Friday, November 11, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (12-11-2022)

 பொதுக்காலம் 32ஆம் வாரம் - சனி


முதல் வாசகம்

நீர் நம்பிக்கைக்கு உரியவர்.
திருத்தூதர் யோவான் எழுதிய மூன்றாம் திருமுகத்திலிருந்து வாசகம் 5-8
அன்பார்ந்தவரே, நீர் சகோதரர்களுக்கு, அதுவும் அறிமுகமில்லாச் சகோதரர்களுக்குச் செய்தவற்றையெல்லாம் பார்க்கும்போது நீர் நம்பிக்கைக்கு உரியவர் என்பது தெளிவாகிறது. அவர்கள் திருச்சபையின் முன்னிலையில் உமது அன்பைக் குறித்துச் சான்று பகர்ந்தார்கள். எனவே நீர் அவர்களைக் கடவுளுக்கு உகந்த முறையில் வழியனுப்பி வைத்தால் நல்லது. ஏனெனில் அவர்கள் கிறிஸ்துவுக்காகப் பயணம் மேற்கொண்டவர்கள். பிற மக்களிடமிருந்து அவர்கள் வழியில் எதையும் பெற்றுக் கொள்ளவில்லை. இத்தகையோருக்கு உதவுவது நமது கடமை. இவ்வாறு, உண்மைக்காக உழைக்கும் அவர்களின் உடன் உழைப்பாளர் ஆகிறோம்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 112: 1-2. 3-4. 5-6 (பல்லவி: 1a)
பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்.
1 ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்; அவர்தம் கட்டளைகளில் அவர்கள் பெருமகிழ்வு அடைவர்.
2 அவர்களது வழிமரபு பூவுலகில் வலிமைமிக்கதாய் இருக்கும்; நேர்மையுள்ளோரின் தலைமுறை ஆசிபெறும். - பல்லவி
3 சொத்தும் செல்வமும் அவர்களது இல்லத்தில் தங்கும்; அவர்களது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்.
4 இருளில் ஒளியென அவர்கள் நேர்மையுள்ளவரிடையே மிளிர்வர்; அருளும் இரக்கமும் நீதியும் உள்ளோராய் இருப்பர். - பல்லவி
5 மனமிரங்கிக் கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்; அவர்கள் தம் அலுவல்களில் நீதியுடன் செயல்படுவர்.
6 எந்நாளும் அவர்கள் அசைவுறார்; நேர்மையுள்ளோர் மக்கள் மனத்தில் என்றும் வாழ்வர். - பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
2 தெச 2: 14
அல்லேலூயா, அல்லேலூயா! நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மாட்சியை நீங்கள் அடையும் பொருட்டே, நாங்கள் அறிவித்த நற்செய்தியின் வழியாக அவர் உங்களை அழைத்தார். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்


தாம் தேர்ந்துகொண்டவர்களுக்கு கடவுள் நீதி வழங்காமல் இருப்பாரா?
✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 1-8
அக்காலத்தில்
மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதற்கு இயேசு ஓர் உவமை சொன்னார். “ஒரு நகரில் நடுவர் ஒருவர் இருந்தார். அவர் கடவுளுக்கு அஞ்சி நடப்பதில்லை; மக்களையும் மதிப்பதில்லை.
அந்நகரில் கைம்பெண் ஒருவரும் இருந்தார். அவர் நடுவரிடம் போய், ‘என் எதிரியைத் தண்டித்து எனக்கு நீதி வழங்கும்’ என்று கேட்டுக் கொண்டேயிருந்தார். நடுவரோ, நெடுங்காலமாய் எதுவும் செய்ய விரும்பவில்லை.
பின்பு அவர், ‘நான் கடவுளுக்கு அஞ்சுவதில்லை; மக்களையும் மதிப்பதில்லை. என்றாலும் இக்கைம்பெண் எனக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டிருப்பதால் நான் இவருக்கு நீதி வழங்குவேன். இல்லையானால் இவர் என் உயிரை வாங்கிக்கொண்டேயிருப்பார்’ என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார்."
பின் ஆண்டவர் அவர்களிடம், “நேர்மையற்ற நடுவரே இப்படிச் சொன்னார் என்றால், தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணை செய்யக் காலம் தாழ்த்துவாரா? விரைவில் அவர்களுக்கு நீதி வழங்குவார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஆயினும் மானிடமகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ?” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.

மானிட மகன் வரும்போது நம்பிக்கையைக் காண்பாரோ?
நம்பிக்கை அல்லது விசுவாசம் பற்றி நம் திருஅவை நமக்கு போதித்துக்கொண்டே இருக்கிறது. நற்செய்தியில் பல இடங்களில் இயேசு நம்பிக்கை அவசியமெனக் கூறுகிறார். கடுகளவு நம்பிக்கை கூட மலையைப் பெயர்க்கும் என்று நம்பிக்கையின் பலத்தைக் கூறுகிறார். இயேசு செய்த பல குணமளிக்கும் செயல்கள் எல்லாம் நம்பிக்கையின் அடிப்படையில் நிகழ்த்தப்பட்டவையே. "உன் நம்பிக்கை உன்னை நலமாக்கிற்று " என்று தன்னுடைய வல்லமையை பாராட்டி பேசாமல் தன்னை அண்டி வந்தவரின் நம்பிக்கையை பெரிதுபடுத்திக் கூறுகிறார் இயேசு. கனானேயப் பெண், நூற்றுவர் தலைவன், பெரும்பாடு பட்ட பெண் என பலர் நம்பிக்கைக்கு உதாரணமாய் விவிலியத்தில் கூறப்பட்டுள்ளனர். அவ்வாறிருக்க இன்று இயேசு தம்முடைய இரண்டாம் வருகையின் போது நம்பிக்கையைக் காண முடியுமா என்ற கேள்வியை நம் முன் வைக்கிறார். இக்கேள்வி சற்று வருத்தத்திற்குரியது. வேதனைக்குரியது என்றே கூறலாம்.

நம்மிலே பலருக்கு நம்பிக்கை என்றால் என்ன? கோவிலுக்கு செல்வதும், தேவைக்காக வேண்டுவதும் மட்டுமா? நாம் கேட்டவுடன் நமது தேவைகள் நிறைவேறிவிட்டால் கடவுள் இருக்கிறார். இல்லாவிட்டால் கடவுளே இல்லை. செபிப்பது வீண் என்று எண்ணுபவர்கள் நம்மிலே பலர் உள்ளனர்.
வளர்ந்து வரும் அறிவியல் உலகம் கடவுளைத் தவிர மற்ற அனைத்தையும் ஞாபகப்படுத்தி மனிதரைக் கவர்வதை நம்மால் மறுக்க முடியாது. இன்றைய இளம் தலைமுறையினர் ஆலயம் என்றால் என்ன? எனக் கேட்கும் அளவுக்கு பிறவற்றில் அமோக வளர்ச்சியும் ஆன்மீகத்தில் வளர்ச்சியின்மையும் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் நிதர்சன உண்மை.

இதன் அடிப்படையில் மானிட மகன் வரும் போது நம்பிக்கையை காண்பது அரிது என்ற பதிலே கிடைக்கிறது. ஆயினும் இந்த நிலையை நம்மால் மாற்ற இயலும் நாம் நம் நம்பிக்கையை ஆழப்படுத்தி எடுத்துக்காட்டான வாழ்க்கை வாழ்ந்தால்.

கடவுளை தினமும் தொழுது தேவைக்காக மட்டும் அவரை நாடாமல் அவரை நம்பி அனைத்தையும் செய்யும் போது நமது நம்பிக்கை ஆழப்படுகிறது. இன்பத்தில் இறைவனுக்கு நன்றி கூறுவது நம்பிக்கை. துன்பத்திலும் நமது தேவைகள் நிறைவேறா காலத்திலும் பொறுமையோடும் தளரா மனத்தோடும் இறைவேண்டல் செய்வதும் நம்பிக்கை. அதையும் தாண்டி நாம் எதிர்பார்த்தது நடக்காத போதும் அவை எதிர்மறையாக நடந்தேறும் போதும் இறை சித்தம் என ஏற்றுக்கொள்வதே சிறந்த நம்பிக்கை. இந்த நம்பிக்கை ஆன்மீக வாழ்வுக்கு மட்டுமல்ல நம் அன்றாட வாழ்க்கையை வெற்றியோடு நகர்த்தவும் நிச்சயம் உதவும்.

எனவே நம்பிக்கையோடு வாழ்ந்து, பிறரையும் நம்பிக்கையோடு வாழ ஊக்கப்படுத்துவோம். மானிட மகன் காலத்தில் நம்பிக்கையை நம்மிலே கண்டு அவர் மகிழ்வுறுமாறு நம்பிக்கை வாழ்வில் வளர இறையருள் வேண்டுவோம்.

இறைவேண்டல்
நம்பிக்கையின் நங்கூரமே இறைவா! நாங்கள் மனந்தளரா நம்பிக்கை வாழ்வில் வளர உதவும். ஆமென்.

அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்




† இன்றைய புனிதர் †
(நவம்பர் 12)

✠ புனிதர் ஜோசஃபட் குன்ட்சேவிச் ✠
(St. Josaphat Kuntsevych)

போலோஸ்க் பேராயர் மற்றும் மறைச்சாட்சி:
(Polotsk Archbishop and Martyr)

பிறப்பு: கி.பி. 1580
வோலோடிமீர், வோல்ஹைனிய வைவோடேஷிப், போலிஷ்-லித்துவானிய கூட்டமைப்பு
(Volodymyr, Volhynian Voivodeship, Polish–Lithuanian Commonwealth)

இறப்பு: நவம்பர் 12, 1623
வித்டேப்ஸ்க், போலிய-லித்துவானிய கூட்டமைப்பு
(Vitebsk, Vitebsk Voivodeship, Polish-Lithuanian Commonwealth)

ஏற்கும் சமயம்:
உக்ரேனிய கிரேக்க கத்தோலிக்க திருச்சபை
(Ukrainian Greek Catholic Church)
லத்தீன் திருச்சபை
(Latin Church)
ரோமானியன் கிரேக்க கத்தோலிக்க திருச்சபை
(Romanian Greek Catholic Church)
ருத்தேனிய கத்தோலிக்க திருச்சபை
(Ruthenian Catholic Church)

முக்திபேறு பட்டம்: மே 16, 1643
திருத்தந்தை எட்டாம் அர்பன்
(Pope Urban VIII)

புனிதர் பட்டம்: ஜூன் 29, 1867
திருத்தந்தை ஒன்பதாம் பயஸ்
(Pope Pius IX)

பாதுகாவல்: உக்ரைன் (Ukraine)

நினைவுத் திருவிழா: நவம்பர் 12

“லோவன் குன்ட்சேவிச்” (Loann Kuntsevych) எனும் இயற்பெயர் கொண்ட புனிதர் ஜோசஃபட் குன்ட்சேவிச், ஒரு “போலிஷ்-லிதுவேனியன்” (Polish-Lithuanian monk) துறவியும், புனிதர் “மகா பாசில்” (Order of Saint Basil the Great) துறவற சபையைச் சார்ந்தவரும், உக்ரேனிய கிரேக்க கத்தோலிக்க திருச்சபையின் ஆயராக இருந்து திருச்சபையின் ஒற்றுமைக்காக உழைத்து மறைச்சாட்சியாக உயிர் துறந்தவரும் ஆவார்.

கி.பி. 1623ம் ஆண்டு, நவம்பர் 12ம் நாள் அவர் கிறிஸ்தவமறை விசுவாசத்துக்காக துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டார்.

இவருக்கு கத்தோலிக்க திருச்சபை, புனிதர் பட்டமும் மறைச்சாட்சி பட்டமும் அளித்துள்ளது.

வாழ்க்கை வரலாற்றின் முக்கிய நிகழ்வுகள்:
கி.பி. 1580ம் ஆண்டு, அல்லது கி.பி. 1584ம் ஆண்டு பிறந்த இவருக்கு திருமுழுக்கின்போது அளிக்கப்பட்ட பெயர் "லோவன் குன்ட்சேவிச்" ஆகும். வோல்னியா பகுதி இவர் வாழ்ந்த காலத்தில் போலிஷ் - லித்துவானிய கூட்டமைப்பின்கீழ் இருந்தது. இவர் பிறந்த நகரின் பெயர் “வொலோடிமிர்” (Volodymyr), தற்போதைய “உக்ரைன்” (Ukraine) ஆகும்.

கத்தோலிக்க திருச்சபைக்கும் மரபுவழி திருச்சபைக்கும் இடையே ஒற்றுமை ஏற்படுத்துவதற்கான ஒரு ஒப்பந்தம் “பிரெஸ்ட் உடன்பாடு” (Union of Brest) என்று அழைக்கப்படுகிறது. இது கி.பி. 1596ம் ஆண்டில் நிகழ்ந்தது. இதன்படி, உக்ரைன் கிரேக்க மரபுவழி சபையானது, கத்தோலிக்க திருச்சபையோடு இணைய முன்வந்தது. மரபுவழி திருச்சபையில் பிறந்த லோவன் குன்ட்சேவிச், முதலில் “வில்னியஸ்” (Vilnius) நகரிலுள்ள புனிதர் “மகா பாசில்” (Order of Saint Basil the Great) துறவற சபையில் சேர்ந்தார். பின்னர் கி.பி. 1609ம் ஆண்டில் கத்தோலிக்க திருச்சபையில் குருத்துவம் பெற்றார்.

திருச்சபையின் ஒற்றுமைக்காக உழைத்தல்:
துறவற சபையில் சேர்ந்தபோது அவர் லோவன் என்ற தம் பெயரை "ஜோசஃபட்" (Josaphat) என்று மாற்றிக்கொண்டார். அவருடைய வாழ்க்கைக் குறிக்கோளே திருச்சபையில் ஒற்றுமையைக் கொணர்வதாக அமைந்தது. பண்டைக்காலத் திருச்சபையின் வழிபாட்டு முறைகள், திருச்சபைத் தந்தையர்களின் படிப்பினைகள் ஆகியவற்றையும் வரலாற்றையும் ஊன்றிப் பயின்ற ஜோசஃபட், ஆண்டவர் இயேசு நிறுவிய திருச்சபையில் பேதுருவின் வாரிசாக வருகின்ற திருத்தந்தைக்கு ஒரு முக்கிய இடம் ஒன்று உண்டு என்றும், அவருடைய தலைமையின் கீழ் திருச்சபை முறையாக அமைய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

கி.பி. 1617ம் ஆண்டு, ஜோசஃபட்டுக்கு ஆயர் பட்டம் வழங்கப்பட்டது. கி.பி. 1618ம் ஆண்டு, மார்ச் மாதத்தில் அவர் போலோஸ்க் என்னும் மறைமாவட்டத்தின் பேராயராக நியமிக்கப்பட்டார். ரோமத் திருச்சபையோடு உக்ரேய்ன் மரபுவழி திருச்சபையை ஒன்றுபடுத்தும் பணியில் அவர் மும்முரமாக ஈடுபட்டார். பலர் அவருடைய முயற்சியை எதிர்த்தனர்.

ஆயர் ஜோசஃபட் பல கோவில்களைப் புதுப்பித்தார். குருக்களின் கல்வியறிவை வளர்க்க அவர் ஒரு மறைக்கல்வி நூல் எழுதினார். குருக்களின் வாழ்வுக்கான நெறிகளை வழங்கினார். தமது மறைமாவட்டத்தைச் சார்ந்த நகரங்களில் மறை மன்றங்கள் நிறுவ ஏற்பாடு செய்தார். கீழை மரபுவழி சபைகளுக்கு அளவுக்கு மீறிய சலுகைகள் வழங்கியது அவருக்கு விருப்பமாக இருக்கவில்லை.

அவருடைய ஆயர் பணிக்காலம் முழுவதிலும் அவர் ஒரு துறவிக்கான வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்தார். பல ஒறுத்தல் முயற்சிகள் செய்து கடவுள் மட்டில் தமது பக்தியையும் மக்கள் மட்டில் தமது கரிசனையையும் வெளிப்படுத்தினார்.

எதிர்ப்பு:
கத்தோலிக்க திருச்சபைக்கும், உக்ரேனிய மரபுவழி திருச்சபைக்கும் இடையே ஒற்றுமை கொணர ஜோசஃபட் உழைத்ததற்கு நல்ல பலன் கிடைத்தது. பலர் ஒற்றுமை வழியை ஆதரித்தனர். ஆனால் சிலர் அவர் மட்டில் காழ்ப்புணர்வு கொள்ளலாயினர். அவர் உக்ரேனிய சபையை முற்றிலுமாக உரோமை மயமாக்க முயற்சி செய்ததாக அவர்மீது குற்றம் சாட்டினர். தம் ஆயர் பணியை நிறைவேற்றுவதற்காக அவர் மொகிலேவ் நகருக்குச் சென்றபோது அவருடைய எதிரிகள் அவரை எதிர்த்தனர். அவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர்.

ஜோசஃபட்டின் மறைச்சாட்சி மரணம்:
கி.பி. 1623ம் ஆண்டில், ஜோசஃபட்டின் எதிரிகளுள் ஒருவர் ஆயரின் இருப்பிடம் சென்று அவரை கடுமையான வார்த்தைகள் கூறி இகழ்ந்தார். இதனால் அக்குருவை அகற்றி ஓரிடத்தில் வைத்திருந்தனர். அதற்கு எதிர்வினையாக உடனே நகரத்தின் மணி ஒலிக்கப்பட்டது. மக்கள் கும்பல் ஒன்று திரண்டு வந்து, ஆயரின் இருப்பிடத்தை வன்முறையாகத் தாக்கியது. அவரை அரிவாளால் வெட்டினர். துப்பாக்கியால் சுட்டனர். அவருடைய உடல் ஆற்றில் வீசி எறியப்பட்டது. பல நாட்களுக்குப் பின் அவருடைய உடல் கண்டெடுக்கப்பட்டு, ரோமுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு புனித பேதுரு பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

ஜோசஃபட்டின் பக்தி வாழ்வு:
ஜோசஃபட் சிறுவயதிலிருந்தே மிகுந்த இறைபக்தி கொண்டிருந்தார். அவருக்குப் பிடித்தமான இறைவேண்டல் கீழைத் திருச்சபையின் துறவற இல்லங்களில் வழக்கமாக பயன்பட்ட ஒரு வேண்டல் ஆகும்.

"ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, பாவியாகிய என்மேல் இரக்கமாயிரும்!" என்னும் அந்த இறைவேண்டலை அவர் அடிக்கடி செபித்து வந்தார். அவர் புலால் உணவு அருந்தியதில்லை. விரதம் இருப்பதும் உடலை ஒறுப்பதும் அவரது வழக்கம். வெறும் தரையில் உறங்கினார். ஏழைகளை சந்தித்து அவர்களுக்கு உதவி செய்தார்.

திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் (Pope Pius IX), ஜோசஃபட்டுக்கு கி.பி. 1867ம் ஆண்டு, ஜூன் மாதம், 29ம் நாள் புனிதர் பட்டம் வழங்கினார்.

♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...