சனவரி 3
முதல் வாசகம்
கடவுளோடு இணைந்திருக்கும் எவரும் பாவம் செய்வதில்லை.
திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 29- 3: 6
அன்பிற்குரியவர்களே,
இறைவன் நேர்மையாளர் என நீங்கள் அறிந்துகொண்டால், நேர்மையாகச் செயல்படுவோர் அனைவரும் அவரிடமிருந்து பிறந்தவர்கள் என்பதைப் புரிந்துகொள்வீர்கள்.
நம் தந்தை நம்மிடம் எத்துணை அன்பு கொண்டுள்ளார் என்று பாருங்கள். நாம் கடவுளின் மக்களென அழைக்கப்படுகிறோம்; கடவுளின் மக்களாகவே இருக்கிறோம். உலகம் அவரை அறிந்துகொள்ளாததால்தான் நம்மையும் அறிந்துகொள்ளவில்லை. என் அன்பார்ந்தவர்களே, இப்போது நாம் கடவுளின் பிள்ளைகளாய் இருக்கிறோம். இனி எத்தன்மையராய் இருப்போம் என்பது இன்னும் வெளிப்படவில்லை. ஆனால் அவர் தோன்றும்போது நாமும் அவரைப்போல் இருப்போம்; ஏனெனில் அவர் இருப்பதுபோல் அவரைக் காண்போம்.
அவரை எதிர்நோக்கி இருக்கிற அனைவரும் அவர் தூயவராய் இருப்பதுபோல் தம்மையே தூயவராக்க வேண்டும். பாவம் செய்யும் அனைவரும் சட்டத்தை மீறுகின்றனர். சட்டத்தை மீறுவதே பாவம்.
பாவங்களை நீக்கவே அவர் தோன்றினார் என்பது உங்களுக்குத் தெரியும். அவரிடம் பாவம் இல்லை. அவரோடு இணைந்திருக்கும் எவரும் பாவம் செய்வதில்லை. பாவம் செய்பவர் எவரும் அவரைக் கண்டதுமில்லை, அறிந்ததுமில்லை.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 98: 1. 3b-4. 5-6 (பல்லவி: 3b)பல்லவி: மாந்தர் அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 1: 14, 12bஅல்லேலூயா, அல்லேலூயா! வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக் கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகளாகும் உரிமையை அளித்தார். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
இதோ! கடவுளின் செம்மறி.
✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 29-34
அக்காலத்தில்
இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான், “இதோ! கடவுளின் செம்மறி! செம்மறியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர். எனக்குப்பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்; ஏனெனில் எனக்கு முன்பே இருந்தார் என்று நான் இவரைப்பற்றியே சொன்னேன். இவர் யாரென்று எனக்கும் தெரியாதிருந்தது. ஆனால் இஸ்ரயேல் மக்களுக்கு இவரை வெளிப்படுத்தும் பொருட்டே நான் வந்துள்ளேன்; தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தும் வருகிறேன்” என்றார்.
தொடர்ந்து யோவான் சான்றாகக் கூறியது: “தூய ஆவி புறாவைப் போல வானிலிருந்து இறங்கி இவர்மீது இருந்ததைக் கண்டேன். இவர் யாரென்று என்குத் தெரியாதிருந்தது. ஆனால் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கும்படி என்னை அனுப்பியவர் ‘தூய ஆவி இறங்கி யார்மீது இருப்பதைக் காண்பீரோ அவரே தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பவர்’ என்று என்னிடம் சொல்லியிருந்தார். நானும் கண்டேன்; இவரே இறைமகன் எனச் சான்றும் கூறி வருகிறேன்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
என் வாழ்வால் கிறிஸ்துவை சுட்டிக்காட்டுகிறேனா நான்?
பலமுறை நாம் இதைச் சிந்தித்திருக்கிறோம். "கிறிஸ்தவன் அல்லது கிறிஸ்தவள் "என்ற சொற்களைப் பிரித்து எழுதினால் கிறிஸ்து + அவன், கிறிஸ்து +அவள், எனக்கிடைக்கும்.இவை வெறும் வார்த்தைகள் அல்ல. இங்கே அவன் அல்லது அவள் என்ற மனிதத்தன்மை மேலோங்கி நிற்பதில்லை. மாறாக கிறிஸ்து என்ற தெய்வீகத்தன்மையே மேலோங்கி நிற்கிறது.
ஆம் அன்புக்குரியவர்களே திருமுழுக்கு பெற்ற கிறிஸ்தவர்களாகிய அதாவது "கிறிஸ்து +அவர்கள் "ஆகிய நாம் எல்லோருமே அவரையே பிரதிபலிக்கக்கூடியவர்களாக, அவரையே பிறருக்கு சுட்டிக்காட்டக் கூடியவர்களாக வாழவேண்டும். அதுதான் நம் வாழ்நாளில் நாம் அடைய வேண்டிய முழுமையான உயர்வான இலக்கு. ஆனால் இன்று நம் வாழ்வு கிறிஸ்துவை பிறருக்குக் காட்டக் கூடியதாய் உள்ளதா? சிந்திக்க வேண்டும் நாம்.
யோவானை யார் என்ற விசாரிக்க வந்தவர்களிடம் தான் மெசியா அல்ல எனவும் மெசியாவின் வருகைக்காக ஆயத்தம் செய்பவன் எனவும் யோவான் அறிவித்த நிகழ்வுக்கு பின் இயேசுவை யோவான் சந்திக்கிறார். அவரைப் பார்த்த உடனே தூயஆவியாரால் வெளிப்படுத்தப் பட்டவராய் "இவரே கடவுளின் செம்மறி "என துணிச்சலாக அனைவரிடமும் சுட்டிக்காட்டுகிறார் அவர். தனக்கு மெசியாவைப் பற்றி தெரியாதிருந்தது எனவும் தூய ஆவி தனக்கு உணர்த்தியதாகவும் கூறி, யோவான் இயேசுவை பகிரங்கமாக துணிச்சலாக தயக்கமின்றி சுட்டிக்காட்டுகிறார்.
அவருடைய வாழ்வும் போதனைகளும் செயல்களும் இதற்கு சான்றாய் அமைந்தது எனலாம்.
ஆக இயேசுவை சுட்டிக்காட்ட நாம் தூய ஆவியால் நிறையப்பெற்றவர்களாய் இருப்பது அவசியம். அத்தூய ஆவி நம்மை கிறிஸ்துவை உலகிற்கு எடுத்துக்காட்டுபவர்களாக மாற்றுவார் என்பதில் ஐயமில்லை.
தொடக்க காலங்களில் கிறிஸ்தவர்கள் செய்கின்ற நற்செயல்களையும், அவர்களின் அன்பான நடத்தையையும், பகிர்தல், மன்னித்தல் போன்ற பண்புகளையும் கொண்டே அவர்களை கிறிஸ்தவர்கள் என அடையாளப்படுத்தி கிறிஸ்துவைக் கண்டுகொண்டது இவ்வுலகம். ஆனால் இன்றோ இந்நிலை மாறிவிட்டது. நமது தேசத் தந்தை காந்தியடிகள் தான் கிறிஸ்துவை அன்பு செய்வதாகவும் கிறிஸ்தவர்களை வெறுப்பதாகவும் கூறியிருக்கிறார்.இது வேதனைக்குரிய நிலை அல்லவா! இதைப்போன்று இன்னும் எத்தனைபேர் நினைத்திருக்கக்கூடும்!
என வே நாம் ஒவ்வொருவருமே மிகக் கவனமாக நம் வாழ்க்கையை ஆவியின் துணையோடு வாழ்ந்து கிறிஸ்துவை சுட்டிக்காட்ட முழுமூச்சாக முயல வேண்டும். கிறிஸ்துவாகவே நாம் மாற வேண்டும். அதற்கான அருளை இறைவனிடம் கேட்போம்.
இறைவேண்டல்
அன்பே உருவான இறைவா! திருமுழுக்கு யோவானைப்போல நாங்களும் கிறிஸ்துவை உலகிற்கு சுட்டிக்காட்டுபவர்களாக வாழ வரமருளும். ஆமென்.
அருட்பணி. குழந்தை இயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️
Join with us 👇
Website: https://catholicvoicecv.blogspot.com
Youtube: https://www.youtube.com/channel/UCcgIiK1gUEqRCmTsc7ZjAoA
Youtube: https://www.youtube.com/channel/UCxBBHQAKIjii_MsZfIYNF5A
Facebook:https://www.facebook.com/Catholic-Voice-108151311955076
Instagram:https://www.instagram.com/invites/contact/?i=16mmdwn460k8p&utm_content=p6lg283
No comments:
Post a Comment