ஆண்டவரின் திருமுழுக்கு
முதல் வாசகம்
இதோ! என் ஊழியர்! அவரால் என் நெஞ்சம் பூரிப்படைகின்றது.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 42: 1-4, 6-7
ஆண்டவர் கூறுவது:
இதோ! என் ஊழியர்! அவருக்கு நான் ஆதரவு அளிக்கிறேன்; நான் தேர்ந்துகொண்டவர் அவர்; அவரால் என் நெஞ்சம் பூரிப்படைகின்றது; அவருள் என் ஆவி தங்கும்படி செய்தேன்; அவர் மக்களினங்களுக்கு நீதி வழங்குவார். அவர் கூக்குரலிடமாட்டார்; தம் குரலை உயர்த்தமாட்டார்; தம் குரலொலியைத் தெருவில் எழுப்பவுமாட்டார். நெரிந்த நாணலை முறியார்; மங்கி எரியும் திரியை அணையார்; உண்மையாகவே நீதியை நிலைநாட்டுவார். உலகில் நீதியை நிலைநாட்டும்வரை அவர் சோர்வடையார்; மனம் தளரமாட்டார்; அவரது நீதிநெறிக்காகத் தீவு நாட்டினர் காத்திருப்பர்.
ஆண்டவராகிய நான் நீதியை நிலைநாட்டுமாறு உம்மை அழைத்தேன்; உம் கையைப் பற்றிப்பிடித்து, உம்மைப் பாதுகாப்பேன்; மக்களுக்கு உடன்படிக்கையாகவும் பிற இனத்தாருக்கு ஒளியாகவும் நீர் இருக்குமாறு செய்வேன். பார்வை இழந்தோரின் கண்களைத் திறக்கவும், கைதிகளின் தளைகளை அறுக்கவும், இருளில் இருப்போரைச் சிறையினின்று மீட்கவும் உம்மை அழைத்தேன்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
அல்லது
கடவுள் இயேசுவின்மேல் தூய ஆவியாரின் வல்லமையைப் பொழிந்தருளினார்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 10: 34-38
கொர்னேலியு மற்றும் அவரது வீட்டாரை நோக்கிப் பேதுரு கூறியது: “கடவுள் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை என்பதை நான் உண்மையாகவே உணர்கிறேன். எல்லா இனத்தவரிலும் அவருக்கு அஞ்சி நடந்து, நேர்மையாகச் செயல்படுபவரே அவருக்கு ஏற்புடையவர்.
இயேசு கிறிஸ்து வாயிலாக அமைதி உண்டு என்னும் நற்செய்தியை அவர் இஸ்ரயேல் மக்களுக்கு அனுப்பினார். அவரே அனைவருக்கும் ஆண்டவர். திருமுழுக்குப் பெறுங்கள் என்று யோவான் பறைசாற்றிய பின்பு கலிலேயா முதல் யூதேயா முழுவதிலும் நடந்தது உங்களுக்குத் தெரியும். கடவுள் நாசரேத்து இயேசுவின்மேல் தூய ஆவியாரின் வல்லமையைப் பொழிந்தருளினார். கடவுள் அவரோடு இருந்ததால் அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும் அவர் விடுவித்து எங்கும் நன்மை செய்துகொண்டே சென்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 29: 1a,2. 3ac-4. 9b-10 (பல்லவி: 11b)பல்லவி: ஆண்டவர் தம் மக்களுக்கு அமைதி அளித்து ஆசி வழங்குவாராக!
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மாற் 9: 7அல்லேலூயா, அல்லேலூயா! வானம் திறந்தது; தந்தையின் குரலொலி கேட்டது: “என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்” அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
திருமுழுக்குப் பெற்ற இயேசு, கடவுளின் ஆவி தம்மீது இறங்கி வருவதைக் கண்டார்.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 13-17
அக்காலத்தில்
இயேசு யோவானிடம் திருமுழுக்குப் பெறக் கலிலேயாவிலிருந்து யோர்தானுக்கு வந்தார். யோவான், “நான்தான் உம்மிடம் திருமுழுக்குப் பெற வேண்டியவன்; நீரா என்னிடம் வருகிறீர்?” என்று கூறித் தடுத்தார். இயேசு, “இப்பொழுது விட்டுவிடும். கடவுளுக்கு ஏற்புடையவை அனைத்தையும் நாம் நிறைவேற்றுவதுதான் முறை” எனப் பதிலளித்தார். அதற்கு யோவானும் இணங்கினார்.
இயேசு திருமுழுக்குப் பெற்றவுடனே தண்ணீரை விட்டு வெளியேறினார். உடனே வானம் திறந்ததையும் கடவுளின் ஆவி, புறா இறங்குவதுபோலத் தம்மீது வருவதையும் அவர் கண்டார். அப்பொழுது, “என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்” என்று வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
தீயவற்றை விரட்டுவோம்! தூயவற்றால் நிரம்புவோம்!
தீயவை நம்மிடமிருந்து அகலும் போது தூயவை நம்மைத் தானாக நிரப்பும் என்பதுதான் இன்று நமக்கு இறைவார்த்தை வழங்கும் செய்தி. இதனை இன்றைய நற்செய்தி நமக்கு தெளிவாக விளக்குகிறது.
இயேசு தொழுகைக் கூடத்தில் போதித்துக் கொண்டிருந்த போது தீய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டிருந்த மனிதன் இயேசுவை யார் என்று உணர்ந்து அவரைப் பற்றி அறிக்கையிட்டதாக நாம் வாசிக்கிறோம். இந்த நிகழ்வு நமக்கு வியப்பைத் தரலாம். அதாவது தீய ஆவி பிடித்த மனிதன் இருந்தது தொழுகைக் கூடத்தில். இறைவனால் நிரம்பப்பட்ட இடம்தான் தொழுகைக்கூடம். இந்த மனிதன் இத்தொழுகைக் கூடத்திற்கு அடிக்கடி வந்திருக்கக்கூடும். இருப்பினும் மாற்றம் இல்லை. ஆனால் இயேசுவை உணர்ந்த பிறகு, கண்டறிந்த பிறகு அவன் தூய மனிதனாக மாறினான்.
இங்கே நடந்தது என்ன? இயேசுவைக் கண்டறியாத வரை தீய ஆவியால் நிறைந்திருந்தான். அத்தீய நிலையிலேயே இயேசுவைக் கண்டுகொள்ள முடிந்தது. இயேசுவின் தூய ஆவியால் அவனிடமிருந்து தீய ஆவி விலகியது.
எல்லா மனிதருக்குள்ளும் நன்மையும் இருக்கும். தீயதும் இருக்கும். ஆனால் சிலருக்கு தீயவை மேலோங்கி இருக்க வாய்ப்புள்ளது. இந்நிலை கடவுளை அறியவிடாமல் தடுக்கிறது. அறிந்தாலும் விலகி ஓட நம்மைத் தூண்டுகிறது. நம்முள் இருக்கும் தீமையை விட கடவுள் ஆற்றல் வாய்ந்தவர் என நாம் உணர்ந்தாலே போதும். நாமும் தூய்மையாவோம்.
நாமும் அத்தீய ஆவி பிடித்த மனிதன் தொழுகைக் கூடம் சென்றது போல கோவிலுக்குச் செல்வதாலும், ஒன்றிரண்டு நற்செயல்கள் புரிவதாலும் மட்டும் நாம் நல்லவர்களாகிட மாட்டோம். இயேசுவைக் கண்டறிந்து அந்த ஆற்றலால் தீயவற்றை நம்மிடமிருந்து விரட்டும் போது தான் நம்மிலே நன்மை மேலோங்கி நிற்கும்.
தீய ஆவியால் கூட இயேசுவை உணர முடிந்தது. ஆனால் அது இயேசுவை தன்னைவிட்டு அகலுமாறு கூறியது. நாம் அவ்வாறு இருக்கக்கூடாது. இயேசு நம்மை விட்டு அகலவேண்டும் என்று எண்ணக் கூடாது. மாறாக இயேசுவை நம்மிலே செயலாற்ற அனுமதிக்க வேண்டும். அப்போது நம் அனைவரிலும் உள்ள தீயவை வெளியேறும். நாம் நன்மைகளால் நிரப்பப்படுவோம். இத்தகைய வரத்திற்காய் செபிப்போம்.
இறைவேண்டல்
அன்பு இறைவா! உம்மை நாங்கள் கண்டறிந்து எம்மிடமுள்ள தீயவற்றை அகற்றி நன்மைகளால் நிரப்பப்படுவோமாக. ஆமென்.
அருட்பணி. குழந்தை இயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️
Join with us 👇
Website: https://catholicvoicecv.blogspot.com
Youtube: https://www.youtube.com/channel/UCcgIiK1gUEqRCmTsc7ZjAoA
Youtube: https://www.youtube.com/channel/UCxBBHQAKIjii_MsZfIYNF5A
Facebook:https://www.facebook.com/Catholic-Voice-108151311955076
Instagram:https://www.instagram.com/invites/contact/?i=16mmdwn460k8p&utm_content=p6lg283
No comments:
Post a Comment