பொதுக்காலம் 3ஆம் வாரம் - திங்கள்
முதல் வாசகம்
பலரின் பாவங்களைப் போக்கும் பொருட்டு, ஒரே முறை தம்மைத்தாமே பலியாகக் கொடுத்த கிறிஸ்து, மீண்டும் ஒரு முறை தோன்றுவார்.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 9: 15, 24-28
சகோதரர் சகோதரிகளே,
இயேசு புதிய உடன்படிக்கையின் இணைப்பாளராய் இருக்கிறார். கடவுளால் அழைக்கப்பட்டவர்கள் அவரால் வாக்களிக்கப்பட்ட, என்றும் நிலைக்கும், உரிமைப் பேற்றைப் பெறுவதற்கென்று இந்த உடன்படிக்கை உண்டானது. இது ஒரு சாவின்மூலம் ஏற்படுத்தப்பட்டது. இந்தச் சாவு முந்திய உடன்படிக்கையை மீறிச் செய்த குற்றங்களிலிருந்து மீட்பு அளிக்கிறது. அதனால்தான் கிறிஸ்து மனிதரின் கையால் அமைக்கப்பட்டதும் உண்மையான தூயகத்திற்கு முன்னடையாளமாய் இருப்பதுமான இவ்வுலகத் தூயகத்திற்குள் நுழையாமல் விண்ணுலகிற்குள்ளேயே நுழைந்திருக்கிறார். அங்கே இப்போது நம் சார்பாகக் கடவுளின் திருமுன் நிற்கிறார். தலைமைக் குரு விலங்குகளின் இரத்தத்துடன் ஆண்டுதோறும் தூயகத்திற்குள் செல்வார். அதற்கு மாறாக, கிறிஸ்து தம்மையே ஒரே முறை பலியாகக் கொடுத்தார். அதை மீண்டும் மீண்டும் செய்யவில்லை. அவ்வாறு செய்திருப்பாரென்றால், உலகம் தோன்றிய காலந்தொட்டு, அவர் மீண்டும் மீண்டும் துன்புற்றிருக்கவேண்டும். அதற்கு மாறாக, உலகம் முடியும் காலமான இப்போது தம்மையே பலியாகக் கொடுத்து, பாவங்களைப் போக்குவதற்காக ஒரே முறை உலகில் வெளிப்படுத்தப்பட்டார்.
மனிதர் ஒரே முறை சாவுக்கு உட்படுகின்றனர். பின்னர் இறுதித் தீர்ப்பு வருகிறது. இதுவே அவர்களுக்கென உள்ள நியதி. அவ்வாறே, கிறிஸ்துவும் பலரின் பாவங்களைப் போக்கும் பொருட்டு ஒரே முறை தம்மைத்தாமே பலியாகக் கொடுத்தார். அவர் மீண்டும் ஒரு முறை தோன்றுவார். ஆனால், பாவத்தின் பொருட்டு அல்ல, தமக்காகக் காத்திருப்பவர்களுக்கு மீட்பு அருளும் பொருட்டே தோன்றுவார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 98: 1. 2-3ab. 3cd-4. 5-6 (பல்லவி: 1a)பல்லவி: அவரது வியத்தகு செயல்களுக்காய், புதியதோர் பாடல் பாடுங்கள்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
2 திமொ 1: 10bஅல்லேலூயா, அல்லேலூயா! நம் மீட்பராகிய இயேசு கிறிஸ்து சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
சாத்தானின் அழிவு.
✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 22-30
அக்காலத்தில்
எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர், “இவனைப் பெயல்செபூல் பிடித்திருக்கிறது” என்றும் “பேய்களின் தலைவனைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான்” என்றும் சொல்லிக் கொண்டிருந்தனர்.
ஆகவே இயேசு அவர்களைத் தம்மிடம் வரவழைத்து அவர்களுக்கு உவமைகள் வாயிலாகக் கூறியது: “சாத்தான் சாத்தானை எப்படி ஓட்ட முடியும்? தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் நிலைத்து நிற்க முடியாது. தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த வீடும் நிலைத்து நிற்க முடியாது. சாத்தான் தன்னையே எதிர்த்து நின்று பிளவுபட்டுப் போனால் அவன் நிலைத்து நிற்க முடியாது. அதுவே அவனது அழிவு. முதலில் வலியவரைக் கட்டினாலன்றி அவ்வலியவருடைய வீட்டுக்குள் நுழைந்து அவருடைய பொருள்களை எவராலும் கொள்ளையிட முடியாது; அவரைக் கட்டி வைத்த பிறகுதான் அவருடைய வீட்டைக் கொள்ளையிட முடியும்.
உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தூய ஆவியாரைப் பழித்து உரைப்பவர் எவரும் எக்காலத்திலும் மன்னிப்புப் பெறார்; அவர் என்றென்றும் தீராத பாவத்திற்கு ஆளாவார். ஆனால் மக்களுடைய மற்றப் பாவங்கள், அவர்கள் கூறும் பழிப்புரைகள் அனைத்தும் அவர்களுக்கு மன்னிக்கப்படும்.” ‘இவனைத் தீய ஆவி பிடித்திருக்கிறது’ என்று தம்மைப்பற்றி அவர்கள் சொல்லி வந்ததால் இயேசு இவ்வாறு கூறினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பிறர் பெயரைக் கெடுக்காத நல் மனம் பெற்றுக்கொள்வோம்!
உலகில் வாழும் எல்லாரும் நல்லவர்களல்ல. அதே போல எல்லாரும் தீயவர்களுமல்ல. ஒரு மனிதன் பலம் பலவீனம் என இரண்டையுமே பெற்றிருப்பான். இதுதான் எதார்த்தம். எனவே யாரையும் ஒன்றிரண்டு செயல்களின் அடிப்படையில் நல்லவன் என்றும் தீயவன் என்றும் நாம் தீர்ப்பிட்டுவிட முடியாது. அதேபோல நமக்கு பிடித்திருந்தால் அவர்களுக்கு நற்பெயரும் பிடிக்கவில்லை என்றால் வேறுபெயரும் நாம் கொடுத்துவிட முடியாது.
இத்தகைய வாழ்வின் எதார்த்தமான கருத்துக்களை நமக்கு வழங்குகின்றது இன்றைய நற்செய்தி வாசகம். இயேசு பேய்களால் பேய்களை ஓட்டுகிறார். அவரிடம் இருப்பது தீய சக்தி என பரிசேயர் விமர்சிப்பதை நாம் வாசிக்கிறோம்.
இரண்டு நாட்களுக்கு முன்பாக இயேசு இறைபணியில் ஆர்வமாய் இருந்ததை பார்த்து மக்கள் அவரை அதிகமாகப் பின்தொடர்ந்ததைக் கண்ட சிலர் அவர் மதிமயங்கி இருக்கிறார் என பெயர்கொடுத்தனர் என்பதை வாசித்தோம். அதன் தொடர்ச்சியாக இன்று பேய்பிடித்தவன் என்ற பெயரையும் பெறுகிறார் இயேசு. இயேசு ஏன் பிறரால் இவ்வாறு விமர்சிக்கப்படுகிறார் என சிந்தித்தால் பரிசேயர்களின் பொறாமை எண்ணம் தான் அடிப்படைக் காரணமாக இருந்திருக்கிறது என்பது தெரியவருகிறது. பொறாமை எண்ணம் இயேசுவின் பெயரையே கெடுக்கும் அளவுக்கு அவர்களைத் தூண்டுகிறது. ஆனால் இயேசு இதையெல்லாம் பொருட்படுத்தவில்லை.
அன்புக்குரியவர்களே! நம்வாழ்வில் இத்தகைய நிகழ்வுகள் பல நடந்தேறியிருக்கலாம். முதலாவதாக நமது பெயர் கெடுக்கப்பட்டிருக்கலாம். அந்நிகழ்வுகள் நமக்கு பல மனவேதனைகளைத் தந்திருக்கலாம். இனிமேலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கும் போது இயேசுவின் மனநிலையில் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோமா?
இரண்டாவதாக பிறர் பெயரை நாம் கெடுத்திருக்கலாம். அச்செயல் வழியாக பிறரை நாம் காயப்படுத்தி இருக்கலாம். இனிமேலும் அத்தகைய எண்ணங்கள் நம்முள் எழாமல் இருக்க நம்மை பக்குவப்படுத்த நாம் தயாராக இருக்கிறோமா? சிந்திப்போம். பிறர் பெயரைக் கெடுப்பது கொலை செய்வதற்கு சமம். அத்தகைய எண்ணங்களை அறவே களைந்திட ஆண்டவரிடம் அருள் வேண்டுவோம்.
இறைவேண்டல்
அன்பு இறைவா பிறர் பெயரைக்கெடுக்கும் பரிசேய மனநிலையைக் களைய அருள்தாரும். ஆமென்.
அருட்பணி. குழந்தை இயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️
Join with us 👇
Website: https://catholicvoicecv.blogspot.com
Youtube: https://www.youtube.com/channel/UCcgIiK1gUEqRCmTsc7ZjAoA
Youtube: https://www.youtube.com/channel/UCxBBHQAKIjii_MsZfIYNF5A
Facebook:https://www.facebook.com/Catholic-Voice-108151311955076
Instagram:https://www.instagram.com/invites/contact/?i=16mmdwn460k8p&utm_content=p6lg283
No comments:
Post a Comment