பொதுக்காலம் 34ஆம் வாரம் - சனி
முதல் வாசகம்
இனி இரவே இராது. ஏனெனில் கடவுளாகிய ஆண்டவர் அவர்கள்மீது ஒளி வீசுவார்.
திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 22: 1-7
வானதூதர் வாழ்வு அளிக்கும் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்த ஓர் ஆற்றை எனக்குக் காட்டினார். அது பளிங்குபோல் ஒளிர்ந்தது. அது கடவுளும் ஆட்டுக்குட்டியும் வீற்றிருந்த அரியணையிலிருந்து புறப்பட்டு, நகரின் தெரு நடுவே பாய்ந்தோடியது. ஆற்றின் இரு மருங்கும் வாழ்வு தரும் மரம் இருந்தது. மாதத்துக்கு ஒரு முறையாக அது ஆண்டுதோறும் பன்னிரு முறை கனிகள் தரும். அதன் இலைகள் மக்களினங்களைக் குணப்படுத்தக் கூடியவை. சாபத்துக்கு உள்ளானது எதுவும் நகரில் இராது. கடவுளும் ஆட்டுக்குட்டியும் வீற்றிருக்கும் அரியணை அங்கு இருக்கும். கடவுளின் பணியாளர்கள் அவரை வழிபடுவார்கள்; அவரது முகத்தைக் காண்பார்கள். அவரது பெயர் அவர்களுடைய நெற்றியில் எழுதப்பட்டிருக்கும். இனி இரவே இராது. விளக்கின் ஒளியோ கதிரவனின் ஒளியோ அவர்களுக்குத் தேவைப்படாது. ஏனெனில் கடவுளாகிய ஆண்டவர் அவர்கள்மீது ஒளி வீசுவார்; அவர்கள் என்றென்றும் ஆட்சிபுரிவார்கள்.
பின்னர் அந்த வானதூதர் என்னிடம், “இவ்வாக்குகள் நம்பத்தக்கவை, உண்மையுள்ளவை. விரைவில் நிகழவேண்டியவற்றைத் தம் பணியாளர்களுக்குக் காட்டுமாறு, இறைவாக்கினரைத் தூண்டியெழுப்பும் கடவுளாகிய ஆண்டவர் தம் வானதூதரை அனுப்பினார். இதோ! நான் விரைவில் வருகிறேன்” என்றார். இந்த நூலில் உள்ள இறைவாக்குகளைக் கடைப்பிடிப்போர் பேறுபெற்றோர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 95: 1-2. 3-5. 6-7 (பல்லவி: 1 கொரி 16: 22; திவெ 22: 20b)பல்லவி: மாரனாத்தா! ஆண்டவராகிய இயேசுவே, வாரும்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
லூக் 21: 36அல்லேலூயா, அல்லேலூயா! மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கு எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கு, எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்.
✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 34-36
அக்காலத்தில்
இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “உங்கள் உள்ளங்கள் குடிவெறி, களியாட்டத்தாலும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினாலும் மந்தம் அடையாதவாறு அந்நாள் திடீரென வந்து ஒரு கண்ணியைப் போல் உங்களைச் சிக்க வைக்காதவாறும் எச்சரிக்கையாய் இருங்கள். மண்ணுலகு எங்கும் குடியிருக்கும் எல்லார் மீதும் அந்நாள் வந்தே தீரும். ஆகையால் நிகழப்போகும் அனைத்திலிருந்தும் தப்புவதற்கும் மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கும் எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
மானிட மகன் முன் நிற்க வல்லவர்களா நாம்?
ஒரு தனியார் வங்கியில் வேலைபார்க்கும் கணக்காளர் தன்னுடைய பணியில் மிகவும் நேர்மையுள்ளவராய் இருந்தார். அவருடன் பணிபுரியும் ஒருசிலர் பொய் கணக்குகள் எழுதி பிறர் பணத்தை
தங்களுடைய தேவைகளுக்காக பயன்படுத்திக்கொண்டனர். இவரையும் செய்யத் தூண்டினர். இவரோ தன் நேர்மையைக் காத்துவந்தார். மற்றவர்களைத் தட்டிக் கேட்டார். இவ்வங்கியில் ஒரு சில தவறுகள் நடக்கின்றன என்பதைப் பற்றி முகம் தெரியாத நபர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் அரசு சோதனை நடத்தத் தீர்மானித்தது. தவறு செய்தவர்கள் மனம் கலங்கியது. சோதனையில் மாட்டிக்கொண்டனர்.தங்களுடைய தவறான செயல்களால் தங்களுக்கே வலை விரித்துக் கொண்டனர். ஆனால் நேர்மையானவரோ எவ்வித பயமும் கலக்கமுமின்றி தைரியமாக இருந்தார்.பிரச்சினையை துணிந்து எதிர்கொண்டைர்.பிறர் முன் நல்லவராய் விளங்கினார்.
இன்றைய நற்செய்தியில் "நிகழப்போகும் அனைத்திலிருந்தும் தப்புவதற்கும் மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கும் எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்" என்று இயேசு சீடர்களிடத்தில் கூறுகிறார். இவ்வுலகக் கவலையினால் உள்ளம் மந்தமடையாதவாறு எச்சரிக்கையாய் இருக்கச் சொல்கிறார். இவ்வார்த்தைகளைத் தியானிக்கின்ற நாம் நமது உள்ளம் எதைக்குறித்து கவலை கொள்கிறது என சோதித்து அறிய வேண்டும்.
இவ்வுலகம் நமக்குப் பல இன்பங்களைத் தருகிறது. பணம் அதனால் விளைகின்ற ஆடம்பர வாழ்க்கை, பகட்டு, மனதைத் திசை திருப்பும் அறிவியல் கண்டுபிடிப்புகள் ,மது, போதை மருந்துகள் போன்றவைகள் நமக்கு இன்பங்களைத் தந்தாலும் உண்மையான மகிழ்ச்சியைத் தருவதில்லை. நிறைவைத் தருவதில்லை.மாறாக வாழ்வின் திசையை மாற்றுகிறது. பேராசையைத் தூண்டுகிறது. நல்லவற்றிலிருந்து நம் பாதையை மாற்றி தேவையற்றவைப் பற்றி யோசிக்கவைத்து நம் கவலைகளை அதிகரிக்கிறது. இக்கவலைகளில் மூழ்கிக்கிடக்கும் நாம் வாழ்வின் எதார்த்தங்களைப் புரிந்து கொள்ள இயலாமல் மீண்டும் மீண்டும் உலக மாயைகளில் சிக்கிக் கொள்கிறோம். இவை நம் ஆன்மீக வாழ்வை மழுங்கடிக்கிறது.
திருவருகைக் காலத்தைத் தொடங்கப்போகிறோம். ஒவ்வொரு ஆண்டும் திருவருகைக் காலத்தைத் தொடங்கும் முன்பு மனம் மாற வேண்டும். இயேசுவை உள்ளத்தில் ஏற்க வேண்டும்.அதற்காக ஆயத்தப்படுத்த வேண்டும் என்று நாம் சிந்திப்பதுண்டு. ஆனால் இவ்வுல மாயை என்ற கண்ணியில் சிக்கிக்கொண்டுள்ளதால் பலமுறை இயேசுவை நம் உள்ளத்தில் ஏற்றுக்கொண்டு அவர் முன் வல்லவராய் நிற்கத் தகுதியை இழந்தவர்களாகவே நாம் இருக்கிறோம். ஒவ்வொரு நாளும் நம்மைத் தேடி வரும் இறைவனை எதிர் கொள்ளத் தயங்குகிறோம்.இதிலிருந்து வெளிவர நாம் இறைவன் விரும்பும் நேர்மை, உண்மை, நீதி, அன்பு இவற்றைக் கொண்டவர்களாய் இறைவேண்டலுடன் எப்போதும் அவரை எதிர் கொண்டு அவர்முன் வல்லவராய் நிற்க முயற்சி செய்ய வேண்டும். உலக மாயைகளிலும், கேளிக்கைகளிலும் நாம் கொண்டுள்ள நாட்டங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்க நம்மால் இயன்ற முயற்சிகளைச் செய்து கொண்டே இருக்க வேண்டும். எத்துன்பம் வந்தாலும் விழிப்பாய் இருந்து இறைவேண்டல் செய்வதைத் தொடரவேண்டும்.
அவ்வாறு நாம் முயலுகின்ற போது
நம்முயற்சிகளை இறைவன் நிறைவாக ஆசிர்வதிப்பார். முதல்வாசகத்தில் நாம் வாசிப்பதைப் போல நம் மீது அவருடைய ஒளியை வீசச்செய்வார்.நம் வாழ்வு கனிதரும் என்பதில் ஐயமில்லை.நம் நெற்றியில் மட்டுமல்ல நம் வாழ்விலும் இறைவனின் பெயர் பொறிக்கப்படும்.
மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராகும் படி நம்மையே நாம் தயார் செய்ய விழைவோமா? தேவையற்ற கவலை என்னும் சூழ்ச்சியிலிருந்து முழுமையாக விடுபட விழிப்பாய் இருந்து மன்றாடுவோமா?
இறைவேண்டல்
அன்பு இறைவா மீட்பின் கடவுளே! இயேசுவே
உலகக் கவர்ச்சிகளிலும் கலவைகளிலும் மழுங்கிக் கிடக்கும் எம் ஆன்மீக வாழ்வை உம்மிடம் ஒப்படைக்கிறோம். அவற்றிலிருந்து மீண்டு நாங்கள் ஒவ்வொரு நாளும் எம்மைத்தேடி வரும் உம்மை எதிர்கொண்டு உம் முன் வல்லவர்களாய் நிற்க எங்களையே ஆயத்தப்படுத்த வரம் தாரும். ஆமென்.
அருட்பணி. குழந்தை இயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️
Join with us 👇
Website: https://catholicvoicecv.blogspot.com
Youtube: https://www.youtube.com/channel/UCcgIiK1gUEqRCmTsc7ZjAoA
Youtube: https://www.youtube.com/channel/UCxBBHQAKIjii_MsZfIYNF5A
Facebook:https://www.facebook.com/Catholic-Voice-108151311955076
Instagram:https://www.instagram.com/invites/contact/?i=16mmdwn460k8p&utm_content=p6lg283
No comments:
Post a Comment