Saturday, December 31, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (01-01-2023)

 

இறைவனின் அன்னையாகிய தூய கன்னி மரியா

பெருவிழா

முதல் வாசகம்

இஸ்ரயேல் மக்கள்மீது நமது பெயரைக் கூறி நீங்கள் வேண்டும்போது, நாம் அவர்களுக்கு ஆசி அளிப்போம்.

எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 6: 22-27

ஆண்டவர் மோசேயிடம் கூறியது: நீ ஆரோனிடமும் அவன் புதல்வரிடமும் சொல்; நீங்கள் இஸ்ரயேல் மக்களுக்கு ஆசிகூற வேண்டிய முறை: “ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச் செய்து உன்மீது அருள் பொழிவாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக!” இவ்வாறே அவர்கள் என் பெயரை இஸ்ரயேல் மக்களிடையே நிலைநாட்டுவர்; நானும் அவர்களுக்கு ஆசி வழங்குவேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 67: 1-2. 4. 5,7 (பல்லவி: 1a)

பல்லவி: கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக!

1
கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக!
2
அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்; பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்துகொள்வர். - பல்லவி

4
வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக! ஏனெனில், நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்; உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர். - பல்லவி

5
கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக!
7
கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக. - பல்லவி

இரண்டாம் வாசகம்

கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராக அனுப்பினார்.

திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 4-7

சகோதரர் சகோதரிகளே,

காலம் நிறைவேறியபோது திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார்.

நீங்கள் பிள்ளைகளாய் இருப்பதால் கடவுள் தம் மகனின் ஆவியை உங்கள் உள்ளங்களுக்குள் அனுப்பியுள்ளார்; அந்த ஆவி ‘அப்பா, தந்தையே,’ எனக் கூப்பிடுகிறது. ஆகையால் இனி நீங்கள் அடிமைகளல்ல; பிள்ளைகள்தாம்; பிள்ளைகளாகவும் உரிமைப்பேறு உடையவர்களாகவும் இருக்கிறீர்கள். இது கடவுளின் செயலே.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

எபி 1: 1-2

அல்லேலூயா, அல்லேலூயா! பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

மரியாவையும் யோசேப்பையும் குழந்தையையும் கண்டார்கள். எட்டாம் நாள் அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள்.

 லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 16-21

அக்காலத்தில்

இடையர்கள் பெத்லகேமுக்கு விரைந்து சென்று, மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் கண்டார்கள். பின்பு அந்தக் குழந்தையைப் பற்றித் தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியைத் தெரிவித்தார்கள். அதைக் கேட்ட யாவரும், இடையர்கள் தங்களுக்குச் சொன்னவற்றைக் குறித்து வியப்படைந்தனர். ஆனால் மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக்கொண்டிருந்தார். இடையர்கள் தாங்கள் கேட்டவை, கண்டவை அனைத்தையும் குறித்துக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து பாடிக்கொண்டே திரும்பிச் சென்றார்கள். அவர்களுக்குச் சொல்லப்பட்டவாறு எல்லாம் நிகழ்ந்திருந்தது.

குழந்தைக்கு விருத்தசேதனம் செய்யவேண்டிய எட்டாம் நாள் வந்தது. தாயின் வயிற்றில் உருவாகுமுன்பே வானதூதர் சொல்லியிருந்தவாறு அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.



 புதிய இதயத்தோடு அன்னை மரியின் வழிநடப்போம்!


இன்று நாம்  புதிய ஆண்டின் புதிய நாளில்,  புதிய மணித்துளியில் புகுந்துள்ளோம். புதிய எண்ணங்கள், புதிய எதிர்நோக்குகள், புதிய தீர்மானங்கள், புதிய கனவுகள் .... என புதிது புதிதாய் பல புதினமிகு எதிர்பார்ப்புகள்.  ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் புதிய புதிய கனவுகளோடும் சிந்தனைகளோடும் தீர்மானங்களோடும் வாழ்வைத் தொடங்க நினைத்தாலும்,  பல நேரங்களில் நம்முடைய இதயம் மட்டும் பழைய வாழ்வைத் தாங்கி வரும் இதயமாக இருக்கின்றது. எனவே இன்றைய நாளில் புது இதயத்தோடும் புது ஆற்றலோடும் புது ஆன்மாவோடும் நம்முடைய வாழ்வைத் தொடங்க முயற்சி செய்வோம். அதற்கு நம்முடைய தாய் அன்னை மரியாவின் கரம் பிடித்து பயணத்தைத் தொடங்குவோம்.


ஆண்டின் இந்த முதல் நாளில் அன்னையாம் திருஅவை அன்னை மரியாவைக் கடவுளின் தாயாகப் போற்றிச் சிறப்பிக்கிறது. தாய்மை என்பது கடவுளின் முக்கிய பண்புகளில் ஒன்று. மனிதருக்கு உயிரளித்து, அவர்களைப் பேணிக்காத்து, வளர்த்து, மேம்படுத்தும் செயலைக் கடவுள் செய்வதால் அவரை நாம் தாய் என உரிமையோடு அழைக்கலாம்.  கடவுளின் தாய்மை வெவ்வேறு வழிகளில் வெளிப்பட்டாலும் அன்னை மரியா வழியாக அது சிறப்பான விதத்தில் உயர்வு பெற்றது.  அன்னை மரியாள் கடவுளின் தாய் என அழைக்கப்படுவதற்கு  காரணம் அவர் கடவுளின் மகனை நமக்கு ஈன்றளித்த  செயலாகும். கடவுளின் மகனாகிய இயேசு அன்னை மரியாவின் வழியாகப் பிறந்ததால் அன்னை மரியாள் கடவுளின் தாயென திரு அவையால் அழைக்கப்படுகிறார்.


நம்முடைய மனித வாழ்வில் தாய் என்பவர் முக்கியப் பங்கு வகிக்கிறார். கடவுள்  நம்முடைய தாய் தந்தையின் வழியாகத்தான்  நம்மோடு  வாழ்கிறார். நம்முடைய தாய் நமக்காக பற்பல தியாகங்கள் செய்யக்கூடியவராக இருக்கின்றார். நாம் நம் தாயின் கருப்பையில் உதயமான அந்த நிமிடம் முதல் நம்மை முழுமையாக அன்பு செய்யக்கூடியவராக நம் தாய் இருக்கிறார். அவருக்கு பிடித்த உணவுகளையும் கொண்டாட்டங்களையும் பயணங்களையும் நமக்காக தியாகம் செய்கிறார். அவருக்கு பிடிக்காத உணவுகளையும் மருந்துகளையும் சூழலையும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார். அதற்குக் காரணம் நம்மீது அவர் கொண்டிருக்க கூடிய அன்பு தான்.  எனவே நம்முடைய அன்றாட வாழ்வில் நம் தாயை அன்போடும் பாசத்தோடும் அரவணைக்க வேண்டும்.  தாயின் அன்பும் அரவணைப்பும் பாசமும் நம்முடைய மனித வாழ்வில் முழுமையை  அடைவதற்கு முக்கியமான காரணிகளாக இருக்கின்றன. தாயின் அன்பும் அரவணைப்பும் பாசமும் யாருக்கு போதுமானதாக கிடைக்கவில்லையோ,  அவர்கள் வாழ்வு சிறப்பாக அமையாத வாழ்வாக இருக்கின்றது.  அந்த அளவுக்கு தாயின் அன்பும் பாசமும் ஒரு மனிதருக்கு தேவை.


எனவே தான் வாக்காக இருந்த இறைவன் மனுவுருவெடுத்து நம்மைப் போல பிறக்க இறைவன் திருவுளம் கொண்ட பொழுது, குழந்தையை சிறப்பாக பெற்று வளர்த்து மீட்பு திட்டத்திற்கு கையளிக்க அன்னை மரியாவை  பயன்படுத்தினார். கடவுளையே கருவில் தாங்கும் அளவுக்கு அன்னை மரியாள் கடவுளின் ஆசீரைப் பெற்றார். கடவுள் அன்னை மரியாளை பெண்களுக்குள் ஆசீர்  பெற்றவராக வழிநடத்தினார்.


நம் அனைவருக்கும் தாயாக  இருந்து   வழிநடத்தும் அன்னை மரியாள்  "இறைமகன் இயேசுவின் தாயாக இருக்கின்றார் " என்பது நம்முடைய கத்தோலிக்க திருஅவையின் நம்பிக்கையாக இருக்கின்றது.  


புனித மரியா - இறைவனின் தாய் என்ற நம்பிக்கை கோட்பாடு நெஸ்தோரியனிசம் என்ற தப்பறை  கொள்கையின் விளைவாக திரு அவையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.  கடவுள், இயேசு, தூய ஆவி, மூவொரு இறைவன், அன்னை மரியாள் போன்ற ஒவ்வொருவரையும்  பற்றியும் தவறான தப்பறை கொள்கைகள் ஒவ்வொன்றாக வெளிவந்தது.  "இயேசு படைக்கப்பட்ட பொருள் மட்டுமே. மனித இயல்பு உடையவரே.  அவரிடம் இறை இயல்பு என்பது இல்லை. எனவே மரியா இயேசுவின் தாய் மட்டுமே ; இறைவனின் தாய் அல்ல என்ற தவறான கொள்கையை வெளியிடப்பட்டது. இது நெஸ்தோரியனிசம் தப்பறை எனப்படுகிறது . இவருடைய கூற்றுக்கு மறுப்பு தெரிவித்து முழுமையான விளக்கம் கொடுக்க எபேசு நகரிலே திருச்சங்கம் கூடியது.


எபேசு திருச்சங்கமானது கி.பி. 431,  ஜீன் 22 இல் கூடியது.  இந்த சங்கத்தில் " இறைவனின் தாய் " என்னும் தெயோதோக்கோஸ் என்ற கிரேக்க சொல்லை திருஅவை பயன்படுத்தியது. இந்த சங்கம் "இம்மானுவேல் உண்மையிலேயே கடவுள் ; மரியா  கடவுளிடமிருந்து பிறந்த வார்த்தையானவரை ஊனுடலில் ஈன்றெடுத்தார்.  எவரொருவர் இதை ஏற்றுக் கொள்ளவில்லையோ,  அவர் சபிக்கப்பட்டவராவார் " என்றும் சங்கம் தெளிவுபடுத்தியது. 


அன்னை மரியாள் இறைவனின் தாய் என்பதை அதிகாரப்பூர்வமான நம்பிக்கை கோட்பாடாக திரு அவை அழைத்ததன் நோக்கம் இயேசுவின் இறைத்தன்மையையும் அன்னை மரியாவை கடவுள் தன்னுடைய ஒரே மகனின் தாயாக உயர்த்தியதையும் கொண்டாடும் விதமாக அமைகின்றது.   அன்னை மரியாள் இறைவனாகிய இயேசுவின் தாய் மட்டுமல்ல ; நம் ஒவ்வொருவரின் தாயாகவும் இருக்கிறார். இந்த தாயை இந்த புதிய புத்தாண்டிலே கரம்பிடித்து நடப்போம். அன்னை மரியா கொண்டிருந்த நல்ல மதிப்பீடுகளை நம்முடைய வாழ்வாக மாற்றிக் கொள்வோம். அப்படி வாழுகிற பொழுது இன்றைய முதல் வாசகத்தில் வருகின்ற மூன்று ஆசிர்வாதங்களை நம்முடைய வாழ்க்கையிலே பெற்றுக் கொள்ள முடியும்.


ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக!  என்பது முதல் ஆசீர்வாதம். அன்னை மரியாள் இறைவனுக்கு உகந்த வாழ்க்கையை வாழ்ந்ததால் மனுக்குலத்திற்கு  ஆசீர்வாதமாய் மாறினார். நாமும் இறைவனின் திருவுளப்படி வாழும்பொழுது கடவுளின் ஆசிர்வாதத்தை பெறக்கூடிய மக்களாக மாறுகிறோம். அன்னை மரியாவை கடவுள் காத்ததை போல நம்மையும் கடவுள் காப்பார்.


ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச் செய்து உன் மீது அருள்பொழிவாராக! என்ற ஆசிர்வாதமான இறைவார்த்தை கடவுளின் அருள் எப்பொழுது நமக்கு உண்டு என்பதை உறுதிப்படுத்துகிறது. அன்னை மரியாவை கபிரியேல் வானதூதர் ' அருள்மிக பெற்ற மரியே வாழ்க' என வாழ்த்தினார்.  அன்னை மரியா கடவுளின் அருளால் முற்றிலும் நிரப்பப்பட்டிருந்தார். ஏனெனில் அவர் கடவுளோடு இணைந்திருந்தார்.  இப்புதிய ஆண்டிலே நம் தாய் அன்னை மரியாவை போல கடவுளோடு இணைந்திருக்கும் பொழுது, இந்த ஆண்டு முழுவதும் நாம் கடவுளின் அருளை நிறைவாக பெற முடியும். அதற்கு நிச்சயமாக இறைவனின் தாயாகிய நம்  அன்னை மரியாள் கரம் பிடித்து உதவி செய்வார்.


ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக என்ற ஆசீர்வாதமான இறைவார்த்தை நமக்கு இந்த புதிய ஆண்டிலே நிறைவான அமைதியும் சமாதானமும் உண்டு என்பதை உறுதிப்படுத்துகிறது. அன்னை மரியாவுக்கு எவ்வளவோ கலக்கமும் சோதனைகளும் வந்த பொழுதும் அவர் கடவுளை முழுமையாக பற்றி பிடித்ததால்,  அவருக்கு நிறைவான அமைதி கிடைத்தது.  இந்த புதிய ஆண்டில் நம்முடைய வாழ்விலும் எதிர்கொள்ள  இருக்கக்கூடிய அமைதியற்ற சூழல் சண்டை சச்சரவுகள் பிரச்சனைகள் போன்றவற்றையெல்லாம் அன்னை மரியாவின் வழித் துணையோடு ஏற்று  இறைவன் பக்கம் திரும்பும் பொழுது நம்முடைய வாழ்வில் அமைதியைப் பெற முடியும்.


எனவே இறைவனின் தாயாகிய நம் அன்னை மரியாவை முழுமையாக பற்றி பிடித்து இறைவார்த்தையின் ஒளியிலும் வழியிலும் நடக்க முயற்சி செய்வோம். அப்பொழுது இந்த புதிய ஆண்டு முழுவதும் கடவுளுடைய அளப்பெரிய பாதுகாப்பையும் அருளையும் அவர் தருகின்ற அமைதியையும் நிறைவாக பெற முடியும். அதற்கு தேவையான அருளை புதிய ஆண்டிலே அன்னை மரியாவின் பரிந்துரையின் வழியாக பெற்றுக் கொள்வோம்.


 இறைவேண்டல்

வல்லமையுள்ள இறைவா!  அன்னை மரியாவின் பரிந்துரையின் வழியாக இப்புதிய ஆண்டிலே ஆசிர்வாதமான வாழ்வை வாழவும் உம்மோடு எந்நாளும் பயணிக்கவும் சாட்சியமுள்ள வாழ்வு வாழவும் அருளைத் தாரும். ஆமென்.

அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Friday, December 30, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-12-2022)

 

கிறிஸ்து பிறப்பின் எண்கிழமையில் 7ஆம் நாள் - டிசம்பர் 31






முதல் வாசகம்

நீங்கள் அனைவரும் தூயவரால் அருள்பொழிவு பெற்றிருக்கிறீர்கள்.

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 18-21

குழந்தைகளே, இதுவே இறுதிக் காலம். எதிர்க் கிறிஸ்து வருவதாக நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களே! இப்போது எதிர்க் கிறிஸ்துகள் பலர் தோன்றியுள்ளனர். ஆகவே இறுதிக் காலம் இதுவே என அறிகிறோம். இவர்கள் நம்மிடமிருந்து பிரிந்தவர்கள்; உண்மையில் இவர்கள் நம்மைச் சேர்ந்தவர்களே அல்ல; நம்மைச் சேர்ந்தவர்களாக இருந்திருந்தால் நம்மோடு சேர்ந்தே இருந்திருப்பார்கள். ஆகையால் இவர்கள் நம்மைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பது வெள்ளிடைமலை.

நீங்கள் தூயவரால் அருள்பொழிவு பெற்றிருக்கிறீர்கள். ஆகையால் நீங்கள் அறிவு பெற்றுள்ளீர்கள். நீங்கள் உண்மையை அறியவில்லை என்பதால் நான் உங்களுக்கு எழுதவில்லை; மாறாக, அதை அறிந்துள்ளீர்கள் என்பதாலும் பொய் எதுவும் உண்மையிலிருந்து வராது என்பதாலுமே நான் எழுதியுள்ளேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 96: 1-2. 11-12. 13 (பல்லவி: 11a)

பல்லவி: விண்ணுலகம் மகிழ்வதாக; மண்ணுலகம் களிகூர்வதாக.

1
ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்;
2
ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; அவர் பெயரை வாழ்த்துங்கள்; அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள். - பல்லவி

11
விண்ணுலகம் மகிழ்வதாக; மண்ணுலகம் களிகூர்வதாக; கடலும் அதில் நிறைந்துள்ளனவும் முழங்கட்டும்.
12
வயல்வெளியும் அதில் உள்ள அனைத்தும் களிகூரட்டும்; அப்பொழுது, காட்டில் உள்ள அனைத்து மரங்களும் அவர் திருமுன் களிப்புடன் பாடும். - பல்லவி

13
ஏனெனில் அவர் வருகின்றார்; மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க வருகின்றார்; நிலவுலகை நீதியுடனும் மக்களினங்களை உண்மையுடனும் அவர் தீர்ப்பிடுவார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 1: 14, 12b

அல்லேலூயா, அல்லேலூயா! வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். அவரை ஏற்றுக் கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகளாகும் உரிமையை அளித்தார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

வாக்கு மனிதர் ஆனார்.

 யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 1-18

தொடக்கத்தில் வாக்கு இருந்தது; அவ்வாக்கு கடவுளோடு இருந்தது; அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது. வாக்கு என்னும் அவரே தொடக்கத்தில் கடவுளோடு இருந்தார். அனைத்தும் அவரால் உண்டாயின; உண்டானது எதுவும் அவரால் அன்றி உண்டாகவில்லை. அவரிடம் வாழ்வு இருந்தது; அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது. அந்த ஒளி இருளில் ஒளிர்ந்தது; இருள் அதன்மேல் வெற்றி கொள்ளவில்லை.

கடவுள் அனுப்பிய ஒருவர் இருந்தார்; அவர் பெயர் யோவான். அவர் சான்று பகருமாறு வந்தார். அனைவரும் தம் வழியாக நம்புமாறு அவர் ஒளியைக் குறித்துச் சான்று பகர்ந்தார். அவர் அந்த ஒளி அல்ல; மாறாக, ஒளியைக் குறித்துச் சான்று பகர வந்தவர்.

அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மையான ஒளி உலகிற்கு வந்துகொண்டிருந்தது. ஒளியான அவர் உலகில் இருந்தார். உலகு அவரால்தான் உண்டானது. ஆனால் உலகு அவரை அறிந்துகொள்ளவில்லை. அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்தார். அவர்கள் இரத்தத்தினாலோ உடல் இச்சையினாலோ ஆண்மகன் விருப்பத்தினாலோ பிறந்தவர்கள் அல்ல; மாறாகக் கடவுளால் பிறந்தவர்கள்.

வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். அவரது மாட்சியை நாங்கள் கண்டோம். அருளும் உண்மையும் நிறைந்து விளங்கிய அவர் தந்தையின் ஒரே மகன் என்னும் நிலையில் இம்மாட்சியைப் பெற்றிருந்தார்.

யோவான் அவரைக் குறித்து, “எனக்குப்பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்; ஏனெனில், எனக்கு முன்பே இருந்தார் என்று நான் இவரைப்பற்றியே சொன்னேன்” என உரத்த குரலில் சான்று பகர்ந்தார்.

இவரது நிறைவிலிருந்து நாம் யாவரும் நிறைவாக அருள் பெற்றுள்ளோம். திருச்சட்டம் மோசே வழியாகக் கொடுக்கப்பட்டது; அருளும் உண்மையும் இயேசு கிறிஸ்து வழியாய் வெளிப்பட்டன. கடவுளை யாரும் என்றுமே கண்டதில்லை; தந்தையின் நெஞ்சத்திற்கு நெருக்கமானவரும் கடவுள்தன்மை கொண்டவருமான ஒரே மகனே அவரை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 "ஒவ்வொரு ஆண்டும் இறைவனின் பரிசா!" 


மனிதவாழ்வு என்பது இறைவன் கொடுத்த ஒப்பற்ற கொடை. கொடையாக பெற்ற வாழ்வை ஒவ்வொரு நொடிப்பொழுதும் நிறைவோடு வாழ அழைக்கப்பட்டுள்ளோம். வருடத்தின் இறுதி மாதத்தில் இருக்கின்ற நாம் இந்த ஆண்டு முழுவதும் வழிநடத்திய இறைவனுக்கு நன்றி செலுத்துவோம்.


ஒவ்வொரு ஆண்டையும் இறைவன் உன்னதமான கொடையாகக் கொடுத்துள்ளார். ஒரு ஆண்டு என்பது 12 மாதங்கள், 52 வாரங்கள், 365 நாட்கள், 8760 மணி நேரங்கள்; 525,600 நிமிடங்கள்; 31,536,000 நொடிகளை உள்ளடக்கியது.

இவ்வாறாக நாம் இதுவரை வாழ்ந்த வருடங்களைக் கணக்கிட்டால் எத்துணை அதிசயம்.

அவ்வாறு கொடையாக பெற்ற ஒவ்வொரு  ஆண்டையும் முழுமையாக பயன்படுத்தும் பொழுது நிச்சயமாக நம் வாழ்விலே வெற்றியின் கனியைச் சுவைக்க முடியும்.


எண்ணற்ற அறிவியல் கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசன் தான் கொடையாக பெற்ற ஒவ்வொரு ஆண்டையும் சிறப்பாகப் பயன்படுத்தி மிகச் சிறந்த கண்டுபிடிப்புகளை இவ்வுலகிற்கு  கொடுத்தார். இந்த உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன்னுடைய இறையாட்சி பணியைத் தொடங்குவதற்கு முன்பாக முப்பது ஆண்டுகள் தன்னையே தயார்படுத்தினார்.  எனவே ஒவ்வொரு ஆண்டும் நமக்கு கொடுக்கப்பட்ட உன்னதமான கொடை என்பதனை உணர்ந்து அவற்றை முழுமையாக பயன்படுத்தி வாழ்விலே நிறைவு காண முயற்சி செய்வோம்.


ஒரு சாதாரண செடியில் கூட ஒவ்வொருநாளும் வளர்ச்சியிலும் அமைப்பிலும் மாற்றம் ஏற்படுகிறது என்றால் நம் வாழ்வில் ஒவ்வொரு ஆண்டும் ஏற்படக்கூடிய மாற்றங்களும் அதனால் விளையும் நன்மைகளும் ஏராளமாய் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றை சற்றே அலசிப்பார்த்தல் சிறந்தது.


இன்றைய நற்செய்தி வாசகத்தில் யோவான் நற்செய்தியாளர் இயேசுவைப்பற்றி இறையியலை மிக அருமையாக எடுத்துரைத்துள்ளார்.  இயேசு வெறும் படைப்பு அல்ல, மாறாக, படைப்பு நடைபெறும்போதே இருந்தவர். படைப்பிற்கு முன்பே இருந்தவர் என்று இயேசுவைப்பற்றி வெளிப்படுத்துவது நற்செய்தியாளரின் நோக்கமாக இருக்கிறது. இயேசுவின் தொடக்கத்தை அறிவிப்பது ஒரு சவாலான ஒன்று. அதேபோல அதை விளக்குவதும் கடினமான ஒன்று. ஆனால், யோவான் நற்செய்தியாளர் மிகவும் எளிதாக, கடவுளின் மறுசாயல் தான் இயேசு என்பதை அருமையாக இந்த பகுதியில் வெளிப்படுத்துகிறார். எனவே இயேசு தான் ஒவ்வொரு ஆண்டும் நமக்கு கொடையாக கொடுத்துள்ளார். அவற்றை முழுமையாக பயன்படுத்த நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்பட்டுள்ளோம். ஒவ்வொரு ஆண்டும் நமக்கு கொடுக்கும் செய்தியை பற்றி இந்த ஆண்டின் இறுதி நாளில் சிந்திப்பது  பொருத்தமானதாகும். 


முதலாவதாக  ஒவ்வொரு ஆண்டும் நம்முடைய வயதைக் கூட்டுகிறது. அதாவது நம்முடைய வாழ்நாளை அதிகரிக்கிறது. இரவில் கண்மூடி காலையில் கண்விழிக்கும் பாக்கியம் பலருக்குக் கிடைப்பதில்லை. ஆனால் நாம் இத்தனை ஆண்டுகளைக் கடந்து வந்திருக்கிறோமென்றால் அது இறைவனின் பரிவு.


இரண்டாவதாக ஆளுமை வளர்ச்சியை சுட்டிக்காட்டுகின்றது. ஆளுமை வளர்ச்சி என்பது உடல் வளர்ச்சி, அறிவுத் தெளிச்சி , ஞானத்தோடு பெற்ற அறிவைப் பயன்படுத்தும் முறை, நேரிய நடத்தை, பண்பாடோடு பழகும் பாங்கு போன்றவற்றை  வயதிற்கு ஏற்ப பெற்றுக்கொள்வதே."ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதான் உண்மையான வளர்ச்சி " என்கிறது ஒரு அருமையான பாடல் வரிகள்.

ஒருவன் ஆளுமை உள்ளவனாக மாறுவது மற்றவர்கள் கையில் கிடையாது. மாறாக , அவரவர் கையில்தான் உள்ளது. ஒருவர் ஒவ்வொரு ஆண்டைத் தொடங்கும் பொழுது ஆளுமை வளர்ச்சியில் முதிர்ச்சி அடைந்துள்ளேனா? என்று தன்னை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.  முதிர்ச்சி உள்ள மனிதர்களாக மாறுவதுதான் மிகச் சிறந்த வெற்றியை தரும்.


மூன்றாவதாக அனுபவப் படிப்பினைகள்.

நம் அன்றாட வாழ்வில் வருகின்ற  ஒவ்வொரு அனுபவத்திலிருந்தும்  பாடங்களைக் கற்று கொள்கிறோம். அனுபவமே சிறந்த ஆசிரியர் என்று நம் முன்னோர்கள் கூறக் கேட்டிருக்கிறோம். அனுபவங்கள் நல்லவையோ கெட்டவையோ,அவை ஏதாவது ஒரு பாடத்தை நமக்கு விட்டுச் செல்கின்றன.  அவற்றைப் பயன்படுத்தும் போது நாம் முதிர்ச்சி நிறைந்தவர்களாக மாறுகிறோம். வாழ்வில் வெற்றி பெறுகிறோம்.சவால்களை துணிவுடன் சந்திக்கவும், பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவும், அணுகு முறைகளில் நேர்மறையான எண்ணத்தைக் கொண்டிருக்கவும் அனுபவங்கள் உதவுகின்றன.


நான்காவதாக உறவுப் பெருக்கம். ஆண்டுகள் உருண்டோடும் வேளையில் நம்முடைய உறவு வட்டாரம் பெருகுவதை நம்மால் மறுக்க இயலாது.நாம் சந்திக்கின்ற மனிதர்கள்,நம்மோடு பயனித்தவர்கள்,நமக்கு உதவி செய்தவர்கள்,நம் உதவியில் மகிழ்ந்தவர்கள்,

நன்னடத்தையாலும் அன்பாலும் நம்மைக் கவர்ந்தவர்கள் ,நம்மால் கவரப்பட்டவர்கள் என ஒவ்வொரு ஆண்டும் நமக்குத் தருகின்ற உறவுகள் ஏராளம். அவ்வறவுகள் நம்மால் பாதுகாக்கப்பட வேண்டிய விலைமதிப்பற்ற பொக்கிஷங்கள்.நம் ஆண்டை மகிழ்வால் ஆறுதலால் உடனிருப்பால் நிறைவுசெய்வது உறவுகளே.


ஐந்தாவதாக ஆனமீக இறை அனுபவம். அவனின்றி அணுவும் அசையாது என்பர் நம் முன்னோர்கள்.ஒவ்வொரு ஆண்டும் இறைவன் கொடுக்கும் உன்னதமானக் கொடையாகும்.நம்முடைய நம்பிக்கையின் அடிப்படையில் நம் வாழ்வில் நடப்பன அனைத்துமே கடவுளின் திருவுளப்படிதான்."நீர் எனக்குக் குறித்து வைத்துள்ள நாள்கள் எல்லாம் எனக்கு வாழ்நாள் எதுவுமே இல்லாத காலத்திலேயே உமது நூலில் எழுதப்பட்டுள்ளன" என 139 ஆம் திருப்பாடலில் 16ஆம் வசனத்தில் நாம் வாசிக்கிறோம்.இவ்வார்த்தையின் படி நாம் கடந்து வருகின்ற ஒவ்வொரு ஆண்டும் கடவுளின் திருவுளப்படி அவர் வகுத்தத் திட்டத்தின்படி நடந்தேறுகிறது.இதற்கு முன் நாம் அலசிப்பார்த்த வயது முதிர்ச்சி,ஆளுமை வளர்ச்சி,அனுபவப் படிப்பினைகள், உறவுப் பெருக்கம் அனைத்துமே கடவுளை ஆன்மீகப்பூர்வமாக உணர நமக்கு உதவுபவையாக உள்ளன. கடவுளை ஆன்மீகப்பூர்வமாக உணரும் போது நாம் நன்றியுள்ளவர்களாக, நிறைவுள்ளவர்களாக, மகிழ்வுள்ளவர்களாக ஒவ்வொரு ஆண்டும் வளர்ந்து கொண்டிருக்கிறோம்.


ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் நம்மை நாமே அலசிப்பார்த்தோமானால் அந்த ஆண்டு நம் வாழ்வில் ஒரு தடத்தை நிச்சயமாகப்  பதித்திருக்கும். ஒரு ஆண்டு மற்றொரு ஆண்டைப் போல இருக்காது. முடிவுற்ற ஆண்டு நமக்கு மீண்டும் கிடைக்காது. எனவே வருடத்தின் இறுதியில் இருக்கும் நாம் ஆண்டின் முக்கியத்துவத்தையும், அது தந்த ஆசீர்வாதங்களையும் மனதார உணர்வோம். கடவுளுக்கு நன்றி கூறுவோம். அவர் தரப்போகின்ற புதிய ஆண்டையும் ஆன்மீக, அனுபவ ,ஆளுமை வளர்ச்சியுடன் நம் உறவுகளோடு தொடங்க நம்மையே தயாரிப்போம்.

புதிய ஆண்டு பிறக்கின்ற பொழுது கடவுளிடம் முழுமையாக நம்மை அர்ப்பணித்து இறைவேண்டல் செய்து கடவுளின் ஆசீரை முழுமையாகச் சுவைப்போம்.


 இறைவேண்டல் : 

வல்லமையுள்ள இறைவா! நீ எங்களுக்கு கொடுத்த இந்த ஆண்டிற்கான நன்றி செலுத்துகிறோம். இந்த ஆண்டு முழுவதும் தொற்றுநோய்களும் பல்வேறு துன்பங்களும் இடையூறுகளும் எங்களை வாடிய பொழுதும் எங்களைப் பாதுகாத்து வழிநடத்திய மேலான உமது அருளுக்காக நன்றி செலுத்துகிறோம். இனி வரும் ஆண்டிலும் எங்களை சிறப்பான விதத்தில் வழிநடத்தி உம்முடைய ஆசீரையும் ஆரோக்கியமான வாழ்வையும் கொடுத்திட உம்மை வேண்டுகிறோம். ஆமென்.


அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Thursday, December 29, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (30-12-2022)

 

இயேசு, மரியா, யோசேப்பின் திருக்குடும்பம்

விழா




முதல் வாசகம்

ஆண்டவருக்கு அஞ்சுகிறவன் தாய் தந்தையரை மதிக்கிறான்.

சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 3: 2-7, 12-14a

பிள்ளைகளைவிடத் தந்தையரை ஆண்டவர் மிகுதியாக மேன்மைப் படுத்தியுள்ளார்; பிள்ளைகள்மீது அன்னையர்க்குள்ள உரிமைகளை உறுதிப்படுத்தியுள்ளார். தந்தையரை மதிப்போர் பாவங்களுக்குக் கழுவாய் தேடிக்கொள்கின்றனர். அன்னையரை மேன்மைப்படுத்துவோர் செல்வம் திரட்டிவைப்போருக்கு ஒப்பாவர். தந்தையரை மதிப்போருக்குத் தங்கள் பிள்ளைகளால் மகிழ்ச்சி கிட்டும்; அவர்களுடைய மன்றாட்டு கேட்கப்படும். தந்தையரை மேன்மைப்படுத்துவோர் நீடுவாழ்வர்; ஆண்டவருக்குப் பணிந்து நடப்போர் தங்கள் அன்னையர்க்கு மதிப்பு அளிப்பர். தலைவர்கள் கீழ்ப் பணியாளர்கள்போல் அவர்கள் தங்கள் பெற்றோருக்குப் பணி செய்வார்கள்.

குழந்தாய், உன் தந்தையின் முதுமையில் அவருக்கு உதவு; அவரது வாழ்நாளெல்லாம் அவரது உள்ளத்தைப் புண்படுத்தாதே. அவரது அறிவாற்றல் குறைந்தாலும் பொறுமையைக் கடைப்பிடி; நீ இளமை மிடுக்கில் இருப்பதால் அவரை இகழாதே. தந்தைக்குக் காட்டும் பரிவு மறக்கப்படாது. அது உன் பாவங்களுக்குக் கழுவாயாக விளங்கும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


அல்லது

ஆண்டவருக்கு உகந்த குடும்ப வாழ்க்கை.

திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 12-21

சகோதரர் சகோதரிகளே,

நீங்கள் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள், அவரது அன்பிற்குரிய இறைமக்கள். எனவே அதற்கு இசைய பரிவு, இரக்கம், நல்லெண்ணம், மனத்தாழ்மை, கனிவு, பொறுமை ஆகிய பண்புகளால் உங்களை அணிசெய்யுங்கள். ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொள்ளுங்கள். ஒருவரைப்பற்றி ஒருவருக்கு ஏதாவது முறையீடு இருந்தால் மன்னியுங்கள். ஆண்டவர் உங்களை மன்னித்ததுபோல நீங்களும் மன்னிக்க வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக, அன்பையே கொண்டிருங்கள். அதுவே இவை அனைத்தையும் பிணைத்து நிறைவுபெறச் செய்யும். கிறிஸ்து அருளும் அமைதி உங்கள் உள்ளங்களை நெறிப்படுத்துவதாக! இவ்வமைதிக்கென்றே நீங்கள் ஒரே உடலின் உறுப்புகளாக இருக்க அழைக்கப்பட்டீர்கள். நன்றியுள்ளவர்களாய் இருங்கள்.

கிறிஸ்துவைப்பற்றிய நற்செய்தி உங்களுக்குள் நிறைவாகக் குடிகொள்வதாக! முழு ஞானத்தோடு ஒருவருக்கு ஒருவர் கற்பித்து அறிவுரை கூறுங்கள். திருப்பாடல்களையும் புகழ்ப்பாக்களையும் ஆவிக்குரிய பாடல்களையும் நன்றியோடு உளமாரப் பாடிக் கடவுளைப் போற்றுங்கள். எதைச் சொன்னாலும் எதைச் செய்தாலும் அனைத்தையும் ஆண்டவர் இயேசுவின் பெயரால் செய்து அவர் வழியாய்த் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள்.

திருமணமான பெண்களே, உங்கள் கணவருக்கு நீங்கள் பணிந்திருங்கள். ஆண்டவரைச் சார்ந்து வாழ்வோருக்கு இதுவே தகும். திருமணமான ஆண்களே, உங்கள் மனைவியரிடம் அன்பு செலுத்துங்கள். அவர்களைக் கொடுமைப்படுத்தாதீர்கள். பிள்ளைகளே, உங்கள் பெற்றோருக்கு முற்றிலும் கீழ்ப்படியுங்கள். ஆண்டவரைச் சார்ந்தவர்களுக்கு இதுவே தகும்.

பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகளுக்கு எரிச்சல் மூட்டாதீர்கள். அப்படிச் செய்தால் அவர்கள் மனந்தளர்ந்து போவார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 128: 1-2. 3. 4-5 (பல்லவி: 1)

பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறு பெற்றோர்!

1
ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்!
2
உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும் பெறுவீர். - பல்லவி

3
உம் இல்லத்தில் உம் துணைவியார் கனி தரும் திராட்சைக் கொடிபோல் இருப்பார்; உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப்போல் உம்மைச் சூழ்ந்திருப்பர். - பல்லவி

4
ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார்.
5
ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக! உம் வாழ்நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக. - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

கொலோ 3: 15a, 16a

அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்து அருளும் அமைதி உங்கள் உள்ளங்களை நெறிப்படுத்துவதாக! கிறிஸ்துவைப்பற்றிய நற்செய்தி உங்களுக்குள் நிறைவாகக் குடிகொள்வதாக! அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லும்.

 மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 13-15, 19-23

ஞானிகள் திரும்பிச் சென்றபின் ஆண்டவருடைய தூதர் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, “நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லும். நான் உமக்குச் சொல்லும்வரை அங்கேயே இரும். ஏனெனில், குழந்தையை ஏரோது கொல்வதற்காகத் தேடப்போகிறான்” என்றார். யோசேப்பு எழுந்து, குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு, இரவிலேயே எகிப்துக்குப் புறப்பட்டுச் சென்றார்; ஏரோது இறக்கும் வரை அங்கேயே இருந்தார். இவ்வாறு, “எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன்” என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறியது.

ஏரோது காலமானதும், ஆண்டவருடைய தூதர் எகிப்தில் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, “நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்குச் செல்லும். ஏனெனில் குழந்தையின் உயிரைப் பறிக்கத் தேடியவர்கள் இறந்து போனார்கள்” என்றார். எனவே, யோசேப்பு எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்கு வந்து சேர்ந்தார். ஆனால் யூதேயாவில் அர்க்கெலா தன் தந்தைக்குப்பின் அரசாளுவதாகக் கேள்விப்பட்டு, அங்கே போக அவர் அஞ்சினார்; கனவில் எச்சரிக்கப்பட்டுக் கலிலேயப் பகுதிகளுக்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கு அவர் நாசரேத்து எனப்படும் ஊருக்குச் சென்று அங்குக் குடியிருந்தார். இவ்வாறு, “ ‘நசரேயன்’ என அழைக்கப்படுவார்” என்று இறைவாக்கினர்கள் உரைத்தது நிறைவேறியது.

ஆண்டவரின் அருள்வாக்கு.



குடும்பமாய் இறை உளத்திற்கு பணிவோம்! 


குடும்பம் என்பது மனிதரை  உருவாக்கும் பல்கலைக்கழகம். ஒவ்வொரு மனிதனும் குடும்பத்தில் இருந்துதான் அனைத்தையும் கற்றுக் கொள்கின்றான். ஒரு மனிதனை நல்லவனாகவும் தவறு செய்பவனாகவும் மாற்றுவது குடும்பம். எனவேதான் திருத்தந்தை "குடும்பம் ஒரு குட்டித் திருச்சபை "எனச் சுட்டிக்காட்டுகிறார். குடும்பம் என்ற ஒன்று  நற்செய்தி விழுமியங்களை வாழ்ந்தால் மட்டுமே இந்த அகிலத் திருஅவை நற்செய்தி விழுமியத்தின் படி வாழ முடியும்.நல்ல குடும்பமே நல்ல சமூகத்தை உருவாக்கும்.


இன்று திருஅவையோடு இணைந்து நாம் திருக்குடும்பவிழாவைக் கொண்டாடுகிறோம்.யோசேப்புவை  குடும்பத்தலைவராகவும் மரியாவை குடும்பத் தலைவியாகவும் இவர்களின் புதல்வனாக இயேசுவையும் உள்ளடக்கிய, நம் குடும்பங்களைப் போன்ற ஒரு சாதாரண குடும்பம்தான் அது. 2000 வருடங்களுக்கு முன்  பாலஸ்தீன நாட்டில் நாசரேத்து ஊரில் வாழ்ந்த மிகச் சாதாரணமான ஒரு குடும்பம்  "திரு "என்ற அடைமொழியோடு அழைக்கப்படுவதேன்? இறைமகன் இயேசு பிறந்ததால் மட்டுமா? இல்லை இறைமகன் இயேசு பிறப்பதற்கு ஏற்ப தன்னை தயாரித்ததாலா?  இன்னும் ஆழமாக யோசித்தால் நமக்கு  "இறை திருஉளத்தை வாழ்வாக்கியதால் " என்ற விடை நமக்குக் கிடைக்கிறது. 


யோசேப்பு, மரியா, இயேசு என மூவரும் போட்டி போட்டுக்கொண்டல்லவா இறைசித்தத்திற்கு பணிந்தார்கள்."இதோ ஆண்டவனின் அடிமை "எனமொழிந்து கன்னியாக இறைமகனை கருவிலே தாங்கி ஆண்டவனுக்கு பணிந்தாள் மரியா. கனவிலே இறைசித்தத்தை உணர்ந்து அதை வெறும் கனவென்று உதாசீனப்படுத்தாமல் சொன்னவற்றை எல்லாம் செய்தார் யோசேப்பு. இறைமகன் என்ற நிலையைப் பற்றிக்கொள்ளாமல் மனிதனாய்ப் பிறந்து விண்ணகத் தந்தையின் புதல்வனாய் மட்டும் அல்லாமல் தன் மண்ணகப் பெற்றோரையும் இறைசித்தத்திற்கேற்ப மதித்து பணிந்து வாழ்ந்தார் இயேசு. இதனால்தானே இக்குடும்பம் திருக்குடும்பமானது.


இறைதிருஉளம் இவர்களுக்கு மகிழ்ச்சியான சொகுசான வாழ்க்கையைத் தரவில்லை. வறுமை, துன்பம்,பிரச்சினைகளுக்கு பஞ்சமில்லை இவர்கள் வாழ்வில். அத்தனையும் ஏற்றுக்கொண்டார்கள் இறைவனைப் பணிந்து.

இறைசித்தத்திற்கு பணிந்ததால் இத்திருக்குடும்பத்தில் ஒருவர் மற்றவர் மீது கொண்டுள்ள அன்பு, புரிதல், விட்டுக்கொடுத்தல், மன்னித்தல் போன்ற அத்தனை பண்புகளும் முழுமை அடைந்தன.


 நம்முடைய குடும்பங்களை திருக்குடும்பத்தோடு ஒப்பிட்டுப் பார்ப்போமா ?இறைசித்தம் நம் குடும்பங்களில் மேலோங்கி நிற்கிறதா? நம்மிடைய உள்ள அன்பு, புரிதல், விட்டுக்கொடுத்தல், மன்னித்தல் போன்ற பண்புகள் முழுமையடைகிறதா?

ஆம் என்றால் இந்நிலை தொடர செபிப்போம். இல்லை என்றால் இனிமேல் திருக்குடும்பமாக மாற முயலுவோம். 


கணவன், மனைவி, பிள்ளைகள் கொண்டது மட்டும் குடும்பமல்ல. திருஅவை ஒரு குடும்பம். அன்பியம் ஒரு குடும்பம். பக்த சபைகளும் குடும்பங்களே. பங்கு ஒரு குடும்பம். துறவற த்தார் சேர்ந்து வாழும் குழுமங்களும் குடும்பங்களே. மூவொரு இறைவனை அடித்தளமாகவும், திருக்குடும்பத்தை முன்மாதிரியாகவும் கொண்டு நாம் அனைவரும் குடும்பமாக இறைதிருஉளத்தை நிறைவேற்ற ஒவ்வொருநாளும் முயற்சி செய்யத் தயாராவோம்.


 இறைவேண்டல் 

அன்பு இறைவா! திருக்குடும்பத்தை முன்மாதிரியாக எங்கள் குடும்பங்களில் இறைச்சித்தத்திற்கு பணிந்து வாழ வரமருளும். ஆமென்.

அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️


Wednesday, December 28, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (29-12-2022)

 

கிறிஸ்து பிறப்பின் எண்கிழமையில் 5ஆம் நாள் - டிசம்பர் 29





முதல் வாசகம்

தம் சகோதரர் சகோதரிகளிடம் அன்பு கொள்வோர் ஒளியில் நிலைத்திருக்கின்றனர்.

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 3-11

என் பிள்ளைகளே,

இயேசுவின் கட்டளைகளை நாம் கடைப்பிடித்தால் நாம் அவரை அறிந்து கொண்டோம் என்பது உறுதியாகத் தெரியும். “அவரை எனக்குத் தெரியும்” எனச் சொல்லிக் கொண்டு அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்காதோர் பொய்யர்; உண்மை அவர்களிடம் இராது. ஆனால் அவரது வார்த்தையைக் கடைப்பிடிப்போரிடம் கடவுளின் அன்பு உண்மையாகவே நிறைவடைகிறது; நாம் அவரோடு இணைந்து இருக்கிறோம் என அதனால் அறிந்துகொள்ளலாம். அவரோடு இணைந்திருப்பதாகக் கூறுவோர் அவர் வாழ்ந்தவாறே வாழக் கடமைப்பட்டவர்கள்.

அன்பிற்குரியவர்களே! நான் உங்களுக்கு எழுதுவது புதியதொரு கட்டளை அல்ல; நீங்கள் தொடக்கத்திலிருந்தே பெற்றிருந்த பழைய கட்டளை தான் அது. நீங்கள் கேட்டறிந்த வார்த்தையே அப்பழைய கட்டளை. இருப்பினும் நான் உங்களுக்கு எழுதுவது ஒரு புதிய கட்டளையே. அது புதியது என்பது கிறிஸ்துவின் வாழ்விலும் உங்கள் வாழ்விலும் விளங்குகிறது. ஏனெனில் இருள் அகன்று போகிறது; உண்மை ஒளி ஏற்கெனவே ஒளிர்கிறது.

ஒளியில் இருப்பதாகச் சொல்லிக் கொண்டு தம் சகோதரர் சகோதரிகளை வெறுப்போர் இருளில்தான் இருக்கின்றனர். தம் சகோதரர் சகோதரிகளிடம் அன்பு கொள்வோர் ஒளியில் நிலைத்திருக்கின்றனர்; இடறி விழ வைக்கும் எதுவும் அவர்களிடம் இல்லை. தம் சகோதரர் சகோதரிகளை வெறுப்போர் இருளில் இருக்கின்றனர்; இருளில் நடக்கின்றனர். அவர்கள் எங்குச் செல்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. ஏனெனில் இருள் அவர்களுடையக் கண்களைக் குருடாக்கிவிட்டது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 96: 1-2a. 2b-3. 5b-6 (பல்லவி: 11a)

பல்லவி: விண்ணுலகம் மகிழ்வதாக; மண்ணுலகம் களிகூர்வதாக.

1
ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்;
2a
ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; அவர் பெயரை வாழ்த்துங்கள். - பல்லவி

2b
அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள்.
3
பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்; அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள். - பல்லவி

5b
ஆண்டவரோ விண்ணுலகைப் படைத்தவர்.
6
மாட்சியும் புகழ்ச்சியும் அவர் திருமுன் உள்ளன; ஆற்றலும் எழிலும் அவரது திருத்தலத்தில் உள்ளன; - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 2: 32

அல்லேலூயா, அல்லேலூயா! இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி; இதுவே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

பிற இனத்தார்க்கு வெளிப்பாடு அருளும் ஒளி.

 லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 22-35

மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபோது குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவர்கள் எருசலேமுக்குக் கொண்டு சென்றார்கள். ஏனெனில், “ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும்” என்று அவருடைய திருச்சட்டத்தில் எழுதியுள்ளது. அச்சட்டத்தில் கூறியுள்ளவாறு இரு மாடப்புறாக்கள் அல்லது இரு புறாக்குஞ்சுகளை அவர்கள் பலியாகக் கொடுக்க வேண்டியிருந்தது.

அப்போது எருசலேமில் சிமியோன் என்னும் ஒருவர் இருந்தார். அவர் நேர்மையானவர்; இறைப்பற்றுக் கொண்டவர்; இஸ்ரயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலை எதிர்பார்த்திருந்தவர்; தூய ஆவியை அவர் பெற்றிருந்தார். “ஆண்டவருடைய மெசியாவைக் காணுமுன் அவர் சாகப்போவதில்லை” என்று தூய ஆவியால் உணர்த்தப்பட்டிருந்தார்.

அந்த ஆவியின் தூண்டுதலால் அவர் கோவிலுக்கு வந்திருந்தார். திருச்சட்ட வழக்கத்திற்கு ஏற்பச் செய்ய வேண்டியதைக் குழந்தை இயேசுவுக்குச் செய்து முடிக்கப் பெற்றோர் அதனை உள்ளே கொண்டுவந்தபோது. சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்திக் கடவுளைப் போற்றி, “ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர். ஏனெனில், மக்கள் அனைவரும் காணுமாறு, நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன. இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி; இதுவே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை” என்றார்.

குழந்தையைக் குறித்துக் கூறியவை பற்றி அதன் தாயும் தந்தையும் வியப்புற்றனர். சிமியோன் அவர்களுக்கு ஆசிகூறி, அதன் தாயாகிய மரியாவை நோக்கி, “இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும். இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு


அன்புடையவரே ஒளியில் நடப்பர்! 


அன்பே பிரதானம் சகோதர அன்பே பிரதானம் என்ற பழைய பாடலை நாம் அனைவருமே கேட்டிருப்போம். சகோதர அன்பு என்பது கடவுள் அன்பின் வெளிப்பாடு. ஒருவர் மற்றவர் மேல் அன்பு கொண்டு வாழ்வது நம் வாழ்வை பொருளுள்ளதாக்கும். நிறைவுள்ளதாக்கும்.கிறிஸ்து பிறப்பு காலத்தில் நாம் அனைவரும் இருக்கிறோம். கிறிஸ்மஸ் என்பதே அன்பின் விழாதான். கடவுள் நம்மீது கொண்டுள்ள அன்பின் சாட்சிதான் பிறந்த குழந்தை இயேசு. நம்மிடமுள்ள அன்பை நாம் எவ்வாறு மெய்ப்பிக்கப் போகிறோம்.


 இன்றைய முதல் வாசகம் சகோதர சகோதரிகளிடையேயுள்ள அன்புதான் ஒருவரை ஒளியில் வழிநடத்தும். சகோதர சகோதரிகளை அன்பு செய்யாதவர் பொய்யர். இருளில் நடப்பவர். கடவுளை அறிந்திராவதர் என்ற ஆழமான சிந்தனைகளைத் தருகிறது. "தம் சகோதரர் சகோதரிகளிடம் அன்பு கொள்வோர் ஒளியில் நிலைத்திருக்கின்றனர்; இடறி விழ வைக்கும் எதுவும் அவர்களிடம் இல்லை.

தம் சகோதரர் சகோதரிகளை வெறுப்போர் இருளில் இருக்கின்றனர்; இருளில் நடக்கின்றனர். அவர்கள் எங்குச் செல்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. ஏனெனில் இருள் அவர்களுடையக் கண்களைக் குருடாக்கிவிட்டது. "என்ற யோவானின் வாக்குகள் மேற்கூறிய கருத்துக்களை நமக்கு மிகத் தெளிவாக விளக்குகின்றன.


ஒருவரை ஒருவர் அன்பு செய்யுங்கள் என்பது தான் கடவுள் அளித்த கட்டளை. மோசேவழி தரப்பட்ட பத்துக்கட்டளைகளும் அதைத்தான் கூறுகின்றன.கிறிஸ்து தந்த புதிய கட்டளையும் அதையே உறுதிப்படுத்துகின்றது. இந்த சகோதர அன்பு தான் உலகை வழிநடத்தும் ஒளி என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.


நற்செய்தி வாசகத்தில் சிமியோன் குழந்தை இயேசுவைக் கையில் ஏந்தி அவரே அனைவருக்கும் ஒளி எனக் கூறுகிறார். ஆம் இயேசு அன்பின் சாட்சி. அன்பே கடவுள் என்போம். அந்த கடவுளின் உருவமே அவர். அந்த அன்புதான் நம்மை வழிநடத்தும் ஒளி. சகோதர அன்புக்கு தன்னையே தந்து அவ்வாறே நாமும் வாழ வழிகாட்டிய ஒளி நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து? 

நாம் ஒளியில் நடக்க வேண்டுமா? அதற்கு சகோதர அன்பு நம்மிடம் வேண்டும்.


அன்பு தான் உலகை ஆள வேண்டும். ஏனெனில் கடவுள் அன்பாய் இருக்கிறார். கடவுளிடமிருந்து பெற்ற அன்பை நான் மட்டும் சுவைக்காமல்,  அனைவரும் சுவைத்திட தேவையான அருளை வேண்டுவோம். மனித  சேவையில் புனிதம் கண்டு மனிதத்தை அன்பு செய்து நம்மை தேடி வந்த பாலன்  இயேசுவை நாமும் அன்பு செய்ய முயற்சி செய்வோம்.


 இறைவேண்டல்

வல்லமையுள்ள இறைவா! உம் மகன் பாலன் இயேசு இந்த உலகத்தில் கொண்டு வந்த அன்பை நாங்கள் முழுமையாக உணரவும் அந்த அன்பை அனைவரிடத்திலும் கொடுக்கவும் நல்ல மனநிலையை தாரும். ஆமென்.


அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...