Friday, November 18, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (19-11-2022)

 

                         பொதுக்காலம் 33ஆம் வாரம் - சனி

முதல் வாசகம்


மண்ணுலகில் வாழ்வோர்க்குத் தொல்லை கொடுத்த இரு சாட்சிகள்.

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 11: 4-12

சகோதரர் சகோதரிகளே,

மண்ணுலகின் ஆண்டவர் திருமுன் நிற்கும் இரண்டு ஒலிவ மரங்களும் இரண்டு விளக்குத் தண்டுகளுமே அந்த இரு சாட்சிகள். யாராவது அவர்களுக்குத் தீங்கு இழைக்க விரும்பினால் அவர்களது வாயிலிருந்து தீ கிளம்பி அந்தப் பகைவர்களைச் சுட்டெரித்துவிடும். அவர்களுக்குத் தீங்கு இழைக்க விரும்புவோர் இவ்வாறு கொல்லப்படுவது உறுதி. தாங்கள் இறைவாக்கு உரைக்கும் காலத்தில் மழை பொழியாதவாறு வானத்தை அடைத்துவிட அவர்களுக்கு அதிகாரம் உண்டு; தாங்கள் விரும்பும் பொழுதெல்லாம் தண்ணீரை இரத்தமாக மாற்றவும், மண்ணுலகை எல்லா வகை வாதைகளாலும் தாக்கவும் அவர்களுக்கு அதிகாரம் உண்டு.

அவர்கள் சான்று பகர்ந்து முடித்தபின் படுகுழியிலிருந்து வெளியே வரும் விலங்கு அவர்களோடு போர் தொடுத்து, அவர்களை வென்று கொன்றுவிடும். சோதோம் எனவும் எகிப்து எனவும் உருவகமாய் அழைக்கப்படும் அம்மாநகரின் தெருக்களில் அவர்களுடைய பிணங்கள் கிடக்கும். அங்கேதான் அவர்களின் ஆண்டவர் சிலுவையில் அறையப்பட்டார். பல்வேறு மக்களினத்தார், குலத்தினர், மொழியினர், நாட்டினர் மூன்றரை நாள் அவர்களுடைய பிணங்கள் அங்குக் கிடக்கக் காண்பார்கள்; அவற்றை அடக்கம் செய்ய விடமாட்டார்கள். மண்ணுலகில் வாழ்வோர் அவற்றைக் குறித்து மிகவே மகிழ்ந்து திளைப்பர்; ஒருவருக்கு ஒருவர் அன்பளிப்புகள் வழங்கிக்கொள்வர்; ஏனெனில் இந்த இரண்டு இறைவாக்கினரும் மண்ணுலகில் வாழ்வோர்க்குத் தொல்லை கொடுத்திருந்தனர்.

அந்த மூன்றரை நாளுக்குப் பின் கடவுளிடமிருந்து வந்த உயிர்மூச்சு அவற்றுக்குள் நுழைந்ததும், அவர்கள் எழுந்து நின்றார்கள். அதைப் பார்த்தவர்களைப் பேரச்சம் ஆட்கொண்டது. அப்பொழுது விண்ணகத்திலிருந்து எழுந்த ஓர் உரத்த குரல், “இவ்விடத்திற்கு ஏறி வாருங்கள்” என்று தங்களுக்குச் சொன்னதை அந்த இறைவாக்கினர்கள் இருவரும் கேட்டார்கள். அவர்களுடைய பகைவர்கள் பார்த்துக் கொண்டிருக்க அவர்கள் மேகத்தின்மீது விண்ணகத்துக்குச் சென்றார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 144: 1. 2. 9. 10 (பல்லவி: 1a)

பல்லவி: என் பாறையாகிய ஆண்டவர் போற்றி! போற்றி!

1
என் பாறையாகிய ஆண்டவர் போற்றி! போற்றி! போரிட என் கைகளுக்குப் பயிற்சி அளிப்பவர் அவரே! போர் புரிய என் விரல்களைப் பழக்குபவரும் அவரே! - பல்லவி

2
என் கற்பாறையும் கோட்டையும் அவரே! எனக்குப் பாதுகாப்பாளரும் மீட்பரும் அவரே! என் கேடயமும் புகலிடமும் அவரே! மக்களினத்தாரை எனக்குக் கீழ்ப்படுத்துபவர் அவரே! - பல்லவி

9
இறைவா, நான் உமக்குப் புதியதொரு பாடல் பாடுவேன்; பதின் நரம்பு வீணையால் உமக்குப் புகழ் பாடுவேன். - பல்லவி

10
அரசர்களுக்கு வெற்றி அளிப்பவர் நீரே! உம் ஊழியர் தாவீதைக் கொடிய வாளினின்று தப்புவித்தவரும் நீரே! - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

2 திமொ 1: 10b

அல்லேலூயா, அல்லேலூயா! நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்


அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக வாழ்வோரின் கடவுள்.

 லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 27-40

அக்காலத்தில்

உயிர்த்தெழுதலை மறுக்கும் சில சதுசேயர் இயேசுவை அணுகி, “போதகரே, மணமான ஒருவர் மகப்பேறின்றி இறந்துபோனால் அவர் மனைவியைக் கொழுந்தனே மனைவியாக ஏற்றுக்கொண்டு தம் சகோதரருக்கு வழிமரபு உருவாக்க வேண்டும் என்று மோசே எழுதிவைத்துள்ளார். இங்குச் சகோதரர் எழுவர் இருந்தனர். மூத்தவர் ஒரு பெண்ணை மணந்து மகப்பேறின்றி இறந்தார். இரண்டாம், மூன்றாம் சகோதரர்களும் அவரை மணந்தனர். இவ்வாறே எழுவரும் மகப்பேறின்றி இறந்தனர்; கடைசியாக அப்பெண்ணும் இறந்தார். அப்படியானால் உயிர்த்தெழும்போது அவர் அவர்களுள் யாருக்கு மனைவி ஆவார்? ஏனெனில் எழுவரும் அவரை மனைவியாகக் கொண்டிருந்தனரே?” என்று கேட்டனர்.

அதற்கு இயேசு அவர்களிடம், “இக்கால வாழ்வில் மக்கள் திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால் வருங்கால வாழ்வைப் பெறத் தகுதி பெற்ற யாரும் இறந்து உயிர்த்தெழும்போது திருமணம் செய்து கொள்வதில்லை. இனி அவர்கள் சாகமுடியாது; அவர்கள் வானதூதரைப் போல் இருப்பார்கள். உயிர்த்தெழுந்த மக்களாய் இருப்பதால் அவர்கள் கடவுளின் மக்களே.

இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதைப் பற்றி மோசே முட்புதர் பற்றிய பகுதியில் எடுத்துக் கூறியிருக்கிறாரே, அங்கு அவர் ஆண்டவரை, ‘ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்’ என்று கூறியிருக்கிறார். அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக வாழ்வோரின் கடவுள். ஏனெனில் அவரைப் பொறுத்தமட்டில் அனைவரும் உயிருள்ளவர்களே” என்றார்.

மறைநூல் அறிஞருள் சிலர் அவரைப் பார்த்து, “போதகரே, நன்றாகச் சொன்னீர்” என்றனர். அதன்பின் அவர்கள் அவரிடம் எதையும் கேட்கத் துணியவில்லை.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 நம் கடவுள் வாழ்வோரின் கடவுள்!


 இன்றைய நற்செய்தி நம்முடைய கடவுளை வாழ்வோரின் கடவுளாக சுட்டிக்காட்டுகிறது. சதுசேயர்கள் இயேசுவை ஏளனம் செய்யும் நோக்குடன் உயிர்த்தெழுதல் பற்றிய கேள்வியை கேட்டனர். சதுசேயர்கள் உயிர்த்தெழுதல் மீது நம்பிக்கை இல்லாதவர்களாக இருந்தனர். இயேசு மூன்றாம் நாள் உயிர்த்தெழுவார் என்று கூறியதால் அவரைக் கேலி செய்யும் நோக்குடன் கேள்வி கேட்டனர். ஆனால் இயேசு மிகவும் சாமர்த்தியமாக அவர்களுக்கு பதில் கொடுத்தார். 


இயேசு சதுசேயர்களின் குறைக்காணும் மனநிலையை அறிந்தவராய் உயிர்ப்பின் மேன்மையைப் பற்றி எடுத்துரைத்தார். உயிர்த்தெழுதல் இல்லை என்பது கடவுளை மறுப்பதற்கு சமம் என்ற சிந்தனையையும் சுட்டிக்காட்டினார். தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகச் சிறப்பாக பயன்படுத்தி உயிர்த்தெழுதல் பற்றிய போதனையை மிகச் சிறப்பாக விளக்கி கூறினார். 


உயிர்ப்பை பற்றிய நம்பிக்கை இல்லாதவர்களாய் சதுசேயர்கள் வாழ்ந்ததால், இவ்வுலக வாழ்க்கையை சிறப்பாக வாழவில்லை. ஆனால் நாம் வாழும் இந்த உலக வாழ்க்கையை மிகச் சிறப்பாக வாழ வேண்டுமெனில், உயிர்த்தெழுதல் பற்றிய நம்பிக்கை வேண்டும். அப்படி நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே அறநெறியோடு வாழ்வர். இந்த உலக வாழ்க்கையில் உண்மையோடும் நேர்மையோடும் நீதியோடும் வாழ முயற்சி செய்வர். எனவே நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நிச்சயம் நமக்கு உயிர்ப்பு உண்டு. இறப்புக்கு பின் வாழ்வு உண்டு என்று ஆழமாக நம்புவோம். நாம் வாழும் சிறந்த வாழ்க்கைக்கு இறைவன் நிச்சயமாக கைமாறு கொடுப்பார். நல்லதை விதைப்பவர்கள் நல்லதை அறுவடை செய்வார்கள். தீயதை விதைப்பவர்கள் தீயதை மட்டுமே அறுவடை செய்வார்கள். எனவே நிச்சயம் இறப்புக்குப் பின்பு உயிர்ப்பு என்ற வாழ்வு உண்டு என்று ஆழமாக நம்பி நம்முடைய வாழ்வை சிறந்த முறையில் வாழ முயற்சி செய்வோம்.


 இறைவேண்டல் :

வல்லமையுள்ள ஆண்டவரே! உயிர்ப்பின் நாயகனே! எங்களுடைய வாழ்வில் இறப்புக்குப் பின்பும் சிறந்த ஒரு வாழ்வு உண்டு என்பதை அறிந்தவர்களாய் இவ்வுலக வாழ்வை சிறந்த வாழ்வாக வாழ அருளைத் தாரும். ஆமென்.

அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்



† இன்றைய புனிதர் †
(நவம்பர் 19)

✠ புனிதர் ரஃபேல் கலினோவ்ஸ்கி ✠
(St. Raphael Kalinowski)


போலிஷ் தீவிர கார்மேல் துறவி/ மடாலயங்களின் நிறுவனர்:
(Polish Discalced Carmelite Friar and Founder of Carmelite Monasteries)

பிறப்பு: செப்டம்பர் 1, 1835
வில்னியஸ், ரஷிய பேரரசு
(Vilnius, Russian Empire)

இறப்பு: நவம்பர் 15, 1907 (வயது 72)
வாடோவிஸ், ரஷிய பேரரசு
(Wadowice, Russian Empire)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

அருளாளர் பட்டம்: கி.பி. 1983
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்
(Pope John Paul II)

புனிதர் பட்டம்: நவம்பர் 17, 1991
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்
(Pope John Paul II)

நினைவுத் திருநாள்: நவம்பர் 19

புனிதர் ரஃபேல் கலினோவ்ஸ்கி, ரஷியாவிலிருந்து பிரிந்த போலிஷ்-லித்துவானிய ஜனநாயக குடியரசிலுள்ள (Russian partition of Polish-Lithuanian Commonwealth) “விலினியஸ்” (Vilnius) எனும் இடத்தைச் சார்ந்த ஒரு “போலிஷ் தீவிர கார்மேல் துறவி” (Polish Discalced Carmelite friar) ஆவார். ஆதி கத்தோலிக்க கார்மேல் துறவு சபையைச் சார்ந்த இவர்கள், அக்காலத்தில் பாதங்களில் காலணிகள் கூட அணியாது தம்மைத் தாமே துன்புருத்திக்கொண்டு இறை சேவை புரிந்தவர்கள் ஆவார்கள். இவர், “புனிதர் ஜோசப் கலினோவ்ஸ்கியின் ரஃபெல்” (Raphael of St. Joseph Kalinowski) என்றும் அழைக்கப்படுகிரார்.

ஆசிரியர், பொறியாளர், போர்க்கைதி, அரச ஆசிரியர், குரு ஆகிய பன்முகம் கொண்ட புனிதர் ரஃபேல் கலினோவ்ஸ்கி, ரஷிய ஒடுக்குதலின் பின்னர், போலந்து முழுதும் பல கார்மலைட் துறவு மடங்களை நிறுவியவர் ஆவார்.

இவரது இயற்பெயர் “ஜோசெஃப் கலினோவ்ஸ்கி” (Józef Kalinowski ) ஆகும். இவரது தந்தை “ஆண்ட்ரூ கலினோவ்ஸ்கி” (Andrew Kalinowski) ஒரு “துணை கண்காணிப்பாளர் கணித பேராசிரியர்” (Assistant Superintendent Professor of Mathematics) ஆவார். இவரது தாயார் “ஜோசஃபின் போலோன்ஸ்கா” (Josephine Połońska), இவர் பிறந்த சில மாதங்களிலேயே இவரையும் இவரது மூத்த சகோதரர் “விக்டரையும்” (Victor) தாயற்ற குழந்தைகளாக விட்டு மரித்துப் போனார்.

எட்டு வயதிலிருந்து கல்வி கற்க ஆரம்பித்த ரஃபேல் கலினோவ்ஸ்கி, விவசாய கல்லூரியில் கற்று பட்டம் பெற்றார். அந்நாளில் ரஷியாவில் கல்விக்கும் பணிகளுக்கும் கட்டுப்பாடுகள் இருந்தபடியால் இவர் கி.பி. 1853ல் “ரஷிய பேரரசின் இராணுவத்தில்” (Imperial Russian Army) இணைந்து பொறியியல் கற்றார். பின்னர், அங்கேயே பொறியியல் பேராசிரியராகவும் பணி புரிந்தார். பின்னர், ஒரு பொறியாளராக ரெயில்வேயை வடிவமைக்க உதவினார். கி.பி. 1862ல் ரஷிய ராணுவம் அவருக்கு கேப்டனாக பதவியுயர்வு தந்தது. இருப்பினும் அவருக்கு போலந்தின் மீதிருந்த பரிவும் அன்பும் அப்படியே இருந்தது. போலந்தின் “வில்னியஸ்” பகுதியில் போலிஷ் எழுச்சியின் "ஜனவரி கிளர்ச்சிக்கு" உதவும் பொருட்டு, 1863ம் ஆண்டு, இம்பீரியல் ரஷிய ராணுவத்திலிருந்து அவர் வெளிவந்தார்.

எவரொருவருக்கும் மரண தண்டனை கொடுப்பதில்லை என்றும் எந்தவொரு போர்க்கைதியையும் தூக்கிலிடுவதில்லை என்றும் தீர்மானித்திருந்தார். 1863ம் ஆண்டு, போலிஷ் மக்கள் ரஷியாவுக்கு எதிராக கிளர்ந்தெழுந்தபோது, ரஃபெல் அவர்களுடன் இணைந்தார்.

ஆனால் விரைவிலேயே 24 மார்ச் 1864ல் ரஷிய ராணுவத்தால் அவர் போர்க்கைதியாக சிறை பிடிக்கப்பட்டார். தப்பிப் பிழைத்த ஒருசிலரும் அடிமைத் தொழிலாளர்களாக “சைபீரியா” (Siberia) பிராந்தியத்துக்கு அனுப்பப்பட்டனர். ரஃபேல் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டார். அவரது விசுவாசம் காரணமாக, அவர் சிறைக் கைதிகளின் ஆன்மீக தலைவரானார்.

கி.பி. 1864ம் ஆண்டு, மார்ச் மாதம், 24ம் தேதி, ரஷிய அதிகாரிகள் அவரை கைது செய்தனர். ஜூன் மாதம் அவருக்கு மரண தண்டனை அறிவிக்கப்பட்டது. ரஃபெலின் குடும்பத்தினரின் தலையீட்டால் ரஷிய ராணுவம் யோசித்தது. அவர் கொல்லப்பட்டால் அவர் அரசியல் தியாகியாக மதிக்கப்படலாம் என்ற பயம் அவர்களிடையே எழுந்தது. அவருடைய மரண தண்டனையை பத்து வருட சிறைத் தண்டனையாக குறைத்தனர். சைபீரிய தொழிலாளர் முகாமுக்கு அனுப்ப தீர்மானித்தனர். அவரும் இன்னும் பல போர்க்கைதிகளும் "சைபீரியாவிலுள்ள" (Siberia) அடிமை கூலித் தொழிலாளர்களாக வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டனர். உப்புச் சுரங்கங்களினூடே ஒன்பது மாதங்களாக பயணித்த அவர்களில் அநேகர் வழியிலேயே மரித்துப் போயினர். ஆனால், தமது இறை விசுவாசத்தின் காரணமாக உயிர் பிழைத்த ரஃபேல், அங்குள்ள சிறைக்கைதிகளின் மத தலைவராக உருவெடுத்தார். பத்து ஆண்டு சிறைவாசத்தின் பிறகே அவர் விடுவிக்கப்பட்டார்.

கி.பி. 1872ம் ஆண்டு, ரஷிய புவியியல் அமைப்பின் சைபீரிய உட்பிரிவுக்காக ரஃபெல் வளிமண்டலவியல் ஆராய்ச்சி செய்தார். கி.பி. 1873ம் ஆண்டு அவரை விடுதலை செய்த அதிகாரவர்க்கம், லித்துவானியாவிலிருந்து (Lithuania) நாடு கடத்தியது. அதன்பின் அவர் ஃபிரான்ஸின் பாரிஸ் நகருக்கு சென்றார்.

கி.பி. 1874ம் ஆண்டு, போலந்து நாட்டின் தலைநகரான “வார்சாவ்” (Warsaw) திரும்பிய ரஃபேல், அங்கே அரசவை ஆசிரியராக பணியமர்த்தப்பட்டார். பதினாறே வயதான இளவரசர் “ஆகஸ்ட் க்ஸர்டொரிஸ்கி” (Prince August Czartoryski) என்பவருக்கு கல்வி கற்பிக்கும் பணியாற்றினார். சிறிது காலத்தில், இளவரசர் காசநோயால் (Tuberculosis) பாதிக்கப்பட்டார். இளைஞனான இளவரசரின் மருத்துவத்திற்காக “ஃபிரான்ஸ்” (France), “ஸ்விட்சர்லாந்து” (Switzerland), “இத்தாலி” (Italy) மற்றும் “போலந்து” (Poland) ஆகிய நாடுகளுக்கு இளவரசருடன் ரஃபேல் உடன் சென்றார். ரஃபேல் மீது இளவரசருக்கு பெரும் அபிமானம் ஏற்பட்டிருந்தது. (பின்னாளில், இளவரசர் ஆகஸ்ட் துறவறம் பெற்று, குருத்துவ அருட்பொழிவு பெற்று ஆன்மீக பணியாற்றினார். “சலேசிய டோன் போஸ்கோ” (Salesians of Don Bosco) சபையைச் சேர்ந்த இவருக்கு, திருத்தந்தை “இரண்டாம் ஜான் பவுல்” (Pope John Paul II) 2004ம் ஆண்டு, முக்திபெறு பட்டம் வழங்கினார்.)

கி.பி. 1877ம் ஆண்டு, கலினோவ்ஸ்கி “லின்ஸ்” (Linz) நகரிலுள்ள கார்மேல் துறவியர் மடத்தில் இணைந்தார். அங்கே அவருக்கு "புனிதர் ஜோசஃபின் சகோதரர் ரஃபெல்" (Brother Raphael of St. Joseph) என்ற ஆன்மீக பெயர் சூட்டப்பட்டது.

கி.பி. 1882ம் ஆண்டு, ஆயர் "ஆல்பின் டுனாஜேவ்ஸ்கி" (Bishop Albin Dunajewski) ரஃபேலுக்கு குருத்துவ அருட்பொழிவு செய்வித்தார். 1883ல் ரஃபெல் “ஸ்செர்னா” (Czerna) நகரின் துறவியர் மடத்தின் தலைவர் ஆனார். “போலந்து” மற்றும் “உக்ரைனில்” (Poland and Ukraine) பல்வேறு கத்தோலிக்க நிறுவனங்களை நிறுவினார். கி.பி. 1884 மற்றும் 1888ல் கார்மேல் அருட்சகோதரியருக்கான துறவு மடங்களை நிறுவினார். கி.பி. 1892 முதல் 1907 வரையான காலகட்டத்தில், பதினேழாம் நூற்றாண்டின் கார்மேல் சபை துறவியான "அன்னை தெரெசா மார்ச்சொக்கா"வின் (Mother Theresa Marchocka) முக்திபேறு பட்டத்துக்கான வாழ்க்கை வரலாறு சம்பந்தமான ஆவன தயாரிப்பில் ஈடுபட்டிருந்தார்.

காசநோயால் (Tuberculosis) கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த ரஃபேல் கலினோவ்ஸ்கி 1907ம் ஆண்டு, "வடோவிக்" (Wadowice) நகரில் மரணமடைந்தார்.

(பின்னாளில், இவருக்கு 1983ம் ஆண்டு முக்திபேறு பட்டமும், 1991ம் ஆண்டு புனிதர் பட்டமும் வழங்கிய (கரோல் வோஜ்டிலா - Karol Wojtyła), திருத்தந்தை “இரண்டாம் ஜான் பால்” (Pope John Paul II) பதினான்கு வருடங்களின் பின்னர் அதே நகரில் பிறந்தார்.)

புனிதர் ரஃபேல் கலினோவ்ஸ்கி, “ரோமன் கத்தோலிக்கம்” (Roman Catholic) மற்றும் “ரஷிய மரபுவழி” (Russian Orthodox) ஆகிய திருச்சபைகளின் பிரபலமான ஆன்மீக வழிகாட்டியாக இருந்தார்.

நன்றி : திரு.புஷ்பராஜா


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...