Monday, August 22, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (23-08-2022)

 முதல் வாசகம்



திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-3ய, 14-17

சகோதரர் சகோதரிகளே! நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வருகையைப் பற்றியும் அவரோடு நாம் ஒன்று கூடுவதைப் பற்றியும் உங்களுக்கு நாங்கள் கூற விழைவது: ஆண்டவருடைய நாள் வந்துவிட்டது என, இறைவாக்காகவோ அருளுரையாகவோ நாங்கள் எழுதிய திருமுகத்தின் செய்தியாகவோ யாராவது சொன்னால், நீங்கள் உடனே மனங்கலங்கி நிலைகுலைய வேண்டாம்; திகிலுறவும் வேண்டாம். எவரும் உங்களை எவ்வகையிலும் ஏமாற்ற இடம் கொடாதீர். நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மாட்சியை நீங்கள் அடையும் பொருட்டே, நாங்கள் அறிவித்த நற்செய்தியின் வழியாக அவர் உங்களை அழைத்தார்.

ஆகவே அன்பர்களே! எங்கள் வாய்மொழி வழியாகவோ திருமுகம் வழியாகவோ அறிவிக்கப்பட்ட முறைமைகளைப் பற்றிக்கொண்டு அவற்றில் நிலையாயிருங்கள். நம் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவும், நம்மீது அன்புகூர்ந்து தம் அருளால் நிலையான ஆறுதலையும் எதிர்நோக்கையும் அளித்த நம் தந்தையாம் கடவுளும் உங்கள் உள்ளங்களுக்கு ஊக்கமளித்து, நல்லதையே சொல்லவும் செய்யவும் உங்களை உறுதிப்படுத்துவார்களாக!


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல்



திபா 96: 10. 11-12ய. 12டி-13

பல்லவி: மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க ஆண்டவர் வருகின்றார்.


10 வேற்றினத்தாரிடையே கூறுங்கள்: ஆண்டவரே ஆட்சி செய்கின்றார்;

பூவுலகு உறுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது; அது அசைவுறாது;

அவர் மக்களினங்களை நீதி வழுவாது தீர்ப்பிடுவார். -பல்லவி


11 விண்ணுலகம் மகிழ்வதாக் மண்ணுலகம் களிகூர்வதாக்

கடலும் அதில் நிறைந்துள்ளனவும் முழங்கட்டும்.

12ய வயல்வெளியும் அதில் உள்ள அனைத்தும் களிகூரட்டும். -பல்லவி


12டி அப்பொழுது, காட்டில் உள்ள அனைத்து மரங்களும் அவர் திருமுன் களிப்புடன் பாடும்.

13 ஏனெனில் அவர் வருகின்றார்; மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க வருகின்றார்;

நிலவுலகை நீதியுடனும் மக்களினங்களை உண்மையுடனும் அவர் தீர்ப்பிடுவார். -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது. அல்லேலூயா.


மத்தேயு 23:23-26

பொதுக்காலம் 21 வாரம் செவ்வாய்


நற்செய்தி வாசகம்



மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 23: 23-26


அக்காலத்தில் இயேசு கூறியது: ஹஹவெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! நீங்கள் புதினா, சோம்பு, சீரகம் ஆகியவற்றில் பத்தில் ஒரு பங்கைப் படைக்கிறீர்கள். ஆனால் திருச்சட்டத்தின் முக்கிய போதனைகளாகிய நீதி, இரக்கம், நம்பிக்கை ஆகியவற்றைக் கடைப் பிடிக்காமல் விட்டுவிடுகிறீர்கள். இவற்றைக் கண்டிப்பாய்க் கடைப் பிடிக்கவேண்டும். அவற்றையும் விட்டுவிடக் கூடாது. குருட்டு வழிகாட்டிகளே! நீங்கள் பருகும்போது கொசுவை வடிகட்டி அகற்றுகிறீர்கள். ஆனால் ஒட்டகத்தையோ விழுங்கிவிடுகிறீர்கள். வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில் தூய்மையாக்குகிறீர்கள். ஆனால் அவற்றின் உட்புறத்தையோ கொள்ளைப் பொருள்களாலும் தன்னல விருப்புகளாலும் நிரப்புகிறீர்கள். குருட்டுப் பரிசேயரே, முதலில் கிண்ணத்தின் உட்புறத்தைத் தூய்மையாக்குங்கள். அப்பொழுது அதன் வெளிப்புறமும் தூய்மையாகும்.''


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


-------------------------


ஏ அப்பா என்னா திட்டு…

மத்தேயு 23:23-26


இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துதுகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.


அன்புமிக்கவர்களே! இன்றைய நற்செய்தியைப் படிக்கும் போது நமக்கு இரண்டு விதமான உணா்வுகள் வெளிப்படுகின்றன. (1) இயேசு ரொம்ப திட்டுவதைப் பார்க்கும் போது ரொம்ப "ஷாக்கா" இருக்கிறது (2)மறைநூல் அறிஞர்கள், பரிசேயர்கள் அடிக்கடி இயேசுவை குற்றம் சாட்டினர். பல தொல்லைகளைக் கொடுத்துக்கொண்டே இருந்தனர். இயேசு சரியாக நேரத்தைப் பயன்படுத்துகிறார். இது அவர்களுக்கு தேவைதான் என்ற உணர்வும் ஏற்படுகிறது.


இயேசு ஏன் திட்டுகிறார்?. அன்பு, இரக்கம் மிகுந்த கடவுள் ஏன் இப்படி திட்டுகிறார் என்பதை நாம் பார்க்கும்போது அதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை. நாம் இரண்டு காரணங்களை மிகவும் அழுத்தமாக சொல்ல முடியும்.


1. கடைப்பிடிக்கவில்லை…. திட்டு வாங்கினார்கள்

கடவுளின் முக்கியமான போதனை நீதி, இரக்கம், பரிவு இவற்றைக் கடைப்பிடித்து கடவுளை நேசிப்பது போல அடுத்தவரையும் அன்பு செய்ய வேண்டும் என்பது. ஆனால் இவர்கள் இதையெல்லாம் கடைப்பிடிக்காமல் கடவுளுக்கு புதினா, சோம்பு, சீரகம் இவற்றில் பத்தில் ஒரு பங்கைப் படைப்பதிலே கவனமாய் இருந்தார்கள். கவனாய் கடைப்பிடிக்க வேண்டிய கடவுளின் போதனைகளை காற்றிலே விட்டுவிட்டார்கள். ஆகவே இயேசு வெளிடேக்காரர்களே உங்களுக்கு கேடு என திட்டுகிறார்.


2. தூய்மையாக்கவில்லை… திட்டு வாங்கினார்கள்

கடவுளின் போதனை உட்புறத்தை தூய்மையாக வைக்க வேண்டும் என்பது. ஆனால் இவர்கள் அதற்கு எதிராக வெளிப்புறத்தை தூய்மையாக்கினார்கள். உட்புறத்தை கொள்ளைப் பொருள்களாலும் தன்னல விருப்புகளாலும் நிரப்பினார்கள். ஆகவே இயேசுவுக்கு கோபம் கொப்பளிக்கிறது. நன்றாக திட்டு வாங்குகிறார்கள்.


அன்புமிக்கவர்களே! நம்மை பரிசோதித்து பார்க்கும் நல்ல நாள் இது. நம்முடைய செயல்பாடுகளை பார்க்கும் போது இயேசு திட்டுவாரா? அகமகிழ்வாரா? நாமும் பரிசேயர்கள், மறைநூல் அறிஞர்கள் போல் செயல்பட்டால் மாற்றம் பெறும் நாள் இது. மாறுவோம். மகிழ்ச்சியை மனதில் என்றும் அழியாமல் விதைப்போம்.


மனதில் கேட்க…

1. கடவுளை ஆர்வமாக வழிபடுகிற நான், அவர் சொல்வதை மிகவும் ஆசையாக கடைப்பிடிக்கிறேனா?

2. வெளிப்புறத்தை சுத்தாமாக வைக்கும் நான் அதை விட மிகவும் சுத்தமாக உட்புறத்தை வைக்கலாமே?


மனதில் பதிக்க…

உங்கள் விண்ணகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள் (மத் 5:48)

அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா

--------------------------------------------------------------



நிதானமும், பொறுமையும்

 2தெசலோனிக்கர் 2: 1 – 3, 14 – 17


திருத்தூதர் பவுல் இதற்கு முன்பு, தெசலோனிக்கருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த “இயேசுவின் இரண்டாம் வருகை“ பற்றி ஒரு சிலர் தவறாக புரிந்து கொள்கிறார்கள். அதனைத் தெளிவுபடுத்தும் நோக்கில் இந்த பகுதி அமைந்திருக்கிறது. இயேசு கிறிஸ்து மக்களை தீர்ப்பிடுவதற்கு தயாராக இருக்கிறார், உடனடியாக அவர்களுக்கு தோன்றி, மக்களை தீர்ப்பிடுவார் என்கிற எண்ணத்தில் ஒரு சிலர் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள், அல்லது கடவுள் தங்களுக்கு வெளிப்படுத்தியது போல, அதையே மற்றவர்களுக்கும் அறிவிக்கிறார்கள். இதற்கான பதிலை, பவுலடியார் இங்கு தெளிவுபடுத்துகிறார்.

தன்னுடைய திருமுகம் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது, அதனை தெளிவுபடுத்துவது, சரிப்படுத்துவது தன்னுடைய கடமை என்பதை உணர்ந்து, பவுலடியார் இதனை எழுதுகிறார். நம்பப்படுகிற தவறான செய்தியை, சரி செய்ய வேண்டும் என்கிற உணர்வு அவருக்கு அதிகமாக இருக்கிறது. பவுலடியார் நினைத்திருந்தால், அந்த தவறுக்கும் தனக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றோ, அல்லது தான் அப்படி சொல்லவில்லை என்றோ, அல்லது தான் சொன்னதை எப்படியாவது நியாயப்படுத்த வேண்டும் என்றோ நினைக்கவில்லை. மாறாக, நடந்தது நடந்து விட்டது, அதனை எப்படி சரிப்படுத்துவது? என்பதில், மிகக்கவனமாக பிரச்சனையை கையாள்கிறார். தான் செய்த தவறை நியாயப்படுத்த வேண்டும் என்கிற எண்ணம் அவருடைய எழுத்துக்களில் துளியும் இல்லை. மாறாக, மக்களுடைய நம்பிக்கை வாழ்விற்கு தன்னுடைய வார்த்தைகள் எந்தவிதத்திலும் பாதகமாக அமைந்து விடக்கூடாது என்பதில் தான், அவர் உறுதியாக இருக்கிறார்.

நம்முடைய வாழ்வில் நாம் தவறு செய்வது தவிர்க்க முடியாத ஒன்று. தவறு செய்த பிறகும் அந்த தவறை நியாயப்படுத்த வேண்டும் என்கிற எண்ணம் தான், இன்று நம்மில் பல பேருக்கு இருக்கிறது. செய்கிற தவறை நியாயப்படுத்துவதை விட்டுவிட்டு, அதனை எப்படி சரி செய்யலாம்? என்று ஆக்கபூர்வமாக சிந்திப்பதற்கு இந்த பகுதி நமக்கு அழைப்புவிடுக்கிறது. இந்த அழைப்பினை ஏற்று, நம்முடைய வாழ்விலும் ஆக்கபூர்வமாக சிந்திப்பதற்கு முயல்வோம்.

- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்


--------------------------------------------------


வீண் ஆடம்பரங்களைத் தவிர்ப்போம்


யூதர்கள் தூய்மைக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கக்கூடியவர்கள். உண்ணும் உணவிலும், உடலிலும், பயணத்திலும் தூய்மையை கருத்தூன்றி கடைப்பிடிக்கக்கூடியவர்கள். இது சுகாதாரம் சார்ந்ததற்கான அல்ல, சமயம் தொடர்பானது. தாங்கள் தூய்மையான இனம் என்ற எண்ணம், யூதர்களுக்கு அதிகமாக இருந்தது. எனவே, பல தூய்மைச்சடங்குகள் அவர்கள் பின்பற்றுவதற்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்த தூய்மைச்சடங்குகளில் இருக்கும் போலித்தனத்தை இயேசு விரிவாக விளக்குகிறார்.

திராட்சை இரசம் யூதர்களின் உணவில் கலந்துவிட்ட ஒன்று. அந்த திராட்சை இரசத்தை தயாரித்து, மற்றவர்கள் பருக கொடுக்கிறபோது கூட, தூய்மைச்சடங்கு சம்பிரதாயத்தை, இம்மியளவு பிசகாமல் அவர்கள் கடைப்பிடித்தார்கள். கண்ணுக்குத் தெரியதாக பூச்சிகள் அதில் இருக்கக்கூடாது என்பதற்காக, அதனை வடிகட்டி மற்றவர்களுக்குக் கொடுத்தார்கள். வெளிப்படையாகச் சொன்னால், இந்தளவுக்கு அவர்கள் இருக்க வேண்டும் என்று சட்டம் அவர்களை எதிர்பார்க்கவில்லை. ஆனாலும், அவர்கள் சம்பிரதாயதச் சட்டங்களை அவ்வளவு நேர்த்தியாகச் செய்தார்கள். அதேவேளையில், அந்த சட்டங்கள் காட்டும் மனித மதிப்பீடுகளை ஒரு பொருட்டாக எண்ணாது வாழ்ந்தனர். இதனைத்தான் இயேசு ஒட்டகம் என்கிற உருவகத்தோடு பொருத்திப் பேசுகிறார். ”கொசுவை வடிகட்டி அகற்றுகிறீர்கள். ஆனால், ஒட்டகத்தையோ விழுங்குகிறீர்கள்” என்று சொல்வது இதன் அடிப்படையில் தான்.

எது தேவையோ அதனை கண்ணும் கருத்துமாகச் செய்வதற்கு நாம் முயற்சி எடுப்பது கிடையாது. ஆனால், எது தேவையில்லையோ, அதனைச் செய்வதற்கு நாம் அதிகமான முயற்சி, தேவையில்லாத முயற்சியை எடுக்கிறோம். கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கொண்டாடும் திருவிழாக்கள் இதற்கு சிறந்த சான்றாக இருக்கிறது. வீண் ஆடம்பரங்களுக்கும், பகட்டிற்கும் முக்கியத்துவம் கொடுக்கிறோம். இரக்கச்செயல்களைக் காட்டுவதற்கு ஒதுங்குகிறோம். இப்படிப்பட்ட முரண்பாடாக வாழ்வைத்தவிர்த்து, இயேசு காட்டும் வழியில் நடப்போம்.


அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

---------------------------------------------------


வாழ்க்கைமுறையை மாற்றிக்கொள்வோம்


யூதர்களின் தூய்மைச்சடங்கு சட்டத்தில் எவையெல்லாம் தூய்மையானவை, எவையெல்லாம் தூய்மையற்றவை என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. கொசுவும், ஒட்டகமும் தூய்மையற்ற விலங்குகள் வகைகளைச் சார்ந்தது. தூய்மையற்றது எதுவும் உடலுக்குள் சென்றுவிடக்கூடாது என்பதற்காக, யூதர்கள் திராட்சை இரசத்தைக் குடிப்பதற்கு முன்பாக, அதை வடிகட்டினர். இதன் மூலமாக தூய்மையற்றது என்று கருதப்படும் அனைத்துமே அதில் தங்கிவிடும் என்பதுதான் அவர்களின் நம்பிக்கை.

கண்ணுக்குத் தெரியாத கொசுவை வடிகட்டுவதில் இவ்வளவு அக்கறை எடுத்துக்கொண்ட யூதர்கள் மிகப்பெரிய விலங்காகிய ஒட்டகத்தை அப்படியே விழுங்கிவிடுகிறார்கள் என்று சொல்வது, அவர்களின் வெளிவேடத்தையும், அர்த்தமில்லாத செயல்பாட்டையும் தெளிவாகப் படம்பிடித்துக்காட்டுகிறது. தாங்கள் செய்வதையெல்லாம் ஏதோ மிகப்பெரிய செயல்பாடாகக் காட்டிக்கொள்ள விரும்பும் பரிசேயர்கள், உண்மையில் தங்களின் வெளிவேடத்தைத்தான் வெளிப்படுத்துகிறார்கள். வெளிவேடத்தை கடவுள் விரும்புகிறவர் அல்ல. வெறும் அடையாளங்களையும் கடவுள் விரும்புகிறவர் அல்ல. உண்மையான உள்ளத்தைத்தான் கடவுள் விரும்புகிறார்.

நமது வழிபாடுகள், பக்திமுயற்சிகள், வழிபாட்டு முறைகள் வெறும் வெற்று அடையாளங்களாகத்தான் இருக்கிறது. அடையாளங்கள் காட்டும் அர்த்தத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காது, அடையாளத்தைப் பிடித்துக்கொண்டிருப்பது, பரிசேயர்களின் வெளிவேடத்திற்கு ஒப்பாகும். அப்படி இருந்தால், நமது வாழ்க்கைமுறையை மாற்றிக்கொள்ள முன்வருவோம்.


அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------


ஏழைகளுக்கு உதவுவது இறைவனுக்குக் கொடுப்பது


இணைச்சட்டம் 14: 22 சொல்கிறது: “ஆண்டுதோறும் உன் நிலத்தில் விளையும் எல்லாப்பலன்களிலும் பத்திலொரு பாகத்தைப் பிரித்தெடு”. இந்த பாகம் கடவுளுக்கு நன்றியின் அடையாளமாகக் கொடுக்கப்படும் காணிக்கையாகும். அதாவது பெரும் விளைச்சலின் ஒரு பகுதி கடவுளுக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்பது தான் இந்த சட்டத்தின் பொருள்.

புதினா, சோம்பு, சீரகம் போன்றவை விளைச்சல் என்றே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாதவை. அதன் தேவையும் மிகுதியானது அல்ல. இவற்றிலிருந்தும் பத்தில் ஒரு பங்கு கொடுக்கப்பட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு கிடையாது தான். இருந்தபோதிலும், அப்படி தேவையே இல்லாத சாதாரண விளைச்சலிலிருந்து கூட, இந்த பரிசேயர்கள் பத்தில் ஒரு பங்கை கடவுளுக்கு கொடுத்தார்கள். எந்த அளவுக்கு நுண்ணியமாக இம்மியளவு பிசகாமல் பரிசேயர்கள் சட்டங்களை உடும்புப்பிடியாக பிடித்து வாழ்ந்தார்கள் என்பதற்கு இதுவே மிகச்சிறந்த சாட்சி. அதே வேளையில் எவற்றைக் கடைப்பிடிக்க வேண்டுமோ, எவற்றை வாழ்க்கையில் மதிப்பீடுகளாகக் கொள்ள வேண்டுமோ, அவைகளை, அதாவது அன்பு, நீதி, இரக்கம், நம்பிக்கையை, காற்றிலே பறக்க விட்டுவிட்டனர். இப்படிப்பட்ட போலித்தனமான வாழ்வை , இயேசு கடுமையாகச்சாடுகிறார்.

நாமும் கூட ஆலயம் கட்ட, புனிதர்களின் சுரூபத்தை அலங்கரிக்க எத்தனை இலட்சங்கள் வேண்டுமானாலும் கொடுக்கத்தயாராக இருக்கிறோம். ஆனால், நம்மில் எத்தனை பேர் ஏழைகள், எளியவர்களுக்காக உதவத்தயாராக இருக்கிறோம்?. ஏழைகளைச்சேராத எதுவும் இயேசுவுக்கு சொந்தமாக முடியாது.


அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------


உட்புறத் தூய்மை!


இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

மறைநூல் அறிஞரையும், பரிசேயரையும் இயேசு மீண்டும் ஒருமுறை சாடுவதை இன்றைய வாசகம் மூலம் வாசிக்கின்றோம். இன்று அவர்களை வெளிவேடக்காரர்கள் என்று இயேசு அழைக்கிறார். நேற்றைய வாசகத்தில் புனித நத்தனியேலை இயேசு கபடற்றவர் என்று பாராட்டியதை வாசித்தோம். அந்தக் கபடற்ற தன்மைக்கு நேர் எதிரானதுதான் வெளிவேடம். உள் ஒன்று வைத்து வெளி ஒன்று பேசுவது, செயல்படுவது.

பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும் வெளித் தோற்றத்திற்கு நேர்மையானவர்களாக, இறைப் பற்று மிகுந்தவர்களாகக் காட்சி தந்தனர். ஆனால், அவர்களின் உள்ளத்தில் கொள்ளைப் பொருள்களாலும், தன்னல விருப்புகளாலும் நிரப்பினர் என்று இயேசு கூறுகிறார். எனவே, உட்புறத்தை, உள்ளத்தை முதலில் தூய்மையாக்குங்கள் என்று அறிவுரை பகர்கின்றார்.

நாமும் நமது உள்ளத்தைக் கொஞ்சம் ஆய்வு செய்வோம். கொள்ளைப் பொருள்களும், தன்னல விருப்புகளும் அங்கே இருக்கின்றனவா என்று சோதிப்போம். பிறருடைய பொருள்களை, உடமைகளை அடைய விரும்புவது கொள்ளைப் பொருள். பிறர்மீது அக்கறை கொள்ளாமல், நமது இன்பம், ஆசைகள், இவை பற்றியே அதிக ஆர்வம் கொள்வது தன்னல விருப்பு. இவை இரண்டும் நம் மனதில் இருக்கும்வரை நமது உட்புறம் தூய்மையற்றதாகவே இருக்கும். நமது வெளி அடையாளங்கள்- வழிபாடுகள், செபங்கள், தோற்றங்கள் - அனைத்தும் வெளி வேடமாகவே இருக்கும்.

மன்றாடுவோம்; தூய்மையின் ஊற்றே இயேசுவே, எனது வாழ்வும் பரிசேயர்களைப் போல வெளிவேடம் நிறைந்ததாக இருப்பதற்காக மனம் வருந்துகிறேன். மன்னிப்புக் கோருகிறேன். எனது உள்ளத்திலும் கொள்ளைப் பொருள்களும், தன்னல விருப்புகளும் நிறைந்து உள்ளன. அவற்றை அகற்றி உமது அன்பால் நிரப்பி, என்னை தூய்மைப்படுத்தியருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.


-- அருட்தந்தை குமார்ராஜா


-------------------------

 

''இயேசு, 'வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில் தூய்மையாக்குகிறீர்கள். ஆனால் அவற்றின் உட்புறத்தையோ கொள்ளைப் பொருள்களாலும் தன்னல விருப்புகளாலும் நிரப்புகிறீர்கள்' என்றார்'' (மத்தேயு 23:25)


அன்பார்ந்த இணையதள நண்பர்களே!


-- நாடகத்தில் ஒருவர் அரசராகவோ, அமைச்சராகவோ, படைத்தலைவராகவோ, ஏவலாளாகவோ நடிக்கலாம். ஆனால் நாடகம் முடிந்ததும் அவர் தன்னுடைய அன்றாட வாழ்க்கை முறைக்குத் திரும்பி விடுவார். இயேசு குறிப்பிடுகின்ற ''வெளிவேடம்'' இதுபோன்றதுதான். பரிசேயரும் மறைநூல் அறிஞரும் மக்கள்முன் நல்லவர்கள்போல் நடிக்கிறார்களே தவிர உண்மையிலேயே நல்லவர்களாகச் செயல்படவில்லை என இயேசு குற்றம் சாட்டுகிறார். எல்லாப் பரிசேயரும் மறைநூல் அறிஞரும் வேண்டுமென்றே மக்களைத் திசைதிருப்பினார்கள் என்றோ, அவர்களை ஏய்த்துப் பிழைத்தார்கள் என்றோ நாம் கூற முடியாது. ஆனால் பொதுவாக அவர்கள் தாங்கள் நல்லதையே செய்வதாக நினைத்துக் கொண்டு, உண்மையில் தங்களையே ஏமாற்றிக்கொண்டிருந்தார்கள் என இயேசு சுட்டிக்காட்டுகிறார். சட்ட நுணுக்கங்களைத் துல்லியமாகக் கடைப்பிடித்த அவர்கள் உண்மையிலேயே கனமான காரியங்களைக் கவனிக்காமல் விட்டுவிட்டார்கள். தூய்மை சார்பான சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் நிறைவேற்றினால் போதும், கடவுளுக்கு ஏற்புடையவர்களாகிவிடலாம் என நினைத்த அவர்கள் உண்மையிலேயே கருத்தில் கொள்ளவேண்டிய முதன்மைகளைப் புறக்கணித்துவிட்டுத் தங்களை நல்லவர்கள் என நினைத்துக்கொண்டார்கள். வெளித்தூய்மையில் கண்ணும் கருத்துமாக இருந்த அவர்கள் உண்மையான தூய்மை என்பது மனித இதயத்தை மாசின்றிக் காப்பதில் அடங்கும் என்பதை மறந்துவிட்டார்கள். ஆக, மனித உள்ளத்தில் அன்பும் இரக்கமும் பரிவும் பாசமும் நீதியும் நேர்மையும் இல்லாவிட்டால் அது மாசடைந்து பாழ்பட்ட வீடு போல ஆகிவிடும் என இயேசு உணர்த்துகிறார் (மத் 23:25).

-- மனிதரை மாசுபடுத்துகின்றவை உள்ளத்திலிருந்து எழுகின்ற தீய சிந்தனைகளும் அவற்றிலிருந்து பிறக்கின்ற தீய செயல்களுமே என இயேசு வழங்குகின்ற போதனை நமக்கும் பொருந்தும் (காண்க: மத் 15:18-19). எனவே நாம் தூய சிந்தனையை நம்மில் வளர்த்திட வேண்டும். எண்ணத்தில் தூய்மையிருந்தால் நாம் சிந்திக்கின்ற பாணிகளும் நலமாக இருக்கும். நம் சிந்தனையிலிருந்து எழுகின்ற செயல்களும் நல்லவையாக இருக்கும். வெளிச் சடங்குகளைத் துல்லியமாக நிறைவேற்றிவிட்டால் கடவுளுக்கு ஏற்புடையவராகிவிடலாம் என நினைப்பவர்கள் தங்களையே ஏமாற்றிக் கொள்கிற பரிசேயருக்கு ஒப்பானவர்களே. மாறாக, உள்ளத்தில் தூய்மையை வளர்த்துக்கொண்டு, ''நீதி, இரக்கம், நம்பிக்கை'' ஆகிய ''முக்கிய போதனைகளை'' நாம் கடைப்பிடித்தால் (மத் 23:23) கடவுளுக்கு ஏற்புடையவர்களாக வாழ்வோம்.


மன்றாட்டு

இறைவா, நேர்மையான உள்ளத்தை எங்களில் உருவாக்கியருளும்.


--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

-------------------------'


''நீங்கள் பருகும்போது கொசுவை வடிகட்டி அகற்றுகிறீர்கள்.

ஆனால் ஒட்டகத்தையோ விழுங்கிவிடுகிறீர்கள்'' (மத்தேயு 23:24)


அன்பார்ந்த இணையதள நண்பர்களே!


-- கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனதுபோல என்பது தமிழ்ப் பழமொழி. இயேசுவோ ஒட்டகத்தையும் கொசுவையும் இணைத்து வேடிக்கையாகப் பேசுகிறார். திருச்சட்டத்தின் நுணுக்கங்களை அலசி ஆய்ந்த மறைநூல் அறிஞரும் பரிசேயரும் சின்னஞ்சிறு காரியங்களில் மகா கவனம் செலுத்திவிட்டு, உண்மையிலேயே பெரிய, கனமான காரியங்களை மிக எளிதாக ஒதுக்கிவைத்துவிட்டதை இயேசு சுட்டிக்காட்டுகிறார். யூத சட்டப்படி, ஒட்டகத்தின் இறைச்சி தீட்டான ஒன்று; எனவே அதை உண்ணலாகாது (காண்க: லேவியர் 11:4). திராட்சை இரசத்தைப் பருகும்போது அதில் பூச்சிகள் விழுந்திருந்தால் அவற்றின் தீட்டுக் காரணமாகச் சட்டத்தை மீற நேரிடும் என்பதால் பானத்தை வடிகட்டும் பழக்கம் இருந்தது. எனவே, தீட்டான சின்னஞ்சிறு கொசுவை (காண்க: லேவி 11:41) அறியாமல் விழுங்கிவிடாதிருக்க எவ்வளவோ கவனமாயிருக்கின்ற ''வெளிவேடக்காரர்கள்'' தீட்டான விலங்குகளிலேயே மிகப் பெரிய விலங்காகிய ஒட்டகத்தை விழுங்குவதில் மட்டும் கவனக்குறைவாய் இருப்பது வேடிக்கையல்லவா என இயேசு பகடையாகப் பேசுவது வாசித்து இன்புறத்தக்க பகுதி.


-- ''நீதி, இரக்கம், நம்பிக்கை'' ஆகியவையே உண்மையிலேயே முக்கியமான போதனை (மத் 23:23) என இயேசு குறிப்பிடுவது கருதத்தக்கது. இது மீக்கா இறைவாக்கினர் நூலில் அழகாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது (''ஓ மானிடா...நேர்மையைக் கடைப்பிடித்தலையும், இரக்கம் கொள்வதில் நாட்டத்தையும் உன் கடவுளுக்கு முன்பாக தாழ்ச்சியோடு நடந்துகொள்வதையும் தவிர வேறு எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கின்றார்?'' - மீக்கா 6:8). தெளிந்த பார்வையோடு இவ்வழியில் நடக்கும்போது நாம் உண்மையிலேயே அன்புக் கட்டளையை நிறைவேற்றுபவர் ஆவோம். மாறாக, நீதியும் இரக்கமும் நம்பிக்கையும் இல்லாத மனிதர் நல்லது செய்வதுபோல வெளியே காட்டிக்கொண்டாலும் அவர்கள் ''குருட்டு வழிகாட்டிகளுக்கு'' ஒப்பாகவே இருப்பர். ஆக, நம் வாழ்வில் முதன்மை பெற வேண்டிய விழுமியங்களை இயேசு அடையாளம் காட்டுகின்றார். அவற்றைக் கடைப்பிடித்து ஒழுக நாம் அழைக்கப்படுகிறோம்.


மன்றாட்டு

இறைவா, முதன்மையானவற்றை உள்ளத்தில் ஏற்று வாழ்ந்திட அருள்தாரும்.


--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

Sunday, August 21, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (22-08-2022)


பொதுக்காலத்தின் 21 ஆம் திங்கள் 

மு.வா: 2 தெச: 1: 1-5, 11b-12

ப.பா:  திபா 96: 1-2. 2b-3. 4-5

ந.வா:மத்: 23: 13-22


 கடவுள் நம் வாழ்வில் உயர்வானவரா?


அவ்வூரிலே திருவிழா. ஒருபுறம் திருப்பலி நடந்து கொண்டிருந்தது. மறுபுறம் அசனவிருந்து தயாராகிக் கொண்டிருந்தது. திருப்பலியில் பங்கேற்றுக்கொண்டிருந்த பலருக்கு கவனம் எல்லாம் தயாராகிக் கொண்டிருந்த உணவின்மேல்தான். இதை ஆரம்பத்திலிருந்தே கண்காணித்துக் கொண்டிருந்தார் அப்பங்கின் அருட்பணியாளர். அவர் மறையுரையின் போது மக்களிடம் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அதை மக்கள் பொருட்படுத்த வில்லை. இறுதியில் நற்கருணை விருந்தில் கூட பங்கு பெறாமல் பலர் அசன விருந்துக்கு முந்திக்கொண்டு வரிசையாக பயபக்தியுடன் நின்றுகொண்டிருந்தனர் மக்கள். பலியான இறைவனைவிட  உணவு முக்கியமாகிவிட்டது. 


இன்றைய நற்செய்தியில் இத்தகைய மனநிலையைக் கொண்ட யூதர்களை இயேசு சாடுவதைக் காண்கிறோம். அவர்களைப் பொறுத்தவரை பலிபீடம் உயர்ந்ததல்ல. மாறாக அப்பலிப்பீடத்தின் மேல் வைக்கப்பட்ட காணிக்கைப் பொருட்கள் உயர்வாகத் தோன்றியது. அதைப்போலவே கோயில் உயர்ந்ததல்ல. அக்கோயிலுக்குள் உறையும் தெய்வம் பெரியவரல்ல. ஆனால் அக்கோவில் உள்ள தங்கம் தான் உயர்வானது. இன்று இவ்வாசகத்தைத் தியானிக்கும் வேளையில் நமது மனநிலை எவ்வாறு உள்ளது என்பதையும் நாம் வருங்கால சந்ததிக்கு எதைக் கற்றுக் கொடுக்கிறோம் என்பதையும் சிந்திக்க அழைக்கப்படுகிறோம். ஏனெனில் இயேசு பரிசேயர் மறைநூல் வல்லுநர்களைப் பார்த்து கூறும் "குருட்டு வழிகாட்டிகளே "வெளிவேடக்காரரே, குருட்டு மடையரே " என்ற அடைமொழிகள் நமக்கும் பொருந்திவிடக் கூடாது அல்லவா?


எனவே நமது அன்றாட வாழ்க்கையில் வெளிவேடம் இல்லாத வாழ்வை வாழ முயற்சி செய்வோம். இறைவனுக்கும் அவரின் வார்த்தைக்கும் முக்கியத்துவம் கொடுத்து சாட்சியமுள்ள வாழ்வை வாழ முயற்சி செய்வோம். நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களை குடும்ப உறுப்பினர்களை இறைவழியில் வழிநடத்துவோம்.  இந்த உலகம் சார்ந்த பேருக்கும் புகழுக்கும் பணத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்காமல், இறையாட்சியை மதிப்பீடுகளுக்கு முக்கியத்துவம் கடவுளின் பார்வையில் பெயர் பெற்றவர்களாக வாழ முயற்சி செய்வோம். கடவுள் தான் வாழ்வின் உயர்வானவர் என்று மனநிலையில் பயணிப்போம். அதற்கு தேவையான அருளை வேண்டுவோம்.


 இறைவேண்டல் 

அன்பு இறைவா!  வாழ்வில் உம்மையே உயர்வாக மதிக்கும் மனதைத் தந்து ஆசிர்வதியும்.  ஆமென்.


அருட்பணி.குழந்தைஇயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர் 

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு 

சிவகங்கை மறைமாவட்டம்

Wednesday, August 4, 2021

18th Ordinary Week Wednesday - பொதுக்காலம் 18ஆம் வாரம் - புதன்

 பொதுக்காலம் 18ஆம் வாரம் - புதன்



Download pdf 

முதல் வாசகம்


விருப்பிற்குரிய நாட்டை அவர்கள் அசட்டை செய்தார்கள்.

எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 13: 1-2, 25-33, 14: 1, 26-30, 34-35


அந்நாள்களில், ஆண்டவர் மோசேயிடம், “இஸ்ரயேல் மக்களுக்கு நான் கொடுக்கும் கானான் நாட்டை உளவு பார்க்க ஆள்களை அனுப்பு; மூதாதையர் குலம் ஒவ்வொன்றிலிருந்தும் அவர்களுள் தலைவனாயிருக்கும் ஒருவனை நீ அனுப்ப வேண்டும்” என்றார். நாற்பது நாள்கள் நாட்டை உளவு பார்த்த பின் அவர்கள் திரும்பி வந்தனர். அவர்கள் பாரான் பாலைநிலத்தில் காதேசில் இருந்த மோசேயிடமும் ஆரோனிடமும் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பிலுள்ள அனைவரிடமும் வந்தனர்; அவர்களுக்கும் முழு மக்கள் கூட்டமைப்புக்கும் அவர்கள் செய்தி கொண்டு வந்தனர்; நாட்டின் கனியையும் அவர்களுக்குக் காட்டினர். அவர்கள் மோசேயிடம் கூறியது: நீர் எங்களை அனுப்பிய நாட்டுக்கு நாங்கள் சென்று வந்தோம்; அதில் பாலும் தேனும் வழிந்தோடுகிறது; இதுவே அதன் கனி. ஆயினும் அந்நாட்டில் வாழும் மக்கள் வலிமை மிக்கவர்கள்; நகர்கள் அரண் சூழ்ந்தவை, மிகப் பெரியவை; அத்துடன் ஆனாக்கின் வழி மரபினரையும் நாங்கள் அங்குக் கண்டோம்; அமலேக்கியர் நெகேபு நாட்டில் வாழ்கின்றனர்; இத்தியர், எபூசியர், எமோரியர் ஆகியோர் மலைநாட்டில் வாழ்கின்றனர்; கானானியர் கடலருகிலும் யோர்தானை ஒட்டியும் வாழ்கின்றனர். காலேபு மோசே முன் மக்களை உடனே அமைதிப்படுத்தி, “நாம் உடனடியாகப் போய் நாட்டைப் பிடித்துக்கொள்வோம்; ஏனெனில் நாம் அதை எளிதில் வென்றுவிட முடியும்” என்றார். ஆனால் அவருடன் சென்றிருந்த ஆள்கள், “நாம் அம்மக்களுக்கு எதிராகப் போக முடியாது; ஏனெனில் அவர்கள் நம்மிலும் வலிமை மிக்கவர்கள்” என்றனர். இவ்வாறு அவர்கள் உளவு பார்த்து வந்த நாட்டைப் பற்றித் தவறான தகவலை இஸ்ரயேல் மக்களுக்குக் கொண்டு வந்தனர்; அவர்கள் கூறியது: உளவு பார்க்கும்படி நாங்கள் சென்றிருந்த நாடு தன் குடிமக்களையே விழுங்குவதாய் இருக்கிறது; அதில் நாங்கள் கண்ட மனிதர் அனைவரும் மிகவும் நெடிய உருவத்தினர்; அத்துடன் நெப்பிலிமில் இருந்து வருகிற ஆனாக்கின் புதல்வராகிய அரக்கரையும் கண்டோம்; எங்கள் பார்வையில் நாங்கள் வெட்டுக்கிளிகள் போன்றிருந்தோம்; அவர்களுக்கும் நாங்கள் அவ்வாறே காணப்பட்டோம். உடனே மக்கள் கூட்டமைப்பு முழுவதும் உரத்தக் குரலில் புலம்பிற்று; மக்கள் அன்றிரவு அழுதுகொண்டே இருந்தனர். மேலும் ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும் கூறியது: இப்பொல்லாத மக்கள் கூட்டமைப்பினர் எதுவரை எனக்கு எதிராக முறுமுறுப்பர்? எனக்கு எதிராக முறுமுறுக்கும் இஸ்ரயேல் மக்களின் முறுமுறுப்புகளை நான் கேட்டேன். நீங்கள் அவர்களிடம் சொல்ல வேண்டியது, “ஆண்டவர் கூறுவதாவது: என் உயிர் மேல் ஆணை! என் செவிகளில் படுமாறு நீங்கள் சொன்னதையே நான் உங்களுக்குச் செய்வேன்; எனக்கெதிராக முறுமுறுத்த, இருபது வயதும் அதற்கு மேலும் எண்ணப்பட்ட மொத்தத் தொகையினரான நீங்கள் இப்பாலை நிலத்தில் பிணங்களாக விழுவீர்கள். நீங்கள் குடியிருக்கும்படி நான் வாக்களித்த நாட்டிற்குள் எப்புன்னே மகன் காலேபையும் நூன் மகன் யோசுவாவையும் தவிர ஒருவருமே வரமாட்டீர்கள். நீங்கள் நாட்டை உளவு பார்த்த நாள்களின் எண்ணிக்கைப்படி ஒரு நாளைக்கு ஒரு ஆண்டாக, நாற்பது நாள்களுக்கும் நாற்பது ஆண்டுகள் நீங்கள் குற்றப் பழியைச் சுமப்பீர்கள்; என் வெறுப்பையும் அறிந்துகொள்வீர்கள். ஆண்டவராகிய நானே பேசியுள்ளேன்; எனக்கு எதிராக ஒன்று கூடிய இப்பொல்லாத மக்கள் கூட்டமைப்பு முழுவதற்கும் இதை நான் கட்டாயம் செய்து முடிப்பேன்; இப்பாலை நிலத்தில் அவர்கள் முற்றிலும் அழிந்தொழிந்து அங்கேயே மடிவார்கள்” என்றார்.


வாசகர் : ஆண்டவரின் அருள்வாக்கு

எல் : இறைவனுக்கு நன்றி


பதிலுரைப் பாடல்    திபா 106: 6-7ய. 13-14. 21-22. 23 

பல்லவி: உம் மக்கள்மீது இரங்கும்போது ஆண்டவரே என்னை நினைவுகூரும்!


6 எங்கள் மூதாதையரின் வழிநடந்து, நாங்களும் பாவம் செய்தோம்; குற்றம் புரிந்தோம்; தீமை செய்தோம்.

7ய எங்கள் மூதாதையர் எகிப்தில் நீர் செய்த வியத்தகு செயல்களைப் பற்றிச் சிந்திக்கவில்லை. - பல்லவி

13 ஆயினும், அவர் செய்தவற்றை அவர்கள் விரைவிலேயே மறந்துவிட்டார்கள்; அவரது அறிவுரைக்காக அவர்கள் காத்திருக்கவில்லை.

14 பாலை நிலத்தில் அவர்கள் பெருவிருப்புக்கு இடங்கொடுத்தார்கள். பாழ்வெளியில் அவர்கள் இறைவனைச் சோதித்தார்கள். - பல்லவி

21 தங்களை விடுவித்த இறைவனை மறந்தனர்; எகிப்தில் பெரியன புரிந்தவரை மறந்தனர்;

22 காம் நாட்டில் அவர் செய்த வியத்தகு செயல்களை மறந்தனர்; செங்கடலில் அவர் செய்த அச்சுறுத்தும் செயல்களையும் மறந்தனர். - பல்லவி

23 ஆகையால், அவர்களை அவர் அழித்து விடுவதாகக் கூறினார்; ஆனால், அவரால் தேர்ந்துகொள்ளப்பட்ட மோசே, அவர்முன் உடைமதில் காவலர்போல் நின்று அவரது கடுஞ்சினம் அவர்களை அழிக்காதவாறு தடுத்தார். - பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி   லூக் 7: 16

அல்லேலூயா, அல்லேலூயா! நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார். அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்


அம்மா, உமது நம்பிக்கை பெரிது.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 21-28


அக்காலத்தில், இயேசு தீர், சீதோன் ஆகிய பகுதிகளை நோக்கிச் சென்றார். அவற்றின் எல்லைப் பகுதியில் வாழ்ந்துவந்த கானானியப் பெண் ஒருவர் அவரிடம் வந்து, “ஐயா, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்; என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள்” எனக் கதறினார். ஆனால் இயேசு அவரிடம் ஒரு வார்த்தைகூட மறுமொழியாகச் சொல்லவில்லை. சீடர்கள் அவரை அணுகி, “நமக்குப் பின்னால் கத்திக்கொண்டு வருகிறாரே, இவரை அனுப்பிவிடும்” என வேண்டினர். அவரோ மறுமொழியாக, “இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன்” என்றார். ஆனால் அப்பெண் அவர்முன் வந்து பணிந்து, “ஐயா, எனக்கு உதவியருளும்” என்றார். அவர் மறுமொழியாக, “பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல” என்றார். உடனே அப்பெண், “ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே” என்றார். இயேசு மறுமொழியாக, “அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்” என்று அவரிடம் கூறினார். அந்நேரம் அவர் மகளின் பிணி நீங்கியது.


அ.ப.: ஆண்டவரின் அருள்வாக்கு

எல்.: கிறிஸ்துவே, உமக்குப் புகழ்


Tuesday, August 3, 2021

18th Ordinary Week Tuesday - பொதுக்காலம் 18ஆம் வாரம் - செவ்வாய்

 பொதுக்காலம் 18ஆம் வாரம் - செவ்வாய்



Download pdf 

முதல் வாசகம்


ஏன் என் அடியான் மோசேக்கு எதிராகப் பேச நீங்கள் அஞ்சவில்லை?

எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 12: 1-13


அந்நாள்களில், மோசே எத்தியோப்பியப் பெண்ணை மணந்திருந்தார்; அவர் மணந்திருந்த எத்தியோப்பியப் பெண்ணை முன்னிட்டு மிரியாமும் ஆரோனும் அவருக்கு எதிராகப் பேசினர். அவர்கள், “ஆண்டவர் உண்மையில் மோசே வழியாக மட்டுமா பேசியுள்ளார்? அவர் எங்கள் வழியாகவும் பேசவில்லையா?” என்றனர். ஆண்டவர் இதனைக் கேட்டார். பூவுலகின் அனைத்து மாந்தரிலும் மோசே சாந்தமிகு மானிடராய்த் திகழ்ந்தார். உடனே ஆண்டவர் மோசே, ஆரோன், மிரியாம் ஆகியோரிடம், “நீங்கள் மூவரும் சந்திப்புக் கூடாரத்தருகே வாருங்கள்” என்றார். அவர்கள் மூவரும் வந்தனர். மேகத் தூண் ஒன்றில் ஆண்டவர் இறங்கி வந்து கூடார வாயிலருகே நின்று, ஆரோனையும் மிரியாமையும் அழைத்தார்; அவர்கள் இருவரும் முன் வந்தனர். அவர் கூறியது: “என் வார்த்தைகளைக் கேளுங்கள்; உங்களுக்குள் இறைவாக்கினன் ஒருவன் இருந்தால் ஆண்டவராகிய நான் ஒரு காட்சியின் வழியாக அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன். கனவில் அவனோடு பேசுவேன். ஆனால் என் அடியான் மோசேயோடு அப்படியல்ல் என் வீடு முழுவதிலும் அவனே நம்பிக்கைக்குரியவன்; நான் அவனோடு பேசுவது மறைபொருளாக அல்ல, நேர்முகமாகவும் தெளிவாகவும் இருக்கும். ஆண்டவர் உருவையும் அவன் காண்கிறான். பின்னர் ஏன் என் அடியான் மோசேக்கு எதிராகப் பேச நீங்கள் அஞ்சவில்லை?” மேலும் ஆண்டவரின் சினம் அவர்கள்மேல் மூண்டது; அவர் அகன்று சென்றார். கூடாரத்தின் மேலிருந்து மேகம் அகன்றதும் மிரியாமை பனி போன்ற வெண்மையான தொழுநோய் பீடித்தது. ஆரோன் மிரியாம் பக்கம் திரும்பவே அவள் தொழுநோயாளியாய் இருக்கக் கண்டார். ஆரோன் மோசேயிடம், “என் தலைவரே! அறிவீனமாக நாங்கள் செய்த பாவத்தை எங்கள்மேல் சுமத்த வேண்டாம்; தாயின் வயிற்றிலிருந்து செத்துப் பிறந்த அரைகுறைக் குழந்தை போன்று இவள் ஆகாதிருக்கட்டும்” என்றார். மோசே ஆண்டவரிடம் முறையிட்டு, “கடவுளே, இவளைக் குணமாக்க வேண்டுகிறேன்” என்றார்.


வாசகர் : ஆண்டவரின் அருள்வாக்கு

எல் : இறைவனுக்கு நன்றி


பதிலுரைப் பாடல்     திபா 51: 1-2. 3-4. 10-11 

பல்லவி: கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்.


1 கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும்.

2 என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும். - பல்லவி

3 ஏனெனில், என் குற்றங்களை நான் உணர்கின்றேன்; என் பாவம் எப்போதும் என் மனக்கண்முன் நிற்கின்றது.

4 உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்; உம் பார்வையில் தீயது செய்தேன்; எனவே, உம் தீர்ப்பினால் உம் நீதியை வெளிப் படுத்தியுள்ளீர்; உம் தண்டனைத் தீர்ப்பில் நீர் மாசற்றவராய் விளங்குகின்றீர். - பல்லவி

10 கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை, என்னுள்ளே உருவாக்கியருளும்.

11 உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும். - பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி யோவா 1: 49டி

அல்லேலூயா, அல்லேலூயா! "ரபி, நீர் இறைமகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்.” அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்


நானும் கடல்மீது நடந்து உம்மிடம் வர ஆணையிடும்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 22-36


அக்காலத்தில், இயேசு கூட்டத்தினரை அவ்விடத்திலிருந்து அனுப்பிக்கொண்டிருந்தார். அப்பொழுது சீடரையும் உடனே படகேறித் தமக்கு முன் அக்கரைக்குச் செல்லுமாறு அவர் கட்டாயப்படுத்தினார். மக்களை அனுப்பிவிட்டு, அவர் தனியே இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலையின் மேல் ஏறினார். பொழுது சாய்ந்த பிறகும் அங்கே அவர் தனியே இருந்தார். அதற்குள் படகு கரையிலிருந்து நெடுந்தொலை சென்றுவிட்டது. மேலும் எதிர்க்காற்று அடித்துக் கொண்டிருந்ததால் அலைகளால் படகு அலைக்கழிக்கப்பட்டது. இரவின் நான்காம் காவல் வேளையில் இயேசு அவர்களை நோக்கிக் கடல்மீது நடந்து வந்தார். அவர் கடல்மீது நடப்பதைக் கண்ட சீடர் கலங்கி, “ஐயோ, பேய்” என அச்சத்தினால் அலறினர். உடனே இயேசு அவர்களிடம் பேசினார். “துணிவோடிருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள்” என்றார். பேதுரு அவருக்கு மறுமொழியாக, “ஆண்டவரே, நீர்தாம் என்றால் நானும் கடல்மீது நடந்து உம்மிடம் வர ஆணையிடும்” என்றார். அவர், “வா” என்றார். பேதுருவும் படகிலிருந்து இறங்கி இயேசுவை நோக்கிக் கடல்மீது நடந்து சென்றார். அப்பொழுது பெருங்காற்று வீசியதைக் கண்டு அஞ்சி அவர் மூழ்கும்போது, “ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்” என்று கத்தினார். இயேசு உடனே தம் கையை நீட்டி அவரைப் பிடித்து, “நம்பிக்கை குன்றியவனே, ஏன் ஐயம் கொண்டாய்?” என்றார். அவர்கள் படகில் ஏறியதும் காற்று அடங்கியது. படகில் இருந்தோர் இயேசுவைப் பணிந்து, “உண்மையாகவே நீர் இறைமகன்” என்றனர். அவர்கள் மறு கரைக்குச் சென்று கெனசரேத்துப் பகுதியை அடைந்தார்கள். இயேசுவை யாரென்று அறிந்துணர்ந்த அவ்விடத்து மக்கள் சுற்றுப்புறமெங்கும் ஆள் அனுப்பி எல்லா நோயாளர்களையும் அவரிடம் கொண்டு வந்தனர். அவரது மேலுடையின் ஓரத்தையாவது அவர்கள் தொட அனுமதிக்குமாறு அவரை வேண்டினர்; தொட்டவர் யாவரும் நலமடைந்தனர்.


அ.ப.: ஆண்டவரின் அருள்வாக்கு

எல்.: கிறிஸ்துவே, உமக்குப் புகழ்


18th Ordinary Week Monday - பொதுக்காலம் 18ஆம் வாரம் - திங்கள்

 பொதுக்காலம் 18ஆம் வாரம் - திங்கள்



Download pdf 


முதல் வாசகம்


நான் தனியாக இம்மக்கள் அனைவரையும் கொண்டு செல்லவே முடியாது.

எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 11: 4டி-15


இஸ்ரயேல் மக்கள் மீண்டும் அழுது கூறியது: “நமக்கு உண்ண இறைச்சி யார் தருவார்? நாம் எகிப்தில் செலவின்றி உண்ட மீன், வெள்ளரிக் காய், கொம்மட்டிக் காய், கீரை, வெங்காயம், வெள்ளைப் பூண்டு ஆகியவற்றின் நினைவு வருகிறது. ஆனால் இப்பொழுதோ நம் வலிமை குன்றிப் போயிற்று; மன்னாவைத் தவிர வேறெதுவும் நம் கண்களில் படுவதில்லையே!”


மன்னா கொத்துமல்லி விதை போன்றும் அதன் தோற்றம் முத்துப் போன்றும் இருந்தது. மக்கள் வெளியில் சென்று அதைச் சேகரித்தனர்; அரவைக் கல்லில் அரைத்தனர் அல்லது உரலில் போட்டு இடித்தனர்; பானைகளில் அதை வேக வைத்து அதில் அப்பங்கள் செய்தனர்; அதன் சுவை எண்ணெயில் செய்த அப்பங்களின் சுவையை ஒத்திருந்தது. இரவில், பாளையத்தின்மேல் பனி விழும்போது மன்னாவும் அதனுடன் விழுந்தது.


எல்லா வீடுகளிலும் இருந்த மக்களும் தம்தம் கூடார வாயிலில் இருந்து அழும் குரலை மோசே கேட்டார்; ஆண்டவரின் சினம் கொழுந்து விட்டெரிந்தது; மோசேக்கும் அது பிடிக்கவில்லை. மோசே ஆண்டவரிடம் கூறியது: “உம் அடியானுக்கு ஏன் இந்தக் கேடு? நீர் எனக்குக் கருணை காட்டாமல் இம்மக்களின் எல்லாப் பளுவையும் என்மேல் சுமத்தியது ஏன்? இம்மக்களையெல்லாம் நானா கருத்தரித்தேன்? நானா இவர்களைப் பெற்றெடுத்தேன்? ‘பாலுண்ணும் குழந்தையை ஏந்திச் செல்பவள் போன்று இவர்களை மார்போடு ஏந்தி, அவர்கள் மூதாதையருக்கு நான் வாக்களித்திருந்த நாட்டுக்குக் கொண்டு செல்’ என்று நீர் சொல்வானேன்? இம்மக்கள் அனைவருக்கும் கொடுக்கவேண்டிய இறைச்சிக்கு நான் எங்கு போவேன்? அவர்கள் எனக்கு முன் அழுது, ‘உண்ண எங்களுக்கு இறைச்சி தாரும்’ என்றும் கேட்கிறார்களே! நான் தனியாக இம்மக்கள் அனைவரையும் கொண்டு செல்லவே முடியாது; இது எனக்கு மிகப்பெரும் பளு. இப்படியே எனக்குச் செய்வீரானால் உடனே என்னைக் கொன்றுவிடும்; உம் பார்வையில் எனக்குத் தயை கிடைத்தால் இந்தக் கொடுமையை நான் காணாதிருக்கட்டும்.”


வாசகர் : ஆண்டவரின் அருள்வாக்கு

எல் : இறைவனுக்கு நன்றி


பதிலுரைப் பாடல்  திபா 81: 11-12. 13-14. 15-16 

பல்லவி: நமது வலிமையாகிய கடவுளை மகிழ்ந்து பாடுங்கள்.


11 என் மக்கள் என் குரலுக்குச் செவிசாய்க்கவில்லை; இஸ்ரயேலர் எனக்குப் பணியவில்லை.

12 எனவே, அவர்கள் தங்கள் எண்ணங்களின்படியே நடக்குமாறு, அவர்களின் கடின இதயங்களிடமும் அவர்களை விட்டுவிட்டேன். - பல்லவி

13 என் மக்கள் எனக்குச் செவிசாய்த்திருந்தால், இஸ்ரயேலர் நான் காட்டிய வழியில் நடந்திருந்தால், எவ்வளவோ நலமாயிருந்திருக்கும்.

14 நான் விரைவில் அவர்கள் எதிரிகளை அடக்குவேன், என் கை அவர்களின் பகைவருக்கு எதிராகத் திரும்பும். - பல்லவி

15 ஆண்டவரை வெறுப்போர் அவர்முன் கூனிக்குறுகுவர்; அவர்களது தண்டனைக் காலம் என்றென்றுமாய் இருக்கும்.

16 ஆனால், உங்களுக்கு நயமான கோதுமையை உணவாகக் கொடுப்பேன்; உங்களுக்கு மலைத் தேனால் நிறைவளிப்பேன். - பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி    மத் 4: 4டி

அல்லேலூயா, அல்லேலூயா! மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர். அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்


இயேசு அப்பங்களைப் பிட்டுச் சீடர்களிடம் கொடுத்தார். சீடர்களும் மக்களுக்குக் கொடுத்தார்கள்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 13-21


அக்காலத்தில், திருமுழுக்கு யோவான் கொலையுண்டதைக் கேள்வியுற்ற இயேசு அங்கிருந்து புறப்பட்டுப் படகிலேறிப் பாலை நிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார். இதைக் கேள்விப்பட்ட திரளான மக்கள் ஊர்களிலிருந்து கால்நடையாக அவரைப் பின்தொடர்ந்தனர். இயேசு அங்குச் சென்றபோது பெருந்திரளான மக்களைக் கண்டு அவர்கள்மீது பரிவு கொண்டார்; அவர்களிடையே உடல் நலமற்றிருந்தோரைக் குணமாக்கினார். மாலையானபோது, சீடர் அவரிடம் வந்து, “இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே, நேரமும் ஆகிவிட்டது. ஊர்களுக்குச் சென்று தங்களுக்குத் தேவையான உணவு வாங்கிக்கொள்ள மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடும்” என்றனர். இயேசு அவர்களிடம், “அவர்கள் செல்ல வேண்டியதில்லை; நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்” என்றார். ஆனால் அவர்கள் அவரைப் பார்த்து, “எங்களிடம் இங்கே ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் தவிர வேறு எதுவும் இல்லை” என்றார்கள். அவர், “அவற்றை என்னிடம் இங்கே கொண்டு வாருங்கள்” என்றார். மக்களைப் புல் தரையில் அமருமாறு ஆணையிட்டார். அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, கடவுளைப் போற்றி, அப்பங்களைப் பிட்டுச் சீடர்களிடம் கொடுத்தார். சீடர்களும் மக்களுக்குக் கொடுத்தார்கள்; அனைவரும் வயிறார உண்டனர். எஞ்சிய துண்டுகளைப் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர். பெண்களும் சிறு பிள்ளைகளும் நீங்கலாக உணவு உண்ட ஆண்களின் தொகை ஏறத்தாழ ஐயாயிரம்.


அ.ப.: ஆண்டவரின் அருள்வாக்கு

எல்.: கிறிஸ்துவே, உமக்குப் புகழ்


St. Eusebius of Vercelli & St. Peter Julian Eymard - வெர்செல்லி நகர்ப் புனித யுசேபியுஸ் & புனித பீட்டர் ஜூலியன் எய்மார்டு ஆகஸ்ட் 2

 ஆகஸ்ட் 2



Download pdf 

வெர்செல்லி நகர்ப் புனித யுசேபியுஸ்: ஆயர்

அருள்நெறியாளர்கள் பொது: ஆயர் ஒருவர் (பக். 919).


திருக்குழும மன்றாட்டு

ஆண்டவரே இறைவா, . திருமகனின் இறைத்தன்மையை நிலைநாட்டுவதில் ஆயரான புனித யுசேபியுஸ் கொண்டிருந்த மனவுறுதியை நாங்கள் பின்பற்றச் செய்தருளும்; அதனால் அவர் கற்றுத் தந்த நம்பிக்கையை நாங்கள் கடைப்பிடித்து உம் திருமகனின் வாழ்வில் பங்குபெறத் தகுதி பெறுவோமாக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.


புனித பீட்டர் ஜூலியன் எய்மார்டு: அருள்பணியாளர்

புனிதர் பொது: துறவியர் (பக். 950) அல்லது அருள்நெறியாளர்கள் பொது: அருள்நெறியாளர் ஒருவர் (பக். 923).


திருக்குழும மன்றாட்டு

இறைவா, உம் திருமகனின் திரு உடல், திரு இரத்தம் ஆகிய மறைபொருள்கள் மீது கொண்டுள்ள வியப்புக்கு உரிய அன்பினால் புனித பீட்டர் ஜூலியனை அணிசெய்தீNர் அதனால் இத்திருவிருந்திலிருந்து அவர் பெற்ற ஆன்மீக வலிமையை நாங்களும் பெற்றிடத் தகுதி பெறுவோமாக. உம்மோடு.


முதல் வாசகம்


உலகை வெல்லுவது நம் நம்பிக்கையே.

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-5


அன்பிற்குரியவர்களே, இயேசுதான் மெசியா என்று நம்புவோர் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள். பெற்றவரிடம் அன்பு செலுத்துவோர் பிள்ளைகளிடமும் அன்பு செலுத்துவர். நாம் கடவுள்மீது அன்பு கொண்டு அவர் கட்டளைகளைக் கடைப் பிடிக்கும்போது, கடவுளின் பிள்ளைகள் மீதும் அன்பு கொள்கிறோம் என்பது நமக்குத் தெரியவரும். ஏனெனில் அவர் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில்தான் கடவுள் அன்பு அடங்கியுள்ளது. அவர் கட்டளைகள் நமக்குச் சுமையாய் இருப்பதில்லை. ஏனெனில் கடவுளிடமிருந்து பிறக்கும் அனைத்தும் உலகை வெல்லும்; உலகை வெல்லுவது நம் நம்பிக்கையே. இயேசு இறைமகன் என்று நம்புவோரைத் தவிர உலகை வெல்வோர் யார்?


வாசகர் : ஆண்டவரின் அருள்வாக்கு

எல் : இறைவனுக்கு நன்றி


பதிலுரைப் பாடல் திபா 89: 1-2. 3-4. 20-21. 24,26 

பல்லவி: ஆண்டவரின் பேரன்பைப் பற்றி நான் என்றும் பாடுவேன்.


1 ஆண்டவரின் பேரன்பைப் பற்றி நான் என்றும் பாடுவேன்; நீர் உண்மையுள்ளவர் எனத் தலைமுறைதோறும் என் நாவால் அறிவிப்பேன்.

2 உமது பேரன்பு என்றென்றும் நிலைத்துள்ளது என்று அறிவிப்பேன்; உமது உண்மை வானைப் போல் உறுதியானது. - பல்லவி

3 நீர் உரைத்தது: ‘நான் தேர்ந்து கொண்டவனோடு உடன்படிக்கை செய்துகொண்டேன்; என் ஊழியன் தாவீதுக்கு ஆணையிட்டு நான் கூறியது:

4 உன் வழிமரபை என்றென்றும் நிலைக்கச் செய்வேன்; உன் அரியணையைத் தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கச் செய்வேன்.’ - பல்லவி

20 என் ஊழியன் தாவீதைக் கண்டுபிடித்தேன்; என் திருத்தைலத்தால் அவனுக்குத் திருப்பொழிவு செய்தேன்.

21 என் கை எப்பொழுதும் அவனோடு இருக்கும்; என் புயம் உண்மையாகவே அவனை வலிமைப்படுத்தும். - பல்லவி

24 என் வாக்குப் பிறழாமையும் பேரன்பும் அவனோடு இருக்கும்; என் பெயரால் அவனது வலிமை உயர்த்தப்படும்.

26 ‘நீரே என் தந்தை, என் இறைவன், என் மீட்பின் பாறை’ என்று அவன் என்னை அழைப்பான். - பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி     மத் 5: 3

அல்லேலூயா, அல்லேலூயா! ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்


மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 1-12ய


அக்காலத்தில், இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவரருகே வந்தனர். அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை: “ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர். கனிவுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர். நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர். இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர். தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர். அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர். நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது. என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே! மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும்.”


அ.ப.: ஆண்டவரின் அருள்வாக்கு

எல்.: கிறிஸ்துவே, உமக்குப் புகழ்


         


Monday, August 2, 2021

St. Alphonse Maria Ligori - புனித அல்போன்ஸ் மரிய லிகோரி: ஆயர், மறைவல்லுநர் - நினைவு - ஆகஸ்ட் 1

 ஆகஸ்ட் 1

புனித அல்போன்ஸ் மரிய லிகோரி: ஆயர், மறைவல்லுநர் - நினைவு


Download pdf 

அருள் நெறியாளர்கள் பொது: ஆயர் ஒருவர் (பக். 919) அல்லது மறைவல்லுநர்கள் பொது (பக். 932).


திருக்குழும மன்றாட்டு

இறைவா, நற்பண்புகளுக்குப் புதிய எடுத்துக்காட்டுகளாகப் பலரைத் திரு அவையில் தோன்றச் செய்கின்றீர்; மக்களின் நலனுக்காக உழைப்பதில் ஆயரான புனித அல்போன்ஸ் மரியாவிடம் விளங்கிய ஆர்வத்தை நாங்கள் பின்பற்றவும் அதனால் அவருக்குக் கிடைத்த பரிசை விண்ணகத்தில் நாங்களும் பெற்றுக்கொள்ளவும் அருள்வீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற, எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய, இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகின்றோம். 

எல்.: ஆமென்


காணிக்கை மீது மன்றாட்டு

ஆண்டவரே, இத்திருப்பலியை நிறைவேற்றவும் அதன் வழியாகத் தம்மையே புனிதப் பலிப்பொருளாக உமக்கு ஒப்புக்கொடுக்கவும் புனித அல்போன்ஸ் மரியாவுக்கு வரம் அளித்தீNர் அதனால் எங்கள் இதயங்கள் தூய ஆவியாராகிய விண்ணகத் தீயால் பற்றியெரியக் கனிவுடன் அருள்வீராக. எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய, இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

எல்.: ஆமென்


திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

இறைவா, மாண்புமிக்க இம்மறைபொருளின் நம்பிக்கைக்கு உரிய பணியாளராகவும் போதகராகவும் புனித அல்போன்ஸ் மரியாவைத் தந்தருளினீNர் இத்திருவிருந்தில் உம்முடைய நம்பிக்கையாளர் அடிக்கடி பங்குகொள்ளவும் அதனால் முடிவின்றி உம்மைப் போற்றிப் புகழவும் அருள்வீராக. எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய, இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்

எல்.: ஆமென்


முதல் வாசகம்


பாவம், சாவு என்பவற்றுக்கு உள்ளாக்கும் சட்டத்தினின்று தூய ஆவியின் சட்டம் என்னை விடுவித்துவிட்டது.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 1-4


சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருப்போருக்கு இனித் தண்டனைத் தீர்ப்பே கிடையாது. ஏனெனில், கிறிஸ்து இயேசுவோடு இணைந்து இருப்போருக்கு வாழ்வு தரும் தூய ஆவியின் சட்டம் பாவம், சாவு என்பவற்றுக்கு உள்ளாக்கும் சட்டத்தினின்று என்னை விடுவித்துவிட்டது. ஊனியல்பின் காரணமாய் வலுவற்றிருந்த திருச்சட்டம் செய்ய முடியாத ஒன்றைக் கடவுள் செய்தார். அதாவது, ஊனியல்பு கொண்ட மனிதரைப் போன்றவராய்த் தம் சொந்த மகனை அனுப்பி மனிதரிடமுள்ள பாவத்திற்கு முடிவு கட்டினார். ஊனியல்புக்கேற்ப நடவாமல், ஆவிக்குரிய இயல்புக்கேற்ப நடக்கும் நாம் திருச்சட்டத்தின் நெறிகளை நிறைவேற்ற வேண்டும் என்று அவ்வாறு செய்தார்.


வாசகர் : ஆண்டவரின் அருள்வாக்கு

எல் : இறைவனுக்கு நன்றி


பதிலுரைப் பாடல்  திபா 119: 9-10. 11-12. 13-14 

பல்லவி: ஆண்டவரே, எனக்கு உம் விதிமுறைகளைக் கற்பித்தருளும்.


9 இளைஞர் தம் நடத்தையை மாசற்றதாய்க் காத்துக் கொள்வது எவ்வாறு? உம் வாக்கைக் கடைப்பிடிப்பதால் அன்றோ?

10 முழுமனத்தோடு நான் உம்மைத் தேடுகின்றேன்; உம் கட்டளைகளை விட்டு என்னை விலகவிடாதேயும். - பல்லவி

11 உமக்கெதிராய் நான் பாவம் செய்யாதவாறு உமது வாக்கை என் இதயத்தில் இருத்தியுள்ளேன்.

12 ஆண்டவரே, நீர் போற்றுதற்கு உரியவர்; எனக்கு உம் விதிமுறைகளைக் கற்பித்தருளும். - பல்லவி

13 உம் வாயினின்று வரும் நீதித்தீர்ப்புகளை எல்லாம் என் இதழால் எடுத்துரைக்கின்றேன்.

14 பெருஞ்செல்வத்தில் மகிழ்ச்சி அடைவது போல், நான் உம் ஒழுங்குமுறைகளின்படி நடப்பதில் மகிழ்ச்சியுறுகின்றேன். - பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி    மத் 5: 16

அல்லேலூயா, அல்லேலூயா! உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள். அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்


நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 13-19


அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள். உப்பு உவர்ப்பற்றுப் போனால் எதைக் கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடியும்? அது வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும்; வேறு ஒன்றுக்கும் உதவாது. நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது. எவரும் விளக்கை ஏற்றி மரக்காலுக்குள் வைப்பதில்லை; மாறாக விளக்குத் தண்டின் மீதே வைப்பர். அப்பொழுது தான் அது வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒளி தரும். இவ்வாறே உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள். திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன். விண்ணும் மண்ணும் ஒழிந்து போகுமுன் திருச்சட்டம் யாவும் நிறைவேறும். அதன் ஒரு சிற்றெழுத்தோ ஒரு புள்ளியோ ஒழியாது என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன். எனவே, இக்கட்டளைகளில் மிகச் சிறியது ஒன்றையேனும் மீறி அவ்வாறே மக்களுக்கும் கற்பிக்கிறவர் விண்ணரசில் மிகச் சிறியவர் எனக் கருதப்படுவார். இவை அனைத்தையும் கடைப்பிடித்துக் கற்பிக்கிறவரோ விண்ணரசில் பெரியவர் எனக் கருதப்படுவார்.”


அ.ப.: ஆண்டவரின் அருள்வாக்கு

எல்.: கிறிஸ்துவே, உமக்குப் புகழ்


         


Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (28-06-2025)

    முதல் வாசகம் தொடக்க நூலிலிருந்து வாசகம் 18: 1-15 அந்நாள்களில் ஆண்டவர் மம்ரே என்ற இடத்தில் தேவதாரு மரங்கள் அருகே ஆபிரகாமுக்குத் தோன்றினார...