Wednesday, November 2, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (03-11-2022)

 


பொதுக்காலம் 31ஆம் வாரம் - வியாழன்

முதல் வாசகம்



எனக்கு ஆதாயமான அனைத்தும் கிறிஸ்துவின் பொருட்டு இழப்பு எனக் கருதினேன்.

திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 3-8

சகோதரர் சகோதரிகளே,

உடலைச் சார்ந்தவற்றில் உறுதியான நம்பிக்கை கொள்ளாமல், கடவுளின் ஆவிக்கேற்ப வழிபட்டுக் கிறிஸ்து இயேசுவைப் பெருமைப்படுத்தும் நாமே உண்மையான விருத்தசேதனம் செய்து கொண்டவர்கள். உடலைச் சார்ந்தவற்றில் உறுதியான நம்பிக்கை வைக்கவேண்டுமானால் நானும் வைக்கலாம். உடலைச் சார்ந்தவற்றில் உறுதியான நம்பிக்கை கொள்ள முடியும் என யாராவது நினைத்தால், அவரை விட மிகுதியாக நானும் நம்பிக்கை கொள்ள முடியும். நான் பிறந்த எட்டாம் நாள் விருத்தசேதனம் பெற்றவன்; இஸ்ரயேல் இனத்தவன்; பென்யமின் குலத்தவன்; எபிரேயப் பெற்றோருக்குப் பிறந்த எபிரேயன்; திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில் பரிசேயன். திருச்சட்டத்தில் எனக்கிருந்த ஆர்வத்தால் திருச்சபையைத் துன்புறுத்தினேன். திருச்சட்டத்தின் அடிப்படையிலான நீதிநெறியைப் பொறுத்தமட்டில் குற்றமற்றவனாய் இருந்தேன்.

ஆனால் எனக்கு ஆதாயமான இவை அனைத்தும் கிறிஸ்துவின் பொருட்டு இழப்பு எனக் கருதினேன். உண்மையில், என்னைப் பொறுத்தமட்டில் என் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்ற செல்வம். இதன் பொருட்டு மற்ற எல்லாவற்றையும் இழப்பாகக் கருதுகிறேன். அவர் பொருட்டு நான் அனைத்தையும் இழந்துவிட்டேன். கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்



திபா 105: 2-3. 4-5. 6-7 (பல்லவி: 3b)

பல்லவி: ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் மகிழ்வதாக!

2
அவருக்குப் பாடல் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்! அவர்தம் வியத்தகு செயல்கள் அனைத்தையும் எடுத்துரையுங்கள்!
3
அவர் தம் திருப்பெயரை மாட்சிப்படுத்துங்கள்; ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக! - பல்லவி

4
ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள்! அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்!
5
அவர் செய்த வியத்தகு செயல்களை நினைவுகூருங்கள்! அவர்தம் அருஞ்செயல்களையும், அவரது வாய் மொழிந்த நீதித் தீர்ப்புகளையும் நினைவில் கொள்ளுங்கள். - பல்லவி

6
அவரின் ஊழியராம் ஆபிரகாமின் வழிமரபே! அவர் தேர்ந்துகொண்ட யாக்கோபின் பிள்ளைகளே!
7
அவரே நம் கடவுளாகிய ஆண்டவர்! அவரின் நீதித் தீர்ப்புகள் உலகம் அனைத்திற்கும் உரியன. - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 11: 28

அல்லேலூயா, அல்லேலூயா! பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்



மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்துக் கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும்.

 லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 1-10

அக்காலத்தில்

வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கி வந்தனர்.

பரிசேயரும் மறைநூல் அறிஞரும், “இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே” என்று முணுமுணுத்தனர்.

அப்போது அவர் அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்: “உங்களுள் ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று காணாமற் போனால் அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பாலை நிலத்தில் விட்டுவிட்டு, காணாமற்போனதைக் கண்டுபிடிக்கும்வரை தேடிச் செல்ல மாட்டாரா?

கண்டுபிடித்ததும், அவர் அதை மகிழ்ச்சியோடு தம் தோள்மேல் போட்டுக் கொள்வார்; வீட்டுக்கு வந்து, நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, ‘என்னோடு மகிழுங்கள்; ஏனெனில் காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்து விட்டேன்’ என்பார்.

அது போலவே மனம் மாறத் தேவையில்லாத் தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியை விட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

பெண் ஒருவரிடம் இருந்த பத்துத் திராக்மாக்களுள் ஒன்று காணாமற்போய்விட்டால் அவர் எண்ணெய் விளக்கை ஏற்றி வீட்டைப் பெருக்கி அதைக் கண்டுபிடிக்கும்வரை கவனமாகத் தேடுவதில்லையா?

கண்டுபிடித்ததும், அவர் தோழியரையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, ‘என்னோடு மகிழுங்கள், ஏனெனில் காணாமற் போன திராக்மாவைக் கண்டுபிடித்துவிட்டேன்’ என்பார்.

அவ்வாறே மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்துக் கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும் என உங்களுக்குச் சொல்கிறேன்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.


உண்மையான மனமாற்றமே ஒப்பற்ற மகிழ்ச்சி!

இருபது வருடங்களுக்கு மேலாக குடிநோயால் பாதிக்கப்ட்டு மனம்மாறிய நபர் ஒருவர் தன்னுடைய அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.மிகவும் பக்தியும் ஒழுக்கமும் உள்ள குடும்பத்தில் பிறந்து, வளர்ந்து நல்ல கல்வித்தகுதியை பெற்றவர் அவர். ஆனால் அவருடைய இளமைப் பருவம் அவருடைய வாழ்வையே திசை திருப்பியது. தகாத நண்பர் சேர்க்கையால் குடிப்பழக்கத்திற்கு ஆளானார். அப்பழக்கம் அவரைக் கொஞ்சம் கொஞ்சமாக அடிமைப் படுத்தியது. முதலில் நன்மதிப்பை இழந்தார். பின் தன் வேலையை இழந்தார். உறவுகளை இழந்தார். அவருடைய செல்வாக்கு குறையக் குறைய நண்பர்களும் விட்டுச் சென்றனர்.

நோய்களுக்குப் புகலிடமானார்.தன் மகனின் வாழ்க்கை கண்முன் அழிவதைக் கண்டு மனம் நொந்தத் தந்தையும் நோய்வாய்பட்டு இறந்து போனார்.யாருடைய சொல்லையும் கேளாமல் தன் குடியைத் தொடர்ந்தார் அவர். ஒருமுறை அவருடைய தாய்க்கு ஒரு விபத்து ஏற்பட்டது. அதிகமான இரத்தப்போக்கினால் குற்றுயிராய் இருந்த நேரத்தில் அவருடைய இரத்த வகை பெறுவதற்காக பல இடங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

தன் தாய்க்கும் தனக்கும் ஒரே இரத்தவகை என்பதை அறிந்தும் கூட அவரால் இரத்தம் கொடுக்க இயலவில்லை. காரணம் மது. அன்று தான் தனக்கு பாலூட்டி வளர்த்த தன் அன்னைக்கு இரத்தம் கொடுக்க இயலாத அளவுக்கு தான் மோசமாகிப் போயிருந்த நிலையை உணர்ந்து மனம் நொந்து அழுதார். மனம் மாறினார்.வாழ்வுப்வாதையை மாற்றினார். அவருடைய குடும்பம் எல்லையற்ற மகிழ்ச்சி பெற்றது.

இன்றைய வாசகங்கள் நம்மை உண்மையான மனமாற்றத்திற்கு அழைக்கின்றன.

 மனமாற்றம் மகிழ்வைத் தரக்கூடியது. மன அமைதியை ஏற்படுத்துகிறது.ஒருவருடைய மனமாற்றம் அவருடைய பழைய பிற்போக்குடைய வாழ்வை மாற்றி, புதிய முற்போக்கு சிந்தனைகள் நிறைந்த வாழ்வை வழங்குகிறது. ஆளுமைத் திறன்களை வளர்க்கிறது. சுற்றியுள்ள பலருக்கும் நன்மை தருபவராகவும் முன்மாதிரியாகவும் திகழ வழிவகுக்கிறது. ஆம் இத்தகைய மனமாற்றத்திற்காகவே நாம் அழைக்கப்படுகிறோம். "மனம் மாறுகின்ற ஒரு பாவியால் விண்ணுலகில் ஏற்படும் மகிழ்ச்சி ஒப்பற்றது "என்ற வார்த்தைகள் நம்முடைய வாழ்வுப் பாதையை மாற்றி இறைவழியில் செலுத்த அழைக்கிறது. 

இதையே காணமற்போன ஆடு மற்றும் நாணய உவமை மூலம் இயேசு விளக்குகிறார். நமக்கு மிகவும் பிடித்தமான பொருள் காணாமல் போனால் அதைக் கண்டுபிடிக்கும் வரை மனது ஓய்வதில்லை. கண்டுபிடித்த பின் நாம் அடையும் மகிழ்ச்சிக்கு அளவில்லை. இது நம் வாழ்வில் நடக்கக் கூடிய எதார்த்தமான உண்மை. அவ்வாறிருக்க, தம்மோடு இருக்க ,தன்னை அன்பு செய்ய ,தன் சாயலிலே படைக்கப்பட்ட பிள்ளைகள் ,

உலகத்தின் கவர்ச்சியால் தொலைந்து போகும் போது கடவுள் எவ்வளவு வேதனை அடைவார் என நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.நாம் தொலைந்து போன நேரங்களில்லாம் அன்போடும் இரக்கத்தோடும் நம்மை தேடும் கடவுள்  உண்மையான மனமாற்றத்துடன் நாம் திரும்பி வரும் போது நம்மைக் கண்டு ஆனந்தம் அடைகிறார். அது நாம் அடையும் மகிழ்ச்சியை விட பன்மடங்கு உயர்ந்தது

இன்றைய முதல் வாசகத்தில் கூறப்பட்டது போல உடலைச் சார்ந்த செயல்பாடுகளில் நாம் ஈடுபட்டால் உண்மையான நம்பிக்கையை இழந்து உலக மாயைகளில் நாம் தொலைந்து போக நேரிடும்.மனம் திரும்பி, கிறிஸ்துவை நம் ஒப்பற்ற செல்வமாகக் கருதி,  கடவுளிடம் திரும்பி வந்தால் விண்ணகத்தில் மகிழ்ச்சி உண்டாக நாம் காரணமாகிவிடுவோம். எனவே தொலைந்து போனாலும் கடவுளால் கண்டுபிடிக்கப்பட  விரும்புவோம். நம்முடைய மனமாற்றத்தின் மூலம் ஒப்பற்ற மகிழ்ச்சியை விண்ணகத்திலும் நாம் வாழும் மண்ணகத்திலும் ஏற்படுத்துவோம்.

 இறைவேண்டல்

தொலைந்து போன எங்களை உள்ளார்ந்த அன்போடு தேடிடும் இறைவா!  நாங்கள் உடல் சார்ந்த காரியங்களில் ஈடுபடுவதை விடுத்து உண்மையான மனமாற்றத்தால் நாங்கள் வாழும் இடங்களிலும் விண்ணகத்தில் ஒப்பற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்த வரம் தாரும் ஆமென்.




† இன்றைய புனிதர் †
✠ புனிதர் மார்டின் டி போரஸ் ✠
(St. Martin de Porres)

டொமினிக்கன் சபை பொதுநிலை சகோதரர்:
(Lay brother of the Dominican Order)

பிறப்பு: டிசம்பர் 9, 1579
லிமா, காலனியாதிக்க பெரு
(Lima, Viceroyalty of Peru)

இறப்பு: நவம்பர் 3, 1639 (வயது 59)
லிமா, காலனியாதிக்க பெரு
(Lima, Viceroyalty of Peru)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
லூதரன் திருச்சபை
(Lutheran Church)
ஆங்கிலிக்கன் ஒன்றியம்
(Anglican Communion)

முக்திப்பேறு பட்டம்: அக்டோபர் 29, 1837
திருத்தந்தை பதினாறாம் கிரகோரி
(Pope Gregory XVI)

புனிதர் பட்டம்: மே 6, 1962
திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான்
(Pope John XXIII)

முக்கிய திருத்தலங்கள்:
சாந்தோ டொமினிகோ ஆலயம், லிமா, பெரு
(Church of Santo Dominigo, Lima, Peru)

நினைவுத் திருவிழா: நவம்பர் 3

சித்தரிக்கப்படும் வகை:
ஒரு நாய், ஒரு பூனை மற்றும் ஒரு பறவை ஒரே தட்டில் ஒன்றாக உணவு உண்பது; விளக்குமாறு, சிலுவை, ஜபமாலை, இதயம்

பாதுகாவல்:
பிலாக்ஸி மறைமாவட்டம் (Diocese of Biloxi), கருப்பு இன மக்கள், சிகை அலங்காரிகள், விடுதி காப்பாளர், கலப்பு இன மக்கள், பெரு (Peru), ஏழை மக்கள், பொது கல்வி, பொது சுகாதாரம், அரசு பள்ளிகள், பொது கல்வி, இன உறவுகள், சமூக நீதி, தொலைக்காட்சி, மெக்ஸிக்கோ (Mexico), பெருவியன் கடற்படை விமானிகள் (Peruvian Naval Aviators), வியட்நாம் (Vietnam), மிசிசிப்பி (Mississippi), ஹோட்டல் நடத்துபவர்கள் (Innkeepers), லாட்டரி, லாட்டரியில் வெற்றி பெற்றவர்கள்,

புனிதர் மார்டின் டி போரஸ், ஒரு டொமினிக்கன் சபையினைச் சேர்ந்த பொது நிலை சகோதரரும், கத்தோலிக்க திருச்சபையின் புனிதரும் ஆவார். இவர் கலப்பு இன மக்கள், அமைதிக்காக துன்பப்படுவோர் முதலியோருக்கு பாதுகாவலராகக் கருதப்படுகின்றார். இவர் தன் வாழ்நாள் முழுதும் ஏழைகளுக்காகவே பணியாற்றினார். ஒரு அனாதை இல்லத்தையும், ஒரு குழந்தைகளுக்கான மருத்துவமனையையும் நிறுவினார். நோன்புகள், மற்றும் புலால் உணவு தவிர்த்தல், உள்ளிட்ட எளிமையான மற்றும் கடுமையான தவமுயற்சிகளைக் கொண்ட கடின வாழ்க்கை முறை வாழ்ந்தார்.

வாழ்க்கைக் குறிப்பு:
“ஜுவான் மார்டின் டி போரஸ் வெலாஸ்குயிஸ்” (Juan Martin de Porres Velázquez) எனும் இயற்பெயர் கொண்ட இவர், “ஸ்பேனிஷ் காலனித்துவ நிர்வாக மாவட்டமான” (Spanish Colonial Administrative District) பெருவின் (Peru) தலைநகரான லிமாவில் (Lima) கி.பி. 1579ம் ஆண்டு பிறந்தார். ஸ்பேனிஷ் பிரபுவான “டான் ஜூவான் டி போரேஸ்” (Don Juan de Porres) எனும் தந்தைக்கும், பனாமா (Panama) நாட்டில் அடிமையாக இருந்து விடுதலை பெற்ற “அனா வெலாஸ்குயிஸ்” (Ana Velázquez) என்ற ஆஃபிரிக்க இன தாய்க்கும் சட்டவிரோதமாகப் பிறந்த இவருக்கு கி.பி. 1581ல் பிறந்த “ஜுவானா” (Juana) எனும் பெயருடைய ஒரு இளைய சகோதரியும் உண்டு. தங்கை பிறந்த பிறகு, இவரது தந்தை இவர்களது குடும்பத்தை கைவிட்டு சென்றார். இவர்களுடைய தாயார், ஒரு ஆடை சலவையகத்தில் வேலை செய்து தமது குழந்தைகளை வளர்த்தார். மிகவும் வறுமையில் வாடியதாலும், இவரது தாயாரால் இவரை வளர்க்க இயலாமல் போனதாலும் ஒரு ஆரம்ப பள்ளியில் இரண்டு வருடங்கள் வேலை செய்தார். பின்னர், தமது பத்துவயதிலேயே அறுவை சிகிச்சை மருத்துவரிடமும் (Surgeon), நாவிதரிடமும் (Barber) வேலை பயில சென்றார். இளம் வயதிலேயே இரவு முழுதும் செபிக்கும் வழக்கம் இவரிடம் இருந்தது.

அப்போதைய பெரு நாட்டின் சட்டங்கள், ஆபிரிக்க இன மக்களையும், அமெரிக்க குடி மக்களையும் ஆன்மீக சபைகளில் சேருவதை தடை செய்தது. மார்டினுக்கு இருந்த ஒரே வழி, லிமா நகரிலிருந்த “தூய செபமாலை புகுநிலை டொமினிக்கன் துறவியரிடம்”, (Dominicans of Holy Rosary Priory) தம்மை தன்னார்வ தொண்டு பணியாளாக சேர்த்துக்கொள்ள வேண்டுவதேயாகும். சரீர உழைப்பை நல்கிய இவருக்கு பிரதியுபகாரமாக, துரவியரில் சீருடை அணிந்துகொள்ளவும், அவர்களுடன் வாசிக்கவும் உரிமை கிட்டியது. தனது 15ம் வயதில் லிமா நகரிலுள்ள டொமினிக்கன் சபையில் சேர விண்ணப்பித்தார். முதலில் டொமினிக்கன் சபையினரின் செபமாலை பள்ளியில் வேலையாளாகவே அனுமதிக்கப்பட்டாலும், பின்னர் பல முக்கிய பொறுப்புகளும் இவருக்கு வழங்கப்பட்டன. பின்னர் டொமினிக்கன் சபையில் சேர கடவுள் தன்னை அழைப்பதாக உணர்ந்த இவர் இச்சபையின் மூன்றாம் சபையில் சேர்ந்தார்.

தொடர்ந்து, தமது நாவிதன் பணியையும், குணமாக்கும் பணிகளையும் செய்துவந்தார். இவர், தமது செப வல்லமையால் பலரை அற்புதமாக குணமாக்கியதாக கூறப்படுகிறது. சமையலறைப் பணிகள், சலவைப் பணிகள், மற்றும் சுத்திகரிக்கும் பணிகளும் செய்தார்.

எட்டு வருடங்களின் பின்னர், மார்டின் மீது இரக்கம் கொண்ட தூய செபமாலை மடத்தின் தலைவரான “ஜுவான் டி லொரென்ஸானா” (Juan de Lorenzana) என்பவர், பெரு நாட்டின் சட்டங்களுக்கு மறைவாக மார்ட்டினை டொமினிக்கன் சபையின் மூன்றாம் நிலை துறவற பிரமாணங்களை ஏற்க வைக்க முடிவெடுத்தார்.

24 வயதான மார்ட்டின், கி.பி. 1603ம் ஆண்டு, டொமினிக்கன் சபை பொது நிலை சகோதரராக பிரமாணங்களை ஏற்றார். ஆனால், தமது தந்தையின் தலையீடினால்தான் தமது அந்தஸ்து உயர்கிறதோ எனும் ஐயம் காரணமாக, இவர் பலமுறை இதனை மறுத்து வந்திருக்கிறார். அத்துடன், இதன் காரணமாகவே அவர் ஒரு குருத்துவ அருட்பொழிவை இறுதிவரை மறுத்துவந்தார்.

அவரது பள்ளி கடனில் மூழ்கும்போதெல்லாம், அங்குள்ள துறவியரிடம், “நான் ஒரு தரித்திரம் பீடித்த “முலெட்டோ” (Mulatto) (நீக்ரோவுக்கும் வெள்ளையருக்கும் பிறந்தவர்), என்னை விற்றுவிடுங்கள்” என்று கெஞ்சுவார்.

மார்ட்டின், அர்ச்சிஸ்ட்ட நற்கருணையின்பால் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். ஒருநாளிரவு, திருப்பலி பீடத்தின் படியின்மீது முழங்கால்படியிட்டு நற்கருணையின் முன்னர் செபித்துக்கொண்டிருந்தவேளை, அவர் நின்றிருந்த படிக்கட்டில் தீ பற்றிக்கொண்டது. தீயினால் ஏற்பட்ட அத்துணை குழப்பத்திலும் சந்ததியிலும், தம்மைச் சுற்றி நடப்பவற்றை அறியாதவராக தாம் இருந்த இடத்திலேயே இருந்தார்.

34 வயதான மார்டின், பொதுநிலை சகோதரருக்கான துறவற சீருடைகள் கொடுக்கப்பட்டதும், நோயுற்றவர்களுக்கு சேவை செய்யும் மருந்தகத்தின் கண்காணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டார். சுமார் இருபத்தைந்து வருடங்கள், இவர் இறக்கும்வரை இச்சுகாதார மையத்திலேயே இருந்தார். நோயாளிகளுக்கு சேவையாற்றுவதில் அக்கறை கொண்டிருந்தார். நோயாளிகளின் தேவையுணர்ந்து அவர்களுக்கு சேவை செய்யும் கடின பணிக்குத் தேவையான நல்லொழுக்கமும் பொறுமையும் அவரிடமிருந்ததை அவருடைய மேலதிகாரிகள் கவனித்தனர். பள்ளிக்கு வெளியே இருந்து அழைத்துவரப்படும் நோயாளிகளையும் கவனித்தார். அவர்களை குணப்படுத்தினார். ஒரு குடுவை தண்ணீர் மூலம் அவர் நோயாளிகளை குணப்படுத்தினார். வேறுபாடுகளேயில்லாமல் ஸ்பேனிஷ் பிரபுக்களுக்கும், அண்மையில் ஆபிரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட அடிமைகளுக்கும் மருத்துவ சேவை புரிந்தார். ஒருநாள், உடல் முழுதும் புண்ணான, ஏறக்குறைய நிர்வாண நிலையிலிருந்த ஒரு பிச்சைக்காரன் தமது இரு கைகளையும் நீட்டினார். மார்டின் அவரை உடனே தமது படுக்கைக்கு கொண்டு சென்றார். இதனைக் கண்ட இவரது சகாவான ஒரு சகோதரர் மார்டினை கடிந்துகொண்டார். அவருக்கு பதிலளித்த மார்டின், “என் அன்பு சகோதரா, இரக்கமே தூய்மைக்குத் தகுதியானது” என்றார்.

அக்காலத்தில், ஒருமுறை லிமா நகரில் தொற்று நோய் பரவியதால் இவரின் பணி மிகவும் கடுமையாக இருந்தது. செபமாலை பள்ளியின் மடத்தில் சுமார் அறுபது துறவியர் இருந்தனர். அனைவரும் நோய்வாய்ப்பட்டிருந்தனர். துரதிர்ஷ்டவசமாக, அவர்களிருந்த அறைகள் மூடி பூட்டப்பட்டிருந்தன. வெளியே வர இயலாத அவர்களுக்கு எவராலும் மருத்துவம் பார்க்க இயலவில்லை. ஆனால், மார்டினோ, பூட்டியிருந்த கதவுகளை ஊடுருவிச் சென்று நோயுற்ற துறவியருக்கு மருத்துவம் செய்தார். இதுபோல் பலமுறை அதிசயங்கள் நிகழ்த்தியதாக கூறப்படுகிறது.

புலால் உணவைத் தவிர்த்த மார்டின், பள்ளி நிர்வாகம் தர இயலாதவற்றை வாங்குவதற்காக தர்மம் (பிச்சை) எடுத்து வாங்கி வருவார். சாதரணமாக, தாம் பிச்சை எடுத்து வரும் பொருட்களைக் கொண்டு, தினமும் சுமார் 160 பேருக்கு உணவு வழங்குவார். குறிப்பிட்ட ஒரு சிறு தொகையை ஏழை மக்களுக்கும் வழங்குவார். அவரது தினசரி பணிகளான சமையலறைப் பணிகள், சலவைப் பணிகள், மற்றும் மருத்துவமனைப் பணிகளுடன், அவரை உயரே காற்றில் தூக்கிய பரவச அனுபவங்கள், அவர் செபிக்கும் அறையை நிரப்பிய வெளிச்சம், ஒரே சமயத்தில் இரண்டு இடங்களில் அதிசயங்கள் நிகழ்த்துவது, உடனடி குணப்படுத்துதல், மிருகங்களுடனான பரஸ்பர ஒத்துணர்வு ஆகியவற்றுடன் அவரது வாழ்க்கை ஒரு அசாதாரண பரிசாக விளங்கியது. கைவிடப்பட்ட சிறுவர்களுக்காகவும், அனாதைகளுக்காகவும் லிமா நகரில் ஒரு இல்லத்தை நிறுவினார்.

இறப்பும் புனிதர் பட்டமளிப்பும்:
இவர், டொமினிக்கன் பொதுநிலையினரும், புனிதர்களுமான "புனிதர் ரோஸ்” (St. Rose of Lima), மற்றும் புனிதர் “ஜுவான் மசியாஸ்” (St. Juan Macías) ஆகியோரின் நண்பராவார். இவர் லிமாவில் கி.பி. 1639ம் ஆண்டு, நவம்பர் மாதம், 3ம் நாள் இறந்தார். இவருக்கு இறுதி வணக்கம் செலுத்த இவரின் உடல் மக்களுக்காக வைக்கப்பட்டு இவர் இருந்த மடத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது. இவரால் பல புதுமைகள் நிகழ்ந்ததாகக் கூறப்பட்டதால், இவரின் புனிதர் பட்ட நடவடிக்கைகள் இவர் இறந்து 25 ஆண்டுகளுக்கு பிறகு துவங்கப்பட்டது. இவருக்கு கி.பி. 1837ல் திருத்தந்தை ஆறாம் கிரகோரியால் அருளாளர் பட்டமும், 1962ம் ஆண்டு, மே மாதம், ஆறாம் தேதி, திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவானால் புனிதர் பட்டமும் அளிக்கப்பட்டது.

இவரது நினைவுத் திருவிழா, நவம்பர் மாதம், 3ம் நாள் ஆகும்.

நன்றி : திரு.புஷ்பராஜா


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...