Saturday, January 7, 2023

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (08-01-2023)

 

ஆண்டவரின் திருக்காட்சி




பெருவிழா

முதல் வாசகம்

ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 60: 1-6

எருசலேமே! எழு! ஒளிவீசு! உன் ஒளி தோன்றியுள்ளது. ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது! இதோ! இருள் பூவுலகை மூடும்; காரிருள் மக்களினங்களைக் கவ்வும்; ஆண்டவரோ உன்மீது எழுந்தருள்வார்; அவரது மாட்சி உன்மீது தோன்றும்!

பிற இனத்தார் உன் ஒளி நோக்கி வருவர்; மன்னர் உன் உதயக் கதிர்நோக்கி நடைபோடுவர். உன் கண்களை உயர்த்தி உன்னைச் சுற்றிலும் பார்; அவர்கள் அனைவரும் ஒருங்கே திரண்டு உன்னிடம் வருகின்றனர்; தொலையிலிருந்து உன் புதல்வர் வருவர்; உன் புதல்வியர் தோளில் தூக்கி வரப்படுவர். அப்பொழுது, நீ அதைக் கண்டு அகமகிழ்வாய்; உன் இதயம் வியந்து விம்மும்; கடலின் திரள் செல்வம் உன்னிடம் கொணரப்படும்; பிற இனத்தாரின் சொத்துகள் உன்னை வந்தடையும். ஒட்டகங்களின் பெருந்திரள் உன்னை நிரப்பும்; மிதியான், ஏப்பாகு ஆகியவற்றின் இளம் ஒட்டகங்களும் வந்து சேரும்; சேபா நாட்டினர் யாவரும் பொன், நறுமணப் பொருள் ஏந்திவருவர். அவர்கள் ஆண்டவரின் புகழை எடுத்துரைப்பர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 72: 1-2. 7-8. 10-11. 12-13 (பல்லவி: 11)

பல்லவி: ஆண்டவரே, எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்.

1
கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்; அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும்.
2
அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக. - பல்லவி

7
அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக; நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக.
8
ஒரு கடலிலிருந்து அடுத்த கடல்வரைக்கும் அவர் ஆட்சி செலுத்துவார்; பேராற்றிலிருந்து உலகின் எல்லை வரைக்கும் அவர் அரசாள்வார். - பல்லவி

10
தர்சீசு அரசர்களும் தீவுகளின் அரசர்களும் காணிக்கைகளைக் கொண்டு வருவார்கள்; சேபாவிலும் செபாவிலுமுள்ள அரசர்கள் நன்கொடைகளைக் கொண்டு வருவார்கள்.
11
எல்லா அரசர்களும் அவர்முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்குவார்கள். எல்லா இனத்தவரும் அவருக்கு ஊழியம் செய்வார்கள். - பல்லவி

12
தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார்.
13
வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம் காட்டுவார்; ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார். - பல்லவி

இரண்டாம் வாசகம்

பிற இனத்தாரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளர் என இப்போது வெளியாக்கப்பட்டுள்ளது.

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 2-3a, 5-6

சகோதரர் சகோதரிகளே,

உங்கள் நலனுக்காகக் கடவுளின் அருளால் எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள் என எண்ணுகிறேன். அந்த மறைபொருள் எனக்கு இறைவெளிப்பாட்டின் வழியாகவே தெரியப்படுத்தப்பட்டது.

அந்த மறைபொருள் மற்ற தலைமுறைகளில் வாழ்ந்த மக்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், இப்போது தூய ஆவி வழியாகத் தூய திருத்தூதருக்கும் இறைவாக்கினருக்கும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நற்செய்தியின் வழியாக, பிற இனத்தாரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளரும், ஒரே உடலின் உறுப்பினரும், வாக்குறுதியின் உடன் பங்காளிகளும் ஆகியிருக்கிறார்கள் என்பதே அம்மறைபொருள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 2: 2

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரின் விண்மீன் எழக் கண்டோம்; அவரை வணங்க வந்திருக்கிறோம். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

அரசரை வணங்க வந்திருக்கிறோம்.

 மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 1-12

ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார். அப்போது கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து, “யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்” என்றார்கள்.

இதைக் கேட்டதும் ஏரோது அரசன் கலங்கினான். அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று. அவன் எல்லாத் தலைமைக் குருக்களையும், மக்களிடையே இருந்த மறைநூல் அறிஞர்களையும் ஒன்றுகூட்டி, மெசியா எங்கே பிறப்பார் என்று அவர்களிடம் விசாரித்தான். அவர்கள் அவனிடம், “யூதேயாவிலுள்ள பெத்லகேமில் அவர் பிறக்க வேண்டும். ஏனெனில், ‘யூதா நாட்டுப் பெத்லகேமே, யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே இல்லை; ஏனெனில், என் மக்களாகிய இஸ்ரயேலை ஆயரென ஆள்பவர் ஒருவர் உன்னிலிருந்தே தோன்றுவார்’ என்று இறவாக்கினர் எழுதியுள்ளார்” என்றார்கள்.

பின்பு ஏரோது யாருக்கும் தெரியாமல் ஞானிகளை அழைத்துக் கொண்டுபோய் விண்மீன் தோன்றிய காலத்தைப் பற்றி விசாரித்து உறுதி செய்துகொண்டான். மேலும் அவர்களிடம், “நீங்கள் சென்று குழந்தையைக் குறித்துத் திட்டவட்டமாய்க் கேட்டு எனக்கு அறிவியுங்கள். அப்பொழுது நானும் சென்று அக்குழந்தையை வணங்குவேன்” என்று கூறி, அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பி வைத்தான். அரசன் சொன்னதைக் கேட்டு அவர்கள் புறப்பட்டுப் போனார்கள்.

இதோ! முன்பு எழுந்த விண்மீன் தோன்றி குழந்தை இருந்த இடத்திற்கு மேல் வந்து நிற்கும்வரை அவர்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்தது. அங்கே நின்ற விண்மீனைக் கண்டதும் அவர்கள் மட்டில்லாப் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள். வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்; நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து, பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப் போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள். ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று கனவில் அவர்கள் எச்சரிக்கப்பட்டதால் வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பினார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 கடவுளே வழிகாட்டுவார்! 


இன்று திருஅவையோடு இணைந்து நாம் திருகாட்சி திருவிழாவைக் கொண்டாடுகிறோம். இந்த பெருவிழா நமக்கு பல நல்ல ஆழமான நம்பிக்கையூட்டும் சிந்தனைகளைத் தருவதாய் உள்ளது. அதில் இன்று நாம் "கடவுளே வழிகாட்டுவார் " என்ற மையக்கருத்தை சிந்திக்கலாம் என விழைகிறேன். 


கடவுள் வழிகாட்டுவார். எதற்கு?  அவரை சென்று  அடைவதற்கு.கிறிஸ்தவர்களாகிய நமக்கு அடிப்படை இலக்கு என்வெனில் கடவுளை அடைவது. ஆங்கிலத்தில் "To reach God" என்போம்.கடவுளை நோக்கி நாம் ஒரு அடி எடுத்துவைத்தால் அவர் நம்மை நோக்கி ஆயிரம் அடி எடுத்து வைப்பார். ஆகவே அவரை நாட முற்படுவோம் என நாம் பல முறை கேட்டிருக்கிறோம். இன்று நாம் கொண்டாடும் விழா இதனை எண்பிப்பதாக இருக்கின்றது. 


கிழக்கு திசை ஞானிகள் காலக் குறிகளை கணித்தவர்களாக மெசியா பிறந்திருப்பதை உணர்ந்து அவரைத் தேடி அவரைக் கண்டு வணங்க தங்கள் பயணத்தை தொடர்ந்தார்கள். இப்போது போல அக்காலத்தில் பயணங்கள் எளிதல்ல. நாம் ஆழ்ந்து யோசித்தால் பயணத்திற்கு அவர்கள் எத்தனை நாட்கள் எடுத்திருப்பார்கள் , எவ்வளவு தயாரிப்புகள் செய்திருப்பார்கள் எனத் தெரியாது. ஆனால் ஆண்டவரைக் காண வேண்டும் என்ற ஒரு தாகம், அவரை வணங்கி காணிக்கை செலுத்த வேண்டும் என்ற ஆசை அவர்களை உந்தித் தள்ளியது. அவர்கள் எடுத்த முன்னெடுப்பை பூர்த்தியாக்க கடவுள் வழிகாட்டுகிறார்.


எவ்வாறு வழிகாட்டினார் என்பது நாம் அறிந்ததே. ஆம். விண்மினை அவர்கள் முன்பே அனுப்பி தன் மகனைச் சென்றடைந்து வணங்க வழிகாட்டினார். அவர்களும் சென்றார்கள்.  கண்டார்கள். வணங்கினார்கள். பரிசளித்தார்கள். அவர்கள் பாதுகாப்பாக தங்களிடம் சேர்வதற்கும் ஏரோதிடமிருந்து அவர்களைக் காப்பதற்கும் கனவின் வழியாக கடவுள் மீண்டும் வழிகாட்டினார். 


அன்புக்குரியவர்களே! இறைவனின் தரிசனத்தை நம் வாழ்வில் பெற வேண்டுமென்று நாம் விரும்புகிறோம் அல்லவா. அப்படியெனில்  அவரை நோக்கி நாம் ஒரு  அடி எடுத்து வைத்தால் போதும் , அவரைச் சென்றடையும் வழியை அவரே நமக்குக் காட்டிவிடுவார். இன்று நாம் அவரைச் சென்று அடைய இறைவார்த்தையும்,இறைவேண்டல் வழிமுறைகளும், அருட்சாதனங்களும், ஆன்மீக முதிர்ச்சிபெற்ற மூத்தோரின் வழி காட்டுதல்களும் கடவுளால் நமக்கு  வழிகாட்ட அனுப்பப்பட்ட விண்மின்களே.  இதை நாம் உணர்ந்து நம் ஆழ்மனத்திற்குள் ஆன்மீகப் பயணம் மேற்கொண்டால் இறைவனின் தரிசனத்தைப் பெற முடியும். கடவுள் வழி காட்டுவார். அதைக் கண்டுணர நாம் தயாரா?


 இறைவேண்டல் 

எல்லாம் வல்ல இறைவா! உமது வழிகாட்டுதலைப் பின்பற்றி உம்மை கண்டடைந்து வணங்க எமக்கருள்புரியும். ஆமென்.



அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...