Friday, December 16, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (17-12-2022)

திருவருகைக் கால வார நாள்கள் - டிசம்பர் 17

முதல் வாசகம்

யூதாவை விட்டுச் செங்கோல் நீங்காது.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 49: 1-2, 8-10

யாக்கோபு தம் புதல்வர்களை வரவழைத்துக் கூறியது: என்னைச் சுற்றி நில்லுங்கள். வரவிருக்கும் நாள்களில் உங்களுக்கு நிகழ இருப்பதை நான் அறிவிக்கப்போகிறேன். கூடிவந்து உற்றுக்கேளுங்கள்; யாக்கோபின் புதல்வர்களே! உங்கள் தந்தையாகிய இஸ்ரயேலுக்குச் செவிகொடுங்கள்.

யூதா! உன் உடன்பிறந்தோர் உன்னைப் புகழ்வர். உன் கை உன் எதிரிகளின் கழுத்தில் இருக்கும். உன் தந்தையின் புதல்வர் உன்னை வணங்குவர். யூதா! நீ ஒரு சிங்கக்குட்டி, என் மகனே, இரை கவர்ந்து வந்துள்ளாய்! ஆண் சிங்கமென, பெண் சிங்கமென அவன் கால் மடக்கிப் படுப்பான்; அவன் துயில் கலைக்கத் துணிந்தவன் எவன்? அரசுரிமை உடையவர் வரும்வரையில், மக்களினங்கள் அவருக்குப் பணிந்திடும் வரையில், யூதாவைவிட்டுச் செங்கோல் நீங்காது; அவன் மரபைவிட்டுக் கொற்றம் மறையாது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 72: 1-2. 3-4ab. 7-8. 17 (பல்லவி: 7b)

பல்லவி: ஆண்டவருடைய சமாதானம் என்றென்றும் நிலவுவதாக.

1
கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்; அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும்.
2
அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக! - பல்லவி

3
மலைகள் மக்களுக்குச் சமாதானத்தைக் கொடுக்கட்டும்; குன்றுகள் நீதியை விளைவிக்கட்டும்.
4ab
எளியோரின் மக்களுக்கு அவர் நீதி வழங்குவாராக! ஏழைகளின் பிள்ளைகளைக் காப்பாராக. - பல்லவி

7
அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக; நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக.
8
ஒரு கடலிலிருந்து அடுத்த கடல்வரைக்கும் அவர் ஆட்சி செலுத்துவார்; பேராற்றிலிருந்து உலகின் எல்லை வரைக்கும் அவர் அரசாள்வார். - பல்லவி

17
அவர் பெயர் என்றென்றும் நிலைத்திருப்பதாக! கதிரவன் உள்ளவரையில் அவர் பெயர் நிலைப்பதாக! அவர் மூலம் மனிதர் ஆசிபெற விழைவராக! எல்லா நாட்டினரும் அவரை நற்பேறு பெற்றவரென வாழ்த்துவராக! - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! உன்னதரின் ஞானமே, ஆற்றலுடன் அனைத்தையும் அன்பாய் நடத்துகின்றவரே, எங்களுக்கு உண்மையின் வழி காட்ட வந்தருளும். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

இயேசு கிறிஸ்துவின் தலைமுறை அட்டவணை.

 மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 1-17

தாவீதின் மகனும் ஆபிரகாமின் மகனுமான இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியல்:

ஆபிரகாமின் மகன் ஈசாக்கு; ஈசாக்கின் மகன் யாக்கோபு; யாக்கோபின் புதல்வர்கள் யூதாவும் அவர் சகோதரர்களும். யூதாவுக்கும் தாமாருக்கும் பிறந்த புதல்வர்கள் பெரேட்சும் செராகும்; பெரேட்சின் மகன் எட்சரோன்; எட்சரோனின் மகன் இராம். இராமின் மகன் அம்மினதாபு; அம்மினதாபின் மகன் நகசோன்; நகசோனின் மகன் சல்மோன். சல்மோனுக்கும் இராகாபுக்கும் பிறந்த மகன் போவாசு; போவாசுக்கும் ரூத்துக்கும் பிறந்த மகன் ஓபேது; ஓபேதின் மகன் ஈசாய். ஈசாயின் மகன் தாவீது அரசர்.

தாவீதுக்கு உரியாவின் மனைவியிடம் பிறந்த மகன் சாலமோன். சாலமோனின் மகன் ரெகபயாம்; ரெகபயாமின் மகன் அபியாம்; அபியாமின் மகன் ஆசா. ஆசாவின் மகன் யோசபாத்து; யோசபாத்தின் மகன் யோராம்; யோராமின் மகன் உசியா. உசியாவின் மகன் யோத்தாம்; யோத்தாமின் மகன் ஆகாசு; ஆகாசின் மகன் எசேக்கியா. எசேக்கியாவின் மகன் மனாசே; மனாசேயின் மகன் ஆமோன்; ஆமோனின் மகன் யோசியா. யோசியாவின் புதல்வர்கள் எக்கோனியாவும் அவர் சகோதரர்களும். இவர்கள் காலத்தில்தான் யூதர்கள் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டார்கள்.

பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்ட பின்பு எக்கோனியாவுக்குப் பிறந்த மகன் செயல்தியேல்; செயல்தியேலின் மகன் செருபாபேல். செருபாபேலின் மகன் அபியூது; அபியூதின் மகன் எலியாக்கிம்; எலியாக்கிமின் மகன் அசோர். அசோரின் மகன் சாதோக்கு; சாதோக்கின் மகன் ஆக்கிம்; ஆக்கிமின் மகன் எலியூது. எலியூதின் மகன் எலயாசர்; எலயாசரின் மகன் மாத்தான்; மாத்தானின் மகன் யாக்கோபு. யாக்கோபின் மகன் மரியாவின் கணவர் யோசேப்பு. மரியாவிடம் பிறந்தவரே கிறிஸ்து என்னும் இயேசு.

ஆக மொத்தம் ஆபிரகாம் முதல் தாவீதுவரை தலைமுறைகள் பதினான்கு; தாவீது முதல் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவர்கள் வரை தலைமுறைகள் பதினான்கு; பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவர்கள் முதல் கிறிஸ்துவரை தலைமுறைகள் பதினான்கு.

ஆண்டவரின் அருள்வாக்கு.


மீட்புத்திட்டத்தில் நம் பெயரும் உள்ளது! | குழந்தைஇயேசு பாபு 

கிறிஸ்மஸ் விழாவை நாம் நெருங்கிக் கொண்டிருக்கிற தருணத்தில் இன்று நாம் இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியலை நற்செய்தி வாசகத்தில் நாம் தியானிக்கிறோம். யூதாவின் குலத்தை விட்டு செங்கோல் என்றும் நீங்காது என்ற தந்தையின் வாக்குறுதி இயேசுவின் மூலம் நிறைவேற்றப்படுவதை இம்மூதாதையர் பட்டியல் நமக்கு விளக்குகிறது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இறைவன் கொடுத்த வாக்கை காப்பாற்றுபவராக இருக்கிறார் என்பதை இவ்வாசகப்பகுதி நமக்கு அறுதியிட்டுக் கூறுகிறது. அதாவது 42 தலைமுறைகளாக தன் வாக்குறுதியைக் காப்பாற்றி இறைவன் தன் தனித்தன்மையை தன் உண்மைத் தன்மையை உடன்படிக்கை தவறா நிலையை நிலைநாட்டுகிறார்.

நாமும்  விண்ணகத் தந்தையின் பிள்ளைகளாக கொடுத்த வாக்கை  தவறாது நிறைவேற்றி நமது உண்மைத் தன்மையை உலகிற்கு உணர்த்த கடமைப்பட்டுள்ளோம் என்பதை உணர்ந்து வாழவேண்டும்.

அத்தோடு நாம் இந்நற்செய்தி பகுதியை தியானிப்பதால் பெறுகின்ற மற்றொரு முக்கியமான சிந்தனை "நமது பெயரும் மீட்புத் திட்டத்தில் எழுதப்பட்டுள்ளது" என்பதே. இந்நற்செய்தி பகுதியில் ஏற்கனவே நாம் கூறியுள்ளதைப் போல மூன்று முறை பதினான்கு தலைமுறைகள் பிரிக்கப்பட்டு பெயர் பட்டியல் தரப்பட்டுள்ளது. இப்படியலிலுள்ள பெயர்களில் அரசர்கள் மற்றும் சில பெண்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளது.குறிப்பிடப்பட்ட எல்லாரும் கடவுளுக்கு ஏற்றமுறையில் வாழ்ந்தவர்கள் அல்ல. ஒருசிலர் தவறான வழியில் நடந்து கடவுளை விட்டகன்றவர்கள். ஆயினும் அவர்களையும் கடவுள் மீட்பின் வரலாற்றில் கருவிகளாகப் பயன்படுத்தி இருக்கிறார்.

கடவுளால் யாரையும் எப்பேற்பட்டவர்களையும் சிறப்பாகப் பயன்படுத்த முடியும். நாமும் அப்படித்தானே? நம்மையும் அவர் கருவிகளாகப் பயன்படுத்த தடையுண்டா என்ன? மீட்பு வரலாறு இன்னும் முடிந்துவிடவில்லை. கடவுள் முடிவே இல்லாதவர். அவர் இருக்கும் வரை மீட்பு வரலாறு தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். அவ்வாறெனில் அவ்வரலாற்றுக்காக நம்மையும் அவர் கருவிகளாகப் பயன்படுத்துவார் என்பதில் ஐயமில்லை. 
எனவே நாம் மீட்பு திட்டத்தின் உழைப்பாளிகள் என்பதை உணர்ந்து நம் வாழ்வு பாதையை சரிசெய்ய வேண்டும். 

இறைவனின் மீட்பு திட்டத்தில் நாமும் ஒரு கருவியாக பயன்பட நம்மையே முழுமையாக ஆயத்தப்படுத்துவோம். திருப்பலி,  அருள்சாதனங்கள், இறைவேண்டல், இறைவார்த்தையை வாசித்து தியானித்தல் போன்றவற்றில் முழுமையாக ஈடுபட்டு இறைவனின் அருளை நிறைவாக பெற முயற்சி செய்வோம். பிறரும் இறைவனின் அருளை பெற்று இறைவனின் மீட்பை பெற்றிட வழிகாட்டுவோம். அதுதான் உண்மையான இறையாட்சியின் பாதையில் பயணிப்பதற்கு வழிகாட்டும். அதன் வழியாக மீட்பு திட்டத்தில் நமது பெயரும் இடம் பெறும் அளவுக்கு கடவுளின் முன்னிலையில் நாம் உயர்த்தப்படுவோம்.

 இறைவேண்டல்
வல்லமையுள்ள இறைவா! உமது  மீட்பு திட்டத்தில்   நாங்களும் கருவிகளாக பயன்பட எங்களை வழிநடத்தும். ஆமென்.

அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...