையை இறுதிவரை உறுதியாகப் பற்றிக்கொண்டிருந்தால் நாமும் கிறிஸ்துவின் பங்காளிகளாவோம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 95: 6-7a. 7b-9. 10-11 (பல்லவி: 7,8 காண்க)

பல்லவி: உங்கள் இதயத்தைக் கடினப்படுத்தாதீர்கள்; ஆண்டவர் குரலுக்குச் செவிசாயுங்கள்.

6
வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்; நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன் முழந்தாளிடுவோம்.
7a
அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்; நாம் அவர் பேணிக் காக்கும் ஆடுகள். - பல்லவி

7b
இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்!
8
அன்று மெரிபாவிலும், பாலைநிலத்தில் மாசாவிலும் செய்ததுபோல், உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.
9
அங்கே உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர்; என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர். - பல்லவி

10
நாற்பது ஆண்டளவாய் அந்தத் தலைமுறை எனக்கு வெறுப்பூட்டியதால், நான் உரைத்தது: ‘அவர்கள் உறுதியற்ற உள்ளம் கொண்ட மக்கள்; என் வழிகளை அறியாதவர்கள்'.
11
எனவே, நான் சினமுற்று, ‘நான் அளிக்கும் இளைப்பாற்றியின் நாட்டிற்குள் நுழையவே மாட்டார்கள்’ என்று ஆணையிட்டுக் கூறினேன். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 4: 23

அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

தொழுநோய் அவரை விட்டு நீங்க, அவர் நலமடைந்தார்.

 மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 40-45

ஒரு நாள் தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வந்து, “நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்” என்று முழந்தாள்படியிட்டு வேண்டினார். இயேசு அவர்மீது பரிவு கொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு அவரிடம், “நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!” என்றார். உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்க, அவர் நலமடைந்தார்.

பிறகு அவரிடம், “இதை யாருக்கும் சொல்ல வேண்டாம், கவனமாய் இரும். ஆனால் நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி, நோய் நீங்கியதற்காக மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும்” என்று மிகக் கண்டிப்பாகக் கூறி உடனடியாக அவரை அனுப்பிவிட்டார்.

ஆனால் அவர் புறப்பட்டுச் சென்று இந்தச் செய்தியை எங்கும் அறிவித்துப் பரப்பிவந்தார். அதனால் இயேசு எந்த நகருக்குள்ளும் வெளிப்படையாய்ச் செல்ல முடியவில்லை; வெளியே தனிமையான இடங்களில் தங்கி வந்தார். எனினும் மக்கள் எல்லா இடங்களிலிருந்தும் அவரிடம் வந்துகொண்டிருந்தார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


கனிந்த உள்ளமா?

கடின உள்ளமா? நன்றி உள்ளமா?

என்னில் இருப்பது எது?


உள்ளம் பல உணர்வுகளைப் பெற்றது. அவற்றில் நல்லவற்றை பெருகச் செய்யும் போது நம் வாழ்வு செழிக்கும்.இன்றைய வாசகங்களில் நாம் மூன்று விதமான உள்ளங்களைப் பார்க்கிறோம். இவற்றை நம் வாழ்வோடு ஒப்பிட்டுப் பார்த்து நம்மில் மேலோங்கி இருப்பது என ஆய்வு செய்ய நாம் அழைக்கப்படுகிறோம்.


கனிந்த உள்ளம் ......

முதல் வாசகத்தில் தந்தையாம் கடவுளின் கனிந்த உள்ளத்தைப் பார்க்கிறோம். இஸ்ரயேல் மக்களுக்கு தன் கனிந்த உள்ளத்தால் ஏராளமான கணக்கிலடங்காத நன்மைகளை அவர் செய்துள்ளார். அதே போல நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் கனிந்த உள்ளத்தைப் பார்க்கிறோம். "நீர் விரும்பினால் என்னை நலமாக்கும் " என மன்றாடிய தொழுநோயாளரின் மன்றாட்டை ஏற்று "விரும்புகிறேன் "என்று சொல்லி நலமாக்கினார் இயேசு. இது அவருடைய கனிவான உள்ளத்தை நமக்கு எடுத்தியம்புகிறது. கடவுளின் குழந்தைகளாய் இயேசுவின் சீடர்களாய் வாழ விரும்பும் நமக்கு இத்தகைய கனிவான உள்ளம் இருக்கிறதா?  நம்மை அண்டி வருவோருக்கு கடவுள் காட்டிய கனிவை நம்மால் காட்ட முடிகிறதா? சிந்திப்போம்.


கடின உள்ளம்......

இத்தகைய மனநிலைக்கு இஸ்ரயேல் மக்கள் சிறந்த உதாரணம். அவர்கள் தவறுக்கு மேல் தவறு செய்த போதும் கடவுள் அவர்களுக்கு நன்மைக்கு மேல் நன்மை செய்தார். ஆனால் அவர்களுடைய உள்ளமோ கடினமாயிற்று. பிறருடைய பார்வையில் நாம் கடின உள்ளத்தவர்களா? நமக்கு நன்மை செய்தவர்களுக்குக் கூட நாம் கடின உள்ளத்தவராய் இருந்தால், மற்றவர்களுக்கு நாம் எத்தகைய உள்ளத்தை வெளிப்படுத்தப்போகிறோம்? சிந்திப்போம். மனம்மாறுவோம்


நன்றி உள்ளம் .....

நற்செய்தி வாசகத்தில் நாம் காணும் தொழுநோயாளர் குணமடைந்த பின் இயேசு யாரிடமும் கூறவேண்டாம் என எச்சிரிக்கை செய்தபின்னும் மற்றவருக்கு அறிவித்து இயேசுவைப் பெருமைப்படுத்தினார். இதனால் இயேசுவைத் தேடி பலர் சென்றனர் என வாசிக்கிறோம். நன்றி நிறைந்த உள்ளம் வாழ்க்கைக்கு மிக அவசியம் என்பதை நமக்கு உணர்த்துகிறார் அவர்.


அன்புக்குரியவர்களே இம்மூவகை மனநிலைகளை நாம் சிந்திக்கும் போது கனிவான உள்ளத்தையும் நன்றி நிறைந்த உள்ளத்தையும் நாம் வளர்த்தெடுக்க வேண்டும் எனவும் கடின உள்ளத்தை நாம் களைந்தெறிய வேண்டும் என்பதையும் கடவுள் உணர்த்துகிறார். எனவே இதற்கான வரத்தை இறைவனிடம் கேட்போம்.


 இறைவேண்டல் 

இறைவா ! கடினமான எங்கள் உள்ளத்தை அகற்றிவிட்டு உம்மை போன்ற கனிவான உள்ளத்தையும் தொழுநோயாளரிடமிருந்த நன்றி நிறைந்த உள்ளத்தையும் தருவீராக. ஆமென்.

அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (28-06-2025)

    முதல் வாசகம் தொடக்க நூலிலிருந்து வாசகம் 18: 1-15 அந்நாள்களில் ஆண்டவர் மம்ரே என்ற இடத்தில் தேவதாரு மரங்கள் அருகே ஆபிரகாமுக்குத் தோன்றினார...