Friday, December 9, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (10-12-2022)

திருவருகைக்காலம் 2ஆம் வாரம் - சனி



முதல் வாசகம்

எலியா மீண்டும் வருவார்.

சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 48: 1-4, 9-11

இறைவாக்கினர் எலியா நெருப்புபோல் எழுந்தார்; தீவட்டிபோல் அவருடைய சொல் பற்றியெரிந்தது. மக்கள் மீது பஞ்சம் வரச் செய்தார்; தம் பற்றார்வத்தால் அவர்களை எண்ணிக்கையில் சிலராக்கினார். ஆண்டவருடைய சொல்லால் வானம் பொழிவதை நிறுத்தினார்; மும்முறை நெருப்பு விழச் செய்தார். எலியாவே, உம்முடைய வியத்தகு செயல்களில் நீர் எத்துணை மாட்சிக்குரியவர்! உமக்கு இணையாய் யார் பெருமை பாராட்டக்கூடும்?

தீச்சூறாவளியில் நெருப்புக் குதிரைகள் பூட்டிய தேரில் நீர் எடுத்துக்கொள்ளப்பட்டீர். ஆண்டவருடைய சினம் சீற்றமாய் மாறுமுன் அதைத் தணிப்பதற்கும் தந்தையின் உள்ளத்தை மகனை நோக்கித் திருப்புவதற்கும் யாக்கோபின் குலங்களை மீண்டும் நிலைநிறுத்துவதற்கும் குறித்த காலங்களில் நீர் கடிந்து கொள்வீர் என்று எழுதப்பட்டுள்ளது. உம்மைக் கண்டவர்களும் உமது அன்பில் துயில் கொண்டவர்களும் பேறுபெற்றோர். நாமும் வாழ்வது உறுதி.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 80: 1,2b. 14-15. 17-18 (பல்லவி: 3)

பல்லவி: கடவுளே, உமது முக ஒளியைக் காட்டி எம்மை மீட்டருளும்.

1
இஸ்ரயேலின் ஆயரே, செவிசாயும்! யோசேப்பை மந்தையென நடத்திச் செல்கின்றவரே! கெருபுகளின் மீது வீற்றிருப்பவரே, ஒளிர்ந்திடும்!
2b
உமது ஆற்றலைக் கிளர்ந்தெழச் செய்து எம்மை மீட்க வாரும்! - பல்லவி

14
படைகளின் கடவுளே! மீண்டும் வாரும்! விண்ணுலகினின்று கண்ணோக்கிப் பாரும்; இந்தத் திராட்சைக் கொடிமீது பரிவு காட்டும்!
15
உமது வலக்கை நட்டுவைத்த கிளையை, உமக்கென நீர் வளர்த்த மகவைக் காத்தருளும்! - பல்லவி

17
உமது வலப்பக்கம் இருக்கும் மனிதரை உமது கை காப்பதாக! உமக்கென்றே நீர் உறுதிபெறச் செய்த மானிட மைந்தரைக் காப்பதாக!
18
இனி நாங்கள் உம்மைவிட்டு அகலமாட்டோம்; எமக்கு வாழ்வு அளித்தருளும்; நாங்கள் உமது பெயரைத் தொழுவோம். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 3: 4, 6

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்; மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

எலியா ஏற்கெனவே வந்துவிட்டார்; அவரை மக்கள் கண்டுணரவில்லை.

 மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 10-13

இயேசுவும் சீடர்களும் மலையிலிருந்து இறங்கி வந்தபோது சீடர்கள் அவரிடம், “எலியாதான் முதலில் வரவேண்டும் என்று மறைநூல் அறிஞர்கள் கூறுகிறார்களே, அது எப்படி?” என்று கேட்டார்கள். அவர் மறுமொழியாக, “எலியா வந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்தப் போகிறார் என்று கூறுவது உண்மையே. ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: எலியா ஏற்கெனவே வந்துவிட்டார். அவரை மக்கள் கண்டுணரவில்லை. மாறாக, தாங்கள் விரும்பியவாறெல்லாம் அவருக்குச் செய்தார்கள். அவ்வாறே மானிடமகனையும் அவர்கள் துன்புறுத்துவார்கள்” என்றார். திருமுழுக்கு யோவானைப் பற்றியே அவர் தங்களோடு பேசினார் என்பதை அப்பொழுது சீடர்கள் புரிந்துகொண்டார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


நம் வாழ்வுப் பாதையை சீர்ப்படுத்துவோமா?


இன்றைய இறைவார்த்தைகள் நமக்கு மீண்டுமாய் இறைவாக்கினர் எலியாவையும் அவருடைய மறுபிறப்பை போல கருதப்படுகிற திருமுழுக்கு யோவானையும் பற்றிக் கூறுகின்றன. முதல் வாசகமானது எலியா இறைவாக்கினரின் சிறப்பை எடுத்துக்கூறுவதாய் உள்ளது. அவர் நெருப்புக்கு ஒப்பிடப்படுகிறார். அவருடைய சொற்கள் தீவட்டிக்கு ஒப்பிடப்படுகிறது. நெருப்பு சுட்டெரிப்பதைப் போல ஆண்டவருடைய வார்த்தைகளை வல்லமையுடன் போதித்து போலி தெய்வங்களை வணங்கும் மக்களின் மனத்தைச் சுட்டெரித்து அவர்களை மனந்திருப்பச் செய்ய பெரிதும் உழைத்த இறைவாக்கினராய்த் திகழ்ந்தவர் எலியா. இறைவனிடம் கொண்டிருந்த பற்றுறுதியால் இயற்கையைக் கூட கட்டுப்படுத்தும் அளவுக்கு ஆற்றல் கொண்டிருந்தார் அவர். உண்மையான கடவுளிடமிருந்து விலகிச் சென்ற மக்களை மனம் மாறச்செய்து அவர்களின் வாழ்க்கைப் பாதையை செம்மையாக்கியவர். மனம் மாறிய தன் மகனை நோக்கி தந்தையின் மனம் திரும்பி வருவதைப் போல, கடவுள் அருளிய நாவன்மையால் பாவத்தில் வீழ்ந்து கிடந்த தன் மக்களை கடிந்து அவர்களை மனம்திருந்தச் செய்து கடவுளின் இரக்கத்தை மக்கள் பால் கொணர உழைத்தவர் தான் எலியா என அவருடைய புகழ் கூறப்பட்டுள்ளது.


திருவருகைக் காலத்தின் இரண்டாம் வாரத்தில் திருமுழுக்கு யோவானுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்த திருமுழுக்கு யோவான் எலியாவின் அவதாரமாக கருதப்படுகிறார். மெசியாவாகிய இயேசுவின்  வருகைக்காக மக்களின் மனத்தை, வாழ்வுப்பாதையை சீர்படுத்தும் உன்னதமான பணியை ஏற்று அதைச் சிறப்பாகச் செய்தவர்தான் திருமுழுக்கு யோவான். எலியாவைப் போன்ற வலிமையான பேச்சாற்றலால் மெத்தனப்போக்கில் வாழ்ந்த மக்களிடம் மனமாற்றத்தைத்  தூண்டி பாவ மன்னிப்புக்கான திருமுழுக்கைப் பெறத் தூண்டியவர் அவர். ஆனால் அவர் எலியாவின் மறுபிறப்பு என்பதை மக்கள் அறிந்து கொள்ளவில்லை. ஏன் மெசியா பெத்லகேமில் பிறப்பார், தாவீதின் வழிமரபில் பிறப்பார் என்று கணிக்க முடிந்த மறைநூல் வல்லுநர்களால் கூட இவர்தம் எலியா என்பதை உணர முடியவில்லை.


இவ்விருவரின் வாழ்க்கையும் நமக்குக் கூறும் செய்தி என்ன என்பதை இன்னும் சற்று ஆழமாகச் சிந்திப்போம். இருதினங்களுக்கு முன்புதான் இவர்களைப் போல துணிச்சலோடு தவறுகளைச் சுட்டிக்காட்டும் குணத்தையும் கடவுள் முன் தாழ்மையும் கொண்டு விண்ணரசில் பெரியவர்களாக வேண்டும் எனச் சிந்தித்தோம். இன்னும் ஆழமாகச் சென்று அவர்கள் இறைவனுக்காக பாதையைச் சீர்படுத்தியதைப் போல நாமும் அவருடைய வருகைக்காக நம் பாதையைச் செம்மையாக்குவதோடல்லாமல் நம்முடைய முன்மாதிரியான வாழ்க்கையால் மற்றவரின் வாழ்வுப்பாதையையும் சீர்படுத்த முயல வேண்டும். கடவுளின் பிள்ளைகளாக இயேசுவின் சீடர்களாக நமக்கு அளிக்கப்பட்டுள்ள மிகவும் சவாலான பணி இது.


இப்பணியைச் செய்ய முதலில் நாம் கடவுளோடு ஒன்றித்திருக்க வேண்டும். நம்முடைய வார்த்தைகள் கடவுளின் வார்த்தைகளாக மாற வேண்டும். பிறருக்கு ஆறுதல் அளிப்பதாக, நல்வழி காட்டுவதாக தேவைப்பட்டால்  நெருப்பு அனைத்தையும் புனிதமாக்குவதைப்போல புனிதமாக்கும் வார்த்தைகளாக மாற வேண்டும். வெறும் வார்த்தை ஜாலமாக இல்லாமல் கடவுளின் கனிவையும் இரக்கத்தையும் வெளிப்படுத்துவதாக அவை இருக்க வேண்டும். அது கடவுளிடம் இறைவேண்டலால் ஒன்றித்திருந்தால் மட்டுமே இயலும்.


இரண்டாவதாக நம் வாழ்வுப் பாதை சீர்மிகுந்ததாக இருக்க வேண்டும். கடவுளுக்கு முன்னுரிமை அளித்து, உலக மாயைகளான பணம்,பதவி,சுயநலம்,சிற்றின்ப ஆசைகள், நேரத்தை வீணாக்கும் பொழுது போக்குகள் இவற்றை எல்லாம் விலக்கி எடுத்துக்காட்டான வாழ்வு வாழ வேண்டும். உண்மை, நீதியை நம் சொல்லும் செயலும் எடுத்தியம்ப வேண்டும்.  நம் வாழ்வு கடவுன் பால் மற்றவரையும் ஈர்க்க வேண்டும்.


இவ்வகையான நம் வாழ்வுக்கு இவ்வுலகம் அங்கீகாரம் அளிக்காது. திருமுழுக்கு யோவானை உணராத இவ்வுலகம் , இயேசுவை ஏற்றுக்கொள்ளாத இவ்வுலகம், இன்னும் பல தலைவர்களையும் நல்லவர்களையும் ஏற்றுக்கொள்ளாத இவ்வுலகம் நிச்சயம் நம்மையும் ஏற்றுக்கொள்ளாது. அவற்றைப் பொருட்படுத்தாது வாழப் பழகிக்கொள்ள வேண்டும். நம்முடைய இக்கிறிஸ்தவ வாழ்வு ஒரு எதிர்நீச்சல் தான். இதை உணர்த்தியவர்கள் தான் எலியாவும் திருமுழுக்கு யோவானும். எனவே இறைமகனின் வருகைக்காக காத்திருக்கும் நாம் நம் வாழ்வுப்பாதையை சீர்ப்படுத்தும் பணியில் முழுமுயற்சியுடன் ஈடுபடுவோம். கடவுள் நம் வாழ்வில் நிச்சயம் பயணிப்பார்.


 இறைவேண்டல்

நீதியின் ஆண்டவரே!உம்மை நம்பிய அடியவர்களுக்கு வல்லமையைத் தருபவரே! நாங்களும் உம்மேல் பற்றுறுதி கொண்டு வாழ்ந்து, தேவையற்ற அனைத்தையும் வெறுத்து எம் வாழ்வுப் பாதையைச் சீரமைக்க வரம் தாரும். ஆமென்.

அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...