பொதுக்காலம் 4ஆம் வாரம் - திங்கள்
முதல் வாசகம்
நம்பிக்கையினாலேயே நீதித்தலைவர்கள் அரசுகளை வென்றார்கள்.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 11: 32-40
சகோதரர் சகோதரிகளே,
கிதியோன், பாராக்கு, சிம்சோன், இப்தாகு, தாவீது, சாமுவேல் ஆகியோர் பற்றியும், இறைவாக்கினர் பற்றியும் எடுத்துரைக்க எனக்கு நேரமில்லை. நம்பிக்கையினாலேயே இவர்கள் அரசுகளை வென்றார்கள்; நேர்மையாகச் செயல்பட்டார்கள்; கடவுள் வாக்களித்தவற்றைப் பெற்றார்கள்; சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள்; தீயின் கொடுமையைத் தணித்தார்கள்; வாள்முனைக்குத் தப்பினார்கள்; வலுவற்றவராய் இருந்தும் வலிமை பெற்றார்கள்; போரில் வீரம் காட்டினார்கள்; மாற்றார் படைகளை முறியடித்தார்கள்.
பெண்கள் இறந்த தம் உறவினரை உயிர்த்தெழுந்தவராய்ப் பெற்றுக்கொண்டார்கள். உயிர்த்தெழுந்து சிறப்புறும் பொருட்டு, சிலர் விடுதலை பெற மறுத்து, வதையுண்டு மடிந்தனர். வேறு சிலர் ஏளனங்களுக்கும் கசையடிகளுக்கும் ஆளாயினர்; விலங்கிடப்பட்டுச் சிறையில்கூட அடைக்கப்பட்டனர். சிலர் கல்லெறிபட்டனர்; இரண்டாக அறுக்கப்பட்டனர்; வாளுக்கு இரையாகி மடிந்தனர்; செம்மறியின் தோலையும் வெள்ளாட்டுத் தோலையும் போர்த்துக்கொண்டு அலைந்து திரிந்தனர்; வறுமையுற்று வாடினர்; துன்புறுத்தப்பட்டனர்; கொடுமைக்கு உள்ளாயினர். அவர்களை ஏற்க இவ்வுலகுக்குத் தகுதியில்லாமல் போயிற்று. மலைகளிலும் குகைகளிலும் நிலவெடிப்புகளிலும் பாலைவெளிகளிலும் அவர்கள் அலைந்து திரிந்தார்கள்.
இவர்கள் அனைவரும் தம் நம்பிக்கையினாலே நற்சான்று பெற்றார்கள். ஆயினும் கடவுள் வாக்களித்ததை அவர்கள் பெறவில்லை. ஏனெனில், நம்மோடு இணைந்துதான் அவர்கள் நிறைவுபெற முடியும் என்பதைக் கடவுள் கருத்தில் கொண்டு, நமக்காகச் சிறந்த திட்டம் ஒன்றை வகுத்திருந்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 31: 19-20a,20bc. 21. 22. 23 (பல்லவி: 24 காண்க)பல்லவி: ஆண்டவரை நம்புவோரே, உங்கள் உள்ளம் உறுதி கொள்வதாக.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
லூக் 7: 16அல்லேலூயா, அல்லேலூயா! நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
தீய ஆவியே, இந்த மனிதரை விட்டுப் போ.
✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 1-20
அக்காலத்தில்
இயேசுவும் அவர் சீடரும் கடலுக்கு அக்கரையில் இருந்த கெரசேனர் பகுதிக்கு வந்தார்கள். இயேசு படகை விட்டு இறங்கிய உடனே தீய ஆவி பிடித்த ஒருவர் கல்லறைகளிலிருந்து அவருக்கு எதிரே வந்தார். கல்லறைகளே அம்மனிதரின் உறைவிடம். அவரை எவராலும் ஒருபொழுதும் சங்கிலியால் கூடக் கட்டிவைக்க முடியவில்லை. ஏனெனில், அவரைப் பல முறை விலங்குகளாலும் சங்கிலிகளாலும் கட்டியிருந்தும் அவர் சங்கிலிகளை உடைத்து விலங்குகளைத் தகர்த்து எறிந்தார். எவராலும் அவரை அடக்க இயலவில்லை. அவர் இரவு பகலாய் எந்நேரமும் கல்லறைகளிலும் மலைகளிலும் கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்; தம்மையே கற்களால் காயப்படுத்தி வந்தார்.
அவர் தொலையிலிருந்து இயேசுவைக் கண்டு, ஓடிவந்து அவரைப் பணிந்து, “இயேசுவே, உன்னத கடவுளின் மகனே, உமக்கு இங்கு என்ன வேலை? கடவுள் மேல் ஆணை! என்னை வதைக்க வேண்டாம்” என்று உரத்த குரலில் கத்தினார். ஏனெனில் இயேசு அவரிடம், “தீய ஆவியே, இந்த மனிதரை விட்டுப் போ” என்று சொல்லியிருந்தார். அவர் அம்மனிதரிடம், “உம் பெயர் என்ன?” என்று கேட்க அவர், “என் பெயர் ‘இலேகியோன்', ஏனெனில் நாங்கள் பலர்” என்று சொல்லி, அந்தப் பகுதியிலிருந்து தங்களை அனுப்பிவிட வேண்டாம் என்று அவரை வருந்தி வேண்டினார்.
அங்கே மலைப் பகுதியில் பன்றிகள் பெருங்கூட்டமாய் மேய்ந்து கொண்டிருந்தன. “நாங்கள் அப்பன்றிகளுக்குள் புகும்படி எங்களை அங்கே அனுப்பிவிடும்” என்று தீய ஆவிகள் அவரை வேண்டின. அவரும் அவற்றுக்கு அனுமதி கொடுத்தார். பின் தீய ஆவிகள் வெளியேறிப் பன்றிகளுக்குள் புகுந்தன. ஏறக்குறைய இரண்டாயிரம் பன்றிகள் அடங்கிய அந்தக் கூட்டம் செங்குத்துப் பாறையிலிருந்து கடலில் பாய்ந்து வீழ்ந்து மூழ்கியது.
பன்றிகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்களோ ஓடிப்போய் நகரிலும் நாட்டுப்புறத்திலும் இதை அறிவித்தார்கள். நடந்தது என்னவென்று பார்க்க மக்கள் வந்தனர். அவர்கள் இயேசுவிடம் வந்தபோது, பேய் பிடித்திருந்தவர், அதாவது இலேகியோன் பிடித்திருந்த அவர், ஆடையணிந்து அறிவுத் தெளிவுடன் அமர்ந்திருப்பதைக் கண்டு அச்சமுற்றார்கள். நடந்ததைப் பார்த்தவர்கள் பேய் பிடித்தவருக்கும் பன்றிகளுக்கும் நேரிட்டதை அவர்களுக்கு எடுத்துரைத்தார்கள். அப்பொழுது அவர்கள் தங்கள் பகுதியை விட்டுப் போய்விடுமாறு இயேசுவை வேண்டிக்கொண்டார்கள்.
அவர் படகில் ஏறியதும் பேய் பிடித்திருந்தவர் தாமும் அவரோடுகூட இருக்க வேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார். ஆனால் அவர் அதற்கு இசையாமல், அவரைப் பார்த்து, “உமது வீட்டிற்குப் போய் ஆண்டவர் உம்மீது இரக்கம் கொண்டு உமக்குச் செய்ததையெல்லாம் உம் உறவினருக்கு அறிவியும்” என்றார். அவர் சென்று, இயேசு தமக்குச் செய்ததையெல்லாம் தெக்கப்பொலி நாட்டில் அறிவித்து வந்தார். அனைவரும் வியப்புற்றனர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
எனது உறைவிடம் எது?
உறைவிடம் மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று. தன்னுடைய உறைவிடத்தில் தான் ஒரு மனிதன் தன்னையே தானாக உணர்கிறான். சுதந்திரத்தை அனுபவிக்கிறான். அமைதியைக் காண்கிறான். இத்தகைய உறைவிடத்தை தூய்மையாகவும் நேர்த்தியாகவும் வைத்துக்கொள்வது மிகவும் அவசியமாகிறது. மாறாக இவ்வுறைவிடத்தை அசுத்தமாகவும் நேர்த்தியாகவும் நாம் வைக்காத போது நமக்குள்ளாகவே ஒருவித சஞ்சல உணர்வுகளை நாம் உணர்கிறோம். அல்லவா?
அதேபோல நமது ஆன்மாவும் நமக்கு ஒரு உறைவிடம். இவ்வுறைவிடத்தை தூய்மையாகவும் நேர்த்தியாகவும் நாம் வைத்திருந்தால்தான் நம் வாழ்வில் அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். பல சமயங்களில் இவ்வுறைவிடத்தை நாம் கவனித்துக்கொள்ளாமல் தேவையற்றவற்றை உள்நுழைய அனுமதித்து விடுகிறோம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் தீய ஆவி பிடித்தவரை இயேசு குணமாக்குகிறார் என்பதை நாம் வாசிக்கிறோம். அத்தீய ஆவி பிடித்தவரைப் பற்றி கூறும் போது "கல்லறையே அவரது உறைவிடம் " என்ற வார்த்தை தரப்பட்டடுள்ளது. கல்லறை என்பது நாம் அறிந்தவாறே இறந்த உடல்களை அடக்கம் செய்யும் இடம். அங்கே தூய்மை இல்லை. பயம் நிறைந்திருக்கும். அச்சம் கலந்த அமைதிதான் இருக்கும். யாரும் இவ்விடத்தை விரும்புவதில்லை.
நம் அன்றாட வாழ்க்கை சூழல்களில் நாமே நம் வாழ்க்கையை கல்லறை போன்று மாற்றிவிடுகிறோம். நம்முடைய சுயநலம், பாவமோகங்கள், மாயக்கவர்ச்சிகள், பகை, பேராசை போன்றவற்றை நம்மை ஆட்கொள்ளவைத்து நம் ஆன்மா என்ற உறைவிடத்தை கல்லறை போல மாற்றி அதிலேயே நாமும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
நம் ஆன்மா என்ற உறைவிடத்தில் வாழ விரும்பும் இயேசுவை நாம் கண்டு கொண்டு இத்தகைய அசுத்த ஆவிகளை வெளியேறச் செய்தால் நம் ஆன்மா கடவுளின் உறைவிடமாகும். கடவுள் நம் உறைவிடமாவார். நமது உறைவிடத்தை தூய்மையாக நேர்த்தியாக அமைத்துக்கொள்ள நாம் தயாரா? இயேசுவை அணுகிச் செல்வோம்.
இறைவேண்டல்
அன்பு இறைவா எங்கள் உள்ளமாம் உறைவிடத்திலுள்ள தீயவற்றை நீக்கி உமது உறைவிடமாக்கும். ஆமென்.
அருட்பணி. குழந்தை இயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️
Join with us 👇
Website: https://catholicvoicecv.blogspot.com
Youtube: https://www.youtube.com/channel/UCcgIiK1gUEqRCmTsc7ZjAoA
Youtube: https://www.youtube.com/channel/UCxBBHQAKIjii_MsZfIYNF5A
Facebook:https://www.facebook.com/Catholic-Voice-108151311955076
Instagram:https://www.instagram.com/invites/contact/?i=16mmdwn460k8p&utm_content=p6lg283
No comments:
Post a Comment