Monday, December 19, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (20-12-2022)

 

திருவருகைக் கால வார நாள்கள் - டிசம்பர் 20



முதல் வாசகம்

இதோ, கன்னிப் பெண் கருத்தாங்குவார்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 7: 10-14

அந்நாள்களில்

ஆண்டவர் ஆகாசுக்கு மீண்டும் தம் திருவாக்கை அருளிச் சொல்லியது: “உம் கடவுளாகிய ஆண்டவர் உமக்கு ஓர் அடையாளத்தை அருளுமாறு கேளும்; அது கீழே பாதாளத்திலோ, மேலே வானத்திலோ தோன்றுமாறு கேட்டுக்கொள்ளும்” என்றார். அதற்கு ஆகாசு, “நான் கேட்கமாட்டேன். ஆண்டவரைச் சோதிக்கமாட்டேன்” என்றார். அதற்கு எசாயா: “தாவீதின் குடும்பத்தாரே! நான் சொல்வதைக் கேளுங்கள்; மனிதரின் பொறுமையைச் சோதித்து மனம் சலிப்படையச் செய்தது போதாதோ? என் கடவுளின் பொறுமையைக்கூட சோதிக்கப் பார்க்கிறீர்களோ? ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தை அருள்வார். இதோ, கன்னிப் பெண் கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்; அக்குழந்தைக்கு அவர் ‘இம்மானுவேல்’ என்று பெயரிடுவார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 24: 1-2. 3-4ab. 5-6 (பல்லவி: 7c,10b காண்க)

பல்லவி: ஆண்டவர் எழுந்தருள்வார்; மாட்சிமிகு மன்னர் இவரே.

1
மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை; நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம்.
2
ஏனெனில், அவரே கடல்களின்மீது அதற்கு அடித்தளமிட்டார்; ஆறுகள்மீது அதை நிலைநாட்டினவரும் அவரே. - பல்லவி

3
ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக்கூடியவர் யார்?
4ab
கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்; பொய்த் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர். - பல்லவி

5
இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்; தம் மீட்பராம் கடவுளிடமிருந்து நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார்.
6
அவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே; யாக்கோபின் கடவுளது முகத்தைத் தேடுவோர் இவர்களே. - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! வானக அரசின் வாயிலைத் திறக்கும் தாவீதின் திறவுகோல் நீரே. இருளிலே இருக்கும் கைதிகள் தளையைக் களைந்திட எழுந்தருள்வீரே. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்.

 லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 26-38

ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா.

வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, “அருள் நிறைந்தவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்” என்றார். இவ்வார்த்தைகளைக் கேட்டு மரியா கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார்.

வானதூதர் அவரைப் பார்த்து, “மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது” என்றார்.

அதற்கு மரியா வானதூதரிடம், “இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!” என்றார். வானதூதர் அவரிடம், “தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப்போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும். உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம். ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை” என்றார்.

பின்னர் மரியா, “நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்றார். அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


கடவுளின் அருளை கண்டடைந்தவர்களா நாம்! 


கிறிஸ்துவின் பிறப்புக்காக நம்மையே நாம் தயாரிக்கும் வேளையில்  கடவுளின் அருளை கண்டடையும் மக்களாக வாழ இன்றைய நற்செய்தி வாசகம் நம்மை அழைக்கின்றது.  உலகின் பெரும்பகுதி நீரால் நிறைந்துள்ளதைப் போல, எல்லா இடமும் நுழையும் காற்றை போல, பூமிக்கு கூரையாய் விளங்கும் ஆகாயம் போல கடவுளின் அருளானது எங்கும் எல்லா இடங்களிலும் கொட்டிக்கிடக்கின்றது. ஆனால் நாம்தான் அவ்வருள் நம்மைச் சூழ்ந்துள்ளதை பல நேரங்களில் உணராமல் இருக்கிறோம். அவ்வருளை கண்டடைய நாம் முற்படவேண்டாமா?


"மரியா"  கடவுளின் அருளை கண்டடைந்ததற்கு மிகச் சிறந்த உதாரணமாக இருக்கிறார். வானதூதர் மரியாவை வாழ்த்தும் போது "மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர்" என்று வாழ்த்தினார் என நாம் வாசிக்கிறோம். எப்படி அவரால் கடவுளின் அருளை கண்டடைய முடிந்தது?

* கடவுளால் எல்லாம் முடியும் என்று   நம்பியதால் 

* ஆண்டவருடைய அடிமை என்ற அவருடைய தாழ்ச்சி நிறைந்த வாழ்வால் 

* உமது சொற்படியே நிகழட்டும் இறை விருப்பத்தை துணிச்சலுடன் ஏற்றுக்கொண்ட மனப்பாங்கால்


ஆம்.  கடவுளின் அருளை நாமும் கண்டடைய வேண்டுமென விரும்பினால் நாமும் இறைநம்பிக்கையில் வளர வேண்டும். நம்மையே கடவுளின் முன்னிலையில் தாழ்த்தி நம்முடைய வெறுமையை உணரவேண்டும். நம்முடைய விருப்பத்தை விட கடவுளின் திட்டத்தை உணர்ந்தவர்களாய் வாழ வேண்டும். அவ்வாறு வாழ்ந்தால் எப்போதும் நம்மச் சூழ்ந்துள்ள கடவுளின் அருளை நம்மால் கண்டடைய முடியும். அவ்வருள் இன்ப துன்ப நேரங்களில் நம்மை சரியாக வழிநடத்தும்.

கடவுளின் அருளைக்  கண்டடைய விடாமல் நம்மைத் தடுக்கும் நம்பிக்கையின்மை, தாழ்ச்சியின்மை மற்றும் நம் விருப்பத்தையே முதன்மைப்படுத்தி வாழும் நிலைகளைக் களைவோம். 

 இறைவேண்டல் 

அருளின் ஊற்றே இறைவா! 

அன்னை மரியாவைப் போல நம்பிக்கையோடும், தாழ்ச்சியோடும், இறைசித்தத்திற்கும் பணிந்து உமது அருளைக் கண்டடைய வரமருளும். ஆமென்



அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...