பொதுக்காலம் முதல் வாரம் - புதன்
இயேசு மக்கள் பாவங்களுக்குக் கழுவாய் ஆகும்படி எல்லாவற்றிலும் எல்லாரைப் போல் ஆகவேண்டியதாயிற்று
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 2: 14-18
ஊனும் இரத்தமும் கொண்ட பிள்ளைகளைப்போல் கிறிஸ்துவும் அதே இயல்பில் பங்கு கொண்டார். இவ்வாறு சாவின்மேல் ஆற்றல் கொண்டிருந்த அலகையைச் சாவின் வழியாகவே அழித்துவிட்டார். வாழ்நாள் முழுவதும் சாவு பற்றிய அச்சத்தினால் அடிமைப்பட்டிருந்தவர்களை விடுவித்தார்.
ஏனெனில் அவர் வானதூதருக்குத் துணை நிற்கவில்லை. மாறாக, ஆபிரகாமின் வழிமரபினருக்கே துணை நின்றார் என்பது கண்கூடு. ஆதலின், கடவுள் பணியில் அவர் இரக்கமும் நம்பிக்கையும் உள்ள தலைமைக் குருவாயிருந்து, மக்களுடைய பாவங்களுக்குக் கழுவாயாகுமாறு எல்லாவற்றிலும் தம் சகோதரர் சகோதரிகளைப் போல் ஆகவேண்டிய தாயிற்று. இவ்வாறு தாமே சோதனைக்கு உள்ளாகித் துன்பப்பட்டதனால் சோதிக்கப்படுவோருக்கு உதவி செய்ய அவர் வல்லவர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 105: 1-2. 3-4. 6-7. 8-9 (பல்லவி: 8a)பல்லவி: ஆண்டவர் தம் உடன்படிக்கையை என்றும் நினைவில் கொள்கின்றார்.
அல்லது: அல்லேலூயா.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 10: 27அல்லேலூயா, அல்லேலூயா! "என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன,” என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
இயேசு பல்வேறு பிணிகளால் வருந்தியவரைக் குணப்படுத்தினார்.
✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 29-39
இயேசுவும் சீடர்களும் தொழுகைக்கூடத்தை விட்டு வெளியே வந்து யாக்கோபு, யோவானுடன் சீமோன், அந்திரேயா ஆகியோரின் வீட்டிற்குள் சென்றார்கள்.
சீமோனுடைய மாமியார் காய்ச்சலாய்க் கிடந்தார். உடனே அவர்கள் அதைப் பற்றி இயேசுவிடம் சொன்னார்கள். இயேசு அவரருகில் சென்று கையைப் பிடித்து அவரைத் தூக்கினார். காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று. அவர் அவர்களுக்குப் பணிவிடை செய்தார்.
மாலை வேளையில், கதிரவன் மறையும் நேரத்தில் நோயாளர்கள், பேய்பிடித்தவர்கள் அனைவரையும் மக்கள் அவரிடம் கொண்டு வந்தார்கள். நகர் முழுவதும் வீட்டு வாயில்முன் கூடியிருந்தது. பல்வேறு பிணிகளால் வருந்திய பலரை அவர் குணப்படுத்தினார். பல பேய்களையும் ஓட்டினார்; அந்தப் பேய்கள் அவரை அறிந்திருந்ததால் அவற்றை அவர் பேசவிடவில்லை.
இயேசு விடியற்காலைக் கருக்கலில் எழுந்து தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கே அவர் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார். சீமோனும் அவருடன் இருந்தவர்களும் அவரைத் தேடிச் சென்றார்கள். அவரைக் கண்டதும், “எல்லாரும் உம்மைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்” என்றார்கள். அதற்கு அவர், “நாம் அடுத்த ஊர்களுக்குப் போவோம், வாருங்கள். அங்கும் நான் நற்செய்தியைப் பறைசாற்ற வேண்டும்; ஏனெனில் இதற்காகவே நான் வந்திருக்கிறேன்” என்று சொன்னார். பின்பு அவர் கலிலேய நாடு முழுவதும் சென்று அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் நற்செய்தியைப் பறைசாற்றிப் பேய்களை ஓட்டி வந்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நமது அன்பு பரவுகிறதா?
ஒரு அரசு அதிகாரி நீதியுடனும் நேர்மையுடனும் நற்காரியங்களும் அதிக சீர்திருத்த செயல்பாடுகளையும் செய்து வந்தார். அதனாலேயே அவர் அடிக்கடி பணியிடம் மாற்றப்பட்டார். ஆனால் அவர் செல்லும் போதெல்லாம் மனமகிழ்ச்சியுடன் செல்வார் செல்லுமிடமில்லாம் நற்காரியங்கள் செய்ய வேண்டும் என்ற எண்ணம் நிறைந்தவராய்.
நதி ஓரிடத்தில் தேங்கியிருந்தால் அதன் நோக்கம் நிறைவுறாது. அதுபோலத்தான் அன்பு ஓரிடத்தில் தேங்கியிருந்தால் அதில் பலனில்லை. இன்றைய நற்செய்தியில் இயேசு தம் சீடர்களிடம் வேறு பகுதிகளுக்கெல்லாம் சென்று தன்னுடைய பணியை செய்யவேண்டுமெனவும் அதற்காகவே அவர் வந்ததாகவும் கூறுகிறார். இயேசு அன்பு நிறைந்தவர். நன்மைகள் செய்ய வேண்டுமென்ற ஆர்வமுடையவர். சமூகத்தில் ஓரங்கட்டப்பட்ட, ஒதுக்கப்பட்ட மக்கள் அனைவரும் கடவுளின் அன்பையும் அருளையும் பெற வேண்டுமென்று விரும்பியவர். பாவிகளும், பிற இனத்தவரும், வரி தண்டுபவர்களும் கூட கடவுளுடைய இரக்கத்தைப் பெற வேண்டும் என எண்ணியவர். எனவேதான் அவர் நாடோடி போல ஊர் ஊராகவும், தெருக்கள்தோறும் அலைந்து தன் உடல் களைப்பை கூட பொருட்படுத்தாமல் பணி செய்தார் என விவிலியத்தில் நாம் வாசிக்கிறோம்.
பொதுவாக பணியிட மாற்றங்கள் தரப்படும் போது நம்மில் பலர் அதனை விரும்புவதில்லை. தெரியாத இடம்,அறியாத நபர்கள், என அனைத்தையும் எண்ணி பயப்படுகிறோம். ஆனால் கொஞ்சம் மாற்றி யோசித்துப் பார்த்தால், புதிய ஊர், புதிய உறவுகள் நட்புகள் கிடைப்பதோடு நம்முடைய அன்பைக் காட்டவும் நற்காரியங்களைச் செய்யவும் நமக்குக் கிடைக்கின்ற வாய்ப்புக்கள் அவை. இயேசு ஒரே இடத்தில் தெரிந்தவர்களுக்கு மட்டும் பணி செய்திருந்தால் மற்ற ஊரில் உள்ள மக்களுக்கு அவரைப் பற்றித் தெரிந்திருக்காது. தன் அன்பைத் தேக்கி வைக்கமால் பலருக்கு பகிர்ந்த அன்னை தெரசா கன்னியர் மடத்தின் அறையிலிருந்து வெளியேறி தெருக்களில் அலைந்து தேவையில் உள்ளோரைத் தேடி உதவியால்தான் நாம் அனைவரும் இன்று அவரை அறிகிறோம்.
இச்சிந்தனைகள் நமக்குத் தரும் செய்தி என்ன? நம்முடைய அன்பும் நற்செயல்களும் ஒரு குறிப்பிட்ட இடத்திலோ, சில மனிதர்களுக்கு மட்டுமோ இல்லாமல் பல இடங்களுக்கும் பல மனிதர்களுக்கும் சென்று அடைய வேண்டும். அதற்கு நாம் நம்முடைய சுயநலனைக் களைந்து பயணிக்க வேண்டும். நம்முடைய எண்ணங்களும், பார்வையும் பரந்து விரிந்தவையாக இருக்க வேண்டும். இதனால் நாம் துன்பம் அடைய நேரிட்டாலும், நம்மைப் போல் துன்பப்படுபவர்களை புரிந்து கொள்வதற்கான வாய்ப்பாக அதைக் கருதி நம் அன்பைப் பகிர வேண்டும். இத்தகைய அன்பு வாழ்வு வாழ இறைவனிடம் வரம் கேட்போம்.
இறைவேண்டல்
அன்பு இறைவா!
செல்லும் இடமெல்லாம் அன்பை வழங்கி நன்மைகள் செய்து கொண்டே சென்ற இயேசுவைப் போல நாங்களும் எம் அன்பை எமது நற்செயல்கள் மூலம் பலருக்கும் வழங்க அருள் தாரும். ஆமென்.
அருட்பணி. குழந்தை இயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️
Join with us 👇
Website: https://catholicvoicecv.blogspot.com
Youtube: https://www.youtube.com/channel/UCcgIiK1gUEqRCmTsc7ZjAoA
Youtube: https://www.youtube.com/channel/UCxBBHQAKIjii_MsZfIYNF5A
Facebook:https://www.facebook.com/Catholic-Voice-108151311955076
Instagram:https://www.instagram.com/invites/contact/?i=16mmdwn460k8p&utm_content=p6lg283
No comments:
Post a Comment