திருவருகைக் கால வார நாள்கள் - டிசம்பர் 24
தாவீதின் அரசு ஆண்டவர்முன் என்றென்றும் உறுதியாக இருக்கும்.
சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 7: 1-5, 8b-12, 16
தாவீது அரசர் தம் அரண்மனையில் குடியேறியபின், சுற்றியிருந்த எல்லா எதிரிகளின் தொல்லையினின்றும் ஆண்டவர் அவருக்கு ஓய்வு அளித்தார். அப்போது இறைவாக்கினர் நாத்தானைத் தாவீது அழைத்து, “பாரும், நான் கேதுரு மரங்களாலான அரண்மனையில் வாழ்கிறேன். கடவுளின் பேழையோ கூடாரத்தில் குடியிருக்கிறது” என்று கூறினார். அதற்கு நாத்தான், “நீர் விரும்பியது அனைத்தையும் செய்துவிடும்; ஏனெனில் ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்” என்று அரசரிடம் சொன்னார்.
அன்று இரவே ஆண்டவரின் வார்த்தை நாத்தானுக்கு அருளப்பட்டது: “நீ சென்று, என் ஊழியன் தாவீதிடம் ஆண்டவர் இவ்வாறு கூறுவதாகச் சொல்:
நான் தங்குவதற்காக எனக்கு ஒரு கோவில் கட்டப்போகிறாயா? என் மக்கள் இஸ்ரயேலின் தலைவனாக விளங்க புல்வெளியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த உன்னை நான் அழைத்தேன். நீ சென்ற இடமெல்லாம் நான் உன்னோடு இருந்தேன்; உன் கண்முன் உன் எதிரிகள் அனைவரையும் அழித்தேன்; மேலும் உலகில் வாழும் பெரும் மனிதர்போல் நீ புகழுறச் செய்வேன். எனது மக்களாகிய இஸ்ரயேலுக்கு ஓர் இடத்தை அளிப்பேன்; அவர்கள் அந்த இடத்திலேயே நிலைத்து வாழச் செய்வேன். என் மக்களாகிய இஸ்ரயேல்மீது நீதித் தலைவர்களை ஏற்படுத்திய நாள்களாகிய தொடக்க காலத்தில் தீயவர்களால் அவர்கள் ஒடுக்கப்பட்டதுபோல இனியும் அவர்கள் அலைக்கழிக்கப்பட மாட்டார்கள். அனைவரின் தொல்லைகளினின்றும் உனக்கு ஓய்வு அளிப்பேன். மேலும், ஆண்டவர்தாமே உன் வீட்டைக் கட்டப் போவதாக அவர் உனக்கு அறிவிக்கிறார்.
உன் வாழ்நாள்கள் நிறைவுபெற்று நீ உன் மூதாதையரோடு துயில் கொள்ளும்போது, உனக்குப் பிறக்கும் உன் வழித்தோன்றலை உனக்குப் பின் நான் உயர்த்தி, அவனது அரசை நான் நிலைநாட்டுவேன். என் முன்பாக உனது குடும்பமும் உனது அரசும் என்றும் உறுதியாயிருக்கும்! உனது அரியணை என்றுமே நிலைத்திருக்கும்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 89: 1-2. 3-4. 26,28 (பல்லவி: 1a)பல்லவி: ஆண்டவரின் பேரன்பை நான் என்றும் பாடுவேன்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! விடிவிண்மீனே, முடிவிலா ஒளியின் சுடரே, நீதியின் கதிரவனே, இருளிலும் மரண நிழலிலும் அவதிப்படுவோரைச் சுடர்வீசி ஒளிர்விக்க வந்தருளும். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடி வருகிறது.
✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 67-79
அக்காலத்தில்
திருமுழுக்கு யோவானின் தந்தை செக்கரியா தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு உரைத்த இறைவாக்கு: “இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவோம். ஏனெனில் அவர் தம் மக்களைத் தேடிவந்து விடுவித்தருளினார். தம் தூய இறைவாக்கினர் வாயினால் தொடக்க முதல் அவர் மொழிந்தபடியே அவர் தம் ஊழியராகிய தாவீதின் குடும்பத்தில் வல்லமை உடைய மீட்பர் ஒருவர் நமக்காகத் தோன்றச் செய்தார்; நம் பகைவரிடமிருந்தும் நம்மை வெறுப்போர் அனைவரின் பிடியிலிருந்தும் நம்மை மீட்பார். அவர் நம் மூதாதையருக்கு இரக்கம் காட்டி, தமது தூய உடன்படிக்கையையும், நம் தந்தையாகிய ஆபிரகாமுக்கு அவர் இட்ட ஆணையையும் நிறைவேற்ற நினைவு கூர்ந்தார். இவ்வாறு நாம் பகைவரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுத் தூய்மையோடும் நேர்மையோடும் வாழ்நாளெல்லாம் அச்சமின்றி அவர் திருமுன் பணி செய்யுமாறு வழிவகுத்தார்.
குழந்தாய், நீ உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய்; ஏனெனில் பாவ மன்னிப்பால் வரும் மீட்பை அவர்தம் மக்களுக்கு அறிவித்து ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த அவர் முன்னே செல்வாய். இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு ஒளிதரவும், நம்முடைய கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யவும் நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும் விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடிவருகிறது.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
வாக்குறுதிகளின் இறைவன் நம்மைத் தேடி வருகிறார்!
நண்பர்கள் இருவர் தங்களிடையே உரையாடிக்கொண்டிருந்தார்கள். அப்போது இருவரும் தங்கள் வாழ்நாள் முழுதும் இணைபிரியாமல் இருக்க வேண்டும் என்றும் குறிப்பாக துன்பத்தில் துணையிருக்க வேண்டும் என்றும் வாக்குறுதி கொடுத்துக்கொண்டனர். நாட்கள் செல்லச் செல்ல அவர்கள் தங்களுடைய போக்கை மாற்றிக்கொள்ள ஆரம்பித்தார். புதிய நண்பர்கள், புதிய பணியிடங்கள், புதிய வாழ்க்கை முறைகள், பண வசதிகள், திருமண வாழ்க்கை என ஒவ்வொன்றாக மாற மாற இவர்தான் தன் நண்பன் என்பதையே மறந்து போனார்கள். இருவரின் வாக்குறுதிகளும் மறைந்து போயின.
மனிதருக்கு மனிதன் தரும் வாக்குறுதிகளின் தன்மை இதுதான். பெரும்பாலும் அவை உறுதியற்றவை. நிலையற்றவை. மறைந்து விடுபவை. ஏன் இறைசந்நிதியில் திருமண வாக்குறுதிகள் கொடுத்து பல வருடங்கள் ஒன்றாக இணைந்து வாழ்ந்து பிள்ளைகள் பெற்றெடுத்த தம்பியர் தங்கள் வாக்குறுதிகளில் நிலையாக இல்லாமல் சிதறிப் போவதை நாம் கண்களால் காண்கிறோம் அன்றோ.
ஆனால் நம் தந்தை கடவுள் வாக்குறுதிகளை நிறைவேற்றுபவராக உள்ளார். தம் ஒரே மகன் இயேசுவை இவ்வுலக மீட்புக்காக அவர் கையளித்த செயல் அவர் வாக்குகளை நிறைவேற்றும் தேவன் என்பதை உணர்த்தும் உச்சகட்ட அடையாளமாகத் திகழ்கிறது. இதைத்தான் இன்றைய இரு வாசகங்களும் நமக்கு எடுத்துரைக்கின்றன. முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா மூலமாக தாவீதின் அறியணையை நிலைநிறுத்துகிறார். அதே போல நற்செய்தியில் சக்கரியா மூதாதையருக்கு கடவுள் தந்த வாக்குறுதியை நிறைவேற்றியதை எண்ணி அவரைப் போற்றி புகழ்கிறார்.
விண்ணகத்தந்தையின் பிள்ளைகளாகிய நாமும் அவரைப் போல உடன்டிக்கையில் நிலையானவர்களாக, கொடுத்த வாக்கை காப்பாற்றுபவர்களாக வாழ அழைக்கப்பட்டுள்ளோம். அவ்வாறு வாழும் போது உறவு நிலைக்கும். அமைதி பெருகும். வாழ்வு செழிக்கும். கடவுள் நம்மோடு வாழ்ந்திடுவார்.
இறைவேண்டல்
வாக்குமாறா தேவனே! உம்மைப்போல் வாக்குமாறாதவர்களாக வாழ்ந்து விடியலைக் காண எமக்கருள் செய்யும். ஆமென்.
அருட்பணி. குழந்தை இயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️
Join with us 👇
Website: https://catholicvoicecv.blogspot.com
Youtube: https://www.youtube.com/channel/UCcgIiK1gUEqRCmTsc7ZjAoA
Youtube: https://www.youtube.com/channel/UCxBBHQAKIjii_MsZfIYNF5A
Facebook:https://www.facebook.com/Catholic-Voice-108151311955076
Instagram:https://www.instagram.com/invites/contact/?i=16mmdwn460k8p&utm_content=p6lg283
No comments:
Post a Comment