Thursday, December 29, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (30-12-2022)

 

இயேசு, மரியா, யோசேப்பின் திருக்குடும்பம்

விழா




முதல் வாசகம்

ஆண்டவருக்கு அஞ்சுகிறவன் தாய் தந்தையரை மதிக்கிறான்.

சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 3: 2-7, 12-14a

பிள்ளைகளைவிடத் தந்தையரை ஆண்டவர் மிகுதியாக மேன்மைப் படுத்தியுள்ளார்; பிள்ளைகள்மீது அன்னையர்க்குள்ள உரிமைகளை உறுதிப்படுத்தியுள்ளார். தந்தையரை மதிப்போர் பாவங்களுக்குக் கழுவாய் தேடிக்கொள்கின்றனர். அன்னையரை மேன்மைப்படுத்துவோர் செல்வம் திரட்டிவைப்போருக்கு ஒப்பாவர். தந்தையரை மதிப்போருக்குத் தங்கள் பிள்ளைகளால் மகிழ்ச்சி கிட்டும்; அவர்களுடைய மன்றாட்டு கேட்கப்படும். தந்தையரை மேன்மைப்படுத்துவோர் நீடுவாழ்வர்; ஆண்டவருக்குப் பணிந்து நடப்போர் தங்கள் அன்னையர்க்கு மதிப்பு அளிப்பர். தலைவர்கள் கீழ்ப் பணியாளர்கள்போல் அவர்கள் தங்கள் பெற்றோருக்குப் பணி செய்வார்கள்.

குழந்தாய், உன் தந்தையின் முதுமையில் அவருக்கு உதவு; அவரது வாழ்நாளெல்லாம் அவரது உள்ளத்தைப் புண்படுத்தாதே. அவரது அறிவாற்றல் குறைந்தாலும் பொறுமையைக் கடைப்பிடி; நீ இளமை மிடுக்கில் இருப்பதால் அவரை இகழாதே. தந்தைக்குக் காட்டும் பரிவு மறக்கப்படாது. அது உன் பாவங்களுக்குக் கழுவாயாக விளங்கும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


அல்லது

ஆண்டவருக்கு உகந்த குடும்ப வாழ்க்கை.

திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 12-21

சகோதரர் சகோதரிகளே,

நீங்கள் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள், அவரது அன்பிற்குரிய இறைமக்கள். எனவே அதற்கு இசைய பரிவு, இரக்கம், நல்லெண்ணம், மனத்தாழ்மை, கனிவு, பொறுமை ஆகிய பண்புகளால் உங்களை அணிசெய்யுங்கள். ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொள்ளுங்கள். ஒருவரைப்பற்றி ஒருவருக்கு ஏதாவது முறையீடு இருந்தால் மன்னியுங்கள். ஆண்டவர் உங்களை மன்னித்ததுபோல நீங்களும் மன்னிக்க வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக, அன்பையே கொண்டிருங்கள். அதுவே இவை அனைத்தையும் பிணைத்து நிறைவுபெறச் செய்யும். கிறிஸ்து அருளும் அமைதி உங்கள் உள்ளங்களை நெறிப்படுத்துவதாக! இவ்வமைதிக்கென்றே நீங்கள் ஒரே உடலின் உறுப்புகளாக இருக்க அழைக்கப்பட்டீர்கள். நன்றியுள்ளவர்களாய் இருங்கள்.

கிறிஸ்துவைப்பற்றிய நற்செய்தி உங்களுக்குள் நிறைவாகக் குடிகொள்வதாக! முழு ஞானத்தோடு ஒருவருக்கு ஒருவர் கற்பித்து அறிவுரை கூறுங்கள். திருப்பாடல்களையும் புகழ்ப்பாக்களையும் ஆவிக்குரிய பாடல்களையும் நன்றியோடு உளமாரப் பாடிக் கடவுளைப் போற்றுங்கள். எதைச் சொன்னாலும் எதைச் செய்தாலும் அனைத்தையும் ஆண்டவர் இயேசுவின் பெயரால் செய்து அவர் வழியாய்த் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள்.

திருமணமான பெண்களே, உங்கள் கணவருக்கு நீங்கள் பணிந்திருங்கள். ஆண்டவரைச் சார்ந்து வாழ்வோருக்கு இதுவே தகும். திருமணமான ஆண்களே, உங்கள் மனைவியரிடம் அன்பு செலுத்துங்கள். அவர்களைக் கொடுமைப்படுத்தாதீர்கள். பிள்ளைகளே, உங்கள் பெற்றோருக்கு முற்றிலும் கீழ்ப்படியுங்கள். ஆண்டவரைச் சார்ந்தவர்களுக்கு இதுவே தகும்.

பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகளுக்கு எரிச்சல் மூட்டாதீர்கள். அப்படிச் செய்தால் அவர்கள் மனந்தளர்ந்து போவார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 128: 1-2. 3. 4-5 (பல்லவி: 1)

பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறு பெற்றோர்!

1
ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்!
2
உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும் பெறுவீர். - பல்லவி

3
உம் இல்லத்தில் உம் துணைவியார் கனி தரும் திராட்சைக் கொடிபோல் இருப்பார்; உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப்போல் உம்மைச் சூழ்ந்திருப்பர். - பல்லவி

4
ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார்.
5
ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக! உம் வாழ்நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக. - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

கொலோ 3: 15a, 16a

அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்து அருளும் அமைதி உங்கள் உள்ளங்களை நெறிப்படுத்துவதாக! கிறிஸ்துவைப்பற்றிய நற்செய்தி உங்களுக்குள் நிறைவாகக் குடிகொள்வதாக! அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லும்.

 மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 13-15, 19-23

ஞானிகள் திரும்பிச் சென்றபின் ஆண்டவருடைய தூதர் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, “நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லும். நான் உமக்குச் சொல்லும்வரை அங்கேயே இரும். ஏனெனில், குழந்தையை ஏரோது கொல்வதற்காகத் தேடப்போகிறான்” என்றார். யோசேப்பு எழுந்து, குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு, இரவிலேயே எகிப்துக்குப் புறப்பட்டுச் சென்றார்; ஏரோது இறக்கும் வரை அங்கேயே இருந்தார். இவ்வாறு, “எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன்” என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறியது.

ஏரோது காலமானதும், ஆண்டவருடைய தூதர் எகிப்தில் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, “நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்குச் செல்லும். ஏனெனில் குழந்தையின் உயிரைப் பறிக்கத் தேடியவர்கள் இறந்து போனார்கள்” என்றார். எனவே, யோசேப்பு எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்கு வந்து சேர்ந்தார். ஆனால் யூதேயாவில் அர்க்கெலா தன் தந்தைக்குப்பின் அரசாளுவதாகக் கேள்விப்பட்டு, அங்கே போக அவர் அஞ்சினார்; கனவில் எச்சரிக்கப்பட்டுக் கலிலேயப் பகுதிகளுக்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கு அவர் நாசரேத்து எனப்படும் ஊருக்குச் சென்று அங்குக் குடியிருந்தார். இவ்வாறு, “ ‘நசரேயன்’ என அழைக்கப்படுவார்” என்று இறைவாக்கினர்கள் உரைத்தது நிறைவேறியது.

ஆண்டவரின் அருள்வாக்கு.



குடும்பமாய் இறை உளத்திற்கு பணிவோம்! 


குடும்பம் என்பது மனிதரை  உருவாக்கும் பல்கலைக்கழகம். ஒவ்வொரு மனிதனும் குடும்பத்தில் இருந்துதான் அனைத்தையும் கற்றுக் கொள்கின்றான். ஒரு மனிதனை நல்லவனாகவும் தவறு செய்பவனாகவும் மாற்றுவது குடும்பம். எனவேதான் திருத்தந்தை "குடும்பம் ஒரு குட்டித் திருச்சபை "எனச் சுட்டிக்காட்டுகிறார். குடும்பம் என்ற ஒன்று  நற்செய்தி விழுமியங்களை வாழ்ந்தால் மட்டுமே இந்த அகிலத் திருஅவை நற்செய்தி விழுமியத்தின் படி வாழ முடியும்.நல்ல குடும்பமே நல்ல சமூகத்தை உருவாக்கும்.


இன்று திருஅவையோடு இணைந்து நாம் திருக்குடும்பவிழாவைக் கொண்டாடுகிறோம்.யோசேப்புவை  குடும்பத்தலைவராகவும் மரியாவை குடும்பத் தலைவியாகவும் இவர்களின் புதல்வனாக இயேசுவையும் உள்ளடக்கிய, நம் குடும்பங்களைப் போன்ற ஒரு சாதாரண குடும்பம்தான் அது. 2000 வருடங்களுக்கு முன்  பாலஸ்தீன நாட்டில் நாசரேத்து ஊரில் வாழ்ந்த மிகச் சாதாரணமான ஒரு குடும்பம்  "திரு "என்ற அடைமொழியோடு அழைக்கப்படுவதேன்? இறைமகன் இயேசு பிறந்ததால் மட்டுமா? இல்லை இறைமகன் இயேசு பிறப்பதற்கு ஏற்ப தன்னை தயாரித்ததாலா?  இன்னும் ஆழமாக யோசித்தால் நமக்கு  "இறை திருஉளத்தை வாழ்வாக்கியதால் " என்ற விடை நமக்குக் கிடைக்கிறது. 


யோசேப்பு, மரியா, இயேசு என மூவரும் போட்டி போட்டுக்கொண்டல்லவா இறைசித்தத்திற்கு பணிந்தார்கள்."இதோ ஆண்டவனின் அடிமை "எனமொழிந்து கன்னியாக இறைமகனை கருவிலே தாங்கி ஆண்டவனுக்கு பணிந்தாள் மரியா. கனவிலே இறைசித்தத்தை உணர்ந்து அதை வெறும் கனவென்று உதாசீனப்படுத்தாமல் சொன்னவற்றை எல்லாம் செய்தார் யோசேப்பு. இறைமகன் என்ற நிலையைப் பற்றிக்கொள்ளாமல் மனிதனாய்ப் பிறந்து விண்ணகத் தந்தையின் புதல்வனாய் மட்டும் அல்லாமல் தன் மண்ணகப் பெற்றோரையும் இறைசித்தத்திற்கேற்ப மதித்து பணிந்து வாழ்ந்தார் இயேசு. இதனால்தானே இக்குடும்பம் திருக்குடும்பமானது.


இறைதிருஉளம் இவர்களுக்கு மகிழ்ச்சியான சொகுசான வாழ்க்கையைத் தரவில்லை. வறுமை, துன்பம்,பிரச்சினைகளுக்கு பஞ்சமில்லை இவர்கள் வாழ்வில். அத்தனையும் ஏற்றுக்கொண்டார்கள் இறைவனைப் பணிந்து.

இறைசித்தத்திற்கு பணிந்ததால் இத்திருக்குடும்பத்தில் ஒருவர் மற்றவர் மீது கொண்டுள்ள அன்பு, புரிதல், விட்டுக்கொடுத்தல், மன்னித்தல் போன்ற அத்தனை பண்புகளும் முழுமை அடைந்தன.


 நம்முடைய குடும்பங்களை திருக்குடும்பத்தோடு ஒப்பிட்டுப் பார்ப்போமா ?இறைசித்தம் நம் குடும்பங்களில் மேலோங்கி நிற்கிறதா? நம்மிடைய உள்ள அன்பு, புரிதல், விட்டுக்கொடுத்தல், மன்னித்தல் போன்ற பண்புகள் முழுமையடைகிறதா?

ஆம் என்றால் இந்நிலை தொடர செபிப்போம். இல்லை என்றால் இனிமேல் திருக்குடும்பமாக மாற முயலுவோம். 


கணவன், மனைவி, பிள்ளைகள் கொண்டது மட்டும் குடும்பமல்ல. திருஅவை ஒரு குடும்பம். அன்பியம் ஒரு குடும்பம். பக்த சபைகளும் குடும்பங்களே. பங்கு ஒரு குடும்பம். துறவற த்தார் சேர்ந்து வாழும் குழுமங்களும் குடும்பங்களே. மூவொரு இறைவனை அடித்தளமாகவும், திருக்குடும்பத்தை முன்மாதிரியாகவும் கொண்டு நாம் அனைவரும் குடும்பமாக இறைதிருஉளத்தை நிறைவேற்ற ஒவ்வொருநாளும் முயற்சி செய்யத் தயாராவோம்.


 இறைவேண்டல் 

அன்பு இறைவா! திருக்குடும்பத்தை முன்மாதிரியாக எங்கள் குடும்பங்களில் இறைச்சித்தத்திற்கு பணிந்து வாழ வரமருளும். ஆமென்.

அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️


No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...