இறைவனின் அன்னையாகிய தூய கன்னி மரியா
முதல் வாசகம்
இஸ்ரயேல் மக்கள்மீது நமது பெயரைக் கூறி நீங்கள் வேண்டும்போது, நாம் அவர்களுக்கு ஆசி அளிப்போம்.
எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 6: 22-27
ஆண்டவர் மோசேயிடம் கூறியது: நீ ஆரோனிடமும் அவன் புதல்வரிடமும் சொல்; நீங்கள் இஸ்ரயேல் மக்களுக்கு ஆசிகூற வேண்டிய முறை: “ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச் செய்து உன்மீது அருள் பொழிவாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக!” இவ்வாறே அவர்கள் என் பெயரை இஸ்ரயேல் மக்களிடையே நிலைநாட்டுவர்; நானும் அவர்களுக்கு ஆசி வழங்குவேன்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 67: 1-2. 4. 5,7 (பல்லவி: 1a)பல்லவி: கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக!
இரண்டாம் வாசகம்
கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராக அனுப்பினார்.
திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 4-7
சகோதரர் சகோதரிகளே,
காலம் நிறைவேறியபோது திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார்.
நீங்கள் பிள்ளைகளாய் இருப்பதால் கடவுள் தம் மகனின் ஆவியை உங்கள் உள்ளங்களுக்குள் அனுப்பியுள்ளார்; அந்த ஆவி ‘அப்பா, தந்தையே,’ எனக் கூப்பிடுகிறது. ஆகையால் இனி நீங்கள் அடிமைகளல்ல; பிள்ளைகள்தாம்; பிள்ளைகளாகவும் உரிமைப்பேறு உடையவர்களாகவும் இருக்கிறீர்கள். இது கடவுளின் செயலே.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
எபி 1: 1-2அல்லேலூயா, அல்லேலூயா! பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
மரியாவையும் யோசேப்பையும் குழந்தையையும் கண்டார்கள். எட்டாம் நாள் அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள்.
✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 16-21
அக்காலத்தில்
இடையர்கள் பெத்லகேமுக்கு விரைந்து சென்று, மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் கண்டார்கள். பின்பு அந்தக் குழந்தையைப் பற்றித் தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியைத் தெரிவித்தார்கள். அதைக் கேட்ட யாவரும், இடையர்கள் தங்களுக்குச் சொன்னவற்றைக் குறித்து வியப்படைந்தனர். ஆனால் மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக்கொண்டிருந்தார். இடையர்கள் தாங்கள் கேட்டவை, கண்டவை அனைத்தையும் குறித்துக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து பாடிக்கொண்டே திரும்பிச் சென்றார்கள். அவர்களுக்குச் சொல்லப்பட்டவாறு எல்லாம் நிகழ்ந்திருந்தது.
குழந்தைக்கு விருத்தசேதனம் செய்யவேண்டிய எட்டாம் நாள் வந்தது. தாயின் வயிற்றில் உருவாகுமுன்பே வானதூதர் சொல்லியிருந்தவாறு அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
புதிய இதயத்தோடு அன்னை மரியின் வழிநடப்போம்!
இன்று நாம் புதிய ஆண்டின் புதிய நாளில், புதிய மணித்துளியில் புகுந்துள்ளோம். புதிய எண்ணங்கள், புதிய எதிர்நோக்குகள், புதிய தீர்மானங்கள், புதிய கனவுகள் .... என புதிது புதிதாய் பல புதினமிகு எதிர்பார்ப்புகள். ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் புதிய புதிய கனவுகளோடும் சிந்தனைகளோடும் தீர்மானங்களோடும் வாழ்வைத் தொடங்க நினைத்தாலும், பல நேரங்களில் நம்முடைய இதயம் மட்டும் பழைய வாழ்வைத் தாங்கி வரும் இதயமாக இருக்கின்றது. எனவே இன்றைய நாளில் புது இதயத்தோடும் புது ஆற்றலோடும் புது ஆன்மாவோடும் நம்முடைய வாழ்வைத் தொடங்க முயற்சி செய்வோம். அதற்கு நம்முடைய தாய் அன்னை மரியாவின் கரம் பிடித்து பயணத்தைத் தொடங்குவோம்.
ஆண்டின் இந்த முதல் நாளில் அன்னையாம் திருஅவை அன்னை மரியாவைக் கடவுளின் தாயாகப் போற்றிச் சிறப்பிக்கிறது. தாய்மை என்பது கடவுளின் முக்கிய பண்புகளில் ஒன்று. மனிதருக்கு உயிரளித்து, அவர்களைப் பேணிக்காத்து, வளர்த்து, மேம்படுத்தும் செயலைக் கடவுள் செய்வதால் அவரை நாம் தாய் என உரிமையோடு அழைக்கலாம். கடவுளின் தாய்மை வெவ்வேறு வழிகளில் வெளிப்பட்டாலும் அன்னை மரியா வழியாக அது சிறப்பான விதத்தில் உயர்வு பெற்றது. அன்னை மரியாள் கடவுளின் தாய் என அழைக்கப்படுவதற்கு காரணம் அவர் கடவுளின் மகனை நமக்கு ஈன்றளித்த செயலாகும். கடவுளின் மகனாகிய இயேசு அன்னை மரியாவின் வழியாகப் பிறந்ததால் அன்னை மரியாள் கடவுளின் தாயென திரு அவையால் அழைக்கப்படுகிறார்.
நம்முடைய மனித வாழ்வில் தாய் என்பவர் முக்கியப் பங்கு வகிக்கிறார். கடவுள் நம்முடைய தாய் தந்தையின் வழியாகத்தான் நம்மோடு வாழ்கிறார். நம்முடைய தாய் நமக்காக பற்பல தியாகங்கள் செய்யக்கூடியவராக இருக்கின்றார். நாம் நம் தாயின் கருப்பையில் உதயமான அந்த நிமிடம் முதல் நம்மை முழுமையாக அன்பு செய்யக்கூடியவராக நம் தாய் இருக்கிறார். அவருக்கு பிடித்த உணவுகளையும் கொண்டாட்டங்களையும் பயணங்களையும் நமக்காக தியாகம் செய்கிறார். அவருக்கு பிடிக்காத உணவுகளையும் மருந்துகளையும் சூழலையும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார். அதற்குக் காரணம் நம்மீது அவர் கொண்டிருக்க கூடிய அன்பு தான். எனவே நம்முடைய அன்றாட வாழ்வில் நம் தாயை அன்போடும் பாசத்தோடும் அரவணைக்க வேண்டும். தாயின் அன்பும் அரவணைப்பும் பாசமும் நம்முடைய மனித வாழ்வில் முழுமையை அடைவதற்கு முக்கியமான காரணிகளாக இருக்கின்றன. தாயின் அன்பும் அரவணைப்பும் பாசமும் யாருக்கு போதுமானதாக கிடைக்கவில்லையோ, அவர்கள் வாழ்வு சிறப்பாக அமையாத வாழ்வாக இருக்கின்றது. அந்த அளவுக்கு தாயின் அன்பும் பாசமும் ஒரு மனிதருக்கு தேவை.
எனவே தான் வாக்காக இருந்த இறைவன் மனுவுருவெடுத்து நம்மைப் போல பிறக்க இறைவன் திருவுளம் கொண்ட பொழுது, குழந்தையை சிறப்பாக பெற்று வளர்த்து மீட்பு திட்டத்திற்கு கையளிக்க அன்னை மரியாவை பயன்படுத்தினார். கடவுளையே கருவில் தாங்கும் அளவுக்கு அன்னை மரியாள் கடவுளின் ஆசீரைப் பெற்றார். கடவுள் அன்னை மரியாளை பெண்களுக்குள் ஆசீர் பெற்றவராக வழிநடத்தினார்.
நம் அனைவருக்கும் தாயாக இருந்து வழிநடத்தும் அன்னை மரியாள் "இறைமகன் இயேசுவின் தாயாக இருக்கின்றார் " என்பது நம்முடைய கத்தோலிக்க திருஅவையின் நம்பிக்கையாக இருக்கின்றது.
புனித மரியா - இறைவனின் தாய் என்ற நம்பிக்கை கோட்பாடு நெஸ்தோரியனிசம் என்ற தப்பறை கொள்கையின் விளைவாக திரு அவையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. கடவுள், இயேசு, தூய ஆவி, மூவொரு இறைவன், அன்னை மரியாள் போன்ற ஒவ்வொருவரையும் பற்றியும் தவறான தப்பறை கொள்கைகள் ஒவ்வொன்றாக வெளிவந்தது. "இயேசு படைக்கப்பட்ட பொருள் மட்டுமே. மனித இயல்பு உடையவரே. அவரிடம் இறை இயல்பு என்பது இல்லை. எனவே மரியா இயேசுவின் தாய் மட்டுமே ; இறைவனின் தாய் அல்ல என்ற தவறான கொள்கையை வெளியிடப்பட்டது. இது நெஸ்தோரியனிசம் தப்பறை எனப்படுகிறது . இவருடைய கூற்றுக்கு மறுப்பு தெரிவித்து முழுமையான விளக்கம் கொடுக்க எபேசு நகரிலே திருச்சங்கம் கூடியது.
எபேசு திருச்சங்கமானது கி.பி. 431, ஜீன் 22 இல் கூடியது. இந்த சங்கத்தில் " இறைவனின் தாய் " என்னும் தெயோதோக்கோஸ் என்ற கிரேக்க சொல்லை திருஅவை பயன்படுத்தியது. இந்த சங்கம் "இம்மானுவேல் உண்மையிலேயே கடவுள் ; மரியா கடவுளிடமிருந்து பிறந்த வார்த்தையானவரை ஊனுடலில் ஈன்றெடுத்தார். எவரொருவர் இதை ஏற்றுக் கொள்ளவில்லையோ, அவர் சபிக்கப்பட்டவராவார் " என்றும் சங்கம் தெளிவுபடுத்தியது.
அன்னை மரியாள் இறைவனின் தாய் என்பதை அதிகாரப்பூர்வமான நம்பிக்கை கோட்பாடாக திரு அவை அழைத்ததன் நோக்கம் இயேசுவின் இறைத்தன்மையையும் அன்னை மரியாவை கடவுள் தன்னுடைய ஒரே மகனின் தாயாக உயர்த்தியதையும் கொண்டாடும் விதமாக அமைகின்றது. அன்னை மரியாள் இறைவனாகிய இயேசுவின் தாய் மட்டுமல்ல ; நம் ஒவ்வொருவரின் தாயாகவும் இருக்கிறார். இந்த தாயை இந்த புதிய புத்தாண்டிலே கரம்பிடித்து நடப்போம். அன்னை மரியா கொண்டிருந்த நல்ல மதிப்பீடுகளை நம்முடைய வாழ்வாக மாற்றிக் கொள்வோம். அப்படி வாழுகிற பொழுது இன்றைய முதல் வாசகத்தில் வருகின்ற மூன்று ஆசிர்வாதங்களை நம்முடைய வாழ்க்கையிலே பெற்றுக் கொள்ள முடியும்.
ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக! என்பது முதல் ஆசீர்வாதம். அன்னை மரியாள் இறைவனுக்கு உகந்த வாழ்க்கையை வாழ்ந்ததால் மனுக்குலத்திற்கு ஆசீர்வாதமாய் மாறினார். நாமும் இறைவனின் திருவுளப்படி வாழும்பொழுது கடவுளின் ஆசிர்வாதத்தை பெறக்கூடிய மக்களாக மாறுகிறோம். அன்னை மரியாவை கடவுள் காத்ததை போல நம்மையும் கடவுள் காப்பார்.
ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச் செய்து உன் மீது அருள்பொழிவாராக! என்ற ஆசிர்வாதமான இறைவார்த்தை கடவுளின் அருள் எப்பொழுது நமக்கு உண்டு என்பதை உறுதிப்படுத்துகிறது. அன்னை மரியாவை கபிரியேல் வானதூதர் ' அருள்மிக பெற்ற மரியே வாழ்க' என வாழ்த்தினார். அன்னை மரியா கடவுளின் அருளால் முற்றிலும் நிரப்பப்பட்டிருந்தார். ஏனெனில் அவர் கடவுளோடு இணைந்திருந்தார். இப்புதிய ஆண்டிலே நம் தாய் அன்னை மரியாவை போல கடவுளோடு இணைந்திருக்கும் பொழுது, இந்த ஆண்டு முழுவதும் நாம் கடவுளின் அருளை நிறைவாக பெற முடியும். அதற்கு நிச்சயமாக இறைவனின் தாயாகிய நம் அன்னை மரியாள் கரம் பிடித்து உதவி செய்வார்.
ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக என்ற ஆசீர்வாதமான இறைவார்த்தை நமக்கு இந்த புதிய ஆண்டிலே நிறைவான அமைதியும் சமாதானமும் உண்டு என்பதை உறுதிப்படுத்துகிறது. அன்னை மரியாவுக்கு எவ்வளவோ கலக்கமும் சோதனைகளும் வந்த பொழுதும் அவர் கடவுளை முழுமையாக பற்றி பிடித்ததால், அவருக்கு நிறைவான அமைதி கிடைத்தது. இந்த புதிய ஆண்டில் நம்முடைய வாழ்விலும் எதிர்கொள்ள இருக்கக்கூடிய அமைதியற்ற சூழல் சண்டை சச்சரவுகள் பிரச்சனைகள் போன்றவற்றையெல்லாம் அன்னை மரியாவின் வழித் துணையோடு ஏற்று இறைவன் பக்கம் திரும்பும் பொழுது நம்முடைய வாழ்வில் அமைதியைப் பெற முடியும்.
எனவே இறைவனின் தாயாகிய நம் அன்னை மரியாவை முழுமையாக பற்றி பிடித்து இறைவார்த்தையின் ஒளியிலும் வழியிலும் நடக்க முயற்சி செய்வோம். அப்பொழுது இந்த புதிய ஆண்டு முழுவதும் கடவுளுடைய அளப்பெரிய பாதுகாப்பையும் அருளையும் அவர் தருகின்ற அமைதியையும் நிறைவாக பெற முடியும். அதற்கு தேவையான அருளை புதிய ஆண்டிலே அன்னை மரியாவின் பரிந்துரையின் வழியாக பெற்றுக் கொள்வோம்.
இறைவேண்டல்
வல்லமையுள்ள இறைவா! அன்னை மரியாவின் பரிந்துரையின் வழியாக இப்புதிய ஆண்டிலே ஆசிர்வாதமான வாழ்வை வாழவும் உம்மோடு எந்நாளும் பயணிக்கவும் சாட்சியமுள்ள வாழ்வு வாழவும் அருளைத் தாரும். ஆமென்.
அருட்பணி. குழந்தை இயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️
Join with us 👇
Website: https://catholicvoicecv.blogspot.com
Youtube: https://www.youtube.com/channel/UCcgIiK1gUEqRCmTsc7ZjAoA
Youtube: https://www.youtube.com/channel/UCxBBHQAKIjii_MsZfIYNF5A
Facebook:https://www.facebook.com/Catholic-Voice-108151311955076
Instagram:https://www.instagram.com/invites/contact/?i=16mmdwn460k8p&utm_content=p6lg283