காலை ஜெபம்.
என் ஆண்டவரே இயேசுவே,
என் மீது அளவு கடந்த அன்பு கொண்டவரே! உம்மை துதிக்கின்றேன். கடவுளின் பிள்ளையாகும் உரிமையை எனக்கு அருளிய கிருபைக்காக உம்மை நன்றியோடு துதிக்கின்றேன். மாட்சியின் மன்னரே! உம்மை புகழ்கின்றேன். வலிமையும் ஆற்றலும் கொண்ட உமக்கு நன்றி கூறுகின்றேன். “ஆண்டவரே! நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்” என தன் பாவ நிலையை உணர்ந்து மனம் வருந்திய பேதுருவிற்கு “அஞ்சாதே; இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆகுவாய்” என்று ஆசீர்தந்து உம் அன்பு சீடராய் அருள் பொழிவு செய்ததை இறைவார்த்தையில் வாசிக்கின்றேன். நானும் என் பாவ நிலையை ஒப்புக்கொள்கின்றேன். நீர் தந்த சிறிய ஊழியத்தை பரிசுத்தமாய் செய்ய இயலாத பாவியாக இருக்கும் என்னை மன்னியுங்கப்பா: உமது தூய ஆவியால் என்னையும் நிறையும்; என் வாழ்நாள் முழுவதும் என்னோடு வழிநடந்து வாருமப்பா. என் பலவீனங்களால் நான் உம்மை விட்டுப்பிரிந்து சென்று பாவக்குழியில் உழல்கின்றேன். என்னை உம் கரம் பிடித்து தூக்கி நிலை நிறுத்தும். உமது ஊழியம் செய்ய பாவி என்னை அழைத்தவரே! என்னை கைநெகிழாதேயும். பாவிகளைத் தேடி வந்த அருள் நாதர் நீர்; பாவியான என்னை கனிதரும் மரமாய் மாற்ற உம்மால் மட்டுமே இயலுமென ஐயமின்றி நம்புகின்றேன். கடவுளின் நற்செய்திப் பணிக்கென ஒதுக்கி வைக்கப்பட்ட என்னை இருளின் ஆட்சியிலிருந்து உமது ஒளியின் ஆட்சியில் கொண்டுபோய்ச் சேர்த்தருளும். இயேசுவே! இன்றைய நாளில் என்னை ஆசீர்வதித்து வாழவையும். உமது வியத்தகு ஒளியில் நடந்திட கிருபை தந்து வழிநடத்த வேண்டுமாய் இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தால் ஜெபிக்கிறேன்.
ஆமென்!
மதிய செபம்
தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்;
(எசாயா 66:13)
தாயும் தந்யுமான இறைவா! இந்த மதிய வேளைக்காய் நன்றி கூறுகின்றோம். ஒவ்வொரு நொடிப்பொழுதும் நீர் எங்களை எல்லா ஆபத்துகளிலிருந்து காத்து வருகின்றீர். உம் அடைக்கலத்தில் வாழும் எங்களுக்கு என்றும் மகிழ்ச்சி ஏற்பட செய்துள்ளீர். ஆம் தந்தையே! எங்களுக்குள் இருக்கின்ற இதே அமைதியும், மகிழ்ச்சியும் உலகில் உள்ள ஒவ்வொருவரிலும் செயலாற்றட்டும். குறிப்பாக கொள்ளை நோயினால் தாய் தந்தையை இழந்து, உறவுகளை இழந்து வாழும் ஒவ்வொரிலும் மகிழ்ச்சி குடிகொள்ளச் செய்து தாயும் தந்தையுமாய் அரவணைத்துக் காத்துக் கொள்ள உம்மை வேண்டுகிறோம். ஆமென்.
இரவு செபம்
படைகளின் கடவுளே! எங்களை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்; எம்மை மீட்குமாறு உமது முக ஒளியைக் காட்டியருளும்.
(திருப்பாடல்கள் 80:7)
ராஜாதி ராஜனே! இந்த நாள் முழுவதும் எங்களை காத்து வழிநடத்திய உமது தயவிற்காய் நன்றி கூறுகின்றோம். இந்த இரவு வேளை முழுவதும் எங்களை உம் சிறகிற்குள் மூடிக் காத்துக் கொள்ளும். தற்போது இருக்கக் கூடிய எல்லா பயங்கரமான சூழல்களும் மாறி முன்னைய நன்னிலைக்கு எங்களை திருப்பியருளும். பயங்கரமான நிலைகளிலிருந்து எங்களை மீட்டருளும். உம் முகத்தின் பிரகாசமான கருணையின் ஒளியை எங்கள் மீது காட்டியருளும். ஆமென்.
♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️
Join with us 👇
Website: https://catholicvoicecv.blogspot.com
Youtube: https://www.youtube.com/channel/UCcgIiK1gUEqRCmTsc7ZjAoA
Youtube: https://www.youtube.com/channel/UCxBBHQAKIjii_MsZfIYNF5A
Facebook: https://www.facebook.com/Catholic-Voice-108151311955076
Instagram:https://www.instagram.com/invites/contact/?i=16mmdwn460k8p&utm_content=p6lg283
No comments:
Post a Comment