Saturday, December 24, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (25-12-2022)

 

கிறிஸ்து பிறப்பு


திருவிழிப்புத் திருப்பலி

பெருவிழா



டிசம்பர் 24ஆம் நாள் மாலையில் நடைபெறும் திருவிழிப்புத் திருப்பலியில் கீழ்க்கண்ட வாசகங்களைப் பயன்படுத்தவும்.

முதல் வாசகம்

ஆண்டவர் உங்களில் பேருவகை கொள்கிறார்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 62: 1-5

சீயோனின் வெற்றி வைகறை ஒளியெனவும், அதன் மீட்பு சுடர் விளக்கெனவும் வெளிப்படும்வரை, அதனை முன்னிட்டு மவுனமாயிரேன்; எருசலேம் பொருட்டுச் செயலற்று அமைதியாயிரேன். பிற இனத்தார் உன் வெற்றியைக் காண்பர்; மன்னர் யாவரும் உன் மேன்மையைப் பார்ப்பர்; ஆண்டவர் தம் நாவினால் சூட்டும் புதியதொரு பெயரால் நீ அழைக்கப்படுவாய்.

ஆண்டவரின் கையில் நீ அழகிய மணிமுடியாகத் திகழ்வாய்; உன் கடவுளின் கரத்தில் அரச மகுடமாய் விளங்குவாய். ‘கைவிடப்பட்டவள்’ என்று இனி நீ பெயர் பெற மாட்டாய்; ‘பாழ்பட்டது’ என இனி உன் நாடு அழைக்கப்படாது; நீ ‘எப்சிபா’ என்று அழைக்கப் படுவாய்; உன் நாடு ‘பெயுலா’ என்று பெயர்பெறும். ஏனெனில், ஆண்டவர் உன்னை விரும்புகின்றார்; உன் நாடு மணவாழ்வு பெறும். இளைஞன் கன்னிப் பெண்ணை மணப்பது போல உன்னை எழுப்பியவர் உன்னை மணந்துகொள்வார்; மணமகன் மணப்பெண்ணில் மகிழ்வது போல் உன் கடவுள் உன்னில் மகிழ்வார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 89: 3-4. 15-16. 26,28 (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவரின் பேரன்பைப்பற்றி நான் என்றும் பாடுவேன்.

3
நீர் உரைத்தது: ‘நான் தேர்ந்துகொண்டவனோடு உடன்படிக்கை செய்துகொண்டேன்; என் ஊழியன் தாவீதுக்கு ஆணையிட்டு நான் கூறியது:
4
உன் வழிமரபை என்றென்றும் நிலைக்கச் செய்வேன்; உன் அரியணையைத் தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கச் செய்வேன்'. - பல்லவி

15
விழாவின் பேரொலியை அறிந்த மக்கள் பேறுபெற்றோர்; ஆண்டவரே! உம் முகத்தின் ஒளியில் அவர்கள் நடப்பார்கள்.
16
அவர்கள் நாள் முழுவதும் உம் பெயரில் களிகூர்வார்கள்; உமது நீதியால் அவர்கள் மேன்மை அடைவார்கள். - பல்லவி

26
‘நீரே என் தந்தை, என் இறைவன், என் மீட்பின் பாறை’ என்று அவன் என்னை அழைப்பான்.
28
அவன்மீது கொண்ட பேரன்பு என்றும் நிலைக்குமாறு செய்வேன்; அவனோடு நான் செய்துகொண்ட உடன்படிக்கையும் எப்பொழுதும் நிலைத்திருக்கும். - பல்லவி

இரண்டாம் வாசகம்

தாவீதின் மகனான கிறிஸ்து பற்றிப் பவுலின் சான்று.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 13: 16-17, 22-25

தொழுகைக் கூடத்தில் பவுல் எழுந்து கையால் சைகை காட்டிவிட்டுக் கூறியது: “இஸ்ரயேல் மக்களே, கடவுளுக்கு அஞ்சுவோரே, கேளுங்கள். இந்த இஸ்ரயேல் மக்களின் கடவுள் நம்முடைய மூதாதையரைத் தேர்ந்தெடுத்தார்; அவர்கள் எகிப்து நாட்டில் அன்னியர்களாகத் தங்கியிருந்தபோது அவர்களை ஒரு பெரிய மக்களினமாக்கினார். பின்பு அவர் தம் தோள்வலிமையைக் காட்டி அவர்களை அந்த நாட்டை விட்டு வெளியே அழைத்துக்கொண்டு வந்தார்;

பின்பு அவர்கள் தங்களுக்கு ஓர் அரசர் வேண்டும் என்று கேட்டார்கள். கடவுள் கீசு என்பவரின் மகனான சவுல் என்பவரை அவர்களுக்கு அரசராகக் கொடுத்தார். பென்யமின் குலத்தினராகிய அவர் நாற்பது ஆண்டுகள் ஆட்சி செலுத்தினார். பின்பு கடவுள் சவுலை நீக்கிவிட்டுத் தாவீதை அவர்களுக்கு அரசராக ஏற்படுத்தினார்; அவரைக் குறித்து ‘ஈசாயின் மகனான தாவீதை என் இதயத்துக்கு உகந்தவனாகக் கண்டேன்; என் விருப்பம் அனைத்தையும் அவன் நிறைவேற்றுவான்’ என்று சான்று பகர்ந்தார்.

தாம் அளித்த வாக்குறுதியின்படி கடவுள் அவருடைய வழிமரபிலிருந்தே இஸ்ரயேலுக்கு இயேசு என்னும் மீட்பர் தோன்றச் செய்தார். அவருடைய வருகைக்கு முன்பே யோவான், ‘மனம்மாறி திருமுழுக்குப் பெறுங்கள்’ என்று இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் பறைசாற்றி வந்தார். யோவான் தம் வாழ்க்கை என்னும் ஓட்டத்தை முடிக்கும் தறுவாயில் ‘நான் யார் என நீங்கள் நினைக்கிறீர்களோ அவரல்ல நான். இதோ, எனக்குப்பின் ஒருவர் வருகிறார்; அவருடைய மிதியடிகளை அவிழ்க்கவும் எனக்குத் தகுதியில்லை’ என்று கூறினார்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நாளை அவனியின் அநீதி அழிவுறும்; உலகின் மீட்பர் நம்மீது அரசாள்வார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

தாவீதின் மகனான இயேசு கிறிஸ்துவின் தலைமுறை அட்டவணை.

 மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 1-25

தாவீதின் மகனும் ஆபிரகாமின் மகனுமான இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியல்:

ஆபிரகாமின் மகன் ஈசாக்கு; ஈசாக்கின் மகன் யாக்கோபு; யாக்கோபின் புதல்வர்கள் யூதாவும் அவர் சகோதரர்களும். யூதாவுக்கும் தாமாருக்கும் பிறந்த புதல்வர்கள் பெரேட்சும் செராகும்; பெரேட்சின் மகன் எட்சரோன்; எட்சரோனின் மகன் இராம். இராமின் மகன் அம்மினதாபு; அம்மினதாபின் மகன் நகசோன்; நகசோனின் மகன் சல்மோன். சல்மோனுக்கும் இராகாபுக்கும் பிறந்த மகன் போவாசு; போவாசுக்கும் ரூத்துக்கும் பிறந்த மகன் ஓபேது; ஓபேதின் மகன் ஈசாய். ஈசாயின் மகன் தாவீது அரசர்.

தாவீதுக்கு உரியாவின் மனைவியிடம் பிறந்த மகன் சாலமோன். சாலமோனின் மகன் ரெகபயாம்; ரெகபயாமின் மகன் அபியாம்; அபியாமின் மகன் ஆசா. ஆசாவின் மகன் யோசபாத்து; யோசபாத்தின் மகன் யோராம்; யோராமின் மகன் உசியா. உசியாவின் மகன் யோத்தாம்; யோத்தாமின் மகன் ஆகாசு; ஆகாசின் மகன் எசேக்கியா. எசேக்கியாவின் மகன் மனாசே; மனாசேயின் மகன் ஆமோன்; ஆமோனின் மகன் யோசியா. யோசியாவின் புதல்வர்கள் எக்கோனியாவும் அவர் சகோதரர்களும். இவர்கள் காலத்தில்தான் யூதர்கள் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டார்கள்.

பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்ட பின்பு எக்கோனியாவுக்குப் பிறந்த மகன் செயல்தியேல்; செயல்தியேலின் மகன் செருபாபேல். செருபாபேலின் மகன் அபியூது; அபியூதின் மகன் எலியாக்கிம்; எலியாக்கிமின் மகன் அசோர். அசோரின் மகன் சாதோக்கு; சாதோக்கின் மகன் ஆக்கிம்; ஆக்கிமின் மகன் எலியூது. எலியூதின் மகன் எலயாசர்; எலயாசரின் மகன் மாத்தான்; மாத்தானின் மகன் யாக்கோபு. யாக்கோபின் மகன் மரியாவின் கணவர் யோசேப்பு. மரியாவிடம் பிறந்தவரே கிறிஸ்து என்னும் இயேசு.

ஆக மொத்தம் ஆபிரகாம் முதல் தாவீதுவரை தலைமுறைகள் பதினான்கு; தாவீது முதல் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவர்கள் வரை தலைமுறைகள் பதினான்கு; பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவர்கள் முதல் கிறிஸ்துவரை தலைமுறைகள் பதினான்கு.

இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார். அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார். அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி. “யோசேப்பே, தாவீதின் மகனே, உம் மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்சவேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்” என்றார்.

“இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்” என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. இம்மானுவேல் என்றால் ‘கடவுள் நம்முடன் இருக்கிறார்’ என்பது பொருள்.

யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார். மரியா தம் மகனைப் பெற்றெடுக்கும்வரை யோசேப்பு அவரோடு கூடி வாழவில்லை. யோசேப்பு அம்மகனுக்கு இயேசு என்று பெயரிட்டார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


அல்லது குறுகிய வாசகம்

மரியா ஒரு மகனைப் பெற்றெடுப்பார்; அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர்.

 மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 18-25

இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார். அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார். அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி. “யோசேப்பே, தாவீதின் மகனே, உம் மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்சவேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்” என்றார்.

“இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்”

என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. இம்மானுவேல் என்றால் ‘கடவுள் நம்முடன் இருக்கிறார்’ என்பது பொருள். யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார். மரியா தம் மகனைப் பெற்றெடுக்கும்வரை யோசேப்பு அவரோடு கூடி வாழவில்லை. யோசேப்பு அம்மகனுக்கு இயேசு என்று பெயரிட்டார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


கடவுளின் பிள்ளைகள் என்ற உரிமையோடு நற்செய்தியாய் மாறுவோம்! 


"இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார். அவரே ஆண்டவராம் மெசியா". அன்றாட இறைவார்த்தை பகிர்வை அனுதினமும் வாசித்து தியானித்து எங்களை உற்சாகப்படுத்தி வரும் அனைவருக்கும் முதலில் எமது கிறிஸ்மஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். 


ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தை பிறக்கும் போது,  கணவன் தந்தை என்ற உரிமையையும், மனைவி தாய் என்ற உரிமையையும் பெறுகிறார்கள். ஆனால்,  இறைவன் மனிதராக பிறந்ததின் வழியாக நாம் அனைவரும் கடவுளின் பிள்ளைகள் என்ற உரிமையைப் பெற்றுள்ளோம். இயேசுவின் பிறப்பு மனிதத்தை புனிதமாக்கிய பிறப்பு.  இந்த நாளில் இயேசுவின் பிறப்பை பொருள்ள முறையில் கொண்டாட கடவுளிடம் முழுமையாக நம்பிக்கை கொள்வோம். பாலன் இயேசுவிடம் முழுமையாக நம்பிக்கை கொண்டு அவரை நம் உள்ளத்தில்  ஏற்றுக்கொள்ளும்  பொழுது,  நாம் அனைவரும் கடவுளின் பிள்ளைகளாக மாறுகிறோம். பாலன் இயேசு தருகின்ற மகிழ்ச்சியை நாம் பெறுகின்றோம். அந்த மகிழ்ச்சியோடு  கடவுளின் திட்டத்தின் படி வாழ முயற்சி செய்யும் பொழுது,  நாமும் நற்செய்தியாக மாறுகிறோம். அந்த நற்செய்தி  பிறருக்கு மகிழ்ச்சியூட்டும். 


எனவேதான் இயேசு பிறந்த போது வானதூதர்கள் சொன்னது "மக்களுக்கெல்லாம் மாபெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தி " என்று. அந்த நற்செய்தி என்ன? இயேசுதான் நற்செய்தி. இயேசு என்ற பெயரே நற்செய்தி. அவர் சொற்கள் நற்செய்தி. அவர் செயல்கள் நற்செய்தி. அவருடைய பார்வை நற்செய்தி. அவருடைய பாதை நற்செய்தி. அவருடைய உடனிருப்பு நற்செய்தி. என " இயேசு " என்ற முழுமனிதனாக வாழ்ந்த, முழு தெய்வமாகத் திகழ்ந்த அவரே நற்செய்தி. 


நீங்களும் நாமும் பிறருக்கு நற்செய்தியா?  துற்செய்தியா? என சற்று சிந்திப்போம். நம்முடைய உடனிருப்பை, சொற்களை, செயல்களை, பார்வையை, பாதையை பிறர் விரும்புகின்றனரா?  இல்லை நம் பெயரைக் கேட்டாலே, நாம் நடக்கின்ற காலடி சத்தத்தைக் கேட்டாலே தூரமாய் போகின்றனரா?  நம் வாழ்வில் இத்தகைய நிகழ்வுகள் நிச்சயம் நடந்திருக்கும் அல்லவா!


கிறிஸ்துவின் பிறப்பு யாருக்கு நற்செய்தி யானது?  எளியோருக்கு ....இடையர்களுக்கு.  எனில் நமது  உடனிருப்பு யாரோடு?  எளியவரோடும் கவலையில் கலக்கத்தில் வாழ்பவரோடா ?


அன்புக்குரியவர்களே இந்த கிறிஸ்து பிறப்பு விழா நம்மை அழைப்பது இதற்குத்தான். இயேசுவைப் போல பிறக்கு குறிப்பாக கலங்கித் தவிக்கும் எளியோருக்கு நற்செய்தியாக வாழ்வதே உண்மையான கிறிஸ்மஸ் கொண்டாட்டம்.


  நாம் ஒவ்வொருவரும் நற்செய்தியாக வாழ்ந்து சமூகத்தில் தேவையில் உள்ளவர்களுக்கு ஆறுதலாகவும் அமைதியைக் கொடுப்பவர்களாகவும் உதவி செய்பவர்களாகவும் வாழ அழைக்கப்படுகிறோம்.  ஏனென்றால் இயேசு தேவையில் இருப்பவர்களை தேடி தானாக சென்றுஅவர்களுக்கு மீட்பின் செய்தி அறிவித்தார்.யூத சமூகத்தினர் இடையர்களை அழுக்கானவர்கள், பொய்யர்கள், திருடர்கள் எனக் கருதினர். ஆனால் நடந்தது என்ன?  யூத சமூகத்தினரால் அழுக்கானவர்களாக கருதப்பட்டவர்களே முதன் முதலாக மீட்க வந்த பாலன் இயேசுவைக்  கண்டனர் . பொய்யர்களாக கருதப்பட்டவர்கள் உண்மைக்குச் சான்று பகர்ந்தனர். திருடர்களாக கருதப்பட்டவர்கள் மாட்டுத் தொழுவத்தில் மெசியாவை கண்டு கொண்டனர். மனிதர்கள் புறத்தை பார்க்கின்றனர். ஆனால் கடவுள் அகத்தைப் பார்க்கின்றார். இந்த கிறிஸ்து பிறப்பில நாளில் கடவுள் அவரின் பிள்ளைகளாக மாற நமக்கெல்லாம்  உரிமை அளித்திருக்கிறார். மனித சாயலில் படைக்கப்பட்ட அனைவருமே கடவுளின் பிள்ளைகள் என்பதை உணர்ந்து தொழிலை வைத்தோ, நிறத்தை வைத்தோ, இனத்தை வைத்தோ, சாதி சமய பாகுபாடுகளை வைத்தோ  பிளவு படக்கூடாது . அனைவரும் மதிக்கப்பட வேண்டியவர்கள் என்பதை சுட்டிக்காட்டுவதாக கிறிஸ்து பிறப்பு விழா இருக்கிறது. எனவே எல்லோரையும் மதிக்கக் கூடிய நல்ல மனநிலையை  வளர்த்துக் கொள்வோம்.

அப்பொழுது நாம் அனைவரும் கடவுளின் உரிமை பேறுள்ள மக்களாக மாறுகிறோம். 


இயேசுவின் பிறப்பு ஒரு அன்பின் விழாவாகவும் பகிர்வின் விழாவாகவும் இருக்கின்றது.  கிறிஸ்மஸ் என்றாலே பகிர்தலையும்   அன்பையும் சுட்டிக் காட்டுவதாக இருக்கின்றது.  கடவுள் தன் ஒரே மகனை குழந்தையாக மனுவுரு எடுக்க வைத்ததற்கு காரணம் தன்னுடைய அன்பை நம்மோடு பகிர்ந்து கொள்ளவே. அதன் வழியாக அவர் நம்மை மீட்பதற்காக ஆவலோடு வந்துள்ளார்.  எளியவர்களுக்கும் ஏழைகளுக்கும் மகிழ்ச்சியை தந்து அவரின் மீட்பு திட்டத்தை வெளிப்படுத்த வந்துள்ளார். எனவே அந்த அன்பையும் பகிர்வையும் பிறருக்கு வழங்கி அனைவரும் கடவுளின் பிள்ளைகளாக மாறிட நற்செய்தியின் தூதுவர்களாக வாழ்ந்திட வரம் கேட்போம்.  அதற்கு தேவையான அருளை வேண்டுவோம். 


 இறைவேண்டல்

வல்லமையுள்ள இறைவா! உம்முடைய மகன் இயேசுவின் பிறப்பு பெருவிழாவைக் கொண்டாட கூடிய இந்த நாளில் இயேசுவைப்போல  நற்செய்தியாக நாங்கள்  வாழவும் ஏழை எளிய மக்களை அன்பு செய்யவும் எங்களிடம் இருப்பதை பிறரோடு நல்ல மனநிலையில் பகிர்ந்து கொள்ளவும் வரம் தாரும். ஆமென்


அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...