திருவருகைக்காலம் 2ஆம் வாரம் - வெள்ளி
முதல் வாசகம்
என் கட்டளைகளுக்குச் செவிசாய்த்திரு.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 48: 17-19
இஸ்ரயேலின் தூயவரும் உன் மீட்பருமான ஆண்டவர் கூறுவது இதுவே: உன் கடவுளாகிய ஆண்டவர் நானே! பயனுள்ளவற்றை உனக்குக் கற்பிப்பவரும் செல்லவேண்டிய வழியில் உன்னை நடத்துபவரும் நானே! என் கட்டளைக்குச் செவிசாய்த்திருப்பாயானால், உன் நிறைவாழ்வு ஆற்றைப் போலும், உன் வெற்றி கடல் அலை போலும், பாய்ந்து வந்திருக்கும். உன் வழிமரபினர் மணல் அளவாயும், உன் வழித்தோன்றல்கள் கதிர்மணிகள் போன்றும் இருந்திருப்பர்; அவர்கள் வெட்டி வீழ்த்தப்பட்டிரார்; அவர்கள் பெயர் என் திருமுன்னின்று அழிக்கப்பட்டிராது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 1: 1-2. 3. 4,6 (பல்லவி: யோவா 8: 12)பல்லவி: ஆண்டவரே, உம்மைப் பின்தொடர்பவர் வாழ்வின் ஒளியைக் கொண்டிருப்பார்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் வரவிருக்கிறார். அவரை எதிர்கொள்ளுங்கள்; ஏனெனில், அமைதியின் அரசர் அவரே. அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
மக்கள் திருமுழுக்கு யோவானுக்கும் செவிசாய்க்கவில்லை, மானிடமகனுக்கும் செவிசாய்க்கவில்லை.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 16-19
அக்காலத்தில்
இயேசு மக்கள் கூட்டத்துக்குக் கூறியது: “இத்தலைமுறையினரை யாருக்கு ஒப்பிடுவேன்? இவர்கள் சந்தை வெளியில் உட்கார்ந்து மறு அணியினரைக் கூப்பிட்டு, ‘நாங்கள் குழல் ஊதினோம்; நீங்கள் கூத்தாடவில்லை. நாங்கள் ஒப்பாரி வைத்தோம்; நீங்கள் மாரடித்துப் புலம்பவில்லை’ என்று கூறி விளையாடும் சிறுபிள்ளைகளுக்கு ஒப்பானவர்கள். எப்படியெனில், யோவான் வந்தபோது அவர் உண்ணவுமில்லை, குடிக்கவுமில்லை. இவர்களோ ‘அவன் பேய்பிடித்தவன்’ என்கிறார்கள். மானிட மகன் வந்துள்ளார்; அவர் உண்கிறார்; குடிக்கிறார். இவர்களோ, ‘இம் மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரி தண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்’ என்கிறார்கள். எனினும் ஞானம் மெய்யானது என்பதற்கு அதை ஏற்றுக் கொண்டோரின் செயல்களே சான்று.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
விமர்சனங்களை விலக்குவோமா?
ஒரு பங்கிலே அருட்பணியாளர் ஒருவர் பணிசெய்து வந்தார். இளம் வயதினராய் இருந்தார். துடிப்புடன் செயல்பட்டார். பல புதிய வழிமுறைகளைக் கொண்டுவந்தார். அவ்வூரிலே இருந்த ஒருசில பழமை விரும்பும் மனிதர்களுக்கு இவருடைய அணுகுமுறைகள் பிடிக்கவில்லை. எப்பொழுதும் குறைகூறிக்கொண்டே இருந்தனர். மற்றவர்களையும் அப்பணியாளருக்கு எதிராகத் தூண்டிவிட்டனர். இதனால் ஒருகட்டத்தில் மனம் உடைந்து போன அவர் இனிமேல் இம்மக்களுக்கு எதுவும் செய்யக்கூடாது எனத் தீர்மானித்தார். ஒருநாள் கடவுளின் சந்நிதியில் அமர்ந்து தியானித்துக் கொண்டிருக்கையில் அவருக்கு மனத்தெளிவு கிடைத்தது. "விமர்சனங்களுக்கு மதிப்பளித்திருந்தால் இயேசு வல்ல செயல்களைச் செய்திருக்க முடியாது. விமர்சனங்களைத் தூக்கிப் பிடித்திருந்தால் பல தலைவர்கள் தலைவர்களாய் மாறயிருக்க இயலாது. நானும் யாருடைய விமர்சனங்களையும் பொருட்படுத்தப் போவதில்லை. நற்காரியங்களைத் தொடர்ந்து செய்வேன்." அதன்பிறகு அவர் யாருடைய தேவையற்ற வார்த்தைகளுக்கும் மதிப்பளிக்கவில்லை. நாளடைவில் அவ்வாறு பேசியவர்களின் சப்தமும் அடங்கியது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இப்படிப்பட்ட மனநிலை கொண்டவர்களை இயேசு சாடுவதைக் காண்கிறோம். இயேசுவின் இவ்வார்த்தைகள் நமக்கும் பொருந்துகிறதா எனச் சோதித்தறிவது நமது கடமை. நாம் பெரும்பாலும் பிறருடைய விமர்சனங்களை எதிர்பார்க்கிறோம். அவை புகழ்ச்சிக்குரியவையாகவும் நேர்மறையாகவும் இருக்கவும் வேண்டும் என்பது நமது எதிர்பார்ப்பு. இவ்வெதிர்பார்ப்பு நிறைவேறாமல் போகும் போது நமது மனம் சோர்ந்து விடுகிறது. நாமும் முடங்கிப் போகிறோம். இது ஒருபுறமிருக்க நாமும் பலருக்கு எதிர்மறையான விமர்சனங்களைக் கொடுத்திருக்கிறோம். நம்முடைய விமர்சனங்களால் பிறரின் நற்செயல்களைத் தடுக்கிறோம்.பிறருடைய விமர்சனங்களைப் பெரிதாக மதிப்பதால் நாம் நற்செயல்கள் செய்வதிலிருந்து தடுக்கப்படுகிறோம்.
விமர்சனம் கொடுப்பதை யாராலும் நிறுத்த முடியாது. அது அவர்களுடைய சுதந்திரம். ஆனால் அந்த விமர்சனங்களால் பாதிக்கப்படுவதும், அதை சட்டை செய்யாமல் இருப்பதும் நம் கையில்தான் இருக்கிறது. ஒருவர் புகழ்வதால் நாம் ஏற்றம் பெறுவதுமில்லை. ஒருவர் இகழ்வதால் நாம் தாழ்ந்து போவதுமில்லை. இவ்வுண்மையை உணர்ந்தால் நாம் மனரீதியாக சமநிலையைக் கொண்டவர்களாய் வாழ்வில் முன்னேற முடியும். அதற்கு சிறந்த முன்மாதிரி நம் இயேசு. வல்ல செயல்களைக் கண்டு மக்கள் புகழ்ந்து ஓசான்னா பாடிய போதும், இவன் பெருந்தீனிக்காரன், கடவுளைப் பழிக்கிறான் எனக் கூறப்பட்ட போதும் சமநிலையைக் காத்தார். தொடர்ந்து நல்லதை மட்டுமே துணிச்சலாய் செய்தார்.
இன்றைய முதல்வாசகத்தில் நமக்கு பயனுள்ளவற்றைக் கற்பித்து நல்வழி நடத்துவதாக கடவுள் வாக்களிக்கிறார். தேவையற்ற நம் வளர்ச்சிக்கு உதவாத விமர்சனங்களை உதறிவிட்டு கடவுளின் வார்த்தையை இறைவேண்டல், விவிலியம் மற்றும் அனுபவம் மிகுந்த நம் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட மூத்தோர்களின் அறிவுரைகளின் வழியாகக் கேட்டு அதன்படி வாழும் பொழுது எத்தகைய எதிர்ப்பும் நற்செயல்கள் புரிவதிலிருந்து நம்மைத் தடுக்க முடியாது. நம்மை வளர்ச்சியின் பாதையிலிருந்து யாராலும் தடுக்க இயலாது. இத்தகையோராய் வாழவே நம் இறைவன் விரும்புகிறார். அதற்கான வரத்தை வேண்டுவோம்.
இறைவேண்டல்
எம்மை உம் வார்த்தைகளால் நல்வழியில் நடத்தும் இறைவா பிறருடைய வெற்று வார்த்தைகளுக்கு மதிப்பளித்து எம் வளர்ச்சியை நாங்களே முடக்கும் மனநிலையை எம்மிடமிருந்து அகற்றும். விமர்சனங்களால் நாங்களும் தாழாமல்,பிறரையும் தாழ்த்தாமல் தொடர்ந்து உம் வழியில் பயணிக்கும் அருள்தாரும் ஆமென்.
அருட்பணி. குழந்தை இயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️
Join with us 👇
Website: https://catholicvoicecv.blogspot.com
Youtube: https://www.youtube.com/channel/UCcgIiK1gUEqRCmTsc7ZjAoA
Youtube: https://www.youtube.com/channel/UCxBBHQAKIjii_MsZfIYNF5A
Facebook:https://www.facebook.com/Catholic-Voice-108151311955076
Instagram:https://www.instagram.com/invites/contact/?i=16mmdwn460k8p&utm_content=p6lg283
No comments:
Post a Comment