Monday, August 29, 2022

Daily Bread Tuesday - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (30-08-2022) செவ்வாய்

 


முதல் வாசகம்

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 10டி-16

சகோதரர் சகோதரிகளே, தூய ஆவியாரே அனைத்தையும் துருவி ஆய்கிறார்; கடவுளின் ஆழ்ந்த எண்ணங்களையும் அறிகிறார். மனிதரின் உள்ளத்தில் இருப்பதை அவருள் இருக்கும் மனமேயன்றி வேறு எவரும் அறிய முடியாது அன்றோ! அவ்வாறே, கடவுள் உள்ளத்தில் இருப்பதை அவர்தம் ஆவியே அன்றி வேறு எவரும் அறியார். ஆனால், நாம் இவ்வுலக மனப்பாங்கைப் பெற்றுக் கொள்ளவில்லை. மாறாக, தூய ஆவியைக் கடவுளிடமிருந்து பெற்றுள்ளோம். இவ்வாறு கடவுள் நமக்கு அருளிய கொடைகளைக் கண்டுணர்ந்து கொள்கிறோம். ஆவிக்குரியவர்களுக்கு ஆவிக்கு உரியவற்றைப்பற்றி விளக்கிக் கூறும்போது நாங்கள் மனித ஞானத்தால் கற்றுக்கொண்ட சொற்களைப் பேசுவதில்லை; மாறாக, தூய ஆவியார் கற்றுத்தரும் சொற்களையே பேசுகிறோம். மனித இயல்பை மட்டும் உடைய ஒருவர் கடவுளின் ஆவிக்குரியவற்றை ஏற்றுக் கொள்வதில்லை. அவை அவருக்கு மடமையாய்த் தோன்றும். அவற்றை அவரால் அறிந்து கொள்ளவும் முடியாது. ஏனெனில் அவற்றைத் தூய ஆவியின் துணை கொண்டே ஆய்ந்துணர முடியும். ஆவிக்குரியவரோ அனைத்தையும் ஆய்ந்துணர்வார். எவரும் அவரை ஆய்வுக்கு உட்படுத்த முடியாது. ஹஹஆண்டவருடைய மனத்தை அறிபவர் யார்? அவருக்கு அறிவுரை கூறுபவர் யார்?'' நாமோ கிறிஸ்துவின் மனத்தைக் கொண்டுள்ளோம்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல்

திபா 145: 8-9. 10-11. 12-13. 13-14

பல்லவி: ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்.


8 ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர்.

9 ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின் மீதும் இரக்கம் காட்டுபவர். -பல்லவி

10 ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள்.

11 அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். -பல்லவி

12 மானிடர்க்கு உம் வல்லமைச் செயல்களையும் உமது அரசுக்குரிய மாட்சியின் பேரொளியையும் புலப்படுத்துவார்கள்.

13 உமது அரசு எல்லாக் காலங்களிலும் உள்ள அரசு; உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது. -பல்லவி

13 உன; ஆண்டவர் தம் வாக்குகள் அனைத்திலும் உண்மையானவர்; தம் செயல்கள் அனைத்திலும் தூய்மையானவர்.

14 தடுக்கி விழும் யாவரையும் ஆண்டவர் தாங்குகின்றார். தாழ்த்தப்பட்ட யாவரையும் தூக்கி விடுகின்றார். -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார். அல்லேலூயா.

லூக்கா 4:31-37


நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 31-37

அக்காலத்தில் இயேசு கலிலேயாவிலுள்ள கப்பர்நாகும் ஊருக்குச் சென்று, ஓய்வு நாள்களில் மக்களுக்குக் கற்பித்து வந்தார். அவருடைய போதனையைக் குறித்து அவர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். ஏனெனில் அவர் அதிகாரத்தோடு கற்பித்தார். தொழுகைக்கூடத்தில் தீய ஆவியான பேய் பிடித்திருந்த ஒருவர் இருந்தார். அவரைப் பிடித்திருந்த பேய், "ஐயோ! நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்'' என்று உரத்த குரலில் கத்தியது. "வாயை மூடு, இவரை விட்டு வெளியே போ'' என்று இயேசு அதனை அதட்டினார். அப்பொழுது பேய் பிடித்தவரை அவர்கள் நடுவே விழச் செய்து, அவருக்கு ஒரு தீங்கும் இழைக்காமல் பேய் அவரை விட்டு வெளியேறிற்று. எல்லாரும் திகைப்படைந்து, "எப்படிப் பேசுகிறார், பாருங்கள்! அதிகாரத் தோடும் வல்லமையோடும் தீய ஆவிகளுக்குக் கட்டளையிடுகிறார்; அவையும் போய்விடுகின்றனவே!'' என்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டனர். அவரைப் பற்றிய பேச்சு சுற்றுப்புறமெங்கும் பரவியது.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

இனி என்றும் இளமையே!

லூக்கா 4:31-37

இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.

மனிதர்கள் அனைவரும் தாங்கள் வயதாவதை விரும்புவதில்லை. எப்போதும் இளமையுடன் இருக்கத்தான் ஆசைப்படுகின்றனர். என்றும் இளமையோடு இருப்பதற்கு இரண்டு விதமான அருமையான ஆலோசனைகளோடு அகமகிழ்ந்து வருகிறது இன்றைய நற்செய்தி வாசகம்.

1. கட்டளையிடும் அதிகாரம்

நாம் இருட்டில் எதையாவது பார்த்து பயப்படும் போது நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் நமக்கு சொல்லித் தருவார்கள், "இனி நீ இருட்டில் நடக்கும் போது நாசரேத்து இயேசுவின் பெயரால் கட்டளையிடுகிறேன். தீய சக்தியே அகன்று போ" என கட்டளையிட்டுச் சொல். அப்படி சொன்னதும் தீயவை அனைத்தும் காணாமல் போகும் என சொல்லித் தருவார்கள். அந்த மந்திரத்தை சொல்லிய பிறகு நாமும் எந்த தீய சக்தியையும் நம் கண்ணில் காண்பதில்லை. ஆகவே ஆண்டவர் இயேசு கட்டளையிட்டு தீயவைகளை தீர்த்துகட்டியது போல நாமும் இயேசுவின் பெயரால் தீயவற்றிற்கு கட்டளையிட்டு ஓட ஓட விரட்ட முடியும். அப்போது எப்போதும் இளமை பொலிவு நம்மை விட்டு போகாது.

1. கட்டுப்படுத்தும் அதிகாரம்

எந்த தீய சக்தியும் நம் வாழ்க்கையில் வராமல் நம்மால் கட்டுப்படுத்தும் அதிகாரமும் நமக்கு வழங்கப்பட்டுள்ளது. புனிதர்கள் கடவுள் கொடுத்த அருளை வைத்து புனிதத்தில் நாள்தோறும் தங்களை வளர்த்தார்கள். நாம் நம்மை உலகின் ஆசைக்கு இட்டுச்செல்லும் போது இன்னல்கள் உருவாகின்றன. மாறாக நாம் நமக்குள் இந்த உலக ஆசைகள் வரும்போது ஒரு கட்டுப்பாடோடு வாழந்தோம் என்றால் இனிமைதான் என்றென்றும். அப்போது எப்போதும் இளமை பொலிவு நம்மை விட்டு போகாது.

மனதில் கேட்க…

1. எப்போதும் இளமையோடு வாழ நான் தீயவற்றிற்கு கட்டளையிட தயாரா?

2. என்றும் இளமை பொலிவோடு வாழ தீயவற்றை எனக்குள்ளே கட்டுப்படுத்த நான் தயாரா?

மனதில் பதிக்க…

தூய்மையானவற்றைத் தூய்மையாய்க் கடைப்பிடிப்போர் பேறுபெற்றோர் (சாஞா 6:10)

அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா

-------------------------------------------------------

1கொரிந்தியர் 2: 10 – 16

இறைவனைத் தேடும் உள்ளம்

ஆவியானருடைய செயலுக்கு தூய பவுலடியார் இந்த பகுதியில் முக்கியத்துவம் கொடுக்கிறார். ஆவியானவருடைய செயல்களை கடவுளின் ஞானத்தோடு ஒப்பிட்டுப் பேசுகிறார். இதற்கு முந்தைய இறைவார்த்தையில் (2: 9), எசாயா 64: 4 ல் குறிப்பிடப்பட்ட வார்த்தையை அவர் எழுதுகிறார்: ”தம்மை நம்பிருப்போருக்கானச் செயலாற்றும் கடவுள் உம்மையன்றி வேறு யார்? முற்காலம் முதல் இது பற்றி எவரும் கேள்வியுற்றதில்லை, செவியுற்றதுமில்லை, கண்ணால் பார்த்ததுமில்லை”. 2: 8 ல் ”இவ்வுலகத் தலைவர்கள் எவரும் அதை அறிந்து கொள்ளவில்லை. அறிந்திருந்தால், அவர்கள் மாட்சிக்குரிய ஆண்டவரைச் சிலுவையில் அறைந்திருக்க மாட்டார்கள்”. இங்கு இயேசுவைச் சிலுவையில் அறைந்த யூத மதத்தலைவர்கள் குறிப்பிடப்படுகிறார்கள். இவர்கள் யாருக்கும் கடவுளின் ஞானம் வழங்கப்படவில்லை. எனவே தான், அவர்களால் சிலுவையில் வெளிப்படுத்தப்பட்ட மீட்பின் மறைபொருளை புரிந்து கொள்ளவில்லை.

கடவுள் மூன்று வழிமுறைகளில் மீட்பின் பொருளை மனித உள்ளம் புரிந்து கொள்ளும் பொருட்டு தூய ஆவியானவர் வழியாக அறியச்செய்கிறார். முதலாவதாக, தூய ஆவியானவர் தன்னை வெளிப்படுத்துகிறார். இரண்டாவது, ஒருவரைத் தூண்டுகிறார். மூன்றாவதாக, ஒருவரை தன்வயப்படுத்துகிறார். தூய்மையான உள்ளத்தோடு கடவுளைத் தேடுபவர்களே, தூய ஆவியானவரின் இந்த கொடைகளைப் பெற்றுக்கொள்கின்றனர். இறைவனை நேர்மையான உள்ளத்தோடு, தூய்மையான உள்ளத்தோடு தேடும் அனைவரும் இறைவனைக் கண்டடைவார்கள்.

இறைவனுக்கு அருகில் செல்ல வேண்டுமென்றால், இறைவனை இன்னும் அதிகமாக அறிந்து கொள்ள வேண்டுமென்றால், நாம் தூய்மையான உள்ளத்தைக் கொண்டிருக்க வேண்டும். நேர்மையான உள்ளத்தோடு வாழ வேண்டும். அப்படி வாழ்கிறபோது, இறைவனை நாம் நிச்சயமாக கண்டடைய முடியும். அவருடைய திருவுளத்தின் ஆழத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------------

இயேசுவின் கடின உழைப்பு

இயேசு மக்களுக்கு ஓய்வுநாட்களில் கற்பித்ததாக, நற்செய்தியாளர் கூறுகிறார். ஓய்வுநாள் என்பது கடவுளுக்கான நாள். இஸ்ரயேல் மக்கள், இறைவனிடமிருந்து தாங்கள் பெற்றுக்கொண்ட நன்மைகளுக்கு நன்றி செலுத்தும் நாள். இறைவனையே நாள் முழுவதும் தியானிக்க, அவரிடத்தில் செபிக்க ஏற்புடைய நாள். போதகர்களின் மறையுரைகளை, கருத்தூன்றிக் கேட்கும் நாள். ஆக, இயேசு மக்கள் மத்தியில் சிறந்த போதகராக வாழ்ந்ததை, மக்களால் ஏற்றுக்கொண்டதை, இது உணர்த்துகிறது.

கற்பித்தல் என்பது எளிதானல்ல. எல்லோராலும் நிச்சயம் கற்பிக்க முடியாது. அது ஒரு கலை மட்டுமல்ல. அதில் கடின உழைப்பும் அடங்கியிருக்கிறது. இயேசு ஓய்வுநாட்களில் மக்களுக்கு கற்பித்தார் என்றால், எந்த அளவுக்கு அவர் தன்னையே தயாரித்திருக்க வேண்டும். இறை அறிவில் தன்னையே வளர்த்தெடுத்திருக்க வேண்டும். செய்கிற பணி எதுவானாலும், கடின உழைப்பு மிக, மிக முக்கியம். அதற்கு இயேசு சிறந்த எடுத்துக்காட்டு. மக்களுக்கு புரிகிற மொழியில் சொல்வதும், மக்களை மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டுவதும், நமது தயாரிப்பிலும், கடின உழைப்பிலும் தான் இருக்கிறது. அதனை இயேசு திறம்படச் செய்திருப்பதை, இந்த பகுதி நமக்கு உணர்த்துகிறது.

நமது வாழ்வில் நாம் எதைச்செய்தாலும், திறம்படச் செய்ய உறுதி எடுக்க வேண்டும். அதில் நமது கடின உழைப்பையும் கொடுக்க வேண்டும். நமது கடின உழைப்பு நமக்கான வெற்றியைத் தேடி தரும். அந்த நம்பிக்கையோடு, இயேசுவிடமிருந்து, கன உழைப்பைக் கற்றுக்கொள்வோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

------------------------------------------------

இயேசுவின் அதிகாரம்


இயேசு தீய ஆவியை ஓட்டுவதை மக்கள் வியப்புடன் பார்க்கிறார்கள். இந்த பகுதியை வாசித்தவுடன், நமக்குள்ளாக எழக்கூடிய கேள்வி, இயேசு தீய ஆவிகளை நம்பினாரா? இன்றை அறிவியல் உலகத்தில் தீய ஆவிகளுக்கு இடமில்லை. படிப்பறிவு இல்லாத மக்கள் தான், தீய ஆவிகளை நம்புவதாக ஒரு தோற்றம் இருக்கிறது. அப்படியானால், இயேசு எப்படி நம்பினார்? என்ற கேள்வி எழுவது உண்மைதான். ஆனால், இயேசு நம்பினாரோ? இல்லையோ? தீய ஆவி தன்னைப் பிடித்திருந்ததாக, அந்த மனிதன் நம்பினான். அவனை உடல் அளவில் குணப்படுத்துவதற்கு முன்பாக, அவனிடத்தில் இருக்கக்கூடிய அந்த தவறான நம்பிக்கையை அகற்றுவது இயேசுவின் முதன்மையான பணியாக இருந்தது. அதைத்தான் இயேசு முதலில் செய்கிறார்.

இயேசுவிடத்தில் மக்கள் வியந்து பார்த்த ஒரு நிகழ்வு, அவரிடத்தில் இருந்த உறுதியும், அதிகாரம் மிகுந்த போதனையும். இயேசு வாழ்ந்த காலத்தில் பல பேர் தீய ஆவிகளை ஓட்டிவந்தனர். அவர்கள் சில புத்தகங்களின் அடிப்படையில், “இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது” என்கிற பாணியில் பேயோட்டினர். ஆனால், இயேசு ”நான் உனக்குச் சொல்கிறேன் ….” என்ற அதிகாரத்தோடு போதிக்கிறார். ஆக, இயேசுவின் அதிகாரம் மக்களைக் கவர்ந்தது. அதற்கு தீய ஆவிகளும் கீழ்ப்படிந்தது, அவர்களை வியப்புக்குள்ளாக்கியது. இயேசு தனது அதிகாரத்தை, தந்தையாகிய கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்டார். அவரிடத்தில் இயேசு வைத்திருந்த நம்பிக்கை தான், தீய ஆவிகளுக்கு எதிரான போராட்டத்தில், அவருக்கு உறுதியைத்தந்தது.

எத்தகைய துன்பங்களுக்கு எதிராகவும் நம்மால் துணிவோடு போராட முடியும். அதற்கு கடவுள் நம்பிக்கை மட்டும் வேண்டும். அந்த கடவுள் நம்பிக்கையை வைத்து இயேசு எவ்வாறு, தீய ஆவிகளுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றிபெற்றாரோ, அதேபோல நாமும் வாழ்க்கைப்போராட்டத்தில் வெற்றி பெறுவோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

துணிவோடு இருப்போம்


பழங்காலத்தில் மக்கள் தீய ஆவிகள் காற்று மண்டலத்தில் இருப்பதாக நம்பினர். அவைகள் உணவு மற்றும் தண்ணீர் வழியாக மனிதர்களின் உடலுக்குள் புகுவதற்கு வாய்ப்பிருக்கிற என்பது அவர்களின் எண்ணம். எகிப்தியர்களின் நம்பிக்கைப்படி, நமது உடலில் 36 பாகங்கள் வழியாக தீய ஆவிகள் உடலுக்குள் ஊடுறுவமுடியும். ஒவ்வொரு பாகங்களையும் குறிப்பிட்ட தீய ஆவிகள் கட்டுப்படுத்துகிறது என்றொரு நம்பிக்கையும் மக்கள் மனதில் இருந்தது. இப்படிப்பட்ட தீய ஆவி ஒன்றைத்தான் இயேசு அந்த மனிதரிடமிருந்து ஓட்டுகிறார்.

பழங்காலத்தில் தீய ஆவிகளை ஓட்டுவதற்காக மந்திரவாதிகள் பல செய்முறைகளைப்பின்பற்றினர்.  உதாரணமாக, பேய்பிடித்தவரின் மூக்கில் வளையம் ஒன்றை மாட்டி, சில மந்திரச்சொற்களை உச்சரித்து பேய் ஓட்டுவர். அதேபோல் ஒரு வகையான செடியின் வேரை, பேய் பிடித்தவரின் அருகே கொண்டுபோக, பேய் ஓடிவிடுவதாகவும் நம்பினர். இப்படி சில செய்முறைகள் மூலமாக பேய்களை ஓட்டுகிறவர்கள் மத்தியில், “வாயை மூடு, இவரைவிட்டு வெளியே போ” என்கிற வெறும் வார்த்தைக்கு, தீய ஆவிகள் கட்டுப்பட்டு ஓடுவதைக்கண்டுதான், இயேசுவை மக்கள் வியந்து பார்த்தனர்.

இயேசுவின் போதனை அதிகாரம் நிறைந்த போதனை. அந்த அதிகாரத்திற்கு காரணம், அவர் கடவுள் மீது வைத்திருந்த அளப்பரிய நம்பிக்கை. அத்தகைய துணிவு, ஆற்றல் நம்பிக்கைகொண்டோரிடம் மட்டுமே இருக்கும். அத்தகைய துணிவு நமக்கும் இருக்கும்போது, நம்மால் எதையும் எதிர்த்து நிற்க முடியும்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

ஆன்மாவின் ஆன்மா !


இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இன்றைய முதல் வாசகத்தில் பவுலடியார் தூய ஆவியாரைப் பற்றிய போதனையை நமக்குத் தருகிறார்.

தூய ஆவியார் கடவுளின் உள்ளத்தில் உறையும் அனைத்தையும் அறிபவர். அவரே நமது உள்ளத்தில் ஆழத்தையும் அறிவார்.

மனித இயல்பு மட்டுமே கொண்டவர்கள் தூய ஆவியின் ஆற்றலை உணரவோ, செயல்படுத்தவோ இயலாது.

தூய ஆவியார் இறைவன் நமக்குத் தந்துள்ள மாபெரும் கொடை.

அந்தக் கொடையைப் பெற்றுக்கொள்பவர்கள் இறைவனின் மறைபொருள்கள் அனைத்தையும் புரிந்துகொள்வர். இறைத் திருவுளத்தின்படி வாழ்வர்.

நாமும் ஆவியானவரைப் பெற்றுக்கொள்வோம். ஆவியானவரால் இயக்கப்படுவோம்.

மன்றாடுவோம்: தூய ஆவியே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். எங்கள் உள்ளத்தின் ஆழத்தில் உறைபவரே உம்மைப் போற்றுகிறோம். இறைவனின் கொடையே உம்மைப் போற்றுகிறோம். அனைத்தையும் ஆய்ந்தறியும் ஆற்றல் தருபவரே, உம்மைப் போற்றுகிறோம். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

அருள்தந்தை குமார்ராஜா

-------------------------------------------

 அதிகாரத்தோடும், வல்லமையோடும் !


இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இயேசுவின் பொதுவாழ்வின் தொடக்கத்தைப் பதிவு செய்த நற்செய்தியாளர் லூக்கா கவனத்துடன் குறித்த ஒரு செய்தி இயேசுவின் போதனை மக்கள்மீது ஏற்படுத்திய தாக்கம். அவருடைய போதனையைக் குறித்து அவர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள் என்று தெளிவாக எழுதியுள்ளார் லூக்கா. அதுமட்டுமல்ல, இயேசு பேய் பிடித்த மனிதனை அதட்டி, பேயை அவர் வெளியேற்றிதைக் கண்டு திகைத்து, எப்படிப் பேசுகிறார் பாருங்கள். அதிகாரத்தோடும், வல்லமையோடும் தீய ஆவிகளுக்குக் கட்டளையிடுகிறார். அவையும் போய்விடுகின்றனவே என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டனர் என்றும் பதிவு செய்திருக்கிறார். ஆம், இயேசுவின் போதனையின் தனித்துவம் அந்தப் போதனையில் இருந்த அதிகாரமும், வல்லமையும்.

எங்கிருந்து வந்தன இந்த அதிகாரமும், வல்லமையும்? நிச்சயம், தந்தை இறைவனிடம் இருந்துதான். அத்துடன், அவரது முரண்பாடற்ற வாழ்விலிருந்தும்கூட. அப்பழுக்கற்ற நேர்மையிலிருந்தும்கூட. பேய்களோ, மனிதர்களோ, இயேசுவிடம் குற்றம் எதுவும் காணமுடியவில்லை. எனவே, அவரது பேச்சு அவர்களுக்கு அதிகாரமும், வல்லமையும் நிறைந்ததாக இருந்தது.

நம்முடைய சொற்களும் அதிகாரம் நிறைந்ததாக இருக்க வேண்டுமென்றால், தந்தை இறைவனிடமிருந்து தூய ஆவி என்னும் கொடையை நாம் பெற வேண்டும். அத்தோடு, நம் வாழ்வும், வார்த்தைகளும் முரணின்று இருக்க வேண்டும். அந்த வரத்துக்காக வேண்டுவோம்.

மன்றாடுவோம்: அதிகாரத்தோடும், வல்லமையோடும் போதித்த இயேசுவே, உம்மைப் போற்றுகிறேன். என் வாழ்வையும், என் வார்த்தைகளையும் உம்மிடம் ஒப்படைக்கிறேன். எனது சொற்களுக்கும், செயல்களுக்கும் இடையே இடைவெளி இல்லாதபடி என்னைக் காத்துக்கொள்ளும். முரண்பாடில்லா வாழ்வு மூலம் என் வாழ்விலும் நான் அதிகாரம் பெறுவேனாக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்

அருள்தந்தை குமார்ராஜா

---------------------------------

''பின்பு இயேசு கலிலேயாவிலுள்ள கப்பர்நாகும் ஊருக்குச் சென்று,ஓய்வு நாள்களில் மக்களுக்குக் கற்பித்துவந்தார்'' (லூக்கா 4:31)


அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- நாசரேத்திலிருந்து இயேசு கப்பர்நாகும் என்னும் ஊருக்குச் செல்கிறார். கலிலேயாக் கடலின் வட மேற்குப் பகுதியில் அமைந்த ஊர் கப்பர்நாகும். அங்கே மீன்பிடித்தல் மும்முரமாக நடந்துவந்தது. அவ்வூரில் இருந்த தொழுகைக் கூடத்திற்கு இயேசு செல்கிறார். மக்களுக்கு மீட்பளிக்க வந்த இயேசுவின் பணி நோயாளருக்கு நலம் வழங்கும் பணியாகத் தொடங்குகிறது. தொழுகைக் கூடத்தில் ஓய்வு நாளன்று இயேசு போதித்துக்கொண்டிருக்கையில் பேய்பிடித்த ஒரு மனிதர் உரத்த குரலில் கத்துகிறார். இயேசு அந்த மனிதரைப் பிடித்திருந்த பேயை அதட்டி வெளியேறச் செய்கிறார். அந்த மனிதரும் குணமடைகிறார். இயேசு புரிந்த முதல் புதுமையாக மாற்கு, லூக்கா ஆகிய இருவரும் இந்நிகழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளனர் (காண்க: லூக் 4:33-37; மாற் 1:21-28). இதன் பொருள் என்ன? பாலைநிலத்தில் இயேசுவைச் சோதித்த அலகை உலக அரசுகள் மீது தனக்கு அதிகாரம் இருப்பதாகவும் அந்த அதிகாரத்தை இயேசுவுக்குக் கொடுப்பதாகவும் கூறி, ''நீர் என்னை வணங்கினால் அனைத்தும் உம்முடையவையாகும்'' என்றது (லூக் 4:5-7). ''நீர் இறைமகன் என்றால் இந்தக் கல்லை அப்பமாகும்படி கட்டளையிடும்'' என அலகை கேட்டது. ஆனால் இயேசு அலகையின் சோதனையை முறியடித்து, தமக்குக் கடவுள் அளித்த அதிகாரம் உண்டென நிலைநாட்டினார். கப்பர்நாகும் ஊரில் பேய் இயேசு ''கடவுளுக்கு அர்ப்பணமானவர்'' எனத் தனக்குத் தெரியும் என்று கூறுகிறது (லூக் 4:34). நற்செய்தி நூல்களில் ''அலகை'' (''சாத்தான்'') என்பது கடவுளை எதிர்த்து நிற்கின்ற தீய சக்தியாக விளக்கப்படுகிறது. ''பேய்கள்'' என்பவை அலகைக்குக் கீழ் பணிபுரிகின்ற, தாழ் நிலை ஊழியர்களாகக் காட்டப்படுகின்றன. இயேசு அலகையின் ஆட்சியை ஒழிக்க வந்தார் என்னும் உண்மையை நற்செய்தி நூல்கள் அறிவிக்கின்றன.


-- கடவுளின் ஆட்சியை நிலைநாட்ட வந்த இயேசு அலகையின் ஆட்சியை முறியடிப்பார். எனவே, இயேசுவுக்கும் அலகைக்கும் இடையே நிகழ்கின்ற போர் இயேசுவின் பணித் தொடக்கத்திலிருந்தே நடந்தது. பேய்பிடித்திருந்த மனிதர் குணமடைந்ததும் மக்களுக்கு ஒரே அதிர்ச்சி. அவர்கள் ''திகைப்படைந்தனர்'' (லூக் 4:36). ''எப்படிப் பேசுகிறார், பாருங்கள்!'' என்று கூறி அவர்கள் தங்கள் வியப்பை வெளிப்படுத்துகின்றனர் (லூக் 4:36). ஆனால் அவர்கள் இயேசுவிடத்தில் ''நம்பிக்கை கொண்டதாக'' லூக்கா குறிப்பிடவில்லை. இயேசு புரிந்த இப்புதுமையில் இரு முக்கிய கருத்துக்கள் வெளிப்படுகின்றன. முதலில், இயேசு ''அதிகாரத்தோடு'' போதிக்கவும், கடவுளிடமிருந்த பெற்ற அதிகாரத்தோடு பேய்களை முறியடிக்கவும் செய்கிறார். எனவே, இயேசுவின் போதனையும் அவர் புரியும் புதுமையும் கடவுளின் சக்தியை மக்களுக்கு வெளிப்படுத்துகின்றன. இரண்டாவது, கடவுளின் சக்தி இயேசு வழியாக வெளிப்பட்டதைக் கண்டபோதிலும் மக்கள் வியப்படைகிறார்களே தவிர இயேசுவை நம்பி ஏற்க முன்வரவில்லை. நாமும் இயேசுவிடத்தில் கடவுளின் சக்தி துலங்குவதைக் கண்டு வியப்படைவதோடு நின்றுவிடாமல் அவரே நமக்கு நலமளிக்கின்ற ''மருத்துவர்'' என்றும் நம்மைத் தீய சக்திகளிடமிருந்து ''மீட்பவர்'' என்றும் ஏற்று, அவரிடத்தில் ''நம்பிக்கை கொள்ள'' அழைக்கப்படுகிறோம்.

மன்றாட்டு

இறைவா, உம் வல்லமையை எங்கள் வாழ்வில் உணர்ந்திட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

 ---------------------------------

"இயேசு அதிகாரத்தோடு கற்பித்தார்" (லூக்கா 4;32)


அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- விவிலியத்தில் கடவுளுடைய வார்த்தை அடங்கியுள்ளது என்பது கிறிஸ்தவ நம்பிக்கை. கடவுள் மக்களோடு பேசுவதற்குப் பதிலாள்களைப் பயன்படுத்தினார். இவ்வாறு, பழைய ஏற்பாட்டுக் காலத்தில் மோசே, பிற இறைவாக்கினர்கள் கடவுளின் பெயரால் மக்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்; கடவுளின் வழியில் நடந்தால் ஆசியும், நெறி தவறிப் போனால் தண்டனையும் பெறுவர் என்று மக்களை எச்சரித்தனர். அந்த வேளைகளிலெல்லாம் இறைவாக்கினர் தம் சொந்த அதிகாரத்தோடு பேசவில்லை, மாறாகக் கடவுள் பெயரால் இறைவாக்கினை அறிவித்தனர். மேலும், யூத சமயத்தைச் சார்ந்த அறிஞர்களும் திருச்சட்டத்தை விளக்கியபோது தம் சொந்த அதிகாரத்தோடு பேசவில்லை, மாறாகத் தம் போதனைக்கு ஆதாரமாக விவிலியத்தை மேற்கோள் காட்டினர்.

-- இயேசுவும் கடவுளின் பெயரால் வந்தார். மக்களுக்குக் கடவுளின் திட்டத்தை அறிவித்தார். ஆனால், இயேசுவே கடவுளின் வார்த்தை என்பதால் அவருடைய அதிகாரம் கடவுளின் அதிகாரத்திற்கு நிகரானது. எனவே, பிற இறைவாக்கினரைப் போலவோ, யூத சமயத் தலைவர்களைப் போலவோ அல்லாமல் இயேசு "அதிகாரத்தோடு கற்பித்தார்". இயேசு எப்போதுமே தம் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுவதையே தம் வாழ்க்கைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தார். இதனால் அவருடைய வாழ்வில் தந்தையின் செயல் துலங்கியது. மேலும், தூய ஆவியால் நிரப்பட்ட இயேசு கடவுளின் வல்லமையை முழுமையாகத் தம் சொல், செயல் வழியாக வெளிப்படுத்தினார். இயேசுவின் போதனையைக் கேட்டு, அவரில் நம்பிக்கை கொள்வோர் இயேசுவைத் தங்கள் வாழ்வின் மையமாகக் கொண்டிருக்க அழைக்கப்படுகிறார்கள். இயேசுவைத் தம் உள்ளத்தில் அனுபவித்து, அவருடைய சொற்களைக் கேட்டு அவர்தம் ஆவியால் வழிநடத்தப்படுவோர் உண்மையிலேயே அவருடைய சீடர்களாக இருப்பார்கள்; அவரிடமிருந்து கற்றுக்கொள்வார்கள். இவ்வாறு நாம் கற்றவற்றைச் செயலில் வெளிப்படுத்தும்போது இயேசுவின் அதிகாரத்தில் நாமும் பங்குபெறுவோம். அது உண்மையிலிருந்து பிறக்கின்ற அதிகாரம்; அது மனித அதிகாரிகளின் அடக்குமுறை அதிகாரத்திற்கு நேர்மாறானது. இயேசுவின் அதிகாரம் மக்களுக்குப் பணிபுரிகின்ற அதிகாரம். திருச்சபையும் தன் தலைவரும் ஆசிரியருமான இயேசுவைப் பின்சென்று மக்களுக்குப் பணிசெய்ய அழைக்கப்படுகிறது.

மன்றாட்டு

இறைவா, உண்மையின் ஊற்றாகிய உம்மிடம் நாங்கள் நம்பிக்கை கொண்டு வாழ்ந்திட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

---------------------------------

தகுதி வேண்டும்


அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

இன்று அதிகாரம்கொண்ட போதனைகள் தேவை. இயேசுவிடம் விழங்கிய பணி செய்யும் அதிகாரம்,சுதந்திர உணர்வோடு செயல்படும் அதிகாரம் இவைகொண்டவைகளாக இருக்கவேண்டும். அவையே சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் ஆற்றல்படைத்தது. போதிப்போரிடமும் பொருப்பிலுள்ளோரிடமும் இவை அவசியம்.

இத்தகைய அதிகாரம், போதனையின் கருத்தாழம்,போதிப்பவரின் ஆழுமை, கையாழும் செயல்முறை,இவற்றை பெரும்பாலும் பொருத்தது. இயேசு அதிகாரத்தோடு போதித்தார். (லூக் 4'32) அதிகாரத்தோடு செயல்பட்டார்.(லூக் 4'36) இந்தத் தகுதிகளும் திறமைகளும் குறைவின்றி நிறைவாக அவரிடம் இருந்தது.

இவை அனைத்தும் அதிகாரம் செய்வோரிடம் கூடி வருவது மிகக் கடினம். இருப்பினும் இத்தகுதிகளை வளர்த்துக்கொள்வதே போதிக்கும் பணிக்கு வலுசேர்க்கும். பணி வாழ்வுக்குப் பெருமை சேர்க்கும். நம் கருத்தும் பணியும் பிறர் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் நம்மை பக்குவப்படுத்தினால், அதுவே அதிகாரம்கொண்ட போதனை. இன்றைய சமுதாயத்திற்கு மிகவும் அவசியமானதும் கூட.

உன் வார்த்தைகள், செயல்பாடுகள் தகுதியுடையதாக இருக்கட்டும்.

--அருட்திரு ஜோசப் லீயோன்

------------------------------------

வாழ்வில் வசந்தம் வீச வேதம் வீதிக்கு வர வேண்டும்.


"இறை மகனே உமக்கு இங்கு என்ன வேலை?" நியாயமான கேள்வி. இன்று பரவலாக கேட்கப்படும் கேள்வி. ஆமாம். இறைமகனுக்கு பேய்களோடு என்ன வேலை? கடவுளுக்கு கல்லரையில் என்ன வேலை? பாவமும் பாவச் செயல்களும் நடைபெரும் இடத்தில் பக்தனுக்கு என்ன வேலை? அநீதியும் அவமானமும் மலிந்த இடத்தில் ஆண்டவனின்அடியானுக்கு என்ன வேலை? மனிதமும் மனிதாபிமானமும் சிதைக்கப்படும் இடத்தில் மதத்திற்கு என்ன வேலை? கொள்ளையும் கொலையும் குவியும் இடத்தில் கோயில் தெய்வத்திற்கு என்ன வேலை? ஏழ்மையும் வறுமையும் வளர்த்து உருவாக்கப்படும் இடத்தில் வானக இறைவனை வழிபடும் மக்களுக்கு என்ன வேலை? நியாயமான கேள்வி. இன்று பரவலாக கேட்கப்படும் கேள்வி.

இறைவன் விண்ணகத்தில் இருக்க வேண்டியதுதானே? ஆண்டவன் ஆலயத்தில் இருக்க வேண்டியதுதானே? ஆயர்கள் ஆட்டுப்பட்டியோடு நிறுத்திக்கொள்ள வேண்டுமல்லவா! நல்லவர்கள் நான்கு சுவர்களுக்குள் அடங்கிவிட வேண்டியதுதானே? திருச்சபை, திருவருட்சாதனங்களோடு நின்று விடவேண்டும். வழிபாடு, தேர், திருவிழா, அர்ச்சனை, ஆராதனை இவற்றோடு முடித்துக்கொள்ள வேண்டும். இதுவும் நியாயமான கேள்விதானா?

இன்று எழும்பும் இத்தகைய கேள்விகளுக்கும் சருக்கல்களுக்கும் சவாலாக இயேசு செயல்பட்டதைப் பார்க்கிறோம். தெய்வம் பேயை சந்திக்கிறது. கடவுள் கல்லரையை நெருங்குகிறார். புனிதர்; பாவியை அரவணைக்கிறார்.

அநீதியை, அசிங்கத்தை அப்புறப்படுத்த காலம், நேரம், இடம் பார்க்க அவசியமில்லை. ஒதுங்கி, ஒடுங்கி, அடங்கிப்போக அவசியமில்லை. வேதம் வீதிக்கு வர வேண்டும். தெய்வம் தெருவுக்கு வர வேண்டும். எங்கெல்லாம் இருள் சூழ்ந்துள்ளதோ அங்கெல்லாம் பற்றிப் படர்ந்து சுடர்விட்டு எரியவேண்டும்.

எல்லோர் வாழ்விலும் வசந்தம் வீச நல்லவர்கள் நாம் ஒதுங்காமல் ஓரம்கட்டாமல் உட்புகுந்து செயல்பட வலுவேண்டுகிறேன்,தெய்வமே.

:-- ஜோலி --:

----------------------------------------------

திருப்பாடல் 145: 8-9, 10-11, 12-13ab, 13cd- 14 (17a)


“தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர் அவர்”

இரக்கமுள்ள மனிதர்:


இரண்டு நண்பர்கள் சாலையோரமாக நடந்து சென்றுகொண்டிருந்தார்கள். வழியில் ஒருசில இளைஞர்கள் அப்பாவி ஒருவரைக் கீழே தள்ளி அடித்துக் கொண்டிருந்தார்கள்.

இதைப் பார்த்துவிட்டு இரண்டு நண்பர்களில் ஒருவர், “வா நாமிருவரும் இங்கிருந்து ஓடிவிடுவோம். இல்லையென்றால் அவர்கள் நம்மை தாக்கக்கூடும்” என்றார். இதற்கு மற்றவர், “நீ வேண்டுமானால் இங்கிருந்து ஓடு. நான் உன்னோடு ஓடி வரமாட்டேன். மாறாக, நான் இளைஞர்களின் கையில் மாட்டிக்கொண்டு அடிபடும் அந்த அப்பாவியைக் காப்பாற்றப் போகிறேன்” என்று சொல்லிக்கொண்டே அவர் இளைஞர்கள் அருகில் சென்றார்.

‘அவருக்கு என்ன ஆகப் போகிறதோ?’ என்று முதலாமவர் ஓரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருக்கும்போது, இரண்டாமவர், இளைஞர்களை விலக்கிவிட்டு, அடிபட்டுக் கொண்டிருந்த அப்பாவி மனிதரைத் தூக்கித் தன் தோள்மேல் போட்டுக் கொண்டு, அருகில் இருந்த மருத்துவமனையை நோக்கி நகர்ந்தார்.

இந்த நிகழ்வில் வரும் இரண்டு நண்பர்களில் ஒருவர், ‘நமக்கெதற்கு வீண் வம்பு’ என்று ஒதுங்கியபோது, இன்னொரு நண்பர் இளைஞர்கள் தன்னை என்ன செய்தாலும் பரவாயில்லை என்று, அடிப்பட்டுக்கொண்டிருந்த மனிதர்மீது இரக்கம்கொண்டு, அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். ஆம், துன்புறுவோர், வறியோர், எளியோர்; ஏன், எல்லார்மீதும் நாம் இரக்கம் கொள்ளவேண்டும். அது மிகவும் முக்கியம்.

இன்று நாம் பாடக்கேட்ட பதிலுரைப்பாடலில் தாவீது, “தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் ஆண்டவர் இரக்கம் காட்டுவார்” என்கிறார். அது குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

இஸ்ரயேலின் அரசராக இருந்த தாவீது, அனைத்துலகின் அரசராம் கடவுளைப் போற்றிப் புகழ்கின்ற ஒரு பாடல்தான் திருப்பாடல் 145. இது தாவீது பாடிய கடைசிப் பாடல் ஆகும்.

“என் கடவுளே, என் அரசே! உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்” என்று தொடங்குகின்ற இத்திருப்பாடலில், தாவீது தான் எதற்காக ஆண்டவரைப் புகழ்ந்து ஏத்துகின்றேன் என்பதற்கான காரணங்களை வரிசைப்படுத்துகின்றார். “ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர்” என்று சொல்லிக் கொண்டே போகும் தாவீது, இறுதியாக, “ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்; அவர் தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே” என்று முடிக்கின்றார்.

தாவீது ஆண்டவரைப் புகழ்ந்து பாடுகையில், அவர் ஆண்டவரைப் பற்றிச் சொல்லும் இரண்டு செய்திகள் முக்கியமானவை. ஒன்று அவரது நீதி. மற்றொன்று அவரது இரக்கம். இன்றைக்குப் பலர் அநியாயமாகவும் இரக்கமே இல்லாமலும் நடந்துகொள்ளும்போது, கடவுள் நீதியோடும் இரக்கத்தோடும் இருக்கின்றார் என்பது நமக்கு ஆறுதலளிக்கும் செய்தி.

எனவே, நாம் இரக்கமும் நீதியுமுள்ள ஆண்டவரைப் போற்றிப் புகழ்ந்து, அவரது இரக்கத்தைப் பெறுவோம்.

சிந்தனைக்கு:

 இரக்கம் காட்டுவோரே இரக்கம் பெறுகின்றார்

 எங்கு நீதி கடைப்பிடிக்கப்படுகின்றதோ, அங்கே உண்மை நிலைத்திருக்கும்!

 நம்மை ஆளும் தலைவர்களும்; ஏன், நாமும் நீதியோடும் இரக்கத்தோடும் வாழ இரக்கமுள்ள இறைவனிடம் வேண்டுவோம்.

இறைவாக்கு:

‘கருணை நிறைந்தவர் தம் உணவை ஏழைகளோடு பகிர்ந்து உண்பார்; அவரே ஆசி பெற்றவர்’ (நீமொ 22: 9) என்கிறது நீதிமொழிகள் நூல். எனவே, நாம் கடவுளைப் போன்று கருணையும் இரக்கமும் உள்ளவர்களாய்த் திகழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

 -----------------------------------------------

“அவர் அதிகாரத்தோடு கற்பித்தார்”


நீண்ட மறையுரை:


அருள்பணியாளர் ஒருவர் இருந்தார். அவர் ‘நீண்ட’ மறையுரை வழங்குவதற்குப் பெயர் போனவர்.

ஒருநாள் அவர் வழக்கம்போல் ‘நீண்ட’ மறையுரை வழங்கிக் கொண்டிருக்கும்போது கூட்டத்திலிருந்து ஒருவர் எழுந்து வெளியே போனார். ‘நான் மறையுரை வழங்கிக் கொண்டிருக்கும்போது எப்படி இவரால் வெளியே போக முடிகின்றது?’ என்று அருள்பணியாளருக்கு ஆத்திரமாக வந்தது. இருந்தாலும் அவர் அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை.

மறையுரை நேரத்தில் வெளியே போன மனிதர் திருப்பலி முடியும் நேரத்தில் கோயிலுக்குள் வந்தார். அவரை மடக்கிப் பிடித்த அருள்பணியாளர் அவரிடம், “எதற்காக நீங்கள் நான் மறையுரை வழங்கிக் கொண்டிருக்கும்போது, எழுந்து வெளியே போனீர்கள்?” என்று கேட்பார். “முடிவெட்டுவதற்காக!” என்றார் அவர். “மறையுரை நேரத்தில்தான் எழுந்து முடிவெட்டப் போக வேண்டுமா? கோயிலுக்கு வருவதற்கு முன்பாக முடியை வெட்டுக்கொண்டு வரலாம் அல்லவா” என்று அருள் பணியாளர் அவரிடம் தனது குரலை உயர்த்திக் கேட்டார்.

“ஒரே நேரத்தில் இரண்டை வெட்டிக்கொண்டிருக்க முடியாது அல்லவா” என்று பேசத் தொடங்கிய அந்த மனிதர், “என்னால் உங்களுடைய மறையுரையைக் கத்திரி போட்டு வெட்ட முடியாது; ஆனால், என்னுடைய தலைமுறையைக் கத்திரி போட்டு வெட்டமுடியும். அதனால்தான் நான் உங்களுடைய மறையுரையின்போது முடிவெட்டச் சென்றேன்” என்றார். இதைக் கேட்டு அருள்பணியாளர் அப்படியே ஆடிப் போய்விட்டார்.

மக்களுக்குக் கற்பிக்கின்றபோது ஏனோதானோ என்று அல்ல, அதிகாரத்தோடு கற்பிக்கவேண்டும் என்பதை இந்தக் கதை நமக்கு உணர்த்துகின்றது. இன்றைய நற்செய்தியில் இயேசு அதிகாரத்தோடு கற்பித்தார் என்று வாசிக்கின்றோம். எப்படி அவரால் அதிகாரத்தோடு கற்பிக்க முடிந்தது என்பதைக் குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

தன்னுடைய சொந்த ஊர் மக்கள் தன்னைப் புறக்கணித்ததை நினைத்து மனம் தளராத இயேசு, கப்பர்நாகுமிற்கு வந்து அங்குள்ள மக்களுக்குக் கற்பிக்கின்றார். இயேசுவின் போதனையைக் கேட்டு அங்கிருந்த மக்கள் வியப்பில் ஆழ்கின்றார்கள்.

இயேசுவின் போதனையைக் கேட்டு மக்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள் என்று பதிவு செய்யும் லூக்கா நற்செய்தியாளர், அவர் அதிகாரத்தோடு போதித்ததாலேயே மக்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள் என்று பதிவுசெய்கின்றார். இத்தகைய அதிகாரம் இயேசுவுக்கு எங்கிருந்து வந்தது என்று கேள்வி எழலாம். இயேசுவுக்கு எல்லா அதிகாரத்தையும் கடவுள் அளித்திருந்தார் (மத் 28: 18), தவிர, இன்றைய முதல் வாசகத்தில் பவுல் சொல்வது போல, தூய ஆவியார் – கடவுள் – கற்றுத்தந்தைதையே அல்லது என்ன சொல்லவேண்டும் என்று சொன்னாரோ, அதையே இயேசு சொன்னார் (யோவா 12: 49).

இதைவிடவும் இயேசுவால் அதிகாரத்தோடு போதிக்க முடிந்தது என்றால், அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. அது என்னவென்றால், இயேசு பரிசேயர்களைப் போன்று அல்லாமல் (மத் 23:3), சொல்லிலும் செயலிலும் வல்ல இறைவக்கினராக இருந்ததால்தான் (லூக் 24:19) இயேசுவைப் போன்று அதிகாரத்தோடு போதிக்க வேண்டும் அல்லது ஒரு செயலைச் செய்ய வேண்டும் என்றால், அதற்கு நாம் சொல்லிலும் செயலிலும் வல்லவர்களாக இருக்கவேண்டும் என்பது கட்டாயம்.

சிந்தனைக்கு:

 வாழ்வே பெரிய போதனை!

 உண்மையாய் இருப்பவர் ஆண்டவரைத் தவிர, வேறு யாருக்கு முன்னும் தலைகுனியத் தேவையில்லை.

 ஊனியல்பிற்கேற்ப வாழாமல் தூய ஆவியாரின் தூண்டுதலுக்கேற்ப வாழ்வோம்.

இறைவாக்கு:

‘பிள்ளைகளே, நாம் சொல்லிலும் பேச்சிலும் அல்ல, செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம்’ (1 யோவா 3: 18) என்பார் யோவான். எனவே, நாம் இயேசுவைப் போன்று செயலில் நமது அன்பை வெளிக்காட்டி, அவரைப் போன்று துணிவோடும் அதிகாரத்தோடும் போதித்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

 -------------------------------------------

 "ஆவியினால் இறைவனை அறிவோமா!"


ஒரு அருட்சகோதரி என்னிடம் பகிர்ந்து கொண்ட நிகழ்வு. ஒரு முறை மற்றொரு அருட்சகோதரியுடன் வெளியூருக்குப் பயணம் செய்ய நேர்ந்தது. அப்போது இருவரும் உரையாடிக்கொண்டே சென்று கொண்டிருந்த போது மற்றொரு அருட்சகோதரி பேச ஆரம்பித்தார். "நீங்கள் இந்த குழுமத்திற்கு வருவதற்கு முன்பே பலர் உங்களைப்பற்றி பல எதிர்மறையான கருத்துக்களைக் கூறினர். ஒரு கட்டத்தில் நானும் அதை நம்ப ஆரம்பித்து விட்டேன். நீங்கள் வந்த பின்னரும் அதே கண்ணோட்டத்துடன் தான் உங்களைப் பார்த்தேன். உங்களை அனுகுவதற்கு இத்தகைய எண்ணங்கள் தடையாய் இருந்தன. ஆனால் நாளடைவில் உங்களுடன் பழக ஆரம்பித்த பின்பு தான் தெரிந்தது நீங்கள் மற்றவர்கள் கூறியது போலில்லை. இது எனக்கு ஒரு வாழ்க்கைபாடமாக அமைந்தது. யாரையும் பிறர் சொல்வதை வைத்துக்கொண்டு நல்லவர் என்றோ கெட்டவர் என்றோ நாம் தீர்பிடக்கூடாது. நம் சொந்த அனுபவத்தை வைத்து தான் மதிப்பிட வேண்டும் என்று கற்றுக்கொண்டேன்" என்று பகிர்ந்து கொண்டாராம். அது முதல் அவர்களிடையே உறவு வளர்ந்ததாக அவர் என்னிடம் பகிர்ந்துகொண்டார்.

பல சமயங்களில் நம்முடைய மனநிலையும் இவ்வாறாகத்தான் உள்ளது. ஒருவரை நல்லவர் என்று உலகம் பாராட்டினால் நாமும் பாராட்டுகிறோம். தீயவர் என்று குறைகூறினால் நாமும் சேர்ந்துகொள்கிறோம். நம் சொந்த அனுபவித்திலிருந்து ஒருவரை மதிப்பிட மறந்து போகிறோம். இதை மனித அனுபவங்களில் மட்டுமல்ல கடவுள் அனுபவத்திலும் பின்பற்றுகிறோம். இயேசு யார் என்று கேட்டால், நல்லவர். வல்லவர். கடவுளின் மகன், நம்மைப்  அன்பு செய்கிறவர் என்று நமக்குத் தெரிந்த எல்லாவற்றையும் ஒப்பித்து விடுவோம். ஏனென்றால் சிறு வயது முதலே அவ்வாறு நமக்கு சொல்லிக்கொடுத்து நம்மை வளர்த்திருக்கிறார்கள். ஆனால் நம்முடைய சொந்த அனுபவத்திலிருந்து இயேசு யார் என்று கேட்டுப்பார்த்தால் உண்மையில் நம்மால் விளக்க முடியாது என்பது தான் உண்மை. உலக அறிவிலிருந்து நம்மால் பேசுப்படும் இறைவன் ஆன்மீக அனுபவத்தில் மாறுபட்டவராகவே இருக்கிறார். அந்த ஆன்மீக இறைவனை அறிய தூய ஆவியாரின் ஆற்றல் மிக அவசியமாகிறது.

இன்றைய முதல் வாசகத்தின் மூலம் புனித பவுலடியார் தூய ஆவியாரின் ஆற்றலால் மட்டுமே ஒருவர் கடவுளைக் கண்டுணர முடியும் என்பதைக் கூறுகிறார். மேலும் உலக ஞானத்தால் எவரும் ஆவிக்குரியவற்றை பேசஇயலாது, வெறும் மனித இயல்போடு ஆவிக்குரியவற்றை ஏற்றுக்கொள்ள இயலாது எனவும் உறுதியாகக் கூறுவதோடு, தூய ஆவியாரின் வல்லமையாலேயே இது சாத்தியமாகும் என்பதையும் கூறுகிறார்.

நற்செய்தியில் இயேசு தன்னை இறைமகன் என்று கூறிய தீய ஆவியை வாயடைக்கச் செய்கிறார் என வாசிக்கிறோம். இயேசு ஏன் அவ்வாறு செய்தார்? இன்னும் பேச விட்டிருந்நதால் பேய் கூட இவர் யாரென்று என்று சொல்வதை நம்பி இயேசுவை பலர் நம்பி இருக்கலாம். ஆனால் இயேசுவுக்கு அப்படிப்பட்ட நம்பிக்கை தேவையில்லை. மக்கள் தங்களுடைய சொந்த அனுபவத்தின் மூலம் அவரை அறிந்து அவரை நம்புவதையே விரும்பினார். எனவே தான்  இயேசு சீடர்களிடம் மக்கள் தன்னை யாரென்று சொல்கிறார்கள் என்ற கேள்வியோடு நிறுத்தவில்லை. நீங்கள் என்னை யாரென்று சொல்கிறீர்கள் என்று தன் சீடர்களின் ஆன்ம அனுபவத்தை சோதித்தார். இறைமகன் என்று பதிலளித்த பேதுருவை பாராட்டி இந்த அனுபவம் விண்ணகத்திலிருந்து அருளப்பட்டது என்பதையும் தெளிவுபடுத்துகிறார். இயேசு செய்த எல்லா வல்ல செயல்களும் அவரை தன் சொந்த அனுபவத்தால் அறிந்து நம்பிக்கை கொண்டோருக்கே சென்றடைந்தது.

நம் அன்றாட வாழ்வில் ஆவிக்குரியவர்களாய் வாழ்ந்து இறைவனை உணர்கிறோமா? அல்லது கற்றுக்கொடுக்கப்பட்ட ஆன்மீகத்திலேயே இன்னும் இறைவனை அறியாமல் வாழ்கிறோமா? சிந்திப்போம்.


 இறைவேண்டல் 

ஆன்மீக ஆனுபவமே இறைவா! பல வேளைகளில் உலக அறிவினால் உம்மை அறிந்து கொள்ளலாம் என்ற நினைவில் எங்களுக்குள் செயலாற்றும் தூய ஆவியானவரை மறந்து விடுகிறோம். அந்த தூய ஆவியாராலேயே உம்மை முழுவதுமாக நாங்கள் உணர முடியும் என்பதை இன்று நாங்கள் உணர்கிறோம்.அந்த ஆவியாரின் ஆற்றலால் உம்மை உள்ளத்தால் உணரவும், உலகிற்கு பறைசாற்றவும் உம் அருளை தாரும். ஆமென்.

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு


Join with us 👇

 Website: https://catholicvoicecv.blogspot.com

Youtube: https://www.youtube.com/channel/UCcgIiK1gUEqRCmTsc7ZjAoA

Youtube: https://www.youtube.com/channel/UCxBBHQAKIjii_MsZfIYNF5A

Facebook: https://www.facebook.com/Catholic-Voice-108151311955076

No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...