Wednesday, December 7, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (08-12-2022)

 

தூய கன்னி மரியாவின் அமலோற்பவம்

பெருவிழா


முதல் வாசகம்

உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 3: 9-15, 20

ஆண்டவராகிய கடவுள் மனிதனைக் கூப்பிட்டு, “நீ எங்கே இருக்கின்றாய்?” என்று கேட்டார். “உம் குரல் ஒலியை நான் தோட்டத்தில் கேட்டேன். ஆனால், எனக்கு அச்சமாக இருந்தது. ஏனெனில், நான் ஆடையின்றி இருந்தேன். எனவே, நான் ஒளிந்து கொண்டேன்” என்றான் மனிதன்.

“நீ ஆடையின்றி இருக்கின்றாய் என்று உனக்குச் சொன்னது யார்? நீ உண்ணக்கூடாது என்று நான் விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டாயோ?” என்று கேட்டார். அப்பொழுது அவன், “என்னுடன் இருக்கும்படி நீர் தந்த அந்தப் பெண், மரத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள்; நானும் உண்டேன்” என்றான்.

ஆண்டவராகிய கடவுள், “நீ ஏன் இவ்வாறு செய்தாய்?” என்று பெண்ணைக் கேட்க, அதற்குப் பெண், “பாம்பு என்னை ஏமாற்றியது, நானும் உண்டேன்” என்றாள். ஆண்டவராகிய கடவுள் பாம்பிடம், “நீ இவ்வாறு செய்ததால், கால்நடைகள், காட்டு விலங்குகள் அனைத்திலும் சபிக்கப்பட்டிருப்பாய். உன் வயிற்றினால் ஊர்ந்து உன் வாழ்நாள் எல்லாம் புழுதியைத் தின்பாய். உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்” என்றார்.

மனிதன் தன் மனைவிக்கு ‘ஏவாள்’ என்று பெயரிட்டான்; ஏனெனில் உயிருள்ளோர் எல்லாருக்கும் அவளே தாய்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 98: 1. 2-3ab. 3c-4 (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்.

1
ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. - பல்லவி

2
ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார்.
3ab
இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். - பல்லவி

3c
உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.
4
உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். - பல்லவி

இரண்டாம் வாசகம்

உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார்.

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 3-6, 11-12

சகோதரர் சகோதரிகளே,

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தந்தையும் கடவுளுமானவர் போற்றி! அவர் விண்ணகம் சார்ந்த, ஆவிக்குரிய ஆசி அனைத்தையும் கிறிஸ்து வழியாக நம்மீது பொழிந்துள்ளார். நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி, உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார். அவர் நம்மை இயேசு கிறிஸ்துவின் மூலம் தமக்குச் சொந்தமான பிள்ளைகளாக்கிக் கொள்ள அன்பினால் முன்குறித்து வைத்தார். இதுவே அவரது விருப்பம்; இதுவே அவரது திருவுளம். இவ்வாறு தம் அன்பார்ந்த மகன் வழியாக நம்மீது ஒப்புயர்வற்ற அருளைப் பொழிந்தருளியதால் அவரது புகழைப் பாடுகிறோம். கடவுள் தமது திருவுளத்தின் திட்டத்தின்படி அனைத்தையும் செயல்படுத்தி வருகிறார். அவரது தீர்மானத்தால் நாம் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்து வழியாய் அவரது உரிமைப்பேற்றுக்கு உரியவரானோம். இவ்வாறு கிறிஸ்துவின் மேல் முதலில் நம்பிக்கை வைத்த நாங்கள் கடவுளுடைய மாட்சியைப் புகழ்ந்து பாட வேண்டுமென அவர் விரும்பினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 1: 28

அல்லேலூயா, அல்லேலூயா! அருள் நிறைந்த மரியே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்; பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்.

 லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 26-38

ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா.

வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, “அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்” என்றார். இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார். வானதூதர் அவரைப் பார்த்து, “மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது” என்றார்.

அதற்கு மரியா வானதூதரிடம், “இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!” என்றார். வானதூதர் அவரிடம், “தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும். உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம். ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை” என்றார்.

பின்னர் மரியா, “நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்றார். அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.



மாசற்ற அன்னை நம் மாசற்ற வாழ்வுக்கு உறுதுணை! 


ஒரு ஏழை மாணவி பள்ளிக்கு தினமும் அசுத்தமான நிலையில்  தான்  வருவார். கறைபடிந்த பற்கள்,கிழிந்த தூய்மையற்ற ஆடை, அருகில் செல்லும் போதே ஒருவகையான துர்நாற்றம் என பார்ப்பதற்கு மிகப் பரிதாபமாக இருப்பார்.பலர் அம்மாணவியைக் காணும் போது பயங்கரமாக கோபப்படுவதும் முகம் சுழிப்பதுமாக இருப்பார்கள். இதைக்கண்ட அம்மாணவியின் ஆசிரியை அவர் வீட்டிற்குச் சென்று அம்மாணவியின் தாயை சந்திக்க வேண்டுமென விரும்பினார். வீட்டிற்கு சென்றபோது தான் தெரிந்தது அம்மாணவி தாயற்றவர் என்று. தாய் இல்லாததால் அக்குழந்தை பராமரிக்கப்படவில்லை என உணர்ந்த ஆசிரியை ஒரு தாயாக மாறி அம்மாணவியைச் சுத்தம் செய்து, சுயமாக வேலைகள் செய்வும் கற்றுக்கொடுத்தார்.

அன்னையில்லா வீடு வீடல்ல.ஒரு வீடு சுத்தமாகவும் நேர்த்தியாகவும் இருக்கிறது என்றால் அது கண்டிப்பாக தாயின் செயல்தான். தாய், தானும் சுத்தமாய் இருப்பாள். தன் குடும்பத்தையும் அவ்வாறே பேணுவாள். சராசரி பெண்களே இவ்வாறிருக்க, இவ்வுலகை பாவமாசிலிருந்து சுத்தீகரிக்க வந்த இறைமகனின் தாய் எவ்வளவு மாசுமறுவற்றவராய் இருந்திருப்பார்?


இன்று நாம் அன்னை மரியாவின் அமலோற்பவப் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றோம். இவ்விழா தொடக்கத்தில் பல்வேறு பெயர்களில் கொண்டாப்பட்டு வந்தாலும் 1854 ஆம் ஆண்டு டிசம்பர் 8 நாள்தான் திருத்தந்தை ஒன்பதாம் பத்திநாதர் ‘மரியாவின் அமலோற்பவப் பெருவிழா’ என்ற பெயரில் கொண்டாட அதிகாரப் பூர்வமாக அறிவித்தார். மேலும் அவர் தான் எழுதிய Ineffabilis Deus என்ற மடலில் “மனுக்குல மீட்பரான இயேசு கிறிஸ்துவின் பயன்களை முன்னிட்டு கன்னிமரி கருவான நொடிப்பொழுதிலேயே எல்லாம் வல்ல இறைவனது அருளாலும் சலுகையாலும் ஜென்மப் பாவமாசு அணுகாதவளாய்த் தோன்றினார்” என்று குறிப்பிட்டு அமலோற்பவியான கன்னி மரியா என்ற விசுவாசப் பிரகடனத்தை அறிவித்தார்.

திருத்தந்தையின் அறிவிப்பை உறுதிசெய்யும் வகையில் 1858 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் நாள் பிரான்சு நாட்டில் உள்ள லூர்து நகரில் பெர்னதத் என்ற பதினான்கு வயது சிறுமிக்குக் காட்சி கொடுத்த மரியா ‘நாமே அமல அற்பவம்’ என்று அறிவித்தார். அன்றிலிருந்து இன்றுவரை மரியா அமலோற்பவி என்பதை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 8 நாள் மரியாவின் அமலோற்பவப் பெருவிழாவைக் கொண்டாடி வருகின்றோம். இந்த நேரத்தில் இவ்விழா உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்ப்போம.

"தாய் வயிற்றில் உருவாகும் முன்னே உன்னை தேர்ந்துகொண்டேன்" என்ற கடவுளின் வார்த்தைகளை இறைவாக்கினர் எரேமியாவின் அழைத்தலில் நாம் காண்கிறோம். பல சமயங்களில் இவ்வார்த்தைகளை நம் வாழ்வோடு ஒப்பிட்டு அழைத்தலின் மேன்மையை தியானிப்பதும் உண்டு. இவ்வாறு கடவுள் தமக்கென தேர்ந்தெடுத்த ஒவ்வொருவரையும் தகுப்படுத்துகிறார்.தூய்மைப்படுத்துகிறர். இறைவாக்கினர் எசாயா இறைவார்த்தையை உரைக்குமாறு நெருப்பு கொண்டு அவர் நாவைத் தூய்மையாக்கினார் என விவிலியத்தில் நாம் வாசிக்கிறோம். அவ்வகையில் தன்னுடைய மகனை இவ்வுலகிற்கு கொணரத் தேர்ந்த்தெடுத்த அன்னை மரியாவை பாவத்திலிருந்து முழுதும் விலக்கிக் காத்தார் இறைவன். அத்தூய்மையின் அடையாளமே"அருள்நிறைந்தவரே வாழ்க"என்று வானதூதர் கூறிய வாழ்த்தொலி. இவ்வாழ்த்து அன்னையின் மாசற்ற தன்மையைச் சுட்டிக்காட்டுவதாய் அமைகிறது. அன்னை மரியாவும் தன்னுடைய மாசற்ற தன்மையை இறுதிவரைக் காத்துக்கொண்டார். "இதோ ஆண்டவருடைய அடிமை" என்று இறை உளத்திற்கு பணிந்த அவர்  தான் உருவான நாளிலிருந்து எவ்வித பாவசோதனையாலும் தூண்டப்படாதவராய் இருந்தார். 

திருமுழுக்கினால் பாவக்கறைகள் நீக்கப்பட்ட கடவுளின் குழந்தைகளான நாம் நம் அகத்தூய்மையை எவ்வாறு காத்துக்கொள்கிறோம் என சிந்திக்க அழைக்கப்பட்டுள்ளோம்

பல வேளைகளில் நாம் உலக மாயைகளில் சிக்கி, சுயநலம்,அன்பின்மை, பிறரை ஏற்றுக்கொள்ளாமை போன்ற பண்புகளால் நம்மையே மாசுபடுத்துகிறோம். 

மாசற்றோராகவும் தூயோராகவும் நாம் வாழவேண்டும் என்பது தந்தையின் விருப்பம் என இரண்டாம் வாசகத்தில் வாசிக்கிறோம். எனவே மாசற்ற அன்னை இறுதிவரை மாசற்றவளாய் இருந்து இறைமகனைத் தாங்கியது போல நாமும் நம்மைத் தூய்மைப் படுத்தி நம் இதயத்தால் இயேசுவைக் கருத்தரிக்கவும் அவரை நம்முடன் வாழும் அனைவருக்கும் வழங்கவும் நம்மை தயார் செய்வோம்.

இறைவேண்டலாலும்,

இறை திருஉளத்திற்குப் பணிந்து நற்காரியங்களில் ஈடுபடுவதாலும், உலக நாட்டங்களைத் தவிர்ப்பதாலும் நம் தூய்மையைக் காத்துக்கொள்ள முயல்வோம்.தவறி வீழ்ந்தாலும் மனம்மாறி அருட்சாதனங்களின் உதவியோடு மீண்டும் எழுவோம். அதற்காக இறைவேண்டல் செய்வோம்.


 இறைவேண்டல் 

தூயவரான தந்தையே! உம் மகனை கருத்தரிக்க ஏற்றவராய் அன்னை மரியாவின் மாசற்ற தன்மையைக் காத்தீர். எங்களையும் தூய்மையாக்கி அன்னை மரியாவைப் போல இயேசுவை எங்கள் இதயத்தில் சுமக்க அருள் தாரும்.

அமல உற்பவ அன்னையே மாசற்ற தாயே நாங்களும் உம்மைப் போல மாசற்றவர்களாய் வாழத் துணை செய்யும்.

ஆமென்.

அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...