Friday, November 4, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (05-11-2022)

 

பொதுக்காலம் 31ஆம் வாரம் - சனி

முதல் வாசகம்



எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைகொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு.

திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 10-19

சகோதரர் சகோதரிகளே,

என்னைப் பற்றிய அக்கறை இப்பொழுதாவது மீண்டும் உங்களிடையே எழுந்தது கண்டு ஆண்டவர் அருளால் நான் பெரிதும் மகிழ்கிறேன். நீங்கள் என்னைப் பற்றி அக்கறை கொண்டிருந்தீர்கள் என்பது உண்மைதான். ஆனால் அதைக் காட்டிக்கொள்ளும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கவில்லை. எனக்கு ஏதோ குறைவாய் இருப்பதால் இவ்வாறு சொல்கிறேன் என நினைக்க வேண்டாம். ஏனெனில் எந்நிலையிலும் மனநிறைவோடு இருக்கக் கற்றுக்கொண்டுள்ளேன்.

எனக்கு வறுமையிலும் வாழத் தெரியும்; வளமையிலும் வாழத் தெரியும். வயிறார உண்ணவோ, பட்டினி கிடக்கவோ, நிறைவோ குறைவோ எதிலும் எந்தச் சூழலிலும் வாழப் பயிற்சி பெற்றிருக்கிறேன். எனக்கு வலுவூட்டுகிறவரின் துணை கொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு. ஆயினும் நான் பட்ட துன்பத்தில் நீங்கள் பங்கு கொண்டது உங்கள் நன்மனத்தைக் காட்டுகிறது.

பிலிப்பியர்களே, நான் நற்செய்தியை அறிவிக்கத் தொடங்கின காலத்தில், மாசிதோனியாவை விட்டுச் சென்றபிறகு, உங்களைத் தவிர வேறெந்தத் திருச்சபையும் என் வரவு செலவில் பங்கேற்கவில்லை. இதை நீங்களும் அறிவீர்கள். ஏனெனில் நான் தெசலோனிக்காவில் இருந்தபோது கூட என் தேவையை நிறைவு செய்ய ஒரு முறை மட்டுமல்ல, இரு முறை உதவி அனுப்பினீர்கள். நான் உங்கள் நன்கொடைகளை நாடவில்லை; மாறாக, உங்கள் கணக்கில் நற்பயன்கள் பெருகவேண்டும் என்றே விரும்புகிறேன். நீங்கள் அனுப்பியதெல்லாம் பெற்றுக்கொண்டேன். இப்பொழுது என்னிடம் நிறையவே இருக்கிறது. நீங்கள் அனுப்பியவற்றை எப்பப்பிராதித்துவிடமிருந்து பெற்றுக்கொண்டு நிறைவுற்றிருக்கிறேன். அவை நறுமணம் வீசும் காணிக்கையும் கடவுளுக்கு ஏற்புடைய, உகந்த பலியும் ஆகும்.

என் கடவுள், கிறிஸ்து இயேசுவின் வழியாய்த் தம் ஒப்பற்ற செல்வத்தைக் கொண்டு, உங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்வார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்



திபா 112: 1-2. 5-6. 8ab,9 (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்.

அல்லது: அல்லேலூயா.

1
ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்; அவர்தம் கட்டளைகளில் அவர்கள் பெருமகிழ்வு அடைவர்.
2
அவர்களது வழிமரபு பூவுலகில் வலிமைமிக்கதாய் இருக்கும்; நேர்மையுள்ளோரின் தலைமுறை ஆசிபெறும். - பல்லவி

5
மனமிரங்கிக் கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்; அவர்கள் தம் அலுவல்களில் நீதியுடன் செயல்படுவர்.
6
எந்நாளும் அவர்கள் அசைவுறார்; நேர்மையுள்ளோர் மக்கள் மனத்தில் என்றும் வாழ்வர். - பல்லவி

8ab
அவர்கள் நெஞ்சம் நிலையாய் இருக்கும்; அவர்களை அச்சம் மேற்கொள்ளாது.
9
அவர்கள் வாரி வழங்கினர்; ஏழைகளுக்கு ஈந்தனர்; அவர்களது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்; அவர்களது வலிமை மாட்சியுடன் மேலோங்கும். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

2 கொரி 8: 9

அல்லேலூயா, அல்லேலூயா! நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து செல்வராயிருந்தும் அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு உங்களுக்காக ஏழையானார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்



யார் உங்களை நம்பி உண்மைச் செல்வத்தை ஒப்படைப்பார்?

 லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 9-15

அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “நான் உங்களுக்குச் சொல்கிறேன்: நேர்மையற்ற செல்வத்தைக் கொண்டு உங்களுக்கு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள். அது தீரும்பொழுது அவர்கள் உங்களை நிலையான உறைவிடங்களில் ஏற்றுக்கொள்வார்கள். மிகச் சிறியவற்றில் நம்பத் தகுந்தவர் பெரியவற்றிலும் நம்பத் தகுந்தவராய் இருப்பார். மிகச் சிறியவற்றில் நேர்மையற்றவர் பெரியவற்றிலும் நேர்மையற்றவராய் இருப்பார். நேர்மையற்ற செல்வத்தைக் கையாளுவதில் நீங்கள் நம்பத்தகாதவராய் இருந்தால் யார் உங்களை நம்பி உண்மைச் செல்வத்தை ஒப்படைப்பார்? பிறருக்கு உரியவற்றைக் கையாளுவதில் நீங்கள் நம்பத்தகாதவர்களாய்ப் போனால் உங்களுக்கு உரியவற்றை உங்களுக்குக் கொடுப்பவர் யார்?

எந்த வீட்டு வேலையாளும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது; ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்துகொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது."

பண ஆசைமிக்க பரிசேயர் இவற்றையெல்லாம் கேட்டு இயேசுவை ஏளனம் செய்தனர். அவர் அவர்களிடம் கூறியது: “நீங்கள் உங்களை மக்கள்முன் நேர்மையாளராகக் காட்டிக்கொள்கிறீர்கள். கடவுள் உங்கள் உள்ளங்களை அறிவார். நீங்கள் உங்களை மக்கள்முன் உயர்ந்தவர்களாகக் காட்டிக்கொள்வது கடவுள் பார்வையில் அருவருப்பாகும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.



நேர்மையும் மனநிறைவும்!

செல்வந்தர் ஒருவரின் வீட்டில்  கணக்காளராக ஒருவர் பணிசெய்து வந்தார்.பல வருடங்களாக அங்கே வேலைசெய்தாலும் அவருடைய வாழ்வில் மிகப்பெரிய முன்னேற்றம் இல்லை.வாடகை வீட்டில் தான் வசித்தார்.எளிமையாக வாழ்ந்தார்.தேவையற்ற ஆடம்பரங்களைத் தவிர்த்து சிக்கனமாகவும் தன் வருமானத்தை செலவிட்டார். தன்னுடைய மனைவியோ பிள்ளைகளோ மனநிறைவு இன்றி குறைகூறும் போது அதை அவர் சட்டை செய்வதில்லை.மாறாக தம்மை விட வாழ்வில் சிரமப்படும் எளியவர்களை நினைத்து ஆறுதல் அடைந்து கொள்வார். எத்தனையோ பேர் "இவன் பிழைக்கத் தெரியாதவன்."என்று கூறுவர். பலர்  ஆசைவார்த்தைகள் கூறி தவறாக வழிநடத்தவும் செய்வர். ஆயினும் தன்னுடைய நேர்மையைக் கைவிடவில்லை.பணம் சம்பாதிக்கவில்லை என்றாலும் நேர்மையாளர், நம்பிக்கைக்குரியவர் என்ற பெயரை சம்பாதித்தார்.


நேர்மையாளராக இருக்க இன்றைய நற்செய்தியின் வழியாக நாம் அழைக்கப்படுகிறோம்.

"மிகச் சிறியவற்றில் நம்பத்வகுந்தவர் பெரியவற்றிலும் நம்பத்தகுந்தவராய் இருப்பார். மிகச் சிறியவற்றில் நேர்மையற்றவர் பெரியவற்றிலும் நேர்மையற்றவராய் இருப்பார்."என்று இயேசு இன்றைய நற்செய்தியில் கூறுவது நம் எல்லாருடைய வாழ்வையும் அலசிப்பார்க்க நம்மை அழைக்கிறது.நாம் எல்லாருமே ஏதாவது ஒருகாரியத்திற்கு பொறுப்பாளராக இருக்கிறோம். நமக்கென்று சில வேலைகள் தரப்பட்டுள்ளன்.  "இவரிடம் இப்பணியைக் கொடுத்தால் இவர் அதை நிச்சயம் சிறப்பாகச் செய்வார்"என்ற நம்பிக்கையுடன் தான் பலவேளைகளில் நாம் பொறுப்புகளில் அமர்த்தப்படுகிறோம்.ஆனால் அதை நாம் உணர்கிறோமா ? 


பல சமயங்களில் நம் கடமைகளை நிறைவேற்ற நாம் போதிய ஆர்வம் காட்டுவதில்லை. சரியான திட்டங்கள் தீட்டுவதில்லை. காலத்தை வீணாக விரயம் செய்துவிட்டு இறிதியில் ஏனோதானோவென்று கடமைக்காக பணிகளைச் செய்வதும் உண்டு. இவையெல்லாம் நேர்மையற்ற மனநிலைக்கு எடுத்துக்காட்டுகள்.

சின்னச் சின்னப் பொறுப்புகளைக் கூட சிறப்பாகச் செய்யும் போது நம்முடைய நம்பகத் தன்மையையும் நேர்மையையும் கண்டு பெரிய காரியங்கள்  நம்மைத் தேடி வந்து பெருமைப்படுத்தும்.

ஆம் அன்பு சகோதர சகோதரிகளே இத்தகைய பொறுப்புள்ள நம்பத்தகுந்த நேர்மையான பணியாளர்களாக வாழவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.இறையாட்சியைக் கட்டியெழுப்பவும் இறை இயேசிவின் இரண்டாம் வருகையை எதிர்கொள்ளவும் இப்பண்பு நமக்கு மிக மிக அவசியமாகிறது.


இத்தகைய நேர்மையான பணியாளராய் விளங்க நாம் கொண்டிருக்க வேண்டிய முக்கியமான பண்பு "மன நிறைவு".மனநிறைவு என்பது அனைத்தையும் கடவுளின் கொடையாக ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு பண்பு. இருப்பது போதும் என்ற உணர்வு பேராசையிலிருந்தும் பிறரோடு நம்மைத் தாழ்வாக ஒப்பிட்டுப் பார்க்கும் குணத்திலிருந்தும் பாதுகாக்கிறது.நம் தேவைகளைப் பெற்றுக்கொள்ளும் போது நன்றி உணர்வையும் வளர்கிறது.  இதையே நம் ஆன்றோர்கள் "போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து" என்று கூறுவர். புனித பவுல் "எனக்கு வறுமையிலும் வாழத்தெரியும். வளமையிலும் வாழத்தெரியும்" என்ற வார்த்தைகளால் மனநிறைவு என்ற சிறந்த பண்பு தன்னகத்தே உள்ளதை நீரூபிக்கிறார்.இந்த உயரிய பண்பு நலன் நம்மை குறுக்கு வழியில் சென்று தேவைகளை நிறைவேற்றலாம் என்ற சிந்தனையிலிருந்து விலக்கி நேர்மையாளராக வாழ ஊக்குவிக்கிறது. மேலும் நேர்மையளராய் வாழ்வது கடவுளின் வல்லமையாலேயே.

எனவே மனநிறைவும் நேர்மையும் கொண்ட சிறந்த பணியாளர்களாய் வாழ முயற்சிப்போம். இறையருள் வேண்டுவோம்.


 இறைவேண்டல்

அன்பு இறைவா! இருப்பதில் மனநிறைவு காணும் மக்களாக எம்மை மாற்றும்.  இதனால் நாங்கள் தேவையற்ற ஆசைகளை விலகக்கி எங்களுக்குக் கொடுக்கப்ட்ட பொறுப்புகளை நேர்மையான உள்ளத்தோடு செய்யும் நல்ல பணியாளர்களாய் வாழ அருள் தாரும். ஆமென்.




† இன்றைய புனிதர் †

(நவம்பர் 5)
✠ அருளாளர் பெர்னார்ட் லிச்டென்பெர்க் ✠
(Blessed Bernhard Lichtenberg)


கத்தோலிக்க குரு, இறையியலாளர் மற்றும் மறைசாட்சி:
(Catholic Priest, Theologian, and Martyr)

பிறப்பு: டிசம்பர் 3, 1875
ஓலாவ், புருஸ்ஸியன் சிலேசியா, புருஸ்ஸியா இராச்சியம், ஜெர்மன் பேரரசு
(Ohlau, Prussian Silesia, Kingdom of Prussia, German Empire)

இறப்பு: நவம்பர் 5, 1943 (வயது 67)
பெர்லினிலிருந்து ஜெர்மனியின் டச்சாவ் வதை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டபோது
(While being transported from Berlin to Dachau concentration camp, Germany)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை (ஜெர்மனி)
(Roman Catholic Church (Germany)

முக்திப்பேறு பட்டம்: ஜூன் 23, 1996
திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்
(Pope John Paul II)

முக்கிய திருத்தலம்:
செயின்ட் ஹெட்விக் கதீட்ரல், பெர்லின், ஜெர்மனி
(St. Hedwig's Cathedral, Berlin, Germany)

நினைவுத் திருவிழா: நவம்பர் 5

அருளாளர் பெர்னார்ட் லிச்டென்பெர்க், ஒரு கத்தோலிக்க குருவும், இறையியலாளரும், மற்றும் மறைசாட்சியுமாவார். கத்தோலிக்க திருச்சபையினால் முக்திப்பேறு பட்டமளிக்கப்பட்ட இவருக்கு, "நாடுகளிடையே நீதிமான்" (Righteous among the Nations) என்ற பட்டமும் வழங்கப்பட்டுள்ளது. ஜெர்மானிய நாட்டை சர்வாதிகாரியான அடால்ஃப் ஹிட்லரும், அவரது நாஜிக்களும் ஆண்ட காலத்தில், நாஜிக்களால் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டிருந்த இவர் மறைசாட்சியாக மரித்தார்.

"ஜெர்மன் பேரரசின்" (German Empire) "புருஸ்ஸியா இராச்சியத்தின்" (Kingdom of Prussia) "புருஸ்ஸியன் சிலேசியா" (Prussian Silesia) மாநிலத்தின் "ஓலாவ்" (Ohlau) எனுமிடத்தில், கி.பி. 1875ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 3ம் நாளன்று பிறந்த பெர்னார்ட் லிச்டென்பெர்க், மேற்கு ஆஸ்திரியாவின் (Western Austria) "டைரோல்" (Tyrol) மாநிலத்தின் தலைநகரான "இன்ஸ்ப்ரக்" (Innsbruck) நகரில் இறையியல் பயின்ற இவர், கி.பி. 1899ம் ஆண்டு, குருத்துவ அருட்பொழிவு பெற்றார். ஜெர்மனி (Germany) நாட்டின் தலைநகரான பெர்லின் (Berlin) நகரில், கி.பி. 1900ம் ஆண்டு, தமது மறைப்பணியை தொடங்கிய இவர், முதலாம் உலகப்போரின்போது, (World War I) இராணுவ குருவாக (Military Chaplain) சேவையாற்றினார்.

1932ம் ஆண்டில், பெர்லின் ஆயர், (Bishop of Berlin) அவரை புனித ஹெட்விக் கதீட்ரல் மறைப்பணியாளர்களின் கல்லூரியின் (Cathedral Chapter of St. Hedwig) சட்ட நியதியாக நியமித்தார்.

எரிச் மரியா ரெமார்க்ஸின் போர் எதிர்ப்பு திரைப்படமான "ஆல் க்யூட் ஆன் தி வெஸ்டர்ன் ஃப்ரண்ட்" (All Quiet on the Western Front) திரைப்பட பதிப்பைக் காண்பதற்கு கத்தோலிக்கர்களை அவர் ஊக்குவித்தது, ஜோசப் கோயபல்ஸின் (Joseph Goebbels) டெர் ஆங்ரிஃப் ஒரு மோசமான தாக்குதலைத் தூண்டியது. 1933ம் ஆண்டு, ஜெர்மனி நாட்டின் இரகசிய உளவுத்துறை காவல்துறையினர் முதன்முதலாக அவரது இல்லத்தை சோதனையிட்டார்கள்.

மத்திய கட்சியில் (Centre Pary) தீவிர செயல்பாட்டாளராக விளங்கிய இவர், 1935ம் ஆண்டு, ஜெர்மன் (Jerman) அரசியல் மற்றும் இராணுவ தலைவர்களில் ஒருவரும், நாஜிக்களின் முக்கிய பிரமுகருமான "ஹெர்மன் கோரிங்" (Hermann Göring) என்பவரின் முன்னிலையில், நாஜிக்களின் சித்திரவதை முகாம்களின் கொடுமைகளை எதிர்த்து போராடச்சென்றார்.

கதீட்ரலின் புரோவோஸ்ட் என்று பெயரிடப்பட்ட, 1938 ஆம் ஆண்டில், லிச்சன்பெர்க் பேர்லின் எபிஸ்கோபட்டின் நிவாரண அலுவலகத்தின் பொறுப்பில் வைக்கப்பட்டார், இது யூத வம்சாவளியைச் சேர்ந்த பல கத்தோலிக்கர்களுக்கு மூன்றாம் ரைச்சிலிருந்து குடியேற உதவியது. "கதீட்ரலின் புரோவோஸ்ட்" (Provost of the Cathedral) என்ற பதவியிலமர்த்தப்பட்ட இவர், 1938ம் ஆண்டில், எபிஸ்கோபட்டின் நிவாரண அலுவலகத்தின் பொறுப்பில் வைக்கப்பட்டார். இது யூத வம்சாவளியைச் சேர்ந்த பல கத்தோலிக்கர்களை நாஜிக்களின் ஜெர்மனியிலிருந்து புலம்பெயர்ந்து வெளியேற குடியேற உதவியது.

ஜெர்மனியில் முதன்முதலில் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்ட "நவம்பர் படுகொலை" (November Pogrom) அல்லது "கிறிஸ்டால்நாட்ச்" (Kristallnacht) படுகொலைகளின் பின்னர், லிச்சன்பெர்க், பெர்லின் நகரின் "செயிண்ட் ஹெட்விக்" தேவாலயத்தில் "வெளியே எரியும் ஜெப ஆலயமும் கடவுளின் வீடுதான்" என்று வெளிப்படையாக எச்சரித்தார். 1941ம் ஆண்டு, அக்டோபர் மாதம், தாம் கைது செய்யப்படும்வரை, லிச்சன்பெர்க் தினசரி வெஸ்பர்ஸ் சேவையில் (Vespers service) துன்புறுத்தப்பட்ட யூதர்களுக்காக பகிரங்கமாக ஜெபித்தார். ஆயர் "கொன்ராட் வான் ப்ரீசிங்" (Konrad von Preysing) பின்னர் நகரத்தின் யூத சமூகத்திற்கு உதவுவதற்கான பணியை அவரிடம் ஒப்படைத்தார்.

நோய்வாய்ப்பட்ட மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களையும், யூத மக்களையும், கைதுசெய்து துன்புறுத்துவதற்கும் கொலை செய்வதற்கும் எதிராக அவர் நாஜி அதிகாரிகளுக்கு நேரில் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அவர்களை எதிர்த்துப் போராடினார். முதலில், நாஜிக்கள் பாதிரியாரை ஒரு தொல்லை என்று தள்ளுபடி செய்தனர். தந்தை லிச்சன்பெர்க் தனது நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்படும் அபாயத்தில் இருப்பதாக எச்சரிக்கப்பட்டார். ஆனாலும் அவர் தமது போராட்டங்களை தொடர்ந்தார்.

"டச்சாவ்" (Dachau) போன்ற சித்திரவதை முகாம்களின் துன்புறுத்தல்கள் குறித்து, சில முகாம்களுக்கு வெளியே அவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்தார்.

1941ம் ஆண்டில், லிச்சன்பெர்க், தன்னிச்சையான கருணைக்கொலை திட்டத்திற்கு எதிராக "ரீச்" நகரின் தலைமை மருத்துவர் (Chief Physician of the Reich), பொது சுகாதார அமைச்சர் (Minister of Public Health) "லியோனார்டோ கான்டி" (Leonardo Conti) (1900-1945) என்பவருக்கு எழுதிய கடிதத்தில் தமது எதிர்ப்பை பின்வருமாறு தெரிவித்தார்:
"நான், ஒரு மனிதனாக, ஒரு கிறிஸ்தவனாக, ஒரு பாதிரியாராக, மற்றும் ஒரு ஜேர்மனியனாக, உங்களுடைய ஆட்சியில் உங்கள் அதிகாரத்தாலும் ஒப்புதலாலும் நடைபெறும் குற்றம் - கொலைகளுக்கு நீங்கள் பதில் அளிக்கவேண்டுகிறேன். உங்களுடைய இத்தகைய பாவச் செயல்களால் ஜெர்மானிய மக்கள் இறைவனின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்."

நாஜி ஜெர்மனியின் சுகாதார நிறுவனங்களில் நடைபெற்ற கருணைக்கொலைகளுக்கு எதிராக கிறிஸ்தவ திருச்சபைகள் எதிர்ப்பு தெரிவித்தவுடன் அத்தகைய செயல்கள் விரைவில் நிறுத்தப்பட்டது. முக்கிய, மிகவும் போற்றப்பட்ட மதகுருமார்கள் மற்றும் பிற எதிர்ப்பாளர்களை சிறையில் அடைக்க வேண்டும் என்ற நாஜி தலைவர்களின் முடிவினால், - அவர்கள் பெரிதும் அஞ்சிய எதிர்மறையான பொதுமக்களின் எதிர்பின் அடிப்படையில் விளைவுகளைக் கொண்ட ஒருநெறி - அல்லது திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார்கள்.

1941ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 23ம் நாளன்று, லிச்சன்பெர்க் கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். திருத்தமுடியாத குற்றவாளி என்று அவரை தீர்மானித்ததால், அவரை அவர் "டச்சாவ் சித்திரவதை முகாமுக்கு" (Dachau Concentration Camp) அனுப்பினார்கள். ஆனால், பயணத்தின் நடுவே, 1943ம் ஆண்டு, நவம்பர் மாதம், 5ம் நாளன்று, "பவேரியா"வின் (Bavaria) "ஹோஃப்" (Hof) நகரில் அவர் சரிந்து விழுந்து மரித்தார்.

(நாஜி ஜெர்மனி பற்றின சிறு குறிப்பு):
நாஜி ஜெர்மனி என்பது, அடால்ப் ஹிட்லர் மற்றும் அவரது நாஜி கட்சியின் கீழ் இருந்த ஜெர்மனி நாட்டை குறிக்க வழங்கப்படும் ஆங்கிலப் பெயராகும். ஹிட்லர், ஜெர்மனியை 1933 முதல் 1945ம் ஆண்டுவரை சர்வாதிகாரியாக ஆண்டார். இவரது ஆட்சிக்காலத்தில் ஜெர்மனி உலகின் பெரிய பாசிச சக்தியாக உருவெடுத்தது.

ஹிட்லரின் நாடுபிடிக்கும் ஆசையால் ஐரோப்பா முழுவதும் பதட்டம் நிலவியது. இது இரண்டாம் உலகப் போருக்கு வித்திட்டது. போர் காலத்தில் இந்நாடு மனித குலத்துக்கு எதிரான குற்றச் செயல்களில் பெருமளவில் ஈடுபட்டது. நாஜி படைகள் இரண்டாம் உலகப்போரில் தோற்கடிக்கப்பட்ட பின்பு நாஜிக்களின் ஆட்சி ஜெர்மனியில் முடிவுக்கு வந்தது.


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...