Wednesday, November 23, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (24-11-2022)

 

பொதுக்காலம் 34ஆம் வாரம் - வியாழன்



முதல் வாசகம்

பாபிலோன் மாநகரே, நீ வீசி எறியப்படுவாய்.

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 18: 1-2, 21-23; 19: 1-3, 9a

சகோதரர் சகோதரிகளே,

வேறொரு வானதூதர் விண்ணகத்திலிருந்து இறங்கிவரக் கண்டேன். மிகுந்த அதிகாரம் கொண்டிருந்த அவருடைய மாட்சியால் மண்ணகம் ஒளிர்ந்தது. அவர் வல்லமையோடு குரலெழுப்பிப் பின் வருமாறு கத்தினார்: “வீழ்ந்தது! வீழ்ந்தது! பாபிலோன் மாநகர்! அவள் பேய்களின் உறைவிடமாக, அனைத்துத் தீய ஆவிகளின் பதுங்கிடமாக, தூய்மையற்ற பறவைகள் அனைத்தின் புகலிடமாக, தூய்மையற்ற வெறுக்கத்தக்க விலங்குகளின் இருப்பிடமாக மாறிவிட்டாள்.” பின்னர் வலிமை வாய்ந்த ஒரு வானதூதர் பெரிய எந்திரக்கல் போன்ற ஒரு கல்லைத் தூக்கிக் கடலில் எறிந்து பின்வருமாறு கூறினார்:

“பாபிலோன் மாநகரே, நீ இவ்வாறு வீசி எறியப்படுவாய்; நீ இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிடுவாய். யாழை மீட்டுவோர், பாடகர், குழல் ஊதுவோர், எக்காளம் முழக்குவோர் ஆகியோர் எழுப்பும் இசை இனி உன் நடுவே எழவே எழாது; தொழில் செய்யும் கைவினைஞர் அனைவரும் இனி உன் நடுவே குடியிருக்கவே மாட்டார்கள்; எந்திரக்கல் எழுப்பும் ஒலி இனி உன் நடுவே எழவே எழாது. விளக்கின் ஒளி இனி உன்னகத்தே ஒளிரவே ஒளிராது; மணமக்களின் மங்கல ஒலி இனி உன்னகத்தே எழவே எழாது; ஏனெனில் உன் வணிகர்கள் மண்ணுலகில் பெருங்குடி மக்களாய் விளங்கினார்கள்; உன் பில்லிசூனியம் எல்லா நாடுகளையும் ஏமாற்றி விட்டது."

இதன்பின் பெருந்திரளான மக்களின் கூச்சல் போன்ற ஒலி விண்ணகத்தில் எழக் கேட்டேன். அது பின்வருமாறு முழங்கியது: “அல்லேலூயா! மீட்பும் மாட்சியும் வல்லமையும் நம் கடவுளுக்கே உரியன. ஏனெனில் அவருடைய தீர்ப்புகள் உண்மை உள்ளவை, நீதியானவை. தன் பரத்தைமையால் மண்ணுலகை அழிவுக்குட்படுத்திய பேர்போன அந்த விலைமகளுக்கு அவர் தீர்ப்பு வழங்கினார்; தம் பணியாளர்களைக் கொன்றதற்காக அவளைப் பழிவாங்கினார்.” மீண்டும் அந்த மக்கள், “அல்லேலூயா! அந்த நகர் நடுவிலிருந்து புகை என்றென்றும் மேலே எழுந்த வண்ணம் உள்ளது” என்றார்கள்.

அந்த வானதூதர் என்னிடம், “ ‘ஆட்டுக்குட்டியின் திருமண விருந்துக்கு அழைக்கப் பெற்றோர் பேறுபெற்றோர்’ என எழுது” என்று கூறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 100: 1-2. 3. 4. 5 (பல்லவி: திவெ 19: 9a)

பல்லவி: செம்மறியின் திருமண விருந்துக்கு அழைக்கப் பெற்றோர் பேறுபெற்றோர்.

1
அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்!
2
ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்! மகிழ்ச்சி நிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்! - பல்லவி

3
ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்! அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்! - பல்லவி

4
நன்றியோடு அவர்தம் திருவாயில்களில் நுழையுங்கள்! புகழ்ப் பாடலோடு அவர்தம் முற்றத்திற்கு வாருங்கள்! அவருக்கு நன்றி செலுத்தி, அவர் பெயரைப் போற்றுங்கள்! - பல்லவி

5
ஏனெனில், ஆண்டவர் நல்லவர்; என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு; தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 21: 28

அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் தலை நிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

பிற இனத்தாரின் காலம் நிறைவு பெறும்வரை எருசலேம் அவர்களால் மிதிக்கப்படும்.

 லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 20-28

அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: “எருசலேமைப் படைகள் சூழ்ந்திருப்பதை நீங்கள் காணும்போது அதன் அழிவு நெருங்கி வந்துவிட்டது என அறிந்து கொள்ளுங்கள். அப்போது யூதேயாவில் உள்ளவர்கள் மலைகளுக்குத் தப்பி ஓடட்டும்; நகரத்தின் நடுவில் உள்ளவர்கள் வெளியேறட்டும்; நாட்டுப் புறங்களில் இருப்பவர்கள் நகரத்துக்குள்ளே வரவேண்டாம். ஏனெனில் அவை பழிவாங்கும் நாள்கள். அப்போது மறைநூலில் எழுதியுள்ள யாவும் நிறைவேறும்.

அந்நாள்களில் கருவுற்றிருப்போர், பாலூட்டுவோர் ஆகியோரின் நிலைமை அந்தோ பரிதாபம்! ஏனெனில் மண்ணுலகின்மீது பேரிடரும் அம்மக்கள்மீது கடவுளின் சினமும் வரும். அவர்கள் கூரான வாளால் வீழ்த்தப்படுவார்கள்; எல்லா நாடுகளுக்கும் சிறைப்பிடித்துச் செல்லப்படுவார்கள்; பிற இனத்தார் காலம் நிறைவு பெறும்வரை எருசலேம் அவர்களால் மிதிக்கப்படும்.

மேலும் கதிரவனிலும் நிலாவிலும் விண்மீன்களிலும் அடையாளங்கள் தென்படும். மண்ணுலகில் மக்களினங்கள் கடலின் கொந்தளிப்பின் முழக்கத்தினால் கலங்கி, என்ன செய்வதென்று தெரியாது குழப்பம் அடைவார்கள். உலகிற்கு என்ன நேருமோ என எண்ணி மனிதர் அச்சத்தினால் மயக்கமுறுவர். ஏனெனில், வான்வெளிக் கோள்கள் அதிரும்.

அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள்மீது வருவதை அவர்கள் காண்பார்கள். இவை நிகழத் தொடங்கும்போது, நீங்கள் தலை நிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது.”

ஆண்டவரின் அருள்வாக்கு.


அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர் 

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு 

சிவகங்கை மறைமாவட்டம்

இன்றைய வாசகங்கள்(24.11.2022) 

ஆண்டின் 34ஆம் வாரம் வியாழன்

மு.வா: திவெ: 18: 1-2, 21-23; 19: 1-3,9

ப.பா:  திபா: 100: 1-2. 3. 4. 5

ந.வா: லூக்: 21: 20-28


 *மீட்பின் காலத்தில் தலைநிமிர்ந்து நிற்போமா!*


இன்றைய வாசகங்கள் தீமையின் அழிவையும் இறைமகன்  வழங்கும் மீட்பையும் நமக்குச் சுட்டி க்காட்டுகின்றது. இறைமகன் மீண்டும் வரும்வேளையில் உலகத்தில் நடைபெறும் மாற்றங்களையும், இயற்கைச் சீற்றங்களையும் படம் பிடித்துக் காட்டுவதாய் உள்ளது. இவ்வசனங்களை நாம் வாசிக்கும் போது நமக்குள் அச்சம் எழுவதை நாம் உணர்கிறோம்.மனம் கலங்குகிறோம். இவை அனைத்தும் இப்பொழுதே நடைபெற்றுக் கொண்டிருப்பதை உணர்கிறோம். ஆனால் ஆண்டவர் எதிர்பார்ப்பது அச்சத்தை அல்ல. நல்ல மனமாற்றத்தையே.


உலகத்தில் எப்போதுமே எதிர்மறையானவற்றிற்கிடையே போராட்டம் நடைபெறுகிறது. தீமை நன்மையை வெல்லத் துடிக்கிறது. இருள் ஒளியை ஆள நினைக்கிறது. பொய்மை உண்மையை மறைக்க எண்ணுகிறது. இப்போராட்டத்தில் தீமையானவை வெல்வது போலத் தோன்றினாலும் இறுதியில் வெல்வது நன்மையே. நீதியின் கடவுள் பொறுமையாய் இருந்தாலும் அவருடைய தீர்ப்பு நீதியாய் விளங்கும் என்பதைப் புரிந்து கொள்ள நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.அவ்வேளையில் நாம் நீதியுள்ளவர்களாய், ஒளியின் மக்களாய் தலைநிமிர்ந்து நிற்கிறோமா? அல்லது மீட்பைச் சுவைக்கத் தகுதியற்றவர்களாய் இருக்கிறோமா? என நம்மை நாமே கடவுளின் கண்கொண்டு ஆய்வு செய்ய வேண்டும்.


இன்றைய முதல் வாசகம் பாபிலோனுக்கு வழங்கப்படும் தீர்ப்பு பற்றி நமக்கு விளக்குகிறது. இஸ்ரயேல் மக்கள் கடவுளின் உடன்படிக்கையிலிருந்து விலகிச் செல்லும் போது அவர்களைக் கடவுள் பக்கம் அழைத்துவர ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்ட நாடுதான் பாபிலோன்.கடவுள் தாமே அவர்களைத் தேர்தெடுத்தாலும் ,பாபிலோனியர்கள் கடவுளை மறந்து தீமையின் உச்ச கட்டத்திற்குச் சென்றதால் அவர்களின் தண்டனையும் உச்சத்தை எட்டுகிறது. நம்முடைய வாழ்விலும் பலசமயங்களில் நாம் தீமைக்கும் கடவுள் விரும்பாத அநீதிக்கும் துணைபோகும் போது கடவுள் நம்மைக் கண்டிப்பார் என்பதை மனதில் இறுத்த வேண்டும்.


இன்று நாம் காணும் இயற்கைச் சீற்றங்கள் யாவும் நம்முடைய அநீதியின் வெளிப்பாடுகளே. நன்மையை ஒதுக்கி தீமையின் குரலைக் கேட்டு சுயநலத்தோடு இயற்கையையும் சக மனிதர்களையும் நாம் காயப்படுத்தியதால் தான் இயற்கைப் பேரிடர்கள் நம்மை வாட்டுகின்றன.


கிறிஸ்துவின் வருகைக்காக நம்மைத் தயாரிக்கும் இவ்வேளையில் நம் வாழ்வைத் திருப்பிப் பார்ப்போம். நன்மையும், ஒளியும், நீதியும் உலகில் வெற்றிபெற நம் வாழ்வுப் பாதையை மாற்றுவோம். உண்மைக்குக் குரல் கொடுப்போம். அப்போது தலைநிமிர்ந்தவர்களாய் நம்மை நெருங்கி வந்துகொண்டிருக்கும் மீட்பை நம்மால் எதிர்கொள்ள முடியும். அதற்கான வரத்தை வேண்டுவோம்.


 இறைவேண்டல்

நீதியின் தேவனே தீயவற்றை நாங்கள் விலக்கி உண்மை ஒளி நீதியின் மக்களாக நாங்கள் வாழ்ந்து தலைநிமிர்ந்து உம் மீட்பைப் பெற்றுக்கொள்ள வரம் தாரும். ஆமென்.


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️


No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...