புனித மாசில்லாக் குழந்தைகள் - மறைச்சாட்சியர்
முதல் வாசகம்
இயேசுவின் இரத்தம் எல்லாப் பாவத்தினின்றும் நம்மைத் தூய்மைப்படுத்தும்.
திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 5- 2: 2
சகோதரர் சகோதரிகளே,
நாங்கள் அவரிடமிருந்து கேட்டறிந்து உங்களுக்கு அறிவிக்கும் செய்தி இதுவே: கடவுள் ஒளியாய் இருக்கிறார்; அவரிடம் இருள் என்பதே இல்லை. நாம் இருளில் நடந்து கொண்டு, அவருடன் நமக்கு நட்புறவு உண்டு என்போமென்றால் நாம் பொய்யராவோம்; உண்மைக்கேற்ப வாழாதவராவோம். மாறாக, அவர் ஒளியில் இருப்பதுபோல் நாம் ஒளியில் நடப்போமானால், ஒருவரோடு ஒருவர் நட்புறவு கொண்டிருப்போம். மேலும், அவர் மகனாகிய இயேசுவின் இரத்தம் எல்லாப் பாவத்தினின்றும் நம்மைத் தூய்மைப்படுத்தும்.
ஆனால், பாவம் நம்மிடம் இல்லை என்போமென்றால் நம்மையே நாம் ஏமாற்றிக்கொள்வோம்; உண்மையும் நம்மிடம் இராது. மாறாக நம் பாவங்களை நாம் ஒப்புக்கொள்வோமென்றால் கடவுள் நம் பாவங்களை மன்னித்து, குற்றம் அனைத்திலிருந்தும் நம்மைத் தூய்மைப்படுத்துவார். ஏனெனில் அவர் நம்பிக்கைக்குரியவர், நேர்மையுள்ளவர். நாம் பாவம் செய்யவில்லை என்போமென்றால் அவரைப் பொய்யராக்குவோம். அவருடைய வார்த்தை நம்மிடம் இல்லை என்றாகும்.
என் பிள்ளைகளே, நீங்கள் பாவம் செய்யாதிருக்க வேண்டும் என இதை நான் உங்களுக்கு எழுதுகிறேன்; ஆயினும் ஒருவர் பாவம் செய்ய நேர்ந்தால் தந்தையிடம் பரிந்து பேசுபவர் ஒருவர் நமக்கு இருக்கிறார். அவரே மாசற்ற இயேசு கிறிஸ்து. நம் பாவங்களுக்குக் கழுவாய் அவரே; நம் பாவங்களுக்கு மட்டும் அல்ல, அனைத்துலகின் பாவங்களுக்கும் கழுவாய் அவரே.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 124: 2-3. 4-5. 7b-8 (பல்லவி: 7a)பல்லவி: வேடர் கண்ணியினின்று தப்பிப் பிழைத்த பறவை போல் ஆனோம்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! இறைவா, உம்மை வாழ்த்துகிறோம். ஆண்டவர் நீரெனப் போற்றுகிறோம்; மறைச்சாட்சியரின் வெண்குழுவும் நிறைவாய் உம்மைப் போற்றிடுமே. அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
ஏரோது பெத்லகேமில் எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றான்.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 13-18
ஞானிகள் திரும்பிச் சென்றபின் ஆண்டவருடைய தூதர் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, “நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக் கொண்டு எகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லும். நான் உமக்குச் சொல்லும்வரை அங்கேயே இரும். ஏனெனில், குழந்தையை ஏரோது கொல்வதற்காகத் தேடப்போகிறான்” என்றார்.
யோசேப்பு எழுந்து, குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு, இரவிலேயே எகிப்துக்குப் புறப்பட்டுச் சென்றார். ஏரோது இறக்கும்வரை அங்கேயே இருந்தார். இவ்வாறு, “எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன்” என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறியது.
ஞானிகள் தன்னை ஏமாற்றியதை ஏரோது கண்டு மிகுந்த சீற்றங்கொண்டான். அவன் அவர்களிடம் கருத்தாய்க் கேட்டறிந்ததற்கேற்பக் காலத்தைக் கணக்கிட்டுப் பெத்லகேமிலும் அதன் சுற்றுப்புறமெங்கும் ஆள்களை அனுப்பி இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றான்.
அப்பொழுது “ராமாவிலே ஒரு குரல் கேட்கிறது; ஒரே புலம்பலும் பேரழுகையுமாய் இருக்கிறது; இராகேல் தன் குழந்தைகளுக்காக அழுதுகொண்டிருக்கிறார்; ஆறுதல் பெற அவர் மறுக்கிறார்; ஏனெனில் அவர் குழந்தைகள் அவரோடு இல்லை” என்று இறைவாக்கினர் எரேமியா உரைத்தது நிறைவேறியது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
மாசில்லா மனதுடையவராய் மறைசாட்சியாகத் தயாரா?
நான் பள்ளியிலே படித்துக்கொண்டிருக்கும் போது ஒருமுறை நான் பேசாமலேயே வகுப்புத் தலைவர் கரும்பலகையிலே நான் பேசியதாக என் பெயரை எழுதிவிட்டார். நான் பேசவில்லை என எவ்வளவு கூறியும் பெயரை அழிக்கவில்லை. ஆசிரியர் வகுப்பிற்கு வந்த உடன் பேசியவர்கள் பெயரை கரும்பலகையில் பார்த்துவிட்டு அனைவரையும் அழைத்து தன் கையால் கன்னத்திலே பலமாக அடித்தார். நானும் அடிவாங்கினேன். ஆனால் நான் எந்த தவறும் செய்யவில்லை. ஆசிரியரும் எதுவும் விசாரிக்காமல் அடித்துவிட்டார். இச்செயல் என் மனதைப் பெரிதும் பாதித்தது. வீட்டிலே அனைவரிடமும் சொல்லி அழுதேன். என்னை சமாதானம் செய்ய மூன்று நாட்கள் எடுத்தது.
தவறு செய்யாமல் தண்டனை அனுபவிக்கும் போது நாம் மிகப் பெரிய வலியை உணர்கிறோம்.
அத்தண்டனையை ஏற்றுக்கொள்ள நம் மனம் மறுக்கிறது. அது நமக்கு மட்டுமல்ல நம்மைச் சார்ந்தவர்களுக்கும் பெரிய அதிர்ச்சியையும் துன்பத்தையும் தருவதாக இருக்கிறது என்பதே உண்மை.ஆனால் அத்தண்டனையை பிறர் நலனுக்காக நாம் ஏற்றுக்கொள்ளும் போது துன்பமாகவே இருந்தாலும் பிற்காலத்தில் நாம் உயர்த்தப்படுகிறோம்.
இன்று நாம் கொண்டாடும் மாசற்ற குழந்தைகளுடைய பெருவிழா இச்செய்தியை நமக்குத் தெளிவாக உணர்த்துகிறது.
ஞானிகள் குழந்தையைப் பற்றி தெரிவிக்காததால் கோபமடைந்த ஏரோது அரசன் அப்பகுதியிலுள்ள எல்லா இரண்டு வயதுக்குட்டபட்ட ஆண் மழலைகளைக் கொன்றான். ஒன்றும் அறியாத பச்சிழங்குழந்தைகள் ஏரோதின் சுயநலத்திற்கு பலியாகின்றனர். அவர்களுடைய பெற்றோர்களும் கடுமையான வலியை தாங்க வேண்டியதாயிற்று.
தவறின்றி தண்டனை பெற்ற அந்தக்குழந்தைகள் உலகை மீட்கும் மீட்பரைக் காப்பாற்ற மறைசாட்சியராகின்றனர்.
இந்த விழாவைக் கொண்டாடும் நமக்கு மாசற்ற குழந்தைகள் கூறும் செய்தி இதுவே. நம் அன்றாட வாழ்வில் நாம் செய்யாத தவறுக்காக குற்றம் சுமத்தப்பட்டு, துன்பத்துக்கு ஆளாக நேரும்போது அதனால் பிறருக்கு நன்மை உண்டாகும் என நாம் உணர்ந்தால் அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு நாம் ஏற்றுக்கொள்ளும் போது நாமும் மறைசாட்சியராகிறோம். இயேசு குழந்தையாய் இருந்த போது காப்பாற்றப்பட்டார். ஆனால் தன்னுடைய முப்பத்து மூன்றாம் வயதில் தான் செய்யாத குற்றத்திற்காக தண்டனை அனுபவித்தார்.
ஆயினும் உலக மீட்பிற்காக அவர் மனமுவந்து அத்தண்டனையை ஏற்றுக்கொண்டார் அல்லவா! அவருடைய சீடர்களான நாமும் அதே மனநிலையைக் கொண்டவர்களாக வாழ முயல வேண்டும். பிறர் நலனுக்காகவும் ஆண்டவருடைய மகிமைக்காகவும் ஒருவேளை நாம் தவறாக தண்டிக்கப்பட்டால் அதை ஏற்றுக்கொள்ள முயலுவோம். இறைவன் நிச்சயம் உண்மையை வெளிப்படுத்தி நம்மை உயர்த்துவார். காரணமில்லாமல் நம்மை நோக்கிப் பாயும் வசைமொழிகள், தண்டனைகள், எதிர்ப்புகள் அனைத்தையும் இயேசுவைப் போல, மாசற்ற குழந்தைகளைப் போல ஏற்றுக்கொண்டு மறைசாட்சியாக வாழ இறையருள் வேண்டுவோம்.
இறைவேண்டல்
மாசற்ற இறைவனே! உமது பிள்ளைகளான நாங்களும் மாசில்லா குழந்தைகளைப்போல மறைசாட்சியராய் வாழ்ந்து பிறர் நலனுக்காகவும் உமது மாட்சிக்காகவும் உழைத்திட வரமருளும். ஆமென்.
அருட்பணி. குழந்தை இயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️
Join with us 👇
Website: https://catholicvoicecv.blogspot.com
Youtube: https://www.youtube.com/channel/UCcgIiK1gUEqRCmTsc7ZjAoA
Youtube: https://www.youtube.com/channel/UCxBBHQAKIjii_MsZfIYNF5A
Facebook:https://www.facebook.com/Catholic-Voice-108151311955076
Instagram:https://www.instagram.com/invites/contact/?i=16mmdwn460k8p&utm_content=p6lg283
No comments:
Post a Comment