Wednesday, August 31, 2022

Daily Prayers - அன்றாட செபம் (1-09-2022)


காலை ஜெபம். 

என் ஆண்டவர் இயேசுவே,

மாறா அன்பர்களுக்கு மாறா அன்பரே! உம்மை துதிக்கின்றேன். தூயவரே! என் வாழ்விற்கு ஒளி ஊட்டியவரே! உம்மை புகழ்ந்து பாடுகின்றேன். துணை வேண்டி உம்மை கூவி அழைத்தேன், விண்ணில் இருந்து விடை தந்தீரே! நன்றி கூறுகின்றேன். “இன்னும் நான் வளர்ச்சி அடையவில்லை. குழந்தை போல், அறிவுரை தவறும் மனதிலே உலகில் வாழ்கின்றேன்" என புனித பவுல் கிறிஸ்தவ வாழ்வின் நிலையை எடுத்து காட்டுவதை இறை வார்த்தையில் வாசிக்கின்றேன். தூய ஆவிக்குரிய இயல்பில் நிலைத்து வாழாமலும்; உம்மில் நிலைத்து வளராமலும்; ஊனியல்பின் பிடியில் வாழ்வை அழித்து கொண்டு இருக்கும் என் வாழ்வை பாதுகாரும். இயேசுவே! நீரே என்னில் விழைச்சலை உருவாக்க முடியும்; உம்மாலே என்னை பண்படுத்தி பயன்டுத்த முடியும்; என்னை முழுமையாக முழு மனதுடன் உமக்கு கையளிக்கின்றேன்; என்னை உமது பிள்ளையாக உருவாக்கும் உருமாற்றும். ஆண்டவரே இயேசுவே! வார்த்தையை அனுப்பி குணப்படுத்தி வாழ்வளிக்கும் இறைமகனே! இன்றைய நாளில் என் வாழ்வை தொடும்; என் ஆன்மாவை தொடும்; பேதுருவின் மாமியாரின் நோயை கடிந்து சுகப்படுத்தியவரே! என்னையும் குணமாக்கும். முழு மனதுடன் ஊழியம் செய்திட எனக்கு ஆசீர் தாரும்; இன்று என் வாழ்வை ஆசீர்வதியும்; நன்மைகளாலும், நன்மையான ஏவுதல்களாலும் என் வாழ்வை நிரப்ப வேண்டுமாய் இயேசுவின் தூய நாமத்தால் ஜெபிக்கின்றேன்.

ஆமென்!. 


மதிய செபம்

இறைவன் என் மீட்பர், அவர்மேல் நம்பிக்கை வைக்கிறேன், நான் அஞ்சமாட்டேன்; ஆண்டவரே என் ஆற்றல், அவரையே பாடுவேன், என் மீட்பும் அவரே. 

(எசாயா 12:2)


எங்களின் ஆற்றலும் மீட்புமான இறைவா! இந்த மதிய வேளைக்காய் நன்றி கூறுகின்றோம். எங்கள் அனைவரின் ஆற்றலுமாகவும் மீட்புமாகவும் நம்பிக்கையாகவும் நீரே இருக்கிறீர். நாங்கள் நம்பிக்கை இழந்து போகும் போதும் இருள் சூழ்ந்த பாதையில் நடக்கும் போதும் உமது மேல் உள்ள நம்பிக்கையும் உமது ஆறுதலிக்கும் வார்த்தைகள் மட்டுமே ஒவ்வொரு சூழலிலும் எங்களை வழிநடத்தி வருகின்றன.  இதே நம்பிக்கை நிறைந்த பாதையிலே நாங்கள் தினம் தினம் வழிநடக்க எங்கள் மனங்களை திடப்படுத்தும் நம்பிக்கையின் நாயகனே! ஆமென்.


இரவு செபம்

ஆண்டவரே நீரே எங்கள் தந்தை; நாங்கள் களிமண், நீர் எங்கள் குயவன்; நாங்கள் அனைவரும் உம் கைவேலைப்பாடுகளே.  உம் மக்களாகிய எங்கள் அனைவரையும் கண்ணோக்கும். 

(எசாயா 64:8-9)


குணமாக்கும் தெய்வமே இறைவா! இந்த இரவு வேளையை உம் பாதம் வைக்கிறோம். எந்தத் தீங்கும் நேரிடா வண்ணம் எங்களை காத்துக் கொள்ளும். ஒன்றுமில்லாத களிமண்ணாய் இருந்த எங்களை நீரே வனைந்து உம் திட்டத்தின் படி எங்களை வழிநடத்தி, பயன்படுத்தி வருகின்றீர்.

ஆறுதலுக்காகவும் அரவணைப்பிற்காகவும்குணப்படுத்தலுக்காகவும்  தவித்து வேதனையுறும் எங்களை கண்ணோக்கி, உம் கை வேலைப்பாடுகளான, களிமண்ணான எங்களுக்கு உமது ஆவியை ஊற்றி புத்துயிர் பெறச் செய்யும். ஆமென்

No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...