பொதுக்காலம் முதல் வாரம் - வெள்ளி
முதல் வாசகம்
கடவுள் தரும் ஓய்வைப் பெறுகிறவர்கள், நம்பிக்கையுடன் இருக்கும் நாமே.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 4: 1-5, 11
சகோதரர் சகோதரிகளே,
கடவுள் தரும் ஓய்வைப் பெறுவது பற்றி அவர் அளித்த வாக்குறுதி இன்னும் நிலைத்திருப்பதால், உங்களுள் எவரேனும் அதை அடையத் தவறிவிடக் கூடாது என எண்ணுகிறேன். இது குறித்து நாம் கவனமாய் இருப்போமாக. ஏனெனில் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது போலவே, நமக்கும் நற்செய்தி அறிவிக்கப்பட்டது. ஆயினும் அவர்கள் கேட்ட செய்தி அவர்களுக்குப் பயன் அளிக்கவில்லை; ஏனெனில் கேட்டவர்கள் அச்செய்தியை நம்பிக்கையோடு கேட்கவில்லை.
இந்த ஓய்வைப் பெறுகிறவர்கள் நம்பிக்கையுடன் இருக்கும் நாமே. இதைக் குறித்தே, “நான் சினமுற்று, ‘நான் அளிக்கும் இளைப்பாற்றியின் நாட்டிற்குள் நுழையவே மாட்டார்கள்’ என்று ஆணையிட்டுக் கூறினேன்” என எடுத்துரைக்கப்பட்டுள்ளது. எனினும் உலகம் தோன்றிய காலத்திலேயே கடவுளுடைய வேலைகள் முடிந்துவிட்டன. ஏனெனில் மறைநூலில் ஓரிடத்தில் ஏழாம் நாள் பற்றி, “கடவுள் தாம் செய்த வேலைகள் அனைத்தையும் நிறைவு பெறச்செய்து, ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார்” என்று கூறப்பட்டுள்ளது. மேலும், மேற்சொன்ன சொற்றொடரில், “அவர்கள் நான் அளிக்கும் இளைப்பாற்றியின் நாட்டிற்குள் நுழையவே மாட்டார்கள்” என்றிருக்கிறது.
ஆதலால், கீழ்ப்படியாதவர்களின் மாதிரியைப் பின்பற்றி, எவரும் வீழ்ச்சியுறாதவாறு அந்த ஓய்வைப் பெற முழு முயற்சி செய்வோமாக.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 78: 3,4bc. 6c-7. 8 (பல்லவி: 7b)பல்லவி: இறைவனின் செயல்களை மறவாதீர்கள்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
லூக் 7: 16அல்லேலூயா, அல்லேலூயா! நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க, மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு.
✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 1-12
இயேசு மீண்டும் கப்பர்நாகுமுக்குச் சென்றார். அவர் வீட்டில் இருக்கிறார் என்னும் செய்தி பரவிற்று. பலர் வந்து கூடவே, வீட்டு வாயிலருகிலும் இடமில்லாமல் போயிற்று. அவர் அவர்களுக்கு இறைவார்த்தையை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார். அப்போது முடக்குவாதமுற்ற ஒருவரை நால்வர் சுமந்து அவரிடம் கொண்டுவந்தனர். மக்கள் திரண்டிருந்த காரணத்தால் அவரை இயேசுவுக்கு முன் கொண்டுவர இயலவில்லை. எனவே அவர் இருந்த இடத்திற்கு மேலே வீட்டின் கூரையை உடைத்துத் திறப்பு உண்டாக்கி, முடக்குவாதமுற்றவரைப் படுக்கையோடு கீழே இறக்கினர். இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு, முடக்குவாதமுற்றவரிடம், “மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார்.
அங்கே அமர்ந்திருந்த மறைநூல் அறிஞர் சிலர், “இவன் ஏன் இப்படிப் பேசுகிறான்? இவன் கடவுளைப் பழிக்கிறான். கடவுள் ஒருவரே அன்றிப் பாவங்களை மன்னிக்க யாரால் இயலும்?” என உள்ளத்தில் எண்ணிக்கொண்டிருந்தனர்.
உடனே அவர்கள் தமக்குள் இவ்வாறு எண்ணுவதை இயேசு தம்முள் உணர்ந்து, அவர்களை நோக்கி, “உங்கள் உள்ளங்களில் இவ்வாறு எண்ணுவது ஏன்? முடக்குவாதமுற்ற இவனிடம் ‘உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ என்பதா? ‘எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட’ என்பதா? எது எளிது? மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்” என்றார். எனவே அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி, “நான் உனக்குச் சொல்கிறேன், நீ எழுந்து உன்னுடைய படுக்கையை எடுத்துக்கொண்டு உனது வீட்டுக்குப் போ” என்றார்.
அவரும் எழுந்து உடனே தம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லாரும் காண வெளியே சென்றார். இதனால் அனைவரும் மலைத்துப்போய், “இதைப்போல நாம் ஒருபோதும் கண்டதில்லையே” என்று கூறிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
அருட்பணி. குழந்தை இயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️
Join with us 👇
Website: https://catholicvoicecv.blogspot.com
Youtube: https://www.youtube.com/channel/UCcgIiK1gUEqRCmTsc7ZjAoA
Youtube: https://www.youtube.com/channel/UCxBBHQAKIjii_MsZfIYNF5A
Facebook:https://www.facebook.com/Catholic-Voice-108151311955076
Instagram:https://www.instagram.com/invites/contact/?i=16mmdwn460k8p&utm_content=p6lg283
நல்ல நண்பர்களா நாம்!
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தத்துவவியல் படித்துக்கொண்டிருந்தேன். ஒரு நாள் அருட்சகோதரர்களாகிய நாங்கள் தேனி அருகிலுள்ள கும்பக்கரை என்ற இடத்திற்கு சுற்றுலா சென்றிருந்தோம். அங்கு குளித்துக் கொண்டிருக்கும் பொழுது பாறையில் வழுக்கி என் தலையில் காயம் ஏற்பட்டது. இரத்தம் அதிகமாக வடிந்தது. நான் மயக்க நிலையை அடைந்தேன். அப்பொழுது என்னுடைய நண்பர் என்னோடு அருகிலிருந்து தன்னுடைய வார்த்தையாலும் உடனிருப்பாலும் திடப்படுத்தினார். நான் வேதனையுற்ற போது "உனக்கு எத்தீங்கும் நேரிடாது" எனக்கூறி என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். எனக்கு தையல் டபோடும் பொழுது என் தலையிலிருந்து இரத்தம் வழிந்தோடியது. அப்பொழுது அந்த இரத்தத்தை பார்த்ததும் அவருக்கும் கூட ஒருவித மயக்கம் ஏற்பட்டது. இருந்தபோதிலும் உடனிருப்பால் என்னை திடப்படுத்தி நான் அந்தக் காயத்திலிருந்து குணம் பெறும்வரை மிகுந்த அக்கறையோடு என்னை கவனித்துக் கொண்டார். அதேபோல தத்துவவியல் படிக்கின்ற பொழுது புரியாத பாடங்களை தன்னுடைய தனிப்பட்ட நேரத்தைக் கூட செலவழித்து எனக்குப் புரிய வைப்பார். எனக்குள் எழுத்து திறமை இருக்கின்றது என்பதைச் சுட்டிக்காட்டி மாதாந்திர ஆன்மீக இதழ்களுக்கு கட்டுரை எழுத உற்சாகப்படுத்தினார். நான் தவறு செய்கின்ற பொழுது தவற்றை தவறு என சுட்டிக்காட்டி என்னை நல்வழிப்படுத்தினார். ஆன்மிகத்தில் மென்மேலும் வளர என்னை வழிகாட்டினார். எனக்கு பல வகையில் பக்கத்துணையாக இருந்து என்னுடைய குருத்துவ பயிற்சியை சிறப்பாக மேற்கொள்ள வழிகாட்டினார். இவர் எனக்கு நண்பராக கிடைத்தது கடவுள் கொடுத்த கொடையாக நினைக்கின்றேன். ஏனென்று சொன்னால் என்னுடைய அழைத்தல் வாழ்வில் தள்ளாடிய நேரத்தில் எனக்கு துணையாக இருந்து வழிகாட்டியவர். இப்படிப்பட்ட நல்ல நண்பர்கள் நம்முடைய வாழ்க்கையில் இருக்கின்ற பொழுது நிச்சயமாக நம் வாழ்வு மகிழ்வையும் நிறைவையும் பெறும்.
நம்மைப் படைத்த கடவுள் நமக்கு நண்பரைப் போல இருக்கின்றார். இஸ்ராயேல் மக்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க கடவுள் தேர்ந்தெடுத்த மோசே, தன் நண்பனைப் போல கடவுளை சந்தித்தார். அதேபோல் இஸ்ராயேல் மக்களை எகிப்திலிருந்து கானான் நாட்டிற்கு அழைத்து வருகின்ற பொழுது பகலில் மேகத்தூணாகவும் இரவில் நெருப்பு தூணாகவும் இருந்து வழிகாட்டினார் கடவுள். மேலும் ஒரு நண்பரைப் போல இஸ்ரயேல் மக்களின் இன்ப துன்பங்களில் உடனிருந்து அவர்களை வழிநடத்தினார்.
அதேபோல மீட்பின் கனியை தங்களுடைய பாவத்தின் பொருட்டு சுவைக்கத் தவறிய மக்களை மீட்க வேண்டும் என்ற காரணத்திற்காக தன் ஒரே மகனையே இவ்வுலகிற்கு பாவக் கழுவாயாக அனுப்பினார். ஆண்டவர் இயேசுவும் ஒரு நண்பருக்குரிய மனநிலையில் ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, நோயுற்ற, சமூகத்தில் புறந்தள்ளப்பட்ட மக்களை அன்பு செய்தார். அதன் வெளிப்பாடுதான் அவருடைய பல்வேறு போதனைகளும் வல்ல செயல்களும் . இயேசு ஒரு நண்பரைப் போலவே மிகச்சிறந்த இறையாட்சி பணியை செய்தார். அவர் வல்லசெயல் செய்தது தனக்கு பெயர் கிடைக்க வேண்டும் என்பதற்காக அல்ல; மாறாக, புது வாழ்வை மற்றவருக்குக் கொடுக்க வேண்டும் என்பதற்காக. அதே போல இயேசு நட்பிற்கு மதிப்பு அளிப்பவராக இருக்கிறார்.
இன்றைய நற்செய்தியில் இயேசு ஒரு வீட்டில் இறைவார்த்தையை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார். அப்போது முடக்குவாதமுற்ற ஒருவரை நால்வர் சுமந்து அவரிடம் கொண்டு வந்தனர். மக்கள் அதிகமாக இருந்ததால் அவரை இயேசுவுக்கு முன்னால் கொண்டு வர முடியவில்லை. எனவே இயேசு இருந்த வீட்டின் கூரையை உடைத்து திறப்பு உண்டாக்கி, முடக்குவாதமுற்றவரை படுக்கையோடு கீழே இறக்கினார்கள். இயேசு அந்த முடக்குவாதமுற்றவரின் நண்பர் நால்வரின் நம்பிக்கையைக் கண்டு "மகனே! உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்று கூறி நலம் அளித்தார்.
முடக்குவாதமுற்ற மனிதர் தன்னுடைய அடிப்படைத் தேவைகளை கூட நிவர்த்தி செய்ய முடியாதவர். அப்படிப்பட்ட அந்த மனிதரின் துன்பத்தை அறிந்து கொண்ட அவரின் நண்பர்கள் அவருக்கு நலம் அளிக்க இயேசுவிடம் கொண்டு சென்றனர். இது அந்த நண்பர் நால்வர் இயேசுவின் மீது கொண்ட ஆழமான நம்பிக்கையையும் முடக்குவாதமுற்ற அந்த நண்பரின் மீதுள்ள அன்பையும் சுட்டிக்காட்டுவதாக இருக்கின்றது. என்றும் நண்பராய் இருக்கக் கூடிய ஆண்டவர் இயேசுவும் தன் அன்பினை முடக்குவாதமுற்ற மனிதரின் பாவங்களை மன்னிப்பது வழியாக நலம் அளிக்கின்றார். முடக்குவாதமுற்ற அந்த மனிதர் உடலளவில் மட்டும் பாதிக்கப்படவில்லை; மாறாக, பாவக்கறையினால் அவரின் ஆன்மாவும் முடக்குவாதமுற்றிருந்தது. எனவேதான் இயேசு ஒரு நண்பருக்குரிய மனநிலையில் அவரின் பாவத்தை மன்னித்து நலமளித்தார்.
இதைக்கண்ட மறைநூல் அறிஞர்கள் இயேசு பாவங்களை மன்னிப்பதைப் பார்த்து விமர்சனப்படுத்துகின்றனர். ஆனால் ஆண்டவர் இயேசு "மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்" என்பதை சுட்டிக்காட்டி மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள அழைப்பு விடுத்துள்ளார். மன்னிப்பது நலமான வாழ்வை வழங்கும். இயேசு இறையாட்சி பணி செய்த பொழுது முடக்குவாதமுற்றவருக்கு உதவி செய்த அந்த நான்கு நண்பரைப் போல பலர் ஒத்துழைப்பும் கொடுத்தார்கள். மறைநூல் அறிஞர்களை போன்ற எதிர்மறை கருத்துக்களை கொண்டவர்களும் இருந்தார்கள். இயேசு எதையும் கண்டு தளர்ந்து விடாமல் தனது நிலைப்பாட்டில் நிலைத்திருந்து ஒரு நண்பரைப் போல எல்லா மக்களையும் அன்பு செய்து புது வாழ்வை வழங்கினார். இப்படிப்பட்ட மனநிலையை கொண்டிருக்க தேவையான அருளை வேண்டுவோம்.
இறைவேண்டல்
நல்ல நண்பராகிய இயேசுவே! நாங்கள் எங்கள் அன்றாட வாழ்வில் துன்பப்படுகின்ற மக்களுக்கு துணையாக இருந்து ஒரு நண்பரைப் போல அவர்களின் துயர் தீர்க்கும் நல்ல மனநிலையைத் தாரும். ஆமென்.
No comments:
Post a Comment