பொதுக்காலம் 23ஆம் வாரம் - புதன்
மணமானோர் மணவிலக்குக்கு தேடக்கூடாது; மணமாகாதோர் திருமணம் செய்துகொள்ள வழி தேடக்கூடாது.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 7: 25-31
சகோதரர் சகோதரிகளே,
மணமாகாதவர்களைக் குறித்துப் பார்ப்போம். இவர்களைப் பற்றிய ஆண்டவரின் கட்டளை எதுவும் என்னிடம் இல்லை. எனினும், ஆண்டவரின் இரக்கத்தால் நம்பிக்கைக்குரியவனாய் இருக்கும் நான் என் கருத்தைச் சொல்கிறேன். மணமாகாதோர் தாம் அழைக்கப்பட்ட நிலையிலேயே இருந்துவிடுவது நல்லது. இப்போதுள்ள இடர் நிலையை முன்னிட்டு இவ்வாறு இருப்பதே நல்லதென எண்ணுகிறேன். மனைவியுடன் திருமணத்தால் இணைக்கப்பட்டு இருப்பவர்கள் மணவிலக்குக்கு வழி தேடக் கூடாது; மனைவியுடன் இணைக்கப்படாதவர்கள் திருமணம் செய்து கொள்ள வழி தேடக் கூடாது. நீங்கள் திருமணம் செய்து கொண்டால் அது பாவமல்ல. இளம் பெண்கள் திருமணம் செய்து கொண்டால் அதுவும் பாவமல்ல. ஆனால் திருமணம் செய்து கொள்வோர் இவ்வுலக வாழ்வில் இன்னலுறுவர். நீங்கள் அவ்வின்னல்களுக்கு உள்ளாகாதிருக்க வேண்டும் என்பதே என் நோக்கம்.
அன்பர்களே, நான் சொல்வது இதுவே: இனியுள்ள காலம் குறுகியதே. இனி மனைவி உள்ளவரும் மனைவி இல்லாதவர்போல இருக்கட்டும். அழுபவர் அழாதவர் போலவும், மகிழ்ச்சியுறுவோர் மகிழ்ச்சியற்றவர் போலவும், பொருள்களை வாங்குவோர் அவை இல்லாதவர் போலவும் இருக்கட்டும். உலகச் செல்வத்தைப் பயன்படுத்துவோர் அவற்றில் முழுமையாக ஈடுபடாதவர் போல் இருக்கட்டும். இவ்வுலகு இப்போது இருப்பது போல் நெடுநாள் இராது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 45: 10-11. 13-14. 15-16 (பல்லவி: 10a)பல்லவி: கேளாய் மகளே! கருத்தாய்க் காதுகொடுத்துக் கேளாய்!
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! துள்ளி மகிழ்ந்து கொண்டாடுங்கள்; ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
ஏழைகளே நீங்கள் பேறு பெற்றோர்; செல்வர்களே ஐயோ! உங்களுக்குக் கேடு!
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 20-26
அக்காலத்தில்
இயேசு சீடர்மீது தம் பார்வையைப் பதித்துக் கூறியவை: “ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் இறையாட்சி உங்களுக்கு உரியதே. இப்பொழுது பட்டினியாய் இருப்போரே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் நீங்கள் நிறைவு பெறுவீர்கள். இப்பொழுது அழுதுகொண்டிருப்போரே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் நீங்கள் சிரித்து மகிழ்வீர்கள்.
மானிடமகன் பொருட்டு மக்கள் உங்களை வெறுத்து, ஒதுக்கிவைத்து, நீங்கள் பொல்லாதவர் என்று இகழ்ந்து தள்ளிவிடும்போது நீங்கள் பேறுபெற்றோர். அந்நாளில் துள்ளி மகிழ்ந்து கொண்டாடுங்கள்; ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். அவர்களுடைய மூதாதையரும் இறைவாக்கினருக்கு இவ்வாறே செய்து வந்தனர்.
ஆனால் செல்வர்களே ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் எல்லாம் அனுபவித்துவிட்டீர்கள். இப்போது உண்டு கொழுத்திருப்போரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் பட்டினி கிடப்பீர்கள். இப்போது சிரித்து இன்புறுவோரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் துயருற்று அழுவீர்கள். மக்கள் எல்லாரும் உங்களைப் புகழ்ந்து பேசும்போது ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் அவர்களின் மூதாதையரும் போலி இறைவாக்கினருக்கு இவ்வாறே செய்தார்கள்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
“நீங்கள் பேறுபெற்றோர்”
அரசரும் அவரது மகனும்:
முன்பொரு காலத்தில் ஓர் அரசர் இருந்தார். அவருக்குப் பல ஆண்டுகளாகக் குழந்தையே இல்லை. அதன் நிமித்தம் அவர் தன்னுடைய நாட்டில் இருந்த தலைசிறந்த மருத்துவர்களை எல்லாம் அரமணைக்கு வரவழைத்து அவர்கள் பரிந்துரைத்த மருந்துங்களை உண்டு வந்தார்.
ஒரு வழியாக அவருக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அதுவும் கால் ஊனமாகப் பிறந்ததால். அவரது மனம் சுக்கு நூறாக உடைந்து போனது. அப்போது அவருக்குப் பலரும் ஆறுதல் சொல்லிவிட்டுப் போனார்கள். யாவருடைய வார்த்தையும் அவருக்கு ஆறுதல் தரவில்லை. இந்நிலையில் அவரிடம் வந்த ஒரு சிற்பி, “உங்களுடைய மகன் எப்படி இருக்கவேண்டும் என்று சொல்லுங்கள். அதைப் போன்று நான் சிற்பம் வடித்துத் தருகின்றேன். அதை பார்க்கும் உங்கள் மகன் நிச்சயம் அதைப் போல் ஆவான்” என்றார்.
சிற்பி சொன்ன யோசனை அரசருக்கு மிகவும் பிடித்துப் போனது. அதனால் அவர் தன்னுடைய மகன் எப்படி இருக்கவேண்டும் என்று சிற்பியிடம் சொல்ல, சிற்பியும் அரசர் சொன்ன தோற்றத்துடன் ஒரு சிற்பத்தை வடித்துத் தந்தார். அதை அரண்மனையின் முன்னே வைத்த அரசர் தன்னுடைய மகன் மெல்ல வளர்ந்து வந்தபோது, அவனைச் சக்கர நாற்காலியில் வைத்துக் கொண்டு, “இந்தச் சிற்பத்தில் இருப்பது நீதான். இதில் உள்ளதைப் போன்று நீ கம்பீரமாக எழுந்து நிற்கவேண்டும்” என்றார்.
இதையடுத்து வந்த நாள்களில் இளவரசன் சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டே தன்னுடைய உருவம் பொறிக்கப்பட்டிருந்த சிற்பத்தைச் சுற்றி சுற்றி வந்தான். சில சமயங்களில் அவன் சக்கர நாற்காலியிலிருந்து எழுந்திருக்க முயன்றபோது கீழே விழுந்தான். ஆனாலும் அவன் தன்னுடைய முயற்சியைக் கைவிடவில்லை. ஒரு நாள் அவன் சக்கர நாற்காலியிலிருந்து எழுந்துபோது, அவனால் எழ முடிந்தது. உடனே அவன் தன்னுடைய உருவம் பொறிக்கப்பட்ட சிற்பத்தை ஓடிச்சென்று கட்டிப் பிடித்துக் கொண்டான். இதையெல்லாம் தொலைவிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த அரசர் தான் விரும்பியது போல் தன் மகன் ஆகிவிட்டான் என்று மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தார்
ஆம், இந்த நிகழ்வில் வரும் அரசர் தன்னுடைய மகன் எப்படி இருக்கவேண்டும் என்று விரும்பினாரோ அப்படியொரு சிற்பத்தைச் செய்துவைத்து, அதில் இருப்பதைப் போன்று தன்னுடைய மகனைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தார். கடவுளும் தன் மக்களாகிய ஒவ்வொருவரும் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று விரும்புகின்றார். அதற்காக அவர் கொடுத்திருப்பதுதான் இன்றைய நற்செய்தியில் இடம்பெறும் ‘சமவெளிப் பொழிவு’. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
நமது முன்னாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட், தன்னுடைய ‘Jesus of Nazareth’ என்ற நூலில் இப்படியொரு செய்தியைக் குறிப்பிடுவார்: “இயேசுவின் மலைப்பொழிவு, அல்லது சமவெளிப்பொழிவு அவரது தன்னிலை விளக்கமே.” இக்கூற்று உண்மைதான் என்பதை அதை ஆழமாகப் படித்துப் பார்க்கும்போது புரிந்துகொள்ளலாம்.
மத்தேயு நற்செய்தியில் இடம்பெறும் மலைப்பொழிவைவிடவும், லூக்கா நற்செய்தியில் இடம்பெறும் சமவெளிப்பொழிவு சிறிதாக இருந்தாலும், அதில் இயேசு நேரடியாக நம்மிடம் பேசுவது போன்று இருக்கின்றது. மேலும் ஏழைகள், பட்டினியாய் இருப்போர், அழுதுகொண்டிருப்போர், வெறுத்து ஒதுக்கப்படுவோர் யாவரும்ம் இயேசுவை அப்படியே நம் கண்முன்னால் நிறுத்துகிறார்கள். இயேசு செல்வந்தராய் இருந்தும் நமக்காக ஏழையானார்; அவர் நீதிக்காக வேட்கை கொண்டார்; அவர் மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டார். இப்படியெல்லாம் இயேசு இருந்தார் எனில், அவரைப் போன்று நாம் வாழ்ந்தால் நிச்சயம் பேறுபெற்றோர் ஆவோம்.
இன்றைய முதல் வாசகம், “இவ்வுலகு இப்போது இருப்பதுபோல் இராது” என்ற வார்த்தைகளோடு முடிகின்றது. அதனால் நாம் உலகப் போக்கின்படி ஒழுகாமல், இயேசுவின் வழியில் நடந்து பேறுபெற்றோர் ஆவோம்.
சிந்தனைக்கு:
கடவுள் முன்னிலையில் செல்வந்தராய் இருப்பதுதான் மிகப்பெரிய பேறு!
இயேசுதான் நமக்கு மிகப்பெரிய முன்மாதிரி. ஏனெனில், அவரே சொல்லிலும் செயலிலும் வல்ல இறைவாக்கினர்.
இவ்வுலகில் கொடுத்து வாழ்பவர்; மறு உலகில் வாழக் கொடுத்து வைத்திருக்கின்றார்.
இறைவாக்கு:
‘கருணை நிறைந்தவர் தம் உணவை ஏழைகளோடு பகிர்ந்து உண்பார்; அவரே ஆசி பெற்றவர்’ (நீமொ 22:9) என்கிறது நீதிமொழிகள் நூல். எனவே, நாம் கருணையும் அன்பும் நிறைந்தவர்களாய் இயேசுவின் வழியில் நடந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
திருப்பாடல் 45: 10-11, 13-14, 15-16 (10a)
“உன் தலைவர் அவரே; அவரைப் பணிந்திடு”
இறுமாப்பும் பணிவும்:
விவசாயி ஒருவர் தன்னுடைய தோட்டத்தில் ஒரு ரோஜா செடியை நட்டு வைத்திருந்தார். கூடவே வேறு சில மலர்செடிகளையும் அவர் நட்டு வைத்திருந்தார். சில நாள்கள் கழித்து, ரோஜா செடியிலிருந்து ஒரு ரோஜா மலர் பூத்தது. அந்த ரோஜா மலருக்கு மற்ற எல்லா மலர்களையும்விடத் தானே மிகவும் அழகு என்ற இறுமாப்பு ஏற்பட்டது. அதனால் அது காற்றைக்கூடத் தன்னை முத்தமிட அனுமதிக்கவில்லை. இதனால் பொறுமையிழந்த காற்று ஓங்கி வீச, ஒய்யாரமாக இருந்த ரோஜா மலர் கீழே விழுந்து கதறத் தொடங்கியது.
அந்த நேரம் பார்த்து விவசாயி தோட்டத்திற்குள் வந்தார். அவர் கீழே விழுந்து கிடந்த ரோஜா மலரைத் தன் கையில் எடுத்துப் பொத்தி வைத்துக் கொண்டார். இதனால் ரோஜா மலர், ‘தனக்கு என்ன ஆகப் போகிறதோ? என்று இன்னும் மிகுதியாகக் கதறியது. சிறிது நேரம் கழித்து, அது, ‘தனக்கு ஏதோவோர் ஆபத்து நடக்கப் போகிறது’ என நினைத்து, ‘இனிமேலும் கதறிப் பயனில்லை’ என்று விவசாயியின் கையில் தன்னை முழுவதும் ஒப்படைத்தது.
சற்றுநேரம் கழித்து ரோஜா மலர், விவசாயி தன்னைக் கீழே வைத்துவிட்டதை உணர்ந்து, மெல்லக் கண் திறந்து பார்த்தது. அப்போது அது தன்னுடைய கண்களை நம்ப முடியாதவாறு, ஆண்டவரின் திருவடிகளின் காணிக்கையாக இருந்தது. அப்போதுதான் அதற்கு, இறுமாப்போடு இருந்தபோது அழிவு வந்தது என்றும், விவசாயியின் கையில் தன்னைப் பணிவோடு ஒப்படைத்தபோது உயர்வு வந்தது’ என்ற உண்மை புரிந்தது.
ஆம், நம்முடைய வாழ்வை இறுமாப்பு அல்ல, பணிவே உணர்த்தும் அதையே இந்தக் கதை உணர்த்துகின்றது. இன்று நாம் பாடக்கேட்ட பதிலுரைப்பாடல், “உன் தலைவர் அவரே; அவரைப் பணிந்திடு” என்கிறது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
இன்று நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 45 அரசரின் திருமணப் பாடலாகும். இத்திருப்பாடல் இரண்டு பகுதிகளைக் கொண்டிருக்கின்றது. முதற்பகுதி (1-9), ஆண்டவரால் ஏற்படுத்தப்படும் அரசர் நீதியோடு ஆட்சி செய்வார் என்றும், அவர் அநீதியை வெறுப்பார் என்றும் கூறுகின்றது. இரண்டாவது பகுதி (10-17) பெரழோடு இருக்கும் அரசி அரசருக்குப் பணிந்திருக்கவேண்டும் என்ற செய்தியைக் கூறுகின்றது.
இத்திருப்பாடலை நாம் வேறு விதமாகப் புரிந்துகொள்ள வேண்டும். கணவரான ஆண்டவருக்கு மனைவியான இஸ்ரயேல் நாடு பணிந்திருக்கவேண்டும். அப்படி ஆண்டவரின் குரலுக்கு நாட்டு மக்கள் செவிசாய்த்துப் பணிந்து நடந்தால் அவர்கள் எல்லாவிதமான ஆசிகளையும் பெறுவார்கள். இது மறுக்க முடியாத உண்மை.
எனவே, நாம் அனைத்துலகின் அரசராம் ஆண்டவருக்கு பணிந்து நடந்து, அவரது ஆசியைப் பெறுவோம்.
சிந்தனைக்கு:
கடவுளாகிய ஆண்டவருக்கு நாம் கட்டாயத்தினால் அல்ல, அன்பால் பணிந்திருப்போம்.
ஆண்டவர் நம்பிக்கைக்குரியவராய் இருப்பது போல், நாமும் ஆண்டவருக்கு நம்பிக்கைக்குரியவர்களாய் இருப்போம்.
தாழ்ச்சியுடைவோர் வீழ்ச்சி அடைவதில்லை.
இறைவாக்கு:
‘ஆண்டவர் முன் உங்களைத் தாழ்த்துங்கள்; அவர் உங்களை உயர்த்துவார்’ (யாக் 4:10) என்பார் யாக்கோபு. எனவே, நாம் ஆண்டவர் முன் நம்மையே தாழ்த்தி, அவரது வழியில் நடந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
-----------------------------------------
பேறுபெற்றவர்களா நாம்!
இரு வழிப்போக்கர்கள் சாலை வழியே வரும்போது செல்வந்தர் ஒருவர் வீட்டைத்தாண்டி சென்றார்கள். அவர் செல்வந்தர் மட்டும் அல்ல சமுதாயத்தில் பெரிய அந்தஸ்து உடையவர். அரசியல்வாதியும் கூட. அந்த வழிப்போக்கர்களில் ஒருவர் மற்றவரை நோக்கி "கொடுத்து வைத்தவன். வாழ்க்கையில் எந்தக் குறையும் இல்லாமல் வாழ்கிறான்" என்று கூற மற்றவரும் ஆம் என்று தலையை ஆட்டி "நாமோ எவ்வளவு பாடுபட்டு உழைத்தாலும் கையிலும் பையிலும் எதுவும் மிச்சமில்லாமல் போய்விடுகிறது. அடுத்த ஜென்மத்திலாவது இவர்களைப்போல பிறக்க வேண்டும்" என்று தங்கள் ஆதங்கத்தைக் கொட்டிக்கொண்டிருந்த நேரத்தில் அவ்வீட்டிலிருந்து வெளியே அழுது கொண்டே வந்த ஒருவர் "இவன் நல்லாவே இருக்க மாட்டான்" என்று சாபமிட்டுக்கொண்டே சென்றார். இதைக்கண்ட அந்த இரு வழிப்போக்கர்களும் இப்போதுதானே நாம் கொடுத்து வைத்தவன் என்று பாராட்டினோம். அதற்குள் மற்றொருவர் சாபமிடுகிறானே என்று குழம்பிக்கொண்டே தங்கள் வழி தொடர்ந்தனர்.
உண்மையான பேறு எது? வசதியும் பதவியும் கேளிக்கைக் கொண்டாட்டங்களும் நம் வாழ்வில் இருந்தால் போதும் என்ற மனநிலை இன்று நம்மிடையே பரவலாக இருப்பதை நாம் காண்கிறோம். செல்வமும் அதனால் வரும் மகிழ்ச்சியுமே கடவுளின் ஆசிர்வாதம். வறுமையும் துன்பமும் கடவுளின் சாபம் என்ற எண்ணம் காலம் காலமாய் நமக்குள் குடிகொண்டிருக்கத்தான் செய்கிறது.
ஆண்டவர் இயேசுகிறிஸ்து அதற்கு எதிர்மறையான கூற்றை இன்று நற்செய்தியின் மூலம் கூறுகிறார். ஏழைகளே, பட்டினியாய் இருப்போரே, துன்புறுவோரே நீங்கள் அனைவரும் பேறுபெற்றவர்கள் எனக்கூறும் இயேசு, செல்வர்களே, உண்டு கொழுத்திருப்போரே, இன்புறுவோரே உங்களுக்கு ஐயோ கேடு என்ற கடுமையான மொழிகளை உதிர்க்கிறார்.இதன் உண்மையான பொருள் என்ன? இயேசு உண்ணக்கூடாது என்றோ, செல்வம் சேர்க்கக் கூடாது என்றோ,மகிழ்ச்சியாய் இருக்கக் கூடாது என்றோ சொல்லவில்லை.
நம்மைப் படைத்த கடவுளுக்கு அவருடைய பிள்ளைகள் மகிழ்வுடனும் நிறைவுடனும் வாழ வேண்டும் என்பதே விருப்பம். ஆனால் அந்த மகிழ்விலும் இன்பத்திலும் அதிக ஈடுபாடு காட்டி அதற்கு காரணமான அந்த கடவுளையும் ,இவை எதுவுமின்றி அல்லலுறும் எழை எளியவர்களையும் நாம் மறந்தோமெனில் அதைவிடக் கேடானது உலகில் ஏதுமில்லை என்பதே இயேசுவின் போதனை. இயேசு கூறிய "செல்வந்தனும் ஏழை இலாசரும்" என்ற உவமை இயேசுவின் இப்போதனையை நமக்கு இன்னும் தெள்ளத்தெளிவாக விளக்குகிறது.
மேலும் இயேசு பேறுபேற்றோர் எனச்சுட்டிக்காட்டும் ஏழைகளும் துன்புறுவோரும் யார் ? அவர்கள் இருக்கின்றதில் நிறைவு கொள்பவர்கள். இருக்கும் போதும் இல்லாதபோதும் கடவுளை சார்ந்து இருப்பவர்கள். துன்பத்தில் இருக்கின்ற அவர்கள் பிறரின் துன்பத்தில் தோள் கொடுப்பார்கள். ஆம். இத்தகைய பேறுபெற்றோர் போல வாழவே இயேசு நம்மை இன்று அழைக்கிறார்.
இன்றைய முதல் வாசகத்திலும் புனித பவுல் இச்செய்தியை இன்னும் ஆழமாக, "உலகச் செல்வத்தை பயன்படுத்துவோர் அவற்றில் முழுமையாக ஈடுபடாதவராக இருக்கட்டும்" என்று கூறி இருக்கின்ற நிலையில் கடவுளுக்கு அன்பு செய்து வாழ நம்மை அழைக்கிறார்.
"பற்றற்றான் பற்றினைப் பற்றுக" என்ற திருக்குறள் கூறுவதைப் போல இவ்வுலகில் நமக்கு கொடுக்கப்பட்ட செல்வங்களிலும் இன்பங்களிலும் அதிக ஈடுபாடு கொள்ளாமல் எளிய மனத்தோராய் இறைவனைப் பற்றி வாழ்வதே நமக்கு? கிடைக்கும் உண்மையான பேறு என்பதை உணர்ந்து வாழும் வரத்தை இறைவனிடம் இறைஞ்சுவோம்.
இறைவேண்டல்
பேறுபெற்றவர்களாக வாழ எங்களை அழைத்த இறைவா! உலக இன்பங்கள் செல்வச் செழிப்புகள் எல்லாம் நிலையற்றவை என்பதை உணர்ந்து அவற்றில் அதிக ஈடுபாடு கொள்ளாமல், நாங்கள் இருக்கின்ற நிலையில், இருப்பதில் நிறைவு கொண்டவர்களாய், இன்பத்திலும் துன்பத்திலும், வறுமையிலும் செழுமையிலும் உம்மைச் சார்ந்து வாழும் வரம் தாரும்.? அதுவே எங்களை பேறுபெற்ற நிலைக்கு உயர்த்தும் என்ற உள்ளார்ந்த உணர்வைத் தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️
Join with us 👇
Website: https://catholicvoicecv.blogspot.com
Youtube: https://www.youtube.com/channel/UCcgIiK1gUEqRCmTsc7ZjAoA
Youtube: https://www.youtube.com/channel/UCxBBHQAKIjii_MsZfIYNF5A
Facebook: https://www.facebook.com/Catholic-Voice-108151311955076
Instagram:https://www.instagram.com/invites/contact/?i=16mmdwn460k8p&utm_content=p6lg283
No comments:
Post a Comment