பொதுக்காலம் 3ஆம் வாரம் - வெள்ளி
முதல் வாசகம்
பெரிய போராட்டத்தையே மன உறுதியோடு ஏற்றுக்கொண்டீர்கள்; எனவே எதிர்நோக்கை இழந்துவிடாதீர்!
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 10: 32-39
சகோதரர் சகோதரிகளே,
முன்னைய நாள்களை நினைவுகூருங்கள். நீங்கள் ஒளி பெற்றபின் உங்களுக்கு நேரிட்ட துன்பம் நிறைந்த போராட்டத்தை மன உறுதியோடு ஏற்றுக்கொண்டீர்கள். சில வேளைகளில், நீங்கள் இகழ்ச்சிக்கும் வேதனைகளுக்கும் ஆளாகி, வேடிக்கைப் பொருளானீர்கள். வேறு சில வேளைகளில், இந்நிலைக்கு ஆளானோரின் துன்பங்களில் பங்கு பெற்றீர்கள். கைதிகளுக்குப் பரிவிரக்கம் காட்டினீர்கள். உங்கள் உடைமைகள் பறிமுதல் செய்யப்பட்டபோதும், மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டீர்கள். ஏனெனில் சிறந்த, நிலையான உடைமைகள் உங்களுக்கு உள்ளன என்பதை அறிவீர்கள்.
உங்களிடம் இருக்கும் துணிவைக் கைவிட்டு விடாதீர்கள். இதற்கு மிகுந்த கைம்மாறு உண்டு. கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றி, அவர் வாக்களித்ததை நீங்கள் பெற்றுக்கொள்ள உங்களுக்கு மன உறுதி தேவை. இன்னும், “மிக மிகக் குறுகிய காலமே இருக்கிறது; வர இருக்கிறவர் வந்துவிடுவார், காலம் தாழ்த்தமாட்டார். நேர்மையுடன் நடக்கும் என் அடியார், நம்பிக்கையினால் வாழ்வு அடைவார். எவராவது பின்வாங்கிச் செல்வார் என்றால் அவரில் நான் மகிழ்ச்சியுறேன்.”
நாமோ பின்வாங்கிச் சென்று அழிவுறுவோர் அல்ல. மாறாக, நம்பிக்கையையும் வாழ்வையும் காத்துக்கொள்வோர் ஆவோம்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 37: 3-4. 5-6. 23-24. 39-40 (பல்லவி: 39a)பல்லவி: ஆண்டவரிடமிருந்தே மீட்பு நேர்மையாளருக்கு வருகின்றது.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மத் 11: 25அல்லேலூயா, அல்லேலூயா! "தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்.” அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
நிலத்தில் ஒருவர் விதைக்கிறார். அவருக்குத் தெரியாமல் விதை முளைத்து வளர்கிறது.
✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 26-34
அக்காலத்தில்
இயேசு கூட்டத்தை நோக்கி, “இறையாட்சியைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: நிலத்தில் ஒருவர் விதைக்கிறார். அவர் எதுவும் செய்யாமலே நாள்கள் நகர்ந்து செல்கின்றன. அவருக்குத் தெரியாமல் விதை முளைத்து வளர்கிறது. முதலில் தளிர், பின்பு கதிர், அதன்பின் கதிர் நிறைய தானியம் என்று நிலம் தானாகவே விளைச்சல் அளிக்கிறது. பயிர் விளைந்ததும் அவர் அரிவாளோடு புறப்படுகிறார்; ஏனெனில் அறுவடைக் காலம் வந்துவிட்டது” என்று கூறினார்.
மேலும் அவர், “இறையாட்சியை எதற்கு ஒப்பிடலாம்? அல்லது எந்த உவமையால் அதை எடுத்துச் சொல்லலாம்? அது கடுகு விதைக்கு ஒப்பாகும். அது நிலத்தில் விதைக்கப்படும்பொழுது உலகிலுள்ள எல்லா விதைகளையும் விடச் சிறியது. அது விதைக்கப்பட்டபின் முளைத்தெழுந்து எல்லாச் செடிகளையும்விடப் பெரிதாகி, வானத்துப் பறவைகள் அதன் நிழலில் தங்கக்கூடிய அளவுக்குப் பெருங்கிளைகள் விடும்” என்று கூறினார்.
அவர்களது கேட்டறியும் திறமைக்கு ஏற்ப, அவர் இத்தகைய பல உவமைகளால் இறைவார்த்தையை அவர்களுக்கு எடுத்துரைத்து வந்தார். உவமைகள் இன்றி அவர் அவர்களோடு பேசவில்லை. ஆனால் தனிமையாக இருந்தபோது தம் சீடருக்கு அனைத்தையும் விளக்கிச் சொன்னார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
இறையாட்சியின் வித்துக்களா நாம்?
இத்தனை சிறிய விதையிலிருந்து எத்தனை பெரிய மரம் வந்தது என்கிறது ஒரு அழகான பாடல் வரிகள். சற்று ஆழமாக சிந்தித்துப் பார்த்தால் ஒவ்வொரு விதையும் அதிலிருந்து வளர்கின்ற செடியோ அல்லது மரமோ, கொடியோ விசித்திரமானதே. இவ்வாறு ஒரு விதை வளர்ந்து மரமாக உருமாற பல சோதனைகளைக் கடக்க வேண்டியுள்ளது.
"கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியா விட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்."(யோவான் 12:24) என்ற இறைவார்த்தைக்கேற்ப
விதையானது முளைத்து வளர்வதற்கு அது மடிவது மிக அவசியம். அது மடியும் போது தான் புதிய முளை தோன்றும். அவ்வாறு தோன்றிய முளை தரையை முட்டி முளைப்பதற்குள் கற்களையும் முட்களையும் தாண்டி, வளைந்து கொடுத்து வெளிவர வேண்டும். வெளிவந்த பின்னரும் மாறுகின்ற தட்பவெப்ப நிலை, வளமை, வறட்சி என அனைத்தையும் சகித்துக்கொண்டு வளர வேண்டும். இத்தனை கடினப்பாடுகளுக்கிடையிலும் அதன் வேரும் ஆழமாக வளர்ந்து பூமியில் தன்னை நிலைநிறுத்த வேண்டும். பின் தான் அவ்விதை மரமாகவோ செடியாகவோ உருமாற முடியும்.
இன்றைய நற்செய்தியில் இறையாட்சி கடுகுவிதைக்கு ஒப்பிடப்படுகிறது. சிறிய கடுகு விதையானது நாம் மேற்கூறிய எல்லா சோதனைகளையும் கடந்து மரமாக உருவெடுக்கும் போது பறவைகள் தங்குமளவிற்கு பெரியதாகவும் பயனுள்ளதாகவும் மாறுகிறது.
இது நமக்குச் சுட்டிக் காட்டும் செய்தி என்னவென்றால் இறையாட்சிக்காக நாம் உழைக்கும் போது நாமும் இத்தகைய இன்னல்களையும் இடையூறுகளையும் சந்திக்க நேரிடும் என்பதே. இருப்பினும் அவற்றை சகித்துக் கொண்டு நாம் தொடர்ந்து உழைக்கும் போது நிச்சயமாக நாம் இறையாட்சியின் வித்துக்களாய் வாழ முடியும். இறைவனை நம் மூலம் பலர் உணர முடியும்.
இன்றைய முதல் வாசகத்தின் மூலம் பிரச்சினைகளைக் கண்டு பின்வாங்காத மக்களாக வாழ நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.எத்தகைய சூழ்நிலையிலும் கிறிஸ்துவிடம் நம்பிக்கையும் நேர்மறையான எதிர் நோக்குடன் வாழும் மக்களாய் வாழ்ந்து இறையாட்சிக்காக உழைக்கும் மக்களாய்த் திகழ இறையருள் வேண்டுவோம்.
இறைவேண்டல்
அன்பின் இறைவா! இன்னல்களையும் இடையூறுகளையும் கண்டு பின்வாங்காமல் எதிர் நோக்குடன் இறையாட்சியை உலகில் விளைவிக்கும் வித்துக்களாக வாழ அருள் தாரும். ஆமென்.
அருட்பணி. குழந்தை இயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️
Join with us 👇
Website: https://catholicvoicecv.blogspot.com
Youtube: https://www.youtube.com/channel/UCcgIiK1gUEqRCmTsc7ZjAoA
Youtube: https://www.youtube.com/channel/UCxBBHQAKIjii_MsZfIYNF5A
Facebook:https://www.facebook.com/Catholic-Voice-108151311955076
Instagram:https://www.instagram.com/invites/contact/?i=16mmdwn460k8p&utm_content=p6lg283
No comments:
Post a Comment