Thursday, November 3, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (04-11-2022)

 

பொதுக்காலம் 31ஆம் வாரம் - வெள்ளி

முதல் வாசகம்



மீட்பராம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வருவாரெனக் காத்திருக்கிறோம்.

திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 17- 4: 1

சகோதரர் சகோதரிகளே,

நீங்கள் அனைவரும் என்னைப் போல் வாழுங்கள். நாங்கள் உங்களுக்குக் காட்டிய முன்மாதிரியின்படி வாழ்பவர்களைப் பின்பற்றுங்கள். கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைவர்களாய் நடப்போர் பலர் உள்ளனர். அவர்களைப் பற்றி மீண்டும் மீண்டும் உங்களிடம் கூறியுள்ளேன். இப்பொழுதும் கண்ணீரோடு சொல்கிறேன். அழிவே அவர்கள் முடிவு; வயிறே அவர்கள் தெய்வம்; மானக்கேடே அவர்கள் பெருமை; அவர்கள் எண்ணுவதெல்லாம் மண்ணுலகைச் சார்ந்தவை பற்றியே.

நமக்கோ விண்ணகமே தாய்நாடு; அங்கிருந்துதான் மீட்பராம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வருவாரெனக் காத்திருக்கிறோம். அவர் தமது ஆற்றலால் தாழ்வுக்குரிய நம் உடலை மாட்சிக்குரிய தமது உடலின் சாயலாக உருமாற்றவும் அனைத்தையும் தமக்குப் பணியவைக்கவும் வல்லவர்.

ஆகவே என் அன்பார்ந்த சகோதரர் சகோதரிகளே, என் வாஞ்சைக்கு உரியவர்களே, நீங்களே என் மகிழ்ச்சி; நீங்களே, என் வெற்றி வாகை; அன்பர்களே, ஆண்டவரோடுள்ள உறவில் நிலைத்திருங்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்



திபா 122: 1-2. 4-5 (பல்லவி: 1)

பல்லவி: அகமகிழ்வோடு ஆண்டவரின் இல்லத்திற்குப் போவோம்.

1
“ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்” என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன்.
2
எருசலேமே! இதோ, நாங்கள் அடியெடுத்து வைத்து உன் வாயில்களில் நிற்கின்றோம். - பல்லவி
4    ஆண்டவரின் திருக்குலத்தார் ஆங்கே செல்கின்றனர்; இஸ்ரயேல்     மக்களுக்கு இட்ட கட்டளைகளுக்கிணங்க ஆண்டவரது பெயருக்கு அவர்கள் நன்றி செலுத்தச் செல்வார்கள்.
5
அங்கே நீதி வழங்க அரியணைகள் இருக்கின்றன. அவை தாவீது வீட்டாரின் அரியணைகள். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

1 யோவா 2: 5

அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்துவின் வார்த்தையைக் கடைப்பிடிப்போரிடம் கடவுளின் அன்பு உண்மையாகவே நிறைவடைகிறது; நாம் அவரோடு இணைந்திருக்கிறோம் என அதனால் அறிந்து கொள்ளலாம். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்


ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் முன்மதியுள்ளவர்களாய் நடந்து கொள்ளுகிறார்கள்.

 லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 1-8

அக்காலத்தில்

இயேசு தம் சீடருக்குக் கூறியது: “செல்வர் ஒருவருக்கு வீட்டுப் பொறுப்பாளர் ஒருவர் இருந்தார். அவர் தம் தலைவரின் உடைமைகளைப் பாழாக்கியதாக அவர்மீது பழி சுமத்தப்பட்டது.

தலைவர் அவரைக் கூப்பிட்டு, ‘உம்மைப் பற்றி நான் கேள்விப்படுவது என்ன? உம் பொறுப்பிலுள்ள கணக்கை ஒப்படையும். நீர் இனி வீட்டுப் பொறுப்பாளராய் இருக்க முடியாது’ என்று அவரிடம் கூறினார்.

அந்த வீட்டுப் பொறுப்பாளர், ‘நான் என்ன செய்வேன்? வீட்டுப் பொறுப்பிலிருந்து என் தலைவர் என்னை நீக்கிவிடப்போகிறாரே! மண் வெட்டவோ என்னால் இயலாது; இரந்து உண்ணவும் வெட்கமாய் இருக்கிறது. வீட்டுப் பொறுப்பிலிருந்து என்னை நீக்கிவிடும்போது பிறர் என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்ளும்படி நான் என்ன செய்ய வேண்டும் என எனக்குத் தெரியும்’ என்று அவர் தமக்குள்ளே சொல்லிக் கொண்டார்.

பின்பு அவர் தம் தலைவரிடம் கடன்பட்டவர்களை ஒவ்வொருவராக வரவழைத்தார். முதலாவது வந்தவரிடம், ‘நீர் என் தலைவரிடம் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?’ என்று கேட்டார். அதற்கு அவர், ‘நூறு குடம் எண்ணெய்’ என்றார். வீட்டுப் பொறுப்பாளர் அவரிடம், ‘இதோ உம் கடன் சீட்டு; உட்கார்ந்து ஐம்பது என்று உடனே எழுதும்’ என்றார். பின்பு அடுத்தவரிடம், ‘நீர் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?’ என்று கேட்டார். அதற்கு அவர், ‘நூறு மூடை கோதுமை’ என்றார். அவர், ‘இதோ, உம் கடன் சீட்டு; எண்பது என்று எழுதும்’ என்றார்.

நேர்மையற்ற அந்த வீட்டுப் பொறுப்பாளர் முன்மதியோடு செயல் பட்டதால், தலைவர் அவரைப் பாராட்டினார். ஏனெனில், ஒளியின் மக்களை விட இவ்வுலகின் மக்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில் மிக்க முன்மதியுள்ளவர்களாய் நடந்து கொள்ளுகிறார்கள்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.



முன்மாதிரியாக வாழ்வோமா?

பிறருக்கு முன்மாதிரியாய் வாழ்வது என்பது மிக எளிமையான காரியமல்ல. அவ்வாறு வாழ்வதற்கு நாம் சொல்பவற்றையும் பிறர் எவ்வாறு இருக்க வேண்டுமென்று நாம் விரும்புகிறோமோ அவ்வாறே வாழ்பவர்களாகவும் நாம் இருக்க வேண்டும். இன்றைய முதல்வாசகத்தில் நம்மை பிறருக்கு முன்மாதிரியாக வாழ அழைக்கிறார் புனித பவுல். அதுவும் தன்னைச் சுட்டிக் காட்டி என்னைப்போல் வாழுங்கள் என்று கூறுகிறார்.

ஒரு இளைஞனும் முதியவரும் பேசிக்கொண்டிருந்தார்கள்.அப்போது முதியவர் இளைஞனை நோக்கி இக்கால இளைஞர்கள் தவறான பாதையில் தங்கள் வாழ்வை அமைத்துக்கொள்வதாக குற்றம்சாட்டினார்.மேலும் அவர்களுக்கு யாரைப் பின்பற்றுவது எனத் தேர்ந்தெடுக்கத் தெரியவில்லை என்றும் வாதிட்டார். அதற்கு காரணம் முதியவர்கள் தங்களுக்கு சிறந்த முன்மாதிரிகளாய் இல்லாததே என்று பதிவுசெய்தார் அந்த இளைஞர்.அதைக்கேட்ட அம்முதியவர் "நீங்கள் ஏன் முன்மாதிரிகளைத் தேடுகிறீர்கள். நீங்களே முன்மாதிரிகளாய் வாழ முயலுங்கள் "என்றார். இவ்வார்த்தைகள் இளைஞனின் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

இயேசு நமக்குச் சிறந்த முன்மாதிரி. அவர் இறைவனோடு இணைந்திருக்கச் சொன்னார்.அவர் இறைவேண்டலில் நிலைத்திருந்தார். பாவம் செய்யாதிருக்கச் சொன்னார்.அவர் சோதனைக்கு உட்பட்டாலும் அதை வென்று காட்டினார்.பாவிகளை மன்னிக்கவும் அன்பு செய்யவும் சொன்ன அவர் சிலுவை மரணத்தின் பிடியிலும் பாவிகளை மன்னித்து அன்பு செய்தார். இன்னும் எத்தனையோ  வழிமுறைகளில் தான் போதித்தவற்றை வாழ்ந்து காட்டினார். அதனால் தான் அவரை மக்கள் கூட்டம் பின் தொடர்ந்தது. 

இயேசுவை முழுமையாகப் பின்பற்றி வாழ்ந்ததால் புனித பவுலும் என்னைப் பின்பற்றுங்கள் எனப் பெருமிதத்தோடு சொல்ல இயன்றது. 

இன்று நாம் தேடும் முன்மாதிரிகள் யார்?

நம்மில் எத்தனை பேர் மற்றவருக்கு முன்மாதிரிகளாய் இருக்கிறோம்?இயேசுவையும் அவரைப் பின்பற்றி வாழ்ந்தவர்களையும் நம் வாழ்வின் எடுத்துக்காட்டாகக் கொள்கின்றோமா? போன்ற இக்கேள்விகளை நமக்கு நாமே கேட்டுப்பார்த்து நம் வாழ்வை நெறிப்படுத்த வேண்டும். அவ்வாறு நெறிப்படுத்தும் போது ஆண்டவரோடுள்ள உறவில் நம்மால் நிலைத்திருக்க முடியும்.

மேலும் இன்றைய நற்செய்தி நம்மை முன்மதியுடையவராக வாழ அழைக்கிறது. முன்மதி தூய ஆவியார் நமக்கு அருளும் உன்னத கொடை. முன்மதியோடு நாம் வாழும் போது பல இடையூறுகளிடமிருந்து நம்மை நாமே காத்துக் கொள்ள முடியும். முன்மதி நம்முடைய ஆளுமையை வளர்த்து நம்மை மற்றவருக்கு முன்மாதிரியாகவும் திகழச்செய்யும். எனவே முன்மதியுடைய முன்மாதிரிகளாக வாழ முயற்சிப்போம்.அதற்கான அருளை கடவுளிடம் வேண்டுவோம்.

 இறைவேண்டல்

அன்பு இறைவா! உமது திருமகனை எங்கள் வாழ்வின் முன்மாதிரியாகப் பின்பற்றி, முன்மதியுடையவர்களாய் வாழ அருள் தாரும். இதனால் நாங்கள் எடுத்துக்காட்டான வாழ்வு வாழ்ந்து பிறருக்கு முன்மாதிரிகளாய்த் திகழ்வோமாக. ஆமென்.


அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


† இன்றைய புனிதர் †
✠ புனிதர் சார்லஸ் பொரோமியோ ✠
(St. Charles Borromeo)


கர்தினால், மிலன் பேராயர்:
(Cardinal, Archbishop of Milan)

பிறப்பு: அக்டோபர் 2, 1538
அரோனா கோட்டை, மிலன் ஜமீன்
(Castle of Arona, Duchy of Milan)

இறப்பு: நவம்பர் 3, 1584 (வயது 46)
மிலன்
(Milan)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம்: மே 12, 1602
திருத்தந்தை எட்டாம் கிளமென்ட்
(Pope Clement VIII)

புனிதர் பட்டம்: நவம்பர் 1, 1610
திருத்தந்தை ஐந்தாம் பவுல்
(Pope Paul V)

நினைவுத் திருவிழா: நவம்பர் 4

பாதுகாவல்:
வயிற்றுப் புணால் அவதியுறுவோர்; ஆப்பிள் தோட்டம்; ஆயர்கள்; திருமுழுக்கு பெற ஆயத்தம் செய்வோரும் அவர்களுக்கு கற்பிப்போரும்; குடல் கோளாறுகள்; லம்பார்தி, இத்தாலி; மான்டெர்ரே, கலிபோர்னியா; குருமட மாணாவர்கள்; ஆன்மீக வழிகாட்டிகள்; ஆன்மீக தலைவர்கள்.

“கௌன்ட் கர்லோ பொரோமியோ டி அரோனா” (Count Carlo Borromeo di Arona) எனும் இயற்பெயர் கொண்ட புனிதர் சார்லஸ் பொரோமியோ, மிலன் உயர்மறைமாவட்டத்தின் கர்தினால்-பேராயராக கி.பி. 1564ம் ஆண்டு முதல், 1584ம் ஆண்டு வரை பதவியில் இருந்தவர் ஆவார். புனிதர்கள் லொயோலா இஞ்ஞாசி, மற்றும் பிலிப்பு நேரி ஆகியோர் போன்று, இவரும் கத்தோலிக்க மறுமலர்ச்சியில் பெரும் பங்கு வகித்தவர் ஆவார். கத்தோலிக்க திருச்சபையினை சீர்திருத்தி, புத்துயிர் அளிக்கும் விதமாக இவர் பல காரியங்களைச் செய்தார். குறிப்பாக குருத்துவத்துக்கான பயிற்சி மடங்கள் பலவற்றை இவர் துவங்கினார். இவர், கத்தோலிக்க திருச்சபையில் புனிதர் என ஏற்கப்படுகின்றார்.

வாழ்க்கை சுருக்கம் :
இத்தாலியின் வடமேற்கிலுள்ள “லொம்பார்டி” (Lombardy) பிராந்தியத்தின் மிகவும் பழமையான செல்வந்தர்களான “பொரோமியோ பிரபுக்கள்” (Borromeo Noble family) குடும்பத்தைச் சேர்ந்த இவரது தந்தை, “அரோனா” (Count of Arona) எனும் நகரின் பிரபுவான “கில்பர்ட்” (Gilbert) ஆவார். இவரது தாயாரான “மார்கரெட்” (Margaret) பிரபுக்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். சார்லஸ், தமது பெற்றோரின் ஆறு குழந்தைகளில் மூன்றாவதாகப் பிறந்தவர் ஆவார்.

தனது 12ம் வயதில், மடத்தில் சேர்ந்து தனது 25ம் வயதில் குருத்துவத் அருட்பொழிவு பெற்றார். “பவியா பல்கலையில்” (University of Pavia) குடிமைச் சட்டவியல் மற்றும் திருச்சபைச் சட்டவியல் ஆகியவற்றைக் கற்று, கி.பி. 1559ம் ஆண்டும் டிசம்பர் மாதம், 6ம் நாள், முனைவர் பட்டம் பெற்றார்.

இவரது தாயாரின் சகோதரரான (தாய்மாமன்) கர்தினால் “ஜியோவன்னி ஆஞ்செலோ மெடிசி” (Giovanni Angelo Medici) 1559ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 25ம் நாள் திருத்தந்தையாகப் தேர்வுபெற்று, “நான்காம் பயஸ்” (Pope Pius IV) எனும் பெயரை ஏற்றார். புதிதாய் பதவியேற்ற திருத்தந்தை நான்காம் பயஸ், தமது மருமகனான சார்லசை ரோம் நகர் வரவழைத்து, கி.பி. 1560ம் வருடம், ஜனவரி மாதம், 13ம் நாளன்று, “ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் பீடாதிபதிகளின் கல்லூரியின் உயர் பதவி உறுப்பினராக” (Protonotary Apostolic) நியமித்தார். அதன் பின்னர், பதினெட்டே நாள் கழித்து, அவர் இவரை கர்தினாலாகவும், மிலன் நகரின் பேராயராகவும் உயர்த்தினார். திருச்சபையை ஆள்வதில் திருத்தந்தைக்கு இவர் பேருதவியாய் இருந்தார். ரோம் நகரில் இருந்துகொண்டு திருச்சபைக்காக பணியாற்றினார். திருத்தந்தையர் மாநிலங்களின் அரசாங்கத்திலும் (Government of the Papal States) அதிகாரம் பெற்றிருந்த இவர், “ஃபிரான்சிஸ்கன்” (Franciscans) சபையினர், “கார்மேல் சபையின்” (Carmelites) ஆண் மற்றும் பெண் துறவியர், மற்றும் “தூய ஜான் இறையாண்மை மருத்துவ சேவை சபையினர்” (Knights of Malta) ஆகியோரின் மேற்பார்வையாளராகவும் இருந்தார்.

கி.பி. 1562-63ம் ஆண்டு காலத்தில் நடந்த “டிரன்ட் சங்கத்தின்” (Council of Trent) மூன்றாம் மற்றும் கடைசி அமர்வுகளை சார்லஸ் பொரோமியோ ஏற்பாடு செய்தார். அந்த சங்கத்தின் தீர்மானங்களை தமது மறைமாவட்டத்தில் நடைமுறைக்கு கொண்டுவந்தார். வடக்கு இத்தாலியிலுள்ள தென்மேற்கு பிராந்தியமான “லொம்பார்டியிலுள்ள” (Lombardy) “பவியா” (Pavia) எனுமிடத்தில் ஒரு கல்லூரியை நிறுவி, அதனை “தூய ஜஸ்டினா” (St. Justina of Padua) எனும் பெயரில் அர்ப்பணித்தார். இக்கல்லூரி, தற்போது “அல்மோ கொலேஜியோ பொரோமியோ” (Almo Collegio Borromeo) என்றழைக்கப்படுகின்றது.

கி.பி. 1566ம் ஆண்டு, திருத்தந்தை நான்காம் பயஸின் மரணத்தின் பின்னர், திருத்தந்தை ஐந்தாம் பயஸின் அனுமதியுடன் இவர் மிலன் நகருக்கு ஆயராக நியமிக்கப்பட்டு பணியாற்றச் சென்றார். தமது மறைமாவட்டத்தை இவர் சீர்திருத்த தொடங்கினார். இவர் செய்த முயற்சிகளால் திருச்சபை செழித்து ஓங்கியது. திருச்சபைக்கு இவர் பல நன்மைகள் செய்தார்.

நாட்டில் கொள்ளைநோய் பரவியபோது, இவர் தம் மக்களின் பாவங்களுக்காக கடவுள் மக்களைத் தண்டிக்கிறார் என்று நம்பி தம்மையே பலிபொருளாக கடவுளுக்கு ஒப்புக்கொடுத்தார். தவ ஊர்வலத்தின்போது தெருக்களில் வெறும் காலுடன் நடந்தார். தோளில் ஒரு சிலுவையை தூக்கிச் சென்றார். கழுத்தில் ஒரு கயிற்றை கட்டிக்கொள்வார்.

கல்லூரிகளும் குருமடங்களும் கட்டுவித்து அங்கு குருக்களுக்கு உதவியாக இருக்கும்படி சிறந்த நூல் நிலையம் ஒன்று ஏற்படுத்தினார். கொள்ளை நோய் காலத்தில் நோயாளிகளுடனும் மரண தருவாயில் இருந்தவர்களுடனும் தங்கி அவர்களுக்கு பேருதவி செய்யும்படி தமது உடைமைகளைக் கொடுத்தார்.

கி.பி. 1584ம் ஆண்டு, “மொண்டே வரல்லோ” (Monte Varallo) எனுமிடத்தில், தமது ஆண்டு தியானத்தின்போது, இடைவிடாத காய்ச்சல் மற்றும் மூப்படைதல் நோய்களில் வீழ்ந்த சார்லஸ் பொரோமியோ, மிலன் திரும்புகையில் இவரது நோய் வேகமாகவும் மோசமாகவும் அதிகரித்தது. இறுதி அருட்சாதனங்களைப் பெற்ற இவர், நவம்பர் நான்காம் தேதி, தமது 46 வயதில் அமைதியாக மரித்தார்.

நன்றி : திரு.புஷ்பராஜா


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...