Thursday, December 22, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (23-12-2022)

 

திருவருகைக் கால வார நாள்கள் - டிசம்பர் 23



முதல் வாசகம்

ஆண்டவரின் நாள் வருமுன், இறைவாக்கினர் எலியாவை நான் உங்களிடம் அனுப்புகிறேன்.

இறைவாக்கினர் மலாக்கி நூலிலிருந்து வாசகம் 3: 1-4; 4: 5-6

படைகளின் ஆண்டவர் கூறியது: “இதோ! நான் என் தூதனை அனுப்புகிறேன். அவர் எனக்குமுன் வழியை ஆயத்தம் செய்வார்; அப்பொழுது, நீங்கள் தேடுகின்ற தலைவர் திடீரெனத் தம் கோவிலுக்கு வருவார். நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் உடன்படிக்கையின் தூதர் இதோ வருகிறார்” என்கிறார் படைகளின் ஆண்டவர். ஆனால், அவர் வரும் நாளைத் தாங்கக் கூடியவர் யார்? அவர் தோன்றும்போது நிற்க வல்லவர் யார்? அவர் புடமிடுகிறவரின் நெருப்பைப்போலும் சலவைத் தொழிலாளியின் சவர்க்காரத்தைப் போலும் இருப்பார். அவர் புடமிடுபவர் போலும் வெள்ளியைத் தூய்மைப்படுத்துபவர்போலும் அமர்ந்திருப்பார். லேவியின் புதல்வரைத் தூய்மையாக்கிப் பொன், வெள்ளியைப்போல் அவர்களைப் புடமிடுவார். அவர்களும் ஆண்டவருக்கு ஏற்புடைய காணிக்கை கொண்டு வருவார்கள். அப்பொழுது பண்டைக் காலத்தில் முன்னைய ஆண்டுகளில் இருந்தது போல் யூதாவின் காணிக்கையும் எருசலேமின் காணிக்கையும் ஆண்டவருக்கு உகந்தனவாய் இருக்கும்.

இதோ! பெரியதும் அச்சத்தைத் தோற்றுவிப்பதுமான ஆண்டவரின் நாள் வருமுன், இறைவாக்கினர் எலியாவை நான் உங்களிடம் அனுப்புகிறேன். நான் வந்து உலகைச் சபித்துத் தண்டிக்காதபடி, அவர் பெற்றோரின் உள்ளங்களைப் பிள்ளைகளிடத்தும், பிள்ளைகளின் உள்ளங்களைப் பெற்றோரிடத்தும் திருப்புமாறு செய்வார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 25: 4-5ab. 8-9. 10,14 (பல்லவி: லூக் 21:28)

பல்லவி: தலைநிமிர்ந்து நில்லுங்கள் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது.

4
ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்; உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்.
5ab
உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்; ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள்; - பல்லவி

8
ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்; ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார்.
9
எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்; எளியோருக்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார். - பல்லவி

10
ஆண்டவரது உடன்படிக்கையையும் ஒழுங்குமுறையையும் கடைப்பிடிப்போர்க்கு, அவருடைய பாதைகளெல்லாம் பேரன்பும் உண்மையும் உள்ளனவாய் விளங்கும்.
14
ஆண்டவரின் அன்புறவு அவருக்கு அஞ்சி நடப்போருக்கே உரித்தாகும்; அவர் அவர்களுக்கு தமது உடன்படிக்கையை வெளிப்படுத்துவார்; - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! மக்கள் அனைவர்க்கும் அரசரே, திருச்சபையின் மூலைக்கல்லே, மண்ணிலிருந்து நீர் உருவாக்கிய மனிதனை மீட்க வாரும். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

திருமுழுக்கு யோவானின் பிறப்பு.

 லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 57-66

எலிசபெத்துக்குப் பேறுகாலம் நெருங்கியது. அவர் ஒரு மகனைப் பெற்றெடுத்தார். ஆண்டவர் அவருக்குப் பெரிதும் இரக்கம் காட்டினார் என்பதைக் கேள்விப்பட்டுச் சுற்றி வாழ்ந்தோரும் உறவினரும் அவரோடு சேர்ந்து மகிழ்ந்தனர். எட்டாம் நாளில் அவர்கள் குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வந்தார்கள்; செக்கரியா என்ற அதன் தந்தையின் பெயரையே அதற்குச் சூட்ட இருந்தார்கள். ஆனால் அதன் தாய் அவர்களைப் பார்த்து, “வேண்டாம், அதற்கு யோவான் எனப் பெயரிட வேண்டும்” என்றார். அவர்கள் அவரிடம், “உம் உறவினருள் இப்பெயர் கொண்டவர் எவரும் இல்லையே” என்று சொல்லி, “குழந்தைக்கு என்ன பெயரிடலாம்? உம் விருப்பம் என்ன?” என்று தந்தையை நோக்கிச் சைகை காட்டிக் கேட்டார்கள். அதற்கு அவர் எழுதுபலகை ஒன்றைக் கேட்டு வாங்கி, “இக்குழந்தையின் பெயர் யோவான்” என்று எழுதினார். எல்லாரும் வியப்படைந்தனர். அப்பொழுதே அவரது வாய் திறந்தது; நா கட்டவிழ்ந்தது; அவர் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார். சுற்றி வாழ்ந்தோர் அனைவரும் இதைப்பற்றிக் கேள்விப்பட்டு அஞ்சினர். இச்செய்தி யூதேய மலை நாடெங்கும் பரவியது. கேள்விப்பட்டவர்கள் யாவரும் இச்செய்தியைத் தங்கள் உள்ளங்களில் இருத்தி, “இக்குழந்தை எப்படிப்பட்டதாக இருக்குமோ?” என்று சொல்லிக் கொண்டார்கள். ஏனெனில் அக்குழந்தை ஆண்டவருடைய கைவன்மையைப் பெற்றிருந்தது.

ஆண்டவரின் அருள்வாக்கு.


அருள்வாக்கு.


நமது பிறப்பை சிறப்பாக்குவோம்! 

கிறிஸ்து பிறப்பு விழாவிற்கு மிக அருகில் நாம் இருக்கிறோம். இன்றைய நாளில் நமது சிந்தனைக்காக யோவானின் பிறப்பு நிகழ்வு தரப்பட்டுள்ளது. இந்நிகழ்வில்  மூன்று முக்கியமான சிந்தனைகளை நமது பிறப்போடும் நாம் ஒப்பிட்டு பார்க்கலாம். 


முதலாவதாக யோவான் பிறந்தவுடன் அக்கம் பக்கத்திலுள்ளோர் கடவுள் முதிர்ந்த வயதில் சக்கரியாவுக்கும் எலிசபெத்துக்கும் கடவுள் இரக்கம் காட்டியுள்ளார் என்று எண்ணி அவர்களோடு மகிழ்ந்தனர் என நாம் வாசிக்கிறோம். குழந்தைப் பேறு என்பது கடவுளின் இரக்கத்தின் வெளிப்பாடு. இன்றைய சமூகத்தில் எத்தனை பேர் பிள்ளைப் பேறுக்காக ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம். அவ்வாறிருக்க நாம் அனைவருமே நம் பெற்றோர்களுக்கு கடவுளுடைய  இரக்கத்தின் அடையாளமாக பிறந்தவர்கள் என்பதே உண்மை. இந்த உண்மையை நாம் உணர்ந்து வாழ்வோமெனில் நம்முடைய பிறப்பும் யோவானின் பிறப்பைப் போல சிறப்புடையதாய் இருக்கும் .


இரண்டாவதாக யோவான் எனப் பெயரிட வேண்டும் என்ற சொன்னவுடன் சக்கரியாவின் நா கட்டவிழ்ந்தது. அவர் இறைவனைப் போற்றி புகழ்ந்தார் என வாசிக்கிறோம். சக்கரியா இறைவனின் வாக்குறுதியை நம்பாததால் அவர் பேச்சிழந்தார். குறித்த காலத்தில் எல்லாம் நிறைவேறியதைக் கண்டு அவர் கடவுளை நம்பியதோடல்லாமல் அவர் சொன்னபடியே தன் குழந்தைக்கு பெயரிட விழைந்தார். அவருடைய நாவு கட்டவிழ்ந்தது. நாமும் நம்மைச் சுற்றியுள்ள அனைவருக்கும் கடவுளால்  வாக்குறுதிகளாகத் தரப்பட்டவர்களே. அதை நாம் மெய்ப்பிக்கும் விதமாக வாழும் போது நமது பிறப்பும் சிறப்படையுமன்றோ.


மூன்றாவதாக இந்த நிகழ்வுகளையெல்லாம் கண்டவர்கள் அச்சம் கொண்டனர் என வாசிக்கிறோம். இங்கே அச்சம் என்பது இறைவனின் செயல்களைக் கண்டு வரக்கூடிய ஒரு வியப்பு கலந்த உணர்வு. நமது வாழ்வும் செயல்முறைகளும் பிறருக்கு இறைவன் பால் இத்தகைய அச்சத்தையும் வியப்பையும் உருவாக்குகிறதா என சிந்தித்து வாழ வேண்டும். அவ்வாறு வாழ்ந்தால் நமது பிறப்பும் சிறப்படையும். 


 நம்முடைய அன்றாட வாழ்க்கையில் கடவுள் இரக்கத்தின் அடையாளமாக இருக்கிறார் என்பதை முழுமையாக உணர்வோம். தன்னுடைய ஒரே மகனை இந்த உலகிற்கு குழந்தையாக அனுப்பியதன் மூலம் கடவுளின் இரக்கத்தையும்  அன்பையும் நம்மால்  அறிய முடிகிறது. எனவே நம்முடைய வாழ்க்கையில் கடவுள் செய்த இரக்கச் செயல்களை எண்ணி நன்றி கூறுவோம். சக்கரியாவின் நா கட்ட அவிழ்ந்தவுடன் கடவுளைப் புகழ்ந்தது போல நாமும் கடவுள் செய்த நன்மைகள் அனைத்தையும் எண்ணிப் பார்த்து ஒவ்வொரு நாளும் அவரைப் போற்றிப் புகழ முயற்சி செய்வோம். இறுதியாக யோவானின் பிறப்பை குறித்து மக்கள் அச்சத்தில் ஆழ்ந்தார்கள். கடவுளின் வியத்தகு  செயல்களை எண்ணி அவருக்கு அஞ்சி கீழ்ப்படியும் பிள்ளைகளாக வாழ முயற்சி செய்வோம்.

அப்படி வாழுகிற பொழுது நம்முடைய பிறப்புக்கு முழுமையைக் கொடுத்து கடவுளின் ஆசிரால் நிறைவைப் பெற முடியும். அதற்கு தேவையான அருளை இந்த நாளில் சிறப்பாக மன்றாடுவோம்.


 இறைவேண்டல்

வல்லமையுள்ள இறைவா! நீர் எங்களுக்கு செய்துள்ள வியத்தகு நன்மைகளை  எண்ணி பார்த்து உமக்கு புகழ் சாற்றிட வரம் தாரும்.  இறையச்சத்தோடு எங்கள் வாழ்வை நேரிய முறையில் உமது திருவுளப்படி வாழ்ந்து எமது பிறப்பை சிறப்பாக்க அருளைத் தாரும். ஆமென்.



அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...