Sunday, December 18, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (19-12-2022)

 

திருவருகைக் கால வார நாள்கள் - டிசம்பர் 19



முதல் வாசகம்

சிம்சோனின் பிறப்பு முன்னறிவிக்கப்படுகிறது.

நீதித்தலைவர்கள் நூலிலிருந்து வாசகம் 13: 2-7, 24-25

அந்நாள்களில்

சோராவைச் சார்ந்தவரும் தாண் குலத்தவருமான ஒருவர் இருந்தார். அவர் பெயர் மனோவாகு. அவர் மனைவி மலடியாய் இருந்ததால், குழந்தை பெறவில்லை. ஆண்டவரின் தூதர் அப்பெண்ணுக்குத் தோன்றி அவரிடம், “நீ மலடியாய் இருந்ததால் இதுவரை குழந்தை பெற்றெடுக்கவில்லை. ஆனால், இனி நீ கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுப்பாய். இப்பொழுது கவனமாயிரு! திராட்சை இரசமோ மதுபானமோ அருந்தாதே! தீட்டான எதையும் உண்ணாதே. ஏனெனில் நீ கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுப்பாய். சவரக் கத்தி அவன் தலைமீது படக்கூடாது. ஏனெனில் பையன் பிறப்பிலிருந்தே கடவுளுக்கென ‘நாசீர்’ ஆக இருப்பான். அவன் இஸ்ரயேல் மக்களைப் பெலிஸ்தியரின் கையிலிருந்து விடுவிக்கத் தொடங்குவான்” என்றார். அப்பெண் தம் கணவரிடம் வந்து கூறியது: “கடவுளின் மனிதர் என்னிடம் வந்தார். அவரது தோற்றம் கடவுளின் தூதரின் தோற்றம் போல் பெரிதும் அச்சத்திற்குரியதாக இருந்தது. அவர் எங்கிருந்து வந்தவர் என்று நான் அவரைக் கேட்கவில்லை. அவரும் எனக்குத் தம் பெயரை அறிவிக்கவில்லை. அவர் என்னிடம். ‘இதோ! நீ கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுப்பாய். ஆகவே நீ திராட்சை இரசமோ மதுபானமோ அருந்தாதே. தீட்டான எதையும் உண்ணாதே. ஏனெனில் பையன் பிறந்த நாள் முதல் இறக்கும் நாள் வரை, கடவுளுக்கென நாசீராக இருப்பான்’ என்றார்.”

அப்பெண் ஒரு மகனைப் பெற்றெடுத்து அவனுக்குச் சிம்சோன் எனப் பெயரிட்டார். பையன் வளர்ந்து பெரியவனானான். ஆண்டவர் அவனுக்கு ஆசி வழங்கினார். சோராவுக்கும், எசுத்தாவேலுக்குமிடையே அவன் இருக்கும்போதுதான் ஆண்டவரின் ஆவி அவனைத் தூண்டத் தொடங்கியது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 71: 3-4a. 5-6ab. 16-17 (பல்லவி: 8ab காண்க)

பல்லவி: நாளெல்லாம் நான் பேசுவது உமது பெருமையே.

3
என் அடைக்கலப் பாறையாக நீர் இருந்தருளும்; கோட்டை அரணாயிருந்து என்னை மீட்டருளும்; ஏனெனில், நீர் எனக்குக் கற்பாறையாகவும் அரணாகவும் இருக்கின்றீர்.
4a
என் கடவுளே, பொல்லார் கையினின்று என்னைக் காத்தருளும். - பல்லவி

5
என் தலைவரே, நீரே என் நம்பிக்கை; ஆண்டவரே, இளமை முதல் நீரே என் நம்பிக்கை.
6ab
பிறப்பிலிருந்து நான் உம்மைச் சார்ந்துள்ளேன்; தாய் வயிற்றிலிருந்து நீர் என்னைப் பிரித்தெடுத்தீர். - பல்லவி

16
தலைவராகிய ஆண்டவரே! உமது வலிமைமிகு செயல்களை எடுத்துரைப்பேன்; உமக்கே உரிய நீதி முறைமையைப் புகழ்ந்துரைப்பேன்.
17
கடவுளே, என் இளமைமுதல் எனக்குக் கற்பித்து வந்தீர்; இனிவரும் நாள்களிலும் உம் வியத்தகு செயல்களை அறிவிப்பேன். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஈசாயின் குலக்கொழுந்தே, மக்களுக்கு ஓர் அருஞ் சின்னமே, எமை மீட்க எழுந்தருளும். தாமதம் செய்யாதேயும். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

திருமுழுக்கு யோவானின் பிறப்பு முன்னறிவிக்கப்படுகிறது.

 லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 5-25

யூதேய நாட்டில் ஏரோது அரசனாக இருந்த காலத்தில், அபியா வகுப்பைச் சேர்ந்த செக்கரியா என்னும் பெயர் கொண்ட குரு ஒருவர் இருந்தார். அவர் மனைவி ஆரோனின் வழி வந்தவர்; அவர் பெயர் எலிசபெத்து. அவர்கள் இருவரும் கடவுள் பார்வையில் நேர்மையானவர்களாய் விளங்கினார்கள். ஆண்டவருடைய அனைத்துக் கட்டளைகளுக்கும் ஒழுங்குகளுக்கும் ஏற்பக் குற்றமற்றவர்களாய் நடந்து வந்தார்கள். அவர்களுக்குப் பிள்ளை இல்லை; ஏனெனில், எலிசபெத்து கருவுற இயலாதவராய் இருந்தார். மேலும் அவர்கள் வயது முதிர்ந்தவர்களாயும் இருந்தார்கள்.

தம்முடைய பிரிவின்முறை வந்தபோது, செக்கரியா கடவுளின் திருமுன் குருத்துவப் பணி ஆற்றி வந்தார். குருத்துவப் பணி மரபுக்கு ஏற்ப, ஆண்டவரின் திருக்கோவிலுக்குள் சென்று தூபம் காட்டுவது யாரென்று அறியச் சீட்டுக் குலுக்கிப் போட்டபோது அது செக்கரியா பெயருக்கு விழுந்தது. அவர் தூபம் காட்டுகிற வேளையில், மக்கள் கூட்டத்தினர் அனைவரும் வெளியே இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தனர்.

அப்பொழுது ஆண்டவருடைய தூதர் ஒருவர் தூப பீடத்தின் வலப்பக்கத்தில் நின்றவாறு அவருக்குத் தோன்றினார். அவரைக் கண்டு செக்கரியா அச்சமுற்றுக் கலங்கினார். வானதூதர் அவரை நோக்கி, “செக்கரியா, அஞ்சாதீர், உமது மன்றாட்டு கேட்கப்பட்டது. உம் மனைவி எலிசபெத்து உமக்கு ஒரு மகனைப் பெற்றெடுப்பார்; அவருக்கு யோவான் எனப் பெயரிடுவீர். நீர் மகிழ்ந்து பேருவகை கொள்வீர். அவரது பிறப்பால் பலரும் மகிழ்ச்சியடைவர். அவர் ஆண்டவர் பார்வையில் பெரியவராய் இருப்பார்; திராட்சை மதுவோ வேறு எந்த மதுவோ அருந்தமாட்டார்; தாய் வயிற்றிலிருக்கும்போதே தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப் படுவார். அவர், இஸ்ரயேல் மக்களுள் பலரைத் தம் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வரச் செய்வார். எலியாவின் உளப்பாங்கையும் வல்லமையையும் உடையவராய் அவருக்கு முன் செல்வார்; தந்தையரும் மக்களும் உளம் ஒத்துப்போகச் செய்வார்; நேர்மையாளர்களின் மனநிலையைக் கீழ்ப்படியாதவர்கள் பெறச் செய்வார்; இவ்வாறு ஆண்டவருக்கு ஏற்புடைய ஒரு மக்களினத்தை ஆயத்தம் செய்வார்” என்றார்.

செக்கரியா வானதூதரிடம், “இது நடைபெறும் என எனக்கு எப்படித் தெரியும்? நான் வயதானவன். அதுபோல் என் மனைவியும் வயது முதிர்ந்தவராயிற்றே” என்றார். அதற்கு வானதூதர் அவரிடம், “நான் கபிரியேல்; கடவுளின் திருமுன் நிற்பவன்; உம்மோடு பேசவும் இந்த நற்செய்தியை உமக்கு அறிவிக்கவும் அனுப்பப்பட்டேன். இதோ பாரும், உரிய காலத்தில் நிறைவேற இருக்கும் என்னுடைய வார்த்தைகளை நீர் நம்பவில்லை. ஆதலால் அவை நிறைவேறும் வரை நீர் பேச்சற்றவராய் இருப்பீர்; உம்மால் பேசவே இயலாது” என்றார்.

மக்கள் செக்கரியாவுக்காகக் காத்திருந்தனர். திருக்கோவிலில் அவர் காலந்தாழ்த்துவதைக் குறித்து அவர்கள் வியப்படைந்தார்கள். அவர் வெளியே வந்தபோது அவர்களிடம் பேசமுடியாமல் இருந்தார். ஆதலால் அவர் திருக்கோவிலில் ஏதோ காட்சி கண்டிருக்க வேண்டும் என அவர்கள் உணர்ந்துகொண்டார்கள். அவர் அவர்களிடம் சைகைகள் வாயிலாக உரையாடி வந்தார்; பேச்சற்றே இருந்தார். அவருடைய திருப்பணிக் காலம் முடிந்ததும் அவர் வீடு திரும்பினார்.

அதற்குப் பின்பு அவர் மனைவி எலிசபெத்து கருவுற்று ஐந்து மாதமளவும் பிறர் கண்ணில் படாதிருந்தார். “மக்களுக்குள் எனக்கிருந்த இகழ்ச்சியை நீக்க ஆண்டவர் என்மீது அருள்கூர்ந்து இந்நாளில் இவ்வாறு செய்தருளினார்” என்று தமக்குள் சொல்லிக்கொண்டார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


கடவுள் பார்வையில் நேர்மையானவர்களா நாம்


நேர்மை என்பது ஒவ்வொரு மனிதனிடத்திலும் இருக்க வேண்டிய முக்கியமான பண்பாகும். ஒரு மனிதர் நேர்மையாக வாழும் பொழுது அவர் வாழ்கின்ற காலத்தில் துன்பப்படலாம். ஆனால் அவர் இந்த மண்ணுலகத்தில் விட்டுச் செல்கின்ற மதிப்பீடு மிகச் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தும். புது வாழ்வையும் புது மாற்றத்தையும் இந்த சமூகத்திற்கு கொடுக்கும். நான் ஒரு முறை பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த பொழுது பயணச்சீட்டு எடுப்பதற்காக என்னுடைய பாக்கெட்டிலிருந்து 500 ரூபாய் தாளை எடுத்தேன். அதை எடுக்கும் பொழுது மற்றொரு 500 ரூபாய் தாள் கீழே விழுந்தது. பேருந்தில் யாசகம் பெற்று வந்த ஒரு வயதான முதியவர் அந்த 500 ரூபாய் தாளைக் கையில் எடுத்து "ஐயா! உங்களுடைய 500 தாள் கீழே விழுந்துவிட்டது என்று கொடுத்தார்".  இந்த நிகழ்வு என்னை மெய்சிலிர்க்க வைத்தது. அவர் நேர்மையை கண்டு மற்ற பயணிகளும் நானும் மகிழ்ந்தோம். எனவே அந்த முதியவருக்கு என்னால் முடிந்த சிறிய பங்களிப்பைக் கொடுத்து உதவி முதியோர் இல்லம் செல்ல வழிகாட்டினேன். 


நம்முடைய வாழ்வு நேர்மையுள்ள வாழ்வாக கடவுளுக்கும் பிற மனிதருக்கும் முன்னால் இருக்கும் பொழுது நிச்சயமாக கடவுளின் ஆசீர்வாதம் நிறைவாக நமக்கு கிடைக்கும். இன்றைய நற்செய்தியில் சக்கரியா மற்றும் எலிசபெத் என்ற தம்பதியர்களை பற்றி வாசிக்கிறோம். இவர்கள் இருவரும் நேர்மையுள்ள வாழ்வுக்குச் சான்றாக வாழ்ந்தனர். இவர்கள் வாழ்ந்த காலகட்டத்தில் ஒரு தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்றால் அவர்கள் கடவுளின் சாபத்தை பெற்றவர்களாக கடத்தப்பட்டனர். இவர்களும் பல்வேறு விமர்சனங்களுக்கும் துன்பங்களுக்கும் குழந்தை பாக்கியம் இல்லாத காரணத்தால் உள்ளாகினர். ஆனால் கடவுள் அவர்களை கைவிடாமல் அவர்களின் நேர்மையான வாழ்விற்கு அங்கீகாரம் கொடுக்கும் விதமாக குழந்தை பாக்கியத்தை கொடுத்தார். அக்குழந்தையை இந்த உலகை மீட்க வந்த ஆண்டவர் இயேசுவினுடைய வழியை  ஆயத்தப்படுத்தும் குழந்தையாக கடவுள் பயன்படுத்தினார்.


நம்முடைய வாழ்வில் நேர்மைத் தன்மையோடு வாழும் பொழுது நிச்சயமாக கடவுளுடைய கைமாறு உண்டு. இதற்குச் சான்றாக பழைய ஏற்பாட்டில் நோவாவும் அவருடைய குடும்பத்தினரும் இருக்கின்றனர். நோவா வாழ்ந்த காலகட்டத்தில் மக்கள் அனைவரும் கடவுளுக்கு எதிராக தீச்செயல்களைச் செய்தனர். ஆனால் நோவா தீச்செயல்கள் செய்ய சூழல் இருந்தும் நேர்மையோடு வாழ்ந்து கடவுளுக்கு சான்று பகர்ந்தார். எனவே வெள்ளத்தால் மனிதர்களை அழிக்க நினைத்த கடவுள் நோவாவின் நேர்மைத்தனத்தை முன்னிட்டு அவரையும் அவரின் குடும்பத்தாரையும் மீட்டார். இது நோவாவிற்கு  நேர்மைக்கு கிடைத்தப் பரிசாக இருக்கின்றது.


அதேபோலதான் சக்கரியா மற்றும் எலிசபெத் இவர்களின் மகன் திருமுழுக்கு யோவான் நேர்மைக்கு சான்று பகர்பவராக இருந்தார். திருமுழுக்கு யோவானின் செயல்களின்  பொருட்டு அனைவரும் இவரை மெசியா எனக் கருதினார். இவர் நினைத்திருந்தால் தான்தான்  மெசியா என மக்களை ஏமாற்றி இருக்கலாம். ஆனால் அவர் உண்மையோடும் நேர்மையோடும் தன்னுடைய அழைப்பிற்கேற்ற பணியினை செய்தார். இயேசுவின் வழியை ஆயத்தப்படுத்தி இயேசு வந்த பிறகு உலகின் பாவங்களை மீட்கும் செம்மறி என  அவரை இவ்வுலகிற்கு  சுட்டிக்காட்டினார். தன் வாழ்நாள் முழுவதும் நேர்மையோடு வாழ்ந்து உண்மையை உண்மை என உரக்கச் சொல்லி மிகப்பெரிய சான்று வாழ்வு வாழ்ந்தார். அவர் நேர்மையோடு உண்மைக்குச் சான்று பகர்ந்ததால் அவரின் தலை வெட்டப்பட்டாலும் அவரின் மதிப்பீடு இன்றளவும் உயிரோடு தான் இருக்கின்றது. எனவே நேர்மையோடு வாழ்பவர்களுக்கு எப்பொழுதும்  குறை இருக்காது. ஏனெனில் நம்மைப் படைத்த கடவுள் நேர்மையுள்ளவர் உண்மையானவர். 


நான் என்னுடைய பணித்தளத்திலே வீடுகளை சந்திக்கும் பொழுது குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகளை பார்க்கும் சூழல் ஏற்படும். நான் அவர்களோடு பேசும்பொழுது "எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க ஜெபித்துக் கொள்ளுங்கள்" எனக் கண்ணீரோடு  கூறுவர். நான் அவர்களுக்கு சொல்லும் செய்தி இதுதான் "சக்கரியா மற்றும் எலிசபெத் போன்று கடவுளுக்கும் பிற மனிதர்களுக்கும் நேர்மையோடும் உண்மையோடும் இருங்கள். அவர்கள் கொண்டிருந்த இறை நம்பிக்கையில் நிலைத்திருங்கள். நிச்சயம் கடவுள் உங்கள் மீது கருணை கொண்டு குழந்தை பாக்கியத்தைக் கொடுப்பார். உங்கள் வழியாக அவரே உண்மையான கடவுள் என்பதைச் சான்று பகர்வார்" எனக்கூறி அவர்களை சான்று உள்ள மக்களாக வாழ வழிகாட்டுவேன். இத்தகைய மனநிலை தான் ஒவ்வொரு கிறிஸ்தவர் இடத்திலும் இருக்க வேண்டும்.


கிறிஸ்து பிறப்பு விழாவைக் கொண்டாட நம்மையே ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கும் இவ்வேளையில் சக்கரியா மற்றும் எலிசபெத் கொண்டிருந்த அதே நம்பிக்கையையும் நேர்மையும் உண்மையும் நிறைந்த வாழ்வையும் வாழ்வாக்க அழைக்கப்பட்டுள்ளோம். அவ்வாறு வாழுகின்ற பொழுது பாலன் இயேசு நமக்கு நிறைவான மகிழ்ச்சியையும் அருளையும் கொடுப்பார். அவர் இரக்கத்தையும் பரிவையும் அன்பையும் நம்மால் முழுமையாகச் சுவைக்க முடியும். அத்தகைய நேர்மையுள்ள மனநிலையைப் பெற்றுக்கொள்ள தேவையான அருளை வேண்டுவோம்.


 இறைவேண்டல்

நேர்மையின் இறைவனே! நீ கொடுத்த வாழ்விற்காக நன்றி செலுத்துகின்றோம். எங்களுடைய அன்றாட வாழ்வில் எந்நாளும் நேர்மைக்கும் உண்மைக்கும் சான்று பகரத் தேவையான அருளைத் தாரும். அதற்குத் திருமுழுக்கு யோவானிடம் இருந்த அந்த மனநிலையையும் நோவாவுக்கு இருந்த அந்த மனநிலையையும் சக்கரியா மற்றும் எலிசபெத்துக்கு இருந்த அந்த மனநிலையையும் உம் திருமகன் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடம் இருந்த அந்த மனநிலையையும் தந்து எங்களை உமக்கேற்ற பிள்ளைகளாக உருமாற்றும். ஆமென்.



அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...