திருவருகைக் கால வார நாள்கள் - டிசம்பர் 21
முதல் வாசகம்
இதோ, மலைகள்மேல் தாவி என் அன்பர் வருகின்றார்.
இனிமைமிகு பாடலிலிருந்து வாசகம் 2: 8-14
தலைவி கூறியது: என் காதலர் குரல் கேட்கின்றது; இதோ, அவர் வந்துவிட்டார்; மலைகள்மேல் தாவி வருகின்றார்; குன்றுகளைத் தாண்டி வருகின்றார். என் காதலர் கலைமானுக்கு அல்லது மரைமான் குட்டிக்கு ஒப்பானவர். இதோ, எம் மதிற்சுவர்க்குப் பின்னால் நிற்கின்றார்; பலகணி வழியாய்ப் பார்க்கின்றார்; பின்னல் தட்டி வழியாய் நோக்குகின்றார். என் காதலர் என்னிடம் கூறுகின்றார்: “விரைந்தெழு, என் அன்பே! என் அழகே! விரைந்து வா. இதோ, கார்காலம் கடந்துவிட்டது. மழையும் பெய்து ஓய்ந்துவிட்டது. நிலத்தில் மலர்கள் தோன்றுகின்றன; பாடிமகிழும் பருவம் வந்துற்றது; காட்டுப்புறா கூவும் குரலதுவோ நாட்டினில் நமக்குக் கேட்கின்றது. அத்திப் பழங்கள் கனிந்துவிட்டன; திராட்சை மலர்கள் மணம் தருகின்றன; விரைந்தெழு, என் அன்பே! என் அழகே! விரைந்து வா."
பாறைப் பிளவுகளில் இருப்பவளே, குன்றின் வெடிப்புகளில் இருக்கும் என் வெண்புறாவே! காட்டிடு எனக்கு உன் முகத்தை; எழுப்பிடு நான் கேட்க உன் குரலை. உன் குரல் இனிது! உன் முகம் எழிலே!
ஆண்டவரின் அருள்வாக்கு.
அல்லது
இஸ்ரயேலின் அரசராகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்.
இறைவாக்கினர் செப்பனியா நூலிலிருந்து வாசகம் 3: 14-17
மகளே சீயோன்! மகிழ்ச்சியால் ஆர்ப்பரி; இஸ்ரயேலே! ஆரவாரம் செய்; மகளே எருசலேம்! உன் முழு உள்ளத்தோடு அகமகிழ்ந்து அக்களி. ஆண்டவர் உன் தண்டனைத் தீர்ப்பைத் தள்ளிவிட்டார்; உன் பகைவர்களை அப்புறப்படுத்தினார்; இஸ்ரயேலின் அரசராகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்; நீ இனி எந்தத் தீங்கிற்கும் அஞ்சமாட்டாய்.
அந்நாளில் எருசலேமை நோக்கி இவ்வாறு கூறப்படும்: “சீயோனே, அஞ்சவேண்டாம்; உன் கைகள் சோர்வடைய வேண்டாம். உன் கடவுளாகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்; அவர் மாவீரர்; மீட்பு அளிப்பவர்; உன் பொருட்டு அவர் மகிழ்ந்து களிகூருவார்; தம் அன்பினால் உனக்குப் புத்துயிர் அளிப்பார்; உன்னைக் குறித்து மகிழ்ந்து ஆடிப்பாடுவார்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 33: 2-3. 11-12. 20-21 (பல்லவி: திபா 1a,3a காண்க)பல்லவி: நீதிமான்களே, புதியதொரு பாடல் ஆண்டவர்க்குப் பாடுங்கள்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! இம்மானுவேலே, சட்டம் இயற்றும் எம் அரசே, இறைவனாம் எம் ஆண்டவரே, எம்மை மீட்க எழுந்தருளும். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?
✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 39-45
அக்காலத்தில்
மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டில் உள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார். அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார். மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது எலிசபெத்து வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார். அப்போது எலிசபெத்து உரத்த குரலில், “பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று. ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
மகிழ்ச்சியும் நன்மையும் தருவதா நமது சந்திப்பு?
இன்றைய சமூகத்தில் பலவித சந்திப்புகளை நாம் மேற்கொள்கிறோம்.
பணியின் அடிப்படையிலான சந்தித்தல், தேவைக்காகப் பிறரைச் சந்தித்தல் , பொழுதுபோக்கிற்காகவும் நேரத்தைக் கடத்துவதற்காகவும் சந்தித்தல் போன்று பல வகைகள் அதிலே உண்டு. ஆனால் இன்று நற்செய்தியில் வாசிக்கும் சந்திப்பு வித்தியாசமானது. அதுதான் மரியா மற்றும் எலிசபெத்தின் சந்திப்பு.
தன் தேவைக்காக பிறரைச் சந்திக்கத் துடிக்கும் மனிதருக்கு நடுவில்
தேவையில் இருக்கும் ஒருவரைத் தேடிச் சந்திப்பதோடல்லாமல் உதவி செய்யும் மனம் கொண்டவராய் சந்திக்கச் செல்கிறார் மரியா. பிறரன்புக்கு எடுத்துக்காட்டாய் விளங்குகிறது இச்சந்திப்பு.
தன்னைவிட வயதில் மிகச் சிறியவராய் இருந்தாலும் மரியாவுக்கு ஆண்டவர் அளித்த வாக்குறுதியை மதித்து "என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? " எனத் தன்னையே தாழ்த்தி நின்றார் எலிசபெத். தாழ்ச்சிக்கு இலக்கணமாக விளங்குகிறது இச்சந்திப்பு.
சந்திக்கின்ற போதெல்லாம் பிறரைப் பற்றி புறணி பேசுபவர்களைப் போல அல்லாமல் ஆண்டவரையும் அவர்தம் அருஞ்செயல்களையும் பற்றி பகிர்ந்து, மகிழ்ந்து, நம்பிக்கையை ஆழப்படுத்திய சந்திப்பு தான் மரியா - எலிசபெத்தின் சந்திப்பு.
இவர்களின் சந்திப்பு மகிழ்ச்சியையும், மனநிறைவையும், ஆசிரையும் பெற்று தந்தது. மரியாவின் குழப்ப மனநிலையை மாற்றுபவராக எலிசபெத்தையும், எலிசபெத்தின் முதிர்வின் காரணமான இயலாமைக்கு கைகொடுப்பவராக மரியாவையும் மாற்றியது இந்த சந்திப்பு. நமது சந்திப்புகள் எத்தகையது எனச் சிந்திப்போம். மகிழ்ச்சியையும், இறை ஆசிரையும் நன்மையான காரியங்களையும் பகிரட்டும் நமது சந்திப்புகள்.
இறைவேண்டல்
அன்பு இறைவா! எங்கள் அன்றாட வாழ்வில் நாங்கள் சந்திக்கும் அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தருபவர்களாகவும், பயனுள்ளவர்களாகவும் விளங்க அருள் புரியும். ஆமென்.
அருட்பணி. குழந்தை இயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️
Join with us 👇
Website: https://catholicvoicecv.blogspot.com
Youtube: https://www.youtube.com/channel/UCcgIiK1gUEqRCmTsc7ZjAoA
Youtube: https://www.youtube.com/channel/UCxBBHQAKIjii_MsZfIYNF5A
Facebook:https://www.facebook.com/Catholic-Voice-108151311955076
Instagram:https://www.instagram.com/invites/contact/?i=16mmdwn460k8p&utm_content=p6lg283
No comments:
Post a Comment