Sunday, December 25, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (26-12-2022)

புனித ஸ்தேவான் - முதல் மறைச்சாட்சி
விழா



முதல் வாசகம்

இதோ, வானம் திறந்திருப்பதைக் காண்கிறேன்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 6: 8-10; 7: 54-60

அந்நாள்களில்

ஸ்தேவான் அருளும் வல்லமையும் நிறைந்தவராய் மக்களிடையே பெரும் அருஞ்செயல்களையும் அரும் அடையாளங்களையும் செய்து வந்தார். அப்பொழுது உரிமையடைந்தோர் எனப்படுவோரின் தொழுகைக் கூடத்தைச் சேர்ந்த சிலரும் சிரேன், அலக்சாந்திரியா நகரினரும் சிலிசியா, ஆசியா மாநிலத்தவரும் ஸ்தேவானோடு வாதாடத் தொடங்கினர். ஆனால் அவரது ஞானத்தையும் தூய ஆவி வாயிலாக அவர் பேசிய வார்த்தைகளையும் எதிர்த்து நிற்க அவர்களால் இயலவில்லை.

இவற்றைக் கேட்டவர்கள் உள்ளம் கொதித்தெழுந்து, அவரைப் பார்த்துப் பற்களை நறநறவெனக் கடித்தார்கள்.

அவரோ தூய ஆவியின் வல்லமையை நிறைவாய்ப் பெற்று, வானத்தை உற்றுநோக்கினார். அப்போது கடவுளின் மாட்சியையும் அவர் வலப்பக்கத்தில் இயேசு நிற்பதையும் கண்டு, “இதோ, வானம் திறந்து இருப்பதையும், மானிடமகன் கடவுளது வலப்பக்கத்தில் நிற்பதையும் காண்கிறேன்” என்று கூறினார்.

ஆனால் அவர்கள் தங்கள் செவிகளை அடைத்துக்கொண்டு, பெருங் கூச்சலிட்டு, ஒருமிக்க அவர்மேல் பாய்ந்தார்கள். நகரத்திற்கு வெளியே இழுத்துக் கொண்டுபோய் அவர்மேல் கல் எறிந்தார்கள். சாட்சிகள் தங்கள் மேலுடைகளைச் சவுல் எனும் இளைஞரிடம் ஒப்படைத்தார்கள்.

அவர்கள் ஸ்தேவான் மீது கல் எறிந்தபோது அவர், “ஆண்டவராகிய இயேசுவே, எனது ஆவியை ஏற்றுக்கொள்ளும்” என்று வேண்டிக் கொண்டார். பின்பு முழந்தாள்படியிட்டு உரத்த குரலில், “ஆண்டவரே, இந்தப் பாவத்தை இவர்கள் மேல் சுமத்தாதேயும்” என்று சொல்லி உயிர்விட்டார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 31: 2cd-3. 5,7ab. 15b-16 (பல்லவி: 5a)

பல்லவி: ஆண்டவரே, உமது கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன்.

2cd
எனக்கு அடைக்கலம் தரும் கற்பாறையாய் இரும்; என்னைப் பாதுகாக்கும் வலிமைமிகு கோட்டையாய் இரும்.
3
ஆம், என் கற்பாறையும் கோட்டையும் நீரே; உமது பெயரின் பொருட்டு எனக்கு வழிகாட்டி என்னை நடத்தியருளும். - பல்லவி

5
உமது கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன்; வாக்குப் பிறழாத இறைவனாகிய ஆண்டவரே, நீர் என்னை மீட்டருளுவீர்.
7ab
உமது பேரன்பில் நான் களிகூர்வேன்; அக்களிப்பேன்; என் துன்பத்தை நீர் பார்த்திருக்கின்றீர். - பல்லவி

15b
என் எதிரிகளின் கையினின்றும் என்னைத் துன்புறுத்துவோரின் கையினின்றும் என்னை விடுவித்தருளும்.
16
உமது முகத்தின் ஒளி அடியேன் மீது வீசும்படி செய்யும்; உமது பேரன்பால் என்னை விடுவித்தருளும். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திபா 118: 26a, 27a

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்! ஆண்டவரே இறைவன்; அவர் நம்மீது ஒளிர்ந்துள்ளார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

ஆளுநர்களிடமும் அரசர்களிடமும் யூதர்கள் முன்னும் பிற இனத்தவர் முன்னும் சான்று பகர்வீர்கள்.

 மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 17-22

அக்காலத்தில்

இயேசு தம் திருத்தூதர்களுக்குக் கூறியது: “எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில் மனிதர்கள் உங்களை யூதச் சங்கங்களிடம் ஒப்புவிப்பார்கள். தங்கள் தொழுகைக் கூடங்களில் உங்களைச் சாட்டையால் அடிப்பார்கள். என் பொருட்டு ஆளுநர்களிடமும் அரசர்களிடமும் உங்களை இழுத்துச் செல்வார்கள். இவ்வாறு யூதர்கள் முன்னும் பிற இனத்தவர் முன்னும் சான்று பகர்வீர்கள்.

இப்படி அவர்கள் உங்களை ஒப்புவிக்கும்பொழுது, ‘என்ன பேசுவது, எப்படிப் பேசுவது’ என நீங்கள் கவலைப்பட வேண்டாம். நீங்கள் என்ன பேச வேண்டும் என்பது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும்.

ஏனெனில் பேசுபவர் நீங்கள் அல்ல. மாறாக, உங்கள் தந்தையின் ஆவியாரே உங்கள் வழியாய்ப் பேசுவார். சகோதரர் சகோதரிகள் தம் உடன் சகோதரர் சகோதரிகளையும், தந்தையர் பிள்ளைகளையும் கொல்வதற்கென ஒப்புவிப்பார்கள். பிள்ளைகள் பெற்றோர்க்கு எதிராக எழுந்து அவர்களைக் கொல்வார்கள். என் பெயரின் பொருட்டு உங்களை எல்லாரும் வெறுப்பர். இறுதி வரை மன உறுதியுடன் இருப்போரே மீட்கப்படுவர்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.


இயேசுவின் சாட்சிகளாய்! 


கிறிஸ்து பிறப்பு காலத்தில் இருக்கும் நாம் இன்று புனித ஸ்தேவான் நினைவைக் கொண்டாடுகிறோம்.

புனித ஸ்தேவானைப் பற்றி நாம் திருத்தூதர் பணிகள் நூலில் வாசிக்கிறோம். இயேசுவைப் பின்பற்றுவோரின் எண்ணிக்கை பெருகி வந்த போது கிரேக்கக் கைம்பெண்களைப் பந்தியில் முறையாக கவனிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது எனவே திருத்தூதர்கள் தங்களுடைய இறைவார்த்தைப்பணி பாதிக்கப்படாமல் இருக்கவும் அதே நேரத்தில் குற்றச்சாட்டுகள் எழாத வண்ணம் அனைத்துப் பணிகளும் சரியாக நிறைவேற்றப்படவும்  மற்றவரிடம் நன்மதிப்புப் பெற்ற மற்றும் தூய ஆவியால் நிரப்பப்பட்ட ஏழுபேரைத் திருத்தொண்டர்களாக நியமிக்க முடிசெய்யப்பட்டது. இவ்வேழு பேரிலும் ஸ்தேவான் மிக முக்கியமானவராகவும் ஆவியால் நிறைந்து மிகுந்தவராகவும் கருதப்பட்டார்.


தூய ஆவியார் அவருக்கு அருளிய ஞானமும் ,அருளும்  அவரை  அருஞ்செயல் செய்பவராகவும் ,கைது செய்தவர்கள்முன் துணிச்சலுடன் வார்த்தையைப் பேசுபவராகவும் மாற்றியது. இன்றைய நற்செய்தியில் இயேசு கூறும் "நீங்கள் பகைவர் முன் ஒப்புவிக்கப்படும் போது என்ன பேசுவது எப்படிப் பேசுவது என கவலைப்பட வேண்டாம். நீங்கள் என்ன பேச வேண்டும் என்பது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும். ஏனெனில் பேசுவது நீங்கள் அல்ல. உங்கள் தந்தையின் ஆவியாரே உங்கள் வழியாய்ப் பேசுவார்" என்ற வார்த்தைகள் புனித ஸ்தேவானின் வாழ்வில் நிறைவேறுவதை நாம் உணர்கிறோம். 


புனித ஸ்தேவான் இயேசுவை மிக நெருக்கமாகப் பின் தொடர்ந்தவர். இயேசு சிலுவையில் உயிர்துறக்கும் தருவாயிலும் "தந்தையே இவர்களை மன்னியும். தாங்கள் செய்வது என்னவென்று அறியாமல் செய்கிறார்கள்" என்று கூறியதைப் போல ஸ்தேவானும் "ஆண்டவரே இப்பாவத்தை இவர்கள் மேல் சுமத்தாதேயும்" என வேண்டினார்.இவ்வாறு இயேசுவைப் போல் மன்னித்தார். "தந்தையே உமது கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன் "என்று இயேசு மொழிந்ததைப் போல " ஆண்டவராகிய இயேசுவே எனது ஆவியை ஏற்றுக்கொள்ளும் " என்று வேண்டிக்கொண்ட ஸ்தேவான் இயேசுவின் சாட்சியாய் உயிர் துறந்தார். 


ஸ்தேவானின் இச்சாட்சிய வாழ்வு நம்மையும் சாட்சியாய் வாழத் தூண்டுகிறது. அதற்கு முதலில் நாம்  இறைவனிடம் தூய ஆவியானவரால் நிரப்பப்பட ஜெபிக்க வேண்டும். தூய ஆவியானவர் நம்மில் அசைவாடுவதை நாம் உணர்பவர்களாய் இருக்க வேண்டும். அவர் தரும் ஞானத்தை நம்  செயல்களில் வெளிப்படுத்த வேண்டும். யார் முன்னிலையிலும் இயேசு ஆண்டவர் என அறிக்கையிடத் துணிய வேண்டும்.


இரண்டாவதாக "கிறிஸ்துவின் மனநிலை உங்களில் இருக்க வேண்டும்"என புனித பவுலடியார் பிலிப்பியருக்கு எழுதிய தன் மடலில் கூறுவதைப்போல கிறிஸ்துவின் மனநிலையை நாம் உள்வாங்கி வாழ வேண்டும்.  இயேசுவைப் போல இறைவேண்டலிலும், அனைவரையும் அன்பு செய்வதிலும் , மன்னிப்பதிலும் ,நற்செயல் புரிவதிலும் நாம் நிலைத்திலிருந்து கிறிஸ்துவை நாம் பிரதிபலிக்க வேண்டும்.அதையே புனித ஸ்தேவான் செய்து காட்டினார்.எனவே புனித ஸ்தாவானை நம் முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு இயேசுவின் சாட்சிகளாக வாழ முயற்சி செய்வோம். இறையருள் வேண்டுவோம்.


 இறைவேண்டல் 

அன்பு இறைவா புனித ஸ்தாவானை இயேசுவுக்கு சாட்சியாக வாழ அழைத்து உமது ஆவியாரால் திடப்படுத்தியதைப் போல எங்களையும் உமது ஆவியால் நிரப்பி திடப்படுத்தும். இயேசுவின் மனநிலையைப் பெற்றுக் கொண்டவர்களாய் நாங்கள் வாழ வழிகாட்டும். ஆமென்.

அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...