Monday, November 7, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (08-11-2022)

 

பொதுக்காலம் 32ஆம் வாரம் - செவ்வாய்

முதல் வாசகம்



நம் பெருமைமிக்க கடவுளும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் மாட்சி வெளிப்படப்போகிறது.

திருத்தூதர் பவுல் தீத்துக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-8, 11-14

அன்பிற்குரியவரே,

நீயோ நலந்தரும் போதனைக்கேற்பப் பேசு. வயது முதிர்ந்த ஆண்கள் அறிவுத் தெளிவு, கண்ணியம், கட்டுப்பாடு உடையவர்களாய் இருந்து நம்பிக்கை, அன்பு, மன உறுதி ஆகியவற்றை நன்கு காத்துக்கொள்ளச் சொல். அவ்வாறே வயது முதிர்ந்த பெண்களும் தூய நடத்தை உடையவர்களாய், புறங்கூறாதவர்களாய், குடிவெறிக்கு அடிமை ஆகாதவர்களாய், நற்போதனை அளிப்பவர்களாய் இருக்குமாறு கூறு. இவ்வாறு கற்றுக் கொடுப்பதால் இளம்பெண்கள் தங்கள் கணவரிடமும் பிள்ளைகளிடமும் அன்பு காட்டி, கட்டுப்பாடும் கற்பும் உள்ளவர்களாய் வீட்டு வேலைகளைச் செவ்வனே செய்பவர்களாய்த் தங்கள் கணவருக்குப் பணிந்திருப்பார்கள். அப்பொழுதுதான் கடவுளுடைய வார்த்தை பழிப்புக்குள்ளாகாது.

அவ்வாறே இளைஞரும் கட்டுப்பாடு உள்ளவராய் இருக்க அறிவுரை கூறு. நற்செயல்களைச் செய்வதில் எல்லா வகையிலும் நீயே முன்மாதிரியாய் இரு; நாணயத்தோடும் கண்ணியத்தோடும் கற்றுக்கொடு. யாரும் குற்றம் கண்டுபிடிக்க முடியாத நலந்தரும் வார்த்தைகளைப் பேசு. அப்பொழுது எதிரிகள் நம்மைப் பற்றித் தீயன பேச எதுவுமின்றி வெட்கிப் போவார்கள்.

ஏனெனில் மனிதர் அனைவருக்கும் மீட்பராம் கடவுளின் அருள் வெளிப்பட்டுள்ளது. நாம் இறைப்பற்றின்மையையும் உலகு சார்ந்த தீய நாட்டங்களையும் மறுத்துக் கட்டுப்பாட்டுடனும் நேர்மையுடனும் இறைப்பற்றுடனும் இம்மையில் வாழ இவ்வருளால் பயிற்சி பெறுகிறோம். மகிழ்ச்சியோடு எதிர்நோக்கியிருப்பது நிறைவேறும் எனக் காத்திருக்கிறோம். நம் பெருமைமிக்க கடவுளும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் மாட்சி வெளிப்படப்போகிறது. அவர் நம்மை எல்லா நெறிகேடுகளிலிருந்தும் மீட்டு, நற்செயல்களில் ஆர்வமுள்ள தமக்குரிய மக்களாகத் தூய்மைப்படுத்தத் தம்மையே ஒப்படைத்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 37: 3-4. 18,23. 27,29 (பல்லவி: 39a)

பல்லவி: நேர்மையாளருக்கு மீட்பு ஆண்டவரிடமிருந்தே வரும்.

3
ஆண்டவரை நம்பு; நலமானதைச் செய்; நாட்டிலேயே குடியிரு; நம்பத் தக்கவராய் வாழ்.
4
ஆண்டவரிலேயே மகிழ்ச்சி கொள்; உன் உள்ளத்து விருப்பங்களை அவர் நிறைவேற்றுவார். - பல்லவி

18
சான்றோரின் வாழ்நாள்களை ஆண்டவர் அறிவார்; அவர்கள் உரிமைச் சொத்து என்றும் நிலைத்திருக்கும்.
23
தாம் உவகைகொள்ளும் நடத்தையைக் கொண்ட மனிதரின் காலடிகளை ஆண்டவர் உறுதிப்படுத்துகின்றார். - பல்லவி

27
தீமையினின்று விலகு; நல்லது செய்; எந்நாளும் நாட்டில் நிலைத்திருப்பாய்.
29
நேர்மையாளர் நிலத்தை உடைமையாக்கிக் கொள்வர்; அதிலேயே என்றென்றும் குடியிருப்பர். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 14: 23

அல்லேலூயா, அல்லேலூயா! என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்



நாங்கள் பயனற்ற பணியாளர்கள்; எங்கள் கடமையைத்தான் செய்தோம்.

 லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 7-10

அக்காலத்தில்

ஆண்டவர் உரைத்தது: “உங்கள் பணியாளர் உழுதுவிட்டோ மந்தையை மேய்த்துவிட்டோ வயல்வெளியிலிருந்து வரும்போது அவரிடம், ‘நீர் உடனே வந்து உணவருந்த அமரும்’ என்று உங்களில் எவராவது சொல்வாரா? மாறாக, ‘எனக்கு உணவு ஏற்பாடு செய்யும்; உம் இடையை வரிந்துகட்டிக் கொண்டு, நான் உண்டு குடிக்கும்வரை எனக்குப் பணிவிடை செய்யும்; அதன்பிறகு நீர் உண்டு குடிக்கலாம்’ என்று சொல்வார் அல்லவா? தாம் பணித்ததைச் செய்ததற்காக அவர் தம் பணியாளருக்கு நன்றி கூறுவாரோ? அது போலவே, நீங்களும் உங்களுக்குப் பணிக்கப்பட்ட யாவற்றையும் செய்தபின், ‘நாங்கள் பயனற்ற பணியாளர்கள்; எங்கள் கடமையைத்தான் செய்தோம்’ எனச் சொல்லுங்கள்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.


கடமையில் கருத்தாய் இருப்போமா? 

கடமை என்பது வெறும் மூன்றெழுத்து வார்த்தையல்ல. அது ஒவ்வொருவருக்குள்ளும் குடியிருக்க வேண்டிய உணர்வு.இந்த கடமை உணர்வு என்ற ஒன்று இல்லாவிட்டால் எந்த பணியும் சிறப்பாக அமையாது என்பதுதான் உண்மை. வேலை அல்லது பணியை யார் வேண்டுமானாலும் செய்யலாம். அதன் நிறைவினை அதன் பலனை கடமை உணர்வு உள்ளவர்களாலேயே உணர முடியும்.


வேலையாள் கூலியை எதிர்பார்ப்பது தவறில்லை. ஆனால் செய்த வேலைக்கு பாராட்டும் அங்கீகாரமும் எதிர்பார்ப்பது தவறு. அவை எப்போதும் கிடைப்பதில்லை. அவை கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வேலை பார்த்தால் அல்லது பணியைச் செய்தால் அது உண்மையான பணியாளருக்கு அழகில்லை. இதைத் தான் இன்றைய நற்செய்தியில் நம் ஆண்டவர் இயேசு விளக்குகிறார்.


"நாங்கள் பயனற்ற பணியாளர்கள்; எங்கள் கடமையைத்தான் செய்தோம்’ எனச் சொல்லுங்கள்.” என்று இயேசு கூறுகிறார். அதாவது நாம் செய்த பணிகளுக்கான கைமாறை நாம் எதிர்பார்க்காது நாம் கட்டாயமாக செய்து முடிக்க வேண்டிய ஒரு பணி என்ற எண்ணத்தோடு நாம் செய்ய என்பதே இதன் பொருள். 


ஏனெனில்  பாராட்டையும், அங்கீகாரத்தையும் எதிர்பார்த்து நாம் கடமைகளைச் செய்யும்  போது நம்முடைய உள்நோக்கம் தன் தூய்மையை இழக்கிறது. எதிர்பார்ப்புகள் அதிகரிக்கிறது. அவை நிறைவேறா வேளைகளில் வெறுப்பும் ஏனோதானோ என பொறுப்புகளை செய்யும் மனநிலையும் வளர்கிறது. இறுதியில் நாம் எந்த பாராட்டையும் சன்மானத்தையும் பெற எண்ணினோமா அதற்கு எதிர்மாறான ஏச்சுக்களையும் பேச்சுக்களையும் இகழ்ச்சிகளையும் நாம் பெற வேண்டிய சூழ்நிலையும் உருவாகிறது. நம்மிலே பலருக்கு கடமை உணர்வுகள் மழுங்கியதற்கு இதுவே காரணம். எனவே "கடமையைச் செய். பலனை எதிர்பாராதே "என்ற மனநிலையில் வாழ நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.


திருமுழுக்கு பெற்ற நம் அனைவருக்கும் நற்செய்தி அறிவிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அது நம்மேல் சுமத்தப்பட்ட கடன். அதை நாம் எத்தகைய கடமை உணர்வோடு செய்கிறோம் எனவும் நாம் சிந்திக்க வேண்டும். அக்கடமையை நாம் மிகுந்த கடமை உணர்வோடு செய்தோமெனில் நாம் எதிர்பார்க்கத் தேவையில்லை. நமக்கான கைமாறு உறுதியாக விண்ணகத்தில் கிடைக்கும்.

கடமையில் கருத்தாய் இருப்போமா?


 இறைவேண்டல் 

ஆற்றலின் இறைவா! சன்மானம் எதிர்பாராது கடமைகளில் கருத்தாய் இருந்து பணிபுரிய வரமருளும். ஆமென்.


அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்




† இன்றைய புனிதர் †
(நவம்பர் 08)
✠ புனிதர் வில்ஹேட் ✠
(St. Willehad)


மறைப்பணியாளர்/ திருயாத்திரீகர்/ ஆயர்:
(Missionary, Pilgrim and Bishop of Bremen:)

பிறப்பு: கி.பி. 735
நார்த்தும்ப்ரியா, இங்கிலாந்து
(Northumbria, England)

இறப்பு: நவம்பர் 8, 789
வெஸ்ஸெர் மீதுள்ள ப்லெக்ஸன், ஜெர்மன்
(Blexen upon Weser, Germany)

ஏற்றுக்கொள்ளும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)

முக்கிய திருத்தலம்:
எக்டெர்னாக், லக்ஸம்பர்க்
(Echternach, Luxembourg)

நினைவுத் திருவிழா: நவம்பர் 8

பாதுகாவல்: சாக்ஸனி (Saxony)

புனிதர் வில்ஹேட், ஒரு கிறிஸ்தவ மறைப்பணியாளரும், திருயாத்திரீகரும், ஆயரும் ஆவார்.

தற்போதைய வடக்கு இங்கிலாந்து (North England) மற்றும் தென்கிழக்கு ஸ்காட்லாந்து ((South East Scotland)) பகுதிகளை உள்ளடக்கிய பிராந்தியமான நார்த்தும்ப்ரியாவில் ((Northumbria)) பிறந்த இவர், யார்க் (York) பேராயரான "எக்பேர்ட்" (Ecgbert) என்பவரின் மேற்பார்வையின் கீழே கல்வி கற்றார். ஆங்கிலேய கல்வியாளரும், இறையியலாளருமான "அல்குயின்" (Alcuin) நண்பரான அவர், கல்வியின் பின்னர் குருத்துவ அருட்பொழிவு பெற்றார். தற்போதைய நெதர்லாந்தின் (Netherlands) பெரும்பகுதியும், ஃபிரீஸ்லாந்து (Friesland) நாட்டின் சிறு பகுதியுமான "ஃபிரீசியா" (Frisia) என்னும் இடத்துக்கு கி.பி. 766ம் ஆண்டு பயணித்த இவர், கி.பி. 754ம் ஆண்டு, "ஃபிரீசியன்" (Frisian) இனத்தவரால் படுகொலை செய்யப்பட்டு, மறைசாட்சியாக மரித்த புனிதர் "போனிஃபேஸ்" (Boniface) என்பவரின் மறைப்பணிகளை தொடரும் நோக்கில், டச்சு வலுவூட்டப்பட்ட "டோக்கும்" (Dokkum) நகரம், மற்றும் நெதர்லாந்தின் மத்திய கிழக்கு பிராந்திய நகரான "ஓவரிஜ்செல்" (Overijssel) நகரங்களில் மதபோதனை செய்தார். கி.பி. 777ம் ஆண்டு, "பேட்ர்பார்னில்" (Paderborn) நடந்த ஒரு மாநாட்டில், சாக்சனி (Saxony) மிஷனரி மண்டலங்களாக (Missionary Zones) பிரிக்கப்பட்டது. வடமேற்கு ஜெர்மனியிலுள்ள (Northwestern Germany) "வெஸ்ஸர்" (Weser) எனும் நதி, மற்றும் மத்திய ஐரோப்பாவின் (Central Europe) முக்கிய பெரும் நதியான "எல்பி" (Elbe) ஆகிய இரண்டின் இடையேயுள்ள "விக்மோடியா" (Wigmodia) பிராந்தியம் வில்ஹேடுக்கு தரப்பட்டது.

வில்ஹேட், கி.பி. 780ம் ஆண்டு முதல், ஃபிராங்க்ஸ் அரசரும் (king of the Franks), தூய ரோமப் பேரரசருமான (Holy Roman Emperor) சார்லிமகன் (Charlemagne) அல்லது முதலாம் சார்லஸ் (Charles I) அவர்களின் ஆணையின் கீழ், "லோவர் வெஸ்ஸர்" (Lower Weser River) ஆற்றின் பிராந்தியங்களில் பிரசங்கித்தார்.

"ஃபிரீசியன்" (Frisian) இனத்தவர் அவரை கொலை செய்ய தேடியபோது, அங்கிருந்து தப்பியோடி மத்திய நெதர்லாந்தின் நகரான "உட்ரெட்ச்" (Utrecht) சென்றார். உள்ளூர் கோயில்கள் சிலவற்றை அழிப்பதற்காக அவர்களை கொள்வதற்காக பாகன் இனத்தவர்கள் தேடியபோது, அவரும் அவரது சக மிஷனரிகளை உயிர்தப்பி ஓடிப்போனார்கள். கடைசியாக, கி.பி. 780ம் ஆண்டு, சாக்ஸன் இனத்தவரிடையே மறைப்பணியாற்றுவதற்காக அவரை பேரரசர் முதலாம் சார்லஸ் அனுப்பினார். அவர் அங்கெ சாக்ஸன் இனத்தவரிடையே இரண்டு வருடங்கள் வரை மறைபோதகம் செய்தார். ஆனால், கி.பி. 782ம் ஆண்டு, சாக்ஸன் இன மக்களுள் சிலர், பேரரசர் முதலாம் சார்லஸின் எதிர்ப்பாளரான "விடுகைண்ட்"(Widukind) என்பவரது தலைமையில் கூடி, பேரரசருக்கு எதிராக கலகம் விளைவித்தனர். இதனால், வில்ஹேட் ஃபிரீசியாவுக்கு (Frisia) ஓடிச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர் இந்த வாய்ப்பை ரோம் நகருக்கு பயணிக்க பயன்படுத்திக்கொண்டார். அங்கே, திருத்தந்தை முதலாம் அட்ரியன் (Pope Adrian I) அவர்களிடம் பணியாற்றினார்.

ரோம் நகரிலிருந்து திரும்பியதும், வில்ஹேட், தற்போதைய "லக்ஸம்பர்க்" (Luxembourg) நகரிலுள்ள "எக்டர்னாக்" (Monastery of Echternach) துறவுமட்டத்தில் சில காலம் ஒய்வு பெற்றார். அங்கே, தமது மிஷனரி குழுக்களை ஒன்றிணைக்க இரண்டு ஆண்டுகள் செலவிட்டார்.

பேரரசர் முதலாம் சார்லஸ் சாக்ஸன்களை வெற்றிகொண்டதும், வில்ஹேட் "லோவர் எல்பி" (Lower Elbe) மற்றும் "லோவர் வெஸ்ஸர்" நதிகளின் பிராந்தியங்களில் மறைபோதகம் செய்தார். கி.பி. 787ம் ஆண்டு, வில்ஹேட் ஆயராக அருட்பொழிவு செய்விக்கப்பட்டார். வெஸ்ஸர் நதியின் முகத்துவாரப் பகுதியான சக்ஸனி மற்றும் ஃ பிரீஸ்லாந்து பகுதிகள் (part of Saxony and Friesland) இவரது மறைமாவட்ட பகுதிகளாக இவருக்கு தரப்பட்டன. அவர், "ப்ரெம்மன்" (Bremen) நகரை தமது மறைமாவட்ட தலைமையகமாக தேர்வு செய்தார். கி.பி. 782ம் ஆண்டு, முதன்முதலாக ஆவணங்களில் "ப்ரெம்மன்" (Bremen) மறைமாவட்டமாக குறிக்கப்பட்டது. அங்கேயே ஒரு ஆலயமும் கட்டப்பட்டது. புனித அன்ஸ்கர் (Saint Ansgar) அவர்களால் அதன் அழகுக்காக புகழப்பட்ட இவ்வாலயம், கி.பி. 789ம் ஆண்டு, அர்ச்சிக்கப்பட்டது.

வில்ஹேட், கி.பி. 789ம் ஆண்டு, நவம்பர் மாதம், எட்டாம் தேதி, ஜெர்மன் நாட்டின் வெஸ்ஸெர் மீதுள்ள ப்லெக்ஸன் நகரில் மரித்தார். புதிதாய் கட்டப்பட்டு, தாம் மரிப்பதற்கு சிறிது காலம் முன்னால், தம்மால் அர்ச்சிக்கப்பட்ட ஆலயத்தில் அவர் அடக்கம் செய்யப்பட்டார்.


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...