Saturday, January 28, 2023

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (29-01-2023)

 

பொதுக்காலம் 4ஆம் வாரம் - ஞாயிறு



முதல் வாசகம்

ஏழ்மையும் எளிமையும் உள்ள மக்களை உன் நடுவில் விட்டுவைப்பேன்.

இறைவாக்கினர் செப்பனியா நூலிலிருந்து வாசகம் 2: 3, 3: 12-13

செப்பனியா கூறியது: நாட்டிலிருக்கும் எளியோரே! ஆண்டவரின் கட்டளையைக் கடைப்பிடிப்போரே! அனைவரும் ஆண்டவரைத் தேடுங்கள்; நேர்மையை நாடுங்கள்; மனத் தாழ்மையைத் தேடுங்கள்; ஆண்டவரது சினத்தின் நாளில் ஒருவேளை உங்களுக்குப் புகலிடம் கிடைக்கும்.

“ஏழை எளியோரை உன் நடுவில் நான் விட்டுவைப்பேன்; அவர்கள் ஆண்டவரின் பெயரில் நம்பிக்கை கொள்வார்கள். இஸ்ரயேலில் எஞ்சியோர் கொடுமை செய்யமாட்டார்கள்; வஞ்சகப் பேச்சு அவர்களது வாயில் வராது; அச்சுறுத்துவார் யாருமின்றி, அவர்கள் மந்தைபோல் மேய்ந்து இளைப்பாறுவார்கள்".

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 146: 7. 8-9a. 9bc-10 (பல்லவி: மத் 5: 3)

பல்லவி: ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களதே.

அல்லது: அல்லேலூயா.

7
ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார்; பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்; சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார். - பல்லவி

8
ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்; தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்; நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார்.
9a
ஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார். - பல்லவி

9bc
அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்; ஆனால், பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்துவிடுகின்றார்.
10
சீயோனே! உன் கடவுள், என்றென்றும், எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சி செய்வார். - பல்லவி

இரண்டாம் வாசகம்

வலுவற்றவை என உலகம் கருதுபவற்றைக் கடவுள் தேர்ந்துகொண்டார்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 26-31

சகோதரர் சகோதரிகளே,

நீங்கள் அழைக்கப்பட்ட நிலையை எண்ணிப் பாருங்கள். மனிதக் கணிப்பின்படி உங்களுள் ஞானிகள் எத்தனை பேர்? வலியோர் எத்தனை பேர்? உயர்குடிமக்கள் எத்தனை பேர்?

ஆனால் கடவுள் ஞானிகளை வெட்கப்படுத்த, மடமை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்துகொண்டார். அவ்வாறே, வலியோரை வெட்கப்படுத்த, வலுவற்றவை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்துகொண்டார். உலகம் ஒரு பொருட்டாகக் கருதுபவற்றை அழித்துவிட, அது தாழ்ந்ததாகக் கருதுபவற்றையும் இகழ்ந்து தள்ளுபவற்றையும் கடவுள் தேர்ந்தெடுத்தார். எவரும் கடவுள் முன் பெருமை பாராட்டாதபடி அவர் இப்படிச் செய்தார்.

அவரால்தான் நீங்கள் கிறிஸ்துவுடன் இணைக்கப்பட்டிருக்கிறீர்கள். கிறிஸ்துவே கடவுளிடமிருந்து நமக்கு வரும் ஞானம். அவரே நம்மை ஏற்புடையவராக்கித் தூயவராக்கி மீட்கின்றார். எனவே மறைநூலில் எழுதியுள்ளவாறு, “பெருமை பாராட்ட விரும்புகிறவர் ஆண்டவரைக் குறித்தே பெருமை பாராட்டட்டும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 5: 12a

அல்லேலூயா, அல்லேலூயா! மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

எளிய உள்ளத்தோர் பேறுபெற்றோர்.

 மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 1-12a

இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவர் அருகே வந்தனர். அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை:

“ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர். கனிவுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர். நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர். இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர். தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர். அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்.

நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே! மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.


 இறையாட்சியின் மதிப்பீடுகளின் படி வாழ தயாரா?


நாம் கடவுளின் பார்வையில் பேறுபெற்றவர்களாக வாழ வேண்டுமெனில் மலைப்பொழிவின் வழியாகஇயேசு நமக்கு விட்டுச் சென்றநல்ல மதிப்பீடுகளை வாழ்வாக்க முயற்சி செய்வோம். மலைப்பொழிவின் வழியாக புதிய இஸ்ரயேல் மக்களாகிய நம் ஒவ்வொருவரும் எப்படிப்பட்ட இறையாட்சி மக்களாக வாழ வேண்டும் அறிவுறுத்தும் விதமாக இயேசு பறைசாற்றியுள்ளார்.


ஆங்கில அறிஞர் ஒருவர் "இந்தியாவில் ஒரே ஒரு கிறிஸ்தவர் மட்டும் இருந்தார். அவரும் திருமுழுக்கு பெறாதவர்" என்று மகாத்மா காந்தியை பற்றி புகழ்சாற்றியுள்ளார். "இந்துக்களின் புனித புத்தகமாகிய பகவத் கீதையை நான் இழக்க நேரிட்டாலும், கிறிஸ்துவின் மலைப்பொழிவின் ஒரு பிரதி இருந்தால் எனக்குப் போதும் " என்று சொல்லும் அளவுக்கு மலைப்பொழிவு பகுதியானது மகாத்மா காந்தியின் உள்ளத்தில் இடம் பிடித்தது.


இயேசு மலைப்பொழிவின் வழியாக எட்டு பேறுகளைப் பற்றி கூறியுள்ளார். நாம் அனைவரும் எப்படிப்பட்ட இறையாட்சியின் மக்களாக வாழ வேண்டும் என்பதை மலைப்பொழிவின் வழியாக கூறியுள்ளார். அவற்றின் பொருளையும் அவை தருகின்ற அழைப்பையும் சற்று தியானிப்போம்.


ஏழையரின் உள்ளதோர் என்ற வார்த்தையின் பொருள் இறைவன் மீது நாம் கொண்டிருக்கக்கூடிய தாழ்மையான சார்பு மனநிலையை சுட்டிக் காட்டுவதாக இருக்கின்றது. நமக்கு எவ்வளவு பணம், புகழ், பட்டம், பதவி இருந்தாலும் அனைத்தும் இறைவனுக்கு முன்னால் ஒன்றும் இல்லை; இறைவன் மட்டுமே எல்லாவற்றிற்கும் உயர்ந்தவர் என ஆழமாக உணரும் பொழுது நாம் பேறுபெற்றவர்களாக மாறுகிறோம். எனவே இறைவனின் அருளின் மீது தாழ்மையான சார்பு மனநிலையை கொண்டிருக்க நாம் முயற்சி செய்வோம்.


 துயருறுவோர் பேறுபெற்றோர் என்பதன் பொருள் இந்த சமூக கட்டமைப்பின் வழியாக மக்கள் படும் அடிமை நிலையைச் சுட்டிக் காட்டுவதாக இருக்கிறது. கடவுள் துன்பப்படுபவர்களின் சார்பாக இருக்கின்றார். நம் வாழ்வில் துன்பம் வரும் பொழுது கடவுள் நம்மோடு இருக்கிறார் என்பதை முற்றிலும் நம்ப வேண்டும். அப்பொழுது நிச்சயமாக நாம் பேறுபெற்றவர்களாக வாழ முடியும்.


கனிவுடையோர் பேறுபெற்றோர் என்ற வார்த்தையானது கடவுள் முன் சிறியவர்களாகவும் கனிவு உள்ளவர்களாகவும் வாழ்பவர்களுக்கு இறைவன் நன்மை செய்வார் என்பதை சுட்டிக்காட்டுவதாக இருக்கின்றது. ஞானிகளுக்கும் வலிமையானவர்களுக்கும் நன்மை கிடைப்பதை விட கடவுள் முன்பாக வாழும் சிறியவர்களுக்கும் எளியவர்களுக்கும் கனிவு நிறைந்தவர்களுக்கும் நன்மை கிடைக்கும் என்பதை மிகத் தெளிவாக ஆண்டவர் இயேசு எடுத்துரைத்துள்ளார்.


நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர் என்ற வார்த்தையானது நீதியின் படி இறைவனின் திட்டத்தை ஏற்று நடப்பதை சுட்டிக் காட்டுகிறது. புனித சூசையப்பர் இறைவனின் திட்டத்தை ஏற்று நடந்தது போல நாமும் நடக்க அழைக்கப்படுகிறோம். இறைவனின் திட்டத்தின்படி வாழும் பொழுது நிச்சயமாக நாம் நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டவர்களாக வாழ முடியும். அதன் வழியாக பேறுபெற்றவர்களாக மாற முடியும்.


இரக்கமுடையோர் பேறுபெற்றோர் என்ற வார்த்தையானது தாராள மனப்பான்மை, மன்னித்தல், துன்புறுவோருக்கு இரக்கம், குணமளிக்கும் பண்பு போன்ற மதிப்பீடுகளை வாழ்வாக்குவதாகும். நாம் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் இரக்க குணம் உள்ளவர்களாக இருக்கும் பொழுது பேறுபெற்ற மக்களாக மாறுகிறோம். 


தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர் என்ற வார்த்தையானது நம்முடைய தார்மீக நேர்மைத்தனத்தை சுட்டிக் காட்டுவதாக இருக்கின்றது. கடவுளுக்கு முன்பாக தூய்மையோடும் நேர்மையோடும் கண்ணியத்தோடும் வாழும்பொழுது நாம் பேறுபெற்ற மக்களாக மாறுகிறோம். இதைத்தான் திருத்தூதர் பவுல் " உண்மையானவை எவையோ, கண்ணியமானவை எவையோ, நேர்மையானவை எவையோ, தூய்மையானவை எவையோ, விரும்பத்தக்கவை எவையோ, பாராட்டுதற்குரியவை எவையோ, நற்பண்புடையவை எவையோ, போற்றுதற்குரியவை எவையோ, அவற்றையே மனத்தில் இருத்துங்கள்" பிலிப்பியர் 4:8 என கூறியுள்ளார். எனவே நம்முடைய அன்றாட வாழ்க்கையில் தூய்மை நிறைந்தவர்களாக வாழ முயற்சி செய்வோம்.


அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர் என்ற வார்த்தையானது தனி மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையே உள்ள உறவுகளின் அமைதியை சுட்டிக்காட்டும் விதமாக இருக்கின்றது. எனவே தனிப்பட்ட முறையிலே நம்முடைய உடல் உள்ளம் ஆன்மா ஆழ்மன அமைதியை பெற்றிட நம்மோடும் நல்லுறவோடு இருக்க வேண்டும். நம்மை நாம் மதிக்க வேண்டும். கடவுள் கொடுத்த இந்த உடல் அமைப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும். கடவுள் நமக்கு கொடுத்த வாய்ப்புகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். கடவுள் நமக்கு கொடுத்த கொடைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறாக ஏற்றுக் கொள்ளும் பொழுது நாம் அனைவரும் கடவுளோடு நல்லுறவு கொள்ள முடியும். கடவுளோடு நல்லுறவு கொள்பவர்கள் நிச்சயமாக பிறரோடும் நல்லுறவு கொள்ள முடியும். அப்பொழுது நிச்சயமாக இறைவன் தருகின்ற அமைதியை நாம் பெற்று பேறுபெற்ற மக்களாக நாம் மாற முடியும்.


இறுதியாக நீதியின் பொருட்டு துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர் என்ற வார்த்தையானது நாம் நீதியின் பால் வாழக்கூடிய மக்களாக வாழ அழைக்கப்பட்டுள்ளோம். நாம் நீதி நெறியோடு வாழும் பொழுது அதிகமான துன்பங்களையும் சவால்களையும் ஏமாற்றங்களையும் எதிர்கொள்ள நேரிடும். ஆனால் அவற்றைக் கண்டு கலங்காமல் துணிவோடு நீதியின் பால் செயல்படும் பொழுது பேறுபெற்ற மக்களாக நாம் வாழ முடியும். 


எனவே கடவுளுடைய இறையாட்சியின் மதிப்பீடுகளின் படி நாம் வாழ மேற்கூறப்பட்ட எட்டு மலைப்பொழிவின் போதனைகளையும் நாம் வாழ்வாக்க முயற்சி செய்வோம். அதற்கு தேவையான அருளை வேண்டுவோம்.


 இறைவேண்டல்

வல்லமையுள்ள இறைவா! எங்களுடைய அன்றாட வாழ்க்கையில் பேறுபெற்ற மக்களாக வாழ்ந்திடவும் மலைப்பொழிவின் வாழ்வியல் மதிப்பீடுகளை வாழ்வாக்கி இறையாட்சியின் தூதுவர்களாக மாறிடவும் தேவையான அருளை தாரும். ஆமென்.


அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...